அரிசிக் கடத்தலுக்கு தண்டனை! நாட்டையே கடத்துபவர்களுக்கு?
ஆந்திரத்துக்கு ரேஷன் அரிசி கடத்தலில் ஆறு பெண்கள் கைது : தினமணி செய்தி
இதை படிக்கும் நம் அனைவரின் மனதிலும் “என்ன தைரியம், இந்த காலத்துலே பொம்பளைங்களுக்கு” என்ற வரி நிச்சயம் ஓடியிருக்கும். “எல்லாம் அரிசி கிலோ 1 ரூபாய்க்கு கொடுக்கறதாலேதான்” என்றும் “ஒரு கிலோ ஒரு ரூபான்றதாலே மாசம் 30 கிலோ வாங்கி சந்தோஷமா மக்கள் வாங்கி சாப்பிடுறாங்க’ என்றும் கருத்துகள் வெளிப்படலாம்.
இது நிச்சயம் நமக்கு புதிதல்ல. அவ்வப்போது நாம் கேள்விப்படுவதுதான். ஆந்திரத்துக்கு கடத்தல், கேரளத்துக்கு கடத்தல் என்றும் மாவட்ட அளவிலான பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்படுவதும் புதிதல்லதான். இங்கு குறைந்த விலையில் வாங்கப்படும் அரிசி வெளியில் பாலீஷ் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதற்காகவே கடத்தப்படுகிறது. இதில், நிச்சயம் ரேஷன்கடை அதிகாரிகளும், ஊழியர்களுக்கும், வட்டார பெரும் புள்ளிகளுக்கும் பங்கு இருக்குமென்று நிச்சயம் ஆருடம் சொல்லலாம்தான்.
எதற்காக கடத்தவேண்டும்?
மலிவு விலை அரிசிக்கும் அதை வெளிமார்கெட்டில் விற்பதற்கும் தேவை இருக்கின்றது என்பது கடத்தலை விட கவலைப்படவேண்டிய விசயம். தமிழக மக்கள் மலிவு விலையில் வாங்கும் அரிசியை அண்டை மாநில மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். சந்தையில் பகிரங்க விலைக்கு வாங்கப்படும் அரிசியின் பின்னே பதுக்கலும், கடத்தலும் மாபெரும் தொழிலாக கோலேச்சுகிறது.
நமது பொருளாதார மேதை மன்மோகன்சிங், உள்துறையில் கோலோச்சும் சிதம்பரம், செங்கோல் வழுவாதபடி அரசாளும் சோனியா, விலையுயர்வால் சற்றும் பாதிப்படையாத தரகு முதலாளிகள், ‘மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்துள்ளது’ என்று மந்திர வார்த்தைகளை உதிர்க்கும் கும்பல் என்று இவர்கள் யாரும் ரேஷன் அரிசியை சாப்பிடுவதில்லை. விலைவாசி உயர்வால் பாதிப்படைவதுமில்லை. விலைவாசி உயர்வால் ஆதாயம் அடையும் பெருச்சாளிகளின் பிரதிநிதிகள்தானே, இவர்கள்?
தாரளமயமாக்கல், ஆன்லைன் வர்த்தகம், பொருட்கள் பதுக்கல், அசகாயமாக உயரும் அத்தியாவசிய பண்டங்களின் பகாசுர விலைகள், உயர்ந்து வரும் பணவீக்கம், இவற்றை விடவா அரிசிக் கடத்தல் முக்கிய விசயமாகப் போகிறது?
அரிசியைக் கடத்தும் நபர்களை கைது செய்து தண்டிக்க முடியும். ஆனால் நாட்டையும், மக்களையும் திருடி விற்பனை செய்யும் கயவர்களை யார் தண்டிப்பது?
_______________________________________________________________
கலைஞர் கம்பெனி பிரைவேட் லிமிடெட்!
