Skip to content

உ.ரா.வரதராஜன் மரணமும் சி.பி.எம்மின் அரசியல் ஒழுக்கக் கேடும்!!

vote-012மார்க்சிஸ்டு கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசல்கள், அதிகாரப் போட்டி, கழுத்தறுப்புகள் ஆகியவை ஊரறிந்த விசயங்கள் என்பதால் உ.ரா.வரதராசனின் மரணம் குறித்து இதுவரை எழுதாமல் இருந்தோம்.

ஆனால் இப்போது பரிதாபத்துக்குரிய பலிகடாவாக உ.ரா.வரதராசனும், வெறுக்கத்தக்க வில்லனாக மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்களும் சித்தரிக்கப்படுகின்றனர். பின் தொடரும் நிழலின் குரல்கள் பாகம் 2க்கான கதையை ஜெயமோகன் அசை போடத்தொடங்கிவிட்டார். மார்க்சிஸ்டு கட்சி மட்டுமல்ல, மொத்த கம்யூனிஸ்டு இயக்கமுமே இப்படித்தான், என்று பல தியாகசீலர்கள் புழுதிவாரித் தூற்றத் தொடங்கிவிட்டதால் நாம் இதில் தலையிட வேண்டியதாக இருக்கிறது. (ஜெயமோகனிடம் பொங்கும் கம்யூனிஸ்டு அபிமானம் பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுவோம்)

________________________________________
உ.ரா வரதராசனின் மரணம் எழுப்பும் கேள்விகள் மார்க்சிஸ்டு கட்சித் தலைமையிடம் கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் தோற்றுவித்திருக்கின்றன. ஒரு பெண்ணைப் பாலியல் ரீதியாகத் தொந்திரவு செய்தார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டதனால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று காரத் விளக்கம் அளித்தார்.

அந்தக் குற்றச்சாட்டு உண்மையாயின் அது நடவடிக்கைக்கு உரியதே. அதுவும் கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் உரிய மத்தியக் குழு உறுப்பினர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவர் இத்தகைய தவறினை செய்யும்போது அவர் மீதான நடவடிக்கை சற்றுக் கடுமையாக இருப்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே.

மாறாக, அவர் தவறே இழைக்காமலிருந்து, பதவிக்கான கோஷ்டித் தகராறில் எதிர் கோஷ்டியினர் புனைந்த அவதூறுதான் அவர் மீதான இந்தக் குற்றச்சாட்டு என்று கூறப்படுவது உண்மையானால், இது தற்கொலையாகவே இருந்தாலும், கொலைக்கு நிகரானது. சட்ட மொழியில் கூறினால் தற்கொலைக்குத் தள்ளுதல் என்ற குற்றம்.

இவற்றில் எது உண்மை என்று பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கும்போதே, வரதராசன் மத்தியக் கமிட்டிக்கு கொடுத்த கடிதம் வெளிவந்து விட்டது.

இந்தக் கடிதத்தின் நம்பகத்தன்மையை மார்க்சிஸ்டு கட்சி மறுக்கவில்லை. கடிதத்திலிருந்து தெரியவரும் உண்மை இதுதான்.

வரதராசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான முரண்பாடு காரணமாக, மணவிலக்கு செய்ய அவரது மனைவி முடிவு செய்திருக்கிறார். அத்தகையதொரு சம்பவம் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கக் கூடும் என்பதனால், அதனைத் தடுப்பதற்காக வாசுகி உள்ளிட்டோர் வரதராசனின் மனைவி சரசுவதியிடம் பேரம் பேச நியமிக்கப் பட்டிருக்கின்றனர். வரதராசன் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். மணவிலக்கு என்ற முடிவை அவரது மனைவி மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் பேரம். உன் மீது ஒழுங்கு நடவடிக்கை வரப்போகிறது என்று மனைவி சரசுவதி தன்னிடம் முன்கூட்டியே தெரிவித்ததாகவும் வரதராசன் மத்தியக் கமிட்டிக்கு கொடுத்த தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இக்கடிதத்தையே மேற்கோள் காட்டி, இதுதான் நடந்தது என்று வரதராசனே கூறியிருக்கும்போது, கட்சிக்குள் அதிகாரப்போட்டி, என்று அவதூறு செய்கிறார்களே என்று அங்கலாய்க்கிறார் தமிழ்ச்செல்வன்.

ஆனால் நான் எந்தப் பெண்ணுக்கும் குறுஞ்செய்தி அனுப்பவில்லை. என்மீது குற்றம் சாட்டும் பிரமீளா என்ற அந்தப் பெண்ணைக்கூட விசாரிக்காமலேயே மாநிலக் குழு என்மீது நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார் வரதராசன். அதுமட்டுமல்ல, இதைவிடக் கேவலமான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், மாநிலக் கமிட்டியிலும், மத்தியக் கமிட்டியிலும் கவுரவமாக அமர்ந்திருக்கிறார்கள் என்ற உண்மையையும் தனது கடிதத்தில் போட்டு உடைக்கிறார். இது எதையும் மத்தியக் கமிட்டி கண்டு கொள்ளவில்லை.

கட்சிக்குள் கோஷ்டித்தகராறு இல்லை என்று நிரூபிக்க முயலும் தமிழ்ச்செல்வனும் வரதராசன் கூறும் இந்தக் குற்றச்சாட்டுகளைக் கண்டு கொள்ளவில்லை.

இனி அடுத்து வேறு ஏதாவது கடிதங்களோ ஆவணங்களோ வெளியாகும் வரையில், இப்போதைக்கு வரதராசன் கடிதம்தான் நம்பத்தக்க ஆவணம் என்பதால் இதனையே அடிப்படையாகக் கொண்டு இப்பிரச்சினையைப் பரிசீலிப்போம்.

________________________________________________

மத்தியக் கமிட்டி உறுப்பினர் என்றால் கணவன் மனைவிக்கு இடையே முரண்பாடு வரக்கூடாது என்பதில்லை. வரலாம். அதனைத் தீர்த்து வைக்க முயல்பவர்கள் யார்மீது தவறு என்று பார்த்து கண்டிக்க வேண்டும். இணைந்து வாழவே முடியாது என்ற நிலை இருந்தால் மணவிலக்கு செய்ய அனுமதித்து விட வேண்டும். அதுதான் தீர்வு. தலைவர் டைவோர்ஸ் செய்தால், ஊடகங்கள் அதை அவலாக்கி மெல்லக்கூடும் என்பதும் உண்மைதான். தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணியை ரத்து செய்து புதிய தாம்பத்தியத்தை தொடங்கும் மார்க்சிஸ்டு கட்சி ஊடகங்களின் கேலிப்பொருளாகவில்லையா? அதற்கெல்லாம் கவலைப்படாத கட்சித்தலைமை விவாகரத்து குறித்து இவ்வளவு கவலை கொண்டது என்பதைத்தான் நம்ப முடியவில்லை.

கவலைப்படுபவர்கள் பிரச்சினையைத் தீர்க்க யோக்கியமான வழியை அல்லவா தேர்ந்தெடுக்க வேண்டும். உன் புருசன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறோம் என்று மனைவியிடம் பேரம் பேச ஒரு குழு. அந்தப் பேரத்தின் அடிப்படையில் மாநில, மத்தியக் கமிட்டிகளின் ஒழுங்கு நடவடிக்கை! அதனால்தான் குற்றம் சாட்டிய பெண்ணிடம் கூட விசாரணை நடத்தாமலேயே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நடவடிக்கைதான் மார்க்சிஸ்டு தலைமையின் நோக்கம் குறித்த சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. பதவிப்போட்டியிலிருந்து உ.ரா.வரதராசனை அகற்றுவதற்குக் கிடைத்த ஆயுதமாக, எதிர் கோஷ்டியினர் அவரது மனைவியை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பாலியல் தொந்தரவு செய்ததாக வரதராசன் மீது சாட்டப்பட்ட குற்றம் உண்மையா, அரை உண்மையா, முழுப்பொய்யா, அல்லது ஜோடனையா என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை காலப்போக்கில் அதுவும் தெரிய வரலாம். ஆனால், அவர் குறுஞ்செய்தி அனுப்பியது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு இத்தனை கடுமையான தண்டனையை மார்க்சிஸ்டு தலைமை எடுத்திருக்கிறது என்பதைத்தான் நம்பமுடியவில்லை.

