privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபாக் தீவிரவாதம்: எழவு வீட்டில் கிரிக்கெட் கவலை !

பாக் தீவிரவாதம்: எழவு வீட்டில் கிரிக்கெட் கவலை !

-

கிரிக்கெட்டில் கூட அரசியலா, தீவிரவாதமா என பலரும் பாக்கில் நடந்த இலங்கை அணி மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து பேசுகிறார்கள். எந்த நாட்டிலும் அதன் அரசியல் சமூக வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள், முரண்பாடுகள் தீர்க்கப்படாமல் இருக்கும் போது அதன் தாக்கங்கள் விளையாட்டில் மட்டுமல்ல அன்றாடம் நடக்கும் எல்லா வாழ்க்கை இயக்கத்திலும் இருந்தே தீரும். இதை தூங்கிய ஒருவன் கனவில் விழித்து என்ன தீவிரவாதமா என்று அதிர்ச்சியடைவதில் பலனில்லை.

இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் ஏழை நாடுகளின் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் அவர்களின் கவலையை போக்கும் நவீன மதமாக கிரிக்கெட் இருந்தது, இனி அதுவும் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை என்று சிலர் கவலைப்படுகிறார்கள். ஆனால் அன்றாட அரசியல் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் எல்லா துயரமான நேரங்களிலும் கிரிக்கெட் எதிர்மறையில்தான் பங்காற்றியிருக்கிறது. கிரிக்கெட் நட்சத்திரங்களும், வாரிய முதலாளிகளும் அதன் பிரம்மாண்ட வருவாய்க்காக மட்டுமே புதிது புதிதாக பல போட்டிகளை நடத்தி வருகிறார்கள். கிரிக்கெட் மீதான வெறி எல்லா சமுகக் கடமைகளிலிருந்தும் விடுபடும் ஒரு மயக்க நிலையையே மக்களிடத்தில் ஏற்படுத்துகிறது.

இதைத்தாண்டி இந்தியத் துணைக்கண்ட நாடுகளில் இருக்கும் மக்கள் தத்தமது தேசிய எல்லைகளைத் தாண்டி அருகாமை நாடுகளில் இருக்கும் மக்களை ஒரு விளையாட்டின் மூலம் நெருக்கத்தை -அது வரம்புக்குட்பட்டதாக இருந்தாலும்- உருவாக்கியதை மட்டும் கிரிக்கெட்டின் பல கெட்டதுகளில் இருக்கும் ஒரு நல்லது எனலாம். இதையும் தீவிரவாதிகள் நிறுத்திவிட்டார்கள் என்பதற்காக மட்டும் நாம் இந்தச் சம்பவம் குறித்து வருத்தப்படலாம்.

மும்பையில் 26/11 தாக்குதல் தொடர்பாக ஊடகங்கள், கட்சிகள் அனைவரும் பாக்கிஸ்தானை வறுத்தெடுத்தார்கள். ஏதோ பாக்கிஸ்தான் மக்களும் அரசும் தீவிரவாதத்தை முழுநேரத் தொழிலாக கொண்டிருப்பது போல சித்தரித்தனர். உண்மையில் தீவிரவாதத்தினால் அன்றாடம் பல அப்பாவி பாக் மக்கள் இறப்பதைப் பார்க்கும் போது இந்தியாவை விட பாக்தான் அதிகம் பாதிப்படைந்த நாடு. மேலும் இத்தகைய ஜிகாதி தீவிரவாதம் ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத் யூனியனை விரட்டுவதற்காக அமெரிக்கா உருவாக்கி அதன் புரோக்கராய் பாக் ராணுவ சர்வாதிகாரிகள் அமல்படுத்தியதின் தொடர் விளைவுதான் இத்தகைய நெருக்கடிக்கு பாக் ஆளாகியிருப்பதன் அடிப்படை.

கிரிக்கெட் மட்டுமல்ல எல்லா விளையாட்டுக்களும் இசுலாத்திற்கு விரோதமானது என்பது தாலிபானின் கொள்கை அதனால்தான் இந்த தாக்குதல் என சில ஆங்கில தொலைக்காட்சிகள் ஒரு கற்பிதத்தை பிரச்சாரம் செய்கின்றன. இது மட்டுமல் இன்னும் பல பிற்போக்குத்தனங்களை மதத்தின் பெயரால் அமல்படுத்திய தாலிபான் இயக்கமே அமெரிக்க சி.ஐ.ஏ மற்றும் பாக்கின் ஐ.எஸ்.ஐ சேர்ந்து பெற்றெடுத்த கள்ளக் குழந்தைதான். இதற்காகவே பாக்கிஸ்தான் முழுவதும் மதராசாக்கள் உருவாக்கப்பட்டு அதில் அப்பாவி இளைஞர்கள் மதத்திற்காக அல்லது இசுலாமிய சர்வதேசியத்திற்காக போராட வேண்டும் என்றொரு நிலைமையை உருவாக்குவதற்கு பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழிக்கப்பட்டன.

