Skip to content

சந்திராயன் – அறிவியலா? ஆபாசமா?

சந்திராயன் இன்று ஏவப்படுகிறது. அமெரிக்க டவுசர் கிழிந்ததையும் பங்குச் சந்தை விழுந்ததையும் உற்சாகம் கொப்பளிக்க விவரிக்க முடியாமல் செய்தி ஊடகங்கள் திணறிய நிலையில் கிடைத்தது சந்திராயன். இதனைக் கொண்டு எப்போதும் போனியாகும் வல்லரசுக் கனவை ‘தீபாவளி ஸ்பெஷல் சேல்’ செய்யத் துவங்கிவிட்டன. இந்த இரைச்சலில் மறைக்கப்பட்டிருக்கும் உண்மை என்ன? அதனை சமூக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அலசுகிறது இக்கட்டுரை. புதிய கலாச்சாரம் மே 2007 ல் வெளிவந்த இக்கட்டுரையை காலப் பொருத்தம் காரணமாக இன்று வெளியிடுகிறோம். தமிலிஷில் வாக்களிப்பதன் மூலம் நிறையப் பேர் இக்கட்டுரையைப் படிப்பதற்கு நீங்களும் உதவி செய்யலாம். கட்டுரை குறித்த கருத்துக்களையும் மறவாமல் தெரிவிக்கவும். நன்றியுடன் வினவு..

நிலவில் இந்தியன் : வல்லரசு கனவுக்கு வெட்டிச் செலவு!

ஆண்டுக்கொருமுறை நடக்கும் கோவில் திருவிழாக்களில் முத்தாய்ப்பான இறுதி நிகழ்ச்சி வாணவேடிக்கை. சாதிப்பற்றைப் போல ஊர் அபிமானத்தையும் வரித்திருக்கும் நாட்டுப்புறமக்கள் எந்த ஊர் அதிகம் செலவு செய்கிறது என்று போட்டி போட்டுக் கொண்டு வாணவேடிக்கையை நடத்துவார்கள். கஞ்சிக்கு வழியில்லாத இடங்களில் கூட இந்த வேடிக்கைக்கான வசூல் மும்முரமாக நடக்கும். ஏழைகள் என்பதால் வறட்டு ஜம்பம் குறைந்து விடுகிறதா என்ன? அறியாப் பாமர மக்களை விடுங்கள். அறிவாளிகளின் கூடாரமான இந்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவும் ஆண்டுக்கொரு முறை வாணவேடிக்கையை நடத்துகிறது. இஸ்ரோவின் ஓராண்டுச் செலவு ரூபாய் 4000 கோடி.

இவ்வாண்டு ஜனவரி 10ஆம் தேதி இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ஏவுகணை மூலம் 2 வெளிநாட்டு சோதனை விண்கோள்களையும், இரண்டு உள்நாட்டு விண்கோள்களையும் ஏவியது. அதில் எஸ்.ஆர்.வி.1 என்ற விண்கோள் விண்வெளியில் 12 நாட்கள் சுற்றிய பிறகு வங்காள விரிகுடாவில் இறக்கப்பட்டது. ஒரு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி அதையே மீட்டுக் கொண்டு வருவது என்பது ஒரு இமாலய வெற்றியாம். பல தொழில்நுட்பத் தடைகளைத் தாண்டி இச்சாதனையை நிறைவேற்றியதாக இஸ்ரோவின் அறிவியலாளர்கள் பெருமைப்படுகிறார்கள்.

அமெரிக்கா இந்தச் சோதனையில் 12 முறை தோல்வியடைந்து 13ஆவது முயற்சியில் வெற்றியடைந்ததாம். இந்தியாவோ முதல் சோதனையிலே வென்றுவிட்டதாம். ஆனால் அமெரிக்காவின் சோதனைகள் தோல்வியடைந்தது 1960ஆம் ஆண்டு. இந்தியா அடைந்த வெற்றியின் பின்னே 47 ஆண்டுகள் இடைவெளி இருப் பது போகட்டும். இஸ்ரோவின் அறிவியலாளர்கள் ஒரு அறிவியாளன் என்ற முறையில் அறிவியல் பரிசோதனைகளை நிகழ்த்தி – மிகுந்த செலவு பிடிக்கும் சோதனை என்றாலும் – சொந்த முயற்சியில் வெற்றி பெற்றிருப்பதை நாமும் பாராட்டுவோம். ஆயினும் இந்த வெற்றியினால் என்ன பயன்?

விண்வெளிக்கு ஒரு இந்தியனை அனுப்புவதற்கு இந்த வெற்றி ஒரு மைல் கல்லாம். அடுத்த ஆண்டு இஸ்ரோ 400 கோடி ரூபாய் செலவில் சந்திராயன் எனும் விண்கோளை நிலவுக்கு அனுப்பப் போகிறதாம். இன்னும் பத்தாண்டுகளில் நிலவுக்கு ஒரு இந்தியனை அனுப்ப முடியுமாம். இதற்கான உத்தேச செலவு மதிப்பீடு 10000 கோடி ரூபாய். இதற்கான மறைமுக நிறுவனச் செலவு இன்னும் சில ஆயிரம் கோடிகளைக் குடிக்கும்.

மூன்று டன் எடை கொண்ட விண்கோள், அதில் விண்வெளி வீரர்களுக்கான அறை, சேவை அறை, அவசரநிலை அறை போன்றவற்றை இந்தியா முழுவதும் உள்ள இஸ்ரோவின் ஆராய்ச்சி நிலையங்களில் கட்டவேண்டும். மேலும் உயர் அழுத்த அதிர்வைச் சமாளிப்பதற்கான பயிற்சி, வீரர்களின் உடைகள், பாதுகாப்பு முறைகள், உடல் நலக் கண்காணிப்பு, உயிர்காக்கும் கருவிகள் முதலியனவற்றில் வீரர்கள் நிபுணத்துவம் பெறவேண்டும். ஒரு இந்தியனை நிலவுக்கு அனுப்பி பத்திரமாக உயிரோடு மீட்டுக் கொண்டு வர இத்தனை ‘பகீரதப் பிரயத்தனங்கள்’ செய்தாக வேண்டும்.

பூமியில் இருக்கும் பல கோடி இந்தியர்களை மரணக் குழியில் தள்ளிவரும் அரசு, ஒரே ஒரு இந்தியனை நிலவுக்கு அனுப்பி வாணவேடிக்கை நடத்துவதற்கு பல ஆயிரம் கோடிகளைச் செலவழிக்கிறது. இதுதான் வல்லரசு ஜம்பம். முதலாளிகளுக்கு இலாபம் தரும் திட்டங்களைத் தவிர வேறு எந்த மக்கள் நலத்திட்டமாக இருந்தாலும் அதனை வீண்செலவு என்று சாடும் இந்தியா டுடே போன்ற பிரச்சார பீரங்கிகள், இந்த வல்லரசு ஜம்பத்தை மட்டும் ஊதிவிடத் தவறுவதில்லை.