ஒரு தோழர் மார்க்சிஸ்டு கட்சியில் உள்ளவர், அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள். மாநிலக்குழு உறுப்பினர்கள் எல்லோரும் அக்மார்க் ராமர்களா சொல்லுங்கள் என்று கட்சி உறுப்பினர்கள் எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டிருப்பதாக தமிழ்ச்செல்வன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். இதைத்தான் வரதராசனே தன் கடிதத்தில் கேட்டிருக்கிறாரே, அதை வசதியாக மறந்து விட்டார் போலும் தமிழ்ச்செல்வன்!

____________________________________________

இன்று மார்க்சிஸ்டு உறுப்பினர்கள் மத்தியிலும், அந்தக் கட்சியின் யோக்கியதை தெரிந்த அதன் அனுதாபிகள் மத்தியிலும் நடைபெறும் விவாதத்தின் சாரம் கீழ்க்கண்டவாறு இருக்கிறது.

அடுத்தவன் பெண்டாட்டியை சின்னவீடாக வைத்திருப்பவனெல்லாம் கட்சிப் பதவியில் இருக்கும்போது, பாலியல் தொந்திரவுக்கு ஒழுங்கு நடவடிக்கையா?

கட்டைப் பஞ்சாயத்து செய்வது, போலீஸ் ஸ்டேசனில் புரோக்கர் வேலை பார்ப்பது, தொழிற்சங்கத் தலைவராக இருந்து தொழிலாளிகளுக்கு துரோகம் செய்து சொத்து சேர்ப்பது போன்றவையெல்லாம் அங்கீகரிக்கப்படும் கட்சியில், எஸ்.எம்.எஸ் அனுப்புவது நடவடிக்கைக்கு உரிய குற்றமா?

குடும்பத்தில் பார்ப்பனச் சடங்குகள் அனைத்தையும் பேணுபவர்கள், வரதட்சிணை, மொய் முதலான எல்லா அசிங்கங்களையும் அங்கீகரித்து வக்காலத்தும் வாங்குபவர்கள் குற்றவாளிகள் அல்ல, வரதராசன் குற்றவாளியா?

சகல விதமான ஒழுக்கக் கேடுகளும் கட்சியின் அங்க இலட்சணமாகி விட்டதால், இந்த ஒழுக்கக் கேடுகளில் எது பெரியது- எது சிறியது, எது மன்னிக்க முடியாதது- எது மன்னிக்கத்தக்கது என்பதுதான் இப்போதைய விவாதப் பொருள்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்றொரு பொன்மொழியை கவுண்டமணி ஏற்கெனவே கூறியிருக்கிறார் என்ற போதிலும், எதெல்லாம் சாதாரணம் என்ற பிரச்சினை தீர்க்கப்படவில்லை. காலந்தோறும் அது மாறிக்கொண்டே இருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவுடனே பதவி விலகவேண்டும் என்ற மரபு மாறி, எஃப்.ஐ.ஆர் போட்டால்தான் விலக வேண்டும் என்று ஆகி, பின்னர் கூற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை பதவியில் இருக்கலாம் என்று ஆகி, அதுவே மேலும் முன்னேறி, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால்தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெளிவு படுத்தப்பட்டு, கடைசியாக அப்படித் தண்டனை விதிக்கப்பட்டாலும், அப்பவும் நான் ராஜா என்று பதவியில் இருக்கலாம் என்று அம்மா நிரூபித்துக் காட்டினார்.

ஒழுக்கக் கேடுகள் மற்றும் குற்றங்களில் எவை சகஜமானவை, எவை சகித்துக் கொள்ளக் கூடியவை, எவை சகிக்க முடியாதவை என்று ஒவ்வொரு கட்சிக்காரனுக்கும் ஒரு மனக்கணக்கு இருக்கிறது. மார்க்சிஸ்டு தொண்டரும் இதற்கு விதிவிலக்கல்ல.

குற்றங்களுக்கான தரவரிசைப் பட்டியலை குற்றவியல் சட்டம் என்று அழைக்கலாம். தனிநபர் ஒழுக்க நெறிகளுக்கும் அரசியல் அறம் சார்ந்த விழுமியங்களுக்கும் அப்படி ஒரு தரவரிசைப் பட்டியலை உருவாக்க முடிவதில்லை. சட்டங்கள் திருத்தப்படுவதைக் காட்டிலும் நூறு மடங்கு வேகத்தில் ஒழுக்கம் மற்றும் அறம் குறித்த மதிப்பீடுகள் மாறிக்கொண்டிருக்கின்றன.

_____________________________________

வரதராசனுக்கு ஆதரவாகவும் மார்க்சிஸ்டு கட்சித் தலைமைக்கு எதிராகவும் மார்க்சிஸ்டு கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் நிலவுகின்ற பொதுக் கருத்தின் உளவியலை ஒரு வரியில் இப்படித் தொகுத்துக் கூறலாம்: பாலியல் தொந்திரவு செய்த குற்றத்துக்காக இராவணன் மீது தசரதன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியுமா?

வரதராசன் மீதான குற்றச்சாட்டு உண்மை என்றே வைத்துக் கொள்வோம். பாலியல் தொந்திரவு என்ற அந்தக் குற்றத்தின் உட்கிடை என்ன? ஒரு ஆண் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையில் தன் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், அந்த நம்பிக்கையின் வழியாகப் பெற்ற அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தி, ஒரு பெண்ணை அவர் துன்புறுத்தியிருக்கிறார். ஒரு கணவன் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையிலும் தனது துணைவிக்கு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறார். இதற்குத்தான் ஒழுங்கு நடவடிக்கை.

பாலியல் ஒழுக்கம் என்ற தளத்திலிருந்து அரசியல் ஒழுக்கம் என்ற தளத்துக்கு சற்று நகர்ந்து சென்று ஒரே ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். சென்ற சட்டமன்றத் தேர்தலில் புத்ததேவுக்கு வரலாறு காணாத வெற்றியை வழங்கிய தொகுதிகளில் ஒன்று நந்திக்கிராம். அந்தத் தொகுதியின் மக்களுக்குத் தெரியாமலேயே, அவர்களுடைய ஒப்புதல் இல்லாமலேயே அவர்களது மண்ணை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை பேசினார் புத்ததேவ். எதிர்ப்பை துப்பாக்கி முனையில் ஒடுக்கினார். குண்டர்களை ஏவினார்.

அந்த எதிர்ப்பு என்பது மம்தா நக்சலைட்டு கூட்டு சதி என்று வியாக்கியானம் செய்து மார்க்சிஸ்டு தொண்டர்களை உசுப்பேற்றி விட்டது கட்சித் தலைமை. நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர்தான் இது மேற்கு வங்க மக்களின் கூட்டுச் சதி  என்ற உண்மை மார்க்சிஸ்டு கட்சியினருக்கு லேசாக உரைக்கத் தொடங்கியது. இருந்த போதிலும் ஆபரேசன் கிரீன் ஹன்ட் நடவடிக்கையில் சிதம்பரத்துடன் இன்று தோளோடு தோள் நிற்கும் முதல் தளபதி புத்ததேவ்தான்.

தம்மை நம்பி வாக்களித்த மக்களின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைப்பதோ, சென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் குறைந்த பட்ச பொதுத்திட்டத்துக்காக எந்த சிதம்பரத்துடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்களோ அதே சிதம்பரத்துடன் இன்று தோளோடு தோள் நிற்பதோ மார்க்சிஸ்டு கட்சியினர்க்கு அறம் கொன்ற அதிர்ச்சியை உருவாக்கியதாகத் தெரியவில்லை.

