vote-012இந்தியாவில் நிலவி வரும் கடுமையான விலைவாசியை எதிர்த்து நாளை, ஏப்ரல் 27ம் தேதி ஒரு நாள் பந்த் நடத்தப்போவதாக போலிக் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான எதிர்க்கட்சிகள் அறைகூவல் விடுத்தன. தொழிலாளர் கோரிக்கைகள் தொடர்பான வேலை நிறுத்த அறிவிப்புகள் வரும்போது கோடநாடு எஸ்டேட் சென்று ஓய்வெடுக்கும் ஜெயா திடீரென இந்த வேலைநிறுத்த அறிவிப்பின் மேல் கரிசனம் கொண்டு இடது, வலது, மதிமுக போன்ற கட்சிகளை போயஸ் தோட்டத்திற்கு அழைத்து, அவர்களும் அம்மாவிடம் மரியாதையாக நுனி சேரில் அமர்ந்து கொண்டு இந்த வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது என முடிவு செய்ததாக நாளிதழ்களில் செய்தி பார்த்தோம்.

பொதுவாக இது போன்ற வேலைநிறுத்தங்கள் ஒவ்வொரு ஆண்டும் சம்பிரதாயமாக மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை எதிர்த்து, தனியார்மய நடவடிக்கையை எதிர்த்து, காப்பீடு மற்றும் பொதுத்துறை பங்கு விற்பனையை எதிர்த்து என அறைகூவல் விடப்பட்டு, சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகளின் தோழர்கள் அன்றைய தினம் ஒரு மறியல் என்பதையும் கூடுதலாக அறிவித்து, காலையிலேயே அரசுப்பேருந்துகள் மூலம் பாதுகாப்பாக திருமண மண்டபங்களில் கைது என்ற பெயரில் வைக்கப்பட்டு மாலை டீ பிஸ்கட்டுடன் விடுதலையாவார்கள்.

எந்த நிறுவனங்களின் மேல், எந்த அரசின் மேல் தொழிலாளர் வர்க்கத்திற்கு வருகிற நியாயமான கோபத்தை, வன்முறை நோக்கி சென்றுவிடாமல் பாதுகாத்து ஒரு நாள் சம்பள இழப்புடன் அத்தகைய போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்படும். இதில் பிரதான பங்கு வகிப்பது முறைப்படுத்தப்பட்ட அப்பாவி போக்குவரத்துத் தொழிலாளர்களாக இருப்பார்கள். அவர்களின் செயலை சிறிதளவு முடக்கினால்தான் வேலை நிறுத்தம் வெற்றி என மறுநாள் அறிக்கை விட முடியும்.

ஆனால் சமீப காலங்களில் போக்குவரத்துக் கழகங்களில் பெருகிவிட்ட தொழிற்சங்க எண்ணிக்கையினால் அந்த தொழிலாளியின் பெரும்பகுதியினர் இது போன்ற வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதில்லை. மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கிளை மட்டத் தலைவர்கள் இது போன்ற வேலைநிறுத்தங்களில் முன்னணியில் இருப்பதாக செய்தி ஊடகங்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு, மாலை 6 மணிக்கு மேல் பேருந்து பணிக்கு சென்று அன்றைய தினத்திற்கு வருகைப் பதிவை பெற்றுவிடுவார்கள். ஸ்டைரைக்கிலும் கலந்த மாதிரி ஆச்சு, வேலைக்கும் போன மாதிரி ஆச்சு!

இத்தகையப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அரசு ஊழியர்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தோடு முடித்துக்கொண்டு டி.வி பார்க்க சென்றுவிடுவார்கள். மாநில ஆளும்கட்சி சார்பு ஓட்டுனர்கள், நடத்துனர்கள் அன்றைய தினம் பேருந்துகளில் இரட்டிப்பு பணி பார்த்துவிடுவார்கள். அடுத்தநாள் ஆப்சென்ட் கணக்கு பார்த்தால் 1.5 லட்சம் போக்குவரத்துத் தொழிலாளர்களில் 14,340 பேர் ஆப்சென்ட் என கணக்கு வரும். அது அந்த மாத சம்பளத்திற்கு கணக்கு முடிக்கும் போது பார்த்தால் 8000 மாக குறைந்திருக்கும்.

பலர் முதல் நாள் டபுள் டியூட்டி வண்டிக்கு போய்வந்தேன் எனவே எனக்கு டியூட்டி ரெஸட், சிலர் நான் அவசர வேலையாக சென்றேன் என விடுப்பு மனு அனுமதி வாங்கி மொத்தத்தில் அப்பாவியாகிய 8000 பேருக்கு சம்பள இழப்பு ஏற்பட்டிருக்கும். இதையும் அம்மா ஆட்சி வந்தால் அய்யா காலத்து ஆப்சென்ட்களுக்கு சம்பளம் தரப்படும், அய்யா ஆட்சி வந்தால் அம்மா காலத்து ஆப்சென்ட்களை லீவாக மாற்றி சம்பளம் தரப்படும். சேது சமுத்திர ஆப்சென்ட் (அய்யா உண்ணாவிரதம் இருந்தது) மட்டும் இன்னும் உச்சநீதிமன்றத்தில் அம்மா தொடர்ந்த வழக்கு நிலுவையிருப்பதால் சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

