Skip to content

உண்மை உண்மை ஒன்றே உண்மை லத்திக் கம்பு ஒன்றே உண்மை!

போலீசின் காட்டாட்சிக்கு எதிரான வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரிப்போம் ! கருத்துப்படங்கள், முழக்கங்கள் !

-பிப்ரவரி 19, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த போலீசின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து இன்று சென்னையில் வழக்கறிஞர்கள் பேரணி நடைபெறுகிறது. இதற்கு தமிழ்நாடு முழுவதிலிமிருந்து ஆயிரக்கணக்கில் வக்கீல்கள் வருகிறார்கள் என்பதால் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு பஞ்சுமிட்டாய் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. பேருக்கு இரண்டு போலீசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்திருக்கும் நீதிமன்றம், வழக்கறிஞர்கள் தங்களைத் தாக்கிய போலீசு மீது புகார் கொடுத்தும் இன்று வரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவாகவில்லை என்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத்திற்காக  போர்க்குணத்துடன் போராடிய வழக்கறிஞர்களை ஒடுக்கவேண்டும் என்பதற்காகவே அந்த தடியடி அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இதற்கு நேரடியாக நடவடிக்கை எடுக்காமல் நீதிபதிகள் போலிசுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார்கள். இந்தப் பிண்ணனியை விளக்கும் இந்தப் பிரசுரம் மு, பு.ஜ.தொ.மு, வி.வி.மு முதலான புரட்சிகர அமைப்புக்கள் வெளியிட்டிருக்கின்றன. தேவை கருதி இங்கே பதிவு செய்கிறோம்.

ஒரு மாதத்துக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது வழக்குரைஞர்களின் போராட்டம். வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.  மக்கள் தவிக்கிறார்கள். சிறைகளோ நிரம்பி வழிகின்றன. பிணை கிடைக்காமல் பல கைதிகள் சிறைக்குள்ளேயே அல்லல் படுகிறார்கள். இப்படி மக்கள் படும் துன்பத்துக்கெல்லாம் காரணம் வக்கீல்கள்தான் என்றும், அவர்கள் அடாவடித்தனமாக நீதிமன்றப் புறக்கணிப்பு செய்து வருவதால்தான் மக்கள் அவதிப்பட நேர்ந்துள்ளது என்றும் அரசாங்கமும், பத்திரிகைகளும் பிரச்சாரம் செய்கின்றன. இந்தப் பொய்ய்பிரச்சாரத்தை உண்மையென்று பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சற்றே சிந்தித்துப் பாருங்கள். வக்கீல்களின் கோரிக்கை என்ன? பிப்ரவரி 19 ஆம் தேதியன்று உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் நுழைந்து காட்டு மிராண்டித் தனமாகத் தாக்குதல் நடத்திய போலீசின் மீதும் அந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்ட போலீசு அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யவேண்டும். அவர்களைத் தற்காலிகப்பணிநீக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் வக்கீல்களின் கோரிக்கை.

இப்படி ஒரு தாக்குதல் நடந்தது உண்மையா இல்லையா? வக்கீல்களுக்கு மட்டுமின்றி தடுக்கப்போன நீதிபதிகளுக்கும் அடி விழுந்ததா இல்லையா? கார்களையும் டு வீலர்களையும் ரவுடிகளைப் போல போலீசு அடித்து நொறுக்கியதும், நீதிமன்ற அறைகளில் புகுந்து சூறையாடியதும் உண்மையா< இல்லையா? இல்லை என்று அரசோ போலீசோ மறுக்கவே முடியாது. உலகமே இந்தக் கொலைவெறியாட்டத்தை தொலைக்காட்சிகளில் பார்த்தது. இப்படி ஒரு தாக்குதல் நடத்தக் காரணம் என்ன?

சுப்பிரமணியசாமி மீது முட்டை எறிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வக்கீல்கள் சிலரைக் கைது செய்ய முயன்றதாகவும், அதை எதிர்த்து வக்கீல்கள் கல்லெறிந்ததால்தான் தடியடி நடத்த வேண்டியிருந்தது என்றும் கூறுகிறது போலீசு. அதற்கு ஒத்துப் பாடுகிறது கருணாநிதி அரசு. குற்றம் சாட்டப்பட்ட வக்கீல்களை நீதிமன்றத்துக்குள் வைத்து எதற்காகக் கைது செய்ய வேண்டும்? அவர்கள் முகவரி இல்லாத நாடோடிகளா, கிரிமினல்களா? ஒரு கொலைகாரன் கூட சரணடைவதற்காக நீதி மன்ற வளாகத்திற்குள் நுழைந்து விட்டால், அவனைக் கைது செய்ய போலீசார் நீதிமன்றத்துக்குள் நுழைவதில்லை. ரவுடிகள், சத்யம் ராஜூ போன்ற பணக்காரக்  கிரிமினல்கள் ஆகியோர் விசயத்தில் இந்த சட்டத்தையும் ஒழுங்கையும்  பின்பற்றும் போலீசு, மேற்கூறிய வக்கீல்களை மட்டும் நீதிமன்றத்துக்குள் புகுந்து கைது செய்யவேண்டிய அவசியமென்ன? அவ்வாறே கைது செய்வதென்றாலும், இன்னின்னாரைக் கைது செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் அனுமதி பெற்று கைது செய்திருக்கலாமே! ஏன் இந்த முறைகளைப் பின்பற்றவில்லை? இவைதான் வழக்குரைஞர்கள் எழுப்பும் கேள்விகள்.  இந்தக் கேள்விகளுக்கு இதுவரை கருணாநிதி அரசு பதில் சொல்லவில்லை.

பதில் சொல்லாது. ஏனென்றால், முட்டை வீச்சு என்ற சம்பவத்ததை ஒரு முகாந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டு வழக்குரைஞர்கள் மீது இப்படி ஒரு தாக்குதல் நடத்த அரசும் போலீசும் ஏற்கெனவே திட்டமிட்டுவிட்டன. ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி வழக்குரைஞர்கள் விடாப்பிடியாகப் போராடியதும், நீதிமன்றப் புறக்கணிப்பு செய்ததும், சோனியா படத்தையும் மன்மோகன் படத்தையும் எரித்ததும் காங்கிரசு துரோகிகளை ஆங்காங்கே விரட்டி அடித்ததும்தான் திமுக அரசின் கோபத்துக்குக் காரணம். மற்றெல்லோரையும் மிரட்டிப் பணிய வைப்பதைப் போல வக்கீல்களை மிரட்டிப் பணிய வைக்க முடியவில்லையே என்பது போலீசின் கொலைவெறிக்குக் காரணம். இர்களுடைய கூட்டு சதித்திட்டம்தான் பிப்ரவரி 19 வெறியாட்டம்.

krishna-commission-copy

சுப்பிரமணியசாமி என்ற அரசியல் மாமாப்பயலின் முகத்தில் முட்டை வழிந்தவுடனே ‘நீதிமன்றத்தின் புனிதம் கெட்டுவிட்டதாக’ இந்து, தினமணி, துக்ளக் முதலான பார்ப்பனப் பத்திரிகைகள் புலம்பின. ஆனால் வக்கீல்களின் முகத்தில் ரத்தம் வழிவதைக் கண்ட பிறகும், இந்தப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் உச்சநீதிமன்றமும் ஸ்ரீகிருஷ்ணா கமிசனும் நீதிமன்றத்தின் புனிதம் கெட்டு விட்டதாகப் புலம்பவில்லை.  போலீசின் ரவுடித்தனத்தை நியாயப்படுத்துகின்றன. வக்கீல்கள் தான் வன்முறைக்குக் காரணம் என்று பொய்ப்பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றன.

இந்தப் பொய்ப்பிரச்சாரத்துக்கு எதிராக வழக்குரைஞர்கள் எழுப்பும் கேள்வி நியாயமானது. முட்டை வீச்சுக்கு வழக்கு போட்டாகிவிட்டது; ‘கல் வீசினார்கள்’ என்று நூற்றுக்கணக்கான வக்கீல்கள் மீது வழக்கு போட்டிருக்கிறது போலீசு; காவல் நிலையத்தை போலீசே தீ வைத்துக் கொளுத்தி விட்டு அதற்கும் வக்கீல்கள் மீது வழக்கு போட்டிருக்கிறது. “எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயார். நீ நடத்திய ரவுடித்தனத்துக்கு மட்டும் வழக்கு கிடையாதா? ” என்று கேட்கிறார்கள் வக்கீல்கள்.

