Skip to content

ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை !

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா – 3

africa3ஐரோப்பியர்களின் நாகரீகம் எங்கே தோன்றியது என்று கேட்டால், கிரேக்கத்தை காட்டுவார்கள். கிறிஸ்துவுக்கு முன், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, முழு ஐரோப்பிய கண்டத்திலும் கிரேக்கர்கள் மட்டுமே வளர்ச்சியடைந்த நாகரீக சமுதாயத்தை பெற்றிருந்தனர். இருப்பினும் அன்றைய கிரேக்கர்கள், பிற ஐரோப்பியருடன் எந்த தொடர்பையும் வைத்திருக்க விரும்பவில்லை. ஆமாம், அப்போதும் நாகரீகமடையாத காட்டுமிராண்டி சமூகமாக, குகைகளுக்குள் குடியிருந்து, காட்டுப்பன்றிகளை வேட்டையாடிக் கொண்டிருந்த ஐரோப்பிய இனக்குழுக்களுடன் இராஜதந்திர உறவு  வைத்துக்கொள்ள முடியுமா? அதே நேரம் கிரேக்கர்கள் தமது அயலில் இருந்த பிற நாகரீகமடைந்த சமூகங்களோடு நெருக்கமான உறவை கொண்டிருந்தனர். பண்டைய கிரேக்கர்கள் மதிப்புக் கொடுத்த நாகரீகமடைந்த சமூகங்களில் சில, ஆப்பிரிக்காவில் இருந்தன!

நான் கிரீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்த போது, ஏதென்ஸ் நகர அருங்காட்சியகத்தில்,  ஆப்பிரிக்க கறுப்பினப் பெண்களைப் போல உருவத்தோற்றமுடைய சிற்பங்கள் சில இருந்ததை கண்டேன். எனக்கு அதை விட ஆச்சரியமளித்த விடயம், ஐரோப்பிய சரித்திர பாடநூல்கள் எதுவும் கிரேக்கம் ஆப்பிரிக்காவுடன் கொண்டிருந்த தொடர்பைப் பற்றி குறிப்பிட்டிருக்காதது. அது சரி, அனைத்து ஐரோப்பியர்களும் தமது “நாகரீகத்தின் தொட்டில்” என்று பெருமைப்படும் கிரேக்கத்தில், ஆப்பிரிக்க நாகரீகத்தின் செல்வாக்கு இருந்தது என்ற உண்மை, இலகுவில் ஜீரணிக்கக் கூடியதா?

அன்றைய உலகம் வேறுவிதமாக இருந்தது. பண்டைய நாகரிக கால மக்களுக்கு கருப்பு/வெள்ளை நிற வேறுபாடு கண்ணுக்கு புலப்படவில்லை. யாருமே தோல் நிறத்தை ஒரு விடயமாக கருதவில்லை.  இதனால், அன்றைக்கு இருந்தது “வெள்ளையின நாகரீகமா”, அல்லது “கறுப்பின நாகரீகமா” என்று வேறுபடுத்திப் பார்ப்பது அவ்வளவு இலகுவானதல்ல. எகிப்தில் இருந்த பரோவா மன்னர்கள் இராச்சியம், செந்நிற மேனியரைக் கொண்டிருந்தது, என இன்றைக்கும் சில சரித்திர/அகழ்வாராய்ச்சியாளர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதே காலட்டத்தில், தெற்கே குஷ் இராசதானியை (இன்று சூடான்) சேர்ந்த கருநிறமேனியரான நுபியர்கள், அவ்வப்போது எகிப்திய ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த உண்மைகள் தற்போது வெளிவருகின்றன. அன்றைக்கிருந்த எகிப்தை இந்தியாவிற்கு ஒப்பிடலாம். ஒரே குடும்பம்,  பல நிற மேனியரைக் கொண்ட உறுப்பினரைக் கொண்டிருப்பது சகஜமானது. இன்றும் கூட பண்டைய எகித்திய ஓவியங்களில், கருநிற மேனியரின் உருவங்கள் வரையப்பட்டிருப்பதை காணலாம்.

