Skip to content

வினவில் இடானியாவின் கடிதத்துடன் சனிக்கிழமை வாசகர் கவிதைகள்!

வினவில் ஒவ்வொரு சனிக்கிழமையும் வாசகர் கவிதைகளை வெளியிடலாமென்று ஒரு யோசனை! பொதுவில் தமிழ்க்கவிதை உலகம் வாரமலர் வகையில் அரட்டையாகவும், வைரமுத்து வகையில் இரவில் பிறந்தோம் இன்னும் விடியவே இல்லை என்று வார்த்தை அலங்காரமாகவும், சிறுபத்திரிகை வகையில் போலி மன அவஸ்தை புலம்பலாகவும், பெண்ணிய வகையில் ஈராக் மீதான அமெரிக்காவின் போர்கூட பெண்ணுடல் மீது ஆண் கொண்ட உரிமையென்ற உளறலாகவும், த.மு.எ.ச வகையில் பழங்கஞ்சி ஞாபகமாகவும் சலிப்பூட்டுகிறது. புரட்சி குறித்த விருப்பார்வம் கொண்ட பல கவிதைகளும் கூட முழக்கங்களாகவோ பிரகடனங்களாகவோ சுருங்கி விடுகின்றன. மொத்தத்தில் கவி உலகம் தனித்துவமான ஆழ்ந்த சமூக அனுபவக் கிளறலின்றி அழுது வடிந்து கொண்டிருக்கிறது.

புழங்கும் எல்லா கலைகளிலும் கவிதை எழுதுவது மிகவும் சுலபமாகிவிட்டது. ஒரு பேப்பரும், பேனாவும், மழைக்காலம் போன்ற குதூகலமான காலநிலையும், மனைவி தரும் சரியான காப்பித் தண்ணியும், இருந்தால் பத்துவரியில் ஒரு ஆண் கவிதை தயார். உரையாடலையும், பொருளையும், வார்த்தை சேர்க்கைகளையும் மாற்றிப்போட்டால் கவிதை சுலபமாக யாருக்கும் வந்து விடுகிறது. இதன் காரணமாகவே கவிதை மட்டும் எழுதுவோர் மீது எமக்கு அவ்வளவாக நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை. கவிமணிகள் சண்டைக்கு வரவேண்டாம்.

ஒரு அழுத்தமான கவிதை ஒரு தாயின் பிரசவ வேதனையைக் கொண்டிருக்க வேண்டும். பல மணிநேர அவஸ்தைகளுக்கு ஈடுகொடுத்து அதை வெடிக்க வைக்கும் தருணத்தில் கச்சிதமான வார்த்தைகளையும், படிமங்களையும் அழுந்தக் கோர்த்து எழுதிப் பார்க்க வேண்டும். படிப்பவர்களின் இதயத்தை அசைத்து மூளையில் ஒரு புதிய அனுபவத்தை, “நாமோடு” முரண்படும் “நானின்” சுயவிமர்சனத்தை, மனதில் கரையாமல் தங்கி வினையாற்றும் வகையில் வேதியியல் சேர்க்கையை கவிதை கொண்டிருக்க வேண்டும்.

நல்ல கவிதைகள் படித்து நாளாயிற்று என்று புலம்பிக் கொண்டிருப்பதால் எந்தப் பயனுமில்லை. வினவின் வாசகர்களிடமிருந்து நல்ல கவிதைகள் வரக்கூடும் என்ற நம்பிக்கையிலிருந்தே இந்த யோசனை!

எழுதுங்கள். முழக்கங்களை கவிதைகளாக்கும் முயற்சி வேண்டாம். சமூக, பண்பாட்டுக் கவிதைகளில் தேறும் போதே நல்ல அரசியல் கவிதைகள் பிறக்கும். மற்றவருக்கு உபதேசம் செய்யும் வகையில் எழுதுவதைத் தவிர்த்து நாம் ஏன் அப்படி இல்லை, அல்லது அப்படி இருக்கிறோம் என்ற சுயவிமர்சனத்தை கவிதை அனுபவமாக எழுதுங்கள். உங்கள் வேலை, குடும்பம், நட்பு, பிரிவு, தோழமை இதன் கள, காட்சி, இயக்க, நினைவு முரண்பாடுகளை கவிதையாக்குங்கள்.

