Skip to content

பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!

தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!

vote-012சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பதிவர்களுக்கான விருது போட்டிகளை தமிழ்மணம் அறிவித்திருக்கிறது. கடந்த முறை முதல் சுற்றில் பதிவர்கள் மட்டும் வாக்களித்து சிறந்த இடுகைகளை எழுதிய பதிவர்களை தெரிவு செய்தார்கள். இரண்டாம் சுற்றில் பதிவர்கள் அல்லாத பொதுவாசகர்கள் வாக்களிக்கும் வாய்ப்பு, ஈழத்தின் அசாதாரணமான சூழ்நிலை காரணமாக ஈடேறவில்லை. இறுதியில் பதிவர்களின் வாக்களிப்பை வைத்தே விருதுகள் அறிவிக்கப்பட்டன.

வினவு துவங்குவதற்கு முன்னர் பல தோழர்கள் தமிழ்மணம் பற்றியும், படிக்கவேண்டிய பதிவர்கள் மற்றும்  தோழர்களின் வலைப்பூக்களையும் அறிமுகப்படுத்தியிருந்தார்கள். முதன்முறையாக தமிழ்மணத்தை பார்த்த போது பிரமிப்பாக – ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிகைகளை பார்த்தது போல – இருந்தது. பொதுவில் முற்போக்கு விசயங்களை எழுதும் பதிவர்களை மட்டும் படித்து விட்டு செல்வது என்ற எல்லையைத் தாண்டி பதிவுலகின் பலவிதமான பரிமாணங்களை தமிழ்மணத்தின் மூலமே அறிந்து கொண்டோம். ஆன்மீகம், பகுத்தறிவு, தமிழ்தேசியம், தி.மு.க, அ.தி.மு.க, ஆர்.எஸ்.எஸ், கவிதை, சிறுகதை, செய்திகள், பரபரப்பு செய்திகள், கம்யூனிசம், ரசனையாளர்கள், சினிமா பதிவர்கள், ஈழம், சொந்த வாழ்க்கை அனுபவங்கள், குழந்தை அனுபவம், பெண்கள், உபதேசங்கள், தொழில்நுட்பம், முக்கியமாக நமது மொக்கைகள்…  என வலை உலகு முழுவதையும் தமிழ்மணம் பிரதிபலித்தது.

தமிழ்மணத்தின் செயல்முறையைப் புரிந்து கொள்ளவே சிலமாதங்கள் ஆகின. பலநாட்கள் வாக்களிக்கும் பட்டை ஏன்,எதற்கு என்பதே தெரியாது. தமிழ் தட்டச்சு தெரிந்திருந்தாலும் பின்னூட்டம் போடும் முறை கூட எமக்குத்தெரிந்திருக்கவில்லை. வினவை ஆரம்பித்தவுடன்,  கில்லி சொந்த முறையில் பலவற்றை அறிந்து கொண்டு கற்றுக்கொடுத்தார். ஆரம்பத்தில் வேர்ட்பிரஸ்ஸில் தமிழ்மணத்தின் வாக்களிக்கும் பட்டையை சேர்க்க முடியாது என்பதால் தனி உரல் கொடுத்து வாக்களிக்கும் முறையை, எதிர் வாக்குகளுக்கும் சேர்த்து அவரே அறிமுகம் செய்தார். பின்பு பல வேர்ட்பிரஸ் பதிவர்களும் பிளாக்கர்களும் கூட அதை பயன்படுத்திக் கொண்டனர்.

இப்படித்தான் சூடான இடுகை, வாசகர்பரிந்துரை, மறுமொழி திரட்டி எல்லாம் அறிந்தோம். தமிழ்மணத்தில் இடுகையை சேர்த்து விட்டு முகப்பில் பெயர் வருவதை பார்த்து குழந்தைத்தனமாக உற்சாகம் அடைந்திருக்கிறோம். இது பல பதிவர்களுக்கும் பொருந்தக்கூடியதே, குறிப்பாக புதிய பதிவர்களுக்கு. புதிய பதிவர்களுக்கு வாசகர்கள், பதிவர்கள் மத்தியில் அறிமுகம் செய்யும் நுழைவாயிலாக தமிழ்மணமே விளங்குகிறது. அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் ஆதிக்கத்திற்கு மாற்றாக உண்மைகளை பேசுவதற்கு வாய்ப்பளிக்கும் இணையம் என்ற நவீன தொழில்நுட்பத்தில், தமிழ் உலகைப் பொறுத்தவரை தமிழ்மணமே முன்னணியில் இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஈழப் போர் உச்சத்தில் இருந்த மாதங்களில், போரை நிறுத்த வேண்டுமென்ற கருத்தை பதிவர்கள் மூலம் தமிழ் இணைய உலகம் முழுதும் கொண்டு சென்றதை தமிழ்மணத்தின் சாதனையாக சொல்லலாம்.

எதிர்காலத்தில்  ஊடகமுதலாளிகளின் பிடிக்குத் தப்பி இந்த ஊடகம் எஞ்சி  நிற்குமா? தெரியவில்லை.  பயோ மெட்ரிக் கார்டுகளில் மக்களின் கட்டை விரலைக் காணிக்கையாக கேட்கும் நந்தன் நீலேகனிகள், பதிவர்களின் ரேகைப்பதிவையும் கேட்கக் கூடும். அந்த வகையில் மூச்சு விடக் கிடைத்திருக்கும் இந்த அவகாசத்தில், தமிழ்மணத்தின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொண்டு அங்கீகரிக்கவேண்டும்.

பொதுவில் தமிழ்மணத்தின் நிர்வாகக் குழு முற்போக்கு கருத்துக்களுக்கு (அவர்களது பின்னூட்டங்கள், மற்றும் பதிவுகளை வைத்து) ஆதரவாக இருப்பது தமிழ்பதிவுலகிற்கு மிகப்பெரும் வலிமை. பதிவுலகில் கணிசமான அளவில் இருக்கும் பிற்போக்கு முகாமிற்கு இது உவப்பானதில்லை.  இப்படி ஒரு பின்னணியும் அனுபவமும் கொண்ட தமிழ்மணம், பதிவுலகு எனும் புதிய ஊடகத்தை வளர்த்தெடுக்கும் கடமையினை தொடர்ந்து செய்யும் என நம்புகிறோம், வாழ்த்துகிறோம்.

நாங்கள் ‘வினவு’ துவங்கிய  காலத்தில் இருந்த பதிவர்களின் எண்ணிக்கை இப்போது ஏறக்கூறய இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. தினமும் இருநூறுக்கும் மேற்பட்ட பதிவுகள், இரண்டாயிரத்து சொச்சம் பின்னூட்டங்களை திரட்டும் அளவிற்கு தமிழ்மணம் ஒரு ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது. மேலும் தமிழறிந்த எல்லா நாடுகளையும் சேர்ந்த தமிழ்மக்களை இணைக்கும் பாலமாகவும் தமிழ்மணம் விரிந்து செயல்படுகிறது. புலம் பெயர்ந்து வாழும் வாசகர்கள் தமது சொந்த மண்ணை  தமிழ்மணம் வாயிலாகவே நுகர்கிறார்கள். அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் எட்ட முடியாத புலன் இது.

