ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா – 6
ருவான்டா, 1994 ம் ஆண்டு, நவீன உலகை உலுக்கிய இன அழிப்பு நடவடிக்கை, ஒரு வானொலி அறிவிப்புடன் ஆரம்பமாகியது: “ஹூட்டு சகோதரர்களே! எம்மை இதுவரை காலமும் அடிமைகளாக அடக்கி ஆண்டு வந்த துட்சி கரப்பான் பூச்சிகளை அழிக்கும் காலம் வந்துவிட்டது.” இனவாத வெறுப்பை கக்கும் அந்த அறிவிப்பை செய்த “மில் கொலின்ஸ் சுதந்திர வானொலி” ஹூட்டு பாஸிச சக்திகளால் நடத்தப்பட்ட தனியார் வானொலி என நம்பப்படுகின்றது. ருவான்டாவில் நீண்ட காலமாகவே ஹூட்டு இனவெறி அரசியல் நடத்தி வந்த, பாஸிச “குடியரசு பாதுகாப்புக் கூட்டணி” (CDR) கட்சியுடன், ஆளும்கட்சி தலைமையிலான Interahamwe என்ற துணைப்படையும் சேர்ந்து கொண்டு சிறுபான்மை துட்சி இன மக்களை நரபலி வேட்டையாடிக் கொன்று குவித்தனர். ருவான்டாவின் தேசிய இராணுவம் பெரும்பான்மை ஹூட்டு இனத்தவரின் ஆதிக்கத்தில் இருந்ததால், இனப்படுகொலையில் இராணுவத்தின் நேரடி பங்களிப்பை மறுக்கமுடியாது.
ருவான்டாவின் பெரும்பான்மை இனமான ஹூட்டுக்களுக்கும், சிறுபான்மை இனமான துட்சிகளுக்கும் இடையிலான பகைமை, கசப்புணர்வு நீண்ட காலமாக நீறு பூத்த நெருப்பாக அடங்கிக் கிடந்தது. ருவான்டா பெல்ஜியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து, துட்சி சிறுபான்மையினருக்கு எதிரான இனக்கலவரங்களையும், துட்சி கிளர்ச்சியாளர்களின் அரசுக்கு எதிரான ஆயுதமேந்திய போராட்டத்தையும் சந்தித்துள்ளது. 1994 ல் பதவியில் இருந்த ஜனாதிபதி “ஹபியாரிமனா” வெளிநாட்டு அழுத்தம் காரணமாக, அமைதிப் பேச்சுவார்த்தைக்கும், அதிகாரப் பரவலாக்கத்திற்கும் சம்மதித்திருந்தார். இதனால் ஹபியாரிமனா ஒரு ஹூட்டு இன மிதவாதியாக, இன்னும் சொன்னால் “ஹூட்டு இனத் துரோகியாக”, பாஸிச சக்திகளால் கணிக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இருப்பினும் 1994 ம் ஆண்டு, ஏப்ரல் 6 ம் திகதி, தான்சானியாவில் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த ஜனாதிபதியின் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏவுகணையை ஏவியது யார் என்ற மர்மம் இன்று வரை துலங்கவில்லை. ஹூட்டு பாசிஸ்டுகள் சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்று அப்போது நம்பப்பட்டாலும், இன்றைய ருவான்டா அதிபர் “போல் ககாமே” யின் துட்சி கெரிலாக்களினது வேலை என்று பிரான்ஸ் குற்றஞ் சாட்டியது. (விமானி ஒரு பிரெஞ்சுக் காரர் என்பதால் பிரெஞ்சு நீதிமன்றம் விசாரணை நடத்தியது.)
எது எப்படி இருந்த போதிலும், ஜனாதிபதி ஹபியாரிமனாவின் மரணத்திற்குப் பின்னர் நாட்டில் அராஜகம் தலைவிரித்தாடியது. “துட்சி கிளர்ச்சியாளர்கள் எமது ஜனாதிபதியை படுகொலை செய்துவிட்டார்கள்.” என்ற செய்தி ஹூட்டு மக்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது. விரைவில் அதுவே முழு துட்சி இனத்தவருக்கும் எதிரான துவேஷமாக உருவெடுத்தது. நாடு முழுவதும் வீதித்தடைகள் போடப்பட்டன. ஹூட்டு ஆயுததாரிகளின் வீதித்தடைச் சோதனையின் போது மறிக்கப்பட்ட வாகனங்களில் இருந்து துட்சி இனத்தை சேர்ந்தவர்களை தனியாக பிரித்தெடுத்தனர். அடையாள அட்டையில், “இனம்: துட்சி” என்று குறிப்பிட்டிருப்பதே அவர்களை காட்டிக் கொடுக்க போதுமானதாக இருந்தது.
(அடையாள அட்டையில் இனத்தை குறிப்பிடும் வழக்கம் பெல்ஜிய காலனிய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.) பெண்கள், குழந்தைகள் என்று வேறுபடுத்தாது துட்சி என்ற காரணத்திற்காகவே கொலை செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சன்னங்களை வீணாக்குவது செலவு என்று, அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டனர். குடியிருப்புகளுக்கு சென்று துட்சிகளை கொலை செய்த படையினர், சுடப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளுக்கான செலவை அவர்களே பொறுப்பெடுக்க வேண்டும் என்று மரணத்திலும் கணக்குப் பார்த்தனர். சாதாரண மக்களும் கொலை வெறியாட்டத்தில் பங்குபற்றுமாறு ஊக்குவிக்கப்பட்டனர். ஒரு கொலையை செய்தவனுக்கு, இன்னும் இன்னும் கொலை செய்ய வேண்டும் என்ற வெறி ஏறியது. கொலை செய்யப்பட்டவர்கள் துட்சி இனத்தவர்கள் மட்டுமல்ல. இன நல்லிணக்கத்தை விரும்பிய, மிதவாத ஹூட்டுகளும் கொல்லப்பட்டனர். உலகம் மறுபக்கம் பார்த்துக் கொண்டிருக்கையில், சில மாதங்களுக்குள் எட்டு லட்சம் முதல் ஒரு மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
“இரண்டாம் உலகப்போரில் நடந்த யூத இன அழிப்பிற்குப் பின்னர், இன்று உலகம் ஆப்பிரிக்காவின் மாபெரும் இனப்படுகொலையை பார்த்தக் கொண்டிருக்கிறது.” என்று நெஞ்சை நெகிழ வைக்கும் உருக்கமான காட்சிகளை விபரித்துக் கொண்டிருந்த சர்வதேச தொலைக்காட்சிகளால் உலகின் மனச்சாட்சியை உலுக்க முடியவில்லை. சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப் பின்னர் உலகின் ஒரேயொரு வல்லரசாக திகழ்ந்த அமெரிக்கா, தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரித்தது. “குழந்தை வல்லரசான” ஐரோப்பிய ஒன்றியம் வாய்ச்சொல்லில் மட்டுமே தான் கெட்டிக்காரன் என்று காட்டிக் கொண்டிருந்தது. இவ்வாறு இனப்படுகொலையை தொடராது தடுக்க வழி இருந்த போதும், சந்தர்ப்பத்தை தவற விட்ட காரணம் என்ன? அரசியலில் நண்பர்கள் கிடையாது. நிரந்தர நலன்கள் மட்டுமே உள்ளன. பிரான்ஸ் அன்று ருவான்டாவை ஆட்சி செய்த ஹூட்டு இராணுவத்திற்கு பயிற்சி அளித்து, ஆயுதங்கள் கொடுத்து வந்தது. அதே போல துட்சி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வந்தது. அவரவருக்கு தமது ஆட்கள் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி இருந்தது.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்காவின் கவனம் ஐரோப்பிய வல்லரசுகளின் மீது திரும்பியது. ஆப்பிரிக்காவில் நவ-காலனிய அரசியலில் மும்முரமாக ஈடுபட்டிருந்த பிரான்ஸ் அதன் கண்ணில் துருத்திக் கொண்டிருந்தது. ருவான்டாவில் துட்சிகளின் கிளர்ச்சி, பிரான்சின் ஆதிக்கத்தை துடைத்தெறியும் பதிலிப் போராக அமெரிக்காவால் கருதப்பட்டது. துட்சிகளின் கெரில்லா இராணுவமான “ருவான்டா தேசாபிமான முன்னணி” (RPF) அயல் நாடான (ஆங்கிலம் பேசும்) உகண்டாவில் தளம் அமைத்திருந்ததும், RPF படைத் தளபதி (இன்றைய ஜனாதிபதி) போல் ககாமே உட்பட பல தலைவர்கள் உகண்டாவில் ஆங்கில மொழி வழிக் கல்வி கற்றிருந்தும், அமெரிக்கா இலகுவாக ஊடுருவ வாய்ப்பாக அமைந்தது. உகண்டாவின் இன்றைய ஜனாதிபதி முசவேனி, ஆட்சியைக் கைப்பற்ற நடத்திய ஆயுதப் போராட்டத்தில், RPF போராளிகள் பங்குபற்றி இருந்தனர். முசவேனி, ககாமே ஆகியோரை “ஆப்பிரிக்காவின் நம்பிக்கை தரும் இளம் தலைமுறையை சேர்ந்த தலைவர்கள், மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவார்கள்” என்று அமெரிக்க ஊடகங்கள் புகழ் பாடிக் கொண்டிருந்தன. ஒருவேளை ருவாண்டாவில் ககாமே ஆட்சிக்கு வந்த பின்னர், அரச கரும மொழியாகவும், கல்வியிலும் பிரெஞ்சை ஒதுக்கி விட்டு ஆங்கிலத்தை நடைமுறைக்கு கொண்டு வந்ததை சாதனையாக கூறலாம்.
ருவாண்டாவில் இருப்பது இனப்பிரச்சினையா? ருவாண்டா மக்கள், காலங்காலமாக ஹூட்டு, துட்சி என்ற இன அடிப்படையில் பிரிந்து வாழ்ந்து வந்தனரா? இது ஆயிரம் வருடக்கால இனப்பகையா? நாம் முதலாளிய ஊடகங்கள் சொல்வதை நம்பினால், மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு “ஆம்” என்று பதில் வரும். ஆனால் இந்தக் கருத்தியல் எவ்வளவு தூரம் சரி என்று, எந்த சமூக விஞ்ஞானியும் ஆராயவில்லை, அல்லது அவர்களது முடிவுகள் பாரபட்சமின்றி இருப்பின் பிரசுரிக்கப்படுவதில்லை. முதலில் “இனம்” (Ethnicity, Race எதுவாக இருந்தாலும்) என்ற சொல்லே ஒரு ஐரோப்பியக் கண்டுபிடிப்பாகும். ருவான்டாவின் இனப்பிரச்சினை, ஆச்சரியப்படத்தக்க வகையில் இலங்கை இனப்பிரச்சினையுடன் பெரும்பாலும் ஒத்திருப்பதை, நீங்கள் இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது புரிந்து கொள்வீர்கள். இது ஒன்றும் தற்செயல் அல்ல. காலனிய எஜமானர்களின் பிரித்தாளும் கொள்கை, எங்கேயும் ஒரே மாதிரித் தான் நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆங்கிலேயர்கள் எவ்வாறு இலங்கையில் வாழ்ந்த சிங்கள, தமிழ் மொழி பேசும் மக்களுக்கிடையில் இனப் பகையை தோற்றுவித்து, இனவாதப் படுகொலைகளுக்கு வழிவகுத்தார்களோ, அதே வேலையை பெல்ஜியர்கள் ருவான்டாவில் செய்தனர்.
19 ம் நூற்றாண்டின் இறுதியில், உலகின் மிக நீண்ட நதியான நைலின் நதிமூலத்தை தேடிச் சென்ற ஐரோப்பியர் சிலர் ருவான்டாவை “கண்டுபிடித்தனர்”. அவர்களைத் தொடர்ந்து கிறிஸ்தவ மதம் பரப்புவோரும் அந்தப் பிரதேச மக்களை கத்தோலிக்கர்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் எல்லோருக்கும் ருவான்டாவில் எதிர்பாராத ஆச்சரியங்கள் காத்திருந்தன. இன்றைய ருவான்டா, புரூண்டி, மற்றும் உகண்டாவின் தென் பகுதி, கொங்கோவின் கிழக்குப்பகுதி என்பனவற்றை உள்ளடக்கிய, ஒரே அதிகார மையத்தைக் கொண்ட மன்னரின் ஆட்சிப்பிரதேசமாக இருந்தது. மன்னரின் கீழ் நூற்றுக்கணக்கான சிற்றரசர்கள் மாகாணங்களை நிர்வகித்து வந்தனர். சுருக்கமாக சொன்னால், ஐரோப்பாவில் இருந்த அதே நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு முறை ருவான்டாவிலும் காணப்பட்டது. ஆயிரம் வருடங்களாக மக்கள் விவசாயம் செய்யும் அறிவைப் பெற்றிருந்தனர். அழகிய மலைநாடான ருவான்டாவில், ஒவ்வொரு குன்றும் ஒரு குடும்பத்திற்கு சொந்தமான விவசாய நிலமாக இருந்தது.
ருவான்டாவில் துவா (அல்லது பிக்மீ) என்றழைக்கப்படும் பழங்குடியினரும் வாழ்ந்து வருகின்றனர். பிற ஆப்பிரிக்க மக்களிடமிருந்து வேறுபடுத்தி அறியக்கூடிய தோற்ற அமைப்பைக் கொண்ட (குள்ளமானவர்கள், பழுப்பு நிறத்தவர்கள்) துவா மக்கள் இன்றும் கூட புராதன வேடுவர் சமூகமாகத் தான் வாழ்கின்றனர். யாருக்கும் தீங்கு செய்யாத, தானுண்டு, தனது வேலையுண்டு என வாழ்ந்து வரும் துவா மக்களை, ருவான்டா அரசர்கள் அடிமைகளாக வைத்திருந்தனர். அரசன் மட்டுமல்ல, நிலப்பிரபுக்களும் துட்சி இனத்தை சேர்ந்தவர்களாக அதிகாரம் செலுத்தினர். அதற்கு மாறாக பெரும்பான்மை ஹூட்டு இன மக்கள் நாட்டுப்புறங்களில் பண்ணையடிமைகளாக, குத்தகை விவசாயிகளாக இருந்தனர். இந்த உண்மையே ஹூட்டு-துட்சி இனப் பிரிவினையை நிரூபிக்க போதுமானதல்ல. ஏனெனில் “நாகரிக காலத்தை” சேர்ந்த நாம் இனம் பற்றி புரிந்து வைத்திருப்பதற்கும், அன்றைய மக்களின் சிந்தனைக்கும் இடையில் நிறைய வேறுபாடு இருக்கின்றது. தனது சொந்த விவசாய நிலங்களில் அதிக விளைச்சலைப் பெறக்கூடியதாக பயிரிட்டு, தனது செல்வத்தை பெருக்கிக் கொள்ளும் ஹூட்டு ஒருவர் நிலப்பிரபுவாக வர முடிந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் அதிகாரத்தில் இருப்பது யாராக இருந்தாலும் துட்சி என அழைக்கப்படலாயினர்.
துட்சிகளின் மூதாதையர் எத்தியோப்பியாவில் இருந்து வந்தவர்கள் என்ற கருத்து நிலவுகின்றது. இரு பக்க இனவாதிகள் மத்தியிலும், ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் மத்தியிலும் இது போன்ற கருத்துகள் பிரபலமானவை. (“துட்சிகளை எத்தியோப்பியாவிற்கு திருப்பி அனுப்புவோம்.” என்பது ஹூட்டு இனவாதிகளின் முழக்கங்களில் ஒன்று.) எத்தியோப்பியர், அல்லது சோமாலியர்கள் போல (இவர்களை பிற ஆப்பிரிக்கர்களிடம் இருந்து இலகுவில் பிரித்தறிய முடியும்) பெரும்பாலான துட்சிகள் தோன்றுவதை மறுப்பதற்கில்லை. துட்சிகள் என்றால் உயரமானவர்கள், ஒடுங்கிய முகம், மெல்லிய உடல்வாகு கொண்டவர்கள்; ஹூட்டுகள் பருமனானவர்கள், வட்டமான முகம் கொண்டவர்கள், என்றெல்லாம் பிரித்துப் பார்ப்பது எல்லோருக்கும் பொருந்தாது. இருப்பினும் இனப்படுகொலை செய்யும் இனவாதிகளுக்கு அந்த வெளித் தோற்றமே போதுமானதாக இருந்தது.