ஏனென்றால் அவர்களுடைய பார்வையில் அது political. இது personal.    அது உணர்ச்சியற்றது. இது உணர்ச்சி பூர்வமானது.

அரசியல் ஒழுக்கம் என்பது படுபாதாளத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும்போது, தனிநபர் ஒழுக்கம் மட்டும் அந்தரத்தில் ஒளிவிட முடியும் என்பது ஒரு மூட நம்பிக்கை.

தங்குவதற்கு ஒரு வீடும், உத்திரவாதமான சோறும், உடுத்துவதற்கு மாற்று உடையும் இல்லாமல், கால் போன இடமெல்லாம் அலைந்து, கிடைத்தைத் தின்று, வயலே பாயாய் வரப்பே தலையணையாய் படுத்து உறங்கும் ஒரு பரதேசியிடம் துறவுக்குரிய ஒழுக்கத்தை எதிர்பார்க்கலாம்.

நிலங்கள், சுயநிதிக் கல்லூரிகள், பைனான்சு கம்பெனிகள், ரியல் எஸ்டேட் வியாபாரம் என்று நிறுவனமாகி விட்ட காஞ்சித் துறவியிடம் ஒழுக்கத்தை எதிர்பார்த்தார் சங்கரராமன். அந்த மூட நம்பிக்கைக்கு உரிய தண்டனை வரதராஜப் பெருமாள் சந்நிதியில் வைத்தே அவருக்கு வழங்கப்பட்டது. பருப்பும் நெய்யும் தின்று தினவெடுத்த ஆதீனங்கள், திடீர் சாமியார்களிடம் ஆன்ம விமோசனம் தேடிப் போகும் பெண்களுக்கோ படுக்கையறையிலும், கருவறையிலும் ஞானம் அருளப்படுகிறது.

சொல்லுக்கும் செயலுக்கும் முரணின்றி வாழ்தல் என்ற நெறியும், அதற்கான முயற்சியும்தான் கம்யூனிஸ்டுகளைப் பிறரிடமிருந்து வேறுபடுத்துகிறது. முதலாளித்துவமே கம்யூனிசம், தேர்தல் வெற்றியே புரட்சி என்ற நடைமுறையைக் கொண்டிருக்கும் ஒரு கட்சியில் அறம் என்ற ஒரு பொருள் அந்தரத்திலா உயிர்வாழ முடியும்?

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிப் பணியாற்றியவர், நேர்மையானவர், உழைப்பாளி, திறமைசாலி என்ற பல்வேறு காரணங்களுக்காக மார்க்சிஸ்டு தொண்டர்கள் இன்று வரதராசன் மீது அனுதாபம் கொள்ளலாம். அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து மனம் குமுறலாம். ஆனால் இந்த அநீதியின் ஆணிவேர் கட்சியின் அரசியலில் இருக்கிறது.

அச்சுதானந்தனுக்கும் பின்னாரயி விஜயனுக்கும் கேரளத்தில் நடந்து கொண்டிருப்பது கொள்கை மோதலா, அதிகார மோதலா? அவர்கள் மீது காரத் எடுத்த ஒழுங்கு நடவடிக்கையையும், வரதராசன்மீது எடுத்த ஒழுங்கு நடவடிக்கையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! மார்க்சிஸ்டு கட்சியின் யோக்கியதை புரியும்.

சி.பி.எம்மின் செங்கொடி இன்னமும் பறந்து கொண்டிருக்கலாம். பறப்பனவெல்லாம் உயிருள்ளவை அல்ல. அறம் உயிருள்ளது. அது தனிநபர் ஒழுக்கத்தில் மட்டுமல்ல, அரசியல் ஒழுக்கத்திலும் உயிர்த்திருக்கிறது. சி.பி.எம்மின் அரசியல், அமைப்பு முறை ஒழுக்கக் கேட்டிற்கு பலியானவர் வரதராஜன். அதன் சோகத்தை தனிநபர் ஒழுக்கத்தில் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

Print

49 Comments

  1. ளிமாகோ

    BREAKING NEWS: மார்க்சிஸ்ட் கட்சியனர் மக்கள் டிவி மீது தாக்குதல்..

    டபுள்யூ.ஆர்.வரதராஜன் மர்மமான மரணம் குறித்து நேற்று இரவு மக்கள் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியனர் மக்கள் டிவி அலுவகத்திற்குள் நுழைந்து தாக்குதல்…—சிகப்பு சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும்…கம்யூனிஸ்ட் வேசம் கலைஞ்சு போச்சு டும் டும் டும்…

    Posted on 05-Mar-10 at 2:56 pm | Permalink
    • kaditham padithavan

      “”ஆனால் நான் எந்தப் பெண்ணுக்கும் குறுஞ்செய்தி அனுப்பவில்லை”"

      அவருடைய கடிதத்தில் எங்கும் நான் குறுஞ்செய்தி அனுப்பவில்லை என எழுதவில்லை. மானம் கேட்ட வினவு…நீங்களும் கம்யூனிஸ்ட் கேவலம். எதற்கு வேறு எதாவது செய்யலாமே

      Posted on 13-Mar-10 at 2:17 am | Permalink
      • no compermise

        பாருங்க வினவு இப்படிபட்ட உண்மையான தொண்டர்கள வச்சிக்கிட்டுதான் ஊற அடிச்சி உலைல போடுறாங்க இத தெரிஞ்சிகிட்டு புலம்பரரே

        Posted on 18-Mar-10 at 10:53 am | Permalink
    • kaditham padithavan

      “”மாறாக, அவர் தவறே இழைக்காமலிருந்து, பதவிக்கான கோஷ்டித் தகராறில் எதிர் கோஷ்டியினர் புனைந்த அவதூறுதான் அவர் மீதான இந்தக் குற்றச்சாட்டு என்று கூறப்படுவது உண்மையானால், இது தற்கொலையாகவே இருந்தாலும், கொலைக்கு நிகரானது. சட்ட மொழியில் கூறினால் தற்கொலைக்குத் தள்ளுதல் என்ற குற்றம்”"

      நீங்கள் ஒரு ஊகத்தை முன்வைத்துதான் கட்டுரை தொடங்குது. அவர் செய்தி அனுப்பினாரா இல்லையா என தெரியாது.

      பின் எப்படி கீழ் உள்ளவாறு எழுதுனீர்கள்

      “”

      பதவிப்போட்டியிலிருந்து உ.ரா.வரதராசனை அகற்றுவதற்குக் கிடைத்த ஆயுதமாக, எதிர் கோஷ்டியினர் அவரது மனைவியை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது”"

      Posted on 13-Mar-10 at 2:23 am | Permalink
  2. அருமையான கட்டுரை. நியாயமான கேள்விகள்.

    Posted on 05-Mar-10 at 4:31 pm | Permalink
  3. அசுரன்

    அற்புதமானதொரு கட்டுரை.

    //சி.பி.எம்மின் செங்கொடி இன்னமும் பறந்து கொண்டிருக்கலாம். பறப்பனவெல்லாம் உயிருள்ளவை அல்ல. அறம் உயிருள்ளது. அது தனிநபர் ஒழுக்கத்தில் மட்டுமல்ல, அரசியல் ஒழுக்கத்திலும் உயிர்த்திருக்கிறது. சி.பி.எம்மின் அரசியல், அமைப்பு முறை ஒழுக்கக் கேட்டிற்கு பலியானவர் வரதராஜன். அதன் சோகத்தை தனிநபர் ஒழுக்கத்தில் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.//

    //சொல்லுக்கும் செயலுக்கும் முரணின்றி வாழ்தல் என்ற நெறியும், அதற்கான முயற்சியும்தான் கம்யூனிஸ்டுகளைப் பிறரிடமிருந்து வேறுபடுத்துகிறது.//

    //அரசியல் ஒழுக்கம் என்பது படுபாதாளத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும்போது, தனிநபர் ஒழுக்கம் மட்டும் அந்தரத்தில் ஒளிவிட முடியும் என்பது ஒரு மூட நம்பிக்கை.