போதாக்குறைக்கு நமது அரசவைக் கோமாளி அப்துல் கலாம் வேறு ஊர் ஊராய்ச் சென்று ஏதுமறியாத பள்ளிக் குழந்தைகளிடம், “குழந்தைகளே கனவு காணுங்கள், 2020இல் இந்தியா வல்லரசாகப் போகிறது, நிலவுக்கு இந்தியனை அனுப்பப் போகிறோம்” என்று சாமியாடி வருகிறார்.

இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னே மறைந்திருக்கும் உண்மை என்ன? விண்வெளிக்கு இந்தியனை அனுப்புவதால் நயாபைசாவுக்குக் கூட பயனில்லை. நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல. அறிவியல் ரீதியாகக்கூட இதற்கு எந்தப் பயனும் இல்லை என்பதே உண்மை. நான் காசிக்குப் போயிருக்கிறேன், மெக்காவுக்குப் போயிருக்கிறேன் என்பது போல இந்தியனை நிலவுக்கு அனுப்பி விட்டோம் என்று வெட்டியாகப் பீற்றித் திரியலாம், அவ்வளவுதான்.

இப்படித்தான் 1960களில் அமெரிக்காவும், ரசியாவும் கெடுபிடிப் போருக்காக விண்வெளி ஆராய்ச்சி என்ற பெயரில் பல்லாயிரம் கோடிகளை விரயமாக்கின. யார் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது என்ற போட்டியில் பல மனித உயிர்களும் விரயமாக்கப்பட்டன. இது அறிவியலின் பால் உள்ள காதலால் நடக்கவில்லை என்பதுதான் முக்கியம். ஏகாதிபத்திய உலகில் தூய அறிவியல் காதல் என்ற ஒன்று இருக்க முடியாதல்லவா!

சோவியத் யூனியனின் யூரி காகரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார். ஆயினும் இதற்கு முன்னும் பின்னும் அரசுகளின் நிர்ப்பந்தம் காரணமாக திரும்பி வருவோம் என்ற உத்தரவாதமில்லாமல் இருநாட்டு வீரர்களும் உற்சாகமின்றி மரணபயத்துடன் சென்றதை பி.பி.சி. ஆவணப்படம் ஒன்று தெரிவிக்கிறது. சமூக ஏகாதிபத்தியமாகச் சீரழிந்த சோவியத் யூனியன் இந்தப் போட்டியில் சிக்கித் தனது பொருளாதார வல்லமையை இழந்து திவால் ஆனது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வருடத்திற்கு 70,000 கோடி ரூபாய்களை செலவழிக்கிறது. உலகைக் கொள்ளையடித்து உலையில் போட்ட இந்த ஆராய்ச்சியினால் என்ன பயன்? உலக மக்களை அச்சுறுத்தும் வண்ணம் நாசகார ஆயுதங்களை விண்ணில் சுற்றவிட்டதுதான் மிச்சம்.

70களில் அப்பல்லோ விண்கலத்தில் நிலவுக்கு வீரர்களை அனுப்பிய அமெரிக்கா, சோவியத் யூனியனை ஆயுதப் போட்டியில் வெல்வதற்காக தனது கவனத்தை நட்சத்திரப்போர் திட்டத்தின் மீது குவித்தது. இதன் செலவு மதிப்பீடு நினைத்துப் பார்க்க முடியாத அளவு அதிகம். பின்பு ரசியா வீழ்ந்த பிறகு அந்தத் திட்டத்திற்கு அவசியமில்லாததால் அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அதன் விண்வெளி ஆராய்ச்சி ஈராக்கிலும், ஆப்கானிலும் இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்வதற்குத்தான் சிறப்பாகப் பயன்பட்டு வருகிறது.

அதிலும் அமெரிக்க விண்கோள்களின் உதவியுடன் ஈராக்கின் இராணுவ இலக்குகளை மட்டும் தாக்குவதாகக் கூறி மக்கள் குடியிருப்பில் குண்டு போட்டதுதான் அதன் தொழில்நுட்ப வெற்றி! இது போக இந்த விண்வெளி ஆராய்ச்சி வித்தைகள் ஹாலிவுட் படங்களுக்கு திரைக்கதை உற்பத்தி செய்ய மட்டும்தான் பயன்பட்டு வருகின்றன. இந்த அறிவியல் மேதைகள்தான் புளோரிடா மாநிலத்தை காத்ரினா சூறாவளி பிய்த்தெறிந்தபோது, மக்களைக் காப்பாற்ற முடியாமல் திகைத்து நின்றார்கள்.

ரசியாவும் தற்போது பேருக்கு விண்வெளி ஆராய்ச்சியைத் தொடர்ந்து வருகிறது. அதற்குப் பணம் சேர்ப்பதற்காக தலைக்கு 90 கோடி ரூபாய் என்று கட்டணம் வைத்து கோடீசுவர முதலாளிகளை விண்வெளிச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறது. ரசிய விண்வெளிச் சாதனையின் இலட்சணம் இதுதான். சுரண்டலுக்கும், நாசகார ஆயுதங்களுக்காகவும் மட்டுமின்றி முதலாளிகளின் கேளிக்கைக்கும் விண்வெளி அறிவியல் பயன்படும் என்பது இதில் உள்ள செய்தி.

ஏகாதிபத்தியங்களின் இலாபவேட்டைக்காக மலிவான உழைப்பை விற்று கொத்தடிமைகளின் நாடாக மாறிவரும் சீனாவும் விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மொத்த உள்நாட்டு தேசிய உற்பத்தியில் 65 சதவீதத்தை தனியார் முதலாளிகளிடம் விட்டுக் கொடுத்திருக்கும் அதிகாரவர்க்க முதலாளித்துவ நாடான சீனாவில் ஓராண்டில் நடக்கும் நிலக்கரிச் சுரங்க விபத்துக்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள்.