விரைந்து வளரும் பதிவுலகை மேலாண்மை செய்யும் பணி மிகவும் கடினமானது என்பதை நாம் அங்கீகரிக்கவேண்டும். நிர்வாகப் பணியைச் சுமக்கிற தமிழ்மணம் குழுவினர், பதிவுலகிற்கு விதிக்கும் கட்டுப்பாடுகள ஏற்றுக்கொண்டுதான் நாம் செயல்படமுடியும். சிலபதிவர்கள் தனிப்பட்ட சில பிரச்சினைகளை மட்டும் வைத்து, ” இந்த கட்டுப்பாடுகள் சுதந்திரத்திற்கு எதிரானவை” என தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர். நோக்கமென்று ஒன்று இருப்பவர்கள் கட்டுப்பாடு என்பதையும் ஏற்றுத்தான் ஆகவேண்டும். அதுவும் மாற்றத்துக்கு உட்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளவும் வேண்டும்.  அன்றாட வாழ்க்கையில் கூட அப்படிப்பட்ட விதிமுறைகளை நாம் பற்றியொழுகியே வாழ்ந்துவருகிறோம். பதிவுலகிலும் அதை ஏற்கத்தான் வேண்டும்.

” குமதம்: பத்து ரூபாயில் ஒரு பலான அனுபவம்” என்ற கட்டுரையை தமிழ்மணத்தில் நாங்கள் இணைத்தபோது ‘பலான’ என்ற வார்த்தை வரவில்லை. மின்னஞ்சல் அனுப்பி கேட்டபோது இத்தகைய தலைப்புகள் தமிழ்மணத்தில் வராதபடி ஏற்பாடு செய்திருப்பதாக தமிழ்மணம் தெரிவித்தது. நாங்கள் வெளியிட்ட கட்டுரை  பலான வியாபாரத்தை எதிர்த்து எழுதப்பட்டதுதான் என்ற போதிலும் இந்தக் கட்டுப்பாடை ஏற்றுக்கொண்டோம். இனி தலைப்பு வைக்கும் போது இதைக் கணக்கில் கொள்வோம் என பதிலளித்தோம். இதனைக் கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த அடி என தவறாக புரிந்து கொள்ளவில்லை.

பதிவர்களே படைப்பாளிகளாவும், வாசகர்களாவும் செயல்பட வாய்ப்பளிக்கும் இந்த ஊடகம் உரிய முறையில் பதிவர்களால் பயன்படுத்தப்படுகிறாதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். விசயமே இல்லாத அக்கப்போர்களே பல பதிவுகளாக வெளியிடப்படுகின்றன.அதிலும் சினிமாவைக் கலந்து எழுதும் பதிவுகளே அதிகம் படிக்கப்படுகின்றன. இணையத்தை அரட்டை அரங்கமாக மாற்றும் போக்கிற்கு எதிராகத்தான் வினவை நிறுத்துவதற்கே நாங்கள் போராடி வருகிறோம். அதில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியும் பெற்றிருக்கிறோம்.  சமூக அக்கறைக்குரிய விசயங்கள் வெல்லும் என்ற நம்பிக்கையை இந்த வெற்றி எங்களுக்குள் விதைத்திருக்கிறது. இந்த வெற்றிக்கு வழியமைத்து கொடுத்து புதிய வாசகர்கள், பதிவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது தமிழ்மணம்தான்.

தமிழ்மணத்தோடு எமது பதிவை இணைப்பதைத் தவிர வேறு எந்தவகை நேரடியான தொடர்போ, அறிமுகமோ இல்லாத போதிலும், வினவு ஆரம்பித்த சில மாதங்களிலேயே நட்சத்திரப் பதிவராகும் வாய்ப்பினைப் பெற்றோம். அதன் மூலம் தமிழ்ப் பதிவுலகில் ஒரு இடத்தை எங்களுக்கு தமிழ்மணம் வழங்கியது. இத்தனைக்கும் எல்லோரையும் விமரிசனக் கண்ணோட்டத்தோடு அணுகும் எமது பார்வை, எம்மீது குத்தப்பட்ட’கம்யூனிச தீவிரவாதிகள்’ என்ற முத்திரை போன்றவற்றையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு, சமூக அக்கறைக்குரிய கட்டுரைகளை வெளியிடும் பதிவர் என்ற முறையில் தமிழ்மணம் எங்களை தெரிவு செய்திருக்க கூடும். நட்சத்திரப் பதிவர்களில் பல வகையினரும் இருந்தாலும் எங்களைப் போன்றவர்களை நட்சத்திரமாக்குவதற்கு ஒரு நேர்மையும் தைரியமும் வேண்டும். அது தமிழ்மணத்திடம் நிறையவே இருக்கிறது. அந்த அஞ்சாமைக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும். எங்களுக்கு முன்னால் எங்களது தோழர் அசுரனும் இப்படித்தான் நட்சத்திரமானார். அப்போது நாங்கள் பதிவுலகில் இல்லை.

சென்ற ஆண்டு  அறிவிக்கப்பட்ட தமிழ்மணம் விருது போட்டிகளிலும், சமூக அக்கறைக்குரிய அங்கீகாரம் எப்படி இருக்கும் என்பதை அறிவதற்காகவே கலந்து கொண்டு இரண்டு தலைப்புக்களில் முதலிடத்தை வென்றோம். பதிவுலகம் முற்போக்கு கருத்துக்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்பது உண்மையில் மகிழ்ச்சியைத் தந்தது. அதற்காக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றிகள்.

சென்ற ஆண்டு தமிழ்மணம் 12 தலைப்புகளில் சிறந்த முதலிரண்டு இடுகைகளை பதிவர்களின் வாக்குகளை வைத்து தெரிவு செய்தது. இந்த ஆண்டு பதிவர்கள் அல்லாத வாசகர்களும் வாக்களிக்கும் இரண்டாவது சுற்று இருக்கும் என நம்புகிறோம். இந்த முறை சிறப்பாகத்தான் உள்ளது.

விருது தொடர்பாக வினவின் ஆலோசனைகள்!

1, பன்னிரண்டு பிரிவுகளின் அதிக பட்சம் மூன்று தலைப்புகளுக்கு மட்டும் ஒரு பதிவர் போட்டியிடலாம் என்பதை ஒன்றாக குறைக்கலாம். இதன் மூலம் மொத்தம் 24 பதிவர்கள் விருதினைப் பெறுவார்கள். ஒரு பதிவரே மூன்று விருதுகளையும் பெற்றால் மற்றவர்கள் வாய்ப்புகளை இழப்பார்கள். மேலும் ஒரு பதிவர் போட்டிக்கான தனது தலைப்பை விட்டுவிட்டு பதினொரு தலைப்புகளுக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு இருப்பதால் பல குழுக்களாக பிரிந்திருக்கும் பதிவுலகம் தெரிவு எனும் ஜனநாயகத்தின் அடிப்படையில் ஒன்று சேரலாம்.

