privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஈழப் பிரச்சினை : வைகோ விடுதலை!

ஈழப் பிரச்சினை : வைகோ விடுதலை!

-

ஈழத்தின் இன்றைய நிலைமை என்ன என்ற தலைப்பில் நேற்று 22.10.08 அன்று சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய வைகோ பிரிவினைவாதத்தைத் தூண்டினார் என்று இன்று மாலை கைது செய்யப்பட்டு பதினைந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இந்தக்கூட்டத்தில் பேசிய கண்ணப்பனை பொள்ளாச்சியில் வைத்து போலீஸ் கைது செய்திருக்கிறது.

“தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஆதரவாக பலரும் பேச ஆரம்பித்திருக்கின்றனர். இவர்களையெல்லாம் என் ஆட்சியில் பொடா சட்டத்தில் கைது செயதிருக்கிறேன். இன்றும் இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய முடியும் ஆனால் கருணாநிதி அரசு வேடிக்கை பார்த்து இவர்களை ஆதரிக்கிறது ” என்று இன்று காலைத் தினசரிகளில் ஜெயல்லிதாவின் அறிக்கை வெளிவந்தது. திரையுலகத்தினர் ராமேஸ்வரத்தில் நடத்திய கூட்டத்தைத் தொடர்ந்து ஞானசேகரன் போன்ற காங்கிரஸ் அனாமதேயங்கள் வேறு இரண்டு நாட்களாக சவுண்டு கிளப்பிக் கொண்டிருந்தனர்.

கருணாநிதியை பயமுறுத்த இது போதாதா? வைகோ வைக் கைது செய்து விட்டார். பிரிவினையைத் தூண்டினாராம் வைகோ! எவ்வளவு அபாண்டமான குற்றச்சாட்டு! குஜராத் படுகொலையையும் காஷ்மீர் ஒடுக்குமுறையையும் ஆதரித்து நாடாளுமன்றமே நடுங்கும் வகையில் வீர உரையாற்றிய வைகோ என்ற தேசபக்தர் மீது எப்பேர்ப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டு? அதுவும் அன்புச் சகோதரியின் அறிக்கையை சாக்காக வைத்தல்லவா கருணாநிதி கைது செய்திருக்கிறார்! போன வாரம் கருணாநிதியின் கோழைத்தனத்தையும் மன்மோகன் சிங்கின் துரோகத்தையும் கிழிகிழி என்று கிழித்து அன்புச் சகோதரி விட்ட அறிக்கையைக் கண்டு தமிழகமே வியந்தததே! அன்புச் சகோதரியின் கொள்கைத் தெளிவைக் கண்டு புல்லரித்து வைகோ ஜூவிக்கு ஒரு பேட்டியே கொடுத்தாரே!

“இலங்கை விவகாரத்தில் ஜெயல்லிதாவின் மனமாற்றத்துக்குக் காரணம் நீங்கள்தானா?” இது ஜூனியர் விகடன் நிருபர் வைகோவிடம் கேட்ட கேள்வி.

இதற்கு பதிலளித்த வைகோ ” மேடம் விருப்பு வெறுப்பு இல்லாமல் இந்தப் பிரச்னையை ஆழ்ந்து யோசித்திருப்பார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அரங்கேறும் ஈவு இரக்கமற்ற கொடூரங்களைப் பற்றிய விவரங்களை திரட்டியிருப்பார். ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகங்கள் குறித்த தகவல்களை முழுமையாக சேகரித்திருப்பார். அதில் தெளிவு பெற்ற பின்னர்தான் இப்படியொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.சிங்கள ராணுவத்தை எதிர்க்க ஈழத்தமிழர்களுக்குக் தளம் அமைத்துக் கொடுத்த்து எம்.ஜி.ஆர்தான். அவர் செய்த உதவியை நெஞ்சில் நிறுத்திக்கொண்டுதான் ஒவ்வொரு ஈழத்தமிழனும் இந்த நிமிடம் வரையில் போர்க்களத்தில் நிற்கிறான். புரட்சித் தலைவரின் இயக்கத்தின் பொதுச்செயலாளர் இன்றைக்கு அவருடைய வழியிலேயே ஈழத்தமிழனைப் பாதுகாக்க முன்வந்திருக்கிறார்.”

என்று முழங்கினார்.

இன்று அதே அன்புச் சகோதரியின் அன்பான மிரட்டலைக் கண்டு அஞ்சிய அண்ணன் கலைஞர் தம்பி வைகோவை சிறையில் வைத்து விட்டார். ஏதோ தம்பிக்கு அண்ணனால் ஆன உதவி.
இக்கட்டான தருணத்தில் ஈழத்தமிழ் தொல்லையிலிருந்து வைகோ வை விடுதலை செய்து விட்டார் கருணாநிதி.

இலங்கையில் தமிழ் ஈழம் கேட்பது தங்களுக்கு கவலையளிப்பதாக மார்க்சிஸ்டு தலைவர் வரதராசன் அறிக்கை விட்டிருக்கிறார்.”பிரச்சினைக்குரிய விசயங்களைப் பேசாமல் எல்லாக் கட்சியினரும் ஒற்றுமையைப் பேணவேண்டும்” என்று வலது கம்யூனிஸ்டு தலைவர் தா.பாண்டியன் கூறியிருக்கிறார். எல்லாக் கட்சிகளும் என்றால் எல்லாக் கட்சிகளும்தான். பா.ஜ.க முதல் காங் வரை எல்லோரையும்தான் சொல்கிறார் தா.பாண்டியன்!

துரோகிகளும் பிழைப்புவாதிகளும் தியாகி வேடம் அணிந்தால் என்ன நடக்கும் என்பதை மக்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய மேலாதிக்கத்தின் நலனுக்கு உட்பட்டு ஈழமக்களுக்குத் தெரிவிக்கப்படும் ஆதரவின் யோக்கியதை இப்படித்தான் இருக்கும். ஈழத்துக்கு ஆதரவாக குரல் எழுப்புவதற்குக் கூட தமிழ்நாட்டில் சிறை! 87 முதல் இன்று வரை இதுதான் உண்மை. இதற்கு அப்பாற்பட்டு ஈழத்தமிழர்க்கு இந்திய அரசு ஆதரவு கொடுக்கும் என்பதெல்லாம் பொய்.