இதைத் தடுப்பதற்கு வக்கற்ற சீன அரசு 2003இல் விண்வெளிக்கு ஒரு சீனவீரரை அனுப்பி இந்தச் சாதனையில் மூன்றாம் நாடாக மாறியிருக்கிறது. சீனாவும் நிலவுக்கு ஒரு வீரரை அனுப்பப் போகிறதாம். சீன கடற்கரைப் பெருநகரங்களில் நடக்கும் பேஷன் ஷோக்களில் அழகிகள் வாத்து நடை நடக்க, சீன வீரர் நிலவில் அன்ன நடை நடக்கப் போகிறார். கிராமப்புறங்களில் இருந்து துரத்தப்படும் சீன விவசாயிகள் நகரங்களை நோக்கி நாடோடிகளாய் ஆடுகளைப் போல ஓடுகிறார்கள். நல்ல வளர்ச்சிதான்!

உலக நாடுகளின் வாணவேடிக்கைக் கதை இதுவாக இருக்க இந்தியா எதைச் சாதித்து விடப்போகிறது? நமது செயற்கைக்கோள்களால் சுனாமியின் அழிவை முன்னறிந்து சொல்ல முடிந்ததா? அந்த நேரத்தில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை முன்னறிந்து கூறப் பயன்படும் செயற்கைக் கோள்கள், பருவநிலை மாற்றத்தை முன்னறிவித்து விவசாயிகளுக்குப் பயன்பட்டதுண்டா? குடிநீரோ, கழிப்பிட வசதியோ, கல்வியறிவோ இன்றி கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் நிலவுக்கு இந்தியனை அனுப்புவது என்பது ஆபாசமன்றி வேறென்ன?

புதிய கலாச்சாரம், மே’07 இதழிலிருந்து (அனுமதியுடன்)

Print

27 Comments

  1. //உலக நாடுகளின் வாணவேடிக்கைக் கதை இதுவாக இருக்க இந்தியா எதைச் சாதித்து விடப்போகிறது? //

    அறிவியல் சோதனைகளால் பல செலவுகள் ஏற்படுவது உண்மை தான். மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதும் உண்மை தான். “ஒரு சில” சோதனைகள் தவிர்க்க முடியாதவை, அதே போல செலவுகளும்.

    //நமது அரசவைக் கோமாளி அப்துல் கலாம் வேறு ஊர் ஊராய்ச் சென்று ஏதுமறியாத பள்ளிக் குழந்தைகளிடம், “குழந்தைகளே கனவு காணுங்கள், 2020இல் இந்தியா வல்லரசாகப் போகிறது, நிலவுக்கு இந்தியனை அனுப்பப் போகிறோம்” என்று சாமியாடி வருகிறார்.//

    கனவு காணுங்கள் என்பது உங்களுடைய குறிக்கோளை அமையுங்கள் அது பற்றியே சிந்தனையிலேயே இருந்து வெற்றி பாருங்கள் என்பது தான் அதன் அர்த்தம்.

    செயற்கை கோளால் சுனாமியை கண்டுபிடிக்க முடியவில்லை நமக்கு ஏற்பட்ட இயற்க்கை இன்னல்களை தடுக்க முடியவில்லை என்பதால், செயற்கை கோளே தேவையில்லை என்றால் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது. நமக்கு தெரியாமல் செயற்கை கோளால் நாம் அடைந்து வரும் தின பயன்கள் ஏராளம். அது பற்றிய விஷயங்கள் நமக்கு தெரியவில்லை என்பதற்காக சுனாமியை கண்டுபிடிக்க முடியவில்லை அதனால் செயற்கை கோளே அவசியமற்றது தண்ட செலவு என்றால் என்னிடம் பதில் இல்லை.

    Posted on 22-Oct-08 at 12:05 pm | Permalink
  2. சரவணன்

    உண்மையில் இஸ்ரோ, அன்ட்ரிக்ஸ் கார்ப்பொரேஷன் ஏன்ற அமைப்பு மூலம் அரசுக்கு லாபம் ஈட்டித்தருகிறது. வரிப்பணத்தைச் செலவழிக்கவில்லை.

    Posted on 22-Oct-08 at 12:06 pm | Permalink
  3. இன்னொன்று கூற மறந்து விட்டேன்.

    இந்தியா மற்ற நாடுகளின் செயற்கை கோள்களையும் உடன் ஏவுவதன் மூலம் வணிக ரீதியில் அதில் பணம் பார்க்கிறது, அது எந்த அளவுக்கு லாபகரமானது என்று தெரியவில்லை, அதில் பெருமளவு பணம் வரவில்லை என்றாலும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என்றே கருதுகிறேன்.

    Posted on 22-Oct-08 at 12:17 pm | Permalink
  4. Hari hara krishnan

    Iyya,

    Enna oru valai thalam kidaithu vittathu enpatharkkaha enna vendumanalum ezhuthalam endru ninaippa.

    Thangal vayathu enakku theriyathu

    Irunthalum ezhuthukiraen.

    Thipavali pattasu vedippathanal bayanillai

    Piraku ean deepavali thorum pattasu vedikkirarkal.

    Athu nam culture enpathu mattum illai, Pattasu urpathiyinal evvalavu perukku velai vaippu kidaikkirathu.

    Ethanai kudumpangal athai vaithu pizhikkirathu enpathu ungalukku therinthu irukkum.

    Athu pol than idhuvum. Panathin alavu than verupadukirathu.

    Oru kelvi pathilil Kumudama (OR) Ananda vikatana gyabaham illai.

    Chinna nadugalil Vellam, Varatchi, Sunami, Nila nadukkam idhu pondra kalangalil antha samayathil india pondra nadugalum anthantha countrykalukk uthavum.

    Ithai vaithu oru neyar kelvi, nam nadea picchaikaranadu appadi irukka nam eatharkku aduthavarkalukku uthava vendum? endru.

    atharkana pathil : ayya namakku veetil ayerathi ettu kadan sumai irukkum. anal roatil oru pichaikaranakku oru sila rupee tharmam pannuvom illaya athu pol than ithuvum.

    Oru nattin valarchi enpathu anaivarukkum soru kidaippathinal mattumea vanthu vidathu.

    Posted on 22-Oct-08 at 1:59 pm | Permalink
  5. Anwar

    ஐயா தங்கள் சந்திராயன் பற்றி சொல்லியிருப்பது சரிதான் ஆனால் வின்வெளி ஆராய்ச்சியே வேண்டாம் என்று சொல்வது தவறு. இதில் அப்துல் கலாமை வேறு தவறாக சொல்கிறீர்கள். அய்யா அவரும் ஒரு தேச பற்று உள்ளவர்தான். அது போக இத்தனை பணம் வேறு ஆக்கப்பூர்வமான வழிகளில் செலவு செய்வது சால சிறந்தது என்ற உங்கள் கூற்றை நானு வழி மொழிகிறேன்.