வக்கீல்களையும் நீதிபதிகளையும் ரத்தம் சொட்டச் சொட்டத் தாக்கிய போலீசார் மீது பெயருக்காவது ஒரு வழக்கு பதிவு செய்தார்களா? இல்லை. பொறுக்கிகளைப் போல கார்களையும், நீதிமன்ற அறைகளையும், நூலகத்தையும், குழந்தைகள் காப்பகத்தையும் நொறுக்கிய போலீசார் மீதும் வழக்கில்லை. போலீசார் மீது அரசு வழக்கு போடவில்லை என்பது மட்டுமல்ல, அடிபட்டவர்கள் புகார் கொடுத்த பிறகும் கூட வழக்கு பதிவு செய்ய மறுக்கிறது போலீசு. இப்படி மறுப்பது சட்டவிரோதமானது. “என்னை அடித்து விட்டான், என் வீட்டில் திருடிவிட்டான்” என்று காவல்நிலையத்தில் நாம் புகார் கொடுத்தால் போலீசு அதனைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு குற்றவாளியிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு ‘நாம் கொடுத்த புகாரில் உண்மையில்லை’ என்று தள்ளுபடி செய்யும் அதிகாரம் போலீசுக்கு இருக்கிறது. ஆனால் புகாரையே பதிவு செய்ய மாட்டேன் என்று கூறும் உரிமை போலீசுக்கு கிடையாது. அப்படிக் கூறினால் புகாரைப் பதிவு செய்யும்படி நீதிமன்றம் போலீசுக்கு உத்தரவிடும். இன்று நீதிமன்றத்துக்கு உள்ளேயே புகுந்து தாக்கிவிட்டு, அடிபட்ட வக்கீல்களின் புகாரையும் பதிவு செய்ய மறுக்கிறது போலீசு? இனி வக்கீல்கள் எங்கே போய் முறையிடுவது?

lathi-police1

இது மட்டுமா? “உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் போலீசு நுழைவதற்கு நாங்கள் அனுமதி தரவில்லை” என்று தலைமை நீதிபதி பகிரங்கமாகவே அறிவித்து விட்டார். அத்துமீறி உள்ளே நுழைந்து தடியடி நடத்த உத்தரவிட்ட காவல்துறை ஆணையர், டிஜிபி ஆகியோர் மீது அரசு உடனே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எடுக்கவில்லை.

இதற்கெல்லாம் என்ன பொருள்? எந்த சட்டத்திற்கும் போலீசு கட்டுப்பட்டதல்ல என்பதுதான் பொருள். போலீசு என்ன சொல்கிறதோ அதுதான் சட்டம். அவன் லஞ்சம் கேட்டால் கொடுக்கவேண்டும். பொருளை இலவசமாகக் கேட்டால் வியாபாரி கொடுக்க வேண்டும். அடித்தால் வாங்கிக் கொள்ளவேண்டும். பேசாதே என்றால் பேசக்கூடாது. நிற்காதே என்றால் அங்கே நிற்கக் கூடாது. குடிதண்ணீர் கேட்டு மக்கள் போராடினால் தண்ணி லாரி வராது, போலீசின் வெள்ளை லாரிதான் வரும்.  சாலை, ரேசன் அரிசி, தொழிலாளர்களின் கூலி உயர்வு என்று எந்தப் பிரச்சினைக்காக மக்கள் போராடினாலும் அரசாங்கம் போலீசைத்தான் அனுப்பி வைக்கிறது. வந்து இறங்கியவுடனே ‘கலைந்து போ’ என்று போலீசு மிரட்டும். கலையாவிட்டால் தடியடி. சிறை.

tamilnadu-policeபோலீஸ்காரன் செய்யாத கிரிமினல் குற்றமில்லை. டூட்டியில் லஞ்சம் வாங்குவது முதல் லீவு போட்டுவிட்டு ஏரியா விட்டு ஏரியா போய் வழிப்பறி செய்வது வரை கற்பனைக்கு எட்டாத குற்றங்களையெல்லாம் அன்றாடம் செய்துவரும் இவர்கள்தான் சட்டத்தின் காவலர்களாம். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுதான் சட்டமாம். போலீசிடம் சட்டம் பேசி அடிவாங்காமல் மீண்டவன் யாராவது உண்டா? அந்த அடிதான் வக்கீல்கள் மீது விழுந்த அடி. அன்றாட வாழ்க்கையில் போலீசு நடத்தும் இந்தக் கொடுங்கோல் ஆட்சியை மக்கள் பலர் வேறு வழியில்லாமல் சகித்துக் கொள்கிறார்கள். அடங்கிப் போகிறார்கள். வக்கீல்களையும் அப்படி அடங்கச் சொல்கிறது போலீசு.

நம்முடைய நாடு ஜனநாயக நாடு என்றும், நீதிமன்றம், சட்டமன்றம், நிர்வாகம், பத்திரிகைகள் என்ற தூண்கள் நமது நாட்டின் ஜனநாயகத்தைத் தாங்கி நிற்பதாகவும், ஒன்றில் தவறு நடந்தால் இன்னொரு இடத்தில் மக்கள் நிவாரணம் பெறலாம் என்பதுதான் குடியாட்சியின் சிறப்பு என்றும் ஆளும் வர்க்கங்கள் கூறுகிறார்களே, இன்று நடந்து கொண்டிருப்பது என்ன? போலீசின் தடியாட்சியை சட்டமன்றம், நீதிமன்றம், பத்திரிகைகள் அனைத்தும் ஓரணியில் நின்று நியாயப்படுத்துகின்றன. போலீஸ் ஸ்டேசனில் புரோக்கர் வேலை செய்தும், போலீசை அடியாளாக வைத்துக் கொண்டு ஊர் சொத்தைக் கொள்ளையடித்தும் வாழும் ஓட்டுப் பொறுக்கிகள் யாரும் போலீசின் மீது நடவடிக்கை எடு என்று பேசக்கூட மறுக்கிறார்கள்.

அரசியல் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் எல்லாச் சட்டங்களையும் தன்னுடைய பீ துடைக்கும் காகிதமாக்கி விட்டது போலீசு. “இனிமேல் இந்த நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது” என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தின் வாசலிலேயே நின்று கதறுகிறார்கள். இது ஒரு போலி ஜனநாயகம் என்பது நிரூபணமாகிவிட்டது. இது ஒரு போலீசு ராச்சியம் என்பது அம்பலமாகிவிட்டது.

நீதிமன்றத்தை நம்பிப் பயனில்லை என்பதை தம் சொந்த அனுபவத்தில் புரிந்து கொண்ட வழக்குரைஞர்கள், வீதியில் இறங்கி மக்கள் மன்றத்துக்கு வந்திருக்கிறார்கள். போலீசு இராச்சியம் என்பது அவர்களுடைய பிரச்சினை மட்டுமல்ல, நம் அனைவரின் பிரச்சினை. வழக்குரைஞர்கள் இதில் தோற்றுவிட்டால் போலீசு இரத்தம் சுவைத்த மிருகமாகிவிடும்.வக்கீலையும் நீதிபதியையுமே அடித்தவனுக்கு ஆட்டோ ஓட்டுனரும், தள்ளு வண்டி வியாபாரியும், மாணவனும், தொழிலாளியும், விவசாயியும் எம்மாத்திரம்?

அந்த நிலை ஏற்பட நாம் அனுமதிக்கக் கூடாது. வழக்குரைஞர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்! வழக்குரைஞர் போராட்டத்தை போலீசு இராச்சியத்துக்கு எதிரான மக்கள் போராட்டமாக மாற்றுவோம்!

முழக்கங்கள்

கைது செய் கைது செய்!
காக்கி உடையில் ஒளிந்திருக்கும்
குற்ற வாளிகளைக் கைது செய்!

பணி நீக்கம்செய்  நீக்கம் செய்
நீதிமன்றத் தாக்குதல் தொடுத்த
அதிகாரிகளை  நீக்கம் செய்!

இது போலீசு வக்கீல் பிரச்சினையல்ல
போ..ராடும்  மக்கள் பிரச்சினை!
வக்கீல் மீதே தடியடி என்றால்
உழைக்கின்ற வர்க்கமே
உன் கதி என்ன எண்ணிப்பார்!

எதிர்த்து நிற்போம் எதிர்த்து நிற்போம்!
காக்கிச் சட்டை தர்பாரை,
லத்திக் கம்பின் ஆட்சியை,
போலீசு இராச்சியத்தை,
எதிர்த்து நிற்போம் எதிர்த்து நிற்போம்!

ஈழத்தமிழ் மக்களுக்காக
வக்கீல்களின் போராட்டம்!
அந்தப் போராட்டத்தை ஒடுக்கத்தான்
உயர் நீதிமன்ற வெறியாட்டம்!