ருவான்டாவின் எழுதப்படாத செவிவழி வரலாற்றின் படி, கி.பி. 700 ம் ஆண்டளவில் வருகை தந்த ஹூட்டுகள், மரங்களை வெட்டி, நிலங்களை பண்படுத்தி விவசாயம் செய்து வந்துள்ளனர். பல்வேறு வகையான பழ மரங்களை நட்டு, உணவுப்பயிர்களை பயிரிட்டு, அதன் பலனை அனுபவித்து வந்தனர். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த துவா வேடர்களைப் போலன்றி, குடிசைகளை கட்டி, கிராமங்களில் வாழ்ந்தனர். சமுதாயம் வளர்ச்சி அடைந்த போது “முவாமி” என அழைக்கப்படும் மன்னனின் அதிகார மையமாக பரிணமித்தது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே மத்திய ஆப்பிரிக்க இராச்சியமான, ருவான்டா முழுவதும், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் நிலவியது.
ஹூட்டு நாகரீகம் தொடங்கி முன்னூறு வருடங்களுக்குப் பின்னர், வடக்கே இருந்து மாடுகளை மேய்த்துக் கொண்டு வந்தனர், துட்சிகள் என்ற வந்தேறுகுடிகள். இது இந்தியாவில் ஆரியரின் வருகையுடன் ஒப்பு நோக்கத்தக்கது. துட்சிகள் சமுதாயத்தில் மாடுகள் வைத்திருப்பது செல்வச் செழிப்பின் அடையாளம். ஒருவர் எத்தனைமாடுகள் வைத்திருக்கிறார் என்பதை வைத்துதான், அவர் பணக்காரரா இல்லையா என்பது தீர்மானிக்கப்பட்டது. இந்த கலாச்சாரம் இன்றும் கூட (துட்சி இனக்குடும்பத்தை சேர்ந்த) கென்யாவின் மாசாய் இன மக்கள் மத்தியில் நிலவுகின்றது. தமது மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் தேடியே துட்சிகள், ருவான்டாவிற்கு வந்தனர். அதனால் அங்கே விவசாயம் செய்து வந்த ஹூட்டுகளுடன் நிலத்திற்கான போட்டி, பொருளாதார முரண்பாடுகளை (கவனிக்கவும்: இன முரண்பாடுகள் அல்ல) தோற்றுவித்தது. வேறுபாடான பொருளாதார நலன்கள் இருந்த போதிலும், காலப்போக்கில் துட்சிகள், தம்மை விட நாகரீகத்தில் மேலோங்கியிருந்த ஹூட்டுகளின் மொழியையும், மதத்தையும் மட்டுமல்ல கலாச்சாரத்தையும் தமதாக்கிக் கொண்டனர். முரண்நகையாக அதுவே துட்சி இன மேலாதிக்கத்திற்கு ஆதாரமாக அமைந்தது.
அதிகார வெறி கொண்ட துட்சிகள் விரைவில் ருவான்டாவின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினர். ஹூட்டுகள் விவசாயத்தையே பெரிதாக மதித்ததால், அவர்களை தமது ஆட்சிக்கு கீழ்ப்படிய வைப்பது, புதிய ஆட்சியாளருக்கு இலகுவாக அமைந்தது. ஹூட்டுகள் உழைக்கும் வர்க்கமாகவும், துட்சிகள் ஆளும் வர்க்கமாகவும் மாறியது அப்போது தான். தேச நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. துட்சிகள் ஆரம்பத்திலேயே மேலிருந்து கீழே வரும் அதிகாரப் படிநிலைச் சமூகமாக வாழ்ந்தவர்கள். அதனால் தான் 20 ம் நூற்றாண்டிலும், அதிகார வர்க்கம் முழுவதும் துட்சிகளை கொண்டிருந்தது. தேசப் பாதுகாப்பும் அவர்கள் வசமே இருந்தது. விவசாயம் சார்ந்த உற்பத்தி உறவுகளில் பண்ணையடிமை முறையை புகுத்தினர். துட்சி பண்ணையார்களின் மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் தேவைப்பட்ட போது, ஹூட்டு விவசாயிகளிடம் நிலங்களை பெற்றுக் கொண்டு, பண்டமாற்றாக சில மாடுகளைக் கொடுத்தனர். ஹூட்டு விவசாயிகள் மாடுகளை பராமரித்தாலும், பிறக்கும் கன்றுக்குட்டிகளை மட்டும் துட்சி உரிமையாளருக்கு கொடுத்து விட வேண்டும். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உற்பத்தியின் பலன்களை அனுபவிப்பது நிலப்பிரபுவாகத் தானே இருக்க முடியும்?
19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய வல்லரசுகள் ஆப்பிரிக்காவை பங்கு போட்ட போது, ஜெர்மனிக்கு கிடைத்த துண்டுகளில் ருவான்டாவும் ஒன்று. ஏற்கனவே இராச்சியத்தின் பகுதிகள் பிரிட்டனுக்கும் (உகண்டா), பெல்ஜியத்திற்கும் (கொங்கோ) தாரை வார்க்கப்பட்டது பற்றியோ, தன் நாடு தற்போது ஜெர்மன் ஏகாதிபத்தியத்திற்குள் அடங்குகின்றது என்பதையோ ருவான்டா மன்னன் அறிந்திருக்கவில்லை. இருப்பினும் தான்சானியாவில் இருந்து ருவான்டா விவகாரங்களை கவனித்துக் கொண்ட ஜெர்மன் ஆளுநர், அரசாட்சியில் தலையிடவில்லை. முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மனியை தோற்கடித்த பெல்ஜியம், ருவான்டாவை தனது காலனியாக்கியது. “பெல்ஜியத்தால் பாதுகாக்கப்படும் பிரதேசம்” என்று ஐ.நா. மன்றத்தின் முன்னோடியான உலக மக்கள் பேரவை தீர்மானித்தது. காலனிக்கும், பாதுகாப்புப் பிரதேசத்திற்கும் இடையில் அதிக வித்தியாசம் இருக்கவில்லை. பெல்ஜியம் தனது முப்பது வருட காலனிய ஆட்சிக்காலத்தில் ஐரோப்பியமயப்பட்ட கல்வியையும், நிர்வாகத்தையும் அறிமுகப்படுத்தியது. அப்போது தான் இனவாதக் கருத்துகள் துட்சி, ஹூட்டு இன மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டன.
துட்சி நிலப்பிரபுக்களின் அதிகாரம் செலுத்தும் திறமையை கண்டு வியந்த ஐரோப்பியர்கள், துட்சிகள் “சாதாரண ஆப்பிரிக்கர்களாக” இருக்க முடியாது என முடிவுசெய்தனர். அந்த எண்ணத்தில் உதித்தது தான் இன்றைய இனவாத கோட்பாடுகள். பாப்பரசரின் பிரதிநிதியான வணக்கத்திற்குரிய “லெயோன் கிளாஸ்”, மிஷனரி பாடசாலைகள் மூலம் இனவாதக் கருத்துகளையும் போதித்து வந்தார். ஆரம்ப காலங்களில் துட்சி இனப் பிள்ளைகளுக்கு மட்டுமே ஐரோப்பிய பாணி கல்வி போதிக்கப்பட்டது. “துட்சிகள் ஆளப்பிறந்தவர்கள்”, “இனரீதியாக ஹூட்டுக்களை விட சிறந்தவர்கள்”, போன்ற இனவாதக் கருத்துகள், பாடசாலை சென்ற பிஞ்சுமனங்களில் விதைக்கப்பட்டன. புதிய மத்தியதர வர்க்கமாக உருவாகிய, கல்வி கற்ற துட்சிகளை அரச கருமங்களை முன்னெடுக்கவும், மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட புதிய நிர்வாக அலகுகளில் அதிகாரிகளாகவும் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டனர். அதே நேரம், இன்னொரு பக்கத்தில் பெல்ஜியர்கள் சிறிய அளவு ஹூட்டு நடுத்தர வர்க்கத்தையும் உருவாக்கத்தவறவில்லை. இருப்பினும் ருவான்டா சுதந்திரம் பெற்ற நேரம், பெரும்பாலான அரச பதவிகளில் துட்சிகளே வீற்றிருந்தனர்.
1958 ல் எடுத்த கணக்கெடுப்பின் படி, மொத்த சனத்தொகையில் 14 வீதமான துட்சிகள், பல்கலைக்கழகங்களில் மூன்றில் இரண்டு பங்கு மாணவர்களாக இருந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர் நடந்த பொதுத் தேர்தலில், பெரும்பான்மை ஹூட்டு மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற அரசாங்கம் தரப்படுத்தலை கொண்டு வந்து, இனப்பிரச்சினைக்கு வழி சமைத்தது. மெல்ல மெல்ல அதிகாரம் துட்சிகளின் கைகளில் இருந்து பறிக்கப்பட்டது. பேரினவாத அரசாங்கம், ஹூட்டுகளுக்கு அதிக சலுகைகள் வழங்கி, பெரும்பான்மை வாக்குவங்கியை தக்க வைத்துக் கொண்டது. துட்சியினத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள், இனப்பிரச்சினையை தீர்க்குமாறு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும், ஹூட்டு இனவாத சக்திகளின் எதிர்ப்புக் காரணமாக ஒப்பந்தங்களை முறிப்பதும் நடந்தேறின. ஒவ்வொரு தடவையும் துட்சிகள் அஹிம்சா வழியில் எதிர்ப்புக் காட்டிய போதெல்லாம், இனக்கலவரங்கள் தூண்டி விடப்பட்டன. இதனால் பெருமளவு துட்சி மக்கள் அகதிகளாக அயல் நாடுகளில் புகலிடம் கோரினர். துட்சிகள் ஆயுதமேந்திய போராட்டத்தின் மூலமே தமது உரிமைகளைப் பெற முடியும் என இளைஞர்கள் நம்பினார். ஹூட்டு பேரினவாத அரசிற்கெதிராக ஆரம்பிக்கப்பட்ட துட்சி விடுதலை இயக்கம் (RPF) கெரில்லாத் தாக்குதல்களை நடத்தியது. இதையெல்லாம் எங்கேயோ கேட்ட மாதிரி இல்லையா? ஆமாம், ருவான்டா-இலங்கை, துட்சிகள்-தமிழர்கள், ஹூட்டுகள்-சிங்களவர்கள், பெல்ஜியம்-பிரிட்டன், இந்தச் சொற்களை மாற்றிப் போட்டுப் பாருங்கள். வரலாறு ஒரே மாதிரித் தோன்றும்.
1994 ம் ஆண்டு, துட்சியின மக்கள் வகைதொகையின்றி கொன்று குவிக்கப்பட்டாலும், துட்சிகளின் விடுதலைப்படையான RPF கெரில்லாக்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. தலைநகர் கிகாலியை கிளர்ச்சிப்படை கைப்பற்றியதும், ஹூட்டு மக்களும் அரச படையினரும் கொங்கோவிற்குள் புகலிடம் கோரினர். இதனால் யுத்தம் அயல்நாடான கொங்கோவிற்கும் பரவியது. RPF இயக்கத்தில் துட்சி இன மேலாண்மைக் கருத்துகளை கொண்ட போல் ககாமே போன்ற தலைவர்களின் ஆதிக்கம் நிலவுகின்றது. அதுவே புதிய அரசின் கொள்கையை தீர்மானிக்கின்றது. இன அழிப்புக் குற்றத்தில் ஈடுபட்ட மாஜி இராணுவ வீரர்களை தேடுவதாக காரணம் காட்டி, இரண்டு தடவை ருவான்டாவின் புதிய (துட்சி) இராணுவம் கொங்கோவிற்குள் படையெடுத்தது. அது சர்வதேச கண்டனங்களையும் தோற்றுவித்தது. இருப்பினும் பலமான அமெரிக்க வல்லரசின் ஆதரவு காரணமாக, கொங்கோவில் நிலை கொண்டிருந்த ஐ.நா.சமாதானப் படை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. (ஐ.நா. படை அதிகாரிகள் துட்சி இராணுவத்துடன் ஒத்துழைத்தாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.)
“பெரும்பான்மை ஹூட்டு இன மக்கள் கொங்கோ அகதி முகாம்களில் வசித்துக் கொண்டிருக்கையில், ருவான்டாவில் தங்கி விட்ட சிறுபான்மை துட்சிகளை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தும் RPF அரசாங்கம் நீதி நெறிமுறைக்கு உட்பட்டதா?” என்ற கேள்வி சர்வதேச அரங்கில் முன் வைக்கப்பட்டது. ஆனால் சிறுபான்மையினரின் அரசாங்கம் கடந்த பத்தாண்டுகளாக நிலைத்து நிற்பதுடன், சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. சில வருடங்களுக்குப் பின்னர், கணிசமான அளவு ஹூட்டுகள் தயக்கத்துடன் தாயகம் திரும்பினர். RPF ம் இன அழிப்பில் ஈடுபட்டது என்பதும், துட்சி ஆயுததாரிகள் ஹூட்டு மக்களை கொன்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டும், மறுக்க முடியாத உண்மைகள். ருவான்டாவில் துட்சியின ஆதிக்கம் நிலைநாட்டப்பட்ட பின்னர், RPF அரசிற்கு ஹூட்டுகளை வேட்டையாட வேண்டிய தேவை இருக்கவில்லை. ஜனாதிபதி போல் ககாமேயின் கவனம் பின்னர் தனது இனத்திற்குள் இருக்கும் எதிரிகளை நோக்கி திரும்பியது. “இன அழிப்பில் ஈடுபட்ட கொலைகாரர்கள்” என்பது தான் தீர்த்துக் கட்டப்படும் அனைத்து எதிரிகள் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு. கொங்கோவை தளமாகக் கொண்ட, ஹூட்டுகளின் புதிய கெரில்லா இயக்கம் ஒன்று அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதாக அண்மைக்காலமாக கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நவீன ருவான்டாவின் வரலாற்றில் ஏகாதிபத்திய தலையீடு பல்வேறு நோக்கங்களுக்காக வெளிப்பட்டுள்ளது. இதற்காக ஏகாதிபத்தியம் தனது பிரசைகளின் உயிரையும், தேசத்தின் நன்மதிப்பையும் கூட விலையாக கொடுத்துள்ளது. காலனிய ஆதிக்கம் காலாவதியாகி, நவ-காலனிய காலகட்டம் ஆரம்பித்த நேரம், பெல்ஜியம் ருவான்டாவை பிரான்சிற்கு தத்துக் கொடுத்து விட்டிருந்தது. அந்நியக் கடன் வழங்குவதில் முதன்மையான நாடான பிரான்சின் வற்புறுத்தலுக்கு இணங்கித் தான், ருவாண்டாவின் ஹூட்டு அரசும், RPF இயக்கமும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டன. சமாதானத்தை நிலைநாட்ட ஐ.நா.சமாதானப்படை (MINUAR) வந்தது. ஒப்பந்தம் மீறப்பட்டு, மீண்டும் யுத்தம் மூண்ட பின்னர், ஜனாதிபதி ஹபியாரிமனா கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் முகமாக, ஐ.நா.சமாதானப்படையில் பணியாற்றிய பத்து பெல்ஜிய வீரர்கள் ஹூட்டு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு ஐ.நா. படைகள் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டன.