nubianpiantingafrica3நுபியர்களின் குஷ் இராச்சியம், எகிப்தின் தங்கச் சுரங்கம் எனக் கூறினால் மிகையாகாது. நுபிய சுரங்கங்கள் வருடமொன்றிற்கு நாற்பதாயிரம் கிலோகிராம்(இன்றைய மதிப்பில்) தங்கத்தை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன. கறுப்பின நுபியர்கள், எகிப்திய மத, மொழி, கலாச்சார அடையாளங்களை பின்பற்றினர்.  சூடான் முதல் சிரிய எல்லை வரை நுபியர்கள் ஆட்சி செய்த காலம் ஒன்றுண்டு. எகிப்தியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கடவுட்கோட்பாடான அமோன் (கிறிஸ்தவர்கள் இதனை “அமென்” என்று இன்றும் நினைவுகூருகின்றனர்) என்ற சூரிய தேவன் வழிபாட்டையும் அறிந்து வைத்திருந்தனர். நான் எகிப்தில், லுக்ஸொர் நகரில் உள்ள கார்னாக் ஆலயத்திற்கு சென்றிருந்த போது, எகிப்தியரின் வழிபாட்டு முறை இந்துக் கோயில்களை ஓரளவு ஒத்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இந்துக் கோயில்களில் இருப்பதைப் போல மூலஸ்தானம், தூண்கள் மட்டுமல்ல, சாமி  சிலைகளை குளிப்பாட்டும் தீர்த்தக்கேணி எல்லாம் அப்படியே இருந்தன. அந்தக் காலத்தில் மன்னர் அல்லது பிரபுக்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் போக அனுமதி இருந்தது. உழைக்கும் மக்கள் கோயிலுக்கு வெளியே நின்று தான், சாமி கும்பிட முடியும். உண்மையில் பண்டைய காலத்தில் நிலவிய வர்க்கப்பிரிவினை தான், பின்னர் இந்திய சமுதாயத்திலும் சாதிப்பிரிவினையாக தொடர்ந்திருக்க வேண்டும். இந்திய, ஆப்பிரிக்க சமூகங்களுக்கிடையிலான கலாச்சார ஒற்றுமை இதைப்போல நிறைய உள்ளன.

பிற்காலத்தில் அந்நியரின் படையெடுப்புகள் காரணமாக, எகித்திய, நுபிய நாகரீகங்கள் அழிந்து போனாலும், அதற்குப் பிறகு தோன்றிய “சூடானிய நாகரீகம்”, கிழக்கே செங்கடல் முதல் மேற்கே அட்லாண்டிக் சமுத்திரம் வரை பரவி இருந்தது. இந்த நாகரீகத்தின் சிறப்பம்சம் என்னவெனில், அப்போது நிலப்பிரபுத்துவ முறை நிலவவில்லை. மாறாக இன்று எமக்கெல்லாம் பரிச்சயமான அரச கரும ஊழியர்களைக் கொண்ட அதிகார வர்க்கம் இருந்தது. கடவுளுக்கு அடுத்த சர்வவல்லமை பெற்ற மன்னன், இந்த அரச ஊழியர்களை நியமிக்கவோ, பணிநீக்கம் செய்யவோ அல்லது பதவி உயர்வு கொடுக்கவோ முடியும். அதனால் குறிப்பிட்ட எந்த குடும்பமும் அதிகாரத்தை பரம்பரையாக பின்பற்ற முடியாது. நல்லது, மேற்குலகம் எதிர்பார்ப்பதைப் போல “பல கட்சி ஜனநாயகம்” (இது ஐரோப்பாவிலேயே 19 ம் நூற்றாண்டில் தான் வந்தது) அப்போது ஆப்பிரிக்காவில் இருக்கவில்லைத் தான்.  ஆனால் ஒரு கிராமத்தின் தலைவனைக் கூட மக்கள் தெரிவு செய்யும் நேரடி ஜனநாயகம் நிலவியது. இதைத்தான் கடாபி, அவ்வப்போது  மேற்குலகிற்கு எடுத்துக் காட்டுவது வழக்கம். “ஆப்பிரிக்கர்களான நாங்கள் ஜனநாயக பாரம்பரியத்தில் வந்தவர்கள். எமக்கு புதிதாக பாடம் நடத்த தேவையில்லை.”

martyrsisabelleகி.பி. ஏழாம் அல்லது பத்தாம் நூற்றாண்டளவில், எகிப்து வழியாக கிறிஸ்தவ மதம் எத்தியோப்பியா வரை பரவி இருந்தது. எத்தியோப்பியாவில் “அக்சும்” என்ற கிறிஸ்தவ சாம்ராஜ்யம் தோன்றியிருந்தது. செங்கடலை தாண்டி யேமனை ஆக்கிரமிக்குமளவு இராணுவ பலம் பெற்று விளங்கியது. (யேமன் நாட்டில் கூட ஆப்பிரிக்க செல்வாக்கு இருந்துள்ளது. பைபிளில் வரும் புத்திசாதுர்யம் மிக்க யேமன் அரசி ஷீபா, யேமனை சேர்ந்த கறுப்பின அழகி.)   அக்சும் நாட்டில் சாப்பாட்டுத்தட்டுகள் கூட தங்கத்தில் அல்லது வெள்ளியில் செய்யப்பட்டிருந்தமை, அதன் செல்வச் செழிப்பிற்கு சாட்சி. எத்தியோப்பியாவில் யூத மதமும் பரவி இருந்தது. அதனால் சடங்குகள் சில கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும் பொதுவாக இருக்கின்றன. உதாரணமாக, யூதர்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்களும் சுன்னத்து செய்துகொள்ளும் வழக்கம், அந் நாட்டில் இப்போதும் நடைமுறையில் உண்டு.  கி.பி. பத்தாம் நூற்றாண்டளவில் அரேபிய-முஸ்லீம் படையெடுப்புகளால், ஆப்பிரிக்காவின் வட பகுதி முழுவதும் இஸ்லாம் பரவிய காலத்தில் மட்டுமல்ல,  பிற்காலத்தில் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளையும் எத்தியோப்பியா வெற்றிகரமாக எதிர்த்து நின்று, தனது இறையாண்மையை காப்பாற்றிக் கொண்டது. ஆமாம், பீரங்கிகளோடு படையெடுத்த ஐரோப்பியர்களை, புராதன கால ஆயுதங்களோடு எதிர்த்து போரிட்டு, ஆப்பிரிக்காவில் காலனிப் படுத்தப்படாத ஒரேயொரு நாடு என்ற பெருமையைப் பெற்றது எத்தியோப்பியா.