போர்நிறுத்தம் கேட்டது குற்றம்
ஈழத்தமிழ் மக்களுக்காக
போராடியதே வக்கீல் குற்றம்!

சிங்கள அரசின் போருக்கு
இங்கிருந்தே துணை நிற்கும்
இந்திய அரசை, காங்கிரசு அரசை,
கூண்டில்  ஏற்றிக் கேட்டதுதான்
வழக்குரைஞர் செய்த குற்றம்!

கொலைகாரச் சிங்கள அரசுடன்
கூடிக்குலவும் காங்கிரசை,
கூட்டணி சேர்ந்த திமுகவை,
ரோட்டுக்கிழுத்த குற்றம்தான்
வழக்குரைஞர் செய்த குற்றம்!

குண்டு வீசுது சிங்கள அரசு
தடியால் அடித்தால் தமிழர் அரசு!
அங்கே ராணுவப் பேயாட்டம்
இங்கே போலீஸ் வெறியாட்டம்!
அங்கும் இங்கும் பேசுவதெல்லாம்
ஜன நாயகப் பித்தலாட்டம்!

உயர்நீதி மன்றத்துள்ளே
போலீசின் வெறியாட்டம்!
காக்கி உடையில் கவசமணிந்த
காவல்துறையின் சதிராட்டம்!

எலும்பை முறித்தான் வக்கீலை
மண்டை உடைந்தார் மைலார்டு!
லார்டும் போச்சு ஆனரும் போச்சு
லத்திக் கம்புதான் நீதிபதி!

நீதிமன்றம் உள்ளே புகுந்து
நீதிபதியை அடித்த காட்சி
நீதி கேட்க அங்கே போன
மக்களெல்லாம் அதற்கு சாட்சி!

காரை உடைத்து வண்டியை உடைத்து
காக்கிகள் நடத்திய அரசாட்சி
அந்த ரவுடித்தனத்தை லைவ் ஆக
ஒளிபரப்பியதே தொலைக்காட்சி!

திறந்த வீட்டில் நாய் போலே
கோர்ட்டில் நுழைந்தான் – கேசில்லை!
கோர்ட்டில் நுழைந்து நாயைப் போலே
குதறியதற்கும் – கேசில்லை!

முட்டை எறிந்த குற்றத்துக்கு
20 வக்கீல் மேலே கேசு!
சுனா சாமி மூஞ்சியில் வழிந்த
முட்டைக்காக விசாரணை
முழு பெஞ்சு விசாரணை!

மண்டை உடைந்த வக்கீல்கள்
ரத்தத்தாலே மனு எழுதி
புகார் கொடுத்தும் கேசில்லை!
போலீசு மேலே கேசில்லை!
காரை உடைத்தான் கேசில்லை
கல்லால் அடித்தான் கேசில்லை

காக்கிச்சட்டைக் காலிகள் கையால்
உதை வாங்கிய நீதிபதிக்கு
உண்மையைச் சொல்ல தில் இல்லை!
லார்டுகளுக்கு மானம் இல்லை
லார்டுக்கு லார்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு
லேசாக் கூட ரோசம் வரல்லே!

கொலைவெறியாடிய போலீசை
கொஞ்சுகின்றது அரசாங்கம்
இதுவா இதுவா நல்லாட்சி
இதுவா இதுவா குடியாட்சி
இதுதான் இதுதான் தடியாட்சி

சட்டம் நீதி எல்லாம் மாயை
சட்டமன்றம் அதுவும் மாயை
நீதிமன்றப் புனிதம் மாயை
நீ நம்பும் ஜன நாயகம் மாயை!

உண்மை உண்மை ஒன்றே உண்மை
லத்திக் கம்பு ஒன்றே உண்மை!

சட்டம் ஆள்வது உண்மையா
போலீசு கொட்டம் ஆள்வது உண்மையா?
ஒவ்வொரு நாளும் சட்டத்தை
காலில் போட்டு மிதிப்பது யாரு?
நீயா நானா வக்கீலா?
தெரியலயின்னா பேப்பரைப் பாரு!

போ..லீசு லாக்கப்பிலே
பொழுது விடிஞ்சா மர்டரு!
காவல் நிலையம் எல்லாமே
கற்பழிப்பு சென்டரு!
போக்கிரிகள் எல்லோருக்கும்
போலீசே காட் பாதரு!
கேசு கொடுக்க டேசன் போனா
உன் காசுக்குத்தான் டேஞ்சரு!
போலீஸ் பேரைக் கேட்டாலே
பொதுமக் களுக்கு  டார்ச்சரு!

காவல்துறையின் கொடுமைகளை
கொஞ்சமாவது தட்டிக்கேட்க
கோர்ட்டு வக்கீல் கூடாதாம்!
தட்டிக்கேட்கும் வக்கீலையும்
தடியால் அடிக்கிறான் போலீசு!
கேள்வி கேட்கும் வக்கீலும்
குண்டாந்தடிக்குப் பணிந்து விட்டால்
நம் கதி என்ன, எண்ணிப்பார்!
போராடும் வக்கீல்களுடன்
அணி அணியாக ஒன்று சேர்!

நீதிபதிகள் பயந்தாலென்ன
நீதிமன்றம் தோற்றாலென்ன?
மக்கள் மன்றம் வென்று காட்டும்!

வழக்குரைஞர் போராட்டத்தின்
வெற்றியென்பது நம் வெற்றி

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

தொடர்புடைய பதிவுகள்:

ஈழம்: போலீசு இராச்சியமாகிறது தமிழகம்! கருத்துப்படம், முழக்கங்கள்!

தமிழக போலீசை காக்க ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் !

நீதிமன்றத்தால் தேடப்படும் போலீசு குற்றவாளிகள் ! படங்கள் !!

போலீசு வக்கீல் மோதலல்ல ! ஈழத்துக்கு எதிரான பார்ப்பன பாசிச பேயாட்டம் !!

வழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி !

தமிழிஷ் பயணாளர்கள் உங்கள் தமிழிஷ் கணக்கு விவரங்களை கொண்டு இன்ட்லியில் வாக்களிக்கலாம்

46 Comments

  1. http://truetamilans.blogspot.com/2009/03/blog-post_18.html

    வழக்கினை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத் தீர்ப்பாக விசுவநாதனையும், கூடுதலாக ‘களப்பணியில்’ ஈடுபட்ட இணை ஆணையர் ராமசுப்பிரமணியத்தையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் அன்றைய தடியடியில் ஈடுபட்ட காவல்துறையினர் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் தங்களது போராட்டத்தினை விலக்கிக் கொண்டு உடனடியாக மக்கள் சேவைக்கு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

    இந்த உத்தரவினை ஏற்று உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சஸ்பெண்ட் உத்தரவு அரசுத் தரப்பில் இருந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடவே இந்த அரசு நீதித்துறையை மதித்துச் செயல்படும் என்று வழக்கமான அறிக்கையையும் வெளியிட்டுள்ளார் முதல்வர்.

    இதற்காகத்தானே வழக்கறிஞர்கள் இத்தனை நாட்களாய் நாயாய் தொண்டை கிழிய கத்திக் கொண்டிருந்தார்கள். போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். இதனால் எத்தனை பேர்களுக்கு பாதிப்பு..? எத்தனை எத்தனை சிரமங்கள் மக்களுக்கு..? ஏன் இதனை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் இவர்கள் செய்வார்களா..? அன்றைக்கு கண் முன்னே நடந்ததை பார்த்த பின்பும் அதனைச் செய்யாமல், தவறு செய்தவர்களை இத்தனை நாட்கள் தாங்கிப் பிடித்தது இந்த அரசுக்குத் தவறாக தெரியவில்லையா..?

    வழக்கறிஞர்களோ, “இந்த வாய்ப்பை நழுவவிட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது.. எங்களையே தாக்கிவிட்டோமே என்கிற மிதப்பில், பொதுமக்களை மேலு்ம் வதைப்பார்கள் போலீஸார்..” என்கின்றனர். இந்தக் கூற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு. இது பற்றி நான் முன்பு எழுதிய பதிவிலேயே ‘போலீஸார் இந்த ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்ததைப் போலத்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள்..’ என்று குறிப்பிட்டிருக்கிறேன்..!

    இந்த இடைக்கால உத்தரவைக் கேட்டு நீதிமன்றத்திற்கு எதிரே பட்டாசு கொளுத்தி மகிழ்ந்துள்ளனர் வழக்கறிஞர்கள். “இதுக்குத்தான்.. இதுக்காகத்தான் நாங்க இவ்வளவு கஷ்டப்பட்டோம்..” என்கிறார்கள்.