இனப்படுகொலைக்கு தலைமை தாங்கிய, ஹூட்டு துணைப்படையான Interahamwe க்கு பிரான்ஸ் இராணுவப் பயிற்சி வழங்கி வந்தது. இதனால் “பிரான்சிற்கும் இன அழிப்பில் பங்குண்டு” என்ற குற்றச்சாட்டை இன்றைய ருவான்டா (துட்சி) அரசு பன்னாட்டு ஊடகவியலாளரின் முன்னால் (டிசம்பர் 2008) சமர்ப்பித்தது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, காலஞ்சென்ற பிரெஞ்சு ஜனாதிபதி மித்தரோன் உட்பட பல பெரிய தலைகள் இன அழிப்பு குற்றத்திற்காக சர்வதேச நீதிமன்றத்திற்கு முன்னால் நிறுத்தப்படுவது சாத்தியமானதல்ல. இருப்பினும் இஸ்ரேலைப் போல, ருவான்டாவும் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாகி வருவதை இது எடுத்துக் காட்டுகின்றது. மத்திய ஆப்பிரிக்காவில் இன்னொரு இஸ்ரேலை உருவாக்குவது தான் அமெரிக்காவின் நோக்கமும். இஸ்ரேல் “யூத இனப்படுகொலையை தேசிய அரசியல் சித்தாந்தமாக” கடைப்பிடிப்பதைப் போல, இன்றைய ருவான்டாவில் துட்சி இனப்படுகொலை பற்றிய நினைவுகூரல் தவிர்க்கவியலாத அம்சமாகி விட்டது. இனப்படுகொலைக்கு பலியானவர்களின் ஞாபகச் சின்னங்கள் பற்றி ஒவ்வொரு பிரசையும் அறிந்திருக்க வேண்டும். ருவான்டாவும் இஸ்ரேலைப் போலவே சர்வதேச கண்டனங்களைப் பொருட்படுத்தாது அயல்நாடுகள் மீது படையெடுக்க முடிகிறது. கொங்கோவில் கபிலாவின் தேசியவாத அரசு, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை போட்ட கையோடு, கிழக்கெல்லையில் படையெடுத்த ருவான்டா இராணுவத்துடன் நீண்ட போருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பேரழிவை ஏற்படுத்திய யுத்தம் கொங்கோவை அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வைத்தது. அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் ருவான்டா இராணுவத்தை, ஆப்பிரிக்காவின் தலைசிறந்த நவீன இராணுவமாக்க பாடுபடுகின்றனர். வருங்காலத்தில் ஒரு குட்டி நாடான ருவான்டா, தன்னை சுற்றியிருக்கும் பலவீனமான பெரிய நாடுகளை பயமுறுத்தப் போகின்றது.
– தொடரும் –
தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
தொடர்புடைய பதிவுகள்:
ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா –
காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம் !
ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை !
நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !
ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம் !
தோழர் கலையரசன் ஈழத்திலிருந்து இனவாதப் போரினால் அகதியாய் விரட்டப்பட்டு முதலில் சுவிஸ் நாட்டிலும் பின்னர் அந்த நாட்டு அரசின் இனப்பாகுபாடு அரசியலால் வெறுப்புற்று நெதர்லாந்திலும் வாழ்பவர். அகதியாய் ஆரம்பித்த வாழ்வு, அதனால் ஐரோப்பிய நாடுகளின் அகதிகள் குறித்த சட்டங்களைத் தெரிந்து கொண்டமை, பல் நாட்டவருடன் பழகியமை, 20 நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து பெற்ற சமூக அனுபவம், நெதர்லாந்து கம்யூனிஸ்ட்டு கட்சியுடனான தொடர்பு, நடைமுறைப் போராட்டங்களில் ஈடுபட்டமை எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு உலக அனுபவத்தையும் முக்கியமாக பல்நாட்டவரின் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அரசியலையும் கற்றுத் தந்திருக்கிறது. இந்த அனுபவங்களினூடாக மேற்குலகின் பொய்ச்சித்திரங்களை கலைத்துப் போடும் வல்லமை கொண்ட தோழர் கலையரசன், இத்தளத்தில் பங்கேற்பதில் வினவு மகிழ்ச்சி அடைகிறது. அவரது வலைப்பூ முகவரி http://kalaiy.blogspot.com




62 Comments
ருவான்டாவின் வரலாற்றை கண் முன்னே நிறுத்துகிறது ஆசிரியரின் எழுத்து. நன்றி
எந்த ஒரு இன ஒழிப்பு போரையும் ஏகாதிபத்திய நாடுகளும் ‘வளர்ந்த’ நாடுகளும் கைகட்டி வேடிக்கைதான் பார்க்கும் என்றில்லை ஆளுக்கொரு பக்க்கமெடுத்து தட்டிவிட்டும் வேடிக்கை பார்ப்பர். இன்று இலங்கைக்காக அமெரிக்கா ஐரோப்பா என மனு அனுப்புகிறோம், அவர்கள் நினைத்தால் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு தொலைபேசி அழைப்பு போதுமென்றாலும் ஆயுதங்களின் விற்பனைக்கான வாய்ப்பு இருக்கும் வரை அவர்கள் அதை செய்யப்போவதில்லை என்பது தெளிவு. ருவான்டா கதை நமக்கு சொல்லும் பாடம் அது!
துண்டு துண்டாகப் படித்துப் புரிந்து கொள்ள முயற்சித்த விஷயத்தை விளங்கும்படி ஒரே கட்டுரையில் தெளிவாகவும் அழகாகவும் எழுதியிருக்கும் நண்பர் கலையரசனுக்கு நன்றி.
இந்தக் கட்டுரைக்கும் இனி தொடர்ந்து வரப்போகும் கட்டுரைகளுக்கும் உங்களுடைய references ஐயும் கொடுக்க முடிந்தால் விருப்பமும் நேரமும் வாய்ப்பும் இருப்பவர்கள் மேலும் படித்துப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.
ருவாண்டாவின் கொலை வெறியாட்டங்களையும் ஐரோப்பிய அமெரிக்க பின்னணியையும் படிக்கும் போது இனம் என்பதையே மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியமிருப்பது புரிகிறது. இனம் என்பதில் அறிவியலோடு அரசியலும் கொஞ்சம் கலந்திருக்கும் எனத்தான் கருதிவந்தேன். ஆனால் அரசியல் தான் நிறைய இருக்கிறது என்பது தெரிகிறது. அதே நேரம் ஆரிய இனம் என்பது கற்பனையானது திராவிட இனத்தின் அதிகாரப்பிரிவு தான்ஆரிய மாகியது என முன்னர் படித்தது நினைவுக்கு வருகிறது.
தோழமையுடன்
செங்கொடி
இன்று, எழுத்தாளர் அருந்ததிராய் சென்னை லயோலா கல்லூரி திறந்தவெளி அரங்கில், மாலை 5.30க்கு மணிக்கு ஈழம் குறித்து பேசுகிறாராம்.
உண்மையில் ஈழம் மற்றும் ருவான்டா இவற்றின் ஒப்பிடு மிகவும் எளிதக ஏகாதிபத்தியத்ன் தோளை உரித்துள்ளது.
கலையின் எழுத்து ஒவ்வொன்றும் சாட்டை அடியாக உள்ளது.
சு.ராஜன்
ஒரு இருண்ட வரலாற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கலையரசன் அவர்களுக்கு நன்றி!
//ருவான்டா-இலங்கை, துட்சிகள்-தமிழர்கள், ஹூட்டுகள்-சிங்களவர்கள், பெல்ஜியம்-பிரிட்டன், இந்தச் சொற்களை மாற்றிப் போட்டுப் பாருங்கள். //
துட்சிகளையும் தமிழர்களையும் ஒப்பிடுவது சரியானதா? தமிழர்கள் வந்தேறிகள் அல்ல ஹூட்டுகள் போன்று தமிழர்கள் மீதான சிங்களவர்கள் பேரினவாத தாக்குதலுக்கு எந்த வரலாற்று ஆதாரங்களையும் சிங்கள பேரினவாதிகளால் காட்டமுடியாதே?
கலையரசன், நீங்கள் ஈழப்பிரச்சனையை ருவாண்டாவுடன் ஒப்பிட்டு ஒரு தெளிவான விளக்கத்தை கொடுக்கவில்லை என்பது என் குற்றச்சாட்டு. எனக்கு சற்று குழப்பமாக உள்ளது. ஈழ்த்தில் யார் துட்சிகள்? யார் ஹீட்டுகள்? ஈழத்தில் தமிழன அழிப்பை யார் பின்னாலிருந்து இயக்குகிறார்கள்? சற்று தெளிவாக விளக்குங்கள்.
//யார் எங்கே இருந்து வந்தார்கள் என்பது முக்கியமல்ல. அப்படிப் பார்த்தால், வெள்ளையினத்தவரும் ஆப்பிரிக்காவில் இருந்து தான் வந்திருக்கிறார்கள்//
அடித்துச் சொல்லுங்கள் கலை. இனம், மதம், மொழி, தோல் நிறம் மட்டும் பார்த்து உணர்வு பூர்வமாக கூட்டமாக சேரும் மனித மனம் செறிவடைந்து, எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க நாம் சேர்ந்து உழைக்க வேண்டுமென்றால் இதுதான் சரியான ஆரம்பப் பாடம்.
//இனிமேல், இங்கிலாந்து காலனி ஆதிக்கத்தை குறை சொல்லிக்கொண்டிருப்பதால், வன்னியில் மடிந்துகொண்டிருக்கும் என் உடன் பிறப்புகளுக்கு மீட்சி வந்து விடுமா? //
அப்படியானால் எதற்காக ஈழத் தமிழர் பிரச்சினையில் இங்கிலாந்து தலையிட வேண்டும் என்று கேட்கிறீர்கள்? சிங்களவனோடு அடி பட்டோ பேசியோ தீர்த்துக் கொள்ள வேண்டியது தானே?
//யாழ்ப்பாணத்தில் வேளாள ஆதிக்கம் என்பது யதார்த்தமான உண்மைதானே. இன்று ஈழப் போராட்டம் காரணமாக இந்த முரண்பாடு பின்னுக்கு போயிருக்கலாம். //
அது இன்னும் பின்னுக்கு போகவில்லை, வினவு. வேறு வடிவம் எடுத்திருக்கிறது. கனடாவிலும், ஐரோப்பாவிலும் வாழும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர் யாழ் சைவ வேளாளர்கள் தான் என்ற உண்மையை மறுக்க முடியாது. அதனால் ஈழப் போராட்ட அரசியலை தமது நலன்களுக்கு ஏற்ற மாதிரி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடு போக வசதியில்லாமல் ஈழத்தில் தங்கி விட்ட தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் போராடி சாகிறார்கள். அது வரை வெளிநாடுகளிலும், கொழும்பிலும் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் யாழ் சைவ வேளாளர்கள், தமிழீழம் கிடைத்தால் தாமே சென்று ஆளலாம் என்று கனவு காண்கிறார்கள். இதைதான் ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன தவறு என்று கேட்கிறார்கள்.
ரதி கேட்கிறார்:
//கிழக்கு மாகாண, மலையக தமிழர்கள் முன்னுக்கு வந்தார்களா? You must be kidding me. //
இதற்குப் பின்னே யாழ் பிராந்திய மேலாதிக்கவாதம் மறைந்திருக்கிறது. கிழக்கு மாகாண, மலையகத் தமிழர்கள் குறுக்கு வழியால் தான் முன்னுக்கு வர முடியும் என்று ஏளனமாகப் பார்க்கிறார்.
மலையக மக்கள் எல்லோருமே குடியுரிமையற்ற தோட்டத் தொழிலாளர்கள் இல்லை. இன்று பெரும்பாலான மக்கள் குடியுரிமையுடன் படித்து வேறு தொழில்களில் இருக்கிறார்கள். ரதியைப் பொறுத்தவரை மலையக மக்கள் அனைவரும் குதிரை லாயங்களில் வாழ்வதாக சொல்வதும், இந்தியாவில் சேரிகளில் வாழும் மக்கள் எப்படி முன்னுக்கு வர முடியும் என்று கேட்பதும் ஒன்று தான். இந்தியாவில் பிற்படுத்தப் பட்ட சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய மண்டல் கமிஷனை எதிர்த்த மேல்சாதி திமிர் ரதியிடமும் தெரிகின்றது.
//மேல்சாதியின் சாதிவெறிதான் களையப்படவேண்டும்//
வினவு,
மேற்கண்ட விவாதத்தில், நீங்கள் பதிலளிக்கும் பொழுது, ‘மேல்சாதி’ என குறிப்பிடுகிறீர்கள்.
இப்படி சுட்டுவது சரியா? கீழ்சாதி என சொல்வதில்லை. தாழ்த்தப்பட்ட சாதி என்று தான் சொல்கிறோம்.
அதுபோல, மேல் சாதி என அழைப்பது எந்த விதத்தில் சரி! ஒன்று – ஆதிக்க சாதிகள் என அழைக்க வேண்டும். அல்லது ‘மேல்’சாதி சாதி என சுட்டவேண்டும். அல்லது வேறு சரியான வார்த்தை இருந்தால், சொல்லவேண்டும்.
கொஞ்சம் விளக்குங்களேன்.
வினவு,
முதலில் எனது ஓர் கருத்தை தெளிவாக உங்களிடம் முன் வைக்க விரும்புகிறேன். Eurasin, நான், நாம் இருவருமே ஈழத்தமிழர்கள். நாங்கள் இருவரும் உங்கள் Bloq இல் வந்து சாதியை சொல்லி வாதம், எதிவாதம் செய்வது அநாகரிகம் என்று கருதுகிறேன். அதற்காக வருந்துகிறேன்.
ஈழத்தில் சாதிப்பாகுபாடும் அதனால் சமூகத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளையும் அறியாதவள் அல்ல நான். ஆனால், நான் விடுதலை புலிகளின் De facto state இல் அதெல்லாம் களையப்பட்டதை பார்த்திருக்கிறேன். சந்தோசப்பட்டிருக்கிறேன். அதனால் தான் நான் இனிமேலும் சாதி பற்றி விவாதிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். அது தவிர, ஈழத்தில் சாதி பார்த்தா தமிழன் தலை மீது குண்டு விழுகிறது?
//யாழ்ப்பாணத்து மேல்சாதியினர் தமது சமூக மேலாண்மையின் காரணமாக மற்ற மக்களைவிட எல்லா விசயங்களிலும் முன்னணி வகித்தார்களா இல்லையா?// ஒடுக்கப்பட்ட சாதிகளின் சமூகப் பொருளாதார விடுதலையின் மூலமே அந்த திமிர் களையப்பட முடியும். சாரமாகச் சொன்னால் சாதி வெறியின் சமுக இருப்பை நீங்கள சரியாக புரிந்து கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது.//
இதை நீங்கள் சொன்னதையிட்டு மிகவும் சந்தோசம். காரணம், நீங்கள் சொன்ன “யாழ்ப்பாணது மேல்சாதியினர்” அவர்களால் தாழ்த்தப்பட்ட சாதி என்று கருதப்பட்ட ஒரு சாதியில் இருந்து வந்தவள் தான் நானும். நன்றாக கவனியுங்கள், அவர்களால் “கருதப்பட்ட”, நான் ஒரு நாளும் என்னை தாழ்த்தப்பட்ட சாதியாக நினைத்தது கிடையாது. அப்படி நான் நினைத்தால் நீங்கள் சொன்ன என் சமூக பொருளாதார விடுதலையை யார் எனக்கு பெற்று கொடுப்பார்கள். எனக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை, நான் போராடி பெறவேண்டியிருப்பது தான் துரதிஷ்டம். வினவு, நீங்கள் சொன்ன சாதி வெறியின் சமூக இருப்பை மேல்சாதியினரின் சிந்தனையை மாற்றுவதன் மூலம் தான் மாற்ற முடியும் என்று ஒவ்வொரு தனிமனிதனும் நினைத்தால் அவன் வாழ்க்கையில் முன்னேறுவது எப்போது? எந்தவொரு தனிமனிதனும் சாதி, பொருளாதாரம் என்கிற தடைகளை எல்லாம் தாண்டி முன்னேற வேண்டும். ஒருவர் தான் தாழ்த்தப்பட்ட சாதி என்று தன்னைத்தானே முடக்கிக்கொள்ளாமல், தன் அறிவையும் சிந்தனையையும் வளர்ப்பதோடு தன்னம்பிக்கையையும் வளர்க்க வேண்டும். அப்பொழுது கிடைக்கும் தாழ்த்தப்பட்டவனுக்கு சமூக பொருளாதார விடுதலை. நீங்கள் சொன்ன “சாதி திமிரை” யாரோ தன் மனதிலிருந்து களையும் வரை தாழ்தப்பட்டவன் காத்திருக்க வேண்டுமா? அது நடைமுறைக்கு சாத்தியமா?
//நீங்கள் என்னைப்பற்றி என்ன அவதூறு சொன்னாலும் சரி.//
ரதி, நான் சொன்னது எதுவும் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன். உங்களது கருத்தை தான் எதிர்த்தேன் தவிர உங்கள் மீது அவதூறு கூறும் எண்ணம் இல்லை.