2. போட்டிக்கான தலைப்புக்களை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தலாம். கதை, கவிதை, குறும்படம், ஆவணப்படம், கேலிச்சித்திரம், தலித் பிரச்சினைகள், பெண்கள் பிரச்சினைகள், சினிமா விமரிசனம், தமிழ் கணினி தொழில்நுட்பம், மதவெறி,  முதலியவற்றை தனித்தனி தலைப்புக்களில் வைக்கலாம். மொத்தத்தில் இருபது தலைப்புக்கள் வைத்தால் நாற்பது பதிவர்கள் விருதுகள் பெறுவார்கள். இது உற்சாகத்தின் அளவை விரிந்த அளவில் கொண்டு செல்லும். எல்லா முக்கியமான தலைப்புக்களையும் போட்டிக்கு கொண்டு வரமுடியும்.

3. ஒவ்வொரு ஆண்டும் சேரும் புதிய பதிவர்களை உற்சாகப்படுத்தும் முகமாக இந்த ஆண்டின் சிறந்த புதிய பதிவர் எனும் விருதினை புதிதாக ஏற்படுத்தலாம். அதற்கு அவர் எழுதிய இடுகைகளில் ஐந்து சிறந்த இடுகைகளை சமர்ப்பிக்க வேண்டும் என வைக்கலாம். இதனால் பதிவுலகின் மத்தியில் புதிய பதிவர்கள் பரவலான கவனத்தை பெறுவார்கள்.

4. அதே போல சிறந்த பெண் பதிவர் எனும் விருதினை ஏற்படுத்தி முன்னர் கூறியது போல ஐந்து இடுகைகளை சமர்ப்பிக்குமாறு வைக்கலாம். பொதுவில் பதிவுலகில் சிறுபான்மையினராகவும், தனி அணியாகவும் இருக்கும் பெண்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், பொது அரங்கில் அவர்களுக்கென்று தனி விருதை தருவது ஆரோக்கியமாகவும் இருக்கும். புதிதாக பெண்பதிவர்கள் வருவதையும் இது ஊக்குவிக்கும். மற்றபடி மற்ற தலைப்புக்களிலும் பெண்கள் போட்டியிடலாம். அதாவது ஒரு தலைப்பு, பெண்பதிவருக்கான போட்டி என்று இரண்டு தலைப்புகளில் அவர்கள் போட்டியட வைக்கலாம். புதிய பதிவர்களுக்கும் இதே சலுகையை அளிக்கலாம்.

5. இதே போல இந்த ஆண்டின் சிறந்த பதிவர் என்ற விருதினையும் வைக்கலாம் என்றாலும் இதில் நிறைய அரசியல் தொழில்நுட்ப பிரச்சினைகள் இருக்கிறது. எந்த அளவுகோலின்படி ஒருவரை சிறந்த பதிவர் என்று தெரிவு செய்வது கடினம். அந்த ஆண்டின் சிறந்த பத்து இடுகைகளை அவர் அளிக்கவேண்டுமென்று வைத்தாலும் தொழில்நுட்ப ரீதியாகவும், போட்டியை நடத்துவதற்கும் இதை பெரும் சுமையாகவும் இருக்கும் என்பதால் இதை மிகுந்த தயக்கத்தோடு சொல்கிறோம். ஏனெனில் இந்தப்பிரிவில் எல்லோரும் போட்டியிடுவார்கள் என்பதால் நிர்வகிப்பது மிகவும் சிரமம்.

6. போட்டிக்கென்று தமிழ்மணம் சென்ற ஆண்டு அறிவித்திருந்த முதல்பரிசு ரூ.500, இரண்டாம் பரிசு ரூ.250 என்பது மிகவும் குறைவு என்று பலர் கருதுகிறார்கள். வினவு அப்படி கருதவில்லை. விருதின் மதிப்பு பணத்தை வைத்து மதிப்படிக்கூடாது என்பதால் இந்த தொகைகளே தொடரலாம் என்பது எங்கள் கோரிக்கை. அதுவும் புத்தகங்களாக அளிப்பது என்பதும் பாராட்டத்தக்க ஒன்று. இதனால் விருது என்பது அறிவை விசாலமாக்கும் நடவடிக்கைக்கு இட்டுச் செல்கிறது. பொதுவில் போட்டிகள் என்றால் அவைகளின் பணமதிப்பை வைத்து அளவிடும் யதார்த்தத்தை நாம் இப்படித்தான் மாற்ற முடியும் என்று வினவு கருதுகிறது.

7. வாய்ப்பு, வசதி, நேரம் இருக்கும் பட்சத்தில் வெற்றிபெறும் பதிவர்களின் கட்டுரைகளை தமிழ்மணத்தின் தொகுப்பில் தனிநூலாக வெளியிடலாம். இதன்மூலம் இணையமில்லாத வாசகர்களின் மத்தியில் பதிவுலகை அறிமுகம் செய்யலாம்.

8. இப்போது உடனடியாக சாத்தியமில்லை என்றாலும் எதிர்காலத்தில் பதிவர்கள் அதிகமிருக்கும் (என்று நினைக்கிறோம்) சென்னை மாநகரத்தில் விருது வழங்கும் விழாவினை நடத்தலாம். இதன் மூலம் ஆண்டுக்கொரு முறை பதிவர்கள், பதிவுலகின் வாசகர்கள் சந்திப்பை சாத்தியப்படுத்தலாம்.

9. சென்றமுறை அறிவித்திருந்தது போல முதல் சுற்றில் பதிவர்களும், இரண்டாவது சுற்றில் வாசகர்களும் வாக்களிப்பதை இம்முறையும் தொடரலாம். வாக்களிப்பதில் கள்ள ஓட்டு பிரச்சினையும் இருக்கிறது. இதை தமிழ்மணம் எப்படி தொழில்நுட்பரீதியாக சமாளிக்கும் என்பது சவாலான ஒன்று. இரகசிய வாக்களிப்பை பகிரங்கமான வாக்களிப்பு என்று மாற்றினால் இதை தவிர்க்கலாமோ என்று தெரியவில்லை. ஆனால் ஜனநாயகத்தில் இரகசிய வாக்கெடுப்புதான் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆகவே பதிவர்கள், வாசகர்களே உறுதி எடுத்துக்கொண்டால் இந்தப்பிரச்சினையை அதாவது கள்ளவோட்டுக்களை தவிர்க்கலாம்.

10.பதிவுலகத்தை மட்டும் வேலையாக வைத்திருக்கும், விசயத்தோடு எழுதும் பதிவர்களை தன்னார்வத்தொண்டர்களாக கோரிப்பெற்று நின்றுபோன பூங்கா வார இதழை மீண்டும் நடத்தலாம். இதன் மூலம் காத்திரமான கருத்துக்களை எழுதும் பதிவர்களை அறியாதவர்களுக்கு அறிமுகம் செய்யலாம். இதன் மூலமே தமிழ்மணம் தனது அடுத்த கட்ட வளர்ச்சியை சாத்தியப்படுத்த இயலும் என நினைக்கிறோம்.