    Posted on 19-Mar-09 at 2:14 pm | Permalink
  2. துரை சண்முகம்

    வெல்லட்டும் பேரணி ! உழைக்கும் மக்களோடு சேரு நீ !!

    ஒப்புக்கு அறிக்கைவிட்டு
    ஒதுங்கிக் கொண்ட ஓட்டுக் கட்சிகள்,
    இரத்தம் கசிந்து, சித்தம் கலங்கியபோதும்
    நாங்கள் ஆளும் வர்க்கத்தின் மண்டையோடுகள் எனத்
    தெளிவாக வசனம் பேசும் நீதிபதிகள்,
    உண்மைகளுக்கு பாடைகட்டிய
    போலீசின் காலடிக்கு ‘கிருஷ்ணா’ர்ப்பனங்கள்
    ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் மக்கள்.
    இந்தச் சூழலிலும் … சொந்த நலனிழந்து
    போலீசின் கொலைவெறிக்கு எதிராக
    போராடும் வழக்குரைஞர்களே
    உங்கள் உணர்வு பெரிது! மிகப்பெரிது!

    மண்டையைப் பிளந்தபோதும்…
    மார்பினில் மிதித்த போதும்…
    பெண்களை வதைத்த போதும்…
    பேசிய வசவுகளால் அவர்களின்
    உடல்தோல் உரித்த போதும்…
    மண்டியிட்டு பணியாமல்,
    மானத்தை விலைபேசாமல்…
    தண்டனை வழங்கு போலீசுக்கு! என
    கண்டனம் முழங்கும் வழக்குரைஞர்களே
    உங்கள் உறுதியைப் பார்த்து
    தமிழகமே! தலை நிமிரட்டும்!

    முத்தமிழ் வித்தகர்கள் முடங்கிக் கிடக்கையில்
    அஞ்சா நெஞ்சர்களும், தளபதிகளும், அண்ணன்களும்,

    தர்ப்பை கட்டுக்கு அடங்கிக் கிடக்கையில்…
    தமிழினப் பகையை பார்த்த மாத்திரத்தில்
    சுப்பிரமணியசாமிக்கே! சொரணை வரும்படி
    கொடுத்தீர்களே! இதுவன்றோ தமிழ்வீரம்!
    யாராவது இந்த பார்ப்பன கூ முட்டையை
    பதம் பார்க்க மாட்டார்களா! என
    தமிழகமே ஏங்கிக் கிடந்த வேளையில்
    வாராது வந்த்தல்லவா வழக்கறிஞர் முட்டை!

    கலைஞர் முட்டை போட்டதா பெரிது

    வழக்குரைஞர் முட்டை வீசியதல்லவா சிறப்பு
    உங்கள் முட்டை தமிழ் இனத்துக்கே சத்துணவு!

    ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் போராடும்

    எல்லோரையும் ஒடுக்கி விட்டோம்
    சூரப்புலிகள் அனைவரையும்
    ஓட்டு வேட்டைக்கு திருப்பி விட்டோம்…என
    இறுமாந்திருக்கிறது அரசு…
    எங்களை என்ன செய்ய முடியும்?
    எக்காளமிடுகிறது போலீசு

    தடியடிக்கு தணியுமா விடுதலை தாகம்
    உழைக்கும் மக்களுடன் சேர்ந்தால்
    எதுவும் முடியாமலா போகும்!

    - துரை. சண்முகம், ம.க.இ.க.

    Posted on 19-Mar-09 at 4:09 pm | Permalink
  3. தடியடியில் ஈடுபட்ட காவல்துறையினர்

    அனைவரையும் சஸ்பெண்ட்செய்ய
    வேண்டும்.

    கண்டனம் முழங்கும் வழக்குரைஞர்களே
    உங்கள் உறுதியைப் பார்த்துதமிழகமே! தலை நிமிரட்டும்!
    போலீசுஇராச்சியம் மண்டையைப் பிளக்கதான்
    லாயக்கு………

    Posted on 19-Mar-09 at 4:30 pm | Permalink
  4. இந்த போராட்டம் பல தளங்களில் வேலை செய்திருக்கிறது.

    தன்னைப் பற்றி ஏதாவது சொல்லிவிட்டால், தானே முன்வந்து விசாரிக்கிற உச்சநீதி மன்றம், இந்த விசயத்தில் மெளனமாய் இருக்கிறது.

    ஒவ்வொரு போராட்டமும் மக்களுக்கு பல அனுபவங்களை பெற்றுத்தருகிறது. நாம் தாம் அதை மறந்து போகிறோம்.

    Posted on 19-Mar-09 at 5:33 pm | Permalink
  5. pakutharivu

    The TN lawyers made history. Around 75,000 lawyers participated in the ‘LONG MARCH’ today at Chennai. This is the dead bell to the Karuna’s police regime.

    Posted on 19-Mar-09 at 5:56 pm | Permalink
  6. pakutharivu

    The TN lawyers made history. Around 75,000 lawyers participated in the ‘LONG MARCH’ today at Chennai. This is the dead bell to the Karuna’s police regime.

    Posted on 19-Mar-09 at 5:57 pm | Permalink
  7. பகத்.

    பல்லாயிரக்கனகானோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது… வக்கீல்களுக்கு எதிரான அரசின் செயல் செயல், ஈழ மக்களின் மீதான நேரடி துரோகம்…

    Posted on 19-Mar-09 at 8:49 pm | Permalink
  8. பீர் முகம்மது

    முழக்கங்கள் பிரமாதம். தோழர் முகிலனின் ஓவியம் அருமை. மற்றொரு ஓவியமும் நன்றாக இருந்த்து. இந்தப் போராட்டத்தின் வரலாறை வினவை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தோழர்களே நீங்கள் செய்வது அருமையான பணி. இதே போல தொடர்ந்து தமிழகத்தில் நடக்கும் பல போராட்டங்களின் உண்மை நிலையை உலகுக்கு அறியத்தாருங்கள். இறைவன் உங்களுக்கு துணையிருப்பார்

    Posted on 19-Mar-09 at 10:44 pm | Permalink
  9. ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து
    கடைசியாய் மனிதனைக்கடித்து
    அல்ல அல்ல
    அது உருவாக்கப்பட்டதே மனிதனை
    கடிக்கத்தான்

    இழப்பதற்கு ஏதுமில்லா
    வர்க்கம் கேள்விப்பட்டிருப்போம்
    ஆனால் கடிப்பதற்கே
    மண்டையை உடைப்பதற்கே
    உருவாக்கப்பட்டவர்க்கம்
    தெரியுமா? தெரியாமலென்ன
    தெரிந்தாலும் வார்த்தைகள்
    மறைகின்றன……

    பயந்தாலென்னா
    மறைந்தாலென்ன வெறிநாய்களின் வரலாறு
    எங்கள் ரத்தத்தில் எழுதப்படுகின்றன
    அவைகளின் எஜமானர்களுக்காக
    என்பது மட்டும் உண்மை

    வாச்சாத்திமலையும் பாலமலையும்
    அசையாமல் நிற்கிறது
    தன் பிள்ளைகளின் சித்திரவதை
    அலறல்களை கேட்டு கேட்டு
    அவை மரத்து போய்விட்டன…..

    யாரும் பிறக்கையில்
    கோழையில்லை
    வீரனுமில்லை
    சொறிநாயுமில்லை
    வெறிநாயுமில்லை

    அதிகாரவர்க்கம்
    கட்டளையிடுகிறது
    காசில்லாதவன் கோழை
    பணம் படைத்தவன் வீரன்
    எலும்புக்கு அலைபவன் வெறிநாய்….

    வரலாற்றை நாம் கொஞ்சம் மாற்றி
    எழுதுவோம் வீரர்களை
    கோழைகளாகிய
    நாம் இந்த
    “வீரர்களை” மோதிவீழ்த்துவோம்
    வீரர்களோடு அவர்களின்
    செல்லப்பிராணிகளுக்கும்
    இடம் கொடுப்போம் சொர்க்கத்தில்

    Posted on 19-Mar-09 at 10:58 pm | Permalink
  10. - மா.சே -

    அருமை தோழர் முகிலன். வாழ்த்துக்கள். தொடர்ந்து வரையுங்கள்.

    வரலாறு காணாத பேரணி. இந்தப்போராட்டாம் தோல்வியில் கூட முடியலாம் ஆனால் இதை இந்த அளவுக்கு வளர்த்தெடுத்த்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. சமரசமில்லாத அவர்களின் அனுகுமுறையே இதற்கு காரணம். தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புகளும் வளர்ந்துள்ளனர் என்பதற்கு மற்றுமொரு அத்தாட்சி

    Posted on 20-Mar-09 at 12:33 am | Permalink
  11. அர டிக்கெட்டு !