    Posted on 22-Oct-08 at 3:34 pm | Permalink
  6. Pattasu urpathiyinal evvalavu perukku velai vaippu kidaikkirathu.——so let us also build temples and employ archakars!

    Posted on 22-Oct-08 at 7:37 pm | Permalink
  7. bmurali80

    பதிவு மகா பிதற்றல். ஒவ்வொரு கண்டுபிடிப்புக்குப் பின் எவ்வளவு பக்கவிளைவுகள் இருக்கு என்று தெரியுமா ?

    மார்ஸ் கிரகத்திற்கு செயற்கைக் கோளை அனுப்பினால் என்ன இலாபம் ? ஆனால் அந்த செயலை செய்யும் பொழுது எத்துனை கண்டுபிடிப்புகள் ரொபோடிக்ஸில் நடந்தது என்று தெரியுமா ?

    அது இருக்கட்டும் அறிவியல் மூலம் கடவுளைக் கட்டிபோட பல பில்லியன்கள் செலவு செய்யும் ஐரோப்பிய விஞ்யானிகள் செய்வது அறிவியலா இல்லை உலக அபத்தமா ?

    வல்லரசு கனவா இல்லையா என்பது தனி ஆவர்த்தனம். ஆனால் இந்த பதிவு கண்டிப்பாக புதிய ஜனாயகம் பத்திரிக்கையில் மட்டும் இடம் பெற வேண்டிய பிரெயின்வாஷ் கட்டுரை.

    Dr. Rudhran -

    Don’t you know, TN govt. is doing that, expect for building temples…they are employing archakars from all forms of life.

    Posted on 22-Oct-08 at 8:32 pm | Permalink
  8. முரளி

    கட்டுரையிலே சொல்லப்பட்டது போல அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு ஈராக்கையும், ஆப்கானையும் குறிவைத்துத் தாக்கத்தான் பயன்பட்டிருக்கிறது. ரோபோடிக்ஸில் நடந்த கண்டுபிடிப்புகள் இருக்கட்டும். அமெரிக்க இராணுவத்தில் ரோபோ சிப்பாய்களைச் சேர்க்கப்போகிறார்கள். ரோபோ சிப்பாய்களும் அப்பாவி மக்களை கொல்வதற்குத்தான் பயன்படப்போகிறார்கள்.

    அமெரிக்கா என்ற உலக ஆக்கிரமிப்பு நாட்டின் சமகால வரலாற்றை மறந்துவிட்டு நாசாவின் கண்டுபிடிப்புகளைக் கண்டு புளகாங்கிதம் அடைவதை பிதற்றல் என்ற சொல்லவில்லை. ஆனால் நிச்சயம் இது அறிவுப்பூர்வமான வாதமில்லை. கடவுளைக் கட்டிப்போடுவதாக எந்த விஞ்ஞானியும் சொல்லவில்லை. அதற்காக ஆய்வும் நடக்கவில்லை. பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த ஆய்வு கடவுளின் இடத்தை கேள்ளவிக்குள்ளாக்குகிறது என்று நாத்திகர்கள் கேட்கிறார்கள். அவ்வளவுதான். நீங்கள் குறிப்பிடும் அந்த ஆய்வின் நல்லதுகளும் மேன்மக்களுக்கு மட்டும்தான் பயன்படப்போகிறது.

    அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு நாசாவின் விஞ்ஞானம் பயன்படுகிறது என்றால் ஹாலிவுட் படங்கள் நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்கவில்லையா என்று வாதிட்டால் என்னத்தைப் பேச? அறிவியல் கண்டுபிடிப்புகளில் பல பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை. ஒரே விளைவுதான் ஏற்படுகிறது. அது ஏழை நாடுகளுக்கும் மக்களுக்கும் பயன்படப்போவதில்லை என்பதுதான்

    ஆப்பிரிக்காவில்.எய்ட்ஸ் நோயாளிகளுக்காக மலிவு விலையில் இந்திய நிறுவனங்கள் மருந்துகளை விற்க முயன்ற போது அமெரிக்க நிறுவனங்கள் அதை கொள்ளை விலைக்குத்தான் விற்கவேண்டும் என்று தடை விதித்தன. இது போன்று பல எடுத்துக்காட்டுக்களைக்கூற முடியும். முரளி உங்களது பிரச்சினை எளிய விசயத்தையும் யாரும் பார்க்காத கோணத்தில் பார்க்க விரும்பி சிக்கலாக புரிந்து கொள்வதுதான். அதற்கு யாராவது தீர்வு கண்டுபிடித்தால் வினவு சார்பில் பாராட்டுவிழா நடத்துகிறோம்.

    Posted on 23-Oct-08 at 12:01 am | Permalink
  9. மாற்று பார்வையா இல்லை பார்வைக் கோளாரா ?

    வினவு -

    மாற்றுப் பார்வைத் தேவை தான். அதற்காக எல்லாவற்றிலும்…இதுவே புதிய ஜனநாயகம் ஸ்டைல்!

    நேற்று படித்த பதிவில் மருத்து விற்கும் அந்த நபர் சரியாக சிந்தக்கவில்லை என்று நினைத்தேன். ஆனால் இன்று இந்த கட்டுரையைப் படித்தவுடன் யார் பிரெய்ன்வாஷ் செய்கிறார்கள் என்று புரியவில்லை. நீங்களா இல்லை அவரா ?

    தடைகள் போட்டால் என்ன என்று சிப்ளா இன்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு எய்ட்ஸ் மருந்துகளைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

    இதுவும் மாற்று(ம்) பார்வை.

    நீங்கள் பார்ப்பது ரொபோடிக்ஸால் இராணுவம்.

    நான் பார்ப்பது துல்லியமாக மருத்தவமனையில் அறுவை சிகிச்சை செய்யும் உயிர் காக்கும் ரோபோக்களை. நான் பார்ப்பது ரொபோடிக்ஸால் ஏற்படுத்தும் இயந்திரமயமாக்கல். நான் பார்ப்பது நிலத்தில் புதைந்திருக்கும் கன்னி வெடிகளை அகற்றும் ரோபோக்களை. நான் பார்ப்பது தீவிரவாதிகள் கார்களில் வைக்கும் குண்டுகளை அகற்றி அப்பாவிகளைக் காக்கும் ரோபோக்களை.

    எனவே சிக்கலில்லாமல் மாற்றுப் பார்வை என்னைப் போன்றோறால் பார்க்க முடியும்.

    இஸ்ரோவையும் நாசாவையும் ஒப்பிடும் மனது அதே அமேரிக்க ராணுவத்தையும் இந்திய ராணுவத்தையும் ஏன் ஒப்பிடவில்லை.

