privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்ரிலையன்ஸ் பிரஷ்ஷில் மனிதக்கறி !

ரிலையன்ஸ் பிரஷ்ஷில் மனிதக்கறி !

-

எல்லாம் நடந்தும் எதுவும் நடக்காதது போல நெருக்கிச் செல்லும் வாழ்க்கையின் கண்களில் சில தழும்புகள் மட்டும் பதிந்து விடுகின்றன. அப்படித்தான் அந்த இளைஞனின் தற்கொலையை நேற்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அன்றாடம் பல கொலைகளும், விபத்து மரணங்களும், இயற்கைச் சாவுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எல்லா வழியிலும் மரணம் காத்துக்கொண்டிருப்பது தெரிந்தாலும் அன்றாட வாழ்வின் நிகழ்வுத் தருணங்கள் அதை நினைவு வைத்துக் கொள்வதில்லை. வாழ்வைப் பற்றியே நினைக்க நேரமில்லாத போது சாவைப் பற்றி நினைக்க முகாந்திரமேது?

என்றாலும் இந்தச்சாவு ஒரு கணம் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு சென்னையில் பேரங்காடிகளும், சங்கிலித் தொடர் கடைகளும் முளை விட்ட நேரம். சிறுவணிகத்தை பெருவணிகம் முந்திச் சென்ற காலம். பெருகிவரும் நடுத்தர வர்க்கத்தின் முன்னேற்றத்தின் அளவுகோலாக சூப்பர் மார்க்கெட்டுகள் உதிக்கத் தொடங்கியிருந்தன. காய்கறிக் கடைகளும் பழமுதிர்ச்சோலை என்ற பெயரில் நகரெங்கிலும் சற்றே பிரம்மாண்டமாய் கடைவிரித்த நேரம். புறநகர் பகுதி ஒன்றில் புதிதாகத் துவங்கப்பட்ட அந்த காய்கனி அங்காடியில் வாரம் ஒரு முறையாவது காய்கள் வாங்கச் செல்வது உண்டு.

சிறு கடைகளில்தான் காய்கள் வாங்குவது பழக்கம் என்றாலும் தக்காளி, வெங்காயம், உருளை மட்டும் அந்தக் கடையில் வாங்குவது பழக்கமானது. இந்த மூன்று காய்கள்தான் பல இளைஞர்களைப் போல எங்களுக்கும் தேசிய உணவாக இருந்தது. பேச்சுலராக வாழ்வைக் கழிக்கும் நேரத்தில் சமையல் என்பது சமயத்தில் தவிர்க்க முடியாத துன்பமாக ஆவதும் உண்டு. எனினும் நாடாறு மாதம் காடாறு மாதம் போல உணவு விடுதி, பிறகு சலிக்கும் போது சமையல். நண்பர்கள் மத்தியில் என் கையே மணக்கும் என்று சபிக்கப்பட்டிருப்பதால் காய்கள் வாங்குவதும் எனக்கிடப்பட்ட பணியானது.

சுமார் ஆயிரம் சதுர அடியில் இருக்கும் அந்தக் கடையை தென் மாவட்டத்து அண்ணாச்சி ஒருவர் நடத்தி வந்தார். ஆரம்பத்தில் பத்து விடலைச்சிறுவர்கள் வேலை பார்த்து வந்தனர். மூன்று மணிக்கு கோயம்பேடு சென்று மூன்று சக்கர வாகனத்தில் மூட்டைகளை கொண்டு வந்து தரம்பிரித்து அடுக்கி, பழையதன் கழிவைக் கொட்டி, விலைப் பட்டியல் எழுதி அட்டையில் தொங்கவிட்டு, காலை ஆறு மணிக்கு கடையைத் திறந்து இரவு பதினொன்றுக்கு மூடி…. என்று நிற்காத தொடர் வண்டி போல ஒடும் அந்த வாழ்க்கையைப் பார்க்கும் போது மனது வலிக்கும். அண்ணாச்சியிடமும், அந்தச் சிறுவர்களிடமும் அவர்களின் காய்கனிச் சிறைவாழ்க்கையை கலகலப்பாக ஆக்கும் பொருட்டு பேசுவது உண்டு. தூங்கி வழியும் அந்தச் சிறுவர்கள், அவர்களுடைய வாழ்க்கையை விசாரிக்கும்போது மட்டும் ஒரு கணம் மின்னுவார்கள்.

2007 இல் அந்தப் பகுதிக்கு திடீரென்று வந்து சேர்ந்தது ரிலையன்ஸ் பிரஷ். அறிமுகச் சலுகை, உறுப்பினர் சேர்க்கை, தள்ளுபடி விலை என்று தினந்தோறும் அறிவிக்கப்பட்ட மோடிமஸ்தான் வேலையால் சுற்றுப்புற பலசரக்குக் கடைகள் தள்ளாடத் துவங்கின. நமது அண்ணாச்சி அதற்கு முன்பு வரை தினமும் ரூபாய் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை கல்லா கட்டியவர்; இப்போது ஐந்தாயிரமாய் சுருங்கிப் போனார்.

ஆரம்பத்தில் ரிலையன்ஸ் அப்படி ஒன்றும் நம்மை அசைத்து விடாது என அப்பாவியாய் நம்பினார். மெல்ல மெல்ல சிறுவர்களின் எண்ணிக்கை மூன்றாக குறைந்து போனது. தினசரி விற்பனை இரண்டாயிரம் ரூபாயாக சரிந்தது. பிறகு, வேலையாளின் சம்பளத்தையாவது மிச்சப்படுத்துவோம் என்று தனது குடும்பம் முழுவதையும் கடையில் இறக்கினார் அண்ணாச்சி. இருப்பினும் நான்கு மாதத்திற்கு மேல் அந்தக் கடையின் மரணத்தை ஒத்திப் போடமுடியவில்லை.

ரிலையன்ஸின் சுற்றுவட்டாரத்தில் இப்படி சில ஜீவராசிகள் வாழ்வை இழப்பது பற்றி கட்சி மாறிய நடுத்தர வர்க்கத்திற்கு அக்கறைப் படவில்லை. கேட்டால் ‘அண்ணாச்சி கடையில் ஐம்பது காசு அதிகம்’ என்று அம்பானியின் பிரச்சார பீரங்கிகளாக பேசினார்கள்.

அண்ணாச்சி கடையில் கார்பென்டர் வேலை நடந்து கொண்டிருந்த்து. எனக்கு ஆச்சரியம்! விசாரித்தேன். கடையை ரிலையன்சு போல அலங்காரமாய் புதுப்பிக்கப் போவதாகச் சொன்னார்கள். புதுப்பிப்பவர் பழைய அண்ணாச்சி இல்லை. கடையை விற்று விட்டு அண்ணாச்சி காற்றில் கரைந்து விட்டார். தூக்கம் கலந்த விழிகளுடன் வேலை செய்த அந்தப் பழைய சிறுவர்களை நினைத்துப் பார்த்தேன். சுனாமியில் தொலைந்து போனவர்களை நினைவில் தானே துழாவ முடியும்!

பிறகு சில நாட்களுக்குப் பிறகு அந்தக் கடை ரிலையன்சு போல குளிர்சாதன வசதியுடன், சீருடை அணிந்த பணியாளர்களுடன், கணக்குப் போடும் கணினியுடன், கடையின் பெயர் அச்சிடப்பட்ட நாகரீகப் பைகளுடன் மொத்தத்தில் அழகாகத்தான் திறக்கப்பட்டது. இப்போது யாரென்று விசாரிக்கையில் கடை உரிமையாளர் நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு இளைஞர் என்று சொன்னார்கள். ஏதோ ஒரு பழமுதிர்ச்சோலையில் எட்டாயிரம் சம்பளத்தில் மேலாளராக பணியாற்றியவராம். அங்கே தொழிலைக் கற்றுக் கொண்டு சொந்தமாய் ஒரு கடை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற கனவுடன் சில இலட்சங்களை கடன் வாங்கி இந்தக் கடையை அணுஅணுவாய் அலங்கரித்து திறந்திருக்கிறார். அவருக்கு ஒரு 27 வயது இருக்கலாம். அப்பொதுதான் அவருக்கு திருமணமும் ஆகியிருந்தது. காதல் திருமணம். காதலில் வெற்றி பெற்ற கையோடு சுய தொழிலிலும் உழைத்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் அவரது கண்களில் மின்னியது. சில நேரம் அவரது மனைவியும் கடையில் பில் போடும் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

ரிலையன்சு வந்ததும் அருகாமையில் உள்ள சிறு கடைகளிலேயே எல்லாவற்றையும் வாங்குவதாக முடிவெடுத்து விட்டதால் அந்த கடைக்கு செல்வதில்லை. சமயத்தில் ஒரு நண்பர் அந்த கடைக்கு அழைத்துச் சென்று சாத்துக்குடி பழச்சாறு வாங்கித்தருவார். சாதாரணமாக மற்ற கடைகளில் அதன் விலை 20 ரூபாய். இங்கு மட்டும் அதன் விலை ரூ.10.. வாடிக்கையாளரை ஈர்ப்பதற்க்காக இந்த விலைக் குறைப்பு. ‘நீர் சேர்க்காமல் பழச்சாறை மட்டும் கொடு’ என்று கடை சிப்பந்தியை அந்த இளைஞர் நிர்ப்பந்திப்பதை சிலநேரம் பார்த்திருக்கிறேன். சில சமயம் சுறுசுறுப்பாக வாயிலில் நின்று கொண்டு வரும் மக்களை அவர் கவனிப்பதையும் கண்டிருக்கிறேன்.