தற்போது அரசு ஊழியர்களின் 6 வது ஊதியக் குழு சம்பளம் அமுல் படுத்தப்பட்டு, அது போக்குவரத்துக் கழக அதிகாரிகள், மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மட்டும் அமுல்படுத்தப்பட்டு, மற்ற ஒன்றேகால் லட்சம் தொழிலாளர்களின் சம்பளத்தை ஒப்பிடுகையில் அது 27 சங்கங்கள் போடும் ஒப்பந்த வரம்பில் உள்ளதால் தொழிலாளர்கள் விரக்தியில் உள்ளனர்.

இந்த பின்னணியில் தற்போது அறிவிக்கப்பட்ட 27ம் தேதி வேலை நிறுத்தம் குறித்து தொழிற்சங்கங்களின் முடிவுகளைப் பார்ப்போம்.  சி.பி.எம் தொழிற்சங்கத்திற்கு போக்குவரத்தில் முதன்மையாக சென்னை, மதுரை, மற்றும் கோவையில் மட்டுமே சொல்லிக்கொள்ளும் அளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது போன்ற வேலைநிறுத்த அறைகூவல் வந்தவுடன் தடபுடலாக மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு பறக்கும். அந்த கூட்டத்தில் பங்கு பெறும் சி.பி.எம் ஆதரவு வங்கி, போக்குவரத்து, அரசு ஊழியர், கூட்டுறவு, ஆவின், சிவில் சப்ளை போன்றவர்கள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவோம் என்பார்கள்.

ஐ.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ் போன்ற சங்கங்கள் தங்கள் பேரவையை கேட்டுவிட்டு முடிவு சொல்கிறோம் என கலைந்து செல்வார்கள். கடைசிவரை முடிவு சொல்ல மாட்டார்கள். இந்நிலையில் 17ம் தேதி மதுரையில் சி.ஐ.டி.யு மாநில தலைவர்களில் ஒருவரான தோழர் ஏ.கே.பத்மநாபன் தலைமையில் மதுரையில் கூடிய அவர்கள் சார்பு தொழிற்சங்கத்தினர் (பாசிச ஜெயா காலத்து ஒரு லட்சம் பேர் டிஸ்மிஸ்-ஐ மனதில் வைத்துக்கொண்டு), “15 நாள் வேலைநிறுத்த அறிவிப்பு கொடுக்க அவகாசம் இல்லை. மேலும் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி அன்று உள்ளது. எனவே அன்றைய தினம் அவரவர் ஆலைவாயிலில் ஒரு ஆர்ப்பாட்டம் செய்து முடித்துக்கொள்ளலாம்” என முடிவு செய்தனர். இப்படி கள்ளழகர் ஆத்துல இறங்குவதை வைத்து தோழர்கள் வேலைநிறுத்தத்திற்கு தண்ணி தெளித்துவிட்டனர்.

மற்றுமொரு சுவையான சம்பவம் என்னவெனில் சி.பி.எம் தலைமை ஜெயாவுடன் அவ்வப்போது உறவாட தயாரானாலும் அதன் தொழிலாளர் அணியினர் இன்னும் பழையவற்றை மறப்பதாக இல்லை. எனவே உள் அரங்க கூட்டங்களில் கொதிக்கின்றனர்.  இந்நிலையில் “மதுரையில் மட்டும் வேலை நிறுத்தம் இல்லை மற்ற மாவட்டங்கள் வேலைநிறுத்தம் செய்யுங்கள்” என்றால் போக்குவரத்துத் தொழிலாளிகள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.

எனவே அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சங்க பொறுப்பாளர் என்ற பதவியுடன் சி.பி.எம்-லும் பொறுப்பில் இருப்பவர்கள் “மாஸ் கேசுவல் லீவு” என்று முடிவு எடுத்திருக்கிறார்களாம். இதுதான் இந்தியாவையே முடக்கிப் போடும் சி.பி.எம்மின் பாரத் பந்தாம். ஒரு நாள் காலை 6 முதல் மாலை 6 வரை சம்பிரதாய வேலைநிறுத்தம் என்பதே பம்மாத்து வேலை. அதையும் மதுரை அழகர் பெயர் சொல்லி கேலிக்கூத்து ஆக்கிவிட்டார்கள் நமது போலி கம்யுனிஸ்ட்டுகள்.

தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்து சங்கத்திலேயே சி.பி.எம் கட்சி இப்படி தில்லாலங்கடி வேலை செய்து வேலை நிறுத்தம் செய்வது போல நடிக்கிறது என்றால் இந்தியா முழுவதும் இவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்? இன்னுமா இந்த ஊரு இவுகளை கம்யூனிஸ்ட்டுன்னு கூப்பிடுது?

________________________________________________

-சித்திரகுப்தன்

vote-012

தொடர்புடைய பதிவுகள்: