privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்நான் கோவன் ஆனது எப்படி?

நான் கோவன் ஆனது எப்படி?

-

கோவன் ம.க.இ.ககோவன்… தமிழ்நாட்டின் கத்தார்! வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும். ‘கஞ்சி ஊத்த வக்கில்ல, என்னடா கெவர் மென்ட்டு… நாட்டைக் கூறு போட்டு வித்துப்புட்டு என்னடா பார்லிமென்ட்டு’ என்ற கோவனின் சொற்களில் உழைக்கும் மக்களின் கோபம் தெறிக்கும். ‘மக்கள் கலை இலக்கியக் கழகம்’ அமைப்பின் மையக் கலைக் குழுப் பாடகரான கோவனின் பாடல்கள், அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் அறிமுகம்!

“கீழத் தஞ்சை மாவட்டத்தில் குடவாசல் பக்கத்தில் பெருமங்களம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தேன். அப்பாவும் அம்மாவும் விவசாயக் கூலிகள். நடவு வயலில் அம்மா விதவிதமாப் பாடுவாங்க. சின்னப் புள்ளையில அதைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். ‘நெருஞ்சிப் பூ சல்லடையாம், நெஞ்சில் ஒரு வேதனையாம், நெஞ்சுவிட்டு சொன்னேனுன்னா… நித்தம் ஒரு சண்டையாகும்’னு அம்மா ராகத்தோடு இழுத்துப் பாடின பாட்டு இன்னமும் மனசுக்குள்ளயே நிக்குது. அப்பா, ஒரு கோலாட்ட வாத்தியார். அதுக்கு உண்டான பாட்டுகளை ராத்திரி எல்லாம் சொல்லிக்கொடுப்பார். எங்க வீட்டில் இருந்து வெளியே வந்தா, வயக்காடும் வரப்பு மேடும்தான் நிறைஞ்சு இருக்கும். ராத்திரியில் பசங்க வயக்காட்டுல சாக்கை விரிச்சுப்போட்டுப் பாட்டு பாடிக்கிட்டே படுத்து இருப்போம். இப்படி என்னைச் சுத்தி பாட்டும் இசையும் எப்பவும் இருந்தது. சோறு சாப்பிடுறது மாதிரி இசையையும் சேர்த்துச் சாப்பிட்டு வளர்ந்தேன்.

ஐ.டி.ஐ. முடிச்சு, திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை செய்யும்போது, தோழர்களின் தொடர்பு கிடைச்சது. நான் பாடுறதைக் கவனிச்சு, ‘நாட்டுப்புற உழவர்களே, நகர்புறத்துப் பாட்டாளிகளே… காதைக் கொஞ்சம் திருப்புங்க, கவனமாக் கேளுங்க, உங்க வாழ்வைத் திரும்பிப் பாருங்க’ என்ற பாட்டைப் பாடச் சொன்னாங்க. முதல்முறையா தெரு முனையில் மக்கள் மத்தியில் பாடுறேன். திடீர்னு போலீஸ் வந்துடுச்சு. எனக்கு வெடவெடன்னு பயம்.

இயல்பில் நான் ரொம்பப் பயந்த சுபாவம். வீட்டில் அப்படித்தானே வளர்த்தாங்க. ‘நாம கூலி வேலை செய்யுறவங்க. யார் வம்பு தும்புக்கும் போகக் கூடாது. நாம உண்டு, நம்ம வேலை உண்டுன்னு இருக்கணும்’னு தானே சொல்றாங்க. அதனாலயே, முதல்ல அச்சம்தான் வந்துச்சு. தோழர்கள், பேசி போலீஸை அனுப்பினாங்க. அப்புறமா மெள்ள மெள்ள… மக்கள் மத்தியில் பாட ஆரம்பிச்சப்போதான், ‘போராளிகளின் முதல் தேவை துணிவு’ன்னு புரிஞ்சது. கம்யூனிச சித்தாந்தம் ஒன்று மட்டும்தான் அறிவியல் பூர்வமானது. அதனால் மட்டும்தான் உழைக்கும் மக்களுக்கான விடியலைத் தர முடியும் என்கிற உண்மையை அனுபவபூர்வமா உணர்ந்தப்போ, வேலையை விட்டுட்டு முழு நேரமா அமைப்பில் சேர்ந்தேன்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழு சார்பா ஊர் ஊராப் போய்ப் பாடுவோம். ‘சாமக் கோழி கூவும் நேரத்திலே, நாங்க சம்பா அறுவடை செய்யப் போனோம். விளக்குவைக்கிற நேரம் வரை நாங்க வியர்வையும் காயாமப் பாடுபட் டோம்’கிற பாட்டுதான் நான் முதன் முதலில் எழுதினது. அம்மா வயக்காட்டில் பாடின நடவுப் பாட்டில் வரிகளை மட்டும் மாற்றிப்போட்டுப் பாடுவோம். பிறகு, இசை கத்துக்கிட்டு, நாங்களே மெட்டு போட்டுப் பாட ஆரம்பிச்சோம். சினிமா பாடல்களையே கேட்டுப் பழகிய மக்களிடம், அவர்களின் வாழ்க்கை பற்றிய உண்மைகளைப் பாடல் வழியா கொண்டுபோனோம்.

நாங்க கலைக் குழு தோழர்கள் திடீர்னு கிளம்பி அறிமுகம் இல்லாத ஏதோ ஒரு கிராமத்துக்குப் போவோம். உள்ளூர்ப் பிரச்னைகள், முரண்பாடுகளை விசாரிச்சுத் தெரிஞ் சுக்கிட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி பாடல்கள் பாடுவோம். பல கிராமங்களில் ‘நீங்க சாதி, மதத்தை எல்லாம் திட்டுறீங்க. வீணா வம்பு வரும்’னு முதலில் சண்டைக்கு வருவாங்க. கடைசி யில் அவங்களே பாசத்துடன் வந்து பேசுவாங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் ‘இன்னிக்கு சாப்பாடும், தங்குற இடமும் நீங்கதான் தரணும்’னு அறிவிப் போம். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு தோழரை அழைச்சுட்டுப் போய் தங்கவெச்சு, அவங்க சாப்பாட்டை எங்களுக்கும் கொஞ்சம் தருவாங்க. ராத்திரி எல்லாம் அந்தக் குடும்ப உறுப்பினர்கள்கூட சமூகத்தைப் பற்றியும், அரசியல்பற்றியும் பேசுவோம். இப்பவும் ஊர் ஊராப் போறோம். மக்கள்கிட்ட பாடி, அவங்க வீட்டில் சாப்பிட்டு, அங்கேதான் தூங்கி எழுந்து வர்றோம்.

கோவன் மகஇக
கலைக்குழு தோழர்கள்

எங்க பாடல்கள் அனைத்தும் 11 சி.டி-க்களா வந்திருக்கு. நாங்கள் மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காகப் பாடலை, அனுதினமும் மக்களை வதைக்கும் துன்ப துயரங்களையும், அவர்களை வழிநடத்தும் தவறான அரசியலையும் அம்பலப்படுத்திப் பாடுகிறோம். அதற்கு சரியான ஒரே தீர்வு… புரட்சிதான் என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குகிறோம். கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் சொல்வதால் அல்ல; இயல்பிலேயே உழைக்கும் மக்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமானால், அது கம்யூனிசத்தால் மட்டும்தான் முடியும். அதற்காக, ‘புரட்சி… புரட்சி’ என்று நிலவைக் காட்டி சோறு ஊட்டவில்லை.

இந்து மத வெறி, தாமிரபரணி நதி… கோகோ கோலா வுக்குத் தாரை வார்க்கப்பட்ட கொடூரம், தேர்தல்தோறும் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளின் பச்சை சந்தர்ப்பவாதம் என நடப்புப் பிரச்னைகளைவைத்தே மக்களிடம் பேசுகிறோம். பாபர் மசூதி இடிப்பு சமயத்தில், இந்து மத வெறிக்கு எதிராகப் பிரசாரம் செய்தபோது, ராமேஸ்வரத்தில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் மேடையிலேயே தாக்கப்பட்டோம். ராமநாதபுரத்தில், அ.தி.மு.க-காரர்கள் அடித்தார்கள். கட்சி பேதம் இல்லாமல் ஊழல்வாதிகளை, சந்தர்ப்பவாதிகளைத் தொடர்ந்து கறாராக அம்பலப்படுத்தி வருகிறோம். நாங்கள் உருவாக்கிய பல பாடல்கள் வெவ்வேறு முற்போக்கு இயக்கங்களால் பல இடங்களிலும் பாடப்படுகின்றன. இன்று நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் முதலாளித்துவத்துக்கும், மறு காலனி ஆதிக்கத்துக்கும் எதிராகத் தொடர்ந்து பாடல்கள் மூலம் பிர சாரம் செய்கிறோம். உழைக்கும் மக்கள் நாங்கள் முன்வைக் கும் அரசியலை ஏற்றுக்கொள்கிறார்கள். நாங்கள் சமூகமாற்றத் துக்கு இசையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறோம்.

உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி

உயிருக்கு நிகரான செங்கொடியை ஏந்தி

திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பில்

இடியாய்ப் பிளந்ததே நக்சல்பாரி- மக்கள்

இசையாய்ப் பொழிந்ததே நக்சல்பாரி!”

______________________

நன்றி: ஆனந்த விகடன்
______________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. நான் கோவன் ஆனது எப்படி?…

    கோவன்… தமிழ்நாட்டின் கத்தார்! வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும்….

  2. தோழர் கோவனுக்கு வாழ்த்துக்கள். பல ஆண்டுகட்கு முன்பே ஆ.விகடனில் படித்த ஞாபகம். வினவுக்காக இன்னும் பிரத்யேகமாக ஒரு விரிவான பேட்டி எடுத்திருக்கலாம்.

    ‘காவி இருள்’ தகட்டில் வந்த ‘சொல்லாத சோகம்’ நான் அடிக்கடி விரும்பி கேட்கும் பாடல். தோழர் மருதய்யனின் உரையும், பின்னணி இசையும் மனதைப் பிசையும் .

    இன்றைய இந்தியாவுக்கு மிகவும் பொருத்தமான தேவையான கருப்பொருள் கொண்ட பாடல். கீழே உள்ள லிங்கில் கேட்கலாம்.

    http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1728:kaviirul5&catid=55:songs&Itemid=111

  3. கலைக்குழுத் தோழர்களுக்கு எனது செவ்வணக்கம். புரட்சியாளர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கைப்பின்னணியும் மக்களுக்கானதாகவே உள்ளது எனபதை பெல் நிறுவனத்தின் வேலையை துறந்த கோவனின் வாழ்கையும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

  4. நான் கோவன் ஆனது எப்படி?…

    கோவன்… தமிழ்நாட்டின் கத்தார்! வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும்….

  5. சினிமா மட்டுமே கலை என்று நம்பிக்கொண்டிருந்த எனக்கு எல்லாம் கோவன் நிகழ்ச்சியை
    பார்த்த பொழுது உண்மையான கலை என்று ஆணித்தனமாய் புரிந்தது செவ்வணக்கம்

  6. நான் ம க இ க பாடல் வரிகளைக் கேட்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் “நக்சல்பாரி” என்ற சொல்லின் மீது ஆளும் வர்க்கம் பரப்பியிருந்த அவதூறுகளை, களங்கத்தை துடைத்து மக்கள் மத்தியில் அச்சொல்லுக்கு நன்மதிப்பை ஏற்படுத்திய பெருமை தோழர் கோவனுக்கு பெரும் பங்கு உண்டு என்றால் அது மிகை அல்ல.

