Skip to content

காமன்வெல்த் போட்டி: எதிர்ப்பதா, ஆதரிப்பதா எது தேசவிரோதம்?

காமன்வெல்த் போட்டிகளக்காக இடிக்கப்படும் சேரிப்பகுதி

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதுதில்லியில் காமன்வெல்த் போட்டி நடைபெற இருக்கிறது. இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரசின் பிரமுகருமான மணிசங்கர் அய்யர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

“காமன்வெல் போட்டிகளுக்கு மழை இடையூறு வளைவித்து வருவது குறிதது மகிழ்ச்சியடைகிறேன். உண்மையைச் சொல்லப்போனால், காமன்வெல்த் போட்டிகள் தோல்வியடைந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். தீய சக்திகள்தான் இந்தப் போட்டிகளை நடத்தும். இப்போது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தால், பின்னர் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என வரிசையாக நடத்தத் துடிப்பார்கள். இந்தியா போன்றதொரு நாடு, விளையாட்டுப் போட்டிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைச் செலவிடுவது வீண்” என்கிறார் மணிசங்கர் அய்யர்.

இதை ஏனைய காங்கிரசு பிரமுகர்களும், பாரதிய ஜனதாவும், ஊடகங்களும் கண்டித்திருக்கின்றன. அய்யரின் கருத்து தேசவிரோதமானது என்று காமன்வெல்த் போட்டி அமைப்பு குழுத் தலைவர் சுரேஷ் கல்மாதி கண்டித்துள்ளார்.

மணிசங்கர் அய்யர் யார், அவரது பின்னணி என்ன, இதைச் சொல்ல அவருக்கு தகுதியிருக்கிறதா என்பதெல்லாம் இருக்கட்டும். ராஜீவ் காலத்து காங்கிரசு பெருச்சாளிதான் என்பதும் உண்மைதான். ஏதோ கோஷ்டி மோதலுக்காகவோ இல்லை உண்மையாகவோ அவர் இதை சொல்லியிருக்கட்டும். ஆனால் அவர் சொன்னதில் என்ன தவறிருக்கிறது?

பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் வாழும் நாட்டில் 35,000 கோடி ரூபாய் செலவழித்து ஒரு விளையாட்டுப் போட்டியை நடத்துவது வக்கிரம் இல்லையா? இந்த போட்டியை நடத்துவதில் இந்தியாவுக்கு என்ன பெருமை இருக்க முடியும்? இங்கிலாந்தின் காலனியாக இருந்த நாடுகள் இருக்கும் அமைப்புதான் காமன்வெல்த். இதன் தலைவரால இங்கிலாந்து இராணி இருக்கிறார். இத்தகைய பச்சையான காலனிய அடிமைத்தனத்தின் எச்ச சொச்சம்தான் காமன்வெல்த். இதில் இருப்பதே இழிவு எனும் போது இந்த எழவுக்காக நடக்கும் போட்டி இன்னும் அடிமைத்தனமில்லையா?

ஏழு — எட்டு ஆண்டுகளில் இந்தப் போட்டிக்காக தில்லியை அழகு படுத்துகிறேன் என்று என்ன அழிவையெல்லாம் செய்திருக்கிறார்கள்? ஆரம்பத்தில் 1899 கோடி ரூபாய் என்று பட்ஜெட் போட்டு பிறகு பத்தாது என்று கூட்டி கூட்டி தற்போது 35,000 கோடி ரூபாயில் வந்து நிற்கிறது. இது எவன் அப்பன் வீட்டு காசு? யாரைக் கேட்டு இந்த மக்கள் வரிப்பணத்தை இப்படி அழிக்கிறார்கள்? கரும்பலகை கூட இல்லாத கிராமத்துப் பள்ளிகள் இருக்கும் நாட்டில் இந்த போட்டிக்காக கட்டப்படும் அழகான கட்டிடங்கள் ஆபாசமில்லையா?

போட்டிக்காக சில வெள்ளையர்கள் தில்லிக்கு வருகின்றனர். அவர்களின் பார்வையில் நகரம் அழகாக ஜொலிக்க வேண்டுமென்று 50,000 குடும்பங்கள் கொண்ட சேரிப்பகுதிகள் இரக்கமின்றி தூக்கி எறியப்பட்டிருக்கின்றன. பல புகழ்பெற்ற மக்கள் சந்தைகள் மூடப்பட்டிருக்கின்றன. யமுனை நதிக்கரையோரம் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. வீரர்கள் தங்குவதற்காக புது கட்டிடங்கள் கொண்ட நகரமே எழுப்பப்பட்டு வருகிறது.

புதுதில்லியின் புறநகர்களில் வாழும் ஏழைகளுக்கு குடிநீர், சுகாதாரம், கல்வி முதலானவற்றுக்கு பயன்படுத்தப்பட வேண்டிய பணம் வழுக்கிச் செல்லும் சாலைகளுக்கும், அலங்காரமான பாலங்களுக்கும் வகை தொகையின்றி பயன்படுகிறது. முதியோர் ஓய்வுத் திட்டம், தலித் மக்களின் சமூக மேம்பாட்டுத் திட்டம் முதனாவற்றுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகளைக்கூட காமன்வெல்த் போட்டிக்காக சுட்டிருக்கின்றனர்.

இந்தப் போட்டிகளால் விளையாட்டு உட்பட எந்த மயிருக்கும் எள்ளளவு கூட பயனில்லை. இந்தியா முழுவதும் நகரங்களில் உள்ள சிறுவர்கள், தெருவோரங்களில்தான் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். மாணவர்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானங்கள் கூட இல்லாத நாட்டில் அல்ட்ரா மாடர்ன் தில்லி நகர விளையாட்டு மைதானம் அசிங்கமாக இல்லையா?

இதைச் சொன்னால் தேசவிரோதமா? மேட்டுக்குடி இந்தியர்களின் வல்லரசு வீம்புக் கனவிற்காக நடத்தப்படும் போட்டிக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் என்ன தொடர்பு? உண்மையால் இந்தப் போட்டியை நடத்துவதுதான் தேசவிரோதம். ஏழ்மையை மறைத்து இந்த ஷோவை நடத்திவிட்டால் இந்தியா வல்லரசாகி விடுமா? இன்று காமன்வெல்த் நடத்தியவர்கள் நாளை ஒலிம்பிக் நடத்த வேண்டும் என்று அது முடிவானால் எத்தனை இலட்சம் கோடிகளை செலவிட வேண்டும்? அப்படி செய்துதான் கிரீஸ் நாடு இன்று திவாலாகியிருக்கிறது.