    தங்குவதற்கு ஒரு வீடும், உத்திரவாதமான சோறும், உடுத்துவதற்கு மாற்று உடையும் இல்லாமல், கால் போன இடமெல்லாம் அலைந்து, கிடைத்தைத் தின்று, வயலே பாயாய் வரப்பே தலையணையாய் படுத்து உறங்கும் ஒரு பரதேசியிடம் துறவுக்குரிய ஒழுக்கத்தை எதிர்பார்க்கலாம்.///

    //தம்மை நம்பி வாக்களித்த மக்களின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைப்பதோ, சென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் குறைந்த பட்ச பொதுத்திட்டத்துக்காக எந்த சிதம்பரத்துடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்களோ அதே சிதம்பரத்துடன் இன்று தோளோடு தோள் நிற்பதோ மார்க்சிஸ்டு கட்சியினர்க்கு அறம் கொன்ற அதிர்ச்சியை உருவாக்கியதாகத் தெரியவில்லை//

    //நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர்தான் இது மேற்கு வங்க மக்களின் கூட்டுச் சதி என்ற உண்மை மார்க்சிஸ்டு கட்சியினருக்கு லேசாக உரைக்கத் தொடங்கியது.//

    //பாலியல் தொந்திரவு செய்த குற்றத்துக்காக இராவணன் மீது தசரதன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? //

    //அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்றொரு பொன்மொழியை கவுண்டமணி ஏற்கெனவே கூறியிருக்கிறார் என்ற போதிலும், எதெல்லாம் சாதாரணம் என்ற பிரச்சினை தீர்க்கப்படவில்லை. காலந்தோறும் அது மாறிக்கொண்டே இருக்கிறது.//

    //தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணியை ரத்து செய்து புதிய தாம்பத்தியத்தை தொடங்கும் மார்க்சிஸ்டு கட்சி ஊடகங்களின் கேலிப்பொருளாகவில்லையா? அதற்கெல்லாம் கவலைப்படாத கட்சித்தலைமை விவாகரத்து குறித்து இவ்வளவு கவலை கொண்டது என்பதைத்தான் நம்ப முடியவில்லை.//

    Posted on 05-Mar-10 at 4:41 pm | Permalink
  4. இவர்கள் முதாலளிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தனிநபர் ஒழுக்கம் பற்றி கவலை படலாமா ????
    போலி கட்சிகளை விட போலி கம்யூனிஸ்ட் ஒழிக்கப்பட வேண்டும்.

    Posted on 05-Mar-10 at 4:45 pm | Permalink
  5. P.Selvaraj

    இந்த வயதில் தற்கொலை மிகவும் கொடியது என் குடும்பத்தில்
    நடந்த தற்கொலை இன்னும் மறக்க முடியவில்லை இதுபோல் இனி யாருக்கும் நடக்க கூடாது
    அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள் அன்புடன் ப.செல்வராஜ் நீலாங்கரை சென்னை

    Posted on 05-Mar-10 at 5:00 pm | Permalink
  6. ரியல் என்கவுண்டர்

    தாமதமானலும் கட்டுரை எழுப்பும் கேள்விகள் முக்கியம். சி.பி.எம் இப்ப சீர் செய் இயக்கம் நடத்துறாங்களாம். அப்பனா வரதராஜன் எழுதுன பாலியல் குற்றம செய்திருக்குற மத்திய, மாநில கமிட்டி உறுப்பினர்கள நீக்குவாங்களா இல்லேனா அதை ஞாயப்படுத்தி அணிகளுக்கு விளக்குவாங்களா தெரியல

    Posted on 05-Mar-10 at 5:05 pm | Permalink
  7. ஒருவனுக்கு ஒருத்தி போன்ற நிலபிரபுத்துவ காலத்து ஒழுக்கவியல் மதிப்பீடுகளை முதலாளித்துவமே தகர்த்து எறிந்து கொண்டு இருக்கையில், அதை விட முற்போக்கான ‘கம்யூனிசம்’ ஏன் இவைகளை சுமந்து திரிய வேண்டும்? கம்யுனிசம் அல்லது மார்கிஸிய மெய்யியலை ஆழமாக உள் வாங்கி கொண்ட ஒருவருக்கு இந்த ஒழுக்கவியல் நெறிமுறைகள் எல்லாம் பாரமாகத்தானே இருக்கும்?

    மக்களிடம் அறிவியல் பூர்வமாக இந்த மதிப்பீடுகளின் பிற்போக்குத்தனத்தை விளக்க முடியாத கையாலாகதனத்துக்கு ஏன் ///சொல்லுக்கும் செயலுக்கும் முரணின்றி வாழ்தல் என்ற நெறியும், அதற்கான முயற்சியும்தான் கம்யூனிஸ்டுகளைப் பிறரிடமிருந்து வேறுபடுத்துகிறது./// இப்படி ஒரு சப்பைகட்டு?

    ///அரசியல் ஒழுக்கம் என்பது படுபாதாளத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும்போது, தனிநபர் ஒழுக்கம் மட்டும் அந்தரத்தில் ஒளிவிட முடியும் என்பது ஒரு மூட நம்பிக்கை./// விக்டோரிய மற்றும் நிலபிரபுத்துவ காலத்து ஒழுக்கங்களை நாம் ஏன் சுமந்து திரிய வேன்டும் என்பதையும், தனிநபர் ஒழுக்கம் என்பதின் அர்த்தம் காலம்தோறும் ஏன் மாறி வருகிறது என்பதையும், மற்றும் முதலாளித்துவ காலம் சாராம்சத்தில் நிலபிரபுத்துவ காலத்தை விட முற்போக்கானது என புரிதல் கொள்வோமாயின் இந்த ஒழுக்கம் சார்ந்த முரன்பாடுகளையும் வினவு விளக்குவாரா மார்க்ஸிய அறிவியல்படி? அதனோடே எஙகல்ஸின் ‘The Origin of the Family, Private Property and the State’ என்ற ஆய்வை படித்து விட்டு குடும்பம் என்னும் அமைப்பையே தகர்க்க வேண்டும் என மார்க்ஸிய வகுப்புகளில் கற்று கொண்டு இங்கு குடும்ப அமைப்பை நிறுவனமாக்கி கட்டுரை எழுதும் கம்யூனிஸ்ட்டை எப்படி புரிந்து கொள்வது?!!

    Posted on 05-Mar-10 at 5:30 pm | Permalink
    • mani

      ஓ… சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு இல்லாமல் இருப்பது பிற்போக்கா… சே இப்படித்தான் நம்ம ஓட்டுசீட்டு அரசியல் வாதிகள் எல்லாம் முற்போக்காளர்கள் ஆனார்களா.. நல்லா இருக்கே இது

      Posted on 05-Mar-10 at 5:44 pm | Permalink
    • கேள்விக்குறி

      @ புலிகேசி….@@@ஒருவனுக்கு ஒருத்தி  blah..blah..blah…!!! கட்டுரைக்கு சம்பந்தமே இல்லாமல் இதை விட வெட்டித்தனமான பின்னூட்டத்தை ஆர்.எஸ்.எஸ் புண்ணாக்கு மண்டையர்கள் கூட போடமுடியாது…

      ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்திரவு கொடுத்தார் என்ற புகாரை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கட்டுரைக்கு பாலியல் சுதந்திர ஒழுங்க வெங்காயங்களை பற்றி பிரசங்கம் செய்வது இருக்கிறதே …அய்யோ அய்யோ…. இவ்வளவ கம்மூனுஸ வெறுப்பு இருப்பவர் வினவுக்கு ஏன் வருவானேன், பேசாமல் ஜெயமோகன் தளத்திலோ தமிழ் இந்துவிலோ குடியிருக்கலாமே.. முதலில் பாலியல் டார்சருக்கும் பாலியல் சுதந்திரத்தும் உள்ள வித்தியாசத்தை ஆழமாக உள்வாங்கிக் கொண்டு பிறகு உரையாடுவதோ தகர்பதோ செய்யு முயற்சிப்பது ஷேமம்!!! இல்லையா???