11. பதிவர்களை இப்படி நேரம், பணம் ஒதுக்கி ஒரு குழுவாக உற்சாகப்படுத்தும் தமிழ்மணத்திற்கு பதிவர்கள் பதிலுக்கு என்ன விருது கொடுக்க முடியும்?

தமிழ்மணம் அறிவித்திருக்கும் விருது போட்டிகளை புதியவர்களுக்கு அறிமுகம் செய்வதற்காகவே இந்த இடுகை எழுதப்படுகிறது. போட்டி குறித்த தங்களது ஆலோசனைகளை பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டால் தமிழ்மணம் குழுவினருக்கு உதவியாய் இருக்கும். இந்த போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு நாமும் இத்தகைய பங்களிப்பை அளிக்க வேண்டியிருக்கிறது. அளியுங்கள்.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவு

Print

54 Comments

  1. தமிழ்மணம் விருதுகள் குறித்த விமர்சனங்கள் உண்டு. தற்போது தமிழ் மணத்தில் இருந்து வெளியேறிவிட்ட படியால் இது குறித்து மேலும் விமர்சிப்பது நாகரீகமாகாது என்பதால் இந்த அளவில் எனது அதிருப்தியினை பதிவு செய்கிறேன்.

    Posted on 03-Nov-09 at 12:36 pm | Permalink
  2. ////பொதுவில் தமிழ்மணத்தின் நிர்வாகக் குழு முற்போக்கு கருத்துக்களுக்கு (அவர்களது பின்னூட்டங்கள், மற்றும் பதிவுகளை வைத்து) ஆதரவாக இருப்பது தமிழ்பதிவுலகிற்கு மிகப்பெரும் வலிமை. பதிவுலகில் கணிசமானி அளவில் இருக்கும் பிற்போக்கு முகாமிற்கு இது உவப்பானதில்லை. ///// :) ))))))))) அதென்ன பிற்போக்கு / முற்போக்கு ? யார் அதை அளவிடுவது ? எந்த அடிப்படையில் ? மாற்று கருத்துக்களை பிற்போக்கு அல்ல்து தமது கருத்துக்கள் மட்டும் தான் ’முற்போக்கானது’ என்று கருதுவது சிர்ப்பை தருகிறது..

    Posted on 03-Nov-09 at 1:59 pm | Permalink
    • முதல் தலைமுறை

      முற்போக்கு – முன்னேறிச் செல்வது
      பிற்போக்கு – தேங்கி நிற்பது அல்லது பின்னோக்கிச் செல்வது(மாற்றத்தை மறுப்பது, மறப்பது, நிராகரிப்பது, இல்லையென்று சாதிப்பது).

      ஊருக்கெல்லாம் குறி சொல்லுமாம் பல்லி கழனிப் பானையில் விழுகுமாம் துள்ளி …..

      அது மாதிரி இருக்கு உங்க புண்ணூட்டம்.

      சரி, ரெண்டுத்துக்கும் எ-கா, உதா கொடுப்போமா?
      முற்போக்கு உதா (உதார் இல்லபா… உதாரணம்) – சாதியை ஒழிப்போம், பெண்களுக்கு சம உரிமை கொடுப்போம், மூடநம்பிக்கை ஒழிப்போம், மனித சமுதாயம் தனக்குள் முரன்படுவதை களைந்து கொண்டதோர் சமுதாயம் படைப்போம், பெரும்பான்மைக்கு நன்மையானது எனில் மாற்றத்தை எந்த விலை கொடுத்தேனும் அடைவோம்.

      பிற்போக்கு உதா – அதெல்லாம் அந்த காலத்துலேயே சொல்லிட்டா, இப்போ எல்லாம் நல்லாதான் போய்க்கிட்டு இருக்கு அதெல்லாம் மாத்த முடியாது, இப்போ இருக்குறதுதான் பெஸ்டுனு சொல்லமாட்டேன் ஆனா இப்போ இருக்குறதுல பெஸ்டு இதுதான், சாதி ஒழியாது, குலப் பெருமை, இனப் பெருமை, கலாச்சாரம்-பாரம்பரியம் இதெயெல்லாம் மாத்தப்படாது, பர்தா என்பது பெண்களை பாதுகாக்கும் கவசம், போட்டி ஒன்று மட்டுமே நிரந்தரம், ஜனநாயகம் எல்லாம் சுத்த பேத்தல், மக்கள் ஆட்டு மந்தை.

      உதா போதும் என்று நினைக்கிறேன்..

      இத்துடன் எனது உரையை முடித்துக் கொண்டு பதிவில் சொல்லப்பட்டுள்ள விசயங்களில் நண்பர்கள் அலாவலாவ வேண்டுகிறேன்.

      Posted on 03-Nov-09 at 2:35 pm | Permalink
      • தமிழ்மணத்தில் பல பதிவர்கள் ஆன்மீகம், ஜோதிடம் போன்றவை பற்றி பல காலமாக எழுதுகிறார்கள். அவர் எல்லோரும் ‘பிற்போக்காளர்களா’ என்ன ? செம்புரட்சிக்குப் பின் அவர்களை என்ன செய்வீர்கள் ? ’முற்போக்காளர்களே’, பதில் சொல்லுங்களேன் ?

        Posted on 03-Nov-09 at 3:06 pm | Permalink
      • ஜார்ஜூ புஸ்

        அதியமானு மொதல்ல தமிழ்மணம் போட்டிக்கு உங்க ஆலோசனையை எழுதுங்க. தேவையில்லாம தலைப்ப வேறு திசைக்கு திருப்பி என்னவாக போகுது.எதிர்ப்ப பதிவு செஞ்சுடீங்க இல்ல அப்படியே விடுங்க… நம்ம பிரச்சனை என்ன இப்போவை தீரவா போகுது. வேற இடுகையில விவாதிக்கலாமே

        Posted on 03-Nov-09 at 3:29 pm | Permalink
    • ஜார்ஜூ புஸ்

      ஐயோ அதியமான் இது என்ன கொடுMY

      Posted on 03-Nov-09 at 2:38 pm | Permalink
    • அதியமான்,

      வேறு வழியே இல்லை. ஏற்கனவே வினவு உங்களுக்கு வகுப்பு எடுப்பதாக சொல்லியிருந்தார் (பணம் கட்டித்தான்! பிறகென்ன ஓசியாவா!)

      போய் சேர்ந்துவிடுங்கள்.

      Posted on 03-Nov-09 at 2:48 pm | Permalink
      • நொந்த குமாரன், உம்மை போன்றவர்களுக்குதான் பாடம் தேவை. வேண்டுமானால், நான் இலவசமாக எடுக்கிறேன். தோழர்களுக்கும் சேர்த்திதான். எம்மை பொருத்தவரை நீங்க தான் பிற்போக்குவாதிகள் என்கிறேன்.

        Posted on 03-Nov-09 at 3:00 pm | Permalink
      • //எம்மை பொருத்தவரை நீங்க தான் பிற்போக்குவாதிகள் என்கிறேன்.//
        சரிதான்!
        இது எப்பயிருந்து?
        நல்லாத்தானே இருந்தீங்க!

        Posted on 03-Nov-09 at 3:28 pm | Permalink
  3. அருமையான பதிவு. உங்கள் ஆலோசனைகள் ஏற்கத்தக்கவனவாக இருக்கின்றன. அதனால் நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

    புத்தகம் பரிசு ஓகே. ஆனால்…. நாம் விரும்பும் புத்தகங்களா? அவர்களாக தருவார்களா?!

    கூடுதலாக ஒரு விருதும் அறிவிக்கப்பட வேண்டும்

    வெளிநாடுகளில், மோசமான ஆல்பம் என்று விருது கொடுப்பார்களாம். அது மாதிரி, ஆண்டில் சிறந்த மொக்கைப் பதிவு, மொக்கை கவிதை என விருது கொடுத்து மொக்கைகளின் அட்டகாசத்தை குறைக்க முயற்சிக்கலாம்.

    இன்னும் நிறைய ஆலோசனைகள் இருக்கின்றன. பிறகு வருகிறேன்.

    Posted on 03-Nov-09 at 2:01 pm | Permalink
    • வினவு

      தோழர் நொந்தகுமாரன்,
      நாம் விரும்பும் புத்தகங்களை வாங்குவது போலத்தான் சென்ற முறை தமிழ்மணம் ஏற்பாடு செய்திருந்தது.

      Posted on 03-Nov-09 at 7:25 pm | Permalink
  4. விசயத்தோடு எழுதும் பதிவர்களை தன்னார்வத்தொண்டர்களாக
    வாக்களிப்பதில் கள்ள ஓட்டு பிரச்சினையும் இருக்கிறது.
    விருது வழங்கும் விழாவினை நடத்தலாம்
    தனிநூலாக வெளியிடலாம் 
    விருதின் மதிப்பு பணத்தை வைத்து மதிப்படிக்கூடாது 
    ஆண்டின் சிறந்த பதிவர் என்ற விருதினையும்
    சிறந்த புதிய பதிவர் எனும் விருதினை 
    சிறந்த பெண் பதிவர்
    கதை, கவிதை, குறும்படம், ஆவணப்படம், கேலிச்சித்திரம், தலித் பிரச்சினைகள், பெண்கள் பிரச்சினைகள், சினிமா விமரிசனம், தமிழ் கணினி தொழில்நுட்பம், மதவெறி, 

    மிக நல்ல விசயங்கள் கண் வலிக்கும் அளவிற்கு நெருக்கமாக படைத்த வரிகள் பின்னால் வருபவர்கள் அடிப்படை விசயங்களை புரிந்து கொள்ளும் பொருட்டு இது.
    வாழ்த்துக்கள்.

    Posted on 03-Nov-09 at 2:09 pm | Permalink
  5. கூடுமானவரை சொல்லிவிட்டீர்கள். நல்ல பாயிண்ட்ஸை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புவோம்…

    Posted on 03-Nov-09 at 2:24 pm | Permalink
  6. //முற்போக்கு உதா (உதார் இல்லபா… உதாரார்ம்) – சாதியை ஒழிப்போம், பெண்களுக்கு சம உரிமை கொடுப்போம், மூடநம்பிக்கை ஒழிப்போம், மனித சமுதாயம் தனக்குள் முரன்படுவதை களைந்து கொண்டதோர் சமுதாயம் படைப்போம், பெரும்பான்மைக்கு நன்மையானது எனில் மாற்றத்தை எந்த விலை கொடுத்தேனும் அடைவோம்.//// இதை யாரும் ம்றுக்கவில்லையே. எந்த பதிவர் இவற்றை மறுக்கிறார் ?

    Posted on 03-Nov-09 at 2:42 pm | Permalink
    • ///பெரும்பான்மைக்கு நன்மையானது எனில் மாற்றத்தை எந்த விலை கொடுத்தேனும் அடைவோம்/// this is debatable. what consitutues this ? and doesn’t ‘means and ends’ matter ? and do those who oppose majoritatianism and violent fascist methods be labelled ‘anti-progressives’ ? and what about the history of such high ideals and what it lead to ?

      Posted on 03-Nov-09 at 2:45 pm | Permalink
      • Sangu

        யாராவது அதியமானுக்கு ஜோடா குடுங்கபா.. ரெம்ப நேரமா பேசிக்கினே இருக்காரு..

        அதியமான்.. மைக்க கண்ல பாத்தா போதுமே…. பாஞ்சி போயி கைப்பத்திடறீங்களே..

        விட்ருங்க பாஸ் முடியல… ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்திஹி

        Posted on 03-Nov-09 at 6:12 pm | Permalink
      • சங்கு , நொந்தகுமாரன், ஜார்ஜ்புஸ் இவர்களெல்லாம் வினவின் எடுபிடிகள். தங்கள் கருத்துக்குண்டான மாற்றுக்கருத்தை ஜீரணிக்க முடியா அஜீரணவாதிகள்.

        இவர்களை முதலில் இனம் கண்டு ஒதுக்க வேண்டும். இவர்களின் இத்தகைய கீழ்த்தரமான அலட்டல் அரற்றல்களிலேயே இவர்களின் முகம் கிழிந்து தொங்குகின்றது….

        மாற்றுக்கருத்தாளர்களுடன் சீரிய கருத்துப்பரிமாற்றம் மட்டுமே வேண்டும்…

        -டக்ளஸ்

        Posted on 04-Nov-09 at 8:14 pm | Permalink
      • டக்ளஸ் அண்ணா!

        அதியமான் அவர்கள் இதுவரை 394 பின்னூட்டங்கள் வினவில் இட்டிருக்கிறார். வினவில் அதிகமாக பின்னூட்டமிட்டவர்களில் முதல் இடம் அவருக்கு தான். அந்த பின்னூட்டங்களில், வினவின் பதிவுகளை விட ஆயிரகணக்கான லிங்குகள் கொடுத்திருக்கிறார். அவருடன் தொடர்ச்சியான விவாதித்தவர்கள் என எல்லோருக்கும் அனுபவம் உண்டு. அந்த அடிப்படையில் தான் அவரிடம் கிண்டலாகவும் சில பின்னூட்டங்கள் இடுகிறேன். இடுகிறோம். அது தொட்டு தொடரும் விவாத்தில் ஒரு பங்கு. அவ்வளவு தான். அவரும் பின்னூட்டங்களில் ஸ்மைலி எல்லாம் போடத்தான் செய்கிறார்.

        புதிதாக வருபவர்களிடம் இப்படி நடந்துகொள்வதில்லை. அதற்காக நீங்கள் இவ்வளவு பீல் பண்ணிட்டங்களே!

        //தங்கள் கருத்துக்குண்டான மாற்றுக்கருத்தை ஜீரணிக்க முடியா அஜீரணவாதிகள்.//
        புரட்சிகர கருத்துக்கள் கொண்டோர் இந்த சமூகத்தில் சிறுபான்மை தான். எங்கள் கருத்துக்கு மாற்று கருத்து வைத்திருப்பவர்கள் தான் இந்த சமூகத்தில் அதிகம். எங்கள் கருத்துக்கள் பெரும்பாலோரிடம் சென்று சேர்ந்தடைந்தால் தான், இங்கு நாங்கள் நினைக்கும் தலைகீழ் மாற்றம் வரும். இதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறோம்.
        //இவர்களெல்லாம் வினவின் எடுபிடிகள். //
        எடுபிடிகள் என்றால் செயலில் உதவுபவர்கள் என்று தானே அர்த்தம். அந்த அர்த்தத்தில் எடுபிடி என்பதில் சந்தோசம் தான்.
        முதன்முறையாக டக்ளஸ் என்ற பெயரில் பார்க்கிறேன். அதியமான் தான் கோபப்பட்டு டக்ளஸ் அவதாரம் எடுத்துவிட்டாரோ!

        Posted on 05-Nov-09 at 11:20 am | Permalink
      • நொந்தகுமாரன்,

        இணையத்தில் இதுவரை, எமது உண்மை பெயரை தவிர,, புணைபெயரில் பின்னோட்டம், பதிவு எழுதியதில்லை. கோபம் வந்தால், கெட்ட வார்த்தையில் திட்டி எழுத நேர்ந்தாலும் கூட, போலி பெயர்களை உபயோக்கும் நேர்மை இன்மை எமக்கு கிடையாது. சரி, இருக்கட்டும், இந்த ‘முற்போக்கு’, ’புரட்சியாளர்’ போன்ற சொற்கள் எல்லாம் வெறும் மாயயை. mere labels which mean nothing in practise. and those who differ with these label bearers are neither narrow minded nor perpetuaters of poverty and inequality. Practical results and history matters more than these labels and empty slogans. ok.

        Posted on 05-Nov-09 at 1:50 pm | Permalink
      • நொந்த குமாரன்!

        குளவியாகக் கொட்டும் ஒரு அவசரத்தை “உங்கள்”(அந்த மூன்று பேரின்) எழுத்துக்களில் கண்டதாலேயே அவ்வாறு எழுதினேன். எதிர்க்கருத்துக்களை விளங்கிக்கொள்வதும் அது சமூக முன்னேற்றத்திற்கு எவ்வாறு பின்னடைவை உருவாக்கும் என்பதையும் தெளிபு படுத்தலே உங்களுக்கான தெரிபுகள்.

        “எடுபிடி” என்றது ஒரு கருத்தை மூர்க்கமாக ஆதரிப்பதற்காக மற்றவற்றைப் புறந்தள்ளும் சுயசிந்தனை அற்ற செயற்பாடு என்ற அளவிலேயே ..உபயோகித்தேன். மற்றும் படி உங்கள் மீது எதுவித குரோதமும் கிடையாது.

        -டக்ளஸ்

        Posted on 05-Nov-09 at 7:48 pm | Permalink
    • rasa

      neengathaan

      Posted on 04-Nov-09 at 11:00 am | Permalink
  7. Good post. It would be encouraging for tamilmanam administrators too. Except for point number 8, all other points are good .
    Probably you could have avoided the reference to Nandan Nilekani ! But Vinavu being Vinavu, you can’t just do that :) -

    Posted on 03-Nov-09 at 2:50 pm | Permalink
    • மணிகண்டன்,

      ஏன் 8 மட்டும் கிடையாது? பதிவர்கள் சந்திச்சா நல்லாத்தானே இருக்கும்!

      Posted on 03-Nov-09 at 3:31 pm | Permalink
      • விழா எடுத்து விருது கொடுக்கறது கொஞ்சமும் தேவையில்லாததுன்னு நான் நினைக்கறேன். அதுனால !

        பதிவர்கள் சந்திக்கறது எல்லாம் நல்ல விஷயம் தான். சந்தித்தபிறகு விமர்சனம் எழுதினாலும் கொஞ்சம் மட்டுப்படுத்தி கருத்தை மட்டும் விமர்சித்து எழுதுவாங்க.

        Posted on 03-Nov-09 at 4:06 pm | Permalink
      • ஜார்ஜூ புஸ்

        மணி கருத்து வேற ஆளு வேறையா… ஒருத்தன் ஒரு பெண்னை ஈவ் டீஸிங் செய்யும் முன்னர் அதை நினைக்கிறான்…அப்புறம் செய்யுறான்… அவன விட்டுட்டு அவன் சிந்தனையை மட்டும் ஜெயிலில் போடுவது எப்படி?

        Posted on 03-Nov-09 at 4:32 pm | Permalink
      • George Bussu, ஏதோ தப்பா சொல்லிட்டேன். விட்டுடுங்க. இதுக்கு மேல இந்த பதிவுல தொடர வேண்டாம் ! வேறொரு சமயம் :) - வேறொரு இடத்தில் :) -

        Posted on 03-Nov-09 at 5:32 pm | Permalink
      • ஜார்ஜூ புஸ்

        டெஃப்பினைட்லீ..ஐ வெய்டிங்யா..

        Posted on 03-Nov-09 at 5:47 pm | Permalink
      • //மணி கருத்து வேற ஆளு வேறையா… ஒருத்தன் ஒரு பெண்னை ஈவ் டீஸிங் செய்யும் முன்னர் அதை நினைக்கிறான்…அப்புறம் செய்யுறான்… அவன விட்டுட்டு அவன் சிந்தனையை மட்டும் ஜெயிலில் போடுவது எப்படி?//
        எப்படிங்க இப்படியெல்லாம்! என்னால முடியாது! கலக்கறீங்க! பேரை மாத்துங்களேன். செருப்பால அடிவாங்கிய ஆளுப்பேர எல்லாம் வைச்சுகிட்டு!

        Posted on 03-Nov-09 at 6:14 pm | Permalink
  8. வழக்கம் போல் மற்ற இடுகைகளைப் போல் கடுமையான விமர்சனமாக இருக்குமோ, அப்படி என்ன தான் எதிர்கருத்து சொல்கிறீர்கள் என்று பார்க்க நினைத்தே வந்தேன்.
    நன்றாக இருக்கிறது இடுகை.

    Posted on 03-Nov-09 at 3:04 pm | Permalink
  9. நெத்தியடி முஹம்மத்

    Welcome. I hope this article is for the first time a ‘positive article’ from vinavu about others. Any hidden reason for that?

    My question is : If ‘tamilmanam’ did not accept vinavu, what wrong will happen? And, as vinavu said in this article, about kumudam, why should vinavu compromise?

    As for as kumudam is concerned that (balaana) title is correct. Then why should vinavu compromise just for a sake of tamilmanam’s ‘good book entry’? Is it good for vinavu’s ‘originality’? Kindly reconsider your decision of compromise. Otherwise, you will lose your “middlemen’s” supports.