அணுகுண்டு வெடிப்பு, கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை போன்ற நாசகார ஆயுதங்களை வைத்து இந்தியப் பெருமையை பேசும் எருமைமாடுகள்தான் இந்த காமன்வெல்த் போட்டியை ஆதரிக்க முடியும். இந்தியா வல்லரசு ஆகவேண்டும் என்று வெட்டிக்கனவை பேசுபவர்கள் எல்லாம் இத்தகைய மக்கள் விரோத திட்டங்களின் மூலமே அந்த கனவு நனவேற முடியும் என்பதை கவுரவம் பார்க்காமல் புரிந்து கொள்ள வேண்டும்.

மணிசங்கர் அய்யர் பேசியதை காங்கிரசு, பா.ஜ.க  இரண்டும் ஒற்றுமையாக எதிர்க்கின்றன. ஊடகங்கள் தேசபக்தி பஜனை பாடுகின்றன. மேட்டுக்குடி இந்தியாவின் பிரச்சினை என்று வரும்போது இங்கே கட்சி வேறுபாடு கூட மறைந்து போகிறது என்பதைப் பார்க்கலாம்.

காமன்வெல்த் போட்டி என்பது இந்திய மக்களுககு எதிரானது. அதை ஆதரிப்பது அசிங்கமானது. ஒரு வேளைச் சாப்பாட்டுக்கான வருமானத்தைக் கூட பெற முடியாமல் கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தாமல் அவர்களை நகரை விட்டே விரட்டியடிக்கும் இந்த நவீன அரசர்களை ஒழிப்பதுதான் உண்மையான தேசபக்தி. மேட்டுக்குடி தேசபக்தியை பெரும்பான்மை மக்களின் போராட்டம் பொசுக்கினால்தான் இந்தியா உலகமயச்சுரண்டலிலிருந்து விடுதலை பெற முடியும். இந்த போராட்டத்திற்கு அணிதிரளுபவர்கள்தான் உண்மையான தேசபக்தர்கள். மற்றவர்கள் பதர்கள் மட்டுமே!

தொடர்புடைய பாடல்

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

_______________________________________________

தொடர்புடைய பதிவுகள்


Print

33 Comments

  1. ஆதவன்

    அநியாயம். வயிறு கூழுக்கு அழுததாம், கொண்டைப் பூவுக்கு அழுததாம் என்று ஒரு பழமொழி உண்டு. காமென்வெல்த் போட்டிகள் பற்றி இந்த பழமொழிதான் நினைவுக்கு வருகின்றது. ஆப்பிரிக்காவை விட ஏழைகள் அதிகம் வாழும் இந்தியாவில் அநியாயமாக இப்படி மக்கள் பணத்தை வீணடிக்கின்றார்கள். அயோக்கியப் பயல்கள். எல்லாம் வந்த வரை லாபம் என்று ‘காண்டிராக்டில் சுருட்டவே’ பயன்படும்.

    Posted on 29-Jul-10 at 6:53 pm | Permalink
  2. இரண்டு படிகள் முன்னேறினால் நான்கு படிகள் சறுக்குகிறது வினவு தளம்.

    Posted on 29-Jul-10 at 7:10 pm | Permalink
    • இந்த கட்டுரையில் அல்லது வேறு எங்கு வினவு சறுக்கியிருக்கிறது என விளக்கினால் நன்று.

      Posted on 29-Jul-10 at 8:18 pm | Permalink
    • ரகு

      உண்மையை உள்ளபடியே சொன்னால் சறுக்குகிறது என்று சொல்வதை சரியான முறையில் விளக்கவும்.

      Posted on 30-Jul-10 at 7:04 pm | Permalink
    • ரகு

      ராஜா….. நடராஜா ..கொஞ்சம் நில்லுப்பா பதில் சொல்லுப்பா எப்படி சறுக்குது .

      Posted on 31-Jul-10 at 10:23 pm | Permalink
  3. rouse

    நான் அரசை வன்மையாக கண்டிகீரன்! .பட்டினி சாவு உள்ள நாட்டில் 35,000 கோடி பணம் வீண்

    த சேகர்

    Posted on 29-Jul-10 at 7:19 pm | Permalink
  4. அப்படி ஒரே அடியாக பொத்தாம் பொதுவாகச் சொல்லி விட முடியாது.

    காமன்வெல்த் என்பது காலனியாதிக்கத்தின் எச்சம், செலவுகள் அதிகம், எளியவர்கள் துரத்தப்படுகிறார்கள் என்பதெல்லாம் நியாயமான குற்றச்சாட்டுகளாக இருந்தாலும்

    இது போன்று பெரிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் போது,

    அது தொடர்பான கட்டமைப்புகள் உருவாக்கம்,
    அதை ஒருங்கிணைக்கும் மேலாண்மை அமைப்புகள்,
    அது மக்கள் மனதில் உருவாக்கும் எழுச்சி

    போன்று பல நேரடியான தொடர்பில்லாத தாக்கங்கள் சமூகத்துக்குக் கிடைக்கின்றன.

    இது வல்லரசு கனவுக்கு மட்டுமின்றி ஒரு நல்லரசுக்குக் கூடத் தேவைப்படலாம். பெய்ஜிங்கில் (சீனா) 2008 ஒலிம்பிக் போட்டிகள், தென் ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்திய போது அந்த நாட்டு மக்களை வேற்றுமைகளை மறந்து ஒன்று சேரும் உணர்வை அவை வளர்த்தன என்று செய்திகளில் படித்தோம்.

    ஆசிய விளையாட்டுப் போட்டிகள் புதுதில்லியில் 1980களில் நடந்தன (1982?), அதற்குப் பிறகு பெரிய அளவிலான பன்னாட்டு விளையாட்டு நிகழ்வு இப்போதுதான் நடக்கவிருக்கிறது. இதை வெற்றிகரமாக நடத்திக் காட்டினால் எதிர் வரும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவும் கோர தகுதி ஏற்படும்.

    மற்ற மக்கள் நலப் பணிகளை செய்து கொண்டே இது போன்று ஒற்றுமை உணர்வை வளர்க்க உதவும் நிகழ்வுகளையும் ஒரு அரசு நடத்துவது ஆதரிக்கப்பட வேண்டியதுதான்.