ஐரோப்பியர்கள் தமது நாகரீகத்தின் தொட்டில் கிரேக்கம் என்று கூறுவது போல,  ஆப்பிரிக்கர்களுக்கு அவர்களது நாகரீகத்தின் தொட்டில், எத்தியோப்பியா. அதனால் தான் எத்தியோப்பியாவின் பண்டைய மூவர்ணக்கொடியை, “அகில ஆப்பிரிக்க ஒன்றியக்” கொடியாக, பல நாடுகளால் சுவீகரிக்கப்பட்டது. கிறிஸ்துவுக்கு பின் ஐரோப்பியக் கண்டத்தில், தனது ஆரம்பக்காலத்தில் இத்தாலியிலும், கிரேக்கத்திலும் கூட பரவுவதற்கு பெரும் சிரமம் எடுத்துக்கொண்டிருந்த காலங்களில்; எத்தியோப்பியா கிறிஸ்தவ நாடாக ஏற்கனவே மாறிவிட்டிருந்தது.  அது மட்டுமல்ல, பிற ஐரோப்பிய பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக நடைபெற்ற போர்களில், எத்தியோப்பியாவை சேர்ந்த கருப்பு வீரர்கள் பங்குபற்றியுள்ளனர்.

captureofconstantinopleig5அதே காலகட்டத்தில் தான் வட ஆப்பிரிக்காவில் இஸ்லாமிய மதம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. மொரோக்கொவை சேர்ந்த இஸ்லாமிய சக்கரவர்த்தி ஸ்பெயின், பிரான்ஸ் மீது படையெடுத்த போது, அந்தப் படையிலும் கறுப்பின வீரர்கள் கணிசமான அளவில் இருந்தனர். அந்தக் காலத்தில் உலகம் கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற இரு வேறு மதங்களைச் சேர்ந்த முகாம்களாக பிரிந்து நின்றது. ஒருவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது தான் முக்கியமாக பார்க்கப் பட்டதே தவிர, தோலின் நிறம் கருப்பா, சிவப்பா என்று யாரும் அக்கறைப்படவில்லை. அன்று “ஐரோப்பாவில் நிலவிய அடிமை முறை சமுதாயம் ஒழிந்து, நிலப்புரபுத்துவ சமுதாயம் உருவான வரலாற்றில் முற்போக்கான பாத்திரத்தை கிறிஸ்தவ மதம் ஏற்றிருந்ததை” கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுள்ளார். அந்த இடத்தில் இஸ்லாமையும் குறிப்பிடலாம். அன்று தனித்தனி இனக்குழுக்களாக (ரோமர்/கிரேக்கர் பார்வையில்   காட்டுமிராண்டி சமூகமாக) இருந்த ஐரோப்பியரை (ஒரு உலக மதத்தின் கீழ்)  நாகரீகப்படுத்தும் முக்கியமான வரலாற்றுப்பணியை ஆப்பிரிக்கர்கள் ஏற்றிருந்தனர்! அதாவது வரலாற்றாசிரியர்கள் கூறுவதற்கு மாறாக, ஆப்பிரிக்கர்கள் தான் இருண்ட ஐரோப்பாவை கண்டுபிடித்தார்கள்!!