//என் மகன், பேரன்கள் என்று வரிசையாக கலைத்துறையில் வருவதை ஏன் கேலி செய்கிறார்கள். எனக்கு வாரிசுகள் இருக்கக்கூடாதா? கபூர் குடும்பத்தில் அனைவரும் சினிமாவுக்கு வரலாம். ரஜினியின் மருமகன் தனூஷ், மகள்கள் சினிமா வாரிசுகளாக வரலாம். கருணாநிதியின் சந்ததி மட்டும் வரக்கூடாதா? நான் திராவிட இனத்துக்காக வாழ்கிறேன் என்பதாலேயே இந்த பாரபட்சம்.// என்று வரலாற்று சொற்பொழிவை கலைஞர் ஆற்றி உள்ளார் .
திராவிட இனத்துக்காக பாடுபடும் கலைஞர் பதிலுக்கு திராவிட இனத்திடமிருந்து ரிடர்ன்ஸ் எதிர்பார்ப்பது தவறில்லைதான். ஆனால் திரவிட இனத்துக்குரிய டி.வி, சினிமா அத்தனையிலும் அவரது வாரிசுகள் மட்டுமே கோலேச்சுவதற்கு அவர் என்ன செய்வார்? அவரது வாரிசுகள் அத்தகைய திறமையாளர்களாக சட்டபூர்வமாகவே வெற்றியை ஈட்டி ஏகபோகமாக வளர்ந்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு இந்த திறமை இல்லை என்றுதானே அர்த்தம்?
ஒரு வாரம் தீராத விளையாட்டு பிள்ளை வருகிறது என்றால் மறுவாரம் விண்ணை தாண்டி வருவாயா அப்புறம் வேட்டைக்காரன், சுறா, சுறா தூக்கினால் சிங்கம், சிங்கம் எடுத்தால் மதராசப்பட்டினம் , பையா இதை எடுத்தால் தில்லாலங்கடி அதற்க்கு அடுத்த வாரம் வம்சம் , இந்த வாரம் ” நான் மாகான் அல்ல” . இப்படி வாரா வாரம் எல்லாப் படங்களையும் கலைஞர் கம்பெனி ரிலீஸ் செய்கிறது. திரையுலகில் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களை அழித்து விட்டு ஏகபோக ஆட்சி நடத்தும் கலைஞர் கம்பெனியின் தலைமை பிதாமகர் கருணாநிதி அடுத்து வசனம் எழுதும் படம் “இளைஞன்”. கதையின் கருப்பொருள் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாம்.
தொழிலில் ஏகபோகம். கலையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு. நல்ல நியாயம்தான்.
_____________________________________________________________
ரெட்டிக்கு எடியூரப்பா, விவசாயிகளுக்கு கோயிந்தா!
மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகளுக்கு மாறாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்காக கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியம் விவசாய நிலங்களை கையகப்படுத்தி உள்ளது.
அர்க்காவதி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள 2100 ஏக்கர் நிலத்தை மாநில அரசு கையகப்படுத்த உள்ளது. இந்நிலத்தில் பகுதியளவில் திராட்சை, வாழை, உருளைக்கிழங்கு பயிரிடலும், குவாரி தொழிலும் நடந்து வருகிறது. மே 28, 2008 ல் மைய அரசு தனது கெஜட்டில் மாநில அரசுகளுக்கு நிலம் கையகப்படுத்துவதில் தரிசு நிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்படி வழிகாட்டி உள்ளது. இதனை மீறிதான் நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தி உள்ளது. உள்நாட்டுக்கு தேவையான விவசாயமா வெளிநாடுகளுக்கு தேவையான சேவைத்துறையா என்ற கேள்வி வருகையில் விவசாயத்தை புறக்கணித்துதான் அரசு முடிவு எடுத்துள்ளது.
ஆனால் ரெட்டி சகோதரர்களின் குவாரிகளை கையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் எடியூரப்பா அரசு மறுத்து வருகிறது. ரெட்டிகளுக்கு பேச எடியூரப்பா இருக்கிறார். கர்நாடக விவசாயிகளுக்காக பேச யாருமில்லை.
_______________________________________________________________
பிராண்டு மோகம்! பிராடு வேகம்!!