அந்தத்தீவிரவாதம் இன்று வளர்த்தவனையே எதிர்த்து நிற்கிறது. இந்தச்சூழலில்தான் ஒரு முப்பது ஆண்டுகளாய் பாக்கில் இராணுவ சர்வாதிகாரம் அமெரிக்காவின் தயவில் வாழ்ந்ததோடு எல்லா ஜனநாயக அமைப்புக்களையும் சீர் குலைத்திருக்கிறது. அதனால்தான் பாக்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, உண்மையான அதிகாரமின்றி இராணுவ அமைப்புக்கள் மற்றும் உளவுத் துறையின் செல்வாக்கில்தான் நாட்டின் தலையெழுத்து சிக்கியிருக்கிறது. இதிலும் தாலிபான் ஆதரவு, அமெரிக்க ஆதரவு, இந்திய எதிர்ப்பு என பல குழுக்கள் இருப்பதும் உண்மை. இத்தகைய குழப்பம் அமெரிக்காவின் போர் மேலாதிக்கத்திற்கு தோதாக இருப்பதால் இன்றும் பாக்கின் பிடி அமெரிக்காவின் கையில்தான் இருக்கிறது. இந்த அமெரிக்க அஜெண்டாவில் சமீபத்திய காலத்தில் இந்தியாவும் சேர்ந்திருக்கிறது. இத்தகைய ராஜிய சூதாட்டத்தில்தான் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் சிறைபட்டிருக்கிறது.

இலங்கையில் ஈழத் தமிழ் மக்கள் மீது சிங்கள இனவெறி அரசு கொடூரமான போரை நடத்தி தினமும் நூற்றுக்கணக்கில் மக்களைக் கொன்று வரும் நிலையில் தெற்கில் கொழும்பில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. வடக்கில் குண்டுவெடிப்புகளின் மத்தியில் மக்கள் கதறிக் கொண்டிருக்கும் போது தெற்கில் மைதானத்தில் அடிக்கப்படும் பவுண்டரிகளுக்கும், சிக்சர்களுக்கும் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். இத்தகைய போர்ச்சூழல் பழகிப் போனதால்தான் என்னவோ இலங்கை அணி மற்ற நாடுகளின் அணிகள் செல்லத்தயங்கும் பாக்கிற்கு சென்றதன் காரணமாக இருக்கலாம். சொந்த நாட்டில் மக்களைக் கொன்று குவிக்கும் ஒரு சூழ்நிலையில் இலங்கை அணி கிரிக்கெட் ஆடுவதும் அதை இலங்கை அரசு எற்படுத்திக் கொடுப்பதும் ஒரு ஆபாசமான செயலில்லையா?

பாக்கின் எல்லாப்பகுதிகளிலும் குண்டுகள் அன்றாடம் வெடித்து அப்பாவி மக்கள் அனுதினமும் செத்துக் கொண்டிருக்கும் நிலையில் அங்கும் இந்த துயரமான சம்பங்களை மறந்து கிரிக்கெட் ஆடுவதும், அதற்கு ஏற்பாடு செய்வுதும் கூட நீரோ மன்னனது சமாச்சாரங்கள்தான். பாக் மக்களுக்கு ஜனநாயக உரிமையை வழங்காத ஆளும் வர்க்கங்கள் கிரிக்கெட்டில் மட்டும் தேசிய வெறிக்காக கைதட்டும் உரிமையை ரசிகர்களுக்கு அள்ளி வழங்குகின்றது. ஆக  கிரிக்கெட்டின் மேல் கைவைத்தால் உலகின் கவனத்தை ஈர்க்கலாம் என்பதோடு அமெரிக்காவின் ஆணைக்கேற்ப இசுலாமியத் தீவிரவாதிகளை ஒடுக்கும் பாக் அரசுக்கும் பாடம் கற்பிக்கலாம் என்பதற்காவும் இந்த தாக்குதல் மும்பையில் நடந்ததைப் போன்று நடத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இந்த செய்தி வந்ததுமே எழவு வீட்டில் அனுதாபத்தை தெரிவிப்பதை விட கிரிக்கெட்டின் வர்த்தக ஆதாயங்கள் விரிவான கவலையுடன் விவாதிக்கப்படுவதும் நிச்சயமாக ஒரு ஆபாசமான செயல்தான். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சந்தித்த சி.என்.என் ஐ.பி.எனின் ராஜதீப் சர்தேசாயும், என்.டி.டி.வியின் பர்கா தத்தும் கவலைப்பட்டு கேட்ட முக்கியமான கேள்வி ஏப்ரல் மேயில் நடக்க இருக்கும் இந்தியன் பிரிமியர் லீக்கின் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு ஏதும் பிரச்சினை வருமா என்பதுதான். சிதம்பரமும் அந்த நாட்களில் தேர்தல் நடப்பதால் 20 இலட்சம் துணை ராணுவப் படையினர் நாடு முழுக்க பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதால் கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது சிரமம் எனவும் அதனால் போட்டியை தள்ளி வைத்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்தார்.