    அதில் இருக்கும் குறைகளை பலமாக எடுத்துச் சொல்லி (வீண் செலவுகள், ஊழல், ஆதரவற்றோரை துன்புறுத்துவது) நிவர்த்தி செய்ய வைப்பது சரியாக இருக்கும்.

    அன்புடன்,
    மா சிவகுமார்

    Posted on 29-Jul-10 at 7:28 pm | Permalink
    • கலை

      ”அந்தக் கருவியும், அதன் குறைந்த விலையும் இது போன்று சுரண்டப்படும் தொழிலாளர்களின் இரத்தம் தோய்ந்தது” என்று தெரிந்த உங்களுக்கு 50,000 குடும்பங்களின் இருப்பிடத்தை இடித்துவிட்டு, மக்களின் வரிப்பணம் 35,000 கோடி யை இந்த கூத்துக்காக செலவு செய்வது ஆபாசமாகத் தெரியவில்லையா உங்களுக்கு. எப்படி 3 நாட்களில் இந்த மாற்றம் மா.சி.?

      Posted on 29-Jul-10 at 7:47 pm | Permalink
      • 1. 50,000 குடும்பங்களின் இருப்பிடத்தை இடித்தது ஆபாசம், எதிர்க்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

        2. மக்களின் வரிப்பணம் 35,000 கோடியை செலவழிப்பது ஆபாசம். சரியான முறையில் தணிக்கை செய்து வீணாக்கலை தவிர்க்க வேண்டும்.

        இந்தக் கூத்தை (கூத்து என்பது நல்ல நிகழ்ச்சி) நடத்துவதில் எந்த ஆபாசமும் இல்லை. மேலே சொன்ன பொதுமக்களின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் செயல்களை தவிர்த்து நடத்துவது தேவையான ஒன்று.

        மணி சங்கர் இப்படி பதவியிலிருந்து விலகியதால் சுரேஷ் கல்மாடி போன்ற குத்தகை வியாபாரிகளின் கையில் மொத்த அதிகாரமும் போய் விட்டது. அவரே இருந்து வழி நடத்தியிருந்தால் மக்களின் நலனை பாதுகாத்திருக்கலாம்.

        அன்புடன்,
        மா சிவகுமார்

        Posted on 29-Jul-10 at 8:16 pm | Permalink
        • கலை

          இவற்றை நடத்துவது தனிநபர்களின் செயல்களா! இங்கு யாராக இருந்தாலும் முதலாளித்துவத்தின் விதிக்குட்பட்டுத்தானே ஆடமுடியும், மா.சி.

          Posted on 29-Jul-10 at 8:39 pm | Permalink
    • அசுரன்

      //இந்தப் போட்டிகளால் விளையாட்டு உட்பட எந்த மயிருக்கும் எள்ளளவு கூட பயனில்லை. இந்தியா முழுவதும் நகரங்களில் உள்ள சிறுவர்கள், தெருவோரங்களில்தான் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். மாணவர்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானங்கள் கூட இல்லாத நாட்டில் அல்ட்ரா மாடர்ன் தில்லி நகர விளையாட்டு மைதானம் அசிங்கமாக இல்லையா?

      இதைச் சொன்னால் தேசவிரோதமா? மேட்டுக்குடி இந்தியர்களின் வல்லரசு வீம்புக் கனவிற்காக நடத்தப்படும் போட்டிக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் என்ன தொடர்பு? உண்மையால் இந்தப் போட்டியை நடத்துவதுதான் தேசவிரோதம். ஏழ்மையை மறைத்து இந்த ஷோவை நடத்திவிட்டால் இந்தியா வல்லரசாகி விடுமா? இன்று காமன்வெல்த் நடத்தியவர்கள் நாளை ஒலிம்பிக் நடத்த வேண்டும் என்று அது முடிவானால் எத்தனை இலட்சம் கோடிகளை செலவிட வேண்டும்? அப்படி செய்துதான் கிரீஸ் நாடு இன்று திவாலாகியிருக்கிறது.//

      மா.சி. கட்டுரையின் இந்தக் கருத்தை கவனிக்கத் தவறிவிட்டார் என்று நினைக்கிறேன்.

      Posted on 29-Jul-10 at 11:04 pm | Permalink
    • MaSi, For once i agree with Vinavu here. this CW games is waste of govt money. We should be spending this money on more useful things for the poor and needy. Athens, Greece spent billions for a olympic and it bankrupted the city’s govt finances. samething in Footballl games in S.Africa. AS long as the games are funded by private (like IPL) no issues. but spending govt money on extravaganzas while there are crores of poor is a crime and waste.

      Posted on 31-Jul-10 at 4:38 pm | Permalink
  5. நண்பர் சிவகுமார் அவர்களுக்கு,

    இன்னும் எத்தனை நாட்கள்தான் இப்படிப்பட்ட, நடுத்தர மக்களின் மேம்போக்கான பார்வையுடனே அனைத்தையும் விமர்சிக்கப்போகிறோம்? [என்னையும் சேர்த்து]
    இப்படி விளையாட்டுப் போட்டிகள் நடத்தித்தான் நம் நாட்டின் சமூகத்தின் அடிப்படை கட்டமைப்புகளை தரமுயர்த்துவோம், நம் நிர்வாக அமைப்புகளை இயங்க வைக்க முடியும், நம் மக்களின் ஒருமைப்பாட்டுணர்வினை ஓங்கச்செய்ய முடியும் என்ற நிலை கேவலமாக இல்லையா?
    கட்டமைப்பு, நிர்வாகம் இவை ஒரு அரசாங்கத்தின் அடிப்படை வேலைகளல்லவா?
    நம்மிடையே பிரிவினைகளை ஊக்குவித்து, தூபமிட்டு அரசியல் நடத்தும் நம் நாட்டின் அரசியல் வியாதிகள் [எப்படி என கேட்காதீர்கள்.சிறு பிள்ளைகளும் அறியும் இந்த அவலம்] நம் ஒருமைப்பாட்டிற்காக இதைச் செய்கிறார்கள் என்பது மிகப்பெரிய நகைமுரண்.
    இத்தனை கோடி வரிப்பணத்தை இறைத்து, இத்தனை ஆயிரம் மக்களை தொலைவே துரத்தி, எவ்வளவோ மக்களின் வயிற்றிலடித்து , ஆணவமாய் அரங்கேற்றப்படும் இந்த ஆடம்பரம், நம் பெரு முதலாளிகளின் நுகர்வுச்சந்தையை வலுப்படுத்தவும், அவர்களின் விளம்பர மைதானமாகவும், இன்னும் வெளிநாட்டுச் சுரண்டல் கம்பெனிகளுக்கு வரவேற்புப் படலமாகவுமே பயன்பட போகிறது என்பது நமக்கு புரிந்துகொள்ள முடியாமலே இருப்பது அவலமாக இல்லையா?
    போபாலில் பாதிக்கப்பட்ட நம் மக்கள் நிவாரணத்திற்கு அரசு ஒதுக்கிய நிதியையும், இந்த வெற்று ஆடம்பரத்திற்கு செலவு செய்யும் நிதியையும் சற்றே ஒப்பு நோக்குங்கள்.நாம் எத்தகைய மிருகங்களின் ஆட்சியில் வாழ்கிறோம் என புரியும்.
    “மக்கள் நல பணிகளை செய்துகொண்டே”"
    ஹா .. ஹா… . ஒருவேளை நீங்கள் ‘வஞ்சப்புகழ்ச்சியாக’ சொல்கிறீர்களோ?