வினவில் சனிக்கிழமை தோறும் கவிதைகள் வெளியிடுவோம். மற்றபடி ஒரு கவிதை ஏன் பிரசுரமானது, ஏன் பிரசுரமாகவில்லை என்று நீங்கள் கேட்பதும் நாங்கள் அதற்கு பதில் சொல்வதும் சாத்தியமில்லை. இதைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். கூடவே புதிய கலாச்சாரத்தில் வந்த மற்றும் சில மொழிபெயர்ப்பு கவிதைகளையும் இத்துடன் இணைத்து வெளியிடுகிறோம். அவை கற்றுக் கொள்வதற்கு பயன்படும். எந்த அளவுக்கு நாம் ஏராளமான நல்ல கவிதைகளை படிக்கிறோமோ அந்த அளவு நாம் ஏன் எழுத வேண்டுமென்ற கேள்வி, தயக்கத்திலிருந்து நல்ல கவிதைகள் பிறக்கும்.

விரைவில் வினவின் வாசகர்களில் சிலர் நல்ல கவிஞர்களாக உருவாவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். கவிதைகளை மின்னஞ்சலில் அனுப்புங்கள்.

*************

இந்த அறிவிப்பை ஒரு நல்ல கவிதையுடன் ஆரம்பிக்க வேண்டுமென்பதால் இங்கே ஒரு கவிதை!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்று நிகாரகுவா. 1979 ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் நாள், நிகராகுவாவின் சர்வாதிகாரியும், அமெரிக்க உதவியுடன் ஆட்டம் போட்டவனுமாகிய அனஸ்டூடசியோ சமோசாவின் ஆட்சி வீழ்த்தப்பட்டு மக்கள் வெற்றி கண்ட மகத்தான நாள். இத்தேசியப் புரட்சியில் பங்கு கொண்ட இடானியா என்ற பெண் போராளி 8.3.1979 தேதியில் தனது மகளுக்கு எழுதிய கடிதம் கீழே தரப்படுகிறது. 16.4.1979 அன்று சமோசாவின் இராணுவத்தால் கொல்லப்பட்டபோது இப்போராளியின் வயது 26

தோழர் இடானியா மற்றும் அவரது மகள் - 1976

தோழர் இடானியா  – 1976


இடானியாவின் கடிதம்!

எனது அன்பு மகளே,

எல்லா இடங்களிலும் மக்களுக்கு
இது ஒரு முக்கியமான நேரம்.
இன்று நிகராகுவாவில்,
நாளை பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில்,
பிறகு உலகம் முழுவதும்.

புரட்சி
ஒவ்வொருவராலும் தரமுடிந்த அனைத்தையும் கோருகிறது.
நமது மனசாட்சியும்தான்.

தனி மனிதர்களான நாம் பிரத்யேகமாகச் செயல்பட்டு
இந்த உருவாக்கத்தில் இயன்றளவு,
உதவிடவேண்டி வலியுறுத்துகிறது.

விரைவிலேயே ஒருநாள்
சக மனிதர்களைப் போல வளர்ந்து முன்னேறி,
விரோதிகளாக அல்லாமல், சகோதர சகோதரிகளாக
சுதந்திரமான சமூகத்தில் வாழ்வது,
உனக்கு சாத்தியமாகுமென்று நம்புகிறேன்.

அப்போது உன்னுடன் கைகோர்த்து வீதிகளில் செல்லும்போது
எல்லோரும் புன்னகைப்பதை குழந்தைகள் சிரிப்பதை
பூங்காக்கள் நதிகளையெல்லாம் பார்க்க விரும்புகிறேன்.

நமது மக்கள் மகிழ்ச்சியான குழந்தைகளாக வளர்வதையும்,
புதிய மனிதர்களாகவும்
எங்குமுள்ள மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை
உணர்ந்தவர்களாக மாறுவதையும் கண்ணுற்ற நாம்
மகிழ்ச்சியுடன் புன்னகை செய்வோம்.

நீ அனுபவிக்கப் போகும் அமைதியும், சுதந்திரமும் கொண்ட
சொர்க்கத்தின் மதிப்பை நீ அறிந்து கொள்ள வேண்டும்.
நான் ஏன் இதைச் சொல்கிறேன்?