//மறுபடியும் நான் சொல்வது எம் முன்னோர்களும் பெரியோர்களும் செய்த தவறை நாங்கள் செய்ய வேண்டாம் என்பதுதான்.//
எம் முன்னோர்களும் பெரியோரும் சிங்கள சிறுவர்களை வீட்டு வேலைக்காரர்களாக வைத்திருந்தார்கள். சிங்களப் பெண்களை அனுபவித்து பிள்ளை கொடுத்து விட்டு யாழ்ப்பாணத்திற்கு கம்பி நீட்டினார்கள். அப்படி தமிழருக்கு பிறந்த bastard kids தான் சிறி லங்கா ஆமியில் சேர்ந்து பழி வாங்க வந்தார்கள். இது கதையல்ல. இது தான் எமது முன்னோர்கள் மோட்டுச் சிங்களவனை அடக்கியாண்ட லட்சனம். உடனே அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மறுக்க வருவீர்கள்.
எமது முன்னோர்களும் பெரியோர்களும் மலைநாட்டு தமிழனை தோட்டக் காட்டான் என்று இகழ்ந்தார்கள். வன்னியில் கூலியாட்களாக வைத்து கசக்கி பிழிந்தார்கள். யாழ்ப்பாணத்தில் வீட்டு வேலைக்காரர்களாக வைத்திருந்தார்கள்.
இந்தக் காலத்தில திருந்தின தமிழர் என்ன செய்திட்டினம்? கிழக்கு மாகானத்திலை சிங்களவனையும் முஸ்லிமையும் இனப்படுகொலை செய்தார்கள். இந்த இனப்படுகொலை நடக்கேக்கை நீங்கள் நித்திரையில் இருந்தீங்களோ?
அதென்னை தமிழன் சாகிற நேரம் மட்டும் உங்களுக்கு விழிப்பு வருது. தமிழ் இனப்படுகொலை நடந்தால் சத்தம் போடுறியள். சிங்கள இனப் படுகொலை, முஸ்லிம் இனப் படுகொலை நடக்கும்போது கண்டுகொள்ளாமல் கம்மெண்டு இருக்கிறியள். இது தான் உங்கட மனச் சாட்சியோ?
அம்மா தாயே ஆள விடுங்கப்பா. இனிமே நீங்க என்ன சொன்னாலும் ஆமா எண்டு தலை ஆட்டுரன். சரியே?
அவர்கள் கருப்பினத்தவருக்கு மட்டுமா இனவெறி கற்பித்தனர் ?
தமிழகத்தில், ஸ்ரீலங்காவில் கூடத்தான் அதே இனவெறியை கற்பித்துள்ளனர்.
தமிழகத்தில் பிரச்சனை ருவாண்டா போல், இலங்கையைப் போல் பெரிதாகப் போகவில்லை. அவ்வளவு தான் வித்தியாசம்.
ஆரியம்-திராவிடம் என்பது டுட்சி-ஹூடு என்று வைத்துக் கொள்ளலாம்.
மரபணுச் சோதனைகள் மூலம் ஹூடு இனமும் டூட்ஸி இனமும் வேறுபட்டது அல்ல. அவர்களுக்குள் ஒற்றுமைகளே அதிகம் உள்ளன என்றும் நிறுவப்பட்டுவிட்டது.
ஆரியம்-திராவிடம் என்கின்ற குப்பையை எத்தனை முறை அள்ளி இந்து மஹா சமுத்திரத்தில் வீசினாலும் அதை மீண்டும் மீண்டும் கொண்டு வந்து கொட்டும் விஷ ஜந்துக்கள் எல்லாம் இங்கு அதிகம் இருக்கிறார்கள்.
அவர்களுக்குத் தமிழகமும் ருவாண்டா அல்லது இலங்கை போல் பற்றிக் கொண்டு எரிய வேண்டும், அதில் அவர்கள் குளிர் காய வேண்டும் என்று எத்தனை ஆசை!
ரதி அவர்களே,
ஓஹோ இப்ப தான் புரியுது….
நீங்கள் சொல்வது என்னவென்றால்…
கங்கை சென்று கடாரம் வென்ற சோழனின் கொடியை ஈழத்தமிழர்கள் தமது தேசியக் கொடியாக வரித்துக் கொண்டதேன்? புலிகளும் சோழர்கள் மாதிரி நாடுகளைப் பிடித்து, அதாவது இந்தோனேசியா வரை தமிழ் சாம்ராஜ்யத்தை கொண்டு வர விரும்புகிறார்களா?
தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட்டு பேசுகிறார்களே. அவர்களின் நோக்கம் பாலஸ்தீனம் போல இலங்கை முழு நாட்டையும் ஆக்கிரமிப்பதா?
உங்களுடைய புலி அனுதாபிகள் இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததை போல சோழர்கள் நாடுகளைப் பிடித்ததை போல முழு இலங்கையையும் ஆள விரும்புகிறார்களா? இப்படி ஒரு நோக்கம் இருப்பதாக நீங்கள் சொல்லவேயில்லை?
உங்களுக்கு நல்ல கற்பனை வளம் உள்ளது போலுள்ளது. நீங்கள் ஆணா அல்லது பெண்ணா?
கலையரசன்,
உங்கள் பதிலுக்கு நன்றி.//கட்டுரையில் என்னால் வெவ்வேறு இடங்களில் கூறப்பட்ட வாக்கியங்களை வெட்டி ஒட்டி பேசுவது சரியானதாகப் படவில்லை// கலை, மறுபடியும் நான் உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புவது எதையும் வெட்டி ஒட்டி உங்கள் கட்டுரையில் குற்றம் கண்டுப்டிப்பது என் நோக்கம் அல்ல.
Brithish colonization screwed up many countries. I agree with you. Here, let us talk about the cureent conflicting issues in Srilanka.
நீங்களாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, எங்கள் ஈழப்பிரச்சனையை ஏதோ ஒரு நாட்டின் பிரச்சனையுடன் ஒப்பிட்டு எங்கள் பக்கமுள்ள நியாயத்தை மறுக்கவோ அல்லது சிங்கள அரசு செய்யும் தமிழின இனப்படுகொலையை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று நியாயப்படுத்துவதையோ ஒரு ஈழத்தமிழன் எப்படி ஏற்றுக்கொள்வான்? //தமிழ் தேசியவாதம் தனக்கென உருவாக்கி வைத்துள்ள ஒரு தலைப்பட்சமான சரித்திரம்.// எனக்கு தெரிந்தவரை, தமிழ் தேசியம் எந்த ஒரு தலைப்பட்சமான சரித்திரத்தையும் புதிதாக உருவாக்கவில்லை. மகாவம்சத்தில் தமிழர்கள் பற்றி திரித்துக் கூறப்பட்ட விடயங்களைத்தான் மறுக்கிறது. இலங்கை தேசியத்தில் தனக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைத்தான் தமிழன் கேட்கிறான்.அதற்காக தமிழ் தேசியத்தை கட்டி எழுப்ப நினைக்கிறான்.நீங்கள் ஆயிரம் உதாரணம் அல்லது வரலாறு காட்டிப் பேசினாலும் இலங்கை இனப்பிரச்சனையில் தமிழன் தான் அதிக இழப்புகளையும் தாங்க முடியாத வேதனைகளையும் இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறான். இதை உங்களால் மறுக்க முடியுமா? உயிர் பயமின்றி வாழவும், எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும் தனியாக பிரிந்து போக நினைத்தால் அது தவறு என்று நினைகிறீர்களா?
//Brithish colonization screwed up many countries. I agree with you. Here, let us talk about the cureent conflicting issues in Srilanka.//
இன்றைய இலங்கைப் பிரச்சினையில் பிரிட்டனுக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை என்று நம்பும் அப்பாவித்தனம் அசர வைக்கின்றது. ஈழப்போர் ஆரம்பமாகிய காலத்தில் இருந்து பிரிட்டனும், பின்னர் அமெரிக்காவும் இலங்கை அரச படைகளுக்கு இராணுவ பயிற்சியும் ஆலோசனையும் வழங்கி வருகின்றன. இஸ்ரேலோ இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் ஒரே முகாமில் வைத்து பயிற்சியளித்தது. மேற்கத்திய நாடுகள் தமிழனும், சிங்களவனும் இப்படியே அடிபட்டுக் கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றன. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழியை கேள்விப் படவில்லையா? மற்றும்படி தமிழன் அழிந்தாலும், சிங்களவன் அழிந்தாலும் அவர்களுக்கு எந்த கவலையுமில்லை. இலங்கையை மறுகாலனியாதிக்கத்தின் கீழ் கொண்டு வர விரும்பும் அவர்களின் நோக்கம் நிறைவேறினால் சரி. நிலைமை இப்படி இருக்கையில் தமிழினம் மட்டும் அதிகமாக அழிகிறது என யாரும் இரக்கப்பட்டு வரப்போவதில்லை. அதேநேரம் தமிழனும் உலகில் வேறு எந்த இனம் அழிந்தாலும் அக்கறைப்படுவதில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய உண்மை. அதனால் தமிழனுக்காக பேச இன்னொரு தமிழன் மட்டுமே வருவான்.
//சிங்கள அரசு செய்யும் தமிழின இனப்படுகொலையை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று நியாயப்படுத்துவதையோ ஒரு ஈழத்தமிழன் எப்படி ஏற்றுக்கொள்வான்?//
ஜோர்ஜ் புஷ் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் அறிவித்த காலத்தில் இருந்தே நான் உட்பட பலர் அதனை எதிர்த்து வந்திருக்கிறோம். விரைவில் இலங்கை அரசும் அதனை கையில் எடுக்கும் என்று ஆரூடம் கூறியுள்ளோம். இலங்கை மட்டுமல்ல ஈராக், ஆப்கானிஸ்தான், இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகளில் நடக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்களை தொடர்ந்து கண்டித்தே வந்திருக்கிறேன். ஆனால் அன்று புஷ்ஷின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்த தேசியவாதத் தமிழர்கள் (உங்கள் மொழியில்: ஈழத் தமிழர்கள்) நிறையப்பேர். பாலஸ்தீன இன அழிப்பு செய்யும் இஸ்ரேலிய பயங்கரவாதத்திற்கு எதிரான போரையும், காஷ்மிரில் இன அழிப்பு செய்யும் இந்தியாவின் பயங்கராதத்திற்கு எதிரான போரையும் ஆதரிக்கும் ஈழத்தமிழரை பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதே தமிழர்கள் ராஜபக்ஷவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை எதிர்ப்பதாக சொன்னால் அது சிரிப்புக்குரியதாகாதா? கருத்து நேர்மையற்ற அவர்கள் இரட்டை வேடம் போடுவது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?
//எனக்கு தெரிந்தவரை, தமிழ் தேசியம் எந்த ஒரு தலைப்பட்சமான சரித்திரத்தையும் புதிதாக உருவாக்கவில்லை. மகாவம்சத்தில் தமிழர்கள் பற்றி திரித்துக் கூறப்பட்ட விடயங்களைத்தான் மறுக்கிறது. //
நான் ஏற்கனவே சொன்னதை இங்கே நீங்கள் நிரூபிக்கின்றீர்கள். தமிழன் தனக்கு சாதகமாக சொல்லிக் கொள்ளும் சரித்திரத்தை உலகில் தமிழன் மட்டுமே ஏற்றுக் கொள்வான். அதே போலத்தான் சிங்கள சரித்திரம் சிங்களவர் மத்தியில் மட்டும் தான் எடுபடும். அரசர்கள் காலத்தில் நடந்த கதைகளை கூறும் மகாவம்சத்தை எடுத்துக் காட்டி பேசுவது காலத்திற்கு ஒப்பானது அல்ல. மகாவம்சம் மட்டுமல்ல, இராமாயாணம், மகாபாரதம் கூட அன்று அரசியல் அதிகாரத்தை வைத்திருந்தவர்கள் தமக்கு சாதகமாக எழுதிக் கொண்டவை தான். இவற்றில் அரைவாசி உண்மையும், அரைவாசி கற்பனையும் கலந்திருக்கும். இராமாயணத்தில் இலங்கை, தென்னிந்திய மக்களை குரங்குகளோடு ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. அதற்காக நீங்கள் இராமனை கடவுளாக வழிபடும் இந்துக்களை எதிர்த்து சண்டைக்கு போவீர்களா?
//இலங்கை இனப்பிரச்சனையில் தமிழன் தான் அதிக இழப்புகளையும் தாங்க முடியாத வேதனைகளையும் இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறான். இதை உங்களால் மறுக்க முடியுமா? உயிர் பயமின்றி வாழவும், எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும் தனியாக பிரிந்து போக நினைத்தால் அது தவறு என்று நினைகிறீர்களா?//
உங்களது இரட்டை அளவுகோல் முறை இங்கேயும் தென்படுகின்றது. இலங்கையில் ஆயிரம் வருடங்களாக உயர்த்தப்பட்ட சாதியினரால் இன அழிப்பு செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்கள் அதையெல்லாம் மறந்து சகோதர பாசத்துடன் வாழ வேண்டும் என்று புத்தி சொல்கிறீர்கள். மறு பக்கம் அதே இனப்படுகொலையை காரணமாக காட்டி சிங்களவனிடம் இருந்து பிரிந்து போக வேண்டும் என்று வாதாடுகிறீர்கள். ஆயிரம் வருடங்களாக தமிழரில் ஒரு பிரிவினரை (சாதி) அடிமைகளாக வைத்திருந்த கொடுமையை, “குடுமிப்பிடி சண்டை” என்று உங்களால் சாதாரணமாக எடுக்க முடிகிறது. ஆனால் மறுபக்கம் ஈழத்தமிழன் சிங்களவனால் பட்ட வேதனையை மறக்கக் கூடாது என்று வாதாடுகிறீர்கள். இந்தியாவில் குஜராத்தில் இந்துக்களால் நடத்தப்பட்ட முஸ்லீம் இன அழிப்பு கூட உங்களுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. இவ்வாறு ஆளுக்கொரு நியாயம் பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
//இலங்கை தேசியத்தில் தனக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைத்தான் தமிழன் கேட்கிறான்.அதற்காக தமிழ் தேசியத்தை கட்டி எழுப்ப நினைக்கிறான்.//
உலகில் தமிழர் மட்டும் தான் பாதிக்கப்படுவதாகவும், தமிழருக்கு மட்டுமே பிரச்சினை இருப்பதாகவும் கருதுவது வெகுளித்தனமானது. அது தமிழரின் குறுகிய மனப்பான்மையை எடுத்துக் காட்டுகின்றது. ஈழத் தமிழருக்கு இருக்கும் அதே உரிமை, இந்தியாவில் இன அழிப்பு செய்யப்படும் காஷ்மீரியருக்கும், அசாமியருக்கும் உண்டு. இஸ்ரேலில் பாலஸ்தீனியர் முதல் அவுஸ்திரேலியாவில் அபோரிஜின் மக்கள் வரை இனப்படுகொலையை காரணமாகக் காட்டி பிரிந்து சென்று தனிநாடு அமைக்க விரும்பும் இனங்கள், உலகம் முழுவதும் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. ஆனால் இந்த தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளும் ஈழத்தமிழர்கள் எத்தனை பேர்?
உலகில் பிற ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒற்றுமையை ஏற்படுத்த விரும்பாத, அவர்கள் கொல்லப்பட்டும் போது ஒரு துளி கண்ணீர் சிந்தாத ஈழத்தமிழர்கள், உலகம் முழுவதும் தம் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடிகிறது? கொங்கோவில் நடந்த போரில் ஐந்து மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதை கண்டு கொள்ளாத உலக நாடுகள், காஸாவில் ஒரே வாரத்தில் இஸ்ரேலால் ஆயிரம் பேர் கொல்லப்பட்டதை கண்டும் காணாமல் இருந்த உலக நாடுகள், சோமாலியாவில் கடந்த வருடம் மட்டும் ஒரு மில்லியன் மக்கள் கொல்லப்பட்ட செய்தியையே வெளியில் சொல்லாத உலகநாடுகள், ஈழத் தமிழர் மரணிக்கும் போது மட்டும் அனுதாபம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கிறீர்களா?