    இதப்படிங்க மொதல்ல…

    தோழர்.மருதையன் ஆனந்த விகடன் பேட்டி

    http://tamilthesiyam.blogspot.com/2009/03/blog-post_7491.html

    Posted on 20-Mar-09 at 1:34 am | Permalink
  12. வரலாறு சொல்லு்ம்.

    தமிழக அரசியல் கலக்காத பேரணி
    ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் போராடும்
    எல்லோரையும் மடையராக்கப்பார்த்தான் சு சாமி.!!!!!!!

    தடியடியில் ஈடுபட்ட காவல்துறையினர் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
    வரலாறு காணாத போராட்டாம்.
    மக்கள் சக்தியாக வரலாற்றை படைப்போம்.
    தமிழ் வாழ்க!

    Posted on 20-Mar-09 at 3:32 am | Permalink
  13. தோழகளுக்கு,

    இது கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாத செய்தி

    தில்லை நடராசன் உண்டியல் திறப்பு

    ஒரு மாதத்தில் மட்டும் 1,92000 ரூ வசூல் என அறிவிப்பு

    பார்ப்பன தீட்சிதர் காட்டிய கணக்கு ஒரு வருடத்திற்கு ரூ39000 மட்டுமே

    Posted on 20-Mar-09 at 2:19 pm | Permalink
  14. VAS

    /////// வீட்டையும் நாட்டையும் முன்னேற வைக்க எத்தனையோ அருமையான தொழில்கள் இருக்கும் போது எதற்கும் உதவாத பூசை வழிபாடு செய்துவைக்கும் காட்டு மிராண்டி காலத் தொழில் செய்வதற்குப் போய் போராடுகிறார்களே என்ற எண்ணத்தில் பிறந்தது அது.

    போகட்டும். சம உரிமைக்கு ஆசைப் பட்டார்கள். இப்போது கிடைத்து விட்டது/////////
    good comment..

    Posted on 20-Mar-09 at 2:57 pm | Permalink
  15. again we seem to get distracted from the original post. this does not augur well for a productive discussion, maybe this is what ‘they’ expect.

    Posted on 20-Mar-09 at 3:45 pm | Permalink
  16. “வரலாறு காணாத பேரணி. இந்தப்போராட்டாம் தோல்வியில் கூட முடியலாம் ஆனால் இதை இந்த அளவுக்கு வளர்த்தெடுத்த்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. சமரசமில்லாத அவர்களின் அனுகுமுறையே இதற்கு காரணம். தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புகளும் வளர்ந்துள்ளனர் என்பதற்கு மற்றுமொரு அத்தாட்சி”

    ஆம் தோழர் மா சே சொல்வது மெய் தான். முத்துக்குமார் இறுதி நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகளில் அதை நான் உணர்ந்தேன்.
    இது வழக்குறைஞர்களின் போராட்டமாக மட்டுமல்லாமல் மக்களின் போராட்டமாக தொடரவேண்டும்.

    தோழமையுடன்
    செங்கொடி

    Posted on 20-Mar-09 at 4:21 pm | Permalink
  17. verummaramum

    நாடகம்!
    எவ்வளவு நடிகர்கள்?
    அடப்பாவிகளா!
    நேற்று வரை நமக்கு குரல்….ஆனால், இன்ட்று
    பதவி மோகம்…..
    தமிழ் நாட்டு தமிழர்கள் என்ன செய்ய போகிரோம்?

    Posted on 20-Mar-09 at 7:37 pm | Permalink
  18. For a change, இந்த பதிவில் எனக்கு நிறைய உடன்பாடு இருக்கிறது. வழக்கம் போல சில வேறுபாடுகளும் இருக்கின்றன.

    வக்கீல்கள் அத்து மீறலுக்கு போலீஸ் தண்டிக்கப்பட வேண்டும் என்று போராடி ஓரளவு வெற்றி கண்டிருக்கிறார்கள். போராட்டம் நடத்த அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கின்றன. மக்களுக்கு கஷ்டம் என்பதெல்லாம் சரிதான், ஆனால் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்க முடியுமே தவிர, ஆணை இட முடியாது, கூடாது. போலீசுக்கு கண் துடைப்புக்காக கூட தண்டனை கிடைக்காது என்று நினைத்தேன், பரவாயில்லை.

    // ஒரு கொலைகாரன் கூட சரணடைவதற்காக நீதி மன்ற வளாகத்திற்குள் நுழைந்து விட்டால், அவனைக் கைது செய்ய போலீசார் நீதிமன்றத்துக்குள் நுழைவதில்லை. //
    தெரியாத விஷயம். இது சட்டமா, convention-ஆ? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

    // காவல் நிலையத்தை போலீசே தீ வைத்துக் கொளுத்தி விட்டு அதற்கும் வக்கீல்கள் மீது வழக்கு போட்டிருக்கிறது. //
    வினவே கூட இப்படி இது வரை சொல்ல வில்லை. இங்கே பலரும் அது ஒரு எதிர்வினை, அதில் என்ன தவறு என்றெல்லாம் கேட்டீர்கள். :-) மு, பு.ஜ.தொ.மு, வி.வி.மு இதெல்லாம் என்ன என்று தெரியாது. வினவு குழுவினர் என்ன நினைக்கிறீர்கள்? இது உண்மையா, பொய்யா?

    // எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயார். நீ நடத்திய ரவுடித்தனத்துக்கு மட்டும் வழக்கு கிடையாதா? ” என்று கேட்கிறார்கள் வக்கீல்கள். //
    சமீபத்தில் த்ராஃபிக் ராமசாமி என்பவர் வக்கீல்களை எதிர்த்து ஒரு வழக்கு பதிவு செய்ததாகவும் அவரை வக்கீல்கள் தாக்கியதாகவும் படித்தேன். இவர் பதிவு செய்த வழக்கு தவறு என்பது என் கருத்து. ஆனால் போலீஸ் அத்து மீறலை எதிர்த்து போராடுபவர்களின் அத்து மீறல்கள் இங்கே கண்டுகொள்ளாமல் விட்டுவிடப்படுகின்றன. நீ நடைத்திய ரவுடித்தனத்துக்கு வழக்கு கிடையாதா என்று கேட்டுக் கொண்டே ரவுடித்தனம் செய்வது வன்மையாக கண்டிக்கப்படவேண்டும். வினவு குழுவினர் என்ன நினைக்கிறீர்கள்?

    Posted on 21-Mar-09 at 12:21 am | Permalink
  19. pakutharivu

    //முட்டை எறிந்தார்கள். அடிவாங்கினார்கள்.//

    If you believe that a few lawyers accused of hurling eggs at Su. Swamy need to be hanged-
    shall we now murder litigants because of a hooligan few.

    Read this news:

    http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Five+jailed+for+hurling+slipper+at+SC+judge&artid=PtI0uwmFGSI=&SectionID=b7ziAYMenjw=&MainSectionID=b7ziAYMenjw=&SEO=Asok+Kumar+Ganguly,+Arijit+Pasayat,+Supreme+Court,&SectionName=pWehHe7IsSU=

    Five jailed for hurling slipper at SC judge

    IANS
    First Published : 20 Mar 2009 03:05:30 PM IST
    Last Updated : 20 Mar 2009 03:16:49 PM IST

    NEW DELHI: Four women and a man were sentenced to three months imprisonment Friday after one of them hurled a slipper at a Supreme Court judge.

    The dramatic incident took place when judges Arijit Pasayat, who clearly was the target, and Asok Kumar Ganguly were hearing a case related to a music school in Mumbai.

    A total of seven people associated with the school were standing in front of the judges when one of them suddenly flung the slipper at the judge but missed him.

    The shoe attack sparked a furore in the court complex.

    Judges Pasayat and Ganguly handed down the sentence for showing disrespect to the court.

    Court officials identified three of the women who were sentenced as Leila David, Annet Kotian and Kavita Murali.

    Posted on 21-Mar-09 at 7:29 am | Permalink
  20. dinesh

    Do not show lawyers as innocent people. whole tamil nadu knows their character and attitude. They call them as rowdy lawyers. If police takes action also you people blame them, if they do not also you people will blame. Rowdy Lawyers think that law is their sole asset and it is inside their pocket. They can push anybody to favor them. They know the loop holes. All knows our law does not have backbone. Verdicts always have contradictions. by either high court or supreme court. Don’t write one sided manner.