    Posted on 29-Jul-10 at 8:14 pm | Permalink
    • நண்பர் நந்தகுமார்,

      நம்முடைய அரசு முறையே தவறு என்று நான் நினைக்கவில்லை. இப்போதைய அரசியல் வியாதிகள், சமூக ஒழுங்கு முறைகள் சீரழிந்து இருப்பதால் இந்த அரசு முறை தவறான திசையில் செலுத்தப்பட்டு மக்கள் துன்பத்துக்கு ஆளாகிறார்கள் என்று நினைக்கிறேன்.

      இப்போதைய (நாடாளுமன்ற மக்களாட்சி, தனிமனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம்) முறை, குறைகள் நிரம்பியதாகி இருந்தாலும், இது வரை முயற்சித்த மற்ற எல்லா முறைகளை விடவும் இதுதான் சிறந்தது என்று உறுதியாக நம்புகிறேன்.

      எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக எதிர்த்து இந்த ஆட்சி முறையை தூக்கி எறிந்து விட்டு “தொழிலாள வர்க்கத்தின் சர்வாதிகாரம்” வந்தால் இந்தப் பிரச்சனை எல்லாம் தீர்ந்து விடும் என்று நான் நினைக்கவில்லை.
      அப்படி வந்து விட்டாலும், இப்போது இருக்கும் தரகு வியாபாரிகள் சட்டையை மாற்றிக் கொண்டு புதிய அதிகார அமைப்பில் நுழைந்து விடுவார்கள் என்று நினைக்கிறேன். (சீனப் புரட்சிக்குப் பிறகு நடந்தவற்றைப் பற்றி ஓரளவு படித்திருக்கிறேன்)

      அன்புடன்,
      மா சிவகுமார்

      Posted on 29-Jul-10 at 8:23 pm | Permalink
      • நண்பர் சிவகுமாருக்கு,

        நல்லது.விவாதிப்பது மிகவும் நல்லதே.
        ஒரு நிர்வாக முறையானது நல்லவர்கள் இருந்தால் மட்டுமே சிறப்பாக செயல்படும். சுயநலமிகள் கையில் வந்தால் அவர்கள் தவறு செய்ய அதிலுள்ள பல ஓட்டைகள் உதவி செய்யும் என்ற நிலையில் இருந்தால் அது சிறந்த நிர்வாக அமைப்பாகுமா? சொல்லுங்கள்.

        Posted on 29-Jul-10 at 9:14 pm | Permalink
        • //சுயநலமிகள் கையில் வந்தால் அவர்கள் தவறு செய்ய அதிலுள்ள பல ஓட்டைகள் உதவி செய்யும் என்ற நிலையில் இருந்தால் அது சிறந்த நிர்வாக அமைப்பாகுமா?//

          நிச்சயம் ஆகாது நந்தகுமார்.

          அப்படி ஓட்டைகளே இல்லாத ‘சிறந்த நிர்வாக அமைப்பு’ எதையும் மனித வரலாறு இதுவரை பார்க்கவில்லை என்று நான் நினைக்கிறேன்.

          ஏற்கனவே சொன்னது போல, இப்போது இருக்கும் நம்முடைய அரசியல் அமைப்பு, இது வரை முயற்சிக்கப்பட்ட எல்லா அமைப்புகளையும் விட, தன்னுடைய குறைகளை சரி செய்வதிலும், ஓட்டைகளை அடைப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது என்று நினைக்கிறேன்.

          இதை விடச் சிறந்த அரசியல் அமைப்பு எதிர்காலத்தில் உருவாகலாம். அதற்கு ஒரு வழி, இந்த அமைப்புகளின் குறைகளை சரி செய்து, ஓட்டைகளை அடைத்துக் கொண்டே போவது.

          இன்னொரு வழி, ஒரு அமைப்பு அல்லது தலைவர் கூடி விவாதித்து மாற்று அரசமைப்பை பரிந்துரைப்பது. அப்படி மாற்று அமைப்பு ஏதாவது பரிந்துரைக்கிறீர்கள் என்றால் சொல்லுங்கள். அதைப் பற்றியும் பேசலாம்.

          சுருக்கமாக, தெளிவாக சொன்னால் வசதியாக இருக்கும். அது தொடர்பாக மேற்காட்ட விரும்பும் புத்தகங்கள் அல்லது கட்டுரைகளின் சுருக்கத்தையும் உங்கள் சொற்களிலேயே சொன்னீர்கள் என்றால் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.

          அன்புடன்,
          மா சிவகுமார்

          Posted on 29-Jul-10 at 9:23 pm | Permalink
      • ”மற்ற மக்கள் நலப் பணிகளை செய்து கொண்டே இது போன்று ஒற்றுமை உணர்வை வளர்க்க உதவும் நிகழ்வுகளையும் ஒரு அரசு நடத்துவது”

        இது சத்தியமாய் வஞ்சப்புகழ்ச்சிதானே?