    Posted on 03-Nov-09 at 3:33 pm | Permalink
    • ஜார்ஜூ புஸ்

      பாய், தமிழ்மணத்துல வற்ற நோக்கத்தோட வினவு அந்த கட்டுரை தலைப்பை மாத்தினா அது compromise. பலான என்கிற வார்த்தை தமிழ்மணத்துல வறாது என்பதை புரிந்து கொண்டால் அது understanding
      வினவு இங்கே செய்துள்ளது இரண்டாம் வகையை சார்ந்தது, தமிழ்மணம் good book என்பதெல்லாம் உங்கள் கற்பனை.

      Posted on 03-Nov-09 at 3:42 pm | Permalink
  10. // I hope this article is for the first time a ‘positive article’ from vinavu about others.//
    முகம்மது,
    சமூகம் எந்த வித கோளாறுகள் இல்லாமல் அழகா போகனும்ற நோக்கத்துல தான் வினவின் விமர்சனங்கள் அமைகின்றன. இது எவ்வளவு பெரிய பாசிட்டிவ்! இதை காண மறுக்கிறீங்க!

    Posted on 03-Nov-09 at 3:54 pm | Permalink
  11. காளமேகம்

    தமிழ்மணம் விருது மாதிரி, ஈராக்குல குண்டு போட்டு கொல்லுத அமெரிக்கா மாதிரி வினவுல லிங்கு போட்டு கொல்லும் அதியமான் அண்ணாச்சிக்கு சிறந்த லிங்கு மன்னன் என்ற பட்டத்தை வினவுக்காரவுக கொடுக்கலாம். என்ன நாஞ் சொல்லுத்து? அப்புறம் தமிழ்மணத்தில பதிவர்களுக்கு மட்டும்தான் விருது கொடுக்காக, அதே மாதிரி வாசகர்கமாருக்கும் ஏதாவது விருது கொடுத்தா நல்லா இருக்குமுனு தோணுது.

    Posted on 03-Nov-09 at 4:30 pm | Permalink
    • அதியமான் அவர்களுக்கு விருது வழங்கும் இந்த யோசனையை நான் வழிமொழிகிறேன். எல்லா மொக்கைகளையும் வாசித்து தாங்கி, வலம் வரும் வாசகர்களுக்கு விருது கொடுக்கும் யோசனையும் அருமை. இது எப்படி எனக்கு தோணாம போச்சுன்னு வருத்தமா இருக்குங்க!

      Posted on 03-Nov-09 at 6:20 pm | Permalink
  12. ஜார்ஜூ புஸ்

    நல்ல பதிவு இது. என்னைப்போன்றவர்களுக்கு உலக அறிவை தாய்மொழியில் ஊட்டிவுரும் தமிழ்மணம் ஒரு சிறந்த ஊடகம். விருதுகளை பொறுத்தவரை

    எவ்வளவு வகைகளை அதிகப்படுத்த முடியுமோ அவ்வளவு அதிக்ப்படுத்தலாம். வருதுகளுக்குறிய பரிசுத்தொகையை பதிவர்களிடமிருந்தே நன்கொடையாக பெறலாம்

    Posted on 03-Nov-09 at 4:41 pm | Permalink
  13. கொஞ்சம் பயமாத்தேன் உள்ள வந்தேன்….படிச்சி முடிச்சதும் , அட்டா எம்புட்டு நல்லா எழுதியிருக்காங்கன்னு தோணிச்சி.

    வாழ வைக்கும் தமிழ்மணத்துக்கு வாழ்த்துக்களும் , வாழ்த்துவதற்கு களம் அமைத்த வினவிற்கு வாழ்த்துக்களும்!

    நன்றி

    தோழமையுடன்
    மதிபாலா.

    Posted on 03-Nov-09 at 4:53 pm | Permalink
  14. i am a new blogger.i don,t know anything about tamilmanam.can any ony tell what is tamilmanam and thier web address.i just try tamilmanam.com it can’t working.

    THANK YOU FOR INTRODUCING A PLATFORM TO MY BLOG.i gonna use tamilmanam.

    Posted on 03-Nov-09 at 6:43 pm | Permalink
    • வினவு

      தமிழ்மணம் உரல் முகவரி. இதில் சென்று முகப்பு பக்கத்தில் வலைத்தளத்தை எப்படி சேர்ப்பது என்று படித்தறியலாம்.

      http://tamilmanam.net/

      Posted on 03-Nov-09 at 7:43 pm | Permalink
  15. Vel

    மாற்று கருத்தாளர்களை வலைதளத்தில் சந்தித்து கொண்டிருக்கும் நாம் நேரில் சந்திக்க வாய்பாக அமையும் விழாவாக நடக்கும் போது
    வரவேற்போம்.
    மாற்று கருத்தாளர்களை எதிர் கொள்வோம். அவர்களே நம்மை மேலும் உறுதியாக்குகின்றனர்.

    Posted on 03-Nov-09 at 7:22 pm | Permalink
  16. தியாகு

    அதியமானுக்கு எதை சொன்னாலும் சந்தேகம்

    முற்போக்கு பிற்போக்கிலும் சந்தேகம்

    அவர் இருப்பது என்ன முகாம் என தெரியனும் அவர் இருப்பது பிற்போக்கு முகாம்

    Posted on 03-Nov-09 at 7:45 pm | Permalink
  17. சரி தியாகு, நாம் ’பிற்போக்கு’ முகாமிலேயே இருந்திக்குறேன். ‘முற்போக்கு’ முகாமில் உம்மை போன்றவர்கள் தான் இருக்க லாயக்கு. :) )))))))

    Posted on 03-Nov-09 at 9:38 pm | Permalink
  18. தியாகு

    சரி பிற்போக்கு முகாமுக்கு வாழ்த்துக்கள் :)

    Posted on 04-Nov-09 at 9:46 am | Permalink
  19. உள்ளபடியே, பதிவுலகத்தில் ஈழத்தின் குரலை ஒலித்தது தமிழ்மணம்.

    தமிழ்மணம் விளம்பரதாரர்கள் இல்லாமலேயே தமிழ் பதிவுகளையும், பின்னூட்டங்களையும் தொகுத்து வருவது, கடினமான பணி. விளம்பரதாரர்கள் இல்லாமலேயே அவர்களின் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    Posted on 04-Nov-09 at 12:33 pm | Permalink
  20. தியாகு

    தமிழ் மணத்தின் சேவைகளை பெற்று வரும் பதிவர்களில் நானும் ஒருவன்

    தமிழ் மணத்திடம் பல்வேறு காரணங்களுக்காக சண்டைபிடித்து கொண்டு சென்றவர்களை நான் அறிவேன் அந்த காரணங்கள் எல்லாம் 40 பின்னூட்டங்களுக்கு மேல் ஏன் திரட்டவில்லை அல்லது இந்த பதிவரை ஏன் அனுமதித்தீர்கள் அதனால் நான் விலகுகிறேன் என்பதாகத்தான் இருக்கும்

    இதற்கெல்லாம் அப்பாற்பட்டு பதிவுலக பல்கலைகழகமாக இன்று தமிழ் மணம் செயல்படுகிறது

    தமிழ் மணத்தின் கரத்தை வலுபடுத்த தொடர்ந்து செயல்படுவோம்

    அதன் ஒவ்வொரு செயல்பாட்டிலும் துணை நிற்போம்

    தொடரட்டும் தமிழின் மணம் தமிழ் மணத்தில்

    சிறப்பான கட்டுரை வினவு நன்றி

    Posted on 04-Nov-09 at 12:50 pm | Permalink
  21. //மிழ்மணம் விருது மாதிரி, ஈராக்குல குண்டு போட்டு கொல்லுத அமெரிக்கா மாதிரி வினவுல லிங்கு போட்டு கொல்லும் அதியமான் அண்ணாச்சிக்கு சிறந்த லிங்கு மன்னன் என்ற பட்டத்தை வினவுக்காரவுக கொடுக்கலாம்//

    நான் வழிமொழிகிறேன்.