      Posted on 05-Mar-10 at 5:48 pm | Permalink
      • ///ஒரு கணவன் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையிலும் தனது துணைவிக்கு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறார். இதற்குத்தான் ஒழுங்கு நடவடிக்கை.///

        ///சி.பி.எம்மின் செங்கொடி இன்னமும் பறந்து கொண்டிருக்கலாம். பறப்பனவெல்லாம் உயிருள்ளவை அல்ல. அறம் உயிருள்ளது. அது தனிநபர் ஒழுக்கத்தில் மட்டுமல்ல, அரசியல் ஒழுக்கத்திலும் உயிர்த்திருக்கிறது. சி.பி.எம்மின் அரசியல், அமைப்பு முறை ஒழுக்கக் கேட்டிற்கு பலியானவர் வரதராஜன். அதன் சோகத்தை தனிநபர் ஒழுக்கத்தில் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.///

        Posted on 05-Mar-10 at 6:18 pm | Permalink
      • கட்டுரையின் சாரம் அரசியல் ஒழுக்கம் மற்றும் தனிநபர் ஒழுக்கம் சார்ந்தே ஒலிக்கிறது.
        ‘கம்யூனிஸ்டு என்ற முறையிலும் தனது துணைவிக்கு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறார்.’,
        ‘…அதன் சோகத்தை தனிநபர் ஒழுக்கத்தில் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.’
        என்ற வரிகளில் இருந்து கட்டுரையாளரின் ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகளை புரிந்து கொள்ள முடிகிறது. அதனை தொடர்ந்தே எனது கேள்விகள்!

        Posted on 05-Mar-10 at 6:28 pm | Permalink
        • கேள்விக்குறி

          புலிகேசி, வாக்கியங்களை பிரித்து போட்டு பதித்தால் நமக்கு விரும்பியது ஒலிக்கும… அந்த வாக்கியம் இதோ……….

          @@@@@@

          வரதராசன் மீதான குற்றச்சாட்டு உண்மை என்றே வைத்துக் கொள்வோம். பாலியல் தொந்திரவு என்ற அந்தக் குற்றத்தின் உட்கிடை என்ன? ஒரு ஆண் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையில் தன் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், அந்த நம்பிக்கையின் வழியாகப் பெற்ற அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தி, ஒரு பெண்ணை அவர் துன்புறுத்தியிருக்கிறார். ஒரு கணவன் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையிலும் தனது துணைவிக்கு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறார். இதற்குத்தான் ஒழுங்கு நடவடிக்கை

          @@@@@@@@

          ஆக ”’ பாலியல் தொந்திரவு ”’ ”’ பெண்ணை துன்புறுத்தியிருக்கிறார்”’ என்பதையெல்லாம்… நீங்கள் வெட்டினால் எப்படி?????

          அடுத்தது

          @@@@@

          அறம் உயிருள்ளது. அது தனிநபர் ஒழுக்கத்தில் மட்டுமல்ல, அரசியல் ஒழுக்கத்திலும் உயிர்த்திருக்கிறது. சி.பி.எம்மின் அரசியல், அமைப்பு முறை ஒழுக்கக் கேட்டிற்கு பலியானவர் வரதராஜன். அதன் சோகத்தை தனிநபர் ஒழுக்கத்தில் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.

          @@@@

          எதன் சோகத்தை தனிநபர் ஒழுக்கத்தில் மட்டும் புரிந்து கொள்ளமுடியாது என்று எழுதியிருக்கிறார்… சீபிஎம் என் அரசியல் ஒழுக்க்கேட்டிற்கு இவர் பலியான சோகத்தை..

          நீங்கள் எப்பிடி அதை பிய்த்து போட்டிருக்கிறீர் பாருங்கள்…

          ஏன் இந்த வேலை??????

          Posted on 05-Mar-10 at 6:47 pm | Permalink
        • தெளிவுப்படுத்தியமைக்கு நன்றி. மீன்டும் கட்டுரை முழுதும் வாசித்து பார்த்து நான் சுட்டிய இவ்வரிகளை தவிர ஏதும் தவறுஇல்லை என புரிந்து கொண்டேன். கட்டுரையின் முடிவை நெருங்கி இவ்வரிகள் வந்ததால் எற்பட்டு மனகுழப்பம். மன்னிக்கவும்.

          Posted on 05-Mar-10 at 6:58 pm | Permalink
      • வினவு

        கேள்விக்குறி, புலிகேசி கட்டுரைக்கு தொடர்பாகவோ, தொடர்பில்லாமலோ விவாதித்தாலும் ஒழுக்கம் குறித்த அந்த விவாதம் நடக்கட்டுமே. அதற்கு ஏன் அவரை ஜெயமோகனக்கு விரட்டுகிறீர்கள்? பாருங்கள் உடனே அவர் மனம் கலங்கி நமஹா என்று சோர்ந்து விட்டார். அவருடன் கொஞ்சம் அன்புடன் உரையாடுங்களேன்!!!!

        Posted on 05-Mar-10 at 6:54 pm | Permalink
    • வினவு

      //ஒருவனுக்கு ஒருத்தி போன்ற நிலபிரபுத்துவ காலத்து ஒழுக்கவியல் மதிப்பீடுகளை //

      புலிகேசி ஒருத்திக்கு ஒருவன், ஒருவனுக்கு எத்தனை பெண் வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதுதான் நிலபிரபுத்துவ கால ஒழுக்கம். அதை புரிந்து கொள்வதிலேயே நமக்குள் வேறுபாடு இருக்குமானால் முதலாளித்துவ, கம்யூனிச ஒழுக்கத்திற்கு எப்படி போக முடியும்?

      Posted on 05-Mar-10 at 6:50 pm | Permalink
      • ‘மோரலிட்டி’ / ‘மோனோகேமி’ என்பதை குறிக்க நான பயன்படுத்திய சொற்க்கள் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ உங்களுக்கு புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.

        மேலே செல்லுவோமா ‘ஒழுக்கம் சார்ந்த நமது புரிதல்களை’ பற்றி விவாதிக்க?

        Posted on 05-Mar-10 at 7:04 pm | Permalink
        • வினவு

          மேலே செல்வதற்குள், ஆண்கள் ஊர்மேயலாம், பெண்கள் கற்புடன் வாழவேண்டுமென்பதுதான் நிலப்பிரபுத்தவ ஒழுக்கம். இதை ஒத்துக்கொள்கிறீர்களா?

          Posted on 05-Mar-10 at 7:07 pm | Permalink
        • கேள்விக்குறி

          ஒருவனுக்கு ஒருத்திக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு புரியவில்லை!  ஏற்கனவே பல பதிவுக்கு சம்பந்தம் இல்லாத வெட்டி விவாதங்களின் கலந்து கொண்டு அதிகமான குப்பைத்தொட்டியை நிரப்பியவன் என்ற முறையில், இதிலிருந்து மீ த எஸ்கேப்பு!!!