இங்கே கூறப்பட்ட உண்மைகள், கருத்துகள் யாவும் உங்களுக்கு புரியவில்லை என்று சொல்ல முடியாது. இவையெல்லாம் நீங்கள் ஏற்கனவே நம்பிகொண்டிருக்கும் அரசியல் கொள்கையுடன் முரண்படுவதால், உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. ஆகவே ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்கும் போது, அதற்கு நானும் திரும்ப திரும்ப ஒரே பதிலை சொல்லிக் கொண்டிருப்பது சரியாகப் படவில்லை. மன்னிக்கவும்.
//முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மனியை தோற்கடித்த பெல்ஜியம், ருவான்டாவை தனது காலனியாக்கியது. “பெல்ஜியத்தால் பாதுகாக்கப்படும் பிரதேசம்” என்று ஐ.நா. மன்றத்தின் முன்னோடியான உலக மக்கள் பேரவை தீர்மானித்தது.//
கலையரசன் இந்த பகுதியில் நீங்கள் விவரித்த விசயங்களில் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களை இணைத்து ஒரே போராக விவரித்துள்ளீர்கள் என நினைக்கிறேன். அன்றைய ருவாண்டா புருண்டி என்ற இருநாடுகளின் கூட்டாக 62 வரை இருந்த்து என நினைக்கிறேன். இது சரியா என சரிபார்க்கவும்.
லீக் ஆப் நேசன்ஷ்க்கு இப்படி ஒரு பெயரை எப்படி தமிழ்படுத்தினீர்கள்… கொஞ்சம் சரி செய்யலாமே..
ஆர் பி எப் எப்படி துட்சி விடுதலை இயக்கம் ஆனது என்பதும் சந்தேகம். அதன் தன்மை அப்படி இருந்த்து என்பது வேறு.
ஐநா சமாதானப் படையின் பெயர் கூட ஏதோ தவறு போல தெரிகின்றது.
மணி,
நீங்கள் சுட்டிக்காட்டும் விடயங்களில் அதிக விளக்கம் தேவை தான். இரண்டாம் உலகப் போரிற்கு பின்னர் தான் ஐக்கிய நாடுகள் சபை உருவானது. அதற்கு முன்னர் குறிப்பிட்ட சில நாடுகள் அங்கம் வகித்த கூட்டமைப்பு இருந்தது. “லீக் ஒப் நேஷன்சிற்கு” சரியான தமிழ்ப்பெயர் இந்தக்கட்டுரையை எழுதிக்கொண்டிருந்த போது புலப்படவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும். இனிமேல் திருத்திக் கொள்கிறேன்.
ஐ.நா. சமாதானப்படை அனுப்பப்படும் போது ஒவ்வொரு நடவடிக்கைக்கு ஒவ்வொரு பெயரிடுவது வழக்கம். வெவ்வேறு நாடுகளில் இருக்கும் சமாதானப்படைகளை வேறுபடுத்தி அறிவதற்காக இந்த ஏற்பாடு. அப்படி ருவாண்டாவிற்கு சென்றது MINUAR என அழைக்கப்பட்டது.
RPF துட்சிகளின் விடுதலை இயக்கம் என்று அந்த இனத்தை சேர்ந்தவர்கள் சொல்லிக்கொள்கின்றனர். அநேகமாக உலகின் எந்த இனத்தின் விடுதலை இயக்கமாயினும், அங்கே இனவாத கொள்கைகளும் இருக்கத் தான் செய்யும்.
62 வரை ருவாண்டாவும், புருண்டியும் ஒரே பெல்ஜிய நிவாகத்தின் கீழ் இருந்தது சரியானதே. சுதந்திரம் வழங்கும் போது இரு வேறு நாடாக்கினார்கள். இருப்பினும் இந்தக் கட்டுரை ருவாண்டா பற்றி மட்டும் சொல்வதால், புரூண்டி பற்றி அதிக அக்கறை செலுத்தவில்லை. அதேநேரம் புரூண்டியும், ருவாண்டா போல ஒரே மாதிரியான இனப்பிரச்சினை கொண்டுள்ளதால், காலனிய கால சரித்திரம் அந்த நாட்டிற்கும் பொருந்தும்.
தான்சானியாவும், ருவாண்டாவும் முதலாம் உலகப்போர் வரை ஜெர்மனியின் காலனியாக இருந்தன. முதலாம் உலகப் போரில் பெல்ஜியமும், ஜெர்மனியும் இருவேறு அணிகளில் நின்ற போது, பெல்ஜியப்படைகள் கொங்கோவில் இருந்து படையெடுத்து ருவாண்டாவை கைப்பற்றின. இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தனது இழந்த ஆப்பிரிக்க காலனிகளை மீட்க முயலவில்லை.
United Nations Assistance Mission for Rwanda (UNAMIR) என்ற பெயரில்தான் ஐநாவின் அமைதிப்படை சென்றது என நினைக்கிறேன்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகுதான் ஐநா சபையின் பாதுகாக்கப்பட்ட பகுதி என ருவாண்டா புருண்டி பகுதி அறிவிக்கப்பட்டது என நினைக்கிறேன். இதற்கு முன் முதல் மற்றும இரண்டாம் உலகப்போருக்கு இடைப்பட்ட காலத்தில் இப்பகுதி பெல்ஜியத்தின் நேரடியான காலனியாக இருந்த்து என நினைக்கிறேன்
United Nations Assistance Mission for Rwanda (UNAMIR)
நன்றி, நீங்கள் ஆங்கிலத்தில் சொன்னதை நான் பிரெஞ்சில் (MISSION DES NATIONS UNIES POUR L’ASSISTANCE AU RWANDA )குறிப்பிட்டிருக்கிறேன். அதனால் தான் இந்தக் குழப்பம்.
//இரண்டாம் உலகப் போருக்குப் பிறகுதான் ஐநா சபையின் பாதுகாக்கப்பட்ட பகுதி என ருவாண்டா புருண்டி பகுதி அறிவிக்கப்பட்டது என நினைக்கிறேன். இதற்கு முன் முதல் மற்றும இரண்டாம் உலகப்போருக்கு இடைப்பட்ட காலத்தில் இப்பகுதி பெல்ஜியத்தின் நேரடியான காலனியாக இருந்த்து என நினைக்கிறேன்.//
நீங்கள் கூறும் தகவல் சரியானது என்றே நானும் நம்புகின்றேன். திருத்தற்கு நன்றி.
//இரண்டாம் உலகப் போருக்குப் பிறகுதான் ஐநா சபையின் பாதுகாக்கப்பட்ட பகுதி என ருவாண்டா புருண்டி பகுதி அறிவிக்கப்பட்டது என நினைக்கிறேன். இதற்கு முன் முதல் மற்றும இரண்டாம் உலகப்போருக்கு இடைப்பட்ட காலத்தில் இப்பகுதி பெல்ஜியத்தின் நேரடியான காலனியாக இருந்த்து என நினைக்கிறேன்.//
ருவாண்டா தொடர்பான பெல்ஜிய ஆவணங்களை (French/Dutch) படித்துப் பார்த்த போது, அதில் ஜெர்மனியிடம் இருந்து கைப்பற்றிய கைப்பற்றிய காலம் தொடக்கம் தனது பாதுகாப்பு பிரதேசம் என்று நிர்வகித்ததாக எழுதப்பட்டிருந்தது. இருப்பினும் நடைமுறையில் பெல்ஜியம் ருவாண்டாவை தனது காலனியாகவே நடத்தி வந்தது. இந்த ஐரோப்பிய ஆட்சியாளர்கள் பத்திரத்தில் ஒன்றை எழுதிவிட்டு, நடைமுறையில் இன்னொன்றை நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர்.
My reference is from the Class B Mandate of league of nations. The summary of event is given below .. is it correct or not… pls clarify with ur sources
“Ruanda-Urundi (Belgium), formerly two separate German protectorates, joined as a single mandate from 20 July 1922, but 1 March 1926–30 June 1960 in administrative union with the colony Belgian Congo. After 13 December 1946, this was a United Nations Trust Territory (till the separate independence of Rwanda and Burundi on 1 July 1962) “
நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.. மிக்க நன்றி..
கலையரசன் உங்களுடைய ஒவ்வொரு பதிவும் காலத்தின் பொக்கிஷம்.. வரலாற்று ஆவணங்களைப் போல தாங்கள் தொகுத்து வழங்கியிருப்பது காலத்திற்கும் தமிழ் இனத்திற்கு மிகவும் உதவும்..
வாழ்க உமது தொண்டு..
இன்று சுற்றி நடக்கும் துரோகத்தைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு தோன்றிதைப் போலத்தான் எனக்கும் தோன்றுகிறது.
//ஆரிய இனம் என்பது கற்பனையானது திராவிட இனத்தின் அதிகாரப்பிரிவு தான்ஆரிய மாகியது//
என் கருத்தும் இதேதான். ஆரியர்கள் வெளியிலிருந்து வந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதிகாரம் வந்ததால்தான் பிறரைத் தாழ்வாக நடத்தியிருக்கிறார்கள் என்று நான் எண்ணுகிறேன். முந்தைய ஒரு பதிவில் பூசை வழிபாடு செய்யும் உரிமை அனைத்துப் பிரிவினருக்கும் கிடைத்ததில் அப்படி ஒன்றும் மகிழ்ச்சியில்லை என்று நான் சொன்னதற்கு, அப்படி வழிபாடு நடத்திவைக்கும் எந்த ஒரு கூட்டமும் தன்னை பிராமண இனம் போல பிறரிலிருந்து உயர்வாகத்தான் எண்ணிக் கொள்ளும் என்ற எண்ணம்தான் காரணம்.
கலையரசனின் கட்டுரை, இன உணர்வு என்று சொல்லி நம்மை கட்டுப் படுத்தும் செய்கையும் ஒரு மூளைச்சலவைதான் என்பதை உணர்த்துகிறது. இனம் மானம் மதம் தாண்டி மனித நேயத்தின் முக்கியத்துவத்தை நினைவுறுத்துகிறது.
உங்களுக்கு விருப்பம் இருந்தால் Hotel Rwanda என்ற திரைப்படம் பாருங்கள். ருவாண்டாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து அதன் இன அழிப்பு சூழலில் எடுத்த படம்.
வித்தகனுக்கு,
நீங்கள் கேட்பது சரியானதே. இருப்பினும் reference பல ஆங்கிலம் தவிர்ந்த, வேற்று மொழிகளில் இருப்பதால் கொடுக்கவில்லை. கூடிய பட்சம் ஆங்கில மூல நூல்கள் கிடைத்தால் தெரிவிக்கிறேன்.
ஆப்பிரிக்கா பற்றிய சுதந்திரமான நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்ள New African மாத சஞ்சிகையை வாசிக்குமாறு பிரேரிக்கிறேன். அது ஒரு சர்வதேச சஞ்சிகை. எங்கேயும் கிடைக்கும். ஐரோப்பிய மையவாத கருத்துகளுக்கு மாறான, எதையும் விமர்சனத்திற்கு உட்படுத்தும் ஊடகம் அது.
http://www.africasia.com/newafrican/
//தமிழர்கள் வந்தேறிகள் அல்ல ஹூட்டுகள் போன்று தமிழர்கள் மீதான சிங்களவர்கள் பேரினவாத தாக்குதலுக்கு எந்த வரலாற்று ஆதாரங்களையும் சிங்கள பேரினவாதிகளால் காட்டமுடியாதே?//
ஆதாரம் காட்டினால் மட்டும் இனவாத தாக்குதல் நியாயமாகி விடுமா? பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை அடக்கி ஆள்வதால் வெடிக்கும் உள்நாட்டுப் போர்களுக்கு அர்த்தம் உலகெங்கும் ஒன்றே. யார் முதலில் வந்தது, யார் வந்தேறி என்று பார்க்க ஆரம்பித்தால் மனிதாபிமானம் பின்னடைய ஆரம்பித்துவிடும். மனித ஜீவராசிக்கு இருப்பது ஒரு கிரகம். இதில் அனைவரும் ஒத்து வாழ்வதைத் தவிர வேறு வழியே இல்லை.
ருவாண்டா அளவிற்கு இலங்கை நிலைமை இன்னமும் மோசமடையவில்லை. 1994 ம் ஆண்டு ருவாண்டாவில் நாடு முழுவதும் ஹூட்டு இனத்தவர்கள் துட்சி இனத்தவர்களை வேட்டையாடிக் கொன்றார்கள். (துட்சிகளும் ஹூட்டு மக்களை கொலை செய்திருக்கிறார்கள்.) 1994 ம் ஆண்டு அந்த இன அழிப்பு நடவடிக்கை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டே போன போது தான் சர்வதேச கவனத்தை பெற்றது.
அதற்கு முன்னர் இனக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. அப்போதும் துட்சி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் அவை குறுகிய காலம் மட்டுமே நீடித்தது. அதாவது குஜராத் கலவரம் போல அல்லது 1983 ம் ஆண்டு கொழும்புக் கலவரம் போல. ருவாண்டாவாக இருந்தாலென்ன, இந்தியாவாக இருந்தால் என்ன, இலங்கையாக இருந்தால் என்ன, இன/மத வெறியர்கள் ஒரே மாதிரித் தான் நடந்து கொள்கிறனர். இன/மத வெறி எல்லை மீறினால் என்ன நடக்கும் என்பதற்கு ருவாண்டா ஒரு உதாரணம்.
நன்றி. பார்த்திருக்கிறேன். அருமையான படம்.
எனது கட்டுரையை ஆழமாக வாசித்துப் பார்த்தால் தெரியும், ருவாண்டாவின் இனப்பிரச்சினை ஐரோப்பியர் வருகையின் பின்னர் தான் வடிவம் பெறுகின்றது. உண்மையில் “வந்தேறு குடிகள்” என்று சொல்வதெல்லாம், தமது பெருமைக்குரிய பாரம்பரியத்தை காட்ட சொல்லப்படும் கதைகள். அதற்கு சரியான வரலாற்று ஆதாரங்கள் கிடையாது. ருவாண்டாவைப் பொறுத்த வரை துட்சி, ஹூட்டு இரு இனங்களினதும் மூதாதையரும் வேறு இடங்களில் இருந்து வந்து சேர்ந்தவர்கள் தான். அதே நேரம் காலப் போக்கில் இனக் கலப்பும் ஏற்பட்டுள்ளன. ஆனால் ஐரோப்பியர் தான் பழைய பூர்வீகம் எல்லாம் தோண்டி எடுத்தார்கள். துட்சிகள் எத்தியோப்பியாவில் இருந்து வந்ததாக சொல்லிக் கொடுத்தார்கள். (யார் எங்கே இருந்து வந்தார்கள் என்பது முக்கியமல்ல. அப்படிப் பார்த்தால், வெள்ளையினத்தவரும் ஆப்பிரிக்காவில் இருந்து தான் வந்திருக்கிறார்கள்.)
இலங்கையிலும் ஐரோப்பியர் வரும் வரை தமிழர், சிங்களவர் என்ற இன வேறுபாடு இருக்கவில்லை. பௌத்த, இந்து மத வேறுபாடுகள் மட்டுமே இருந்துள்ளன. ஆங்கிலேயர்கள் தான் “தமிழர்கள்-திராவிடர்கள்” என்றும், “சிங்களவர்கள்-ஆரியர்கள்” என்றும் சொல்லிக் கொடுத்தார்கள். இந்த வேறுபாடு பார்ப்பதற்கு அவ்வளவு இலகுவானதல்ல. பாண்டிய நாட்டு தமிழர்கள், சிங்களப் பகுதிகளில் சென்று குடியேறியதற்கு சரித்திர சான்றுகள் உள்ளன. ஆங்லேயர் ஆட்சிக் காலம் வரையில், சிங்கள-தமிழ் உயர் சாதியினரிடையே திருமண பந்தங்கள் இருந்து வந்துள்ளன.
ருவான்டாவில் பெல்ஜியர்கள் செய்தது போல, இலங்கையில் ஆங்லேயர்கள் (யாழ்ப்பாண) தமிழர்களுக்கு ஆங்கிலவழிக் கல்வி கற்பித்தார்கள். இலங்கை முழுவதும் தமிழர்களை நிர்வாகத்தில் அமர்த்தினார்கள். ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியால், சுதந்திரத்திற்குப் பின்னர் பெரும்பான்மை வாக்குப் பலத்தால் சிங்களவர் கைகளில் ஆட்சி சென்றது. இனக்கலவரங்கள் மூலம் அரச நிர்வாக, பொருளாதார அலகுகளை தமிழரிடம் இருந்து பறித்துக் கொண்டனர். இதுவே அனுமார் வால் போல நீளும் இனப்பிரச்சினைக்கு ஆரம்பம்.