இருப்பினும் ரிலையன்சை எதிர்த்து இவர் மட்டும் எப்படி தாக்குப் பிடிக்க முடியும் என்று நானும் நண்பரும் விவாதிப்பதுண்டு. இதை அந்த நாமக்கல் இளைஞரிடம் பேச விருப்பமிருந்தாலும் தயக்கமிருந்தது. அபசகுனமாக பேசுகிறார்களே என்று அவர் நினைத்து விடக்கூடுமல்லவா! ஏதோ கொஞ்சநாளைக்கு மலிவு விலையில் பழச்சாறை குடிக்க வாய்ப்பிருக்கிறது என்று நண்பருடன் தமாசாகப் பேசிவிட்டு அகன்று விடுவோம். கடையில் காய்கறிகளும் மிக மலிவாகவே விற்கப்பட்டது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுண்டு. இது எப்படி சாத்தியம், ஏதாவது வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை இப்படி முதலீடு செய்து செலவழிக்கிறாரா என்றெல்லாம் எங்களுக்குள் விவாதிப்பது உண்டு.

உண்மையில் அவர் கந்து வட்டிக்கு கடன் வாங்கியதெல்லாம் அப்போது தெரியாது. மேலும் வாடிக்கையாளரைக் கவர மூன்று சதவீதம் மட்டும் இலாபம் வைத்து காய்கறிகளை விற்று வந்தததையும் நாங்கள் அறியவில்லை. இந்த இலாப விகிதத்தில் எந்தத் தொழிலும் செய்ய முடியாது என்பதோடு, இப்படி தொழில் நடத்தினால் கடைசியில் எதுவும் மிஞ்சாது. இடையில் 2008இல் ரிலையன்சு கடை இரண்டாவது கிளையையும் இப்பகுதியில் திறந்து விட்டது. இரு வல்லூறுகளுக்கிடையில் ஒரு கோழிக்குஞ்சு எத்தனை நாள் தப்பிக்க முடியும்? என்னதான் நவநாகரீகமாக கடை நடத்தினாலும் நட்டத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. கடை திறந்து நான்காவது மாதத்திலேயே காய்கள் வாடத்துவங்கின. கைமாற்றுப் பணமில்லாத காரணத்தால் புதிய காய்கறிகள் அடிக்கடி வரவில்லை. கூட்டமும் குறையத் தொடங்கியது.

இதற்குள் அவர் மாதத்திற்கு ஒன்றரை இலட்ச ரூபாய் நட்டமடைந்திருந்தார். மொத்தம் ஐந்து இலட்சம் கடனாகிவிட்டது. வழக்கமாக கோயம்பேடில் சில்லறை வியாபாரிகள் கடனுக்கு காய் வாங்கி அடுத்த நாள் மொத்த வியாபாரிகளுக்குப் பணம் கட்டுவார்கள். இந்த முறையையும் அந்த நாமக்கல் இளைஞர் பின்பற்ற முடியவில்லை. கைப்புழக்கத்திற்குக் கூட பணமில்லாத நிலையில் ஒரு இலட்ச ரூபாயை கடன்பெற முயற்சித்திருக்கிறார். கிடைக்க வில்லை. கோயம்பேட்டிலும் மொத்த வியாபாரிகள் கடனுக்கு காய் வழங்க மறுத்து விட்டனர். 25,000 கோடி முதலீட்டுடன் இந்திய சில்லறை வணிகத்தை ஆக்கிரமிக்க வந்திருக்கும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை ஐந்து இலட்சத்தை வைத்துக் கொண்டு ஒரு நாமக்கல் இளைஞர் எதிர் கொள்ள முடியுமா என்ன? எல்லா இடத்திலும் கடன் கேட்டும் கிடைக்காமல் வீட்டுக்கு வந்த அந்த இளைஞர் தூக்குப் போட்டுக் கொண்டார். அவரது மனைவிக்கு என்ன ஆகியிருக்கும்? வழக்கம் போலத ‘தெரியவில்லை’ என்பதுதான் விடை.

இப்போது அதே கடையை வேறொரு அண்ணாச்சி – ஏற்கனவே சில கிளைகளை வைத்திருப்பவர் – வாங்கி அதே பெயரில் நடத்துகிறார். அவர்தான் நேற்று இந்த விவரங்களைச் சொன்னார். இவரும் எத்தனை நாள் தாக்குப் பிடிப்பார் என்பதை யோசிக்காமல் இருக்க முடியவில்லை. யோசிப்பதை அவரிடம் பேசவும் முடியவில்லை.

அதே கடை. அதே பெயர். அண்ணாச்சிகள் மட்டும் மாறியபடி இருக்கிறார்கள். உயிர்களைக் குடித்துத் தாகம் அடங்காத பலிபீடம் போல என்னை அச்சுறுத்துகிறது அந்தக் கடை. அந்தக் கடைப் பக்கம் செல்லும்போதெல்லாம் தூக்கில் தொங்கிய அந்த இளைஞனின் நம்பிக்கை ஒளிரும் கண்களும், கணவனுக்குத் துணைநின்ற அந்தக் காதல் மனைவியின் முகமும் கொஞ்சம் தடுமாற வைக்கின்றன. விலை மலிவு என்பதற்காக பத்து ரூபாய் பழச்சாறைக் குடித்த குற்ற உணர்விலிருந்து என்னால் இன்னமும் விடுபட முடியவில்லை.
…………………………………………………………………………………………………………………….
குற்ற உணர்வு கொள்ளாத இலக்கிய மனத்தை அறிந்து கொள்ள…

  1. தலைப்பைப் பார்த்து வந்தேன்.
    தலைப்பு வைத்ததில் தவறேயில்லை.
    மனிதக்கறி தின்னும் மாநிடர் நாம் தாம்.

    உங்கள் எழுத்தின் வீச்சு நன்றாக இருக்கிறது. நல்ல உயர்தரமான ஆக்கம். வாழ்த்துக்கள்.

    • வினவு, முதலில் அண்ணாச்சிகள் குடிக்கும் விவசாயிகள் இரத்தம் என பதிவு போடவும்.

  2. ஐம்பது பைசா அதிகமாக இருந்தாலும் நமது சகோதரன், நமது அண்டைவீட்டார், நமது ஊர்காரர், பக்கத்து ஊர்காரர், நமது மாநிலத்தைச் சேர்ந்தவர் நடத்தும் கடைகளில் பொருட்களை வாங்கும் பழக்கம் கிராமங்களிலும் கிராமங்களை அதிகமாகக் கொண்ட வளரும் நகரங்களிலும் இன்றும் உள்ளது.

    படித்த முட்டாள்கள் அதிகம் வாழும் வந்தேறும் குடிகளான பெருநகரங்களில்தான் இதுபோன்ற அவலங்கள் தொடர்ந்து நிகழும். ஒரு ரூபாய் குறைவாக இருக்கிறது என்பதற்காக பத்து ரூபாய் மதிப்புள்ள பெட்ரோலை செலவழித்து பொருளை வாங்கும் பழக்கம் படித்தவர்களிடமே அதிகம் காணப்படுகிறது.

    சிறு வியாபாரிகளை ஊக்குவிப்பதும் அவர்களை பாதுகாப்பதும் நாட்டுமக்களின் கடமை. ஏனெனில் அவர்கள் வயிற்றுப்பசிக்காகவும் மானத்தோடு வாழ்வதற்காகவும் அந்தத் தொழிலை செய்கிறார்கள்.

  3. நல்ல பதிவு.

    பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்துக் கொண்டு டீக்கடையில் அரட்டை அடிப்பது போன்ற போலித்தனமில்லாமல் உங்களின் நேரடி அனுபவத்தைக் கொண்டு எழுதியிருப்பதனால் நம்பகத்தன்மை கூடியிருக்கிறது. நகரங்களில் இருப்பவர்கள் இரண்டு,மூன்று ரூபாய் வி்த்தியாசத்திற்காகவும் பகட்டிற்காகவும் இது போன்ற பெருமுதலாளிகளை புறக்கணித்து சிறுவியாபாரிகளை ஆதரிப்பது அடிப்படை மனிதநேயமிக்க செயலாகும்.

  4. முகத்திலறைந்தாற்போல் இருக்கிறது.
    நான் எந்த ரீடெய்ல் கடைகளில் குறிப்பாக காய்கறிகள்/மளிகை வாங்குவதில்லை.
    அருகில் இருக்கும் அண்ணாச்சிக் கடைகளில் தான் வாங்குவது.