ஆனால் அதையும் அவர் உத்தரவாக சொல்லவில்லை, இது பற்றி கிரிக்கெட் வாரியத்திடம் கலந்தாலோசிப்பதாகவும சொன்னார். ஐ.பி.எல்லின் தலைவரான லலித் மோடியோ எக்காரணம் கொண்டும் போட்டிகளைத் தள்ளி வைக்க முடியாது, அப்படிதள்ளி வைத்தால் இந்த ஆண்டு முழுவதுமே விளையாட முடியாத அளவுக்கு இந்திய அணியின் ஆட்டத் திட்டம் அதிகமாக இருக்கிறது என்றார். மேலும் தேர்தல் நடக்கும் 44 நாட்களில் தேசமே முடங்கிப்போய்விடுமா எனவும் அவர் கேட்கிறார். காரணம் 20 ஓவர் போட்டிகளில் பல நூறு கோடிரூபாயை கிரிக்கெட் முதலாளிகளும், வாரியமும் சம்பாதிக்கும் வர்த்தக நோக்கம்தான். இதனால்தான் லாகூர் தாக்குதலில் யார் இறந்தார்கள் என்று கவலைப்படுவதை விட இந்தியாவின் கிரிக்கெட் முடங்கிவிடுமா என்று ஊடகங்கள் கவலைப்பட்டன.

இந்த நிலைமையைப் பார்த்தால் இந்திய ராணுவமோ – அதுவும் காஷ்மீர் மற்றும் வடகிழக்கில் முடங்கியிருக்கிறது – அல்லது அமெரிக்க ராணுவத்தை வைத்தோ கூட அந்தப் போட்டிகளை நடத்துவார்கள் போலும். அடுத்த இந்த தீவிரவாதத் தாக்குதல் காரணமாக பாக் மக்களுக்கு ஏற்படும் துன்பத்தைப் பற்றி ஆய்வதற்குப் பதில் இனி பாக்கில் கிரிக்கெட் போட்டிகளே நடக்காது, இரண்டு வருடம் கழித்து நடக்க இருக்கும் உலகக்கோப்பை போட்டி என்னாகும், இந்தியத் துணைக்கண்டத்தில் வர்த்தகரீதியாக அள்ளிக் கொடுக்கும் கற்பக விருட்சகத்துக்கு ஏற்படும் அபயாம் பற்றி அதிகம் பேசினார்கள். லாகூரில் துப்பாக்கியால் சுட்ட பயங்கரவாதிகளை விட இந்த வர்த்தக பயங்கரம் கொடூரமாக இருக்கிறது.

அடுத்து இந்தியாவில் இசட் பிரிவில் வரும் அரசியல்தலைவர்களுக்கான நவீன பாதுகாப்பில் பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் அதிநவீன துப்பாக்கிகள் அதுவும் எப்போதும் சுடத் தயாராக இருக்கும் நிலையில் பயன்படுத்தப்படுமாம். ஆனால் மக்களுக்கு என்ன பாதுகாப்பு என்றால் யாருக்கு அதிர்ஷடம் உள்ளதோ அவர்கள் குண்டு வெடிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்பதைத் தவிர வேறு வழியில்லை. இது போக இராணுவம், துணை இராணுவத்திற்கான பட்ஜெட் சென்ற ஆண்டைவிட முப்பது சதவீதம் அதிகமாம், எல்லாம் ஆட்சியாளர்களைப் பாதுகாப்பதற்குத்தான்.