    Posted on 02-Apr-09 at 10:03 pm | Permalink
  21. சந்திரன்

    சரியாக சொன்னீர்கள் நொந்த குமார். உங்கள் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு. நான் கூட நீதிமன்றத்தை நம்பியிருந்தேன்…அவர்கள் தங்களை தாங்களை பார்த்துக்கொள்ள முடியாமல் போனதை பார்க்கும் வரை

    Posted on 19-Mar-09 at 7:36 pm | Permalink
  22. மணிகண்டன்

    உண்மை, பிரமித்து போனேன் அந்த கருஞ்சட்டைப் படையைக்கண்டு. ஒரு பொது நோக்கிற்கான போராட்டம்..எவ்வளவு துன்பம்…
    வாழ்க வழக்குறைஞர்கள்

    Posted on 20-Mar-09 at 8:54 am | Permalink
  23. Viththakan

    SJR.

    சு.சாமி சிதம்பரம் வழக்குக்காக நீதிமன்றம் வந்த போது தேவையில்லாத முட்டையடி.

    அதற்கு கைது செய்ய வந்த காவலர்கள் மீது வக்கீல்களின் முட்டாள் தனமான கல்லெறி.

    காவல் துறையின் காட்டு மிராண்டித்தனத்தில் வக்கீல்கள் மண்டை உடைப்பு.

    காவல்துறையில் அத்து மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி நடந்த போராட்டம் வெற்றி.

    இதுதான் நடந்த உண்மைகள்.

    உங்கள் பதிவின் உள்ளர்த்தம் சு.சாமி ஈழ ஆதரவு வக்கீல்களை எள்ளி நகையாடியபோது மக்கள் ஆதரவால் வக்கீல்களின் நிலைப்பாடு வெற்றி கண்ட மாதிரி எழுதி இருக்கிறீர்கள். சு. சாமி ஈழ ஆதரவு வக்கீல்களுக்கு எந்தத் தடையும் உருவாக்கவில்லை. இவர்கள் முட்டை எறிந்தார்கள். மண்டை உடை பட்டார்கள். மண்டை உடைத்தவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தார்கள். இப்போது வேலைக்குத் திரும்பப் போகப் போகிறார்கள்.

    ஈழ ஆதரவு வேலை நிறுத்தம் என்ன ஆச்சு? ஈழப் பிரச்சினை கோணத்தில் பார்த்தால் கடந்த ஒரு மாதமாக யாருக்கு வெற்றி?

    Posted on 20-Mar-09 at 8:58 am | Permalink
  24. வித்தகன்

    வித்த “கன்” -என்னத்த வித்தீங்களோ தெரியல?

    சொல்லிட்டாருப்பா வக்கீலுங்க யாரும் ஈழப்பிரச்சினைக்கு போராடவில்லையாம் கிருஷ்னா கம்சன் மண்டிக்கு பதில்ல வித்தகன் விக்குற கடய போட்டிருந்தா இன்னும் தெளிவா தீர்ப்பு வந்திருக்கும்ல

    Posted on 20-Mar-09 at 9:51 am | Permalink
  25. Viththakan

    கலகம்.

    வக்கீல்கள் சொதப்பிவிட்டார்கள் என்று சொல்வதில் உங்களுக்கு எங்கே மாற்றுக் கருத்து உள்ளது என்று கொஞ்சம் புரிய வைங்களேன்!

    கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் வேலைக்குப் போகாமல் எத்தனையோ போராடி இப்போது ராமசுப்பிரமணியனும், விஸ்வநாதனும் தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்டதும் கையிலும் தலையிலும் போடப் பட்ட கட்டுக்களோடு வேலைக்குத் திரும்பப் போகிறார்கள். இதில் இலங்கைத் தமிழர்களுக்கு இவர்களால் என்ன நடந்தது? முட்டை எறியாமல் இருந்திருந்தால் எடுத்திருந்த விஷயத்திற்குப் போராடியிருக்கலாமே!

    இதில் ஏதோ பெரிய வெற்றி போல இவர்கள் கெக்கெலி கொட்டுவது கேவலமாக இருக்கிறது. எடுத்த பிரச்சினை என்ன ஆச்சு?

    …. அடிப்பானேன் …. சுமப்பானேன்!

    Posted on 20-Mar-09 at 10:39 am | Permalink
  26. குமார்

    வித்தகன் ஈழ ஆதரவு வேலை நிறுத்தம் முடிந்து பணிக்கு வக்கீல்கள் திரும்பிய ஆன்று தானய்யா சுசாமியும் முட்டையடியும்.

    //சு.சாமி சிதம்பரம் வழக்குக்காக நீதிமன்றம் வந்த போது தேவையில்லாத முட்டையடி.//

    அவர் ஈழ ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களை கேவலமாக பேசியதால் முட்டையால் அடிக்கப்பட்டார்

    //அதற்கு கைது செய்ய வந்த காவலர்கள் மீது வக்கீல்களின் முட்டாள் தனமான கல்லெறி.//

    இது என்ன இவர் சோ மாதிரி பேசுகிறார். போலீசு மிருகத்தனமாக
    தாக்க துவங்கிய பின்னரே தற்காப்புக்காக கல்லெறிந்தனர் வக்கீல்கள்.

    வக்கீல்கள் அவர்கள் பங்குக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்துவிட்டார்கள். உங்களை போன்றவர்கள் நீ ஏன் போராட்டம் செய்யல என்று கேட்பதற்கு பதில், கொஞ்சமேனும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்களேன். இல்லை போராடுபவர்களை பராமரிக்க உதவுங்கள். கம்பீட்டர் முன்னால் உக்காந்து கேள்வி கேட்பது ரொம்ப சுலபம்.

    Posted on 20-Mar-09 at 10:53 am | Permalink
  27. Viththakan

    இல்லை குமார். இவர்கள் முட்டை எறிந்து நேரத்தையும் போராட்டத்தில் இருந்த உக்கிரத்தையும் வீணடித்து விட்டார்கள்.

    சு.சாமிக்குப் போயி முக்கியத்துவம் கொடுக்காமல், நீதிமன்றத்தை மதித்து இது போன்ற முட்டாள்தனத்தில் உணர்ச்சி வசப் பட்டு இறங்காமல் இருந்திருந்தால் கடந்த ஒரு மாதத்தில் கத்திய கத்தலும், அழுத அழுகையும் இலங்கைத் தமிழருக்காக இருந்திருக்கும். இரண்டு போலீஸ் ஆஃபீஸர்களை சஸ்பெண்ட் செய்த திருப்திக்கும் மேலாக உருப்படியாக ஏதாவது செய்திருக்கலாம்.

    முட்டை எறிந்தார்கள். அடிவாங்கினார்கள். அடித்தவர்களை வேலை நீக்கம் (தர்காலிகம்) செய்ய வைத்தார்கள். இப்போது வேலைக்குப் போகிறார்கள். உணர்ச்சிவசப் பட்டு தடுமாறியதில் எடுத்துக் கொண்ட பிரச்சினை போயே போச்சு. இப்போது மீண்டும் இலங்கத் தமிழர்களுக்காக வேலை நிறுத்தம் செய்யப் போகிறார்களா?

    முட்டை எறிந்த முட்டாள்களால் சு.சாமி போன்ற நயவஞ்சகர்களுக்கு வெற்றி கிடைத்தது அநியாயம்.

    Posted on 20-Mar-09 at 11:46 am | Permalink
  28. Viththakan

    //இதற்காகத்தானே வழக்கறிஞர்கள் இத்தனை நாட்களாய் நாயாய் தொண்டை கிழிய கத்திக் கொண்டிருந்தார்கள். போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள்.//

    //வழக்கறிஞர்கள். “இதுக்குத்தான்.. இதுக்காகத்தான் நாங்க இவ்வளவு கஷ்டப்பட்டோம்..” என்கிறார்கள்.//

    இப்போது என்ன, போராட்டம் முடிந்து விட்டதா? வக்கீல்களுக்கு வெற்றியா?

    இந்தப் பிரச்சினையை ஆரம்பித்த தவறு வக்கீல்களுடையது. முட்டை எறிந்து அசட்டுத் துணிச்சலைக் காட்டுவதற்குப் பதில் ஒழுங்காக இத்தனை சக்தியையும் நேரத்தையும் இலங்கையில் போர் நிறுத்தத்திற்காக மட்டும் செலவிட்டு இருக்கலாம்.

    தவறு செய்த காவலர்களுக்கு தண்டனை கிடைத்ததில் வரும் சந்தோஷம் இந்தப் பிரச்சினையை ஆரம்பித்து வைத்த வக்கீல்களை நினைத்தால் கோவமாக மாறுகிறது.

    Posted on 20-Mar-09 at 11:54 am | Permalink
  29. Viththakan

    பிராமணர் இல்லாதவர்கள் அர்ச்சகர் ஆவதில் எனக்கு பெரும் மனவருத்தம் உண்டு.