ஐரோப்பியரின் வருகைக்கு முன்னர், ஆப்பிரிக்கர்கள் இராச்சியங்கள் இல்லாத இனக்குழுச் சமுதாயமாக வாழ்ந்து வந்ததாக மாபெரும் வரலாற்றுப் புரட்டு பாடசாலைகளில் போதிக்கப்படுகின்றது. உலகின் எந்தவொரு பகுதியும் ஒரே காலத்தில் வளர்ச்சியடைவதில்லை. ஏற்றத்தாழ்வான வளர்ச்சி எங்கேயும் இருந்து வரும். ஐரோப்பியர்கள் காலனிப்படுத்த தொடங்கிய, மேற்கு ஆப்பிரிக்காவின் கினிய கரைப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள், புராதன இனக்குழுச் சமுதாயமாக வாழ்ந்து வந்த உண்மையை மறுக்க முடியாது. ஆனால் அதேநேரம் தெற்கே இருந்த கொங்கோ சாம்ராஜ்யம் பற்றி, 16 ம் நூற்றாண்டில் ஒரு போத்துக்கேய மாலுமி குறிப்பெழுதி வைத்துள்ளார். “மக்கள் பட்டாலான ஆடைகளை உடுத்தியிருந்ததாகவும், இருபாலாரும் ஆபரணங்களை அணிந்திருந்ததாகவும்” அந்த குறிப்புகளில் காணக்கிடைக்கின்றது. வடக்கே இருந்த கானா சாம்ராஜ்யம் மிகப் பலத்தோடும், செல்வத்தோடும் இருந்ததாக அரேபிய சரித்திர ஆசிரியர்கள் எழுதிவைத்துள்ளனர். அந்தக்காலத்திலேயே கானா தங்கம் விளையும் நாடாக, அரேபியரால் அறியப்பட்டது. கானா சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியில், மாலியில் புதியதொரு சாம்ராஜ்யம் தோன்றியது. அதன் தலைநகரமான திம்புக்டு பிரதான வர்த்தக மையமாக புகழ் பெற்று விளங்கியது. 1324 ம் ஆண்டளவில், மாலி நாட்டு அரசன் மெக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொண்டு, எகிப்து வந்து சேர்ந்திருந்த போது, மூன்று வருடங்களுக்கு தங்கத்தின் விலை குறைந்திருந்ததாக எகிப்திய சரித்திர ஆசரியர் இபுன் கல்டூன் எழுதிவைத்துள்ளார். மாலி அரசனுடன் கூட வந்த 300 அடிமைகள், ஆளுக்கு ஒரு கிலோ அளவிலேனும் தங்கம் கொண்டு வந்ததைப் பார்த்து, அந் நாடு எவ்வளவு செல்வச் செழிப்பானது, என்று அரேபியர்கள் வியந்துள்ளனர்.

timbuktuபண்டைய ஆப்பிரிக்கா செல்வத்தில் மட்டுமல்ல, கல்வியிலும் சிறந்து விளங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன. மாலி நாட்டில், திம்புக்டு நகரில் இப்போதும் நிலைத்து நிற்கும், சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட, பல்கலைக்கழகமும், நூலகமும் அதற்கு சாட்சி. பிற்காலத்தில் மொரோக்கோவில் இருந்து படை எடுத்து வந்து ஆக்கிரமித்த மூர்கள், நூலகத்தை எரியூட்டி, அங்கேயிருந்த நூல்களை கொள்ளையடித்து சென்றனர். இப்போதும் அங்கே கொள்ளையடிக்கப்பட்ட நூல்கள் சில மொரோக்கோவில் உள்ளன. ஆப்பிரிக்கர்களின் கல்விச்செல்வங்கள், எகிப்தில், அலெக்சாண்டிரியா நகர நூலகத்திலும் வைக்கப்பட்டிருந்தன. கிறிஸ்துவுக்கு முன், உலகில் இருந்த மாபெரும் நூலகம் அது. அங்கிருந்த நூல்கள் பாபிருஸ் (இதிலிருந்து “பேப்பர்” வந்தது) தாவரத்தில் இருந்து தயாரித்த தாள்களில் எழுதப்பட்டிருந்தன. கிரேக்கத்திலிருந்து சோக்ரடீஸ் போன்ற தத்துவ அறிஞர்கள் கூட அந்த நூலகத்தை பயன்படுத்தி இருக்க சாத்தியமுண்டு. அத்தகைய பிரசித்தி வாய்ந்த நூலகத்தை, கிளியோபாட்ரா(பூர்வீகம்:கிரேக்கம்) காலத்தில் ஆட்சி செய்த ரோமர்கள் “தற்செயலாக” எரித்து விட்டனர்.  அங்கிருந்த கிடைத்தற்கரிய நூல்கள் யாவும் எரிந்து சாம்பராகின.