  7. ஆனந்த விகடனின் சாதி வெறி பற்றி எழுதி விட்டு பின்னர் அதில் பேட்டியும் கொடுக்கிறீர்கள் மறு பதிப்பும் செய்கிறீர்கள் இது ஒரு பச்சை சந்தர்ப்ப வாதமே

    • நண்பர் எழில் அவர்களே, உங்களின் வெளிப்படையான விமர்சனம் பாராட்டத்தக்கது. ஆனால் ஆனந்த விகடன் ஒரு சந்தை மற்றும் சாதி வெறி கண்ணோட்டப் பத்திரிக்கை என்பது எந்தளவுக்கு உண்மையோ அந்தளவுக்கு தோழர் கோவனின் பேட்டியை பிரசுரிக்க முன்வந்ததும் உண்மை. குறிப்பாக இந்நடவடிக்கையானது அதன் ஜனநாயகப் பண்பின் வெளிப்பாடு. இந்தப் பண்பைத்தான் தோழர் அங்கீகரித்து பேட்டி கொடுத்டதிருக்க முடியும். வினவும் மறுபதிப்பு செய்திருக்கும். ஜனநாயக விரோதப் பண்பால் இதை ஏற்றுக்கொளள முடியாது என்பதை நீங்கள் உணர வேண்டும்.

  8. ‘kovan ‘ tamilanin parai.

    1. arisanannu peru vaikka yaruda naiye…
    2. engum paaradaa ippuvi makkalai…
    3. naan ulagam! padaippali nane ulagam!
    4. sollatha sogam, bathil sollatha veeram!
    5. ithu nammoda boomi…
    eppadi pottalum ithuthan ennoda DRP rating(Democratic and revloutionary people rating).
    tamilagam muluvathum oru kovan pothathu. mavattathukku oru kovan venum.
    Thozhar Kovanukku sevvankkam.

  9. ///////Ezhil
    ஆனந்த விகடனின் சாதி வெறி பற்றி எழுதி விட்டு பின்னர் அதில் பேட்டியும் கொடுக்கிறீர்கள் மறு பதிப்பும் செய்கிறீர்கள் இது ஒரு பச்சை சந்தர்ப்ப வாதமே

    Reply
    Posted on 23-Oct-10 at 7:02 pm ////////

    குமுதம், ஆ.விகடன், குங்குமம் போன்றவை வெறும் ஆபாசக் குப்பைகள் என்கிற அடிப்படையில் அதனைப் படிப்பதை நான் தவிர்த்துவருகிறேன். எனவே, அவ்விதழில் வெளியான தோழர் கோவனின் நேர்காணல் பற்றிய செய்தியை வினவு இங்கு பதிப்பிக்காமல் இருந்திருந்தால், இந்த உணர்ச்சிகரமான செய்தி என்போன்றவர்களுக்கு எட்டாமலேயே இருந்திருக்கும். இதனை இங்கு பகிர்ந்துகொண்ட வினவு தோழர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தோழர் கோவனைப் பற்றியும், மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திவரும் தமிழ்மக்கள் இசைவிழா பற்றியும் உணர்ச்சிப் பெருக்குடன், சமூகப் பொறுப்புடன் செய்திகளைச் சேகரித்து இதே ஆ.விகடனில் வெளியிட்ட தோழர் டி.அருள் எழிலன் போன்றவர்கள், அவர்களைப் பாதிக்கின்ற, இப்படிப்பட்ட புரட்சிகர கலைஞர்கள் பற்றிய செய்தியை வெளிக்கொண்டுவருகிறார்கள். இதனைத் தோழர்கள் புறக்கனித்துவிட வேண்டும், நேர்காணல் அளிக்கக் கூடாது என்று பேசுவது வறட்டுத்தனமானதாகவே படுகிறது.