    என்று அத்து மீறி இந்திய ராணுவம் அடுத்தவன் நிலத்தில் ரத்த சகதியை ஏற்படுத்தியது. அழைப்பின்றி எந்த நாட்டில் தலைகளை சூரையாடியது. தன் நாட்டில் கொடி நாட்டியவனையே எல்லையைத் தாண்டி அடிக்க விரும்பாத ராணுவத்தையும் அமேரிக்க ராணுவத்தையும் ஒப்பிடுவது தான் மாற்று பார்வையா ?

    இரண்டு பதிவுகளுக்கு முன் அறிவியல் தான் கடவுளைக் கண்டு பிடிக்கும் சக்தி என்று எழுதிவிட்டு…(அந்த LHC யின் விலை 10 பில்லியன் டாலர்களுக்கு மேல் என்கின்றனர். அதுவும் 10 வருட உழைப்பு என்று எழுதிய வினவு)…பின்னர் அறிவியல் உலகில் குழந்தை நடைப் போடும் இந்திய விண்வெளி ஆராச்சியால் மக்கள் பசி பட்னி ஏற்படுகிறது என்று எழுதுவது என்ன நியாயம் ?

    வினவின் பார்வையில் – இந்தியஅரசாங்கம் ஒரு வெற்றி என்று அறிவித்தால் அதில் மாற்று பார்வை பார்க்க வேண்டும். இதே அமேரிக்க ஹார்வர்ட் பல்கலைக் கழகம் பண உதவியால் ஏற்பாடு செய்த LHCயை வைத்து அறிவியல் பேச வேண்டும்…நல்லா இருக்குங்க இந்த மாற்று பார்வை.

    சந்திராயன் மூலம், வல்லரசாகும் நோக்கம் மட்டுமே இந்தியாவிற்கு இருந்தால், இன்று தான் சந்திரனுக்கு விண்வெளியை அனுப்ப வேண்டும் என்பதில்லை. சில பல ஆண்டுகள் முன்னரே செய்திருக்க முடியும்.

    சீனா சில மாதங்கள் முன் நிலவிற்கு மனிதனை அனுப்பினார்களே அப்போழுது எந்த கட்டுரையும் நான் இந்த பதிவில் படிக்கவில்லையே! பசி, பட்டினி என்றெல்லாம் ஓலங்கள் கேட்கவில்லையே…

    LHCயால் உலகம் அழியும் என்று எண்ணியவர்களுக்கும் சந்திராயனால் பசி பட்னி பெருகும் என்ற மாயை ஏற்படுத்தும் வினவிற்கும் என்ன வித்தியாசம் ?

    Posted on 23-Oct-08 at 3:05 am | Permalink
  10. porattamtn

    வணக்கம் தோழர். வலையுலகிறகு புதிதாக வந்துள்ளேன். இணைப்பு கொடுக்கவும்.

    நன்றி
    http://porattamtn.wordpress.com

    Posted on 23-Oct-08 at 9:05 am | Permalink
  11. அமெரிக்கா நிலவில் காலடி வைக்கவே இல்லை அதெல்லாம் நாசாவின் டுபாகூர் வேலை என்றும் ஒரு கருத்து உண்டு.

    Posted on 23-Oct-08 at 9:26 am | Permalink
  12. Robin

    //அமெரிக்கா நிலவில் காலடி வைக்கவே இல்லை அதெல்லாம் நாசாவின் டுபாகூர் வேலை என்றும் ஒரு கருத்து உண்டு.// – Joke of the week!

    Posted on 23-Oct-08 at 9:42 am | Permalink
  13. ////இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னே மறைந்திருக்கும் உண்மை என்ன? விண்வெளிக்கு இந்தியனை அனுப்புவதால் நயாபைசாவுக்குக் கூட பயனில்லை. நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல. அறிவியல் ரீதியாகக்கூட இதற்கு எந்தப் பயனும் இல்லை ////

    மேலோட்டமா பாத்தா, எல்லாமே அநாவசியமாதான் தெரியும்.
    விமானம் கண்டுபிடிக்கும்போதும், ரயிலு, காரு கண்டுபீடிக்கும்போதும் கூட இப்படி பல பேரு பலதும் சொல்லிருப்பாங்க.

    Posted on 23-Oct-08 at 10:46 am | Permalink
  14. இளன்

    இந்தப் பதிவை நீங்கள் எழுதுவது.. அதை மற்றவர்கள் படிப்பது எல்லாமே வெட்டிதான்… விஞ்ஞானம் இல்லைன்னா இந்நேரம் நீங்க கீ-போர்டு தட்டிகிட்டிருக்க மாட்டீங்க… வீட்டுல சாணிதான் தட்டிகிட்டிருந்துக்கனும்…. வெறுமனே பேசனுங்கிறதுக்காக எதையாச்சும் பேசுறதெல்லாம்…..

    Posted on 23-Oct-08 at 12:35 pm | Permalink
  15. ARUN

    Dr.kalam is really great…

    avara pathi thappa solnnathu seriyilla..

    enauku thonuaratha sonnen.

    Posted on 23-Oct-08 at 1:31 pm | Permalink
  16. ///அந்த நேரத்தில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை முன்னறிந்து கூறப் பயன்படும் செயற்கைக் கோள்கள், //

    பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தை முன்னறிந்து கூறுவதற்கு செயற்கைக்கோளா? கொஞ்சம் விளக்கவும்.