வித்தகன்,
தயவு செய்து உங்கள் உழைப்பை ஈழம் வன்னியில் அல்லது Sudan Darfur இல் போய் இருந்து கொண்டு ஆரம்பியுங்கள்.
கலை,
என் கேள்விக்கு பதில் அளித்ததிற்கு நன்றி. ஆனால், என் கருத்தை இங்கு முன் வைக்க விரும்புகிறேன். உங்கள் கட்டுரைக்கு வினவு களம் அமைத்து தந்திருக்கிறது. வரவேற்கத்தக்கது. ஆனால், ஒரு ஈழத்தமிழர் என்ற வகையில் எங்கள் பிரச்சனைக்கான அடிப்படைக்காரணங்களை தெளிவு படுத்த வேண்டிய ஒரு கடப்பாடும் உங்களு உண்டு என நினைக்கிறேன்.
என் பார்வையில் ஈழத்திற்கும் ருவாண்டாவிற்கும் உள்ள ஒரே ஒரு ஒற்றுமை “இனப்படுகொலை” மட்டும் தான். மற்றப்படி, ஈழத்தின் பிரச்சினைக்கும் ருவாண்டாவின் பிரச்சினைக்கும் அடிப்படையில் காரணங்கள் வேறு. ஈழத்தில் தமிழர்களை கல்வியில் “தரப்படுத்தல்” (Standardization) என்கிற சிங்கள ஆட்சியாளர்களின் பாகுபாட்டு (Discrimination) கொள்கை தான் ஈழப்போராட்டத்திற்கு வித்திட்டது. ருவாண்டாவில் பிரச்சனைக்கு காரணம் என்னவென்று உங்கள் கட்டுரையிலேயே குறிபிட்டுள்ளீர்கள்.
உங்கள் கட்டுரையைப் படிப்பவர்களுக்கு ஈழப்பிரச்சனையின் அடிப்படை காரணங்கள் தெரியாவிட்டால், அதை அவர்கள் ருவாண்டாவின் பிரச்சனையோடு ஒப்பிட்டு பார்ப்பதற்கு சந்தர்ப்பம் உண்டு அல்லவா. ஈழப்பிரச்சனையின் அடிப்படை காரணம் வேறு. ருவாண்டாவின் பிரச்சனைக்கு அடிப்படை காரணம் வேறு. நாங்கள் முழு இலங்கையையும் கேட்கவில்லையே. எங்கள் மூதாதையர்கள் ஆண்ட நிலத்தில் எங்களுக்குரிய உரிமைகளோடும் கெளரவத்தோடும் வாழத்தானே ஆசைப்படுகிறோம்.
இனிமேல், இங்கிலாந்து காலனி ஆதிக்கத்தை குறை சொல்லிக்கொண்டிருப்பதால், வன்னியில் மடிந்துகொண்டிருக்கும் என் உடன் பிறப்புகளுக்கு மீட்சி வந்து விடுமா? வரலாற்றை தெரிந்து கொள்வது ஒன்றுதான் மிச்சம். இனிமேல், எங்களை யாரும் இப்படி பலியாடு ஆக்க கூடாது என்றால், நாங்கள் எங்களுக்கான தேசியத்தை கட்டியெழுப்பி எங்கள் உரிமைகளை பாதுகாப்பது ஒன்றுதான் சிறந்த வழி.
//ஈழத்தில் தமிழர்களை கல்வியில் “தரப்படுத்தல்” (Standardization) என்கிற சிங்கள ஆட்சியாளர்களின் பாகுபாட்டு (Discrimination) கொள்கை தான் ஈழப்போராட்டத்திற்கு வித்திட்டது. //
இதையே எத்தனை காலத்துக்கு சொல்லுவீங்கோ? கிழக்கு மாகாண, மலையக தமிழர்கள் தரப்படுத்தலால் முன்னுக்கு வந்ததை மறந்திட்டீங்களோ? யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப் பட்ட சாதி மக்களுக்கு கல்வி மறுத்த மேல் சாதி தமிழரின் தரப்படுத்தலை (Caste Discrimination) மறந்திட்டீங்களோ?
தோழர் ரதி,
இந்தியாவில் பார்ப்பனிய மற்றும் ஷத்திரிய மேல்சாதியினர் சாதி ரீதியாகவும், வர்க்கரீதியாகவும் இன்றும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒடுக்கி வருகின்றனர். காலனிய ஆட்சிக்குப் பிறகு இது இன்னும் வளர்ந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் வேளாள ஆதிக்கம் என்பது யதார்த்தமான உண்மைதானே. இன்று ஈழப் போராட்டம் காரணமாக இந்த முரண்பாடு பின்னுக்கு போயிருக்கலாம். ஆனால் அது காலனிய ஆட்சியில்தான் இருந்தது இன்று இல்லை என்று அறிவிப்பு செய்யும் சூழல் வந்துவிட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா? எனில் ஆதாரத்தைக் காட்டுங்கள். அடுத்து சிங்கள தமிழ் முரண்பாட்டுக்கான வரலாற்றுப் பார்வையைத்தான் தோழர் கலையரசன் குறிப்பிட்டிருக்கிறார். இதில் எங்கு நீங்கள் முரண்படுகிறீர்கள்.
அடுத்து ஆங்கில ஏகாதிப்த்தியம் இத்தகைய சமூக ஏற்றத்தாழ்வுகளை வைத்து பலநாடுகளில் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை அமல் படுத்தியிருக்கிறது. எடுத்துக் காட்டாக பதினெட்டாம் நூற்றாண்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை இந்தியாவில் இப்போது இருப்பது போல இந்து – முசுலீம் முரண்பாடு இல்லை. 1857 முதல் இந்திய சுதந்திரப்போரில் இரண்டு பிரிவு மக்களும் ஒற்றுமையாக போராடி காலனிய ஆதிக்கத்தை எதிர்த்தார்கள். இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட வெள்ளையர்கள் இரு மதத்தையும் பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கினார்கள். இதில் இருமதங்களைச்சேர்ந்த மேல்சாதியினர் முக்கியமாக இந்து மேல் சாதியினர் மதவெறியைப் பரப்பும் வேலையை செய்தார்கள். அதன் பிறகுதான் இந்தியாவில் முதன்முறையாக மதக்கலவரம் என்பது உருவானது. இன்றும் பார்ப்பன இந்து மதவெறியர்கள் அரசியல் ரீதியாக மேலோங்கி இருப்பதையும், குஜராத்தில் அப்பட்டமான இனப்படுகொலை செய்தும் தண்டிக்கப்படாமல் ஆட்சியைத் தொடர்கிறார்கள். இது இப்பொது உள்ள விசயம்தானே? இதில் காலனிய காலத்தில் விதைக்கப்பட்ட வெறுப்பை வைத்து பார்ப்பன மேல்சாதியினர் ஆள்வதற்கு பயன்படுத்தும் தந்திரமாக இன்றும் தொடர்கிறது. 2001இல் குஜராத்தில் முசுலீம்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட மாதிரி, 2008இல் ஒரிசாவில் கிறித்தவ மக்கள் அதிலும் தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்கள் கொடூரமாக தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் அடக்கப்பட்டனர்.
இப்படி மூன்றாம் உலக நாடுகளின் சமூக அமைப்பில் காலனியவாதிகள் பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தியதற்கு ஏராளமான எடுத்துக் காட்டுகளை சொல்லமுடியும்.
நட்புடன்
வினவு
//இதையே எத்தனை காலத்துக்கு சொல்லுவீங்கோ?//
இதை ஈழவிடுதலை கிடைக்கும் வரை சொல்லுவமே! அது தானே கசப்பான உண்மை.
//கிழக்கு மாகாண, மலையக தமிழர்கள் தரப்படுத்தலால் முன்னுக்கு வந்ததை மறந்திட்டீங்களோ? யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப் பட்ட சாதி மக்களுக்கு கல்வி மறுத்த மேல் சாதி தமிழரின் தரப்படுத்தலை (Caste Discrimination) மறந்திட்டீங்களோ?//
கிழக்கு மாகாண, மலையக தமிழர்கள் முன்னுக்கு வந்தார்களா? You must be kidding me. சரி, ஏதோ சிங்கள மொழியை கற்று சிங்களனுக்கு லஞ்சம் கொடுத்து திருகோணமலையில் முன்னுக்கு வந்தீர்களாக்கும். மலையக தமிழர்கள் எப்போது முன்னுக்கு வந்தார்கள் அல்லது வரவிட்டார்கள்? கொஞ்சமாவது மனச்சாட்சியுடன் பேசுங்கள். மலையக மக்களை சிங்கள ஆட்சியில் குடியுடிமை கூட இன்றி குதிரை லாயத்தில் இன்னும் வைத்திருக்கிறார்களே, இது தான் அவர்க்ள் முன்னுக்கு வந்த லட்சணமா? எம் முன்னோர்கள் சாதியில் குடுமிபிடி செய்து மினக்கட்டதால் தான் தமிழன் இன்று அழிந்து கொண்டிருக்கிறான். ஆனால், சாதியை சொல்லி யாழ்ப்பாணத்தில் கல்வி மறுக்கப்பட்டதென்று 1800 களில் நடந்த கதையை சொல்கிறீர்களா? தமிழீழ விடுதலை புலிகளின் De facto state இல் எங்கே சாதி தரப்படுத்தல் இருந்த்தது? கல்வி எங்கே மறுக்கப்பட்டது? அதையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.
ரதி. நீங்கள் கோபமாக சொல்வது புரிகிறது. ஆனால் நான் மேற்சொல்லியிருக்கும் கருத்து சிங்களர்கள் தமிழர்களை ஒடுக்குவது தவறு என்ற பொருளிலும் உள்ளது என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
//சாதியை சொல்லி யாழ்ப்பாணத்தில் கல்வி மறுக்கப்பட்டதென்று 1800 களில் நடந்த கதையை சொல்கிறீர்களா? //
மேல்சாதி காடையர்கள் 1980 ல் பளையில் பள்ளிக்கூடம் போன தாழ்த்தப்பட்ட மாணவர்களின் புத்தகங்களை பறித்து எரித்தார்கள். 1930இல் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முதல்முறை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டபோது அவர்களுடன் வெள்ளாள மாணவர்களுக்கும் சமபோசனம் வழங்குவதை எதிர்த்து சேர் பொன். இராமநாதன் கவர்னரிடம் முறையிட்டார்.
1929ஆம் ஆண்டு பாடசாலைகளில் இன, மத, சாதி, தேசிய வேறுபாடு காட்டாமல் எல்லாப் பிள்ளைகளுக்கும் சரியாசனம் கொடுக்கவேண்டுமென அரசு அறிவித்தபோது வெகுண்டெழுந்த வெள்ளாளர்கள் பதினைந்து பாடசாலைகளைத் தீக்கிரையாக்கினார்கள்.
தம் சொந்தச் சகோதரர்களையே அடக்கியும் ஒடுக்கியும் இழிவுபடுத்திய யாழ்ப்பாணச் சமூகத்தின் கொடூரத்தின் கதை.
//தமிழீழ விடுதலை புலிகளின் De facto state இல் எங்கே சாதி தரப்படுத்தல் இருந்த்தது?//
நீங்கள் சொல்லும் தமிழ் ஈழம் பிற்காலத்தில் வந்தது. அதற்கு முன்னர் நீங்கள் யாழ்ப்பாணத்தில் சாதி தரப்படுத்தலை எதிர்த்து போராடி இருக்கிறீர்களா? தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி கற்கும் உரிமைக்காக ஆயுதப் போராட்டம் நடந்ததை அறியவில்லையா? தமிழீழப் போராட்டம் அதற்குப் பிறகு தானே வந்தது? இது உங்களுக்கு தெரியாதா?
//கிழக்கு மாகாண, மலையக தமிழர்கள் முன்னுக்கு வந்தார்களா? You must be kidding me. சரி, ஏதோ சிங்கள மொழியை கற்று சிங்களனுக்கு லஞ்சம் கொடுத்து திருகோணமலையில் முன்னுக்கு வந்தீர்களாக்கும்.//
ரதி உங்களுக்கு தரப்படுத்தல் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் அதைப் பற்றி கதைக்க வந்திட்டியள். பல்கலைக் கழக அனுமதிக்கு மாவட்ட ரீதியாக தரப்படுத்தல் வந்தது. ஒரு காலத்தில் அதிகளவு தமிழ் மாணவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். தரப்படுத்தலுக்கு பிறகு யாழ்ப்பான மாவட்ட மாணவர்கள் மாத்திரம் அதிக புள்ளிகளைப் பெற வேண்டி இருந்தது. . மட்டக்களப்பு, மலையக மாணவர்கள் குறைந்த புள்ளியுடன் தெரிவானார்கள். தரப்படுத்தலால் தான் இந்த மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் தெரிவானார்கள். நீங்கள் கூறும் வன்னியில் இருக்கும் De facto தமிழீழ மக்கள் கூட தரப்படுத்தலால் லாபம் அடைந்தவர்கள் தான்.
ரதி உங்களுக்கு விரும்பின மாதிரி எல்லாம் திரிபு படுத்தி சொல்றதுக்கு பெயர் உண்மை இல்லை.
வித்தகன் முதலில் ரதிக்கு வன்னியில் இருக்கும் நிலமை தெரியுமா? எங்கேயோ ஒரு நாட்டில் பாதுகாப்பாக இருந்து கொண்டு கதைக்கிறார்.
வித்தகன்,
நான் சொன்னதன் அர்த்தம் வன்னியிலும் Darfur இலும் மனிதமும் மனித உயிர்களும் மதிக்கப்படாததால் முதலில் அதை மாற்றுவோம் என்ற அர்த்தத்தில் தான். நீங்கள் சொன்னதில் நான் கோபப்ப்ட என்ன இருக்கிறது. மனித உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் இருவரது நோக்கமும்.
வினவு,
//அடுத்து சிங்கள தமிழ் முரண்பாட்டுக்கான வரலாற்றுப் பார்வையைத்தான் தோழர் கலையரசன் குறிப்பிட்டிருக்கிறார். இதில் எங்கு நீங்கள் முரண்படுகிறீர்கள்.//
ருவான்டாவின் பெரும்பான்மை இனமான ஹூட்டுக்களுக்கும், சிறுபான்மை இனமான துட்சிகளுக்கும்
அதிகார வெறி கொண்ட துட்சிகள் விரைவில் ருவான்டாவின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினர்.இலங்கை இனப்பிரச்சினையுடன் பெரும்பாலும் ஒத்திருப்பதை, நீங்கள் இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது புரிந்து கொள்வீர்கள்.//
வினவு, இதில் தான் நான் குழம்பிப்போனேன். ஈழத்தமிழர்கள் சிறுபான்மை இனம். ருவாண்டாவில் துட்சிகள் சிறுபான்மை என்கிறார். பின்னர், துட்சிகள், அதிகார வெறிகொண்ட துட்சிகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ரறினார்கள் என்று கட்டுரை குறிப்பிடுகிறது. பிறகு, இது இலங்கைப்பிரச்சினையுடன் ஒத்திருகிறது என்றால், அர்த்தம் என்ன? ஈழத்தமிழர்கள் எந்தகாலத்தில் முழு இலங்கையையும் ஆள ஆசைப்பட்டார்கள். எங்கள் பிரச்சனையையும் ருவாண்டா பிரச்சனையும் ஒப்பிட்டு பார்க்கும் ஒருவருக்கு ஈழத்தமிழர்கள் ஏதோ முழு இலங்கையையும் கேட்பது போல் தோன்றாதா?