        Posted on 29-Jul-10 at 9:18 pm | Permalink
      • அசுரன்

        மா. சி.யின் வாதங்கள் சிறிது குழப்பகரமாக இருக்கின்றன. எனக்கென்னவோ அவருக்கு அஹிம்சை என்ற வார்த்தையின் மீது இருக்கும் காதல் போல சர்வாதிகாரம் என்ற வார்த்தையின் மீது வெறுப்பு இருக்கிறதுஎன்று நினைக்கிறேன். இதை சும்மா மேம்போக்காக சொல்லவில்லை அவரது முரன்பாடான வாதங்களின் ஊடாக பார்த்தே அனுமானிக்கிறேன். மேலும், இதில் விவாதம் நிகழ்த்தி பதிவின் மையப்பொருளிலிருந்து விலகவும் அஞ்சுகிறேன்.

        //நம்முடைய அரசு முறையே தவறு என்று நான் நினைக்கவில்லை. இப்போதைய அரசியல் வியாதிகள், சமூக ஒழுங்கு முறைகள் சீரழிந்து இருப்பதால் இந்த அரசு முறை தவறான திசையில் செலுத்தப்பட்டு மக்கள் துன்பத்துக்கு ஆளாகிறார்கள் என்று நினைக்கிறேன்.

        இப்போதைய (நாடாளுமன்ற மக்களாட்சி, தனிமனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம்) முறை, குறைகள் நிரம்பியதாகி இருந்தாலும், இது வரை முயற்சித்த மற்ற எல்லா முறைகளை விடவும் இதுதான் சிறந்தது என்று உறுதியாக நம்புகிறேன்.

        எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக எதிர்த்து இந்த ஆட்சி முறையை தூக்கி எறிந்து விட்டு “தொழிலாள வர்க்கத்தின் சர்வாதிகாரம்” வந்தால் இந்தப் பிரச்சனை எல்லாம் தீர்ந்து விடும் என்று நான் நினைக்கவில்லை.//

        இவை மா. சி. இன்று சொன்னவை. நேற்று என்ன சொன்னார் என்றால், முதலாளித்துவ முறையே தவறு என்று சொன்னார்.

        //இந்திய முதலாளித்துவ சுரண்டலை விட ஐரோப்பிய முதாளித்துவ சுரண்டல் தேவையில்லை என்று நாம் சமாதானப்பட்டுக் கொள்ளத் தேவையில்லை. முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்பது எனது கருத்து.//

        முதலாளித்துவத்தை இவர் வெறுப்பதன் அடிப்படையே அதன் சுரண்டல் முறைதான். இதுவரையான மனித குல வரலாற்றில் சுரண்டலின் அதி உச்ச வடிவம் என்பது முதலாளித்துவ வடிவம்தான். இதில் மா.சிக்கு கருத்து வேறுபாடு இருக்காது என்றே கருதுகிறேன். எனில், இத்தகைய சுரண்டல் அமைப்பை விரும்பாத மா.சி. இதற்கு மாற்றாக சுரண்டல் இல்லாத ஒன்றையே விரும்புவார். சுரண்டல் இல்லாத ஒன்று என்றால் அது முதலாளி தொழிலாளி வேறுபாடு இல்லாத அனைவரும் தொழிலாளியாய் இருக்கும் ஒரு சமூகமாகவே இருக்கும். மா. சி. யும் அதைத்தான் சொல்கிறார் என்றே கருதுகிறேன்.

        இங்கு ஒரு பிரச்சினை வருகிறது. புதிய அரசில் முதலாளியும் உள்ளே நுழைந்து அதிகாரத்தை பிடித்துவிடுவானே – சீனா போல என்று பயப்படுகிறார்.
        //அப்படி வந்து விட்டாலும், இப்போது இருக்கும் தரகு வியாபாரிகள் சட்டையை மாற்றிக் கொண்டு புதிய அதிகார அமைப்பில் நுழைந்து விடுவார்கள் என்று நினைக்கிறேன். (சீனப் புரட்சிக்குப் பிறகு நடந்தவற்றைப் பற்றி ஓரளவு படித்திருக்கிறேன்)//

        இது நியாயமான பயமே. இதுதான் ரஸ்யா, சீனா சோசலிச சமூகங்களின் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள விரும்புவது. சுற்றி எல்லா நாட்டிலும் முதலாளித்துவ சுரண்டல் இருக்கும் போது, முதலாளீத்துவ சுரண்டலை ஒழித்த ஒரு நாடு தனது தனித்துவ பொருளாதாரத்தை முதலாளித்துவத்திடமிருந்து பாதுகாக்க வேண்டுமெனில் உள்நாட்டில் முதலாளி அதிகாரத்துக்கு வராமல் தடுக்க வேண்டும் என்பதே மா.சி.யின் மேலேயுள்ள வரிகளிலிருந்து நாம் புரிந்து கொள்ளக் கூடிய விசயம் ஆகும். சரி, அப்படி முதலாளி அதிகாரத்துக்கு வரக்கூடாது என்றால் அவனது முதலாளித்துவ அரசியல் கோரிக்கைகள் சட்டரீதியாக ஒடுக்கப்பட்டால்தானே வரமுடியாமல் போகும்?

        ஆஹா, முதலாளித்துவ அரசியல் கோரிக்கை எதிரான ஒரு அரசியல் கோரிக்கையை அதிகாரத்தில் வலுப்படுத்தும் ஒரு அரசு அமைப்பு முதலாளித்துவ அரசியலைப் பொறுத்த வரையில் முதலாளீகளுக்கு எதிரிகளான பாட்டாளிகளின் அதாவது மக்களின் சர்வாதிகாரம்தானே? இது ஏன் மா.சிக்கு புரியவில்லை என்பது எனக்குப் புரியவில்லை.

        இதனால்தான் சொன்னேன் அவருக்கு சர்வாதிகாரம் என்ற வார்த்தையில்தான் பிரச்சினை, கருத்துநிலைப்பாட்டில் அல்ல என்று. என்ன மா.சி. சரியாகச் சொன்னேனா இல்லை குழப்பிவிட்டேனா?

        Posted on 29-Jul-10 at 10:25 pm | Permalink
  6. rammy

    நியாயமான வாதம்! 35000 கோடிகள் செலவு செய்து, இப்போட்டிகளை நடத்துவதற்கு பதில், மாவட்ட, தாலுக்கா தலைநகர்களில், உள்/வெளி ஆட்டரங்குகளைக் கட்டி, தகுதியானவர்களுக்கு, பயிற்சி அளித்தால், உலகளவிலான, தடகளப் போடிகளில், பரிசுகளை அள்ளலாம்!