  5. அம்பானிகள் செருப்பில் இருந்து ஜட்டி வரை விற்கிறார்கள். மொத்தமாக இந்தியாவை சுருட்டி பையில் அடைத்துக்கொண்டு செல்வார்கள் பாருங்கள்…!!!

  6. நண்பரே நல்ல தலைப்பு மட்டும் அல்ல 10000 கோடி கொட்டி 5 லட்சத்தை அழிப்பவர்கள் உண்மையிலேயே மனிதக்கறி தின்னும் மானிடர்கள் தான்.

  7. கொஞ்சம் யோசிக்க வைத்து விட்டீர்கள். இனி சின்ன கடைகளிலும்
    பொருட்கள் வாங்க முயற்சி செய்கிறேன். நன்றி.

  8. மனதை கனக்க வைத்த பதிவு.

    இந்த விடயம் ஏற்கனவே அமெரிக்காவில நிகழ்ந்ததுதான்.வால்மார்ட் வந்த பிறகு அமெரிக்காவில சில்லறை கடைகளே கிடையாதாம்.சரி, வால்மார்ட் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது என நினைத்தேன். எங்கள் வீட்டுக்கு உரிமையான அமெரிக்க கிழவி வால்மார்ட்டுக்கு எப்போதும் போகாது. ஒருநாள் ஏன் என்று விசாரித்த போது சொன்னது, அங்கு வேலை செய்யும் நபர்களை வால்மார்ட் சுரண்டுவதாகவும், குறைந்த சம்பளம், மருத்துவ இன்சுரன்ஸ் தருவதில்லை, மகப்பேறு லீவு தராமை என எல்லாக் கூத்துகளும் நடப்பதாகவும், தான் வால்மார்ட் படியை ஒரு போதும் மிதிக்க மாட்டேன் என சொன்னது. ஆனால் நம்ம இந்தியத் தலைகளை வால்மார்டில் நிறைய பாக்கலாம்!!!

  9. மிக தரமான பதிவு. அழகாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் தலைப்பின் கடூரத்தை தவிர்த்திருக்கலாம். முதலில் திட்டலாம் என்றுதான் உள்ளே வந்தேன்.

  10. His business strategy was flawed. Big shops compete with small shops.Bigger shops compete with big shops. Some chains like Subiksha sell at cheap rates as they buy in bulk. For middle class a 500-600 rs savings in a month matters.If they can save that much from buying in subiskha they will prefer subiksha to neighbourhood small shops.now a day many people use coupons given by their employers and these are valid only in some shops/chain stores.it is unfortunate that this
    businessman committed suicide. perhaps had he had access to credit at cheaper rate of interest and had he planned realistically he would have survived the competition and made some profit.
    the issue cannot be reduced to reliance fresh vs this person. there is a need for reliance fresh as well as shops run by persons like him. how to ensure that both survive is the question. access to credit is a big issue for businessmen like him. govt. should do something to solve this problem.i sympathise with you although i dont buy many of your arguments against reliance fresh or against such big stores.

  11. காட்சில்லா நான் கூற நினைத்ததை தெளிவாக கூறிவிட்டார்

    //i sympathise with you although i dont buy many of your arguments against reliance fresh or against such big stores.//

    என் அனுதாபங்கள் அந்த இளைஞனுக்கு உண்டு என்றாலும், அவரின் தற்கொலைக்கு காரணம் அவரது திட்டமிடல் குறைவு என்பதால் தான்

    இவர் 5 லட்சம் முதலீட்டில் கடை நடத்தும் போது அவர் கடைக்கு வெளியே நடைமேடையில் 100 ரூபாய் முதலீட்டில் மாங்காய் வியாபாரம் பார்க்க யாராவது உட்கார்ந்திருந்தால் அவர்கள் இவரால் நஷ்டப்பட்டிருப்பார்கள்

    எனவே இவர் ஒரு பெரிய நிறுவனத்துடன் போட்டி போடும் போது சொந்த பணத்தில் அதை செய்திருக்க வேண்டும். கடன் வாங்கி பெரிய நிறுவனத்துடன் போட்டி போட்டது தவறு

    அதை தவிர

    இது போன்ற பெரிய நிறுவனங்களினால் சிறு தொழில்கள் பாதிக்கப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் அதற்கு அவர்களை மட்டும் குறைசொல்ல முடியாது.

    அங்கு சென்று பொருள் வாங்கும் நம் மக்கள் தான் முதல் காரணம்


    சென்னை மருத்துவக்கல்லூரியின் பொது மருத்துவத்துறை முன்னாள் இயக்குனர் அவர்கள் எங்கு சென்றாலும் / எந்த கூட்டம் என்றாலும் “டைகர்” பிஸ்கட், பொவண்டோ, வாழைப்பழம் போன்றவற்றையே தருவார் / தரச்சொல்வார். பிரிட்டானியா பிஸ்கட் வாங்க பலர் இருக்கிறார்கள். டைகர் பிஸ்கட் நாம் தான் வாங்க வேண்டும்; பெப்சி குடிக்க 100 நாடுகளில் மக்கள் தயார் – போவண்டோ நமக்காக என்பது அவர் வாதம். அவரிடமிருந்து நாங்கள் பலரும் பொவண்டோவிற்கு மாறி விட்டோம்.

    இது போன்ற மன மாற்றமே அவசியம்

    நான் இது வரை ஒரு நாள் கூட ரிலையன்சு பிரெஷ் சென்றதில்லை. செல்லும் உத்தேசமும் இல்லை

    ரிலையன்ஸ் ஃபிரஷ்ஷில் மனிதக்கறி ! என்ற தலைப்பு சரிதான். ஆனால் அதற்கு காரணம் அம்பானி மட்டுமல்ல என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்

    ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டதையும் நினைவில் வைக்க வேண்டும்

  12. ..சென்னை மருத்துவக்கல்லூரியின் பொது மருத்துவத்துறை முன்னாள் இயக்குனர் அவர்கள் எங்கு சென்றாலும் / எந்த கூட்டம் என்றாலும் “டைகர்” பிஸ்கட், பொவண்டோ, வாழைப்பழம் போன்றவற்றையே தருவார் / தரச்சொல்வார். பிரிட்டானியா பிஸ்கட் வாங்க பலர் இருக்கிறார்கள். டைகர் பிஸ்கட் நாம் தான் வாங்க வேண்டும்;//

    டாக்டர் சார்,“டைகர்” பிஸ்கடும் பிரிட்டானியா பிஸ்கட்தான்! 🙂

  13. நல்ல பதிவு தோழர். இந்தியாவில் 98 % வணிகங்கள் சிறு வியாபாரிகளையே சார்ந்து உள்ளது. இந்த மீதமுள்ள 2 சதவிகிதம் சிறிது சிறிதாக உயரும் போதே பல ஆயிரம் மக்களின் அன்றாட வாழ்வு சிதைக்கப் படுகிறது.
    //எனவே இவர் ஒரு பெரிய நிறுவனத்துடன் போட்டி போடும் போது சொந்த பணத்தில் அதை செய்திருக்க வேண்டும். கடன் வாங்கி பெரிய நிறுவனத்துடன் போட்டி போட்டது தவறு//
    நண்பரே , இந்த “பெரிய நிறுவனத்தை” ஆரம்பிக்க எவ்வளவு ஆயிரம் கோடிகளை ரிலையன்ஸ் இந்திய வங்கிகளில் இருந்து கடனாக பெற்று உள்ளது தெரியுமா உங்களுக்கு…?
    இப்படிப்பட்ட பல பெரிய நிறுவனங்கள் திருப்பி செலுத்தாத கடன் தொகை பல ஆயிரம் கோடிகள். நீங்களும் நானும் கடன் வாங்கி திருப்பி செலுத்தா விட்டால் என்ன ஆகும் என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை…
    இந்த முதலாளித்துவ அமைப்பு இலாபம் என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு ஓடிக்கொண்டு இருக்கும் மிருகம், இது எல்லா வற்றையும், எல்லா மனித உணர்ச்சிகளையும் விற்று பணமாக்க முயல்கிறது…
    காமத்தை விற்று பணமாக்குகிறான் இன்றைய சினிமா முதலாளி
    படிக்கும் வேட்கையை விற்று பணமாக்குகிறான் கல்லூரி முதலாளி
    மத வெறியை விதைத்து பண மாக்குகிறான் அரசியல் முதலாளி
    போரை விதைத்து ஆயுதங்களை விற்று பணமாக்குகிறான் பன்னாட்டு நிறுவன முதலாளி
    உயிர் வாழும் வேட்கையை விற்று பணமாக்குகிறான் மருத்துவ முதலாளி..
    அனைத்து உயிர்களின் ஆதாரமான இந்த இயற்கையை விற்றே இலாபம் ஈட்டும் இந்த உலகில் எல்லாரும் பொவொண்டோ , இளநீர் குடித்தால் நம் நாட்டில் பெப்சி, கோக் போன்ற நிறுவனங்கள் வளராது என்பது உண்மை.. ஆனால் பல ஆயிரம் கோடி முதலீட்டில் பல திரை நட்சத்திரங்களை வந்து விளம்பரம் கொடுந்து பெப்சி, கோக் குடிப்பது நாகரிகம் என்று பிரச்சாரம் செய்யும் இந்த நிறுவனங்களுக்கு எதிராக செயல்பட வெறும் தனி மனித புறக்கணிப்பு மட்டுமே சாத்தியமா.. ? சில கோடிகளை கையூட்டாக கொடுத்து அரசாங்கத்தையே தன் கையில் வைத்திருக்கும் இந்த முதலாளிகளுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்று பட்டு அரசியல் ரீதியாக போராடினால்தான் விடுதலை சாத்தியம்… இந்த சமுக அமைப்பை மாற்றாமல் தனி மனித ஒழுக்கத்தை குறை கூறுவது சரியான தீர்வல்ல என்று நினைக்கிறேன் நண்பர் புருனோ.