          Posted on 05-Mar-10 at 7:17 pm | Permalink
    • mani

      எனக்கும் சில கேள்வி இருக்கு. நீங்க பதில் சொல்வீங்களா
      1. கம்யூனிஸ்டுகள் ஒரு சர்வதேசிய வாதம் பேசுபவர்கள். அவர்கள் ஒரு தனி தேசிய இனம் விடுதலை அடைந்து தனிநாடு அமைவதற்காக போராட முன்வருவது சரியா தவறா.. ஏன்
      2. மதம் என்ற அமைப்பை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள் சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் தெற்குப்புறம் வாயிலை அடைத்துள்ள ந்ந்தன் நுழைந்த காரணத்திற்காக அடைத்து வைத்துள்ள சுவரை இடித்து தாழ்த்தப்பட்ட சாதி மக்களோடு ஆலயத்தில் நுழைவது சரியா தவறா
      3. சாதி அமைப்பை ஒழிக்க விரும்பும் கம்யூனிஸ்டுகள் ஒடுக்குகிற சாதிகளை எதிர்ப்பதற்காக ஒடுக்கப்படும் சாதிகளின் உரிமைக்குரலுக்கு ஆதரவு தெரிவிப்பது சரியா தவறா
      4. குடும்ப அமைப்பை தாங்கி நிற்பது ஒழுக்கமா அல்லது சொத்துடைமையா. முதலில் தகர்க்க வேண்டியது எதனை எப்படி என விளக்க முடியுமா. எங்கெல்சின் புத்தகம் என்ன சொல்கிறது என்பது அதில் புரிந்து விடும்

      Posted on 05-Mar-10 at 7:25 pm | Permalink
      • ernesto devan

        இந்த கேள்விக்கு யாருச்சும் பதில் சொல்லுங்களேன் ப்ளீஸ் அது பலருக்கும் உள்ள சந்தேகம்

        Posted on 10-Mar-10 at 8:45 pm | Permalink
  8. mani

    பாட்டாளி வர்க்கத்தின் உயரிய சின்னமான அரிவாள் சுத்தியலை கார்ட்டூனுக்காக சிதைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தோழர்கள் தயவுசெய்து இதனை மாற்றுங்கள். போலி கம்யூனிஸ்டுகளை விமர்சிப்பதற்காக இப்படி உயர்ந்த கம்யூனிச‌ சின்னங்களை இழிவுபடுத்தும் வேலையை வினவு போன்ற தோழர்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை.

    Posted on 05-Mar-10 at 5:40 pm | Permalink
    • கேள்விக்குறி

      மணி, எப்பவோ அமைப்புல அரிவாள் சுத்தியல் டாலரா மாறுகிற மாதி கூடத்தான் போட்டிருக்காங்க, அதனால என்ன.. இதிலெல்லாம் சென்டிமென்டு பாக்கவேணாம் தல

      Posted on 05-Mar-10 at 5:56 pm | Permalink
      • Uma

        கரெக்ட். அப்பறம் ஹுசைனைத் திட்டறவங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்!

        Posted on 05-Mar-10 at 6:42 pm | Permalink
    • ஓ அவனா நீயி…
      வினவு தளம் ஒரு மார்க்ஸிய மடம் என்பதையும் இங்கு வரும் பக்தகோடிகள் அரிவாளையும் சுத்தியலையும் ‘உயரிய சின்னமாக’ பார்க்கிறார்கள் என்பதையும் மறந்து விட்டு நான் ஏதோ கம்யூனிஸ அரிப்பை சொறிந்து கொள்ள கிளம்பி வந்து விட்டேன். வினவு இங்கு வருபர்களை ‘களப்பனி’ ஆற்ற நிர்ப்பந்திப்பதில் இருந்து அது எதிர் பார்ப்பது கேள்வி எழுப்பாத‌, அறிவை விரித்து கொள்ளாத பக்தர் கூட்டம் என புரிகிறது.

      ஓம் மார்க்ஸாய நமஹ‌
      ஓம் எங்கல்ஸாய நமஹ‌
      ஓம் லெனினாய நமஹ‌
      ஓம் ஸ்டாலினாய நமஹ‌
      ஒம் மாவோயாய நமஹ‌

      மமதி சுத்தியல் தேஹி
      மமதி அரிவாள் தேஹி
      முதலாளித்துவம் ஒழிஹி
      லோகமே செங்கொடி ஆஹி!
      ஓம் தத் சத்

      Posted on 05-Mar-10 at 6:08 pm | Permalink
      • mani

        கேள்வி கேட்பதற்கு உரிய அறிவும், வேலை செய்வதற்கான திராணியும் இரண்டும் இருந்தால் மாத்திரம்தான் இன்று வேலையே கிடைக்கிறது.

        Posted on 05-Mar-10 at 6:26 pm | Permalink
      • mani

        நான் கடவுள் திரைப்படம் உங்களுக்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என சொல்லி உள்ளீர்கள். அந்த அளவுக்கு இன்னும் நான் இறங்கவில்லையே…

        Posted on 05-Mar-10 at 6:29 pm | Permalink
        • வினவு

          மணி, கேள்விக்குறி, புலிகேசி……………. புலிகேசியின் கம்யூனிஸ்டுகளும் ஒழுக்கமும் என்ற வாதத்தை விவாதிப்பது பயனுள்ளதாக இருக்கும். இதற்காக நான்கடவுள் என்றெல்லாம் திசைதிருப்ப வேண்டாம். முதலில் புலிகேசி என்ன சொல்ல வருகிறார் என்பதை விரிவாக சொல்லி பின்னர் ம்ற்றவர்கள் பதிலளிக்கலாம். வினவும் கலந்து கொள்ளும். தேவையெனில் புலிகேசிக்கு ஆதரவாகவும். (விவாதம் பேலன்ஸ்காக நடப்பதற்குத்தான்)

          Posted on 05-Mar-10 at 6:58 pm | Permalink
      • கேள்விக்குறி

        @@@ வினவு இங்கு வருபர்களை ‘களப்பனி’ ஆற்ற நிர்ப்பந்திப்பதில் இருந்து @@@  தனது இதுக்கு ‘கம்பீட்டர்ல குந்திகினு கம்மூனுசம் கத்துக்க முடியாது, அதுக்கு வீதிக்கு வந்து வேலய பாக்கோனும் புலிகேசி ன்னு அர்த்தம்..

        Posted on 06-Mar-10 at 2:05 am | Permalink
  9. mani

    எனக்கு இதில் செண்டிமெண்டு எதுவும் இல்லை. சின்னத்தையே அப்படி சிதைத்து இதற்கு முன் செய்திருந்தாலும் என்னளவில் அது தவறானதாகத்தான் படுகிறது. அது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை சின்னத்தின் மீது இருப்பதால் கோபம் வருகிறது. இனியும் இது செண்டிமெண்டுதான் எனக் கருதினால் எனக்கு சொல்ல ஒன்றுமில்லை. குறிப்பாக இந்த நேரத்தில் பொதுவில் கம்யூனிசத்திற்கு எதிரான பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படும் வேளையில் இது சரியா என பரிசீலிப்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

    ஒரு விமர்சனம் விடுபட்டது போல தெரிகின்றது. தேசிய சுயநிர்ணய உரிமையை சிபிஎம் பார்ப்பது போலவே வரதராசன் பிரச்சினையில் அணுகி இருப்பது போல படுகின்றது. எப்படி இலங்கைக்கு ஈழம் சாத்தியமில்லையோ அதே போல வரதராசனுக்கு மணவிலக்கும் சாத்தியமில்லை என ஒரு நிலைப்பாடு எடுத்துள்ளார்கள். அதே நேரத்தில் கேரளத்தின் பதவிச்சண்டையை இதற்கு நேரெதிர் வைப்பது சரியல்ல என கருதுகிறேன். ஏனெனில் அதுதான் அவர்களது அரசியல்படி சரி என இருக்கையில் அதனை கேள்விக்குள்ளாக்குவதில் பொருள் இல்லை என நினைக்கிறேன்.

    ஒழுக்கம் என்ற முறையில் கூட பிரச்சினை எழாத வரையில் அதனை விசாரிக்க வேண்டியதில்லை என்பதுதான் ச•தமிழ்செல்வனின் கருத்து. முன்னர் ஒருமுறை புதிய கலாச்சாரத்தில் ஒரு நூல் விமர்சனத்திற்கு படித்த வாக்கியம் ஒன்று மனதில் நிழலாடியது. ..ஆணுறையை அணிந்து கொள்வதாலே கள்ள உறவை சரி என சொல்ல முடியுமா… இந்த ஒழுக்க லட்சணத்தில் வாழ்பவர்கள் சரியானவற்றுக்காக எப்படி நிற்பார்கள்.