ஏற்கனவே நமது மக்கள் வீரத்தில் சிறந்தவர்கள்.
சமூகத்தின் மீதும், சுதந்திரத்தின் மீதும், அமைதியின் மீதும்,
தமக்குள்ள ஆழ்ந்த அன்பினால்,
நாளைய தலைமுறையினருக்காகவும்,
உன்னைப் போன்ற குழந்தைகளுக்காகவும்
தங்கள் ரத்தத்தை தந்துவிட்டார்கள்,
மிக்க விருப்பத்துடன்.

நமது அழகான நிகராகுவாவின்
எத்தனையோ ஆண்களும், பெண்களும், குழந்தைளும்,
அடக்குமுறையிலும், அவமானத்திலும், வேதனையிலும்
துடிப்பது போல இனி ஒரு போதும் துடிக்கக் கூடாது
என்பதற்காக
அவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துவிட்டார்கள்.

ஒருவேளை நான் இவற்றையெல்லாம்
உன்னிடம் நேரில் சொல்லமுடியாமல் போகலாம்.
வேறொருவர் சொல்வதும் முடியாது போய்விடலாம்,
என்பதால் உன்னிடம் சொல்கிறேன்.

அன்னை என்பவள் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பவள் மட்டுமல்ல,
எல்லாக் குழந்தைகளும் தனது கருப்பையிலிருந்து தோன்றியவர்கள் போல,
எல்லா மக்களின் வலிகளையும்
அன்னை என்பவள் நன்கு அறிவாள்.

ஒரு நாள்
நீ
மனித குலத்தின் மீது பேரன்பு கொண்ட
உண்மையாக பெண்ணாக உருவாக வேண்டும்
என்பதே என் விருப்பம்.

நீதியை யார் எப்போது குலைக்க முயன்றாலும்,
அதை எதிர்த்து நின்று காப்பது எப்படி என்று
உனக்கு எப்போதும் தெரிந்திருக்க வேண்டும்.

அப்படி நீ மாறவேண்டுமானால்,
நாம் நாட்டுப் புரட்சியின் தலைவர்களும்,
பிறநாட்டுப் புரட்சியின் மாபெரும் தலைவர்களும்
எழுதிய புத்தகங்களை
நீ படித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.

அனைத்திலும் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்தி
அதன் மூலம் வளர்ச்சியைத் தொடர வேண்டும்.
நீ இதைச் செய்வாய்!
உன்னால் முடியுமென்று எனக்குத் தெரியும்.

உனக்கென
வார்த்தைகளையும், வாக்குறுதிகளையும், வெற்றுப்போதனைகளையும்
விட்டுச் செல்ல நான் விரும்பவில்லை.

உனக்கென நான் விட்டுச்செல்ல நினைப்பது
வாழ்க்கை பற்றிய ஒரு கண்ணோட்டத்தை.
என்னுடையதையும்
(அதுதான் சிறந்தது என்று நான் நினைக்கவில்லை என்றாலும்)
எனது சான்டினிஸ்டா சகோதர – சகோதரிகளுடையதையும்
உனக்கு விட்டுச் செல்கிறேன்.
அதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்று
நீ கற்றுக் கொள்வாயென்று எனக்குத் தெரியும்.

சரி, என் குண்டுப்பெண்ணே,
உன்னை மறுபடியும் பார்க்கும் பேறு எனக்கு கிடைத்தால்?
அதுகூட சாத்தியம்தான்.
வாழ்க்கை பற்றியும் புரட்சி பற்றியும் நாம் நீண்டநேரம் பேசுவோம்.

நமக்குக் கொடுக்கப்படும் செயல்களை
கடினமாக உழைத்து நிறைவேற்றுவோம்.
கிடார் வாசித்து, பாட்டுப்பாடி ஒன்றாக விளையாடுவோம்.
ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொள்வோம்.

வா,
பூவையும் சுதந்திரத்தையும் போன்ற
உன் அழகு முகத்தை எனக்குக்காட்டு!

உன் சிரிப்பையும் நமது யதார்த்தத்தையும் பிணைத்து
நான் போராடுவதற்கான சக்தியைக்கொடு!

தினமும் உன்னைப்பற்றியே நினைக்கிறேன்.
நீ எப்படியிருப்பாய் என்று கற்பனை செய்கிறேன்.

எப்போதும் உன் மக்களை
மனித குலத்தை நேசி!
உன் அம்மாவின்
அன்பு முழுவதும் உனக்கே!

  • இடானியா.