    • //காமத்தை விற்று பணமாக்குகிறான் இன்றைய சினிமா முதலாளி
      படிக்கும் வேட்கையை விற்று பணமாக்குகிறான் கல்லூரி முதலாளி
      மத வெறியை விதைத்து பண மாக்குகிறான் அரசியல் முதலாளி
      போரை விதைத்து ஆயுதங்களை விற்று பணமாக்குகிறான் பன்னாட்டு நிறுவன முதலாளி
      உயிர் வாழும் வேட்கையை விற்று பணமாக்குகிறான் மருத்துவ முதலாளி..//

      really it is true…

  14. survival of the fittest என்னும் கொடூர உலகியல் நியதி ஞாபகம் வந்து தொலைக்கிறது.

    relianceம் தொடங்கும்போதே, பல கோடிகளில் தொடங்கப்பட்ட கடையில்லை.
    அம்பானி, சைக்கிளில் சென்று விற்பனையை துவங்கிய சாதாரண மனுஷன் தான்.

    கடுமையான உழைப்புக்கு என்றுமே பலன் கிட்டும்.

    சரியான திட்டங்களுடன், களத்தில் இறங்கினால், ஏதாவது ஒரு அண்ணாச்சி ரிலையன்ஸ் கடைகளை தூக்கி விழுங்க முடியும்.

    தாக்குப் பிடிக்கத் தெரியாமல், வழுக்கி விழும், சாதாரண மக்களின் நிலை, மிகவும் வேதனையைத் தருகிறது. 🙁

    • Survival of the fittest என்கிற டார்வின் நியதி பொதுவாய் விலங்கினங்கள் மற்றும் தாவரங்களுக்கும், மனிதன் விலங்காய் வாழ்ந்த காலத்தில் மனிதனுக்கும் பொருந்தியது. வலுவான மிருகம் வலுவில்லாத மிருகத்தை கொன்று தின்னும்.

      Survival of the fittest என்பது தற்காலத்தில் முதலாளித்துவத்தின் நியதியும் கூட. பெரிய பண முதலை சின்ன பண முதலையைத் தின்னும். நூற்பாலை முதலாளி கைத்தறிக்காரர்களையும், விசைத்தறிக்காரர்களையும் அழிப்பான். கோக் பவண்டோ, காளிமார்க்கை அழிப்பான்.

      இது இயற்கையானது அல்ல. பணத்தை ஒருவரிடம் குவிக்கும் நோக்கம் கொண்ட இந்த சமூக அமைப்பில் இது நியதியாய் மாறிப்போனது.

      • அம்பானி, டாடா போன்றவர்கள் சைக்கிள்களில் சென்று பிஸினஸ் பண்ணிய கதைகள் நெடுங்காலமாகவே புழக்கத்தில் உள்ளன.

        உண்மையில் தன் உடன் உழைக்கும் மற்றவரின் உழைப்பையும் சுரண்டாமல் அம்பானி போன்றவர்கள் இன்று 27 மாடி வீடு கட்டவே முடியாது என்பது தான் நிஜம்.

        சைக்கிளில் சென்ற அம்பானி புல்லட் வாங்கிய போது 10 பேரின் உழைப்பை சுரண்டினாரென்றால் இன்று ஜம்போ ஜெட்டில் செல்லும் போது அவரிடம் வேலை பார்க்கும் 2 லட்சம் பேரின் உழைப்பை சுரண்டித்தான் என்பது யதார்த்தம்.

        நாட்டில் கோடிக்காணவர்கள் சைக்கிளில் சென்று வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அம்பானி மட்டும் அம்பானியானதன் காரணம் அம்பானியின் உழைப்பு மட்டும் அல்ல. மற்றவரின் உழைப்பை அவரே அறியாமல் அவருடைய சம்மதத்துடனேயே திருடும் முதலாளித் தந்திரத்தை அவர் சைக்கிளில் செல்லும் போதே அறிந்திருந்தார் என்பது தான் காரணம். இதை ‘வியாபாரத் திறமை’ என்று பெருமையாகவும் சொல்லிக் கொள்வார்கள்.

  15. //சரியான திட்டங்களுடன், களத்தில் இறங்கினால், ஏதாவது ஒரு அண்ணாச்சி ரிலையன்ஸ் கடைகளை தூக்கி விழுங்க முடியும். //
    இங்கு நண்பர் சொல்ல மறந்த உண்மை என்ன வென்றால் ஒரு அண்ணாச்சி, அம்பானியை விட உயரும் பொது அவரும் இப்பொழுது அம்பானி செய்வதையே செய்வார்… பணமும், அதிகாரமுமே அவரது குறிக்கோளாக இருக்கும்… இந்த இடத்தில் நான் இருந்தாலும், அம்பானி இருந்தாலும், ஒரு அண்ணாச்சி இருந்தாலும் பலரின் வாழ்வை கெடுத்து தான் இலாபம் ஈட்ட முடியும்…
    அம்பானி கெட்டவனா, நல்லவனா என்ற பிரச்சினையை விட…, ஒழுக்கமாய் இருப்பவன் எவனும் அம்பானி அளவுக்கு சொத்து சேர்க்க முடியாது… சொத்து சேர்த்த எவனும் நேர்மையாய், மனித நேயத்தோடு இருந்தால் அவன் செல்வந்தனாக இருக்க முடியாது… ஊரை ஏய்த்து செல்வம் ஈட்டுபவனை கண்டிக்க இயலாத இந்த சமுக அமைப்பு இருக்கும் வரை.. இந்த பிரச்சினையை நிரந்தரமாய் சரி செய்யவே முடியாது..

    //relianceம் தொடங்கும்போதே, பல கோடிகளில் தொடங்கப்பட்ட கடையில்லை.
    அம்பானி, சைக்கிளில் சென்று விற்பனையை துவங்கிய சாதாரண மனுஷன் தான். //
    நண்பரே, ரிலையன்ஸ் முதலாளி எதோ தனது கடின உழைப்பால் உயர்தவன் என்ற கதை பல கோடி செலவில் பலராலும் பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் பொய்..
    ரிலையன்ஸ் நிறுவனத்தின் மோசடிகள் பல.. வரி ஏய்ப்பு, கையூட்டு, அந்நிய செலாவணி மோசடி என்று பல பல…
    இன்று நான் படித்த செய்தி.. அணில் அம்பானி, முகேஷ் அம்பானியின் மீது 10 ஆயிரம் கோடி மான நஷ்ட வழக்கு போட்டுள்ளார்… அதற்க்கான விளக்கம் கீழே…
    //New York Times quoted him(Mukesh Ambani) saying that a network of lobbyists and spies were overseen by his brother(Anil Ambani) before they split.
    “What most distinguishes Reliance from its rivals is what Ambanis friends and associates describe as his ‘intelligence agency’ a network of lobbyists and spies in New Delhi who they say collect data about the vulnerabilities of the powerful, about the minutiae of bureaucrats’ schedules, about the activities of their competitors,” the New York Times had said.
    //
    New York times published Mukesh Ambani’s interview.. during that interview Mukesh quoted the above

    இவ்வளவு ஏன் , சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கு எடுப்புக்கு முந்தைய தினம் அம்பானி சகோதரர்கள் பிரதமரை சந்தித்து பேசி உள்ளனர்.. இது பிரதமரை நலம் விசாரிக்கவா? அல்லது நாடாளுமன்றத்தில் காட்டப் பட்ட கட்டுகளுக்காகவா?

  16. பெரிய மீன்களுக்கு இரையாகத்தானே சின்ன மீன்களுக்கு விதிச்சிருக்கு(

  17. //பொவொண்டோ , இளநீர் குடித்தால் நம் நாட்டில் பெப்சி, கோக் போன்ற நிறுவனங்கள் வளராது என்பது உண்மை..//
    ஏற்றுக்கொண்டதற்கு நன்றி

    // ஆனால் பல ஆயிரம் கோடி முதலீட்டில் பல திரை நட்சத்திரங்களை வந்து விளம்பரம் கொடுந்து பெப்சி, கோக் குடிப்பது நாகரிகம் என்று பிரச்சாரம் செய்யும் இந்த நிறுவனங்களுக்கு எதிராக செயல்பட வெறும் தனி மனித புறக்கணிப்பு மட்டுமே சாத்தியமா.. ?//

    தனி மனித புறக்கணிப்பு மட்டுமே சாத்தியம் என்பது நிதர்சணம்.