    Posted on 23-Oct-08 at 1:58 pm | Permalink
  17. சந்திரனுக்கு விண்கலம் அனுப்பியது இந்திய அறிவியலாளர்களின் திறனுக்கு ஒரு எடுத்துக் காட்டு. அதை பாராட்டும் அதே வேளையில். அறிவியல் வாளர்ச்சி என்பது மனித சமூகத்திற்கு பயன்படும் வகையில் இருந்தால் மட்டுமே நாம் அதை ஆதரிக்க முடியும். கணினி மற்றும் இதர தொழில் நுட்ப வளர்ச்சிகள் அடித்தட்டு இந்திய மக்களின் வாழ்கையில் மிகவும் குறைந்த அளவே மேம்படுத்தி உள்ளன.. இன்றைய அறிவியல் வளர்ச்சி உண்மையிலேயே மக்களுக்கு பயன் பயன் படுகிறது என்றால்.. உயிர் காக்கும் மருந்துக்கு இருந்தும் ஏழை மக்களுக்கு அது பயன்படாமலே உள்ளது… மனித சமூகத்தின் வளர்ச்சிக்காக மிகக் குறைவான ஆராய்ச்சிகளே நடக்கிறது… மற்ற தொழில் நுட்பங்கள் காப்புரிமை எனும் பெயரில் பல நிறுவனங்களுக்கு பணம் சேர்க்கத்தான் பயன் படுகிறது.. இன்றும் நாம் பல அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு காப்புரிமை தொகை (patent or royalty fees) வழங்குகிறோம் இதனால் மருந்தின்/பொருளின் விலை பல மடங்கு உயர்கிறது.
    எந்த வித அறிவியல் சோதனையாய் இருந்தாலும் அது 300 மில்லியன் மக்கள் தினமும் ஒரு டாலருக்கும் குறைவான ஊதியத்தில் வாழும் இந்நாட்டில் அவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில்தான் செய்யப்பட வேண்டும்…
    நிலவு, செவ்வாய் கிரகம் போன்றவைகளுக்கு விண்கலம் அனுப்புவது சர்வதேச நாடுகளின் கூட்டு முயற்சியாய் இருத்தல் அவசியம்… ஒவ்வொரு நாடும் ஒரே நிலவிற்கு பலமுறை விண்கலம் தனித்தனியே அனுப்புவது எந்த விதத்தில் இந்த உலகிற்கு உதவும்…?
    அதற்கு முன் நம்முடைய மக்களின் உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு போன்ற அடிப்படை வசித்களை அளித்த பின்தான் நமது மனித சமூகம் பூமியை தாண்டி நமது பார்வையை செலுத்தலாம்.. அதுவரை.. நம்முடைய வாழ்கையை முன்னேற்றும் அறியலுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்..
    இந்த சந்திர பயணம் இந்தியாவின் மேலாண்மையை காட்டுவதற்கும் , ஹீலியம்-3 போன்ற எதிர்கால எரிசக்தி எரிபொருளுக்கு நாட்டாமை செய்வதற்கும் தான்..
    உலகம் முழுவதும் வறுமையில் வாடும் பல மில்லியன் மக்களின் வாழ்வில் இதனாலும் , LHC சோதனையாலும் எந்த வித பயனும் , முன்னேற்றமும் வராது..
    அறிவயல் வளர்ச்சியால் இங்கு நாம் கணிப்பொறியில் பணியாற்று கின்றோம் என்பது உண்மை… ஆனால் இந்த கணிப்பொறி பல லட்சம் விவசாயிகளின் தற்கொலையை தடுக்க வில்லை.. அறிவியல் பூர்வமாக ஆராய்வது என்பது மனிதனின் இயல்பு அதனால்தான் நாம் குரங்கில் இருந்து வேறுபட்டு உள்ளோம்… ஆனால் அதே சமையம் நமக்கு பகுத்து அறிவு உள்ளது என்றால்.. அறிவியல் வளர்ச்சி அனைவருக்கும் பயன்படும் வகையில் செய்ய வேண்டும்.. பல பெரிய நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றை விட ஒன்று மிஞ்சும் அளவிற்கு ஆயுதங்களை கண்டு பிடிக்கின்றன இதனால் எவ்வளவு மக்களின் வறுமை குறைந்து உள்ளது.. ?
    மீண்டும் சொல்கிறேன்.. அறிவியல் வளர்ச்சி எல்லா விகிதத்திலும் , எல்லா மட்டத்திலும் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.. அது ஒரு சில குறிப்பிட வசதி உள்ளவர்களுக்கு மட்டும் பயன்படும் என்றால்… அந்த வளர்ச்சி , உண்மையானது அல்ல.. இவ்வளவு ஏன் இந்த அறிவியல் வளர்ச்சி சுத்தமான குடிநீரை மக்களுக்கு இலவசமாக வழங்குவதை தவிர்த்து.. கிருமி நீக்கப்பட்ட குடி நீர் பாட்டில்களில் அடைக்கப்பட்டு கோக், பெப்சி போன்ற நிறுவங்களுக்கு இலாபம் ஈட்டி தருகிறது..

    அமெரிக்காவின் ஒழுக்கத்தை ஆதரிக்கும் நண்பர்களுக்கு ஒரு சில இணைப்புகளை இங்கு தர விரும்புகிறேன்..
    1. http://www.youtube.com/watch?v=-_5yeCqcfaU ==>> லாவோசில் அமெரிக்க கட்டிய ரகசிய நகரத்தை பற்றி விளக்கும் படம்
    2. ஏய்ட்ஸ் அமெரிக்கவால் உருவாக்கப் பட்ட நோய் என்பதனை விளக்கும் கட்டுரைகள்.. இது இன்றளவும் பல செய்தி ஊடங்களால் புறக்கணிக்கப் பட்ட விடயம்.. இதை பற்றி கருத்து சொல்ல அமேரிக்கா மறுக்கிறது… இதனால் இந்த கட்டுரையின் உண்மை தன்மை அதிகரிக்கிறது..
    http://netowne.com/conspiracy/konformist/manmadeaids.htm
    http://www.newdawnmagazine.com/Article/The_Secret_Origins_of_AIDS.html
    http://www.shirleys-wellness-cafe.com/aids_origin.htm

    இதை பற்றி விளக்க ஒரு தனி கட்டுரைதான் எழுத வேண்டும்…

    Posted on 23-Oct-08 at 2:33 pm | Permalink
  18. அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு நாசாவின் விஞ்ஞானம் பயன்படுகிறது என்றால் ஹாலிவுட் படங்கள் நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்கவில்லையா என்று வாதிட்டால் என்னத்தைப் பேச?
    சீனா சில மாதங்கள் முன் நிலவிற்கு மனிதனை அனுப்பினார்களே அப்போழுது எந்த கட்டுரையும் நான் இந்த பதிவில் படிக்கவில்லையே! பசி, பட்டினி என்றெல்லாம் ஓலங்கள் கேட்கவில்லையே…
    what is the question and what is the answer?