எனினும் ஆப்கானில் அமெரிக்கா இருக்கும் வரையிலும், காஷ்மீர்பிரச்சினை தீர்க்கப்படாத வரையிலும் அமெரிக்காவின் கூட்டாளியாக இருக்கும் பாக் மற்றும் இந்தியாவின் பகுதிகள் எதுவும் பயங்கரவாதத்திலிருந்து தப்பிக்க முடியாது. மேலும் இந்தியாவை தொடர்ந்து தாக்கப்போவதாக அல்கைதா அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருக்கிறது. ஒருவேளை இந்துமதவெறியர்கள் அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில் இந்த அபாயம் இன்னும் அதிகம் எனலாம். பயங்கரவாதத்தின் தோற்றமும் இருப்பும் அமெரிக்கா ஏகாதிபத்தியம் இருக்கும் வரையிலும் இருந்தே தீரும். இசுரேல் போல பாலஸ்தீன மக்களை அடியோடு கொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றினாலும் பயங்கரவாதத்தை ஒடுக்க முடியாது. ஆகவே பாக்கில் நடந்த பயங்கரவாதத்தைக் கண்டிக்கும் அதே நேரத்தில் நாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் கண்டிக்க வேண்டும்.

ஈழப் பிரச்சினைக்காகவோ, காஷ்மீர் பிரச்சினைக்காவோ, பாக்கின் தீவிரவாதக் குழுக்களின் பிடியில் சிக்கியிருக்கும் மக்களைப் பற்றியோ நினைத்துப் பார்ப்பதற்கு சில நொடிகள் கூட ஒதுக்காத ஊடகங்கள் கிரிக்கெட் பற்றி மட்டும் பல மணிநேரம் கவலைப்படும் கொடுமையை என்னவென்று சொல்ல?

 

  1. அதற்கு பேர் தான் சனனாயகம்
    அமைதியான வாழ்க்கை

    ஆம் சனனாயகமும் அமைதியும்
    சுரண்டல் காரர்களின்
    பாக்கெட்டில் குடியிருக்கின்றன

  2. உடனடி கட்டுரைக்கு முதலில் நன்றி. இல்லையெனில், தமிழ் மணம் முழுவதும், அரைகுறை மண்டை வீங்கிகள் சொல்லும் கருத்துக்களை படிக்க மனம் வலிக்கும்.
    அதிலிருந்தெல்லாம், காப்பாற்றிவிட்டீர்கள்.

    சிலரிடம் காணும் பொழுது, தன் வேலை, தன் வீடு எனும் வாழுகிறவர்கள் கிரிக்கெட்டையும் சேர்த்துக்கொள்கிறார்கள். அதன் வரலாறு எல்லாவற்றையும் ஒப்பிக்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கும்.

    கிரிக்கெட் தெரியாது என்று சொன்னால், நம்மை படித்தவனா, விவரம் அறிந்தவனா என்று சந்தேக கண்ணுடன் அற்ப ஜீவிகளாக பார்க்கிறார்கள்.

    கிரிக்கெட் – விளையாட்டு என்பதற்கு மீறி, பல தளங்களில் நீங்கள் சொல்வது போல வேலை செய்கிறது.

  3. //ஈழப் பிரச்சினைக்காகவோ, காஷ்மீர் பிரச்சினைக்காவோ, பாக்கின் தீவிரவாதக் குழுக்களின் பிடியில் சிக்கியிருக்கும் மக்களைப் பற்றியோ நினைத்துப் பார்ப்பதற்கு சில நொடிகள் கூட ஒதுக்காத ஊடகங்கள் கிரிக்கெட் பற்றி மட்டும் பல மணிநேரம் கவலைப்படும் கொடுமையை என்னவென்று சொல்ல?// //சிலரிடம் காணும் பொழுது, தன் வேலை, தன் வீடு எனும் வாழுகிறவர்கள் கிரிக்கெட்டையும் சேர்த்துக்கொள்கிறார்கள். அதன் வரலாறு எல்லாவற்றையும் ஒப்பிக்கிறார்கள்// தன் வீட்டில் எழவு விழாத வரைக்கும் “ஸ்க்கோர் என்ன?” என்ற நமைச்சல் சிலதுகளுக்கு எடுத்துக் கொண்டே இருக்கும். அந்த நமைச்சலுக்கு தோதாக சொறிந்து விடுபவர்கள் 1.கிரிக்கெட்டு வாரியமும் அதன் கோடீஸ்வரத் தலைவரும். 2.நமது அரசியல் வாதிகள். ( இல்லையென்றால் இந்த கிரிக்கெட் லூசுகள் நாட்டைப் பற்றி ஒரு வேளை சிந்திக்க ஆரம்பித்து விடுவார்களோ என்ற பயம் காரணமாக) 3.சில அல்ல பல ஊடகங்கள். குறிப்பிட்ட அளவு விலை போன பிறகு வேறெதைப்பற்றி எழுதுவார்கள்.