    அதை தவிர வேறு என்ன 100 சதவித உத்திரவாத வழி இருக்கிறது என்று கூற முடியுமா.

    ரிலையன்சு பெட்ரோல் நிலையங்கள் ஏன் மூடப்பட்டன. தனி மனித புறக்கணிப்பு தானே.

    //சில கோடிகளை கையூட்டாக கொடுத்து அரசாங்கத்தையே தன் கையில் வைத்திருக்கும் இந்த முதலாளிகளுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்று பட்டு அரசியல் ரீதியாக போராடினால்தான் விடுதலை சாத்தியம்…//

    ரிலையன்சு பெட்ரோல் நிலையங்களுக்கு எதிராக போராட்டம் விடுதலை எதுவும் நடக்கவில்லை என்று நினைக்கிறேன்.

    விலை அதிகம் என்று நீங்களும் நானும் அந்த நிலையங்களை புறக்கணித்தோம். அவை மூடப்பட்டன. அது போல் நீங்களும் நானும் இந்த காய்கறிகளை புறக்கணித்தாலே அவை மூடப்படும்

    அது தான் எளிய வழி

    // இந்த சமுக அமைப்பை மாற்றாமல் தனி மனித ஒழுக்கத்தை குறை கூறுவது சரியான தீர்வல்ல என்று நினைக்கிறேன் நண்பர் புருனோ.//

    சமுக அமைப்பு என்பதே தனி மனித செயல்களின் கூட்டு என்பது மறுக்க முடியாத உண்மை.

    வெள்ளி சுவர் வேண்டுமென்றால் வெள்ளை செங்கலை வைத்து கட்டலாம். (தனி மனிதன் மாறுவதால் சமூகம் மாறுவது)
    அல்லது சிவப்பு சுவற்றில் வெள்ளி சாயம் அடிக்கலாம். (சமுகத்தில் ஒரு மாற்றம் ஏற்படுத்தி அது தனி மனிதனை சிறிது பாதிப்பது)

    மழை பெயத பின்னும் சுவர் வெள்ளை யாக இருக்க வேண்டுமென்றால் என்ன முறை சிறந்தது ??

    • அரேபியன் கண்டுபிடித்த காபி
      யூதன் கண்டுபிடித்த வைன்
      அமெரிக்கன் கண்டுபிடித்த சோடா-(பெப்சி- கோக்- காளிமார்க்-பொவொண்டோ)
      இது மூன்றும் உலகத்தை ஆட்டிப் படைக்கக் காரணம்:
      ௧-விளம்பரதாரர் நிகழ்ச்சி-
      ௨-நூறு முறை சொன்னால் நம்பும் மனித மனம்
      ௩- சொந்த புத்தி உள்ளவர்கள் குறைவு.
      ௪-நம்ம பொண்டாட்டிய விட பக்கத்துக்கு வீட்டுக் காரி அழகாத் தெரிவாளாமே!?
      ௫-பழச்சாறு ஒரு வேளை விலை அதிகமாக இருக்கலாம்.
      ௬-டாஸ்மாக் கழுதை மூத்திரத்தைக் குடிப்பவர்களுக்கு இதெல்லாம் சின்ன விஷயமாப்பா.
      ௭-இப்படி நாமே பேசிக் கொள்வதை விட்டு விட்டு- பள்ளிகளில் இளம் தலைமுறயினறைத் தட்டி எழுப்புவோம்.
      ௮-ஏனென்றால்- இந்த மாதிரி விழிப்புணர்வு காட்டுத் தீயாகப் பற்றிக் கொள்ளவேண்டும்.
      ௯- இங்குள்ள வியாபார அன்பர்களை நல்லவிதமாக- சாமம்-தண்ட-பேதம் -எச்சரிக்கவேண்டும்.
      நீங்கள் செய்தால்…தேவர் சங்கம் தோல் கொடுக்கும்.

  18. //ஊரை ஏய்த்து செல்வம் ஈட்டுபவனை கண்டிக்க இயலாத இந்த சமுக அமைப்பு இருக்கும் வரை.. இந்த பிரச்சினையை நிரந்தரமாய் சரி செய்யவே முடியாது..//

    சமுக அமைப்பு மாற தனி மனித செயல்பாடு மாறுவதை தவிர வேறு வழியே கிடையாது என்பது எளிய உண்மை

  19. அமேரிக்க வால்மார்டை குப்பனும் சுப்பனும் எப்படி வெற்றிகறமாக எதிர்கொள்கிறார்கள் என்கிற விடியோ இங்கே…

    http://video.google.com/googleplayer.swf?docId=-3836296181471292925

    பொது மக்களின் ஆதரவு மிகவும் முக்கியம். இல்லையெனில் அண்ணாச்சிகள் மாறுவார்கள் என்ற நிலை மாறி அந்த கடையும் ரிலையன்ஸாகிவிடும்.

    • very good.
      Reliable thought
      அவன் சொன்னான் -இவன் சொன்னான் என்று இருபதாயிரம் மயில்களுக்கு அப்பால் இருக்கும்
      அமேரிக்கா – இங்குள்ள வால்மார்ட் பற்றி எழுதுகின்றீர்கள். உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
      வால்மார்ட் பயப்படுவது சீனர்களைக் கண்டு. அவர்கள்தான் வால் மார்டுக்கும் சப்ளை…..அவர்கள்தான்
      வால்மார்டுக்கும் போட்டி.கடைசியில் எங்கு சென்று வாங்கினாலும் சீனாதான் என்றால் அதை எங்கு வாங்கினால் என்ன?!
      ரங்கநாதன் தெருவை விட- இங்குள்ள ஷாப்பிங் மால்கள் சம்பாதிப்பதில்லை.வரிகட்டும் வால் மார்ட் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஊன்று கோல்…..ரசீதே கொடுக்காமால் கோணிப் பைகளில் அள்ளும் சரவணா ஸ்டோர்ஸ்
      அண்ணாச்சியை விடவா? ஹலோ..நண்பரே- இங்கு குறைந்தபட்சம் ஊதியம் என்று ஓன்று உள்ளது.வால்மார்ட்டில் குறைந்த பட்ச
      ஊதியம் எவ்வளவு தெரியுமா? ஒரு மணி நேரத்திற்கு ரூபாய்.ஐநூறு.
      எல்லோருமே படிப்படியாக வாழ்வில் உயர்ந்தவர்கள்தான்.
      ஒருவர் தன முயற்சியில் வெற்றிபெறாவிட்டால் – அதற்குரிய சரியான காரணத்தை ஆராய வேண்டும்.
      அம்பானி- சும்பானி என்று ஒருவரைக் கை காட்டிவிட்டு -தானும் தூக்குக் கயிற்றில் தொங்குவது தவறு என்பதுதான் எனது வாதம்.
      பல இலட்சங்களை முதலீடாகப் போடாமல்- பாதுகாப்பாக அந்த இளைஞர் முயற்சி செய்திருக்கவேண்டும்.
      நானும் வியாபாரம் செய்கின்றேன்- கடந்த மூன்று வருடங்களாக- அமெரிக்கக் கண்டத்தில்!
      மிகச் சிறிய அளவில்!.நான் வால்மார்ட்- சூபர் ஸ்டோர் என்று யாரோடும் போட்டியிடவில்லை.
      நான்கு இலட்சம் வங்கியில் கடன் வாங்கி- ஐந்து இலட்சத்திற்கு பொருள் வாங்கி- இருபது இலட்ச ரூபாய்க்கு வியாபாரம்.
      கோவிலுக்கு- அரசாங்கத்திற்கு- ஆடிட்டருக்கு-எனக்கு- பிறர் உதவிகளுக்கு என்று பிரித்து வாழ்கின்றோம்.
      குறிப்பு: காலில் செருப்பு கூட போடாமல் அரசு பள்ளிக் கூடத்தில் படித்தவன்தான் அடியேன்.
      இன்னும் ஒன்றை சொல்கின்றேன்- சரவணா பவனில் சாப்பிடுகின்றோம்…..அதைவிட ருசி, தரம் , குறைந்த விலை உள்ள உணவு விடுதிகள் இல்லையா? பல் இருக்கின்றவன் பட்டாணி தின்றால்- போக்கை வாயன் இடித்துத் தின்னலாம்….அதை விட்டு விட்டு – கொண்டை உள்ளவள் கட்டிக் கொண்டால் – வழுக்கைத்தலை ஏன் கோபப் பட வேண்டும்?
      ஏன்- உங்கள் கையில் பணம் இருந்தால் என்ன செய்வீர்கள் தர்மப் பிரபு…? மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்.
      ஆசை , சில சமயங்களில் வாழ வைக்கின்றது- பல சமயங்களில் அழித்து விடுகின்றது.
      எல்லாவற்றிகும் பயிற்சி- முயற்சி-திட்டம்- செயல்பாடு-இடம்-பொருள்-ஏவல் போன்ற அனைத்தும் வேண்டும்.
      இதைதவிர நமது பலவீனங்களின் பக்கம் என்பது மிகவும் முக்கியம்.