    வீட்டையும் நாட்டையும் முன்னேற வைக்க எத்தனையோ அருமையான தொழில்கள் இருக்கும் போது எதற்கும் உதவாத பூசை வழிபாடு செய்துவைக்கும் காட்டு மிராண்டி காலத் தொழில் செய்வதற்குப் போய் போராடுகிறார்களே என்ற எண்ணத்தில் பிறந்தது அது.

    போகட்டும். சம உரிமைக்கு ஆசைப் பட்டார்கள். இப்போது கிடைத்து விட்டது. இனிமேல் ஊழல் நடக்காதபடி அவர்கள் இத்தொழிலை செய்ய வேண்டும்.

    பணத்தாசை முன் பார்ப்பனன் சூத்திரன் எல்லோரும் ஒன்றுதான் என்ற கருத்து பரவாதபடி நடந்து கொள்ள வேண்டும். அதுதான் இந்த நிகழ்வை (“வெற்றியை” என்று சொல்ல என் நாத்தீக மூளை ஒப்ப மாட்டேனென்கிறது) ஒரு சமூக மாற்றத்திற்கு அஸ்திவாரமாக அமைய வழிவகுக்கும். இத்தோடு இத்தனை நாட்கள் பரம்பரையாக கோவில் சம்பந்தப் பட்ட தொழில் செய்து வந்த பிராமணக் குடும்பங்களும் வேறு துறைகளில் முன்னேற ஆரம்பிக்க வேண்டும். இதனால் எல்லாத் தரப்பினருக்கும் நல்லது நடக்க வாய்ப்பு இருக்கிறது.

    Posted on 20-Mar-09 at 2:29 pm | Permalink
  30. Viththakan

    விஷயத்தை விட்டு ரொம்ப தூரம் போய்விட்டது பேச்சு. நானும் அதற்குக் காரணம் என்பதால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் topic – கிற்கு வர முயற்சிப்போமா?

    Posted on 21-Mar-09 at 2:39 pm | Permalink
  31. அர டிக்கெட்டு !

    வித்தகன்! சிதம்பரம் கோவிலில் இன்னமும் அந்த சைடு கொள்டை தீட்சிதர்கள் தான் அர்ச்சகர்.

    பெரியாருடைய நாத்திக மூளைக்கு அனைத்து சாதியும் அர்ச்சகராகும் உரிமை தவறாக படவில்லை… உங்களுக்கு ஏன் படுகிறது?

    பார்ப்பானை பிராமணன் என்று கூறிவதை பெரியாரின் நாத்திக மூளை கேவலமாக எண்ணியது….

    ம்ம்ம் என்னவோ நடக்குது….. தோழர்.கலகம் உங்களுக்கு புரியுதா?

    Posted on 20-Mar-09 at 3:28 pm | Permalink
  32. Viththakan

    //பெரியாருடைய நாத்திக மூளைக்கு அனைத்து சாதியும் அர்ச்சகராகும் உரிமை தவறாக படவில்லை… உங்களுக்கு ஏன் படுகிறது?//

    ஏன் அர டிக்கெட்டு… முதல் பத்தி படிச்சிட்டு மறு மொழி எழுதிடுவீங்களா? இரண்டாவது பத்தி படிச்சிருந்தா புரியுமே!

    Posted on 20-Mar-09 at 4:32 pm | Permalink
  33. தோழர்,

    அவரு பெரியாஸ்டாம் அப்படி சொல்லுறது தான் புரியல

    ஒண்ணு நல்லா புரியுது அவரு வித்தகன் -

    Posted on 20-Mar-09 at 4:59 pm | Permalink
  34. அர டிக்கெட்டு !

    முழுவதும் படித்துவிட்டுதான் ஏழுதினேன். நேரம் கிடைக்கும்போது பதிலளியுங்கள் நண்பரே

    Posted on 20-Mar-09 at 5:03 pm | Permalink
  35. VAS

    TO
    Mr.Rudhran/ Vinavu team
    I accept my mistake of acknowledging Mr.Vithagan’s in this post. (But i like his wordings hence i put my comment) I should not be instrumental in deviating the original post. But this news ( chidambaram dikshithar) was registered by Mr.Kalagam in this post. Hence the deviation is now started…. Request to vinavu team, for this type of news, you can create general space for everybody to comment. But for specific posts, you can advise all the people to stick on to the particular subject. Often i am also seeing most of the discussions trapping into brahamanism/caste etc… only.

    Posted on 20-Mar-09 at 5:02 pm | Permalink
  36. தோழர்,

    எனக்கு வித்தகன் பதிலை படிக்கும் போது விட்த்ல பதில படிக்குற
    மாறியே ஒரு பீலிங்.

    பாப்பான்னு சொல்லாம பாப்பான எதிர்க்குற கோஷ்டி அவுங்க தான.நம்ம த.தேபொக கூட சிதம்பரத்துல நெடுமாமாவ கூட்டிட்டு வந்து மீட்டிங் போட்டாங்க அப்ப பாப்பான்னு ஒரு வார்த்த பேசல.

    எப்படியோ எல்லாம் பெரியாரிஸ்டாம் அட நொம்புங்கப்பா .

    தன்ன அறிவாளியா காட்ட பெரியார் பேர சொல்லி ஏமாத்திகிட்டு திரியுறாங்க.அவுங்க வேலையே விவாதத்த திசை திருப்பிவிடுறதுதான்.இப்புடித்தான் மதிமாறன் தளத்துல கோழிக்கரையான் பூந்து நல்ல விவாதத்தையே கெடுத்து விட்டு ஜாலியா போயிட்டாரு.

    இவங்க வேலையே இதுதான்.அதையெல்லாம் ஒண்ணும் கண்டுக்காதீங்க…………

    Posted on 20-Mar-09 at 5:23 pm | Permalink
  37. Viththakan

    நண்பரே! இல்லாத விஷயம் என்பதால் இறைவழிபாடு சம்பந்தப்பட்ட போராட்டத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை. கடவுளை நம்புவதால் தானே தான் உயர்ந்த சாதி என்றும் மற்றவர்களை தாழ்ந்த சாதி என்றும் ஒரு பிரிவினரால் மற்றவர்களைப் பிரிக்க முடிந்தது? தாழ்த்தப்பட்டவர்களாக கருதப் படும் மக்கள் கடவுளை ஒதுக்கி வைத்தால்தான் அவர்களை மதச்சாயம், சாதிச்சாயம் பூசி அவமானப் படுத்துவது நிற்கும். அதனால் தான் கோவிலில் பூசை செய்யும் தொழிலை நான் உயர்வாக மதிக்கவில்லை. கடவுள் நம்பிக்கையைத் தூக்கி எறிந்து விட்டு மனித சமுதாயம் ஒன்றிணைய வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் எல்லா மனிதர்களும் சமம் என்ற அடிப்படையில் பிராமணார் அல்லாத சாதியினர் தான் நாடியதை அடைந்ததில் எனக்கு கண்டிப்பாக மகிழ்ச்சியே. அவர்கள் கோவில்களை நிர்வாகிக்கட்டும், பூசை செய்யட்டும். ஆனால் இதைவிட, அவர்கள் தொழிலதிபர்களாகவும் மென் பொருள் வல்லுனர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் இப்போது இருப்பதை விட அதிகமாக வரும் நாளில் இன்னும் மகிழ்ச்சி அடைவேன்.

    நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் அல்ல. என்னை பெரியாரிஸ்ட் என்று எப்பொழுதும் சொன்னதே இல்லை. என்னுடைய நாத்தீகம் என்னுடைய தனிப்பட்ட கருத்து. இது உருவாக பெரியாரின் கருத்துக்களும் உதவியுள்ளன. ஆனால் அவர் மட்டுமே எனக்கு ஆசான் என்று என்னால் சொல்லிக் கொள்ள முடியாது.

    முடிந்தவரை பார்ப்பான் என்றும் சூத்திரன் என்றும் பேசாமல், அது சம்பந்தப் பட்டவர்களை தாக்குகிறது என்பதால், பிராமணர் என்றும் பிராமணர் அல்லாதவர்கள் என்றும் எழுத முயற்சிக்கிறேன். சில வேளைகள் அழுத்தம் குடுக்க வேண்டி அந்தப் பதங்களை உபயோகப் படுத்தியும் இருக்கிறேன். உங்களை திருப்தி படுத்த பார்ப்பான் என்று திட்ட நான் தயாராக இல்லை. உண்மையான நாத்தீகம் பார்ப்பனீயத்தை மதிக்காது என்பதை நான் உணர்ந்துள்ளேன். அதற்காக அந்த சாதியில் பிறந்த எல்லோரையும் திட்ட நான் தயாராக இல்லை. அதுவும் சாதி பார்க்கும் பழக்கமாகிவிடும் என்பதால்.