“என்றென்றைக்குமான வெற்றி கிட்டும் வரை
சுதந்திரத் தாய்நாடு அல்லது வீரமரணம்”

(“சான்டினோவியப் புதல்விகள்” ஆங்கிலப் புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பு: அமரந்தா.) – புதிய கலாச்சாரம், ஜனவரி’ 2000

இருபத்தி ஆறு வயது போராளி இடானியா தனது மகளுக்கு எழுதிய கடிதம்தான் இது. கடிதத்தை கவிதை வடிவில் மாற்றியிருக்கிறோம். வாழ்வின் முழுமை பற்றியும், கடமை பற்றியும், தனிப்பட்ட நேசத்தைக் கூட சமூக உறவின் வெளிச்சத்தில் நேசிக்கும் இந்த இளம் போராளியின் வார்த்தைகளும், வரிகளும் செயலற்றவர்களின் பாதுகாப்பான இதயத்தை உலுக்குகிறது. அவளது சிறிய குண்டுப் பெண்ணுடன் கிடார் வாசித்து புரட்சியின் கடமைகளை நிறைவேற்ற நினைக்கும் எதிர்பார்ப்பு கண்ணீரை வரவழைக்கிறது. ஆம். நல்ல கவிதைகள் கவிதைகளாத்தான் எழுதப்பட வேண்டுமென்பதில்லை. அது போராட்டத்திலிருக்கும் வாழ்க்கையிலிருந்தும் பிறக்கலாம்.

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

Print

25 Comments

  1. முதலில் இந்த திட்டத்தை வரவேற்கிறேன். வினவில் கட்டுரைக்கான வாசர்களின் பங்கெடுப்பை விட கவிதைக்கான பங்களிப்பு அதிகம் இருக்கும் என நினைக்கிறேன். கண்டிசன்ஸ் அப்ஸை என்கிறீர்கள். எத்தனை கவிதைகள் தேறும் என்பதில் ஆர்வமாய் இருக்கிறேன்.

    Posted on 22-Aug-09 at 1:23 pm | Permalink
  2. வரவேற்கதக்க முயற்சி தோழர். கவிதையும், மொழியும் மக்களின் வாழ்வை பேசட்டும்.
    தோழர் இடானியாவின் கடிதம் சிறப்பு. தனது அருமை மகளுக்கு போதிக்கும் போது கூட “நீ மனித குலத்தின் மீது பேரன்பு கொண்ட உண்மையாக பெண்ணாக உருவாக வேண்டும் என்பதே என் விருப்பம்.” என கூறுவது அவர் மக்கள் மீதும், மனித நேயத்தின் மீதும் கொண்ட எல்லையற்ற பண்பை எடுத்து உரைக்கிறது.

    Posted on 22-Aug-09 at 3:21 pm | Permalink
  3. கவிதையாக வாழும் இடானியாவிற்கு அஞ்சலி செலுத்துவோம்….
    ஏகாதிபத்தியதிற்கு சாவு மணி அடிப்பதன் மூலம்….
    செயல் படுவதன் மூலம்….

    Posted on 22-Aug-09 at 3:26 pm | Permalink
  4. Jeeva

    இடானியாவைப் போன்ற தாயார் ந‌ம‌க்கு கிடைக்க‌வில்லை என்றாலும் அடுத்த‌ த‌லை‌முறைக்கு நாமாவ‌து அவ்வாறு இருப்போமா???

    தோழ‌ர்க‌ளே,
    சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு, க‌ண்ணீரே ஆயுத‌மாக‌….என்று ஒரு க‌ட்டுரை வ‌ந்த‌தாக‌ கேள்விப்ப‌டேன்.அதை ச‌ற்று வின‌வில் ப‌திவிட‌ முடியுமா??

    ந‌ன்றியுட‌ன்,

    ஜீவா.

    Posted on 22-Aug-09 at 4:05 pm | Permalink
  5. வாழ்த்துக்கள். பாராட்டத்தக்க முயற்சி.
    தோழர் இடானியா அவர்களுக்கு செவ்வணக்கம்

    தோழமையுடன்
    செங்கொடி

    Posted on 22-Aug-09 at 4:16 pm | Permalink
  6. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.நல்ல கவிதையை எதிர்ப்பார்க்கிறேன்.ஒரு தாயாய் என் கடமையை உண்ர்த்துககிறது இந்த கவிதை.