  20. மறு மொழிக்கு நன்றி நண்பர் புருனோ …
    ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையங்கள் மூடப் பட்டது மக்களின் புறக்கணிப்பு காரணம் என்பது உண்மை… ஆனால் எதற்காக மக்கள் அதை செய்தனர் என்பது எந்தன் பார்வையில்…
    1. ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையங்கள் அமைந்து இருந்த இடம் பெரும்பாலும் நகரின் வெளிப் பகுதிகளிலும் , தேசிய நெடுஞ்சாலைகளிலும் . நகரின் முக்கிய பகுதிகளில் ஏற்கனவே பல வருடங்களாக இந்திய அரசின் பெட்ரோல் நிலையங்கள் செயல் பட்டு வருகின்றன.
    2. பெட்ரோல் நிலயங்களில் மக்கள் விரும்பும் சேவை தனியார் , அரசு நிலையங்களில் ஒரே மாதிரியாய் இருந்தது..
    3. விலையில் இருந்த வேறுபாடு .

    ஏதோ ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையத்தை மூடி விட்டதால் மக்களுக்கு வெற்றி என்று கூறும் உங்களுக்கு சில கேள்விகள்…
    1. ரிலையன்ஸ் எரி சக்தி பங்குகள் ஏன் முகப்பு விலையை விட பல மடந்கு அதிகமாக தேர்ந்து எடுக்கப் படுகின்றன? இங்கு மக்களின் புறக்கணிப்பு எங்கே?
    2. இந்தியாவில் குறைந்த விலையில் பெட்ரோல் எடுத்து அதை சர்வதேச விலைக்கு இந்திய அரசிற்கு விற்கும் துரோகி ரிலையன்ஸ் நிறுவனத்தை எப்படி புறக்கணிப்பீர் ?
    3. பெட்ரோல் நிலையங்கள் மூடப் பட்டாலும் பின் வழியாக இந்திய அரசிற்கு பெட்ரோல் விற்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தை எப்படி புறக்கணிப்பீர்..?

    தனி மனித புறக்கணிப்பு மட்டுமே சாத்தியம் என்று கூறும் உங்களுக்கு மேலும் சில கேள்விகள்…
    நெல்லை தாமிரபரணி ஆற்றை கோக கோலா நிறுவனத்திற்கு விற்ற தமிழக அரசையும், கோலா நிறுவனத்தையும் எதிர்த்து நடந்த சுவர் எழுத்து , சுவர் ஒட்டி விழிப்புணர்வு பிரசாரத்தை தமிழக போலீஸ் கடுமையாக தடை செய்தது… பல தோழர்களை இதற்க்காக சிறையில் அடைத்தது… மக்களுக்கு உண்மையை எடுத்து சொல்ல ஒரு பொதுக் கூட்டம் கூட நடந்த அனுமதி மறுக்கப்பட்டது.. இதை பற்றி எந்த ஒரு செய்தி நிறுவனமும், அரசியல் கட்சியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுந்த வில்லை… இங்கு அரசே ஒரு நிறுவனத்திற்கு அதரவாக செயல்படும் போது.. எப்படி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுதுவீர்.. ? தனி மனித புறக்கணிப்பிற்கு உண்மையை மக்களுக்கு எடுத்து சொல்வதற்கே தடை எனும் போது.. நீங்கள் கூறும் அனைத்தும் எப்பொழுது சாத்தியமாகும் என்றால் தாமிரபரணி ஆறு மாசு பட்டு, தண்ணீரை நம்பி வாழும் சுற்று வட்டார மக்கள் தமது வாழ்வு ஆதாரங்கள் பாதிக்கப் படும் போது தன்னெழுச்சியாக போராட்டம் நடத்துவர்.. ஆனால் அதற்குள் மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்கனவே ஏற்பட்டு விட்டு இருக்கும்..
    நண்பரே… நாங்களும் எந்த கடினமும் இல்லாமல் எளிய வழியிலே எங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முயல்கிறோம்.. ஆனால் நாங்கள் சும்மா இருந்தாலும் இந்த நாடு விடுவதாய் இல்லை..
    – பகத்

  21. //1. ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையங்கள் அமைந்து இருந்த இடம் பெரும்பாலும் நகரின் வெளிப் பகுதிகளிலும் , தேசிய நெடுஞ்சாலைகளிலும் . நகரின் முக்கிய பகுதிகளில் ஏற்கனவே பல வருடங்களாக இந்திய அரசின் பெட்ரோல் நிலையங்கள் செயல் பட்டு வருகின்றன.//

    சென்னையை தவிர பிற இடங்களில் ரிலையன்சு நிலையங்கள் மிக மிக முக்கியமான Strategic இடங்களில் தான் இருந்தது

    //ஏதோ ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையத்தை மூடி விட்டதால் மக்களுக்கு வெற்றி என்று கூறும் உங்களுக்கு சில கேள்விகள்…//
    நான் அப்படி கூறவே இல்லை. நான் கூறியது, ரிலையன்சு மூடப்பட்டது புறக்கணிப்பால் என்பதை தான்

    ஆனாலும் உங்களின் 1 முதல் 3 கேள்விகளுக்கு விடை – அது தனிமனித மனமாற்றத்தால் முடியாதது
    ஆனால் ரிலையன்சு காய்கறிகளை தனி மனித மனமாற்றத்தால் புறகணிக்க முடியும்

    நீங்கள் இது வரை ஒரு எளிய உண்மையை புரிந்து கொள்ளவில்லை
    பின் வழியாக இந்திய அரசிற்கு பெட்ரோல் விற்கும் ரிலையன்ஸ் பெட்ரோல் நிறுவனத்தை தனிமனிதனால் புறக்கணிப்பது கடினம்
    ஆனால்
    நேரடியாக காய்கறி விற்கும் ரிலையன்சு காய்கறிகளை தனிமனிதனால் புறக்கணிப்பது எளிது

    இந்த வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள் நண்பரே….

    பிரச்சனை 1 – ஒரு எளிய வழி இருக்கிறது. ஒரு கடின வழி இருக்கிறது
    பிரச்சனை 2 – எளிய வழி கிடையாது. ஒரு கடின வழி இருக்கிறது

    நான் கூறுவது
    பிரச்சனை 1க்கு எளிய வழியையும், பிரச்சனை 2க்கு கடின வழியையும் பின்பற்றுங்கள் என்பதே.
    இரண்டாவது பிரச்ச்னைக்கு பின்பற்றும் கடின வழியைத்தால் முதல் பிரச்சனைக்கும் கடைபிடிக்க வேண்டும் என்பதில்லை

  22. வணக்கம் தோழரே… மிகவும் அழுத்தமாக எழுதியுள்ளீர்கள்.
    அம்பானி பொறுக்கி கும்பலின் சண்டித்தனமும், சல்லித்தனமும் ஏற்கனவே தெரிந்திரிந்தாலும்,
    உங்களுடைய இந்த படைப்பு மீண்டும் உணர்வை தட்டி எழுப்புகின்றது.இதே போன்ற எண்ணற்ற மக்களின் நிலையை கண் முன்னால் நிறுத்துகின்றது.
    இதே போன்று யாரையும் ஓய்வை தேடாமல் யதார்த்த நிலைக்கு இழுத்துப்போடும் படைப்புகளை தொடர்ச்சியாக படைக்க வாழ்த்துக்கள்.

  23. முதலாளித்துவம் இல்லாத பணத்தை/உற்பத்தியை இருப்பதாக காட்டுகிறது. இரண்டுமே இல்லாதுபோகும். ஆனால் கொஞ்சக் காலம் எடுக்கும். காறும் நீரும் அனைவருக்கும் பொது என்கிறீர்களே, ஏன் நிலம் மட்டும் தனியுடமை என்கிறீர்கள்? இந்தியாவில் வீடில்லாமல் பல மில்லியன். ஆனால் சிலருக்கு பல மில்லியன் ருபா பெறுமதியான வீடுகளும் காணி நிலங்களும்! யோசிக்கணும்!

  24. சரியான தலைப்பு நண்பரே! இது இன்றைய சாப்ட்வேர் மக்களுக்கு எங்கே புரியப்போகிறது? எவ்வளவு ரூபாய் கொடுத்து வாங்குவதற்கும் தயாராக உள்ளனர்? என்ன செய்ய காலம் பதில் சொல்லும்.

  25. இதெல்லாம் மேற்கு ஐரோப்பாவில் எப்போதோ நடந்து விட்ட மாற்றங்கள். அங்கேயெல்லாம் ரிலையன்ஸ் போன்ற மார்க்கெட்கள் நகரத்திற்கு நகரம், கிராமத்திற்கு கிராமம் காணப்படுகின்றன. இந்தியாவில் இருப்பது போன்ற சிறிய பலசரக்கு கடைகளை இங்கே காண்பது அரிது. ஒரு காலத்தில் இருந்தன, ஆனால் தற்போது அழிந்து விட்டன. எங்காவது இரு நகரத்தில் பலசரக்கு கடை இருந்தால் அது இந்தியக் கடை, துருக்கி கடை என்று வெளிநாட்டு வாடிக்கயாளருக்கான சிறப்பு கடைகளாக இருக்கும்.