மனித குலத்தின் கண்டுபிடிப்புகளுக்கு, குறிப்பிட்ட ஒரு இனம் உரிமை கோருவது அயோக்கியத்தனமானது. ஆப்பிரிக்காவில் எகிப்தில் இருந்து கிரேக்கர்கள் கற்றுக்கொண்ட கணித, விஞ்ஞான கோட்பாடுகள் பல அன்றைய ஐரோப்பாவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நீண்டகாலத்திற்கு பிறகு, அரேபியரால் மேம்படுத்தப்பட்ட அதே கோட்பாடுகளை, ஐரோப்பியர்கள் தாமதமாக அறிந்து கொண்டனர். இவற்றையெல்லாம் ஐரோப்பியர்கள் தாமே கண்டுபிடித்தது போல, பாடசாலைகளில் கற்பிக்கின்றனர். அது உண்மையென்று நம்பும் ஆப்பிரிக்கர்களும் இருப்பது வேதனைக்குரியது. அங்கே மட்டுமல்ல, ஆசியாவிலும் இது தான் நடந்தது. உலகம் முழுவதும் திருடியதை, தனது சொத்தென்று உரிமை பாராட்டுவது, அதையே விற்பனைச் சரக்காக்குவது, இவற்றில் எல்லாம் ஐரோப்பியர்கள் வல்லவர்கள். அதில் மட்டுமல்ல, இனவாதம், நிறவாதம் என நாகரிக உலகம் வெறுக்கும் அரசியல் கொள்கைகளை கண்டுபிடித்து, அதை ஆப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து, ஒருவரோடு ஒருவர் மோத விட்டு வேடிக்கை பார்ப்பதிலும் அவர்கள் கெட்டிக்காரர்கள் தான். இரத்தம் சிந்தும், இன்றைய இன/மத பிரச்சினைகள் பல ஐரோப்பிய காலனியகாலத்தில் உருவானவை, என்பதை யாராலும் மறுக்க முடியாது.

– தொடரும் –

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

தொடர்புடைய பதிவுகள்:
ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா – 1
காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம் !

தோழர் கலையரசன் ஈழத்திலிருந்து இனவாதப் போரினால் அகதியாய் விரட்டப்பட்டு முதலில் சுவிஸ் நாட்டிலும் பின்னர் அந்த நாட்டு அரசின் இனப்பாகுபாடு அரசியலால் வெறுப்புற்று நெதர்லாந்திலும் வாழ்பவர். அகதியாய் ஆரம்பித்த வாழ்வு, அதனால் ஐரோப்பிய நாடுகளின் அகதிகள் குறித்த சட்டங்களைத் தெரிந்து கொண்டமை, பல் நாட்டவருடன் பழகியமை, 20 நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து பெற்ற சமூக அனுபவம், நெதர்லாந்து கம்யூனிஸ்ட்டு கட்சியுடனான தொடர்பு, நடைமுறைப் போராட்டங்களில் ஈடுபட்டமை எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு உலக அனுபவத்தையும் முக்கியமாக பல்நாட்டவரின் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அரசியலையும் கற்றுத் தந்திருக்கிறது. இந்த அனுபவங்களினூடாக மேற்குலகின் பொய்ச்சித்திரங்களை கலைத்துப் போடும் வல்லமை கொண்ட தோழர் கலையரசன், இத்தளத்தில் பங்கேற்பதில் வினவு மகிழ்ச்சி அடைகிறது. அவரது வலைப்பூ முகவரி http://kalaiy.blogspot.com

Print

24 Comments

  1. maddy

    Excellent article. Brilliant Kalaiyarasan

    Posted on 16-Feb-09 at 12:06 pm | Permalink
  2. பல பழைய விசயங்களை முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் கட்டுரை நம்முன் காட்டுகிறது. எளிய நடையில் ஆழமான விசயத்தை எழுதும் கலையகத்தின் இந்த பணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    Posted on 16-Feb-09 at 1:25 pm | Permalink
  3. நிலவன்

    யூதர்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்களும் சுன்னத்து செய்துகொள்ளும் வழக்கம், அந் நாட்டில் இப்போதும் நடைமுறையில் உண்டு்.

    தமிழர்களும் கூட இவ்வழக்கத்தினைக் கொண்டிருந்திருக்கின்றார்கள் என்று வைரமுத்து அவர்கள் தன்னுடைய கள்ளிக்காட்டு இதிகாசம் எனும் புத்தகத்திற் குறிப்பிடுகின்றார்…

    Posted on 16-Feb-09 at 1:43 pm | Permalink
  4. மணிகரன்

    //இரத்தம் சிந்தும், இன்றைய இன/மத பிரச்சினைகள் பல ஐரோப்பிய காலனியகாலத்தில் உருவானவை, என்பதை யாராலும் மறுக்க முடியாது.//

    முற்றிலும் உண்மை

    Posted on 16-Feb-09 at 5:28 pm | Permalink
  5. kumar

    I rate this post very high. Great research work and Excellent writing style. Congrats to Mr. Kalaiyarasan and Editor of Vinavu

    Posted on 16-Feb-09 at 7:02 pm | Permalink
  6. loverboy82

    அருமையான கட்டுரைத் தொடர்.. ஒவ்வொரு வரியிலும் தோழர் கலையரசன் அவர்களின் உழைப்பு தெரிகிறது… வாழ்த்துக்கள்

    Posted on 16-Feb-09 at 7:27 pm | Permalink
  7. Hi

    உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.