    Posted on 23-Oct-08 at 9:18 pm | Permalink
  19. Ellorukkum Vanakkam,
    Valarnthu varum naadu endra muarayil, inge irukkum pasi pattiniyai alosikum atha nerathil, roade podama , pottathaga solli paisa vangi , arasanga panatha viraiyam panra arasiyil vathikalukku mathiyil, panatha veen selavu seiyama, thozil nutpa vallamaiyai paraisatrrum vagaiyil amainthulla chandrayaan mission , oru milekal allava. ithen mulam nalaiya thalaivarkalana indraiya kuzhainthaikal nammalum mudiyum enkindra oru vithaiyai avargal manathil intha vinveli payanam vithaika villaya?
    thavira eriporul thattupadal thavikindra , intha nilayil , helium 3 enkindra eriporul, chandranil migaiyaga kidaikirathu enpadhu ungalukku theriyuma? anga kidaikkum helium 3 mulamaga 800 varduthukana eriporul thevai poorthi seyyapadum enpadhu ungalukku theriyuma. chandrayaan mulamaga nalai oru velai , angirinthu eriporul edukinra nelaimai erpattal, indiavirkum athil oru pangu kidaikkum enpadhu thinnam alllava?
    Edusat mulamakavum IRS vinkalam mulamakavum , puyal, mazhai, meen pidithal, mattum allathu, vivasayikalukku palan thara kudiya , manvalam patriya seithikalai thanthu kondripathu ungaluku theriyuma?
    Indraikku neengal seithi valiyittu kondirukkira inaya thalam muthal tholai kaatch, tholai pesi sevai pondravaikalukku karanam india anuppiya seyarkaikol thaan enbathu ungalukku theriyatha?
    etharku eduthallum kutharkamana vimarsangal seithu, alpa vilambarangal thedum ungalin pokkai niruthi viduvathu nallathu.
    Atharam: http://www.space.com/scienceastronomy/helium3_000630.html
    http://en.wikipedia.org/wiki/Helium-3

    Posted on 24-Oct-08 at 3:05 am | Permalink
  20. another reader

    Ok. If u say computer invention is utter waste then y u use this just get rid of this. And jump into the field to save the farmers. See scientific inventions should be made in parallel. If u some one made question like this mary query dosnt find the raditions which is now used for treatment of cancer. Like this every invention is used for human benificial.

    Posted on 24-Oct-08 at 6:51 pm | Permalink
  21. ம‌ண்டைச்சுர‌ப்பு

    முரளி

    உங்களுடன் வினவு விவாதித்து வருவதால் சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டுப் போகலாம் என்று நினைக்கிறேன்.

    //இஸ்ரோவையும் நாசாவையும் ஒப்பிடும் மனது அதே அமேரிக்க ராணுவத்தையும் இந்திய ராணுவத்தையும் ஏன் ஒப்பிடவில்லை.

    என்று அத்து மீறி இந்திய ராணுவம் அடுத்தவன் நிலத்தில் ரத்த சகதியை ஏற்படுத்தியது. அழைப்பின்றி எந்த நாட்டில் தலைகளை சூரையாடியது. தன் நாட்டில் கொடி நாட்டியவனையே எல்லையைத் தாண்டி அடிக்க விரும்பாத ராணுவத்தையும் அமேரிக்க ராணுவத்தையும் ஒப்பிடுவது தான் மாற்று பார்வையா ?//

    இது என்ன‌ கேள்வி முரளி, நீங்க‌ள் த‌மிழ‌ர்தானா?

    இந்திய‌ அமைதிப் ப‌டை ஈழத்தில் செய்த‌ அட்டூழிய‌ங்க‌ள் ப‌ற்றி உங்க‌ளுக்குத் தெறியாதா? இல்லை தெறிந்தே வேண்டுமென்றே இந்திய‌ இராணுவ‌த்தைப் புனித‌ப்ப‌டுத்துகிறீர்க‌ளா? உட‌னே இந்திய‌ இராணுவ‌ம் அந்நாட்டின் இரு த‌ர‌ப்பும் கேட்டுக்கொண்ட‌ பிற‌குதான் அங்கு சென்று அட்டூழிய‌ங்க‌ள் செய்த‌து என்று கூறிவிடாதீர்க‌ள்.

    காங்கோவில் ஐ.நா. அமைதிப்ப‌டையில் சென்றுள்ள‌ இந்திய‌ இராணுவ‌த்தின‌ர் அங்குள்ள‌ பெண்க‌ளைத் தொட‌ர்ச்சியாக‌ பாலிய‌ல் வ‌ல்லுர‌வுக்கு ஆட்ப‌டுத்திவ‌ருவ‌தும். ம‌னிதாபிமான‌ம‌ற்ற‌ முறையில், ஐ.நா. வ‌ழ‌ங்கும் உண‌வுப் பொருட்க‌ளைப் பெற‌த் த‌ங்க‌ளுக்கு இண‌ங்க‌ வேண்டும் என‌ அங்குள்ள‌ பெண்க‌ளை மிர‌ட்டி வ‌ருவ‌தும் உங்க‌ளுக்குத் தெறியாதா?

    இவ்வ‌ள‌வு ஏன் காஷ்மீரிலும், கிழ‌க்கு மாநில‌ங்க‌ளிலும் இந்திய‌ இராணுவ‌ம் ந‌ட‌த்தி வ‌ரும் அட்டூழிய‌ங்க‌ள் கொஞ்ச‌மா ந‌ஞ்ச‌மா, ‘Indian Army Rape us’ என‌ ம‌ணிப்பூர் மாநில‌த்தில் பெண்க‌ள் இராணுவ‌ அலுவ‌ல‌க‌ம் முன்பு நிர்வாணமாக‌ நின்று அழைப்பு விடுத்தார்க‌ளே அன்று உங்க‌ள் இந்திய‌ன் ஆர்மியின் யோக்கிய‌தை உல‌கே மூக்கைப் பொத்தும் அள‌வுக்கு நாறிய‌தே அப்போது நீங்க‌ள் ச‌ந்திர‌ ம‌ண்ட‌ல‌த்திலா இருந்தீர்க‌ள்?

    த‌ற்போது த‌ன‌து பிராந்திய‌ வ‌ல்லாதிக்க‌ ர‌வுடித்த‌ன‌த்தை நிலை நிருத்துவ‌த‌ற்காக, தமிழ் மக்களைக் கொன்று குவிக்கிறது எனத் தெறிந்தே, இல‌ங்கைக்கு இராணுவ‌ உத‌விக‌ளை அளித்து வ‌ருவ‌தும். இத‌னை ப‌கீர‌ங்க‌மாக‌ அறிவித்து உத‌விக‌ளை நிருத்த‌ முடியாது என‌ ம‌றுப்ப‌தும் எந்த‌ கண‌க்கில் சேரும்?

    இப்ப‌டிப் ப‌ட்ட‌ இந்திய‌ இராணுவ‌ம் ம‌க்க‌ளைக் கொல்லாதாம், அது க‌ண்டுபிடிப்புக‌ளை ந‌ல்ல‌துக்கு ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்துமாம், இதனை நாங்க‌ள் ந‌ம்ப‌ வேண்டுமாம்.