  4. Appada! Vinavu back in form!

    I am a cricket addict myself. My addiction is so strong, that I don’t want to get cured either. However, I agree with several of the comments here…

  5. இலங்கையில் சண்டை முடிந்தால் இலங்கை இராணுவத்தைப் பாதுகாப்புக்கு அழைக்கலாம்.

  6. இலங்கை கிரிக்கெட் விளையாட்டுக்காரர் மீது நடந்த தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டியதுதான்.காயமடைந்த அனைவருக்கும் மற்றும் கொல்லப்பட்ட போலீஸ்காரருக்கு எனது அனுதாபங்கள்.
    ஆனால் ஒரு விஷயம் ,இந்த தாக்குதலுக்கு பிறகு அணைத்துலகமற்றும் இந்திய ஊடகங்கள் நடந்த விதம் எனக்குள் பலவிதமான உணர்வுகளை உண்டாக்கி உள்ளது.
    இதே நாள் இலங்கை அரசின் கொடூர எறிகணை ,குண்டுத் தாக்குதலால் வன்னியில் தமிழ் மக்கள் எழுபதுக்குமேல் இறந்தும் நூறுக்குமேல் காயமடைந்தும் உள்ளனர்
    கிரிக்கெட் தாக்குதல் பற்றி முக்கிய செய்தியாக போட்ட ஊடகங்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் வன்னி மக்கள் செத்துக்கொண்டு இருப்பதைப் பற்றியும் ஒரு அரசு தனது மக்கள்மீது கட்டவிழ்த்துக் கொண்டிருக்கும் பயங்கரவாதம் பற்ற்யும் மவுனம் சாதிக்கின்றன .
    இன்று ஊடகங்களும் தமது கடமையை ஒழுங்காகச் செய்வதில்லை.
    அவர்கள் நினைத்தால் ஒரு செய்தி முக்கியசெய்தியாக மாறுகிறது.
    அவர்கள் அக்கறை எடுக்காவிட்டால் மனித அவலங்களும் வெளி உலகங்களுக்கு தெரியாமலே மறைக்கப் படுகின்றன
    மனித உயிர்களில் கூட இவர்கள் வேற்றுமை காட்டுகிறார்கள்.
    இன்று பிபிசியில் இலங்கை கிரிக்கெட் வீரர்களை வரவேற்பதற்காக குடும்பங்கள் மனக்கலக்கத்துடன் காத்திருந்து அவர்களுடன் ஒன்று சேர்ந்ததாக முதன்மைச் செய்தி கூறுகிறார்கள்.
    ஆனால் இதே நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வன்னியில் உணவு இல்லாமல் ஒவ்வொருநாளும் இறப்பதைப் பற்றிச் செய்தியே வருவதில்லை. இன்றைய உலக மய சூழலில்
    மனித உயிர்களின் மதிப்பு கூட வியாபாரம் ஆகிவிட்டது.
    ஒன்று மட்டும் புரிகிறது.
    சில மிருகங்களுக்கு இருக்கும் மதிப்புக் கூட இன்று தமிழர்களின் உயிருக்கு இல்லை.
    இதன் காரணம் என்ன ?
    ஜனநாயக அமைப்பில் எங்களுக்கு அமைந்த கருணாநிதி ,ஜெயலலிதா போன்ற தலைவர்களும் அவர்களின் சுயநலம் மிக்க பதவி ஆசை கொண்ட மக்கள் நலனில் அக்கறை இல்லாத நடவடிக்கைகளுமா?
    அல்லது இப்படிப் பட்ட தலைவர்களை உருவாக்கிய தமிழர்களின் செயல்களா?

    probably we have got the leaders we deserve.

  7. நேற்று பாகிஸ்தானில், வைத்து இலங்கை கிரிகெட் விளையாட்டு அணியினர் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டனர். அதை தொடர்ந்து பொதுபுத்தியின் உரையாடல்களில் சில….