    உங்கள் இணைப்பை இப்பூக்களில் பார்க்கவும்.

    வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.

    நட்புடன்
    வலைபூக்கள் குழுவிநர்

    Posted on 16-Feb-09 at 9:13 pm | Permalink
  8. எனது கட்டுரைகளுக்கான வாசகர்களின் எதிர்வினை எதிர்பார்த்ததை விட கனதியாக உள்ளன. சில நேரம், வாசிப்பவர்களின் ஆர்வத்தை குறைத்து விடுமென அஞ்சி, பல தகவல்களை ஒரு வரியில் சுருக்கமாக சொல்லியிருக்கிறேன். இனிமேல் எழுதும் போது, விரிவாக அலச வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளீர்கள். உங்கள் ஊக்கத்திற்கும், ஈடுபாட்டிற்கும் நன்றிகள் பல. என்னை பரந்து பட்ட வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய “வினவு” க்கும் நன்றிகள்.

    Posted on 17-Feb-09 at 12:46 am | Permalink
  9. வெங்கடேஸ்வரன்

    //உங்கள் ஊக்கத்திற்கும், ஈடுபாட்டிற்கும் நன்றிகள் //

    ஐயா இதுபோன்றதொரு அருமையான தகவல்களை தருவதற்கு நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
    உங்களுடைய கட்டுரையை படித்த
    வரலாற்று மாணவனான எனக்கு நான் படிப்பது ஒரு குப்பையோ என்றுதான் தோன்றுகிறது.
    இன்று உங்கள் கட்டுரையைதான் குறிப்பெடுத்து சென்றேன். நண்பர்களுக்கும் விளக்கினேன். தொடர்ந்து எங்களுக்கு உதவுங்கள்

    Posted on 17-Feb-09 at 1:46 am | Permalink
  10. அருமையான கட்டுரைத் தொடர்.. ஒவ்வொரு வரியிலும் தோழர் கலையரசன் அவர்களின் உழைப்பு தெரிகிறது… வாழ்த்துக்கள்

    Posted on 17-Feb-09 at 3:48 am | Permalink
  11. Spprabu

    Nalla Arumayana Karuthoviyam! Your hard work, Observation and Dedication in Reading revealed in this article.

    Great Article.

    Try to publish a Book!

    Nandri!

    Posted on 17-Feb-09 at 4:11 am | Permalink
  12. Kanthasamy

    ஐரோப்பியன் திருடியதாகவே இருக்கட்டும்..
    ஆனால் ஒரு அய்ன்ஸ்டீனையோ, நீயூட்டனயோ, நாமோ
    ஆப்பிரிக்கக்காரனோ உருவாக்க வில்லையே..
    அவ்வளவு ஏன்.. மார்க்சும் எங்கல்சும் அங்கே தானய்யா
    பிறந்தார்கள்.. அவர்களால்தானே வினவு web உருவாகியது..
    முதல் குரங்கு நாம்தான் என்பதில் என்ன பயன்.. எப்படி
    எல்லா குரங்குகளையும் மனிதனாக்குவது.. அதற்கு வழி சொல்லுங்கள்..

    கந்தசாமி

    Posted on 17-Feb-09 at 11:00 am | Permalink
  13. //ஐரோப்பியன் திருடியதாகவே இருக்கட்டும்..
    ஆனால் ஒரு அய்ன்ஸ்டீனையோ, நீயூட்டனயோ, நாமோ
    ஆப்பிரிக்கக்காரனோ உருவாக்க வில்லையே..//

    ஐரோப்பிய மையவாத கருத்துகளில் இருந்து கந்தசாமி இன்னும் விடுபடவில்லை என நினைக்கிறேன். ஐன்ஸ்தீனோ, அல்லது நியூட்டனோ உலகப் புகழ் பெறுவதற்கு காரணம், ஐரோப்பியரின் உலக மேலாதிக்கம் தான். மற்றும் படி இவர்களது “கண்டுபிடிப்புகளுக்கு” அடிப்படை தரவுகள், கிரேக்கத்தில் இருந்தன, அவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து கற்றுக்கொண்டனர். அப்போதெல்லாம் பெயரும் புகழும் தேடுவதற்காக, ஒன்றை தானே கண்டுபிடித்ததாக மார்தட்டிக் கொள்ளும் பழக்கம் கிரேக்கர்களிடம் அல்லது ஆப்பிரிக்கர்களிடம் இருக்கவில்லை.