    Posted on 05-Mar-10 at 6:19 pm | Permalink
    • கேள்விக்குறி

      மணி, சின்னங்களுக்கு தனியே ஒரு புனிதம் வந்துவிடுவதில்லை, எதுவும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் மதிப்பே!!! அந்த வகையில் சிபி ஐ ம்றுறம் எம் மிடம் அறிவாள் சுத்தியல் இருப்பது அவமரியாதையே!!! அந்தவகையில் அவர்களை குறிக்கும் கார்டூன்களில் அவ்வாறு சின்னத்தை கையாளலாம், தவறில்லை,
      சோவியத் காலங்களில் கூட அரிவாள் சுத்தியலை வைத்து நேர்மைறையில் கார்டூன்களை வரையப்பட்டிருக்கின்றன, 

      Posted on 05-Mar-10 at 6:58 pm | Permalink
    • தோழர் மணி சிபிஎம் ஐ அம்பலபடுத்தும் விதமாகத்தான் அந்த கார்ட்டூனை வெளியிட்டிருக்கிறார்கள் அதை நாம் வெளியிடுவது மிகவும் சரியானது என்று கருதுகிறேன், அரிவாள் சுத்தியல் சின்னத்தை வைத்து பிழைப்பு நடத்தும் போலிகளை அம்பலபடுத்தும்  அந்த கார்ட்டூன் ரசிக்ககூடியதாக இருக்கிறது,

      Posted on 06-Mar-10 at 12:09 pm | Permalink
  10. yogan

    முதலாளித்துவமே கம்யூனிசம், தேர்தல் வெற்றியே புரட்சி என்ற நடைமுறையைக் கொண்டிருக்கும் ஒரு கட்சியில் அறம் என்ற ஒரு பொருள் அந்தரத்திலா உயிர்வாழ முடியும்?
    அருமை ..அருமை…அருமை!
    பட்ட பகல் திருடர்களை
    பட்டாடைகள் மறைக்குது ..( வெள்ளை சேர்ட் போட்ட தமிழ்ச்செல்வன் )

    நிலபிரபுத்துவ காலம் மாறினாலும் ,சுதந்திர காதல் என்கிற தறுதலை காதலை கம்யூனிசம் ஏற்று கொள்ளவில்லை .

    Posted on 06-Mar-10 at 1:25 am | Permalink
  11. அற்புதமான பதிவு, சரியான பார்வை. வினவு தோழர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    போலி விடுதலையையும் ஏனைய சி.பி.எம். அனுதாபிகளையும் உடனடியாக மேடைக்கு வருமாறு வரவேற்கிறேன்.

    அரசியல் கோவனம் கிழிந்துவிட்டதென்றால், அப்படியே வரும்வழியில் தா.பாண்டியனிடம் இருக்கும் சிகப்புத் துண்டை வாங்கிக் கட்டிக் கொண்டாவது வெளியுலகிற்கு வாருங்கள்!

    Posted on 06-Mar-10 at 1:37 am | Permalink
    • கேள்விக்குறி

      தோழர் நீங்க போட்டிருந்த இந்த பதிவு கூட அருமையா இருந்தது வாழ்த்துக்கள்
      http://yekalaivan.blogspot.com/2010/03/blog-post.ஹ்த்ம்ல்
      இப்பல்லாம் போலி விடுதலை வற்றதில்ல தோழர்… கொஞ்ச நாள் தீக்கதிர் ச்ப் எடிட்டர் வந்தாரு இப்ப அவரையும் காணும். .. அவங்கல்லாம் அலப்பறைதுரறை .அவங்கள விடுங்க .இந்த அறிவுத்துரை இலக்கியவாதிகள் தமிழ்செல்லவனுக்கும்,  மாதவராஜூவுக்கும் என்ன ஆச்சு, தங்களுடைய தோழரின் மரணத்துக்கு காரணமான கட்சியை பத்தி  கண்டிக்காம ஆதரிக்கறாங்களே???

      Posted on 06-Mar-10 at 1:57 am | Permalink
      • அண்ணன் மாதவராஜ் மீதும், பெரியண்ணன் தமிழ்ச்செல்வன் மீதும் நாம் வைத்திருந்த நம்பிக்கை அதீதமானது. விவாதத்தை நைசாக, ஓசையின்றி இருட்டடிப்பு செய்துவிட்டு, பிழைப்புக்கான தனது இருத்தலுக்காக மட்டும் அரசியலில் இடம்பிடித்திருக்கும் போக்கு, சி.பி.எம்.கட்சியின் அறிவிக்கப்படாத கொள்கையாக இருக்கிறது. இதில் இவரைவிட அவர் சற்று மேல் என்று கூறுமளவுக்கான வேறுபாடுகள் ஏதுமற்ற ஒற்றைக்குரல்தான் இதன்மூலம் நமக்குத் தெரியவருகிறது.

        கீழ்கண்ட பின்னூட்டம் உள்ளிட்ட என்னுடைய விமர்சனமாக நான்கு பின்னூட்டங்களை நான் தமிழ்ச்செல்வனின் தளத்திலும், மாதவராஜின் தளத்திலும் பதிந்திருந்தேன். வழக்கம்போல அவை இருட்டடிப்பு செய்யப்பட்டு உள்ளது என்பதை இப்பின்னூட்டத்தினூடாக வினவு வாசகர்களுக்கும், வினவு தளத்தை தொடர்து வாசித்து வரும் பல சி.பி.எம். அன்பர்களுக்கும் பனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

        said…
        தோழர்களே இதுகுறித்தான மேலும் பல தகவல்களுக்கு கீழ்கண்ட இணைப்புகளைப் பாருங்கள். நீங்கள் நேர்மையானவராக இருந்தால் எமது குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பரிசீலித்து பதில்களைத்தாருங்கள்.

        தோழமையுடன்,
        ஏககைவன்.

        1. உ.ரா.வரதராசனின் மரணமும் சிபிஎம்-மின் அரசியல் ஒழுக்கக்கேடும்!
        http://www.vinavu.com/2010/03/05/wrv/

        2. உ.ரா.வரதராசனின் மரணம் : சி.பி.எம்.மின் கோஷ்டி பூசல்களுக்கும் பதவிச் சண்டைகளுக்கும் சமர்ப்பனம்! – பாகம் ஒன்று.
        http://yekalaivan.blogspot.com/2010/02/blog-post.html

        3. உ.ரா.வரதராசனின் மரணம் : சி.பி.எம்.மின் கோஷ்டி பூசல்களுக்கும் பதவிச் சண்டைகளுக்கும் சமர்ப்பனம்! – பாகம் இரண்டு.
        http://yekalaivan.blogspot.com/2010/03/blog-post.html

        Posted on 10-Mar-10 at 7:30 pm | Permalink
    • மரண அடி

      //அப்படியே வரும்வழியில் தா.பாண்டியனிடம் இருக்கும் சிகப்புத் துண்டை வாங்கிக் கட்டிக் கொண்டாவது வெளியுலகிற்கு வாருங்கள்! //ண்ணோய் !  வெவரந்தெரியாம பேசாதிங்கஅந்தாளோட துண்டும் கிழிஞ்சி ரம்ப நாளாவுதுங்கோ.

      Posted on 06-Mar-10 at 12:02 pm | Permalink
  12. ARUL

    சிதம்பரத்தில் போலீஸ் துரத்தியபோது வாய்க்காலில் விழுந்த மாண்வர்களுக்காக சி.பி.ஐ விசாரணை கேட்கும் சி.பி.எம் கட்சியினர், வரதராஜன் ஏரியில் விழுந்ததுக்கு விசாரணை கேட்காதது ஏன்?