  26. 1) அப்ப அண்ணாச்சிகள் எல்லாம் நியாயமா?
    2) இப்படிதானே ஒவ்வொரு விvaசாயிக்கும் இருக்கும்? (தான் கஷ்டபட்டு வேலை செஞ்சி உழைச்சி கொண்டு வர்ற பொருளை உக்காந்த இடதுல உக்காந்து கிட்டு 50% 100% அப்ப தெரியலயா விசாயிகளின் கறி அண்ணாச்சி கடையில என்ன விலைன்னு ?)
    3) நீ நோகமா நொங்கு தின்ன சரி… இன்னொருத்தன் தின்ன வலிக்குதோ?
    4) இப்படிதானே விவசாயிக்கும் இருக்கும்… எத்தனை பேரு எலி கறி தின்னு செத்தாங்க?

    i am not supporting ரிலையன்ஸ்

    • மிகவும் சரியாகச் சொன்னீர்.

      இவனுங்க மட்டும் இதுநாள் வரை விவசாயிகளைச் சுரண்டலாம். ஆனால் மற்றவர்கள் வந்தால் இவனுங்களுக்கு வலிக்கும்.

  27. அன்னியர்கள் கைளில் ஆட்சி மட்டுமல்ல தொழில்களும்தான். தமிழா இனியேனும் உன் பலமென்ன ? பலவீனமென்ன ? சிந்திப்பாயானால் சிறகு விரிக்கலாம். இலலையேல் இந்தியமென்றும், திராவிடமென்றும் விறகாக்கி எரித்துவிடுவார்கள். அதன்பின் ஏது தமிழகம்.

    தமிழகத்தில் தமிழனால் செழிப்பாக வாழ முடிகிறதா? வாழவைக்கத்தான் ஆட்சியாளர்களால் முடிகிறதா? மின்சாரமில்லாத ஊருக்கு எதற்காகக் கலர் ரீவீ.

    கலர் கலராய் வருகின்ற ஐஸ்வர்யாக்களதும், நயனதாராக்களதும் மச்சங்களை எண்ணியே மாய்ந்து போகிறது எமது இளம் தமிழ்ப் பரம்பரை. திருக்குறளைக் கேட்டால் முழிக்கிறான். ஆனால் திரைப்படத்தின் தொடக்கம் முதல் முடிவுவரை அத்துப்படி. இந்த லட்சணத்தில் மானாட மயிலாட வேறு. மக்களை மந்தைகளாக்கியபடி. தமிழகமே நிர்க்கதியாய் போhய்விடாதீர்கள். விழிப்படையமாட்டாயா? இரண்டரை மணி நேரம் இருட்டுக்குள் கற்பனைக் குதிரையில் இரண்டு துண்டுகளுடன் வரும் நடிகைகளோடு கொஞ்சிவிட்டு நிஜங்களைத் தொலைத்தபடி.
    ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றுத் தெரிகிறது. அதையும் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தமிழினின் காவலரென்போர்(?) முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டுத் தனயனிடம் தமிழகத்தை, அதாவது அரசியல் விழிப்புணர்வற்றதானதாக மாற்றி ஒப்படைக்கும் நோக்கோடு, ஒரு பழுத்த அரசியல் குதிரையொன்று பாய்ந்து செல்ல முயல்கிறது. இளையோரே சிந்தியுங்கள்.

  28. super market theranthathu reliance in thavaru alla.
    (BUT) antha area pattre thariyamal KADAI theranthathu antha nabarin thavaru( AGE28).
    nam endrum maligaikadai vaithiruthal nam naatin tharam uyarathu .
    ”ORU KOITTIN ARUGA MATTRORU KODU PAREYATHAGA VARIUM POTHU MUNBU IRUNTHA KODU SIREATHAGATHAN THAREUM”
    THAT IS LIFE

  29. naanum oru sinna viyapari thaan nanga market la kadai vaithrugaom anga vegetable vanga varanga ellam idu than rellaince cheap kidaikithu nee romba jasthiya solra nnu sollunvanga…

    releance vantha appuram nanga romba pathikka pattoam

  30. நான் வசிக்கும் முகப்பேர் பகுதியிலும் நான் பல கடைகளை பரிசோதித்து பார்த்தேன். ரிலையன்ஸ், ச்பென்செர்ஸ் போன்ற கடைகளில் தரம் மற்றும் விலையினால் மிகவும் களைப்படைந்தேன் (எல்லோரும் சொல்லும்படி அப்படி ஒன்றும் நல்ல தரம் / விலை எல்லாம் இல்லை).

    இந்நிலையில் அங்கிருந்த ஒரு அண்ணாச்சி கடை திடீரென்று புதுப் பொலிவுடன் மாற்றம் பெற்று திறக்கப்பட்டது. அதுவும் ஒரு சூப்பர் மார்க்கெட் போல, ஆனால் ஆடம்பர செலவுகள் இல்லாமல் அதே சமயம் விரைவாக பில் போட கணினி, கடன் அட்டை வசதி, பொருட்களை தேடி எடுத்து கொடுக்க ரெண்டுங்கெட்டான் வயது சிறுவர்கள், Door delivery போன்ற நல்ல வசதிகளுடன் அந்த கடை உள்ளது. அண்ணாச்சி தவிர்த்த முக்கிய விஷயங்கள்: குளுகுளு வசதி, ஆடம்பர விளக்குகள் (எளிமையான குழல் விளக்குகள் மட்டுமே), LCD TVs, ஆடம்பர உள் அலங்கார வேலைகள், மற்றும் பல.

    இந்த கடையில் தான் பெரும்பாலும் குறைந்த விலையில் அனைத்துப் பொருட்களும் கிடைக்கிறது. அதே சமயம் வசதியாகவும் இருக்கிறது. இந்த கடைக்கு வரும் கூட்டத்துக்கு குறைவே இல்லை. இந்த அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது.

  31. Instead of cribbing against Reliance Fresh, small shop owners can pool their money and buy vegetables directly from farmers and sell directly and avoid the middlemen and save lot of money.

    it is natural that people prefer low cost and good service.. Due to the success of internet many newspapers and publishers profit was reduced, is it a mistake of Internet?

    Small Retailers must adapt to the new situation and then it will be easy to compete with giants…

  32. மனதை பாதித்த பதிவு…சரியான தலைப்பு இது இன்றைய சாப்ட்வேர் மக்களுக்கு எங்கே புரியப்போகிறது? எவ்வளவு ரூபாய் கொடுத்து வாங்குவதற்கும் தயாராக உள்ளனர்? என்ன செய்ய காலம் பதில் சொல்லும்.மாற்றம் மட்டுமே மாறது.

  33. எப்படி பெரும் முதலாளிகள் நம்மையும் நம் நாட்டையும் சுரண்டிக் கொழுக்கிறார்கள் என்பதை மிக தெளிவாக உணர்த்துகிறது இந்த பதிவு. இதில் வரும் பெரும் லாபத்தின் பங்கு நம் நாட்டை இறுகப் பற்றிக்கொண்ட அரசியல் கழுகுகுளுக்கு போகிறது என்பதும் அனைவரும் அறிந்ததுவே.

  34. this points are correct:

    1) அப்ப அண்ணாச்சிகள் எல்லாம் நியாயமா?
    2) இப்படிதானே ஒவ்வொரு விvaசாயிக்கும் இருக்கும்? (தான் கஷ்டபட்டு வேலை செஞ்சி உழைச்சி கொண்டு வர்ற பொருளை உக்காந்த இடதுல உக்காந்து கிட்டு 50% 100% அப்ப தெரியலயா விசாயிகளின் கறி அண்ணாச்சி கடையில என்ன விலைன்னு ?)
    3) நீ நோகமா நொங்கு தின்ன சரி… இன்னொருத்தன் தின்ன வலிக்குதோ?
    4) இப்படிதானே விவசாயிக்கும் இருக்கும்… எத்தனை பேரு எலி கறி தின்னு செத்தாங்க?

  35. i am sure that the reliance or their agents paying more to the farmers than what the அண்ணாச்சிக paying earlier….

    and also

    farmers.. regular marketing channel is operative with reliance/ middle mans…..

  36. First of all you have to understand these before jumping in to a conclusion.

    1. India’s middle class group are keep on increasing and spending power of huge number of people also increasing.

    What is the Govt plan ?

    1. 70 % of india’s poverty is in rural areas ..India was and is a agri oriented country then why still poverty so much in rural ? Because too much manpower in rural. In abroad is one person need to produce 100kg rice in india they use 20 persons.

    This huge manpower supply made them cheaper and easily exploited by the market. So india decided to open its gate to allow more foreign investors to create more jobs for people.

    The result …as govt expected now more and and more rural people moving to urban life and getting a standard income there. And as a side effect the manpower supply now starts to reduce in rural areas and agri modernization are started… but it will take some years to get balanced.