  10. தோழர்களே திருச்சியில் மருத்துவ மன்றத்தில் ஆந்திரப் புரட்சிப் பாடகர் தோழர் கத்தார் நடத்திய புரட்சிகர கலை நிகழ்ச்சியை பார்க்க வாய்ப்பு கிடைத்தவர்களில் நானும் ஒருவன் அதே சமயத்தியில் தொடர்ந்து தோழர் கோவன் தலைமையிலான புரட்சிகர மையக் கலைக்குழுவின் எண்ணற்ற நிகழ்சிகளை நான் பார்க்க வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் முடிந்தவரை முன்வரிசையில் தான் அமர்வேன். அப்பொழுதுதான் அவர்களது முகத்தில் தெறிக்கும் உணர்ச்சிக்கலவைகளை நாம் முழுமையாக மனதில் உள்வாங்க முடியும். இப்படிப்பட்ட எத்தனையோ தருணங்களில் நான் தோழரை புரட்சிப்பாடகர் கத்தாரோடு ஒப்பிட்டுப்பார்த்திருக்கின்றேன்.
    இந்தப்பதிவுக்கு பின்னூட்டமிட்ட ஒரு தோழர் கூறியதுபோல் வினாவில் வந்திருக்காவிட்டால் இந்தச் செய்தியை என்னைப்போன்ற பலரும் படித்திருக்க வாய்ப்பில்லாது போயிருக்கும்.
    இது நம்மோட பூமி பாடலைக் கேட்டுவிட்டு அதில் குறிப்பிடப்படும் மக்களின் வாழ்க்கையின் அவலங்களை உள்வாங்கியபோதும் அதனை மாற்றியமைக்க தோழர்கள் தொடர்ச்சியாக போராடி வருவதையும், ஒருசிலவற்றில் நானும் பங்கெடுத்திருந்த போதிலும் அவர்களைப்போல் முழுமையாக என்னை அர்பணித்துக்கொள்ள முடியாமல் இருப்பதை நினைத்த் இருமுறை குமுறி அழுதிருக்கிறேன். அந்த உணர்வை என்னுள் ஏற்ப்படுத்தியது தோழர்களின் குரலும் இசையும் பாடலின் கருத்துமாகும். நான் நேரில் கண்டு ஆச்சரியமடைந்த எத்தனையோ நிகழ்வுகள் உள்ளன. இடம் கருதி இத்துடன் முடிக்கிறேன். தோழர் கோவனுக்கும் கலைக்குழுவின் அனைதுத்தொழர்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். வினாவுக்கு நன்றி. பாராட்டுகள்.

  11. நண்பர் சுந்தர் மற்றும் விவாதகளம் அவர்களுக்கு நன்றி

    திரு கோவன் அவர்களின் பேட்டி இதற்கு முன்பே ஆனந்த விகடனில் படித்திருக்கிறேன்.

    முதல் முறை பேட்டி வந்த போது வினவு அதை வெளியிட வில்லை இப்பொழுது தான் வெளியிட்டுள்ளார்கள்

    • அன்புள்ள எழில்,

      ஆ.வி யில் தோழர் மருதையன் பேட்டி, தோழர். கோவன் பற்றிய செய்தி ஆகியவை வந்த ஒரிரு ஆண்டுகளுக்கு பின்னர்தான் வினவில் ஆ.வியை விமர்சித்து கட்டுரை வந்தது.. தன்னைப்பற்றிய செய்தி வெளிவருகிறது என்பதற்காக வினவு ஆ.வியை கண்டிக்காமல் விட்டால்தான் அது சர்ந்தர்ப்பவாதமேயன்றி நீங்கள் சொல்வதைப்போல அல்ல…

      சீமானின் அரசியலை விமரிசனம் செய்யும் வினவுதான் சீமான் கைதையும் கடுமையாக கண்டித்து எழுதியது என்பதையும் இதுதான் சரியான ஜனநாயக வழிமுறை என்பதையும் இங்க பதிகிறேன்.

  12. தோழர் கோவனுக்கு வாழ்த்துக்கள்.

    ”வேதம் என்னும் கோடாரி கொண்டு இந்நாட்டை நாராய் பிளந்ததாரடா.
    வேர்வை சிந்திய நெற்றி மீது வேசி மகன் என்று பொறித்ததாரடா
    சேரி என்றொரு சிறையில் என்னை ஆயுள் கைதியாய் வைத்ததாரடா.”