    இது போன்ற, வீண்செலவுகள் அனைத்து மாநில,மத்திய அரசுகளை ஆளுவோர் செய்து வருகின்றனர்! இலவசங்கள், நலத்திட்டங்கள்,ஆடம்பர செலவுகள் – இவை அனைத்தும், ஊழலின் ஊற்றுக் கண்கள்! அரசியல்வாதிகள் பணம் செய்யும் வழிகள்!

    Posted on 29-Jul-10 at 8:27 pm | Permalink
  7. சேலம்ஆனந்த்

    @ஆதவன்
    உங்களுக்கு வேறு பழமொழியே கிடைக்கலயா?

    Posted on 29-Jul-10 at 10:03 pm | Permalink
  8. vasu

    நண்பர்கள் அப்படியே நீங்கள் ஆதரிக்கும் கம்முநிசமும் , தேசிய முதலாளித்துவமும் follow பண்ணும் சீனா ஏன் இந்தியாவைவிட 100 மடங்கு அதிகம் செலவு செய்து ஒலிம்பிக் நடிதினார்கள் என்று யோசித்தீர்களா ??? சீனா வில்லும் வறுமையில் பலகோடி பேர் இன்னமும் தான் இருகிறார்கள்

    இந்தியா மற்றும் அனைத்து உள்ளகநாடுகளும் இந்த வெளையாட்டை நடத்துவதற்கு காரணம் இங்கே ….வினவு can you explain that ??

    Why many countries fight so hard to get these games ?

    Even UK in reccession why its going to run olymbic by spending so much money ??

    My Answer ::

    1. Just take some example this give you answer … Why even a small bakery spend so much for decoration and costly name board even if they dont have good facility in their kitchen ?

    2. Why malls conducts free shows ?

    3. when a product produced for Rs1 they advertise for Rs 9 ..why ?

    All these are simple logic that even school boy know today. Vinavu Just create cheap articles ( Just my opinion, dont jump on me :) )

    Posted on 29-Jul-10 at 10:07 pm | Permalink
  9. கிருத்திகன்

    இப்படியான போட்டிகள் நடாத்தப்படுவதன் மூலம் நாட்டு மக்களிடையே ஒற்றுமை பெருகும் என்பது சுத்த சவடால். (இந்தியாவில் கிரிக்கெட் நடந்தால் கொஞ்சமாவது வாய்ப்பிருக்கிறது, அல்லது பொது நலவாயத்தில் கிரிக்கெட் இருக்கவேண்டும்). மற்றபடி யாருமே இந்திய வீரர்களைக் கண்டுகொள்ளப் போவதில்லை. குளிர்கால ஒலிம்பிக் போட்டி கனடாவில் இந்த முறை நடந்த போது நாட்டு மக்களிடையே, முக்கியமாக பிரிவினை கோரும் குபெக் மக்களிடையே ‘ஒருங்கிணைந்த நாடு’ என்கிற கொள்கைக்கு இருந்த வரவேற்பு அதிகரித்திருந்தது. அதற்குரிய முக்கிய காரணமாக இந்த வருடம் கனேடிய வீரர்கள் நல்ல முறையில் பதக்கம் பெற்றது. தன் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரனுக்கு ஒழுங்கான சீருடைகூட (மீண்டும் கிரிக்கெட் விதிவிலக்கு) தைத்துக் கொடுக்க முடியாத நாட்டில் இப்படியான நிகழ்வுகள் சும்மா ஒரு படம்காட்டல் மட்டுமே. எவ்வளவு செலவளித்து எவ்வளவு ஆட்களை ஆட்டிக் காட்ட வைத்தாலும் இப்படியான போட்டிகள் நாட்டுமக்களிடையே வரவேற்பைப் பெற ஒரே வழி, தரமான விளையாட்டு வீரர்களை உருவாக்குதல். மற்றபடி.. ம்ஹும்

    Posted on 30-Jul-10 at 2:04 am | Permalink
  10. விளையாட்டு போட்டி நடத்துவது மூலம் , ஊடகங்களின் போலி தேச பக்தியை வளர்ப்பார்கள் வினவு . இவர்கள் தேசபக்தி என்பது சேரிகளில் இல்லை , சச்சின் சத்தத்தில் COMMEN WEALTH போட்டிகளில் உள்ளது

    Posted on 30-Jul-10 at 9:45 am | Permalink
  11. சிறந்த பதிவு. கண்ணை விற்று சித்திரம் வாங்குவதில் நமது ஆட்சியாளர்கள் கைதேர்ந்தவர்கள். இந்த நாட்டிலுள்ள இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கு எந்தவித கட்டமைப்பு வசதியையும் செய்யாமல் ஆங்கிலேய அடிமைகளின் விழாவுக்கு இவ்வளவு தொகையை செலவழிப்பது வெட்கக்கேடு. இதுலவேர “தேசபக்தி” பிசா விக்க வந்துட்டானுங்க.

    Posted on 30-Jul-10 at 10:58 am | Permalink
  12. மா.சி,

    விளையாட்டுத் துறை மேம்பாடு என்பது வறுமை வேலையின்மை போன்றவைகளின் ஒழிப்பு நிகழாமல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. அதையும் மீறி இத்தனை ஆயிரக்கணக்கான
    கோடிகளைக் கொட்டி நடத்தப்படும் இது போன்ற ‘மேளாக்கள்’ பெருமைக்கு எருமை ஓட்டிய கதையாகத் தான் இருக்கும். வேறு மாதிரி சொன்னால் இந்தியா நிலாவுக்கு
    ராக்கெட் விட்டது மாதிரி தான் இருக்கும். இன்னும் எளிமையாக சொன்னால் விளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சம் கட்டிய கதையாகத்தான் இருக்கும்.

    முதலில் நம் நாட்டில் விளையாட்டுத் துறையை ஒருவர் தமது வாழ்க்கையோடு தொடரும் ஒரு ‘கேரியராக’ தேர்ந்தெடுப்பதன் சாத்தியங்கள் எத்தனை? அப்படித் தேர்ந்தெடுத்தவர்கள்
    பெரும்பாலானவர்கள் எப்படியான வர்க்கப் பிண்ணனியில் இருந்து வந்தவர்கள்? நூறு கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் இருந்து ஒரு சச்சின் தான் உருவாக முடிந்ததா?
    எத்தனை ஒலிம்பிக் மெடல்களை நம்மவர்கள் குவிக்க முடிந்துள்ளது?