பாலாஜி (32), பெங்களூருவை சேர்ந்த பட்டதாரி இளைஞர் நேற்று மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். சென்னைக்கு வேலை தேடி வந்தவர், பயன்படுத்தப்பட்ட கார்களை மறுவிற்பனை செய்யும் தொழிலில் இறங்கினார். ஏற்கெனவே கார் உற்பத்தி அதிகமான நிலையில் பழைய கார் விற்பனை மந்தமானது.
புதிய மாடல் கார்களை குறைந்த விலையில் வாங்கித் தருவதாக ஒரு மோசடியை அரங்கேற்ற முனைந்தார். இதற்காக “நடிகைகள் அவ்வப்போது சந்தையில் வரும் கார்களை வாங்குவதற்காக சமீபத்தில் வாங்கிய கார்களை விற்று விடுவார்கள், அதைத்தான் உங்களுக்கு தருகிறேன்” என்று கூறி சிலரிடம் முன்பணமும் பெற்றுக் கொண்டார். இப்படி ஏமாந்தவர்களில் அவர் வாடகைக்கு இருந்த வீட்டின் உரிமையாளரும் ஒரு பொறியாளரும் அடக்கம்.
கிடைத்த பணத்தில் ஓட்டல்களிலும் சினிமாவிலும் நடனமாடிக் கொண்டிருந்த பாலாஜி சமீபத்தில் மதுரையில் ஒரு திரையரங்கில் தனது மோசடி வேலையை நடத்தியதில் கைது செய்யப்பட்டார். புதிய தொழில்நுட்ப வசதிகளை செய்து தருவதாக கூறி அங்கும் மோசடி செய்துள்ளார். பத்து லட்ச ரூபாய் அளவுக்கு இம்மோசடி நடந்துள்ளது.
ஏமாற்றியவன் செய்த தவறை நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். “குறைந்த விலைக்கு பிராண்டட் கார் கிடைக்குதுன்னு போனவங்க மேலதான் தப்பு” என்றார் அவர். எனக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. ஆடி தள்ளுபடிக்காக அவர் பிராண்டு ஷர்ட்டுக்காக அலைந்த கதை எனக்கல்லவா தெரியும்! ஒரு சட்டைக்கே இவ்வளவு பிராண்ட் மோகம் இருக்கும் போது கார்களுக்கும் அதை கைப்பற்ற துடிக்கும் கனவான்களுக்கும் எவ்வளவு இருக்கும்? ஆக மொத்தம் பாலாஜிகளுக்கு யோகம்தான்.
__________________________________________________________
பிளாக்பெர்ரி: திருடன் போலீஸ் விளையாட்டு!
பிளாக் பெர்ரி செல்பேசியின் சேவைகளை -சமிக்ஞைகளை கண்டு பிடிக்க முடியாது என்பதால் மத்திய அரசு அதை மாற்றுவதற்கு அந்த நிறுவனத்திடம் பேசி வருகிறது. இந்த சேவையை பயன்படுத்தி தீவிரவாதிகள் திட்டம் போட்டால் என்ன ஆகுமென்பது அரசின் கவலை. ஆனால் பிளாக்பெர்ரியின் தனிச்சிறப்பே அதன் பிரைவசியின் பாதுகாப்பில்தான் என்று விளம்பரம் செய்யப்படுகிறது. அந்த தனிச்சிறப்பே அரசுக்கு பிரச்சினையாக உள்ளது. இந்த உள்முரண்பாடை எப்படி புரிந்து கொள்வது?
புதிய செல்பேசி வாங்குபவர்களிடம் அடையாள அட்டை சரிபார்த்து விற்க வேண்டும் என்று அரசு கூறினாலும் இதையெல்லாம் வாடிக்கையாளர்கள் தொந்தரவாக கருதுவார்கள் என்பதால் விற்பனையாளர்கள் அலட்டிக்கொள்வதில்லை. அந்த கணக்கில் தீவிரவாதிகள், மிதவாதிகள் என்று எல்லோரும் நினைத்த போது வாங்கலாம். வாங்குபவரின் அடையாளத்தை விட விற்பனை முக்கியம் என்பதால் இந்த திருடன் போலிஸ் விளையாட்டு இப்போதைக்கு தீராது!