    Posted on 06-Mar-10 at 2:03 am | Permalink
  13. கம்யுனிசக்கட்சி என்று பீற்றிக்கொள்ளும் போலிகளின் அரசியல் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் அருமையான கட்டுரை. சிபிஎம் தனது மே.வங்க,கேரள அனுபவத்தில் முழுமையாக மாபியாவாக மாறிக்கொண்டு இருப்பது போல தெரிகிறது, சிபிஎம்மில் உள்ள புரட்சிகர அப்பாவி அணிகள் இனிமேலாவது சிந்தித்து வெளியேற வேண்டும், 

    Posted on 06-Mar-10 at 12:16 pm | Permalink
  14. சந்திப்புக்கு பிறகு சிபிஎம் சார்பில் பேசுவதற்கு கூட ஆள் இல்லாத அவல நிலையில் சிபிஎம் தத்தளிக்கிறது,

    என்ன கொடுமை சார் !    :-)

    Posted on 06-Mar-10 at 12:23 pm | Permalink
  15. Scribe

    காஞ்சி மடத்தை பற்றிய தங்களுடைய கருத்து உண்மைதான். ஆனால் சங்கரராமன் ஒரு சத்தியசீலர் அல்ல. இவர்களுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்த சிலரிடம் பேசியபோது அவர்கள் அனைவரும் சங்கரராமன் ஒரு சந்தர்ப்பவாதி என்றும் சங்கர மடத்தின் இரகசியங்களை வைத்து அந்த சாமியார்களிடம் அவ்வப்போது வசூல் செய்து வந்தார் என்று தெரிகிறது. இது ஒரு எல்லையை தாண்டியபோதுதான் அது அவரின் மரணத்தில் முடிந்துள்ளது. இதை பொறுத்தவரை இரண்டு தரப்பும் குற்றவாளிகளே.

    Posted on 06-Mar-10 at 2:49 pm | Permalink
  16. Suesh ram

    காம்ரேடு கராத் “” கட்சி நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் ஊடகங்கள் தெருவில் சத்தமிடும் “ 
    குற்றத்திற்கு தண்டனை அல்ல .  தன் மீது பழி வர கூடது என்பதற்கு தன் தண்டனை. அவரது மனைவியோ அல்லது பிரமிளா என்பவரோ காவல் துறையில் எந்த புகாரும் அளித்ததாக தகவல் இல்லை.
    ஊரில் உள்ள நடுத்தர குடும்ப பெண்களை தங்கள் வர தட்சணை மற்றும் சிறு மன வேற்றுமைகளுக்கு காவல் துறைக்கு இழுத்து செல்லும் AIDWA ஏன் ப்ரமீளாவை தடுத்தார்கள்? ஊருக்கு ஒரு நீதி ! எனக்கு ஒரு நீதி என்பது பார்பன தத்துவம் அல்லவேஇங்கே சென்று பாருங்கள் 
    http://marumagal.blogspot.com/2010/01/blog-post_15.html
    மருமகள்களே, உங்களை உங்களின் கணவர் அவரது குடும்பத்தினர், மற்றும் உறவினர்களின் கொடுமைகளிலிருந்து காப்பாற்ற இந்திய சட்டங்களில் உள்ள வழிமுறைகளைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவே இந்த பதிவுத்தளம் இந்திய மருமகள்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.
     

    Posted on 06-Mar-10 at 2:57 pm | Permalink
  17. tvs

    அய்யா, எனது கருத்து இந்தக் கட்டுரை தொடர்பானது அல்ல. ஆபாச தளங்களை தடை செய்ய வழி இல்லையா? இது தொடர்பாக நான் என்ன நடவடிக்கை எடுப்பது?
    ஓ என்ற ஆங்கில வார்த்தை போட்டாலும அதே எழுத்திலான தமிழ் ஆபாச வார்த்தைகள் இணையத்தில் வருகின்றன.
    இப்படி செய்வது தனியாரா? வியட்நாம், மணிப்பூர் போல, அரசு தானா?இதை ஒழிக்க என்ன செய்யலாம்?வினவுதான் விடை தர வேண்டும்.

    Posted on 07-Mar-10 at 7:12 pm | Permalink
  18. thirumavelan

    மிக சரியான் விமர்சனம்.ஆனால் மார்க்சிடுகள்
    திருத்திக் கொள்ள முடியாத
    தூரத்துக்கு போய்விட்டார்கள்.திரும்பி வர வாய்ப்பு இனி இல்லை
    .

    Posted on 09-Mar-10 at 12:52 pm | Permalink
  19. எழில்

    பிரகாஷ் காரத் என்ற மலையாளி புத்தியை காட்டி விட்டார்.இங்கே தான் மொழிப் பிரச்சினை முன்னாடி வருகிறது.பல கோடி ஊழல் செய்த மலையாளி பினராயி விஜயன் இன்னும் தண்டிக்கப் படவில்லை.இதனால் தான் நாங்கள் மொழி அடிப்படையில் மட்டுமே மக்களை ஒன்று படுத்த முடியும் என்று நம்புகிறோம். ஒரு உதாரணத்துக்கு இப்படி சிந்திப்போம்,நாட்டில் வினவு தலைமையில் வர்க்கப் புரட்சி நடந்து ஒரு முழுமையான பொதுவுடைமை அரசாங்கம் ஏற்படுத்தப் பட்டுவிட்டது அப்போது ஒரு தமிழன் மேல் இதே மாதிரி ஒரு குற்ற சாட்டு வருகிறது என்றால் அப்பொழுதும் தலைமையில் ஒரு மலையாளி இருந்தால் தமிழனுக்கு தங்களது “வர்க்க” நீதி படி தண்டனை நிச்சயம். இந்த மாதிரி பிரச்சினைகளில் நீங்கள் எவ்வாறு செயல்படுவீர்கள் என்றும் கொஞ்சம் விளக்கி இருந்தால் பயன் உள்ளதாக இருந்திருக்கும்

    Posted on 10-Mar-10 at 9:08 pm | Permalink
  20. கொடிவீரன்

    வினவுக்கு எப்போவும் தினவு தான்.
    சுவர் முட்டி குடிச்சவன் போல
    போலி புரட்சி பேசும் கேசுகள்
    மார்க்சிஸ்டுகள் குறித்து
    கதைக்கிறாங்கப்பா.
    அதுல பல பேருல பின்னூட்டம் வேறு.
    உ.ரா.வராசதராசனுக்கு
    அனுதாப்படுவது போல
    முதலில் எழுதி விட்டு
    பிறகு அவரையும், அவர் சார்ந்த
    கட்சியையும் தாளிப்பது
    என்பது வினவு தொடர்ந்து
    செய்யும் வேலை தான்.
    அதுக்காக தான் இந்தப் பின்னூட்டம்.
    கொடிவீரன்வினவுக்கு எப்போவும் தினவு தான்.
    சுவர் முட்டி குடிச்சவன் போல
    போலி புரட்சி பேசும் கேசுகள்
    மார்க்சிஸ்டுகள் குறித்து
    கதைக்கிறாங்கப்பா.
    அதுல பல பேருல பின்னூட்டம் வேறு.
    உ.ரா.வராசதராசனுக்கு
    அனுதாப்படுவது போல
    முதலில் எழுதி விட்டு
    பிறகு அவரையும், அவர் சார்ந்த
    கட்சியையும் தாளிப்பது
    என்பது வினவு தொடர்ந்து
    செய்யும் வேலை தான்.
    அதுக்காக தான் இந்தப் பின்னூட்டம்.

    Posted on 14-Mar-10 at 3:47 pm | Permalink
  21. Suesh ram

    His only son, Frederic Demuth (1851-1929) was illegitimate;”Freddy’s” mother, Helen Demuth, was maidservant to Marx’s wife. Marx neveracknowledged paternity,

    ///ஒரு கணவன் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையிலும் தனது துணைவிக்கு நம்பிக்கை துரோகம்
    இழைத்திருக்கிறார். இதற்குத்தான் ஒழுங்கு நடவடிக்கை.///
    KARL MARX’S CHILDREN
    “The Father of Modern Communism” also fathered 7 children, 4 of whom survived toadulthood. His only son, Frederic Demuth (1851-1929) was illegitimate;”Freddy’s” mother, Helen Demuth, was maidservant to Marx’s wife. Marx neveracknowledged paternity, and it was not until 12 years after his death, whenFrederic Engels lay on his death-bed, that it was revealed–by Engels, writingon a blackboard–that “Freddy is Marx’s son.”
    http://www.trivia-library.com/a/children-of-famous-parents-father-of-communism-k\arl-marx.htm

    Posted on 15-Mar-10 at 8:48 pm | Permalink

Post a Comment

Your email is never published nor shared.

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!