    அப்படியென்றால் இந்தியர்கள் திறமையற்றவர்களா? இல்லை..

    நம்மிடம் திறமைசாலிகள் ஏராளமான பேர் உள்ளார்கள் ஆனால் அவர்களால் விளையாட்டை ஒரு பொழுபோக்காகக் கூட வைத்துக் கொள்ள முடியாத பொருளாதார பிண்ணனியில்
    இருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கையே பெரும் போராட்டமாக உள்ளவர்கள் அவர்கள். நீங்கள் சென்னையில் இருந்தால் ரஞ்சி அணிக்காகத் தேர்வாகி ஓரிரு போட்டிகளில்
    பங்கேற்று கழித்துக் கட்டப்பட்டவர்கள் நிறைய பேரை காண முடியும். அவர்களிடம் கேட்டுப் பாருங்கள் – எது அவர்களை விளையாட்டை விட்டு விலக்கி வைத்தது என்று.
    வாழ்நிலை அவர்களை ஏதோவொரு வேலையில் ஒட்டிக் கொண்டு வயித்துப் பாட்டை கவனிக்கச் சொல்லி நெருக்குகிறது என்றால் விளையாட்டு சார்ந்த அனைத்துத் துறைகளிலும்
    புரையோடிப்போயிருக்கும் ஊழல் இன்னொரு புறம். ஆளுக்கும் விளையாட்டுக்கும் சம்பந்தமேயில்லாத நபர்களை அதிகாரிகளாகக் கொண்டுள்ளது இந்தத் துறைகள். வீரர்களின்
    கனவுகள் பற்றி மயிருக்குக் கூட கவலைப்படாத அலட்சியப் போக்கு கொண்டவர்கள்.

    சமூகத்திலிருந்து தான் விளையாட்டு வீரர்கள் உருவாகி வருகிறார்கள். இங்கே அதன் சரிபாதிக்கும் மேற்பட்டோ ர் வாய்க்கும் வயித்துக்கும் அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில்
    அவர்களில் இருந்து எப்படி விளையாட்டு வீரர்களை உருவாக்கப் போகிறீர்கள். மக்களுக்கு உணவு, கல்வி, மருத்துவம், வேலை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை
    உத்திரவாதப்படுத்தாமல் இப்படி மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து கேளிக்கைகள் நடத்தி அதையே தேசத்தின் கவுரவம் என்றால் அது எப்பேர்பட்ட அயோக்கியத்தனம்?

    சிலர் விளையாட்டுக்கான அடிப்படைக் கட்டுமானங்கள் கிடைப்பது ஒரு லாபம் தானே என்று சொல்லலாம். ஆனால், விளையாட்டுக்கான அடிப்படைக் கட்டுமானம் என்பது பளபளப்பான
    விளையாட்டு மைதாங்கள் அல்ல – விளையாட்டு வீரர்களும் அவர்களை உருவாக்கும் சமூக பொருளாதார பிண்ணனியும் தான். உயிரற்ற பிணத்துக்கு எத்தனை மேக்கப் போட்டு தான்
    என்ன பயன்? இந்தியாவில் எத்தனை சர்வதேச போட்டிகள் நடத்தி தான் என்ன பயன்?

    நாட்டுக்கு கவுரவம் என்கிறீர்கள் – எது நாட்டுக்கு கவுரவம்? விதர்பாவும், தெலுங்கானாவும், பீகார், உ.பி, ம.பி, மே.வங்கம் (மே.வ மாநிலம் ஓட்டாண்டியாகிவிட்டதாக இந்த வார
    அவுட்லுக்கில் கட்டுரை வந்துள்ளது) போன்ற மாநிலங்கள் இருக்கும் நாட்டில் IGI எயர்போர்ட், எக்ஸ்ப்ரஸ் வே போன்றவைகள் நாட்டுக்கே அசிங்கம் – கவுரவமல்ல.

    விளையாட்டில் இந்தியா மற்ற நாடுகளை வென்று காலர் தூக்கி விட்டுக் கொள்வது இருக்கட்டும் – வறுமையில் ஆப்ரிக்க நாடுகளிடம் போட்டியின்றி அன்னப்போஸ்ட்டாக
    ஜெயித்திருக்கிறதே இதுக்கு யாரு காலர் தூக்குவது?

    Posted on 30-Jul-10 at 11:04 am | Permalink
  13. ஆதவன்

    சேலம்ஆனந்த்

    என்னுடைய வரியில் என்ன குறை கண்டீர்கள் ?

    Posted on 30-Jul-10 at 2:37 pm | Permalink
  14. சேலம்ஆனந்த்

    @ஆதவன்
    ஆணாதிக்க பழமொழி போல் இருக்கு

    Posted on 30-Jul-10 at 4:05 pm | Permalink
  15. SA.BASITH

    ஏழு — எட்டு ஆண்டுகளில் இந்தப் போட்டிக்காக தில்லியை அழகு படுத்துகிறேன் என்று என்ன அழிவையெல்லாம் செய்திருக்கிறார்கள்? ஆரம்பத்தில் 1899 கோடி ரூபாய் என்று பட்ஜெட் போட்டு பிறகு பத்தாது என்று கூட்டி கூட்டி தற்போது 35,000 கோடி ரூபாயில் வந்து நிற்கிறது. இது எவன் அப்பன் வீட்டு காசு? யாரைக் கேட்டு இந்த மக்கள் வரிப்பணத்தை இப்படி அழிக்கிறார்கள்? கரும்பலகை கூட இல்லாத கிராமத்துப் பள்ளிகள் இருக்கும் நாட்டில் இந்த போட்டிக்காக கட்டப்படும் அழகான கட்டிடங்கள் ஆபாசமில்லையா?————IDHU PONDRA VISAYANGALUKKU ENNADHAAN MUDIVU .

    Posted on 30-Jul-10 at 4:42 pm | Permalink
  16. http://www.breakingnewsonline.net/sports/3177-corruption-charges-hit-commonwealth-games-2010.html

    Corruption Charges hit Commonwealth Games 2010
    Written by Admin
    Saturday, 31 July 2010 12:13
    New Delhi: Breaking News! Fresh corruption charges rocked the upcoming Commonwealth Games 2010. The UPA Government at the Centre and Sheila Dikshit-led Delhi government are in trouble, as the CVC recommended CBI probe into the alleged irregularities.