    Posted on 22-Aug-09 at 5:55 pm | Permalink
  7. //நல்ல கவிதைகள் கவிதைகளாத்தான் எழுதப்பட வேண்டுமென்பதில்லை. அது போராட்டத்திலிருக்கும் வாழ்க்கையிலிருந்தும் பிறக்கலாம். // மிகவும் சிறப்பான கருத்து

    களத்தில் நிற்கும்எங்கள்
    போராளிக்குஎதுகை
    மோனை தெரியாது,
    செந்தமிழில் பாடல் புனையத்தெரியாது……

    ஆனால் வறுமையின்
    வலிதெரியும்,ரத்ததின்
    வெப்பம்புரியும்.,அவர்கள்
    மக்களை படித்தவர்கள்
    மக்களோடு வழ்ந்து
    மக்களுக்காக இறப்பவர்கள்-ஆம்
    அவர்கள் தான் மக்களின் கவிஞர்கள்

    Posted on 22-Aug-09 at 8:40 pm | Permalink
  8. வாழ்த்துகள்.

    Posted on 23-Aug-09 at 10:33 am | Permalink
  9. ஜான்

    கவிதை கவுஜயாக மாறி நாறிக்கொண்டிருக்கும் வேளையில் பூவாசமாய் வீசுகிறது உங்கள் முயற்சி. பிக்கப்பாக நாளாகும்… இருந்தாலும் யாராவுது பூனைக்கு பெல்லு கட்டினா நல்லதுதானே…

    Posted on 23-Aug-09 at 3:12 pm | Permalink
  10. rkkk

    Greetings

    Posted on 24-Aug-09 at 1:09 am | Permalink
  11. ///சரி, என் குண்டுப்பெண்ணே,
    உன்னை மறுபடியும் பார்க்கும் பேறு எனக்கு கிடைத்தால்?
    அதுகூட சாத்தியம்தான்.
    வாழ்க்கை பற்றியும் புரட்சி பற்றியும் நாம் நீண்டநேரம் பேசுவோம்////

    வாழ்க்கை பற்றியும் புரட்சி பற்றியும் நாம் நீண்டநேரம் பேசுவோம்….
    என்ற போது என்னை அறியாமல் கண்கள் நீர் ஊற்றாகிறது…..

    கவிதைகளை வெளியிடும் ஆரம்பத்திற்கு எனது வரவேற்ப்புகள்.நன்றி.

    Posted on 24-Aug-09 at 10:37 am | Permalink
  12. Anand

    It makes us to rethink on our responsibility to create a better world for our next generation. Let us join hands to make it. Thanks for posting this most emotional stuff.

    Posted on 24-Aug-09 at 12:34 pm | Permalink
  13. .மூடக்கிழவன்

    இலக்கியம் ரசனைக்கு அல்ல,சமுகமாற்றத்துக்கானது.இப்போராட்டத்தின் அடுத்தக்கட்ட வடிவமாக இம்முயற்சி தொடரட்டும்….

    Posted on 24-Aug-09 at 1:06 pm | Permalink
  14. நல்ல முயற்சி வாழ்த்துக்கள். கலை கலைக்காகவே என்ற மாபெரும் கலைஞசர்கள் வாழ்கின்ற தமிழ்நாட்டில், கலை மக்களுக்கானது அல்ல்து மக்களுக்கான கலை என்பது போன்ற உமது முயற்சிகள் வரவேற்கத்தக்கன.

    Posted on 26-Aug-09 at 4:48 pm | Permalink
  15. nanban

    it s a good effort.valthukal vinavu.i think this could prove “THE ART IS FOR PEOPLE”.

    Posted on 27-Aug-09 at 9:08 pm | Permalink
  16. ////பொதுவில் தமிழ்க்கவிதை உலகம் வாரமலர் வகையில் அரட்டையாகவும், வைரமுத்து வகையில் இரவில் பிறந்தோம் இன்னும் விடியவே இல்லை என்று வார்த்தை அலங்காரமாகவும், சிறுபத்திரிகை வகையில் போலி மன அவஸ்தை புலம்பலாகவும், பெண்ணிய வகையில் ஈராக் மீதான அமெரிக்காவின் போர்கூட பெண்ணுடல் மீது ஆண் கொண்ட உரிமையென்ற உளறலாகவும், த.மு.எ.ச வகையில் பழங்கஞ்சி ஞாபகமாகவும் சலிப்பூட்டுகிறது. புரட்சி குறித்த விருப்பார்வம் கொண்ட பல கவிதைகளும் கூட முழக்கங்களாகவோ பிரகடனங்களாகவோ சுருங்கி விடுகின்றன//////