அதனால் தான் ஈழப்போர் உருவாவதற்கான காரணத்தை சொல்ல சொல்லி கேட்டேன். கலையரசன் பதில் அளிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், நீங்கள் பதில் சொல்லியிருக்கிறீர்கள். ஈழபிரச்சனையும் ருவாண்டா பிரச்சனையும் பெரும்பான்மை, சிறுபான்மை பிரச்சனை. காலனி ஆதிக்கம் மதப்பிரச்சினை மற்றும் இன்ப்பிரச்சனையை தூண்டி விட்டது உண்மைதான். ஆனால் நான் இங்கு மதப்பிரச்சனையை பற்றி பேசவில்லையே. இதில் நீங்கள் ஏன் குஜராத் மதப்பிரச்சனையை பேசுகிறீர்கள்?
உங்கள் பதிலின் முதல் பகுதியில் Eurasin சொன்ன கருத்திற்கு தான் பதில் சொன்னீர்கள் என்று நினைக்கிறேன். வினவு, நான் காலனி ஆதிக்கத்தில் சாதி பாகுபாடு இல்லை என்று எங்கே கூறினேன்? காலனி ஆதிக்கத்தில் எம்மவர் சாதி பற்றி குடுமிபிடி சண்டை செய்து கொண்டிருக்க, சிங்களவர்கள் ஆட்சியைப்பிடிகும் வேலையில் இருந்திருக்கிறார்கள். Eurasin சொன்ன உதாரணங்கள் எல்லாமே 1948 இற்கு முதல் நடந்தவை. எனக்கு தெரிந்தவரை இலங்கை சுதந்திரத்தின் பின் சாதியை சொல்லி கல்வி மறுக்கப்படவில்லை.
//மேல்சாதி திமிர் ரதியிடமும் தெரிகின்றது//ரதி உங்களுக்கு தரப்படுத்தல் என்றால் என்னவென்றே தெரியாது// ரதிக்கு வன்னியில் இருக்கும் நிலமை தெரியுமா? எங்கேயோ ஒரு நாட்டில் பாதுகாப்பாக இருந்து கொண்டு கதைக்கிறார்.//
வினவு, Eurasin சாதியைப்பற்றி பேசியயுடன் அவருக்கு வக்காலது வாங்கும் நீங்கள், அவர் சொன்ன வசவுகளையும் படித்துப் பாருங்கள். இவர் சொன்ன மேல்சாதி திமிர் எல்லாம் எனக்கு கிடையாது. எம் முன்னோர்கள்,பெரியோர்கள் செய்த தவறை நாங்களும் செய்ய வேண்டாம் என்பது தான் விருப்பம். சாதி வெறி இல்லாத ஒரு சமூகம் தமிழருக்கு உருவாக வேண்டும் என்பதுதான் என் கனவு.
//அப்படியானால் எதற்காக ஈழத் தமிழர் பிரச்சினையில் இங்கிலாந்து தலையிட வேண்டும் என்று கேட்கிறீர்கள்? சிங்களவனோடு அடி பட்டோ பேசியோ தீர்த்துக் கொள்ள வேண்டியது தானே?//
நீங்கள் என் கருத்தை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நான் சொல்ல வந்தது அதைப்பற்றி பேசிக்கொண்டு இருக்காமல் ஏதாவது காரியத்தில் இறங்கினால் நல்லது என்ற அர்த்தத்தில் தான்.
Eurasin,
நீங்கள் என்னைப்பற்றி என்ன அவதூறு சொன்னாலும் சரி. மறுபடியும் நான் சொல்வது எம் முன்னோர்களும் பெரியோர்களும் செய்த தவறை நாங்கள் செய்ய வேண்டாம் என்பதுதான்
விளக்கத்துக்கு நன்றி. இப்போது புரிகிறது.
//வினவு, நான் காலனி ஆதிக்கத்தில் சாதி பாகுபாடு இல்லை என்று எங்கே கூறினேன்? காலனி ஆதிக்கத்தில் எம்மவர் சாதி பற்றி குடுமிபிடி சண்டை செய்து கொண்டிருக்க, சிங்களவர்கள் ஆட்சியைப்பிடிகும் வேலையில் இருந்திருக்கிறார்கள். Eurasin சொன்ன உதாரணங்கள் எல்லாமே 1948 இற்கு முதல் நடந்தவை. எனக்கு தெரிந்தவரை இலங்கை சுதந்திரத்தின் பின் சாதியை சொல்லி கல்வி மறுக்கப்படவில்லை.//
தோழர் ரதி
உங்களிடம் மேல்சாதி திமிர் இருப்பதாக யூரேசியன் எழுதியிருப்பதோடு நாங்கள் உடன்படவில்லை. ஆனால் சாதிய முரண்பாடு என்பதை ஏதோ இரண்டுசாதிகள் அடித்துக்கொள்ளும் விசயமாக நீங்கள்புரிந்திருப்பது தவறு என கருதுகிறோம். மேற்கண்ட வாசகதில் கூட எம்மவர் சாதி பற்றி குடுமிப்பிடி சண்டை என நீங்கள் குறிப்பிட்டிருப்பதன் பொருள் என்ன? இரண்டு சம தரத்தில் உள்ள சாதிகள் தங்களுக்குள் அடித்து கொள்வது என்பதுதானே? உண்மையில் மேல்சாதி வேளாள ஆதிக்கத்தில் ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் சிறைப்ட்டிருப்பதை உங்கள் கருத்து பார்க்கத் தவறுகிறது. யாழ்ப்பாணத்து மேல்சாதியினர் தமது சமூக மேலாண்மையின் காரணமாக மற்ற மக்களைவிட எல்லா விசயங்களிலும் முன்னணி வகித்தார்களா இல்லையா?
உங்கள் கருத்துப்படி சாதி வெறி இல்லாத ஒருசமூகம் தமிழருக்கு உருவாக வேண்டுமென்றால் மேல்சாதியின் சாதிவெறிதான் களையப்படவேண்டும். அதுவும் அவர்களாகவே களைந்து கொள்ளமாட்டார்கள். ஒடுக்கப்பட்ட சாதிகளின் சமூகப் பொருளாதார விடுதலையின் மூலமே அந்த திமிர் களையப்பட முடியும். சாரமாகச் சொன்னால் சாதி வெறியின் சமுக இருப்பை நீங்கள சரியாக புரிந்து கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது.
தோழமையுடன்
வினவு
//ருவான்டாவின் பெரும்பான்மை இனமான ஹூட்டுக்களுக்கும், சிறுபான்மை இனமான துட்சிகளுக்கும்
அதிகார வெறி கொண்ட துட்சிகள் விரைவில் ருவான்டாவின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினர்.இலங்கை இனப்பிரச்சினையுடன் பெரும்பாலும் ஒத்திருப்பதை, நீங்கள் இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது புரிந்து கொள்வீர்கள்.//
ருவான்டாவின் பெரும்பான்மை இனமான ஹூட்டுக்களுக்கும், சிறுபான்மை இனமான துட்சிகளுக்கும்
அதிகார வெறி கொண்ட துட்சிகள் விரைவில் ருவான்டாவின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினர்.இலங்கை இனப்பிரச்சினையுடன் பெரும்பாலும் ஒத்திருப்பதை, நீங்கள் இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது புரிந்து கொள்வீர்கள்.//
நான் வெவ்வேறு இடங்களில் எழுதிய வசனங்களை தொகுத்து, ரதி தவறாக புரிந்து கொள்கிறார், மற்றவர்களையும் குழப்புகிறார் என நினைக்கிறேன். துட்சிகளும் முதலில் தமக்கென தனிநாடு தான் கேட்டார்கள். முழு ருவாண்டாவையும் கேட்கவில்லை. ஆனால் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட ஹூட்டு இராணுவமும், அவர்களை சார்ந்திருந்த ஹூட்டு மக்களும் அயல் நாடான கொங்கோவிற்கு தப்பி ஓடிக் கொண்டிருக்கும் போது, துட்சிகளின் முன்னேற்றத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அப்படியான ஒரு நிலையில் வெறும் இனத் தேசியவாதத்தால் வழிநடத்தப் பட்ட துட்சிகள், குறிப்பிட்ட எல்லையுடன் நின்று கொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? பெரும்பான்மையினரின் பேரினவாத அரசியலும், அதற்கு எதிரான சிறுபான்மையின குறுந்தேசியவாத அரசியலும் எவ்வளவு தூரம் போகும் என்பதற்கு ருவாண்டா ஒரு உதாரணம் மட்டுமே. மற்றும்படி அதை அப்படியே இலங்கை நிலைமையுடன் பொருத்திப் பார்க்கச் சொல்லவில்லை. நான் சொன்னது, இனப்பிரச்சினையின் மூலம் (ஐரோப்பியர்கள்) ஒன்று என்பதை மட்டுமே.
இலங்கையில் ஈழத் தமிழரின் போராட்டம் உலகிலேயே தனித்துவமானது என்ற மாயை காணப்படுகின்றது. காலனிய காலகட்டத்தில், ஐரோப்பியர் இனங்களை பிரித்தாளும் அரசியலை நடைமுறைப்படுத்தியதன் விளைவை பல நாடுகள் இன்று அனுபவிக்கின்றன. “இனம்” என்ற சொல்லையே ஐரோப்பியர் தான் கற்பித்தனர். அப்படி இருக்கையில் எந்தவொரு இனமும் இயற்கையிலேயே இனவெறி கொண்டது என்ற கூறுவது தவறு. ருவாண்டாவில் ஹூட்டுகளாயினும், இலங்கையில் சிங்களவர்களாயினும், அனைத்து மக்களும் இனவெறி கொண்டலையும் கெட்டவர்களல்ல. அதே நேரம் சிறுபான்மை துட்சிகளும், தமிழர்களும் மனதில் இனவாதம் துளியுமற்ற நல்லவர்கள் என்று யாரும் கூற முடியாது. ஏனெனில் ஒவ்வொரு இனமும் தான் பிற இனத்தவரை கொன்றால், அதை நியாயம் என்று சொல்கின்றது. பிற இனத்தவர் தனது இனத்தவரை கொன்றால் இனப்படுகொலை என்று கூறுகின்றது. ஒவ்வொரு இனமும் தான் பகைமை கொண்டுள்ள அடுத்த இனத்தைப் பற்றி புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. இதைத் தான் இனப்பிரச்சினை என்பது.
//எங்கள் பிரச்சனையையும் ருவாண்டா பிரச்சனையும் ஒப்பிட்டு பார்க்கும் ஒருவருக்கு ஈழத்தமிழர்கள் ஏதோ முழு இலங்கையையும் கேட்பது போல் தோன்றாதா?
அதனால் தான் ஈழப்போர் உருவாவதற்கான காரணத்தை சொல்ல சொல்லி கேட்டேன். கலையரசன் பதில் அளிப்பார் என்று எதிர்பார்த்தேன். //
ரதி, ஈழப்போர் எழுபதுகளில் தரப்படுத்தலுடன் தான் ஆரம்பித்தது என்று நீங்கள் நம்புகின்றீர்கள். ஆனால் அது ஒரு அரைவாசி உண்மை மட்டுமே. தரப்படுத்தலால் பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்பட்ட யாழ்ப்பாண இளைஞர்கள் ஆயுதபோராட்டத்தை நாடியது உண்மை தான். ஆனால் அதற்கு முன்னரே தமிழீழக் கோரிக்கை பிரதேசவாத தமிழ் அரசியல் கட்சிகளால் முன்மொழியப்பட்டன. அதற்கு பின்னணியில் கொழும்பில் அரசியல்,பொருளாதார ஆதிக்கத்தை இழந்த யாழ் மத்தியதர வர்க்கம் இருந்தது. அதாவது இலங்கை முழுவதையும் நிர்வகித்து வந்த யாழ் மத்தியதர வர்க்க உரிமை பறிபோன பின்னர் தான் தமிழீழம் கேட்டார்கள். சுதந்திரத்திற்குப் பின்னர், சிங்களக் கிராமங்களில் கூட அரச பதவிகளில் தமிழர்கள் தான் இருந்தனர். அதற்கு காரணம், ஆங்கிலேயர்கள் தமிழர்களுக்கு மட்டுமே கல்வி போதித்து அரச நிர்வாகம் செய்யும் (தமிழ்)நடுத்தர வர்க்கம் ஒன்றை உருவாக்கினார்கள். இதே கதை ருவான்டாவில் நடக்கவில்லையா? இலங்கையில் கொண்டுவரப்பட்ட அதே தரப்படுத்தல், ருவாண்டாவிலும் பிரச்சினையை தூண்டியது என தெரிவித்திருக்கிறேன். இதை விட சிறந்த விளக்கம் தேவையில்லை. உங்களைப் பொறுத்தவரை ஈழப் பிரச்சினை தரப்படுத்தலுடன் ஆரம்பித்தது. சிங்களவர்களைப் பொறுத்தவரை, ஈழப்பிரச்சினை என்பதுகளுக்குப் பின்னர் வந்த ஆயுதபோராட்டத்துடன் ஆரம்பமாகின்றது. அதாவது பிரச்சினைக்கு சிங்களவர்கள் தான் மூல காரணம் (தரப்படுத்தல்) என்பது தமிழர் தரப்பு நியாயம். ஆனால் பிரச்சினைக்கு தமிழர்களே மூல காரணம் (ஆயுதப் போராட்டம்) என்பது சிங்களத் தரப்பு நியாயம். இரண்டு தரப்பும் அதற்கு முந்திய ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியை மறந்து விட்டார்கள். சிங்களவர்களும் தமிழர்களும் தமக்கு சாதகமான சரித்திரம் பேசுவதால் தான், இலங்கை இனப்பிரச்சினையை இன்று வரை எவராலும் தீர்க்க முடியாமல் உள்ளது.
வினவு,
என் கருத்தை கீழே பதிவு செய்த்திருக்கிறேன்.
நன்றி.
தோழர் ரதி,
சாதியம் குறித்து விவாதிப்பதில் அநாகரிகம் இல்லை. உண்மையில் மனித சமூகத்தில் ஏற்றத்தாழ்வு கற்பித்து இழிவாக நடத்தும் அந்த பார்ப்பனிய அமைப்புதான் அநாகரிகமானது. அடுத்து தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் உழைத்து முன்னேற வேண்டும் என்பதைத்தான் இந்தியாவில் இந்து மதவெறி அமைப்புக்கள் பிரச்சாரம் செய்கின்றன. ஆனால் அந்த மக்களை பின்தங்கிய சூழலில் முடக்கியதே ஆதிக்க சாதி அமைப்புத்தானே? அதை தகர்க்காமல் தனி ஒரு தாழ்த்தப்பட்டவர் அல்லது பெரும்பான்மையான மக்கள் விடுதலை அடைவதுஎப்படி? இந்தியாவில் கே. நாராயணன் எனும் தலித் நீங்கள் கருதும் உழைத்து முன்னேறி அதுவும் வெளிநாடுகளில் பயின்று இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தார். ஆனால் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட மக்கள் இன்னும் தமது மீதான சாதிய அடக்குமுறையை எதிர்த்து போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாராயண்னைப்போல ஒரு சில தலித்துக்கள் முன்னேறுவதால் மொத்த தலித் சமூகமும் பயனடைந்து விடுமா என்ன? உங்கள் கருத்துப்படி பார்த்தால் தாழ்த்தப்பட்ட மக்களின் பின்தங்கிய நிலை இயற்கையான நீதி என்றாகிறது. ஆனால் இந்த பின்தங்கிய நிலை காலம் காலமாக ஆதிக்க சாதி அமைப்பு உருவாக்கிய வன்முறையைத்தான் அதாவது மனிதன் உருவாக்கிய செயற்கையான அநீதி என்பதைத்தான் சுட்டுகிறது. மேலும் ஆதிக்க சாதியின் மேல்நிலை மூளையில் மட்டும் குடியிருக்கும் கருத்துப் பிரச்சினையல்ல. அது கணிசமான மக்களுக்கு எந்த வசதிகளையும் மறுத்து அடிமையாக வைத்திருக்கும் பௌதீகப் பிரச்சினை. சமூகரீதியான வர்க்கப்போராட்டத்தின் மூலமே அதைத் தகர்க்க முடியும்.