    சு.சாமியை எனக்குப் பிடிக்காவிட்டாலும் முட்டை வீசியது தவறென்று சொல்லியிருக்கிறேன். சாதி பாகுபாடு பார்ப்பதில்லையென்றாலும் தாக்கும் வகையில் பதங்களை உபயோகிக்க விரும்புவதில்லை. இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு கிடைக்க வேண்டும் என்று நினைத்தாலும் புலிகள் தமிழகத்தில் நடந்து கொண்ட விதத்தால் அவர்கள் மேல் மரியாதை இன்றி இருக்கிறேன். இந்தக் கருத்துக்களெல்லாம் உங்களுக்கு பாதி சரியாகவும் பாதி தவறாகவும் படலாம். ஆனால் ஒரே குரலில் பேசுவதற்கா இணைய தளம்? உங்களிடம் நானும் என்னிடம் நீங்களும் கற்றுக் கொள்ள விஷயம் இல்லாமலா போய்விடும்?

    Posted on 20-Mar-09 at 5:55 pm | Permalink
  38. என்னனாக அரை டிக்கெட் அரைத் தூக்கத்தில் இருக்கும் எனக்கே புரிகிறதே! அவர் நாத்திகர், போயும் போயும் பூஜை செய்யும் தொழிலுக்காகவா போராட்டம் என்று நினைக்கிறார்.

    Posted on 21-Mar-09 at 12:27 am | Permalink
  39. கவனத்தை திசைதிருப்பவேண்டும் என்றோ அல்லது விவாதத்தை மடை மாற்ற வேண்டும் என்பதற்காக சிதம்பரம் செய்தியை பதியவில்லை, இது ஒரு முக்கிய செய்தி தமிழர் வரலாற்றின் முக்கிய போராட்டத்தின் விளைவாகவே கோயில் அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.மேலும் ஒரு வருடத்தில் 39000 மட்டுமே வந்ததாக பார்ப்பன தீட்சிதர் கணக்கு காட்டினர், ஆனால் மாதம் 192000 ரூபாய் ஒரு மாதத்தில் வந்திருக்கிறது.இந்த அயோக்கியத்தனத்தை தோழர்களுக்கு தெரிவிக்கவே இங்கு செய்திபதியப்பட்டது,மேலும் செய்திகள் மற்றவர்களை சென்றடைய காலத்தாமதம் ஏற்படுகிறது.

    விவாதக்களத்தில் இருப்போருக்கு மற்ற நிகழ்வுகள் தெரியவாய்ப்பில்லை
    விவாதத்தில் இருப்போருக்கு தற்போதைய உடனடி செய்திகளை தெரிவிக்கவே இங்கு அச்செய்தி பதியப்பட்டது.

    Posted on 20-Mar-09 at 7:57 pm | Permalink
  40. அரை டிக்கெட்டு !

    மத்தியான நேரத்தில் என்ன தூக்கம் RV.

    பிரச்சனை என்னவென்றால் சிதம்பரத்தில் அர்ச்சகராவதற்கான போராட்டமே அல்ல… கோவில் தீட்சிதரின் சொத்தல்ல மக்கள் சொத்து எனவே அதை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் கலகம் எழுதிய விடயம் தீட்சிதர்கள் இதுவரை செய்த ஊழல் கணக்கை பற்றியது…இவர் திடீரென்று சம்பந்தமேயில்லாமல் இப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதில் மனவருத்தம் உண்டு என்கிறார்.

    நாத்திகவாதி என்பவன் கடவுளை மறுப்பவன்தான். ஆனால் அதோடு அவனுடைய கடமை முடிவதில்லை. கடவுளிடமிருந்து மக்களை மீட்டால் போதுமா? அந்த கடவுளை வைத்து பொம்மலாட்டம் நடத்தும் மத நிறுவனங்களிடமிருந்து கடவுளை மீட்பதும் அவன் கடமையே. இந்திய நிலைமைகளில் சாதி அடையாளம் மத அடையாளத்தை விட வலிமையாக இருப்பதால் கூடுதலாக சாதியத்துக்கெதிரான போராட்டமும் வந்து சேருகிறது. இவைகளுக்கெல்லாம் வெளியே பொருளாதார பிரச்சனைகள் மக்களை மீண்டும் கடவுள்-மதம்-சாதி சுழற்சிக்குள் தள்ளுகிறது. அதையும் எதிர்கொள்ள வேண்டும். இதோடு, மொழி, இனம். இன்னபிற இன்னபிற

    ஆக ஒன்றை எதிர்ப்பதில் துவங்கினால் வரிசையாக அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். அதை ஒரு செயல் திட்டமாக வைத்து களத்தில் வேலை செய்யவேண்டும்.
    அந்த பார்வை வெறும் நாத்திகவாதியாக இருந்தால் கிடைக்காது. அதற்கு பொதுவுடமைவாதியாக இருக்க வேண்டும். அதனால்தான் சிதம்பரம் போராட்ட வெற்றியை சாதித்த்து நாத்திகர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் அல்ல. கம்யூனிஸ்டுகள்.

    நாத்திகம் ஒரு பெனேசியா அல்ல, அத்தோடு நின்றுவிட்டால் வறட்டுத்தனமே மிஞ்சும். அது ஒரு குழப்பமான முடிவுக்குதான் கொண்டு செல்லும்.

    Posted on 21-Mar-09 at 1:53 am | Permalink
  41. அரை டிக்கெட்டு !

    // காவல் நிலையத்தை போலீசே தீ வைத்துக் கொளுத்தி விட்டு அதற்கும் வக்கீல்கள் மீது வழக்கு போட்டிருக்கிறது. //
    நானும் சமீபத்தில்தான் இதை கேள்விப்பட்டேன். தமிழக காவல்துறை இதை செய்திருந்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

    அது சரி ஆர்வி.. கரண்ட அப்பேர்ஸ் தவிர மற்ற பதிவுகளில் பின்னூட்டம் போடக்கூடாதா? பாருங்கள் கலையரசன் ஆப்ரிக்காவை பற்றி எவ்வளவு அருமையான தொடர் எழுதிவருகிறார். அதை படித்தீர்களா? படித்தால் பின்னூட்டம் போடவும். உங்கள் அமெரிக்க அனுபவத்தை அங்கு இருக்கும் பத்திரிக்கைகள் செய்திகள் ஆப்ரிக்காவை பற்றி எழுதுவது, ஆப்ரோ அமெரிகன்ஸ் வாழ்நிலை போன்றவை எங்களுக்கு உதவி செய்யுமே.

    Posted on 21-Mar-09 at 1:58 am | Permalink
  42. Viththakan

    நாத்தீகம் என்றால் என்ன, நாத்தீகவாதியின் கடமை என்ன என்பதெல்லாம் உங்கள் வரைய’றைக்குள் அடங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். அது எனது தனிப்பட்ட choice. இதற்கெல்லாம் நீங்கள் கருத்துக் கொடுத்துக் கொண்டிருந்தால் “இந்து என்பவன் யார்” “முஸ்லீம் என்பவன் யார்” என்ற வகையில் இதுவும் broad strokes ல் விவரிக்கப் பட வேண்டிய நிலமைக்குப் போய் விடும். இந்தக் குறிப்பிட்ட கட்டுரைக்கும் கலகத்தின் பதிவிற்கும் உள்ள சம்பந்தத்தை விட எனது பதிலுக்கும் கலகத்தின் தகவலுக்கும் தொடர்பு அதிகம் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

    Posted on 21-Mar-09 at 9:41 am | Permalink
  43. அரை டிக்கெட்டு !

    ஓ! உங்களுக்கென்று ஒரு tailor-made நாத்திகவாதமா? இருக்கட்டும். கருணாநிதி கூட நாத்திகவாதிதானே!

    Posted on 21-Mar-09 at 1:32 pm | Permalink
  44. Nithil

    EXCELLENT

    Posted on 21-Mar-09 at 1:56 pm | Permalink
  45. Viththakan

    நாத்தீகம், நாட்டுப் பற்று, தனி மனித ஒழுக்கம் எல்லாமே எனக்கு tailor made தான். ஆட்டு மந்தையில் சேர மாட்டேன். மற்றவர்கள் சேருவதையும் விரும்ப மாட்டேன்.

    Posted on 21-Mar-09 at 2:35 pm | Permalink
  46. pakutharivu

    Fantastic…
    I pray God to give you a chance to enter in to a police station atleast once in your life time. Then you will know to whom you have to run for…

    Posted on 02-Apr-09 at 11:19 pm | Permalink

Post a Comment

Your email is never published nor shared.

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!