    உதாரணத்திற்கு எகிப்தில், சூடானில் உள்ள பிரமிட்களை,தூண்களை, அல்லது பிரமாண்டமான ஆலயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். மிகச் சிறந்த கணித, தொழில்நுட்ப அறிவு இல்லாமல் அவற்றை நிறுவி இருக்க முடியுமா? இன்றைய அறிஞர்களுக்கே இதெல்லாம் புதிராக தோன்றுகின்றன. நான் கட்டுரையில் எழுதாமல் தவற விட்ட இன்னொரு கண்டுபிடிப்பை சொல்கிறேன். அறுவைச் சிகிச்சை செய்து குழந்தையை பிரசவிக்கும் மருத்துவத்தை எகிப்தில் உள்ள ஆப்பிரிக்கர்கள் அறிந்திருந்தனர். எகித்திய அரசி கிளியோபாட்ராவுக்கும், ரோம சக்கரவர்த்தி சீசருக்கும் பிறந்த குழந்தையை அவ்வாறு அறுவைச் சிகிச்சை செய்து தான் எடுத்தார்களாம். லத்தீன் மொழியில் “சிசெரியான்”(குட்டி சீசர்) என்று அந்த குழந்தைக்கு பெயரிடப்பட்டது. அதிலிருந்து தான் சிசெரியான் அறுவைச் சிகிச்சை முறை தோன்றியது.

    “காட்டுமிராண்டி ஐரோப்பியர்கள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடைமை” என்ற தலைப்பு காரணமில்லாமல் வைக்கவில்லை. ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்கர்களின் அறிவுடைமையை மட்டுமல்ல, அரேபியரின், இந்தியரின், சீனர்களின் அறிவுடமையையும் திருடி வைத்துக் கொண்டு தற்போது தங்களது என்று உரிமை கோருகிறார்கள். ஐரோப்பிய மொழிகள் பயன்படுத்தும் எழுத்து வரிவடிவங்கள் பினீசியரிடம் (லெபனான், பாலஸ்தீனம்), எண்கள் அரேபியரிடம் இருந்து கடன் வாங்கியவை தான்.

    Posted on 17-Feb-09 at 11:52 am | Permalink
  14. அர டிக்கெட்டு !

    யோவ் விடுதல்ல்ல்ல்லை ஏன்யா இப்படி படுத்தி எடுக்கற, கந்தசாமின்னு பேரு வைக்கறத்துக்கு பதிலா நொந்தசாமின்னு வச்சுக்க. கேக்குற கேள்வியப்பாரு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் படிச்சிட்டுதான் கேள்வி கேக்கனுமின்னு. தலைப்ப பாத்து கேள்வி கேட்ட இப்படித்தான் ஆப்பு வாங்கனும்.
    மொத்ல்ல நீ அமீபாவுலேருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து குரங்காய் மாறு அப்புறமா மனிதாக மாறுவதை பற்றி பேசலாம்.

    Posted on 17-Feb-09 at 12:25 pm | Permalink
  15. ரொம்பவும் அருமையான ஆச்சரியமான தகவல்கள் நிறைந்த கட்டுரை .
    நீங்கள் குறிப்பிட்டது போல ஐரோப்பாவின் ஆதிக்கம் இன்றளவும் விஞ்ஞான உலகில் தொடர்கிறது .பல அறிவியல் ஜர்னல்களில் பிறரின் ஆராய்ச்சிகளை பதிப்பிக்க செய்வது எளிதல்ல ஆனால் ஐரோப்பர்களும் அமெரிக்கர்களும் தங்கள் குப்பை ஆய்வுகளை கூட சுலபமாகப் பதிய முடியும் .

    Posted on 17-Feb-09 at 1:05 pm | Permalink
  16. ஐரோப்பியர்கள் பல நாடுகளிலும் காலனி வைத்திருந்த காலங்களில் பல நாடுகளின் அறிவுச் செல்வங்களைக் கொள்ளை அடித்து தமதாகக் காட்டிக் கொண்டார்கள்.அவர்கள் எஜமானர்களாக இருந்த காரணத்தினால் அவர்களை ஒருவரும் தட்டிக் கேட்கவில்லை.பதினாறாம் நூற்றாண்டில் இருந்து உலகத்தை ஆதிக்கம் செலுத்துபவர்கள் அவர்கள் தானே.
    ஒன்று மட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்,பல விடயங்களை ஆவணப் படுத்தி தங்களை விளம்பரம் செய்வதில் அவர்கள் வல்லவர்கள்தான்.
    அத்துடன் விஞ்ஞான அறிவியல் சஞ்சிகைகள் ,அமைப்புக்கள் எல்லாமே அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் எல்லாமே தங்களினால் தான் கண்டுபிடிக்கப் படுகிறது என்ற ஒரு தோற்றத்தை காட்டுவது அவர்களுக்கு சுலபமாக உள்ளது.ஐரோப்பியர்களின் பின்பு அமெரிக்கர்கள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார்கள்.
    அமெரிக்காவில் உலகத்தில் எல்லாப் பகுதிகளிலும் இருந்து புத்திசாலிகளைப் பணத்தைக் காட்டி மயக்கி தங்கள் நாட்டுக்கு கொண்டுவந்து இவ்வளவு தொழில் நுட்ப விஞ்ஞான மருத்துவ முன்னேற்றங்களை அடைந்தார்கள்.
    அவர்களின் கபடத்தனமும் ஆப்ரிக்கா ஆசிய மக்களிடம் குறைவுதான்.நாங்கள் சும்மா உணர்ச்சி வசப் பட்டுக் கத்துவோம்.அவர்கள் தந்திரமாக வாழைப்பழத்தில் ஊசி செருகுவது மாதிரி தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள்.