    ஒட்டுமொத்தமாக எல்லாக் கவிதைகளையும் இப்படியொரு பொது விமர்சனத்தில் நீங்கள் அடக்கியிருப்பது உடன்பாடில்லை என்றாலும் இடானியா போன்ற பெண்களைத் தெரிந்திருக்காமையின் குற்ற உணர்வு உறுத்துகிறது. வாசகர் கவிதைகளாக மட்டுமேயின்றி வினவு இதுபோன்ற போராளிக் கவிஞர்களின் வெளிப்பாடுகளையும் இட வேண்டுகிறேன். நன்றி.

    Posted on 28-Aug-09 at 12:58 am | Permalink
  17. தோழர்!

    தங்கள் கருத்துக்கள் அருமை! நான் ஒன்றினை கேட்கிறேன்! இணையத்தில் தீட்டும் அட்டை கத்தி வீரர்கள் இசம்,ரசம் ,சாம்பார் என்று புலம்பியதை தவிர வேறு என்ன செய்தீர்கள் ..அது சரி மக்கள் போராட்டம்.. மக்கள் கிளர்ந்து எழவேண்டுமாம்.. என்ன உண்ணாவிரதமா?ஊர்வலமா?பொது கூட்டமா? எல்லாவற்றிலும் நான் கலந்து கொண்டு இருக்கிறேன் ஆனால் எவனும் ஒரு மயிறையும் இந்த இந்தி யாவில் புடுங்கவில்லையே!எப்போது தமிழன் சாவான் என்று விழி மேல் அல்லவா காத்து கொண்டு இருக்கிறார்கள்..நீர் சொல்லிய சாதிபிரச்சனையை விட்டுதொலையுங்கள்..நான் பின் தங்கிய சாதிக்காரன் தான் ..ஆனால் என்னால் இன்று ஈழத்தமிழர்கள் சுட்டு கொல்லப்படும் காணோளியை காண முடியவில்லையே! என் வயிறு எரிகிறதே! அவன் என்ன அங்கு தலித்தா?அல்லது வெள்ளாரா? என்பதை என்னால் இனம் காணமுடியவில்லையே! உண்ணாவிரதம் பொதுகூட்டம் தான் தங்கள் புரட்சி என்றால் எவன் இங்கு கண்ணேடுத்து பார்கிறான்.நானும் உண்ணாவிரதம் இருக்கிறேன் நீங்களும் இருங்கள் ..மொத்தமாய் எல்லாரும் செத்து போவோம்.. யாருக்கு என்ன லாபம்? நான் தீர்மானித்து விட்டேன் நீங்கள் சொல்லும் அந்த பொது உடைமையோ அல்லது வேறு ஏதொ நான் ஆயுதமேந்த தயாறாகி விட்டேன் நீங்கள் தயாரா? உங்கள் எண்ணபடியெ ஆட்சி அங்கு நடக்கட்டும் தய்வுசெய்து உங்கள் உங்கள் தோழர்களை ஓன்றிணைய சொல்லுங்கள் நாம் ஆயுதம் ஏந்தி சேகுவரா போல் போராடுவோம்!ஆயுத பயிற்சியை சீனா கொடுக்கட்டும் கூயுபா கொடுக்கட்டும் ம்ம்ம் கிளம்புவோம் நாம் இது ஈழதிற்கு மட்டும் அல்ல நம் தாய் தமிழகதிற்கும் தான்.. புரட்சிகரதமிழ்தேசியன்

    Posted on 28-Aug-09 at 1:14 am | Permalink
    • Anonymous

      puratchigara tamil desian unarchivasa padamal arivupoorvamaga yosikkavum. edho ella vidamana poraattangalaum nadathi muditadai polavum,ella makkalaum ani thirati vitadaum pola pesuvadu ariveenam. ( peraium padivaum padicha tamildesa “poduvudamai katchi” aalu madiri theriude.?

      Posted on 12-Sep-09 at 4:36 pm | Permalink
    • kilarchi

      puratchikara tamildesiyan avargale,tamildesa “poduvudamai katchi” karan madiri penathama arivu poorvama yosikavum.