    இலங்கைக்கு நன்றாக வேண்டும்! நாம போகவேண்டிய டூர் இது, மும்பை தாக்குதல் மற்றும் நம்ம அணிக்கு பாதுகாப்பு பிரச்சனையால நாம போகலை! அதையும் மீறி அவுனுங்க போனானுங்க இல்ல…

    இதே இந்திய வீரர்கள்(!!!) மேல தாக்குதல் நடந்திருந்தா, நாளைக்கு காலையிலக்குள்ள, நம்ம நாடு பாகிஸ்தான் மேல போர் தொடுக்கும்!

    பாவம் இலங்கை. சும்மா இருந்தவனை கூப்பிட்டுகிட்டு போயி, அவன் மேல கொலைவெறி தாக்குதல் நடத்துனா, அது நல்லவா இருக்கு…

    ஓபாமா/அமேரிக்கா இதெல்லாம் பாத்துகிட்டு சும்மா இருக்கா மாட்டானே?
    எப்படி விடுவான்? ஏதாவது பண்ணுவான் பாரேன்!

    அம்(மெ)பேரிக்கா பாக் மேல பொருளாதார தடை விதிக்கணும்!

    ஈராக், ஆப்கானிஸ்தானை பண்ணியது போல இவனுங்களை ஒன்னும் இல்லாம பண்ணனும்….

    ஹிரோஷிமா, மாதிரி ஒரு புல் பூண்டு இல்லாம பண்ணிடனும். அப்ப தான் அவனுங்க திமிரு அடங்கும்.

    இத சாக்கா வெச்சு இந்தியா மாதிரியான நாடுகள் பாக் மேல போர் தொடுக்கணும்…

    போர் எப்படி பண்ணனும்னா, நேரடியா போர் தொடுக்க கூடாது. இஸ்ரேல் காசா ல பண்ணுச்சு இல்ல அது போல பண்ணனும்…

    விடுதலைபுலிகளுக்கு சில பாக் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பிருக்கு, அவங்க மூலமா புலிகள் கூட பண்ணி இருக்கலாம்..

    ச்சே… இதுல சங்ககாரா, ஜெயவர்த்தனே, மென்டிஸ் இவங்கெல்லாம் திரும்ப விளையாடாத மாதிரி காயம் பட்டிருக்கணும்! (சாக கூடாது பாவம்) இவனுங்க தான் நம்ம கூட நல்லா ஆடுறானுங்க.

    இப்படிக்கு (மூளை காதுவழியே வழியும்) இந்தியர்கள் …
    (துடைத்து கொள்ளுங்கள்!!!)

    சிங்களவனுக்கு நல்லாவேனும், இப்படி தானே ஈழத்தமிழர்கள்
    தாக்கப்படுகிறார்கள்… (இப்படியும் சில தமிழ் அன்பர்கள் கேட்கிறார்கள்! அவர்கள் உணர்வு இப்படி சொல்லவைக்கிறது….)

    நல்லவேளை முரளிதரனுக்கு ஒன்னும் ஆகலை!

    ஒரு பக்கத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்படும்போது, இன்னொரு பக்கம் ஒன்றுமே உலக நடப்பு தெரியாதது மாதிரி விளையாடிவனுங்க தானே இவனுங்க? இவனுங்களுக்கு இது மட்டும் போதாது!!!!!!
    ——-

    செய்தி: இந்திய நியுசிலாந்து அணிகள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி இருக்காங்க.

    நம் கேள்வி:
    ஈழத்தமிழர்கள் கொல்லபடுவதை கண்டித்து அங்கே போகாதீங்கன்னு சொல்லியும் கேட்காம போனானுங்க! சரி, போயி அங்கேயாவது அப்பாவி மக்கள் கொல்லபடுவதை கண்டித்து ஏதாவது பண்ணினானுங்களா???
    எவனாவது ஏதாவது பண்ணினானா?
    ஒரு மயி…..ம் புடுங்கலை!

    இதுவிசயத்தில் இலங்கை அணியினர் எங்கள் நாட்டின் சொத்து… அவர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம் என்று ராஜ பக்சே சொல்லி இருக்கிறான்…. அப்போ இலங்கை தமிழர்கள்மட்டும் யாராம்??????????????

  8. இதுக்கு பேரு தான் நாயை அடிப்பானேன்., பீயை சுமப்பானேன் என்பது…இலங்கைக்கு வேணும்..