    These above transformation created huge demand for food as people’s buying power increased.

    So how to increase our Agri productivity ?

    1. Use advanced Bio tech for agri to increase productivity. (but already people opposed it for brinjal)

    2. Modernize agri…reduce manpower dependent and increases machinery…going on.

    3. Allow big players in Agri industry. (Now this reliance)

    4. Allow foreign investors in agri.

    So its all good for people only. IF you count only those small shop owner then how to feed 1.2 billion people ?

    Same time we can’t crush those small shop owners, so govt only allow big players in some areas and cities only.

    Its very easy to twist a news and creating false image. Vinavu or you or me dont care how the economy runs or how to feed 1.2 billion people.

    But govt have to plan for that.

    2.

  37. முதல்ல குடிநீரை பாட்டில்ல வித்தான் அதுக்கு முன்னாடி சுத்தம் நோய் கிருமிகள் அப்படி இப்படின்னு அரசு உதவியுடன் ஒரு பெரிய பிரச்சாரமே நடந்தது அடுத்து உப்பு விக்க ஆரம்பிச்சான் ஐயோதின் சேர்த்து அதுக்கும் அரசு செலவில் பிரச்சாரம் இப்ப காய்கறி மளிகை விக்க வந்துட்டான்.அடுத்தது காத்து தான்.அதுல நைட்ரஜின் ஓஜோன் எல்லாம் கலந்து மீனரல் காத்துன்னு
    சிலிண்டரில் விப்பான் நம்ம பாத்துக்கிட்டே இருந்தால்.இயற்கையிலேயே கிடைக்கும் இந்த பொருட்களை பாவித்தால் நமக்கு ஒவ்வாமை வரும் அளவிற்கு அதில் சில உட்பொருட்கள் சேர்க்க இப்பவே ஆராய்ச்சி செய்ய தொடங்கி இருப்பான்.

  38. கொடுக்கும் காசுக்கு தரம் எதிர் பார்ப்பவர்கள் மனிதர்கள்.
    அது என்ன- நடுத்தர வர்க்கத்தைக் குறை சொல்லியிருக்கின்றீர்கள்.
    கொல்லன் பட்டறையில் ஊசி விற்க முயற்சி செய்துவிட்டுப் பழியை யார் மீது போடுவது?
    இன்னும் தள்ளுவண்டிக்காரர்கள் சம்பாதிக்கிறார்கள் – ஏன் தெரியுமா? Door delivery.
    அன்னாசிகளுக்கு வக்காலத்து வாங்கும் அன்பர்- உற்பத்தியாளர்களான விவசாயிகளைப் பற்றி தெரியாதவர் போலும்!
    விருது நகர் அண்ணாச்சி, வசந்த் அன் கோ அன்னாசி, சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி, எம்.ஜி.எம். அண்ணாச்சி,
    கே.ஏ.ராமதாஸ் அண்ணாச்சி என்று மிகப் பெரிய அன்னாசிகளை மறந்துவிட்டு —-நடுத்தர வர்க்கத்தையும்- பல பேருக்கு
    வேலை வாய்ப்பு அளிக்கும் அம்பானி நிறுவனங்களையும் மொட்டையாக குறை சொல்லி- மனிதக் கறி என்றெல்லாம்
    உலரக் கூடாது.அங்கே காய்கறி வாங்குவோர் முட்டாள்கள் அல்ல.

    • வந்து விட்டார்…ஜெய மோகனுக்கு அடுத்த தத்துவ ஞானி….பராக்…பராக்….

      ‘விவரம்’ மிகக்கூடிய பிரியமான நண்பரே…இதப்படிங்க மொதல்ல…

      https://www.vinavu.com/2008/07/26/jemo/

    • நீங்க தெனாலியின் பதிவை படிக்கவே இல்லையா…??

      “இந்த விடயம் ஏற்கனவே அமெரிக்காவில நிகழ்ந்ததுதான்.வால்மார்ட் வந்த பிறகு அமெரிக்காவில சில்லறை கடைகளே கிடையாதாம்.சரி, வால்மார்ட் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது என நினைத்தேன். எங்கள் வீட்டுக்கு உரிமையான அமெரிக்க கிழவி வால்மார்ட்டுக்கு எப்போதும் போகாது. ஒருநாள் ஏன் என்று விசாரித்த போது சொன்னது, அங்கு வேலை செய்யும் நபர்களை வால்மார்ட் சுரண்டுவதாகவும், குறைந்த சம்பளம், மருத்துவ இன்சுரன்ஸ் தருவதில்லை, மகப்பேறு லீவு தராமை என எல்லாக் கூத்துகளும் நடப்பதாகவும், தான் வால்மார்ட் படியை ஒரு போதும் மிதிக்க மாட்டேன் என சொன்னது. ஆனால் நம்ம இந்தியத் தலைகளை வால்மார்டில் நிறைய பாக்கலாம்!!!”

      • அவன் சொன்னான் -இவன் சொன்னான் என்று இருபதாயிரம் மயில்களுக்கு அப்பால் இருக்கும்
        அமேரிக்கா – இங்குள்ள வால்மார்ட் பற்றி எழுதுகின்றீர்கள். உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
        வால்மார்ட் பயப்படுவது சீனர்களைக் கண்டு. அவர்கள்தான் வால் மார்டுக்கும் சப்ளை…..அவர்கள்தான்
        வால்மார்டுக்கும் போட்டி.கடைசியில் எங்கு சென்று வாங்கினாலும் சீனாதான் என்றால் அதை எங்கு வாங்கினால் என்ன?!
        ரங்கநாதன் தெருவை விட- இங்குள்ள ஷாப்பிங் மால்கள் சம்பாதிப்பதில்லை.வரிகட்டும் வால் மார்ட் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஊன்று கோல்…..ரசீதே கொடுக்காமால் கோணிப் பைகளில் அள்ளும் சரவணா ஸ்டோர்ஸ்
        அண்ணாச்சியை விடவா? ஹலோ..நண்பரே- இங்கு குறைந்தபட்சம் ஊதியம் என்று ஓன்று உள்ளது.வால்மார்ட்டில் குறைந்த பட்ச
        ஊதியம் எவ்வளவு தெரியுமா? ஒரு மணி நேரத்திற்கு ரூபாய்.ஐநூறு.
        எல்லோருமே படிப்படியாக வாழ்வில் உயர்ந்தவர்கள்தான்.
        ஒருவர் தன முயற்சியில் வெற்றிபெறாவிட்டால் – அதற்குரிய சரியான காரணத்தை ஆராய வேண்டும்.
        அம்பானி- சும்பானி என்று ஒருவரைக் கை காட்டிவிட்டு -தானும் தூக்குக் கயிற்றில் தொங்குவது தவறு என்பதுதான் எனது வாதம்.
        பல இலட்சங்களை முதலீடாகப் போடாமல்- பாதுகாப்பாக அந்த இளைஞர் முயற்சி செய்திருக்கவேண்டும்.
        நானும் வியாபாரம் செய்கின்றேன்- கடந்த மூன்று வருடங்களாக- அமெரிக்கக் கண்டத்தில்!
        மிகச் சிறிய அளவில்!.நான் வால்மார்ட்- சூபர் ஸ்டோர் என்று யாரோடும் போட்டியிடவில்லை.
        நான்கு இலட்சம் வங்கியில் கடன் வாங்கி- ஐந்து இலட்சத்திற்கு பொருள் வாங்கி- இருபது இலட்ச ரூபாய்க்கு வியாபாரம்.
        கோவிலுக்கு- அரசாங்கத்திற்கு- ஆடிட்டருக்கு-எனக்கு- பிறர் உதவிகளுக்கு என்று பிரித்து வாழ்கின்றோம்.
        குறிப்பு: காலில் செருப்பு கூட போடாமல் அரசு பள்ளிக் கூடத்தில் படித்தவன்தான் அடியேன்.
        இன்னும் ஒன்றை சொல்கின்றேன்- சரவணா பவனில் சாப்பிடுகின்றோம்…..அதைவிட ருசி, தரம் , குறைந்த விலை உள்ள உணவு விடுதிகள் இல்லையா? பல் இருக்கின்றவன் பட்டாணி தின்றால்- போக்கை வாயன் இடித்துத் தின்னலாம்….அதை விட்டு விட்டு – கொண்டை உள்ளவள் கட்டிக் கொண்டால் – வழுக்கைத்தலை ஏன் கோபப் பட வேண்டும்?
        ஏன்- உங்கள் கையில் பணம் இருந்தால் என்ன செய்வீர்கள் தர்மப் பிரபு…? மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்.
        ஆசை , சில சமயங்களில் வாழ வைக்கின்றது- பல சமயங்களில் அழித்து விடுகின்றது.
        எல்லாவற்றிகும் பயிற்சி- முயற்சி-திட்டம்- செயல்பாடு-இடம்-பொருள்-ஏவல் போன்ற அனைத்தும் வேண்டும்.
        இதைதவிர நமது பலவீனங்களின் பக்கம் என்பது மிகவும் முக்கியம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க