    The Opposition parties have raised a hue and cry over the issue and also demanded a judicial probe into the CVC report, indicating corruption in constructions in the CWG stadiums. The BJP estimated that the scam would be to the tone of Rs 30,000 crore.

    The agencies under the CVC scanner are PWD, MCD, DDA, CPWD and RITES. In another development, a fresh case of money laundering involving a UK firm came into light.

    According to a TIMES NOW expose, funds worth 2,47,469 Pounds were transferred October, 2009 from the Organising Committee of the Commonwealth Games to a UK-based company AM Films UK Ltd. Suresh Kalmadi, who heads the committee, hasn’t yet reacted to the report.

    The money was reportedly transferred during the Queen’s Baton Relay function in London. In addition to that money, 25,000 pounds are being transferred into AM Flims account every month. In total, about 4,50,000 pounds have been transferred to UK so far.

    Posted on 31-Jul-10 at 4:48 pm | Permalink
  17. ம‌ணி ச‌ங்க‌ர‌ ஐய‌ர் சொல்லியிருக்கும் இன்னொரு க‌ருத்தும் க‌வ‌னிக்க‌த்த‌க்க‌து. விளையாட்டுக்குதான் 35,000 கோடி ரூபாய் செல‌வு செய்வ‌து என்று முடிவு செய்தால் எத‌ற்காக‌ இந்த‌ 10 நாள் கூத்துக்காக‌ அதை செய்ய‌வேண்டும், வ‌ட்ட‌, மாவ‌ட்ட‌ அள‌வில் அந்த‌ செல‌வை செய்தால் ம‌ற்ற‌ சர்வதேச‌ போட்டிக‌ளில் ப‌ரிசுக‌ளை அள்ள‌லாம் என்று அவ‌ர் சொல்லியிருப்ப‌தையாவ‌து செய்திருக்க‌லாம்.

    அதேபோல் இந்த‌ ஏற்பாடுக‌ளில் ஒவ்வொன்றிலும் ப‌ண‌ம் கொள்ளை அடிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தை ஊட‌க‌ங்க‌ளில் ப‌டிக்கும்போது ப‌ற்றிக் கொண்டு வ‌ருகிற‌து. 77,000 ரூபாய் ம‌திப்புள்ள‌ ம‌ருத்துவ‌ உப‌க‌ர‌ண‌ங்க‌ளை 4 ல‌ட்ச‌ம் ரூபாய் கொடுத்து அதுவும் நூற்றுக்க‌ண‌க்கில் வாங்கியிருக்கிறார்க‌ள்.. எவ‌ன் அப்ப‌ன் வீட்டு காசு?

    Posted on 01-Aug-10 at 9:11 am | Permalink
  18. unmai sudum

    எல்லா பிரச்சினைகளுக்கும் பார்பனீயம் தான் காரணம் என்று சொல்லும் வினவு ஒரு பார்பனரின் பேச்சை வைத்து கட்டுரை வெளியிடுவது வேடிக்கையானது.

    பார்பன சக்திகள் ஒன்று சேர்ந்து ஆடும் நாடகம் இது என்று எழுத வேண்டியதுதானே. தேவை என்றால் சேர்துகொள்வது, இல்லை என்றால் பிடிங்கி தின்பது என்பது தான் “புதிய கலாசாரம்” போல…

    Posted on 01-Aug-10 at 6:40 pm | Permalink
  19. anamadeyan

    சிறப்பான கட்டுரை. கட்டுரையில் ம.ச.ஐயரை மேற்கோள் காட்டியது சரியானதே. அவர் கூற்று பத்திரிகைகளில் இடம்பெற்றிருக்கவில்லையாயின் இக்கட்டுரை சற்று தாமதமாக மேலும் விவரங்களுடன் வந்திருக்கும்… அப்போதும் உண்மை சுடும்.
    காமன்வெல்த் போட்டி: எதிர்ப்பதா, ஆதரிப்பதா எது தேசவிரோதம்?…என்பதற்குப் பதில் .. எது தேசபக்தி என்று கேள்வி எழுப்புவது சாலப் பொருந்தும்.
    ஆசிய விளையாட்டுப் போட்டி, உலகக் கோப்பைப் போட்டிகள், ஒலிம்பிக் போன்றவற்றில் இருந்து இந்த ’காமன் வெல்த் விளையாட்டு’ அடிப்படையிலேயே வேறானது. இந்தக் ’கூத்து’ அடிப்படையிலேயே ஆபாசமானது; அந்த ஆபாசத்துக்கு மேலும் மெருகூட்டிய அலங்காரங்கள் தான் ஊழல்களும், ஊதாரித் தனங்களும், வக்கிரங்களும். இது வேறு எந்த விதமாகவும் இருக்க முடியாது.

    Posted on 02-Aug-10 at 6:53 pm | Permalink
  20. அசுரன்

    கும்பி கூழுக்கு அழும் போது, பல்லாயிரம் கோடிகளில் தலைக்கு அலங்கராம் செய்யும் வக்கிரத்து ஒரு சான்று:

    Rs 60,000 crore is the cost of rotting food grain every year. Yet, millions go hungry

    http://www.tehelka.com/story_main46.asp?filename=Op070810opinion.asp

    காமென்வெல்த்க்கு செலவு செய்வதை இந்திய விளையாட்டை மேம்ப்படுத்த செலவு செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும். குறைந்த பட்சம் உணவைப் பாதுகாக்க செலவு செய்யலாமே?

    Posted on 02-Aug-10 at 10:39 pm | Permalink

2 Trackbacks/Pingbacks

  1. Indli.com on 29-Jul-10 at 6:43 pm

    காமன்வெல்த் போட்டி: எதிர்ப்பதா, ஆதரிப்பதா எது தேசவிரோதம்?…

    பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் வாழும் போது 35,000 கோடி ரூபாய்க்கு நடத்த்ப்படும் இந்த காமன்வெல்த் போட்டிகள் இந்திய மக்களுககு எதிரானது, அதை ஆதரிப்பது வக்கிரமானது…

  2. [...] காமன்வெல்த் ஆதரவு = தேச விரோதம் http://www.vinavu.com/2010/07/29/commonwealth-games-india/ – #vinavuFirstPageSystem: CommonWealth Games 2010: The security measures in India during CWG [...]

Post a Comment

Your email is never published nor shared.

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!