    They now rob our own rawmaterial and then control it by copyright and patet laws and then sell our own material to us.

    Thank you for my little nephew mayooran for showing me how to type in tamil efficently -
    vanathy

    Posted on 17-Feb-09 at 2:03 pm | Permalink
  17. Kanthasamy

    அய்யா அர டிக்கெட்டு, (கலையரசு சார் உங்களுக்கு தனியா எழுதறேன்)
    நான் முன்பே சொன்னேன்.. விடுதல வேற, நான் வேற.. நல்லா புரிஞ்சுகிடும் ..
    நான் அமீமாவா இருந்துட்டுப் போறேன்.. நீர் இன்னமும் ‘டார்வின்’ சொன்ன வஸ்து
    போல பேசாதீரும்.. நான் கட்டுரைய பல தடவ படிச்சிட்டேன்..
    நம்ம குழந்தைய நாம என் ராசா தங்கம்னு பாராட்டுறது மாதிரிதான்
    எனக்குப் படுது..
    அவிங்க copy அடிக்கட்டும் இல்ல டீ அடிக்கட்டும்..
    யதார்த்தம் என்ன.. அவங்கதான் இப்ப அனைத்திலும் top..
    உதாரணமா ராசபக்சயும் நாமும் அய்யோராப்பாவில் இருந்தோம்னு வைங்க..
    (உதாரணத்துக்குத்தான்) இன்னேரம் நம்ம நேரமே நல்ல நேரம் தான..
    hypocracy விட்டுத் தொலையும்..

    கந்தசாமி

    Posted on 17-Feb-09 at 4:57 pm | Permalink
  18. விடுதல கண்ணு,

    கந்த சாமீ நொந்த சாமீ எப்புடி எளய தாசன் வேசம் போடுகிட்டு வந்தாலும் சரி ,
    கண்ணு கொண்டய அறுத்து போட்டு விட்டு வாடி
    .வந்த வுடனே தெரியுதே

    கலகம்

    Posted on 17-Feb-09 at 5:42 pm | Permalink
  19. அர டிக்கெட்டு !

    கந்தசாமி :
    நீ மட்டுமா விடதலை கிடையாது…???
    சந்திப்பு விடுதலை கிடையாது!
    பாப்பு விடுதலை கிடையாது!!
    முழு டிக்கெட்டு விடுதலை கிடையாது!!!
    இளையதாசன் விடுதலை கிடையாது!!!!
    விஜய் விடுதலை கிடையாது!!!!!
    டவுசர் விடுதலை கிடையாது!!!!!!
    செம்புலம் விடுதலை கிடையாது!!!!!!
    காவலன் விடுதலை கிடையாது!!!!!!!
    விடுதலை முழக்கம் விடுதலை கிடையாது!!!!!!!
    இன்னும் பல அனானி , நொனானி யாரும் விடுதலை கிடையாது….
    அவ்வளவு ஏன் விடுதலையே விடுதலை கிடையாது!!!!
    ஆனா எல்லாருக்கும் ஒரே கொண்டை, ஒரே டவுசர், ஒரே ஸ்பெலிங் மிஸ்டேக்
    ஆள உடுங்கடா சாமி!

    Posted on 17-Feb-09 at 6:02 pm | Permalink
  20. Natty

    அருமையான தொடர் நண்பரே! வாழ்த்துக்கள்

    Posted on 18-Feb-09 at 3:50 am | Permalink
  21. QWE

    IDHU EN MUDHAL ANUPAWAM

    Posted on 12-Mar-09 at 8:41 pm | Permalink
  22. srinivasan

    very good history
    mr.kalaiyarasu keep it up

    Posted on 26-Apr-09 at 1:08 pm | Permalink
  23. very good work still waiting to read about egypt, libiya, morocoo, chaad, gold coast, madagascar etc

    Posted on 23-Aug-10 at 4:15 pm | Permalink
  24. don

    oru aalntha visayathai miga elimayana nadayil solliya ungaluku vaalthukkal.

    Posted on 25-Aug-10 at 5:12 pm | Permalink

Post a Comment

Your email is never published nor shared.

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!