    ”பேசும் மொழியிலே பேதம்வைத்து தமிழ் நீச மொழியென சொன்னதாராடா,
    தேச மொழியென உந்தன் இந்தியை தொண்டை குழியிலே தள்ளினாயடா,
    தேவ பாசை எனும் தவளை ஓசையை மொழிகள் மீது நீ ஏவினாயடா,
    தேசம் பாரத தேவி என்றொரு வேசத்தால் அதை மறைப்பதாரடா,
    தமிழினமா உன் இந்துத்துவமா இன மொழி வெறியர்கள் யார் என சொல்”

    ”ரத்தம் சுவைத்த கொலை கோடரிகள்,
    குத்தி குடல் சரித்த சூலங்கள்,
    சட்டம் நீதி அதன் காலடியில் ,
    துப்பாக்கிகள் மௌன சாட்சியங்கள்,
    சரிந்து வீழ்ந்ததே மதசார்பின்மை மாயம்,
    புரிந்ததடா ரகசியம் இது இந்து ராச்சியம்.”

    என்று வருணாசிரம சாதிய ஒடுக்குமுறையை,இந்திய ஆட்சியாளர்களின் தேசிய இன ஒடுக்குமுறையை,பாசிச காவி கூட்டத்தின் முசுலிம் இனப்படுகொலைகளை உணர்ச்சிகரமான பாடல்கள் மூலம் மக்களிடம் ஏந்தி செல்லும் தோழரின் பணி மிகுந்த பாராட்டுதலுக்கு உரியது.அவரது பாடல்கள் அநீதியை எதிர்த்து போராட மக்களை திரட்டும் விதமாக தொடர்ந்து ஒலிக்கட்டும்.
    பி.கு.
    கோவன்,நீங்கள் சட்டை அணிந்து கொண்டு பாடலாமே.

  13. வீர வணக்கங்கள் பேரன்புத் தோழர் கோவன். வினவில் இட்டமைக்காக வினவுத் தோழ்ர்களுக்கு பணிவான நன்றிகள்.

  14. kovan avarkalukku vaalthukkal..makkal kalai ilakkiya kalakathin anaithup paadalkalum enakku pidikkum..naadu munneruthunkuran,aayeram aayeram veli nilangalil ..saama koli..kaadu kalainthiom..nan ulagam tholilaali nane ulaga,..varrar varrar engal vajpaei..kattapomman oomai dhurai..ponra paadalkal enakku migavum pidikkum..kalaikuluvil ulla anaithu tholarkalukkum enathu nanri..

  15. அநியாயத்தை அழித்து ஏழை மக்களைக் காக்க வந்த கருப்பசாமி கோவன். வீச்சரிவாளுடுடன் கருப்பசாமி சொன்னதைத்தான் நக்சல்பாரிகள் சொல்கிறார்கள் அநியாயத்தைத் அழிப்போம் என்று.

  16. வாழ்த்துக்கள் தோழர் கோவன்….. தங்களின் இயக்கம் மென்மெலும் வளர வாழ்த்துக்கள்…

  17. தோழா
    வணக்கம் தங்களின் பகிா் அருமை நக்சல்பாாிகள் மக்களில் ஒருவா் என்பதையும் எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அங்கேயே மாற்றி போராட்ட களத்திற்காக கொடுக்கபட்டது எ்னபதை நிருபித்துள்ளீா்கள்

  18. கோடிகோடி பணத்திளே ராக்கெட் வானில் பறக்குதே… மக்கள் கோவனமும் ராக்கெட்டோட சேர்ந்து பரக்குதே… பாமர மக்கலையிம் அரசியல் படுத்தும் வரிகள்

  19. கலைகுழுவின் பிற தோழர்கள் பற்றியும் சில வரிகளிலாவது எழுதியிருக்க வேண்டும். ஆனந்த விகடன் பேட்டியிலும் அவ்வாறு இணைத்திருக்க வேண்டும். ஒரு பொதுவுடமைக் கட்சி தனிநபரை தனித்து அடையாளமிடுவது உடனிருப்பாரின் பங்களிப்பை புற்க்கணிப்பதாகும்

Leave a Reply to rajaramasamy பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க