____________________________________________________________
சாராயக்கடை மூடப்பட்டது!
சென்னை சேத்துப்பட்டில் மக்கள் குடியிருப்பில் ஒரு டாஸ்மார்க் கடை முன்னர் தனியாருக்கு சொந்தமாக இருந்த காலத்திலிருந்து இயங்கி வருகிறது. இதை மூடுவதற்கு மனு கொடுத்து பலனில்லை என்பதால் ம.க.இ.க தோழர்கள் மக்களைத்திரட்டி பூட்டுபோடும் போரட்டத்தை நடத்தினர். ஆனால் இந்த சாராயக்கடையின் உரிமையை பாதுகாக்கும் பொருட்டு போலீஸ் தோழர்களை கைது செய்தது. இந்த போராட்டத்தோடு கூடவே நீதிமன்றத்திலும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உதவியோடு வழக்கு தொடரப்பட்டது. இறுதியில் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் அந்த கடை மூடப்பட்டது. ஒரு சரக்குக் கடையை மூடுவதற்கே மக்கள் இவ்வளவு காலம் தொடர்ச்சியாக போராட வேண்டியிருக்கிறது. ஆனாலும் சேத்துப்பட்டு மக்கள் தோழர்களின் நீண்ட போராட்டத்தில் கடைசி வரை கைகோர்த்தார்கள். இந்த சாராயக்கடையை நடத்துவதற்கு பாதுகாப்பு அளிக்க முயன்ற லோக்கல் தாதாக்கள் இப்போது கையைப்பிசைகின்றனர். மக்கள் சக்தி சேர்ந்தால் தாதா, சரக்கு எல்லாவற்றையும் ஒரு கை பார்க்கலாம் போலும்!
________________________________________________________
கேப்டனின் ரேட்டு என்ன?
மதுராந்தகம் அருகே மாமண்டூரில் தன் பெயரில் ஒரு திருமண மண்டபத்தை விஜயகாந்த் திறந்திருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பேசும் போது தே.மு.தி.க ஊழல் இல்லாத கட்சிகளோடு கூட்டணி சேரும், தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி என்பது முடிவு செய்யப்படும், தே.மு.தி.க இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று கேப்டன் பிளந்து கட்டியிருக்கிறார்.
தன்கட்சியில் ஊழல் செய்யாதவன்தான் சேர முடியும் என்று அறிவித்தால் கேப்டன் கட்சியே கலைந்து விடும். தி.மு.க, அ.தி.மு.க என்று கொட்டை போட்ட பெருச்சாளிகள்தான் அங்கேயும் இருக்கின்றனர். இதுவரை செய்த செலவுக்கு கேப்டனும், அவர்களும் கணக்கு வைத்திருக்க கூடும். அதனால்தான் தங்கள் ரேட்டுக்கு கட்டுப்படியாகும் கூட்டணியை எதிர்பார்க்கிறார்கள். அதை ஓபனாக சொல்வதை விடுத்து இப்படி ஊழல், கீழல் என்ற சீனெல்லாம் கேப்டனது வீரத்துக்கு அழகாக இல்லையே?
______________________________________________________
தொடர்கிறது அமெரிக்கா திவால்!!
சென்ற வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் அமெரிக்காவில் எட்டு வங்கிகள் திவால் ஆகியுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 118 வங்கிகள் திவாலாகியிருக்கின்றன. இந்த வேகத்தைப் பார்த்தால் சென்ற ஆண்டு 140 வங்கிகள் திவாலாகியிருக்கும் ரிக்கார்டு முறியடிக்கப்படும் போலத் தெரிகிறது. பூலோக சொர்க்கத்தில் வேலை இழப்பு அதிகரித்து கடன் அடைபடும் வழி முடங்கி வங்கிகள் இப்படி ராக்கெட் வேகத்தில் திவாலாகி வருகின்றன. உலகத்துக்கே படியளந்த பெருமாள் இப்போது தனது உண்டக் கட்டிக்கே திண்டாடுகிறார்.