    Posted on 25-Oct-08 at 8:43 am | Permalink
  22. ம‌ண்டைச்சுர‌ப்பு

    இங்கே எழுதியுள்ளவர்களில் பலர், இந்தக் கட்டுரை அறிவியல் வளர்ச்சியைத் தடை செய்வதாக உள்ளது எனக் கூறியுள்ளனர். ஆனால் அப்படிப் பட்ட அம்சம் எதுவும் இதில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கட்டுரையாளரின் நோக்கம் அறிவியல் வளர்ச்சியைக் கேள்வி கேட்பது அல்ல, இந்த அறிவியல் வளர்ச்சி யாருடைய லாபத்திற்குப் பயன்படுகிறது என்பதுதான் இப்போதைய பிரச்சனை. இன்றைய அறிவியல் வளர்ச்சி(அது சீனாவாக இருந்தாலும் கூட)ஒரு சிறு கூட்டம் லாபம் சம்பாதிப்பதற்காகத் தான் பயன்படுகிறதா? இல்லை பெரும்பாண்மை மக்கள் நலனுக்காகப் பயன்படுகிறதா?. அந்த நோக்கில் விவாதத்தைக் கொண்டு சென்றால் ஆரோக்கியமாக இருக்கும். அதை விடுத்து கம்ப்யூட்டரை ஏன் பயன்படுத்துகிறாய், அதை ஏன் பயன்படுத்துகிறாய், இதை ஏன் பயன்படுத்துகிறாய் என்பன போன்ற அபத்தமான கேள்விகளுக்கு விடையளிக்காமல் விவாதிக்கலாம் என வினவைக் கேட்டுக் கொள்கிறேன்.

    Posted on 25-Oct-08 at 9:14 am | Permalink
  23. sci

    the statements given by the author is a complete rediculous.
    you need mobile phones, internet, emails, your website but hate the india’s growth on india’s missile Satillite&space projects/ technology.

    please try to understand the project with long vision, your are not a eligible person to say Dr APJ kalam as a joker….

    Posted on 25-Oct-08 at 7:23 pm | Permalink
  24. யோசிங்க

    இந்தியவின் தற்போதைய நிலையில் இவ்வளவு சீன் போடுறது என்னமோ நல்லாவேயில்லை. ஏதோ நாட்டில பஞ்சமே இல்லாம நல்லா தின்னுட்டு எல்லாபயலும் படிச்சு பட்டம்பெற்று அடுத்து எந்தக்கோளுக்கு ராக்கட் விடலாம் என்று உட்காந்து யோசிக்கிறாங்க என்று நினைக்கிறேன்!

    Posted on 26-Oct-08 at 10:29 pm | Permalink
  25. கோட்ஸிலா

    ” நமது செயற்கைக்கோள்களால் சுனாமியின் அழிவை முன்னறிந்து சொல்ல முடிந்ததா? அந்த நேரத்தில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை முன்னறிந்து கூறப் பயன்படும் செயற்கைக் கோள்கள், பருவநிலை மாற்றத்தை முன்னறிவித்து விவசாயிகளுக்குப் பயன்பட்டதுண்டா? ”

    வானிலை முன்னறிவிப்பு இன்று செயற்க்கை
    கோள்களால் சாத்தியமாகியுள்ளது.இது தவிர
    தொலைதொடர்பு உட்பட பலவற்றையும்
    அவை மூலம் செய்து கொள்கிறோம்.இதெல்லாம் வீண் என்று
    கருதும் புஜ/புக மூடர்கள் முதலில்
    செல்பேசிகளை பயன்படுத்துவதை
    விட வேண்டும். பங்குச்சந்தையின்
    ஏற்ற இறக்கங்களை எந்த செயற்கைக்
    கோளாலும் கண்டுபிடிக்க முடியாது.
    சுனாமி ஏற்படக் காரணம் பூமியின்
    அடியில் ஏற்படும் மாற்றங்கள்.
    இதை அறிவியல் மூலம் அறிய
    இயலும்.அதற்கான தொழில்
    நுட்பம் வேறு.
    1970களில் இந்தியா விண்வெளி
    ஆராய்ச்சியில் ஈடுபடுவது வீண்
    என்று கூறியவர்களின் வாரிசாக
    புஜ/புக அவர்களின் அடிவருடி
    வினவு போன்றவர்கள் இருக்கிறார்கள்.
    இந்த மூடர்களுக்கு GIS என்ற
    தொழில் நுட்பம் குறித்து
    எதுவும் தெரியாது. அது எப்படி
    பலதுறைகளில் பயன்படுத்தப்படுகிறது
    என்பதும் தெரியாது.
    இந்த ருத்ரன் என்பவர் போலி டாக்டரா?
    இந்த முட்டாள்களுக்கு ஜால்ரா
    போடுகிறாரே?

    Posted on 30-Oct-08 at 10:37 am | Permalink
  26. EVRPERIYAAR

    with out all the research done by various scientists throughout the world including Indian Govt Investment for the expansion of Internet you could not have written this idiotic blog.

    Posted on 03-Nov-08 at 10:58 am | Permalink
  27. chandran

    ரஸ்சியாவிடம் திருடி
    அமெரிக்காவிடம் கெஞ்சி
    ஜரோப்பாவிடம் மண்டியிட்டு
    ஜபானிடம் கொஞ்சம் சுட்டு
    சீனாவிடம் எட்டிபார்த்து விட்டேனடா ஒரு ராக்கட்டு

    தமிழனின் முளையை கரைத்து
    ஆரிய பெயர்வைத்து
    இந்தியில் அதனை எழுதி
    அவன்விட்டான் ஒரு ராக்கட்டு
    அத பார்து சிரிக்கிறான் தமிழன் மதி கெட்டு

    ஊரில கறண்டும் இல்லை
    தெருவில தாரும் இல்லை
    நிலவில மனிதன் இல்லை
    ஆயினும் விட்டேன் பாரு ஒரு ராக்கட்டு

    ஈராக்கில் சுட்டகாசு அமெரிக்கனிடம்
    உலகத்தை வளைத்த காசு பிரிட்டனிடம்
    ஏழை வயித்திலடித்த காசு இந்தியாவிடம்
    விட்டேன் பாரு ஒரு ராக்கட்டு

    புகையுடன் மேலே போனது ராக்கட்டு
    ஆனால் எங்கள் வயிற்று புகைதான் எம்மோடு
    ஆயிரம் ராக்கட்டு விடலாம்
    அதற்காக எங்கள் ஆருயிரையா எடுப்பது

    Posted on 12-Nov-08 at 1:47 am | Permalink

Post a Comment

Your email is never published nor shared.

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!