  9. இன்று காலையில் தினகரனில் இலங்கை கிரிக்கெட்காரர்கள் தாக்கபட்டதுக்கு
    நடிகை பிரித்தி ஜிந்தா கண்ணீர் என்று புகைப்படத்துடன் செய்தி வந்துள்ளது.
    அவ ஏன் அழுதா, எவனுக்காக அழுதா, எதுக்காக அழுதாலோ அதெல்லாம் நமக்கு வேண்டாம். ஆனால் இதை ஒரு செய்தியாக தமிழகத்தில் வெளியிட முடிகிறது என்றால் நம்மை போல் மானமில்லாதவர்கள் யாருமில்லை. ஈழத்தில் நமது சகோதரர்கள் தாக்கபடும்போது, கொடுரமான முறையில் அழிக்கப்படுவதை பற்றி உண்மைகளை மறைத்து வெளியிடும் பத்திரிக்கைகள் இப்போது இலங்கை கிரிக்கெட்காரர்கள் தாக்குதலுக்கு ஒப்பாரி வைக்கின்றனர்.
    சன் டிவி யில் பேட்டி வேறு.

    அப்பாவி மனிதர்கள் கொத்து கொத்தாக் கொன்றொழிக்கபடுவதற்கு கண்ணீர் வடிக்காத இந்த விபச்சார ஊடகங்கள் இலங்கை கிரிக்கெட்காரர்கள் அடி வாங்கியவுடன் பேதி கண்ட நாயை போல புலம்புகின்றன.

    இந்த ஆளும் வர்க்க பிரச்சார ஊடக நாய்களின் கொட்டத்தை அடக்க முயற்சிப்போம், முறியடிப்போம்.

  10. Yesterday Bollywood actress Prity Zinta too shed her crocodile tears for the attack on Lanka players. One could understand here the reason that some of the Lanka players are hired by her for IPL 20\20.

  11. ஒரு 11 பேருக்காக ஒபாமாவில் இருந்து.. உலகமே அழுது வடிக்குதாம். ஆனால் தினமும் நூற்றுக்கணக்கில் மக்களைக் கொல்லும் அரச இராணுவங்களின் பயங்கரவாதச் செயல்களை இந்த “பெருமதிப்புக்குரிய” ஊடகங்கள் சொல்வதும் இல்லை.. வெளிக்கொணர்வதும் இல்லை.

    கிரிக்கெட் நடத்திக் கொண்டே இன்னொரு பகுதியில் அமெரிக்காவைக் கொண்டு ஏவுகணைகளை வீசி அப்பாவி பாகிஸ்தான் மக்களை கொல்லும் தற்போதைய பாகிஸ்தான் அரசைப் போக கேவலமான அரசு உலகில் கிடையாது.

    இந்த தாக்குதல் பாகிஸ்தான் மக்களின் மனங்களை அப்படியே படம் பிடித்துக்காட்டி இருக்கிறது. கொல்லப்பட்டவர்கள்.. அரசாங்கக் கூலிகளும்.. காயப்பட்டவர்கள் பாகிஸ்தான் அரசு அன்னக்காவடிகளுமே. இவர்களுக்காக வருந்தவோ… இதைச் செய்தியாக்கவோ வேண்டிய அவசியமில்லை..!

    இத்தனை ஆயிரம் மக்களின் துன்பத்தில் இந்த 11 பேருக்கும் எழுதாக அக்கறை.. வருத்தம்.. ஏன் அவங்களில் மக்களுக்கு ஏற்படனும். அவங்கள் மனிதர்களே அல்ல. தங்கட வியாபாரத்தை நடத்த அரச கூலிக்கு மாரடிக்கும் கூலிகள்..!

  12. நடந்தது கவலையளிக்கக் கூடிய விடயம்தான். ஆயினும் ஒருவகையில் இதுவும்நன்றுதான். இப்ப வார்டில படுத்திருக்கும் சிங்கள ஆட்டக்காரர்கள் கொஞ்சமாவது சிந்திப்பார்கள், யாரோ சிலர் சுட்ட இந்த ஓரிரு நிமிடங்களுக்குள்ளேயே எங்களுக்கு இவ்வளவு காயங்களும்,கதிகலக்கங்களும், மரணபயமும் ஏற்பட்டதென்றால் வன்னியில் பட்டியில் அடைத்து வைத்து எரிகுண்டுகள், கொத்துக் குண்டுகள் எல்லாம் போட்டு தமிழ் மக்களைக் கொன்று குவிக்கின்றோமே, மருந்துக்கும் வழியில்லாத அம் மக்களின் வேதனைகளும், சாபங்களும் எதிர்காலத்தில் எம்மினத்தைக் காப்பாற்றுமா? என்று