_______________________________________________
செய்தித் தொகுப்பு: வினவு செய்தியாளர் குழு.
________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
குறுக்கு வெட்டு – 24.8.2010, கலைஞர் கம்பெனி பிரைவேட் லிமிடெட்!…
ரேசன் அரிசி கடத்தல், விவசாயிகள் நிலம் பறிப்பு, பிராண்ட் மோகம், கலைஞர் கம்பெனி, பிளாக்பெர்ரி, கேப்டனின் ரேட்டு, அமெரிக்க திவால்………………..
உள்ளூர் அரிசிக் கடத்தலுக்குதான் கைது.. ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட அரிசி வகைகள் வெளிநாடுகளில் பாசுமதி அரிசி (மூட்டையில் மட்டும் எழுதி ) என்ற பெயரில் தாராளமாக கிடைக்கிறது ..
தடை செய்ததே இவர்கள் சம்பாதிக்கதானோ..?
மேளக்காரன் ஆட்சியிலே
எல்லாமே மேளம் தான்..!
வாசிக்க வரலையின்னா..
வன்முறையின் கோரம் தான்..!
தனக்கு புகழ்ப் பாட..
தானே மேடையமைச்சு..
தலைமை வகித்துடுவான்..!
நரபலிக்கு ஆளான..
நம் இனத்தை மறந்து விட்டு
நாட்டிய நாடகத்தை..
நாளெல்லாம் இரசித்திடுவான்..!
”புறநானூற்று வீரம்..
போர் வாள் நான்” என
பேசியவன எல்லாம்
அந்தரங்க மயிர் சிரைக்க
அழைப்பு விடுத்திடுவான்..!
”நாட்டியக்காரி” வேணாமின்னு
நல்லாட்சி வேணுமின்னோம்..!
ஆட்டம் பொறுக்கலியே..!
ஓட்டம் முடியலையே..!
”இழவு” விழுந்துச்சுன்னா
எப்படி இருக்குமின்னு..
ஒப்பாரிப் பாடலைக்கூட
ஒத்திகையா கேட்டிடுவான்..!
பகுத்தறிவுக்கு பாடைக் கட்டி..
தான் மட்டும் படுக்காம..
தமிழ்த் தாயை சாக வைச்சான்..!
மொத்த இனம் செத்தாலும்..
முடிவு இதற்கு வரலையே..!
— நன்றி அமிர் அப்பாஸ்.
மிகவும் பயனுள்ள கட்டுரைகள் , கருத்தளவில் தங்களுடன் இணைந்திருப்பேன், தங்கள் சேவைக்கு வாழ்த்துக்களும்,நன்றியும் !
திராவிட இயக்கங்கள் நாடக துறையை கைப்பற்றியதன் தொடர்ச்சியாய் திரைப்படத் துறைகளிலும் ஊடுருவியதின் விளைவுதான் இன்று உதய சூரியன் குடும்பத்திற்கு – கலையும் கலையை சார்ந்ததும் குடும்பத் தொழிலாகிவிட்டது.
அரசியலுக்காக சிறு கொலைகள் செய்ததன் மூலம் உதய சூரியன் குடும்பத்தின் மதுரை பேட்டை வாரிசுக்கு கொலையும் கொலையை சார்ந்ததுமே தொழிலாகிவிட்டது.
கம்யூனிசம் திரைப்படங்களுக்குள் ஊடுறுவிய காலத்தில் ,மேற்கு வங்கமும்,கேரளாவும் திரைப்படங்களில் கம்யூனிசத்தின் ஆளுமைக்குள் வந்ததால் -அங்கு பொதுவுடமை சிந்தனைகள் அதிகமாக இருக்கின்றன.