      Posted on 12-Sep-09 at 4:40 pm | Permalink
  18. yogan

    சரி, என் குண்டுப்பெண்ணே,
    உன்னை மறுபடியும் பார்க்கும் பேறு எனக்கு கிடைத்தால்?
    அதுகூட சாத்தியம்தான்.
    தினமும் உன்னைப்பற்றியே நினைக்கிறேன்.
    நீ எப்படியிருப்பாய் என்று கற்பனை செய்கிறேன்.

    என்ற போது என்னை அறியாமல் கண்கள் நீர் ஊற்றாகிறது…..

    Posted on 04-Oct-09 at 9:59 am | Permalink
  19. சிவா

    இடானியா , நீங்கள் தோழியா , இல்லை நண்பரா தெரியவில்லை . இருக்கும் என் தாயையும் இல்லாத எனது மகளையும் பற்றி நினைக்க வைத்தீர்கள் . வேலைக்கு செல்பவள் மீண்டும் வருவாள் . புரட்சிக்கு செல்பவள் மீண்டு வருவாளோ தெரியாது .தாயில்லாது வீட்டை பார்த்த ( வயல் வேலைக்கு சென்ற ) ஏங்கிய நான் என் மனைவியை என் குழந்தைக்கு கிடைக்காமல் செய்வது எந்த விதத்தில் சரி . குறையோ நிறையோ இந்த பணம் போதும் . என் குழந்தைக்கேனும் தாய் அன்பு தவறாமல் வேண்டும் பொது கிடைக்கட்டும் .பொத்தாம் பொதுவாக பெண்ணுரிமை பேசி எதிகால சந்ததியை தவிக்க விடுவது சரியல்ல.வேலைக்கு செல்லும் பெண் வேண்டுமென தாமதிக்கும் அன்பர்களுக்கு மட்டுமே இது , சாதிக்க நினைக்கும் சகோதரிகளுக்கு அவர்கள் சிந்தனைக்கே விடுகிறேன்

    Posted on 13-Oct-09 at 10:47 pm | Permalink
  20. தியாகு

    வினவின் இந்த முடிவை நான் ஆதரிக்கின்றேன்

    கவிதை எழுத ஒருவன் எப்போது ஆரம்பிப்பான்

    காதலை ஆரம்பிக்கும் போது , ஆனால் புரட்சிக்கும் கவிதைக்கும் முக்கிய தொடர்ப்பு இருக்கிறது ஏனெனில் புரட்சியே ஒரு கவிதைதானே

    அது சமூகத்தின் கவிதை தனிமனிதனை பற்றியதல்ல

    அதன் விளைவு மிக பெரும் மகிழ்ச்சியை வாசிப்பவனுக்கு கொடுப்பதல்ல

    நல்ல வாழ்க்கையை கொடுப்பது

    தியாகு

    Posted on 22-Dec-09 at 6:40 pm | Permalink
  21. எழில்

    தமிழ் கவிதைக்கு வினவு தான் அதாரிட்டி வந்துட்டாங்கப்பா நாட்டாமைக.கவிதைங்கறது படிக்கற ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுபவத்தை தர வல்லது.உங்களை போன்ற பாசிஸ்டுகள் அதை தட்டையான பார்வைக்குள் அடக்க முயலாதீர்கள்.ஏதோ நாங்க மட்டும் தான் அறிவாளிகள் மத்த எல்லாரும் முட்டாள்கள் என்று குலைக்கிரீர்கள்

    Posted on 13-Jan-10 at 5:38 pm | Permalink
  22. KV

    எதுக்கு உங்க இடுகையையே நீங்கள் தமிழ்மணம் நூற்குறி ஆக்குகின்றீர்கள்?

    Posted on 13-Jan-10 at 9:44 pm | Permalink

One Trackback/Pingback

  1. pligg.com on 22-Aug-09 at 12:28 pm

    சனிக்கிழமை கவிதைகள் – 1…

    வினவில் ஒவ்வொரு சனிக்கிழமையும் வாசகர் கவிதைகளை வெளியிடலாமென்று ஒரு யோசனை! இந்த அறிவிப்பை ஒரு நல்ல கவிதையுடன் ஆரம்பிக்க வேண்டுமென்பதால் இங்கே ஒரு கவிதை! http://www.vinavu.com/2009/08/22/poems-intro/trackback/...

Post a Comment

Your email is never published nor shared.

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!