  13. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுமாத்தளன் மருத்துவமனை சுற்றயல் உட்பட பல பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 57 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 104 பேர் காயமடைந்துள்ளனர்.
    பாதுகாப்பு வலயத்தில் உள்ள புதுமாத்தளன் மருத்துவமனையின் சுற்றயல் பகுதி மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 5:15 தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்

  14. தமிழ மக்களை நீண்டகாலம் அகதி முகாம்களில் வைக்க இலங்கை திட்டம்-இஸ்ரேலில் பசில் ராஜபக்ஷே ஆலோசனை

    இலங்கைத் தமிழர்களை நிரந்தரமாக, அகதிகளாக்கி அவர்களை முகாம்களில் தங்க வைக்க இலங்கை அரசு திட்டமிட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. அங்கு தமிழர்கள் பகுதியில், அந்நாட்டு ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கு, உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இலங்கைத் தமிழர்களை இடம்பெயரச் செய்து, அவர்களை ராணுவ பாதுகாப்புடன் அகதிகள் முகாம்களிலேயே நிரந்தரமாக குடியேற வைப்பதற்கு இலங்கை அரசு திட்டமிட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக, இலங்கை அதிபரின் ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷே, இஸ்ரேல் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள கிபூட் கிராமங்களைப் போன்று, இலங்கையிலும் அமைப்பது குறித்து, அவர் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது, தமிழக மக்களை வன்னி பகுதியில் இருந்து வெளியேற்றிவிட்டு, அங்கு சிங்கள மக்களை அனைத்து வசதிகளுடனும் குடியேற வைப்பதுதான் இலங்கை அரசின் திட்டம். அதேசமயத்தில், தமிழக மக்களை நிரந்தரமாக அகதிகள் முகாம்களில் ராணுவ பாதுகாப்புடன் தங்க வைக்கவும் இலங்கை திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம், இலங்கை தமிழர்களின் நீண்ட நாள் லட்சியமான தமிழ்ஈழம் கோரிக்கையை முற்றுப்புள்ளி வைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  15. அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடம் வன்னியில் வாழும் 200,000 மக்களை அங்கிருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளது. இந்த மக்களை போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து வெளியேற்றி சிறிலங்கா அரசிடம் ஒப்படைப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

    சிறிலங்கா அரசினால் நடத்தப்படும் வதை முகாம்களில் அல்லது தடைமுகாம்களில் இந்த மக்கள் அடைக்கப்படலாம். பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடம் இவர்களை வெளியேற்றுவது அந்த மக்கள் தமது மரணத்தை தாமே தேடிக்கொள்வதற்கு ஒப்பானது.

    இன அழிப்பை மேற்கொள்ளும் நோக்கத்துடன் இந்த மக்களின் மீது கடந்த சில மாதங்களாக சிறிலங்கா அரசு குண்டு வீச்சுக்களை நடத்தி வருகின்றது.

    எனவே, அவர்களை அங்கிருந்து வெளியேற்றி சிறிலங்கா அரசிடம் ஒப்படைப்பது சிறிலங்கா அரசின் இன அழிப்புக்கு துணை போவதாகும்

  16. சிதம்பரத்தில் நடந்தவெற்றிப்பொதுகூட்டத்தில்

    மக இ க ,உள்ளிட்ட 6 அமைப்புக்கள் மதக்கலவரத்தை தூண்டியதாக புகார்-தமிழ்நாடு பிராமணர் சங்கம் நடவடிக்கை.

    காவல் நிலையத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்த சேர்ந்த வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு

  17. Sri Lankan Special Task Force (STF) commandos who had sexually assaulted a 14-year-old Tamil girl Sunday in Vellaave’li police division, again went to the girl’s house Monday between 8:00 p.m and 9:00 p.m where they assaulted her father first and then severely tortured her mother before killing and dumping her body in the well as punishment for complaining against the STF with Batticaloa police for raping her daughter. The father was held bound while the commandos beat the mother to death, the neighbors said

  18. ஏனைய ஊடகங்கள் பரப்புரை செய்வதாக கண்டித்து எம்மவரே இங்கு தாராளமாக பரப்புரை செய்கிறார்கள். இது தேவைதானா?.

  19. எதையாவது, எங்கிருந்தாவது எடுத்து வந்து பதிவாக இடும் போது அதன் மூலம் (Source) எதுவென்பதையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.

Leave a Reply to pukalini பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க