ஆனால் தமிழக திரைப்படத்துறையை திராவிட சிந்தனைகள் கைப்பற்றியதால் திராவிட கருத்தாக்கம் பரப்புரை செய்யும் தளமாக மாறியது. அந்த எல்லையை தாண்டி வருவதற்குள் இப்பொழுது திராவிடம் பேசி அரசியல் புரியும் கார்பரேட் அரசியல் வாதிகளின் பிடிக்குள் சிக்கி கொண்டது.
சினிமா உலகமே இந்த கார்பரேட்டுகளால் அழிந்துவிட்டது , இன்று நல்ல சமுக கருத்துகள் கொண்ட திரைக்கதைகளுடன் வரும் இளம் இயக்குனர்கள்
10 வருடம் 20 வருட போராட்டத்திற்கு பிறகும் ஒரு படம் கூட எடுக்க முடியாமல் போகிறது. நல்ல கருத்தாக்கங்கள் தெருவுக்கு அனுப்பப்படுகிறது.
மக்களின் மூலைகளை முடமாக்கும் சினிமாக்கள் எடுப்பது மட்டுமே இந்த கார்பரேட் குடும்பங்களின் சினிமா கம்பேனிகள் நோக்கமாக உள்ளது.
சிறு முதலீட்டில் படம் எடுக்க நினைத்தவர்கள் எல்லாம் நலிவடைந்து தெருவிற்கு வந்து விட்டனர்.
கலைக்காக அர்பனித்தவரின் குடும்பங்கள் -எல்லா கலைகளையும் தனதாக்கி கொள்ளட்டும்,
திராவிடத்திற்காக தன்னை அர்பனித்தவரின் குடும்பங்கள் திராவிடம் சொல்லியே பிழைக்கட்டும்.
அரசியலுக்காக அர்பனித்தவருக்கு எல்லா எதிர்கட்சிகளையும் உடைத்து , ஆட்களை விலைக்கு வாங்கி – இல்லாமல் செய்து ,முடிந்தால் வெளியே வரமுடியாமல் உள்ளே தள்ளி எல்லா அரசியலும் நானே என்று உரிமை கொண்டாட்டும்.. மேலக்காரன் ஆட்சியில எல்லாமே மேலம் தான்
என்ன வினவு, தினமும் குறுக்குவெட்டினைக் கொண்டு வரவேண்டும் என்ற எங்கள் கோரிக்கை என்ன ஆனது ?.
என்ன வினவு, தினமும் குறுக்குவெட்டினைக் கொண்டு வரவேண்டும் என்ற எங்கள் கோரிக்கை என்ன ஆனது ?.
அமேரிக்கா ஒன்னும் //உலகத்துக்கே படியளந்த பெருமாள்// இல்லை. ஊரைச் சுத்தி கடன வாங்கியே ஊதாரித்தனமாக செலவு செய்து தின்று கொழுத்த சாமர்த்திய சாலிகள். அவனுங்க பொருளாதாரம் வாயை பிளந்தது ஆச்சர்யப்டும் விஷயம் இல்லை.
It is the same state which ranks at No.4 in obesity with ~20% of the population are obese. Disparity in wealth, the main outcome of blindly following the western economic model.
அரிசிக் கடத்தலுக்கு தண்டனை! நாட்டையே கடத்துபவர்களுக்கு?
கலைஞர் கம்பெனி பிரைவேட் லிமிடெட்!
ரெட்டிக்கு எடியூரப்பா, விவசாயிகளுக்கு கோயிந்தா!
பிராண்டு மோகம்! பிராடு வேகம்!!
பிளாக்பெர்ரி: திருடன் போலீஸ் விளையாட்டு!
சாராயக்கடை மூடப்பட்டது!
கேப்டனின் ரேட்டு என்ன?
தொடர்கிறது அமெரிக்கா திவால்!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஏமாறுபவர் இருந்தால் ஏமாற்றி கொண்டு
இருப்பார்கள்
கோயிந்தா!!!!! கோயிந்தா!!!!!
<<<>>> இனி மேல் அவர்களும் மார்க்ஸ் உம் லெனின் உம் படிக்கட்டும்.. முதலாளித்துவத்தின் வீழ்ச்சி ஆரம்பம் 2008-09