    Posted on 04-Nov-09 at 12:52 pm | Permalink
  22. காளமேகம்

    வினவுக்காரவுக விருதுக்காக சொன்ன யோசனைய பத்தி தமிழ்மணத்துக்காரவுக என்ன நினைக்காகன்னு தெரியலையே? 

    Posted on 04-Nov-09 at 3:27 pm | Permalink
  23. வினவு கூறியிருக்கும் 4 ஆவது விடயம் . முற்போக்கு முகாமிலிருந்து வரும் பிற்போக்குக்கருத்து என்று நினைக்கின்றேன். பெண்களைச் சரி நிகர் சமானமாக நடத்த முன்வராத “வினவு” பற்றி சந்தேகம் எழுகின்றது.

    -டக்ளஸ்

    Posted on 04-Nov-09 at 8:26 pm | Permalink
    • Rathi

      டக்ளஸ்,

      வினவு தளத்தில் தொடர்ந்து கருத்துக்களைப் பதியும் ஓர் பெண் வாசகர் என்ற பெருமையுடன் சொல்கிறேன்.(பின்னே, வினவு தளத்தில் பெரும்பாலும் ஆண்களே கருத்துச் சொல்லும் நிலையில், என்னைப்போன்ற பெண்கள் கருத்துச் சொல்ல தனி தைரியம் வேண்டாமா?). நீங்கள் சொல்வது போல் வினவு ஒன்றும் பெண்கள் விடயத்தில் பிற்போக்கு கருத்து கொண்டிருப்பதாக எனக்கு தெரியவில்லை. வினவும் சரி, அதன் வாசகர்களுக்கும் சரி என்னை ஓர் பெண் என்று பாகுபாடு காட்டி என்னோடு விவாதம் செய்வதில்லை. ஆண்களே அதிகம் உள்ள பதிவுலகில் பெண்களும் வர ஊக்கப்படுத்த வேண்டுமென்கிறார்கள். யதார்த்தத்தை பேசுகிறார்கள். என்னங்க இது, பதிவுலகில் நீங்க பெரும்பான்மையாகவும் பெண்கள் சிறுபான்மையாகவும் இருந்தா, அந்த போட்டி சமவலுப்பெற்றதாக இருக்குமா? 

      Posted on 04-Nov-09 at 11:09 pm | Permalink
      • அர டிக்கெட்டு!

        ரதி, டக்குலசு செருப்புக்காக கால வெட்டுற பார்ட்டி,, வினவு, மற்றும் அதன் வாசகர்களை எப்படியாவது மட்டம் தட்டனும்கறத்துக்காக இது மாதிரி எதுனா பினாத்துவாங்க, நீங்க அத சீரியஸா எடுத்து பதிலெல்லாம் சொல்ல வேணாம்…

        என்னை பொறுத்தவரைக்கும் குழந்தை வளர்ப்பையும் வடை சுடுவதையும் மாய்ந்து மாய்ந்து  எழுதும், மொக்கை பின்னூட்ட peer pressure ல் வீணாய்போகும் தமிழ்வலையுலக பெண் பதிவர்கள் மத்தியில உண்மையான சமூக அக்கறையுடன் நீங்கள் எழுதும் பதிவும் உங்களுடைய பின்னூட்டங்களும் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டிய அம்சம்.

        தமிழச்சி. லீனா, தமிழ்ந்தி. மஹா, ரதி உள்ளிட்ட விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கும் இந்த சமூக அக்கரை கொண்ட பெண் பதிவர்கள் எண்ணிக்கை வளர அவர்களை மற்ற மொக்கைகளுக்கு நடுவில் காணாமல் போகாமல் தடுக்க. ஊக்கப்படுத்த. தமிழ்மணம் தனியே பெண் பதிவர்கள்களுடைய பதிவுகளை திரட்ட வேண்டும்… விருதளிக்க வேண்டும்

        சினிமாவுக்கெல்லாம் தனி பகுதி இருக்கும் போது பெண்களுக்கு இருந்தால் என்ன தவறு? இட ஒதுக்கீடு அவசியம். இதுவே தமிழ்மணம் நிர்வாகத்துக்கு எனது ஆலோசனை

        Posted on 05-Nov-09 at 3:49 am | Permalink
      • ரதியின் எண்ணங்களை ஆதரவோடு பரிசீலிக்கின்றேன். எனது கருத்தில் ஆண் அதிகாரத்தின் குரலைத் தான் எதிர்த்திருக்கின்றேனேயொழிய பெண் இனத்தின் தேவையை அல்ல.

        அர டிக்கட்டு, முன்வரைபுகளைக் கொண்ட குழப்ப வாதியென்று தான் நினைக்கின்றேன்.கருத்துக்களைக் கூறுவதே எமது தேவையொழிய யாரையும் வளைத்துப் போடுவதல்ல. உங்கள் கருத்தை ஏற்காத காரணத்தால் நான் செருப்பிற்காக காலை வெட்டும் அறிவிலியல்ல.

        ஒரு சதுரத்துள் அல்லது வட்டத்தில் மூளையைத் திணித்தவர்கள் கண்ணைக்கட்டிய குதிரையைப் போன்றவர்கள்.

        -டக்ளஸ்

        Posted on 05-Nov-09 at 7:41 pm | Permalink
  24. அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !

    நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
    http://wwwrasigancom.blogspot.com/
    shankarp071@gmail.com

    Posted on 07-Nov-09 at 2:00 pm | Permalink
  25. How can I send my blog post for this competition? where is the link for this competition? :(

    –vidhya

    Posted on 09-Nov-09 at 2:40 pm | Permalink
    • வினவு

      vidhoosh

      போட்டிக்கான விரிவான அறிவிப்பை தமிழ்மணம் http://tamilmanam.net/ இனிமேல்தான் வெளியிடும். இந்த உரல் முகவரியை தொடர்ந்து பாருங்கள்

      Posted on 09-Nov-09 at 2:49 pm | Permalink
  26. pl send link to my email

    Posted on 09-Nov-09 at 2:50 pm | Permalink

One Trackback/Pingback

  1. [...] This post was mentioned on Twitter by Mau and Mau, Mau. Mau said: => தமிழ் உலகைப் பொறுத்தவரை தமிழ்மணமே முன்னணியில் இருக்கிறது http://bit.ly/1dAMbd [...]

Post a Comment

Your email is never published nor shared.

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!