வினவு
வினவு,
//உங்கள் கருத்துப்படி பார்த்தால் தாழ்த்தப்பட்ட மக்களின் பின்தங்கிய நிலை இயற்கையான நீதி என்றாகிறது.//
நான் ஒரு ஈழத்தமிழ். என்னிடமிருந்து ஓரு போதும் அப்படி ஒர் கருத்து வராது.நான் சொன்னது “உரிமைகளுக்காக உழைக்க வேண்டும். உரிமைகளுக்காக போராட வேண்டும்” என்ற அர்த்தத்தில் தான். போராட்டமே தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கை என்றாகிவிடக்கூடாது. யாரோ என்னை ஏதோ சாதி பேரை சொல்லி அடக்க நினைத்தால், அது தான் என் விதி என்று நான் நினைத்தால் அது என் முட்டாள் தனம். ஒரு தனிமனிதன் தன் அறியாமையை களைய வேண்டும் அது தான் என் கருத்து. தனிமனிதன் என்பவன் ஒரு சமூகத்தின் அங்கம். அவன் தனக்குள்ளும் தன் சமூகத்திடமும் ஒரு விழிப்புணர்வை கொண்டு வர வேண்டும். அதன் மூலமே அதன் அடுத்த படிநிலையான சமூகரீதியான வர்க்கப்போராட்டத்தை முன்னெடுக்க முடியும். இதை தான் நான் சொல்ல விளைந்தேன்.
//சமூகரீதியான வர்க்கப்போராட்டத்தின் மூலமே அதைத் தகர்க்க முடியும்.//
மற்றப்படி, நான் ஒரு ஈழத்தமிழ். எனக்கு இந்தியாவில் தலித் சமூகத்திற்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது என்ற வரைக்கும் தான் தெரியும். உங்கள் கட்டுரைகள் படித்து தான் அதற்கு மேல் ஓரளவுக்கு அறிந்து வைத்திருக்கிறேன். உங்கள் சாதி பற்றிய கட்டுரைகளில் எப்போதும் “பார்ப்பனீயம்” என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. அது அந்த முழு சமுகத்தையும் நீங்கள் குற்றம் சொல்வது போல் தெரிகிறது. “ஏன் அவர்களில் நல்லவர்கள் இல்லையா? அல்லது தாழ்த்தப்பட்ட சாதியில் எல்லோரும் நல்லவர்களா?” இப்படி ஒரு கேள்வி என் மனதில் எழுகிறது. இதை கொஞ்சம் விளக்குங்களேன்.
விக்கிரமாதித்தன்,
நீங்கள் கூறியது போல மேல் சாதி கீழ் சாதி என குறிப்பிட்டது தவறு. ஆதிக்க சாதி, தாழ்த்தப்பட்டவர்கள் என்பது தான் சரி.
இனி இந்த தவறு நடக்காது. இந்த பின்னூட்டம் நேற்றே இடப்பட்டும் தொழில்நுட்பக்கோளாறினால் வரவில்லை அதனால் மீண்டும் இன்று பிரசுரிக்கப்படுகிறது.
நட்புடன்
வினவு
அய்யா குடுமி வாசர்… சாரி காமி பேசார் .. ஆரியம் திராவிடம் என்பதை நீங்கள் குப்பையில் போட்டது பற்றி கேள்வி பட்டோம்.. வாழ்த்துக்கள்… அதே மாதிரி உங்கள் பூணூலையும் கொஞ்சம் கலட்டி வீசுங்களேன்.. எதற்கையா அந்த பூணூல் , உங்களை மற்ற கீழ் சாதிகளில் இருந்து வேறுபடுத்தி காட்டவா…? இதற்க்கு எல்லாம் ஒரு ஆன்மீக விளக்கத்தையோ அல்லது தனி மனித சுதந்திரத்தையோ மேற்கோள் காட்டுவீர்தானே…
பிறப்பால் பார்ப்பனன், பூணுல் அணிந்தவன் என்ற ஒரே காரணுத்துக்காக ஒருவன் கோவில் கருவறைக்குள் செல்ல முடியும் என்றால் நீர் உண்மையான மனிதனாக இருந்தால் இந்த பார்ப்பனிய குப்பைகளையும் கொஞ்சம் சுத்தம்செயுங்களேன் ..
நீங்கள் தாழ்த்தப்பட்ட மனிதர் அனைவருக்கும் பூணூல் அணிவித்து எல்லோரையும் உயர்ந்த சாதியாய் ஆக்க வேண்டும் என ஆவல்.. செய்வீர்களா குடுமி வாசர்.. ச்சே காமி பேசார்..
பகத்து,
நான் பூனூல் அணியும் ஜாதியல்ல. பூனூல் வெறும் ஒரு உருவகம் (symbolism) தான். அதை யார் வேண்டுமானாலும் அணியலாம், அணிவிக்கலாம்.
அதற்கும் ஆரிய-திராவிட இனவாத வெறுப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
Don’t put a red herring.
அது சரி….ஒரு சந்தேகம். தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் பூனூல் போட்டு யாரை விட உயர்ந்த மக்கள் ஆகவேண்டும் ?
கலை,
//உங்களைப் பொறுத்தவரை ஈழப் பிரச்சினை தரப்படுத்தலுடன் ஆரம்பித்தது.// நான் சொன்ன ஈழப்போர் என்பது ஆயுதப் போராட்டம் ஆரம்பமானதை. ஆயுதப்போராட்டம் தரப்படுத்தலுக்கு பின்பு தானே ஆரம்பிக்கப்பட்டது. தந்தை செல்வா அதற்கு முன்னே போராட்டம் நடத்தியதையும் அறிவேன்.
// ரதி தவறாக புரிந்து கொள்கிறார், மற்றவர்களையும் குழப்புகிறார் என நினைக்கிறேன்.//
கலையரசன், நான் மற்றவர்களை குழப்ப வேண்டும் என்று எந்த நோக்கமும் எனக்கு கிடையாதது. அதற்குரிய தேவையும் எனக்கு இல்லை. ஈழப்பிரச்சனையை ருவாண்டாவுடன் ஒப்பிட்ட போது ஈழப்பிரச்சனையின் அடிப்படை காரணங்களையும் விளக்குங்கள் என்றுதானே கேட்டேன். அதற்கு ஏன் இவ்வளவு கோபப்படுகிறீகள்?
//சிங்களவர்களும் தமிழர்களும் தமக்கு சாதகமான சரித்திரம் பேசுவதால் தான், இலங்கை இனப்பிரச்சினையை இன்று வரை எவராலும் தீர்க்க முடியாமல் உள்ளது.//
இது நான் இதுவரை கேள்விப்படாத புதுமையான விளக்கம். அப்படியானால், தமிழர்கள் சரித்திரம் பேசுவதை நிறுத்தினால், ஈழத்தில் இனப்படுகொலை நிறுத்தப்பட்டு விடுமா?
ரதி,
உங்களுடன் எனக்கு கோபமெதுவும் இல்லை. ஆனால் நான் தெளிவாக பல தடவை சொன்னவற்றை, நீங்கள் புரிந்து கொள்ள கஷ்டப்படுவது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அதே நேரம், கட்டுரையில் என்னால் வெவ்வேறு இடங்களில் கூறப்பட்ட வாக்கியங்களை வெட்டி ஒட்டி பேசுவது சரியானதாகப் படவில்லை. ஈழப் பிரச்சினைக்கும், ருவாண்டாப் பிரச்சினைக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமையை இதுவரை பல உதாரணங்களுடன் விளக்கி விட்டேன். அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் திரும்ப திரும்ப ஒரே கேள்வியையே கேட்டுக் கொண்டிருப்பது ஏன்? என்ற கேள்விக்கான பதில் உங்களுக்கு மட்டும் தான் தெரியும்.
ஆயுதப் போராட்டம் என்பது ஈழப்பிரச்சினையின் ஒரு வடிவம் மட்டும் தான். தமிழர் பிரச்சினை அதற்கு முன்னரும் இருந்தது. அப்போது வன்முறையற்ற வடிவத்தில் போராடினார்கள். போராட்டத்தை உருவாக்கிய ஈழப்பிரச்சினையின் மூலம் காலனிய காலத்திலேயே ஆரம்பித்து விட்டது. ஆங்லேயர்கள் சிங்களவரை புறக்கணித்து, (யாழ்ப்பாண) தமிழருக்கு மட்டும் மேலைநாட்டு கல்வியை போதித்து, அரச பதவிகளில் அமர்த்தினார்கள். உத்தியோகம் பார்த்து நிறைய சம்பாத்தித்த தமிழர்கள் சிங்களப் பகுதிகளும் காணிகளை வாங்கிப் போட்டார்கள். (பிற்காலத்தில் பண்டாரநாயக்கவின் நில உச்சவரம்பு சட்டத்தால், தமிழருக்கு சொந்தமான பல ஏக்கர் காணிகள் பறிக்கப்பட்டன.) இந்த பாகுபாட்டால், அப்போதிருந்தே சிங்கள, தமிழ் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தோன்றி விட்டன. அது வளர்ந்து இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இரண்டு இனங்களுக்கு இடையிலும் பிரச்சினையை உருவாக்கி, மோத விட்டு வேடிக்கை பார்த்த ஆங்கிலேயர்கள், இப்போது தமக்கு எதுவும் தெரியாது என்பது போல நடிக்கிறார்கள். ஆனால் ஒரு ஈழத்தமிழரான நீங்கள் அப்படி பாசாங்கு செய்ய முடியாது. ஒரு பிரச்சினை எங்கே, எப்படி ஆரம்பமாகியது என்று தெரிந்து கொண்டால் தான் அந்த பிரச்சினையை தீர்க்கலாம். இனப்பிரச்சினை புற்று நோய் போன்றது. அதன் வேரை கண்டுபிடித்து அழிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது மீண்டும் மீண்டும் தொடரவே செய்யும்.
ஈழப்பிரச்சினையின் அடிப்படை காரணங்களை ஏற்கனவே பல தடவை கூறிவிட்டேன். அவை ருவான்டாவின் அடிப்படைக் காரணங்களுடன் ஒத்திருப்பதை பலரும் புரிந்து கொண்டு விட்டார்கள். அதையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள முடியாமல் போனதற்கு காரணம், தமிழ் தேசியவாதம் தனக்கென உருவாக்கி வைத்துள்ள ஒரு தலைப்பட்சமான சரித்திரம். தமிழர்கள் சரித்திரம் பேசுவதை நிறுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. அதை மாற்ற வேண்டும். இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் பொதுவான சரித்திரம் வர வேண்டும்.
தமிழர்களும் சிங்களவர்களும் தமக்கு சாதகமாக சரித்திரத்தை திரிபுபடுத்தி பரப்பி வருகின்றனர். உதாரணத்திற்கு தமிழர்களும் சிங்களவர்களும் இலங்கைத்தீவுக்கு தாமே முதன்முதலில் வந்ததாக கூறிக் கொள்கின்றனர். சிங்களவர் தம்மை சரித்திர காலத்தில் இருந்து அடக்கி ஆள்வதாக தமிழரும், தமிழர் தம்மை சரித்திர காலத்தில் இருந்து அடக்கி ஆள்வதாக சிங்களவரும் கூறுகின்றனர். இரண்டு சமூகங்களிலும் இருக்கும் தேசியவாதிகளுக்கு மக்களை அணிதிரட்ட இந்த ஒருதலைப்பட்சமான சரித்திரம் பயன்படலாம். ஆனால் அது ஒரு நாளும் பிரச்சினையை தீர்க்கப் போவதில்லை. தமிழீழமே கிடைத்தாலும், இரண்டு சமூகங்களும் எதிரிகளாக அடுத்த நூறு தலைமுறைக்கும் சண்டை பிடித்துக் கொண்டிருப்பார்கள்.
உதாரணத்திற்கு ஜெர்மனியையும், பிரான்சையும் பாருங்கள். இரண்டாவது உலகப் போர் வரை இரண்டு நாடுகளும் நூறு வருடங்கள் எதிரிகளாக சண்டை போட்டார்கள். அதுவரை இரு நாடுகளும் தமக்கு சார்பான திரிபுபடுத்திய சரித்திரக்கதைகளை பரப்பி வந்தனர். ஆனால் கடந்த 60 வருடங்களாக, அதையெல்லாம் மறந்து சமாதானமாக வாழ்கிறார்கள். அதற்கு இரண்டு நாடுகளும் தமது தவறுகளை திருத்திக் கொண்டு, பொதுவான பக்கச்சார்பற்ற சரித்திரத்தை ஏற்றுக் கொண்டமை முக்கிய காரணம்.
கலையரசன்,
இதற்கான பதிலை கீழே பதிவு செய்துள்ளேன்.
நன்றி.
கலையரசன்,
//அன்று புஷ்ஷின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்த தேசியவாதத் தமிழர்கள் (உங்கள் மொழியில்: ஈழத் தமிழர்கள்) நிறையப்பேர். பாலஸ்தீன இன அழிப்பு செய்யும் இஸ்ரேலிய பயங்கரவாதத்திற்கு எதிரான போரையும், காஷ்மிரில் இன அழிப்பு செய்யும் இந்தியாவின் பயங்கராதத்திற்கு எதிரான போரையும் ஆதரிக்கும் ஈழத்தமிழரை பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும்//
எந்த ஈழத்தமிழன் உங்களிடம் வந்து இதயெல்லாம் ஆதரிப்பதாக கூறினான்? நான் இனப்பிரச்சனையை பற்றி கேட்டால் நீங்கள் சாதிப்பிரச்சனைக்கு தாவுகிறீரகள் அல்லது தேவையில்லாமல் சுத்திவளைத்து ஏதேதோ பதில் சொல்கிறீர்கள்.ஆனால், உங்கள் பதில்கள் மூலம் உங்களை அடையாளம் காட்டியதற்கு நன்றி.
//உண்மைகள், கருத்துகள் யாவும் உங்களுக்கு புரியவில்லை என்று சொல்ல முடியாது. இவையெல்லாம் நீங்கள் ஏற்கனவே நம்பிகொண்டிருக்கும் அரசியல் கொள்கையுடன் முரண்படுவதால், உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.//
இதையே தான் நானும் திருப்பி உங்களுக்கு சொல்கிறேன். நீங்கள் மட்டும் தான் நடுநிலைவாதி மற்ற ஈழத்தமிழன் எல்லாம் அடிமுட்டாள் இனப்படுகொலையை ஆதரிப்பவன் என்னும் உங்கள் அறியாமையை, அப்பாவித்தனத்தை என்னவென்று சொல்வது. உலகிலுள்ள இனத்திற்கெல்லாம் நடுநிலையில் நின்று நியாயம் சொல்லுங்கள். தயவு செய்து ஈழத்தமிழனை மட்டும் விட்டு விடுங்கள். உங்களைப் போன்றவர்கள் ஒருதலைப்பட்சமாக நியாயம் சொன்னால் ஈழத்தமிழனுக்கு என்றைக்குமே விடியாது. மீண்டும் ஒருமுறை உங்களை யாரென்று அடையாளம் காட்டியதற்கு நன்றி.
கலையரசன், ரதி போன்றவர்களுடன் விவாதத்திற்கு போகாதீர்கள். அவர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதாடுபவர்கள். தான் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும், ஆனால் மற்றவர்கள் சொல்வதை கேட்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்ப்ர்ர்கள். இவர்கள் திருந்த மாட்டார்கள்.
தமிழ் என்று குரல் கொடுத்துக் கொண்டு தமிழ் மக்களின் அழிவிலும், மண்ணின் அழிவிலும் வியாபாரம் செய்து தம்மைச் செழுமைப் படுத்திக் கொள்ளும் சிறுமைத்தனங்களைக் காணும் போது அடக்க முடியாத சினம் எழுகின்றது. அது மட்டும்தான் எம்மால் முடிகின்றது. இத்தனைக்கு அவர்கள்தான் தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரோடு உலவுகின்றார்கள். வன்னி மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதை ……
http://www.sooddram.com/Articles/general/Apr122009_Karuppi.htm
கேள்வி;: நாங்கள் வவனியா அகதி முகாமக்குச் சென்றிருந்த போது, அங்கிருந்த பலர் தங்கள் அனுபவத்தைச் சொல்லும் போது ‘இன்று அங்கு (பாதுகாப்பு வலயத்துக்குள்) அகப்பட்டக்கொண்டவர்கள் நாளாந்த கூலி வேலை செய்த பிழைப்பவர்கள் பணம் கொடுத்துத் தப்பி வர வசதியற்றவாகள். தப்பி வரும் போது பலிகளின் அடி உதை துப்பாக்கிச் சூடுகளுக்குப் பலியாகிறார்கள் என்றும்….
http://www.theneeweb.de/html/120409-1.html
Post a Comment