privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காபா.ராகவன் : ஆர்.எஸ்.எஸ்-இன் அஜினோமோட்டோ ராஜரிஷி !

பா.ராகவன் : ஆர்.எஸ்.எஸ்-இன் அஜினோமோட்டோ ராஜரிஷி !

-

கண் போனாலென்ன, பா.ராவின் ‘நடுநிலை’ போகாது!

ஒரு சைக்கோ நம் கண்களுக்குள் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைச் சொருகினால் என்னவாகும்? இந்தக் கேள்வியைக் கிழக்குப் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர் பா.ராகவனிடம் கேட்டால் ‘சிலர் குருடாகும் என்பார்கள், சிலர் குருடாகாது என்பார்கள், நான் நடுநிலையாக சொல்ல வருவது என்னவென்றால்….” என்று மென்று முழுங்குவார். அதன் பொருள் குருடாகாது என்பதுதான். அவர் எழுதிய கிழக்கு பதிப்பகத்தின் “ஆர். எஸ். எஸ் – மதம், மதம் மற்றும் மதம்” புத்தகத்தின் முன் அட்டையில் ஆர்.எஸ்.எஸ் குறித்த நடுநிலைப் பார்வை என்று அவர் இதைத்தான் குறிப்பிடுகிறார்.

ஒரு வரலாற்றுச் சம்பவத்தை அதன் வரலாற்றுக் காலத்தில் வைத்து, விருப்பு-வெறுப்பின்றி விளக்குவதற்குப் பதில், தன்னுடைய இந்துத்வ திட்டத்திற்கேற்ப பச்சையான புளுகுகளையும் அரை உண்மைகளையும் கொண்டு  திரிப்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் உத்தி. ஆனால் நம்ம பா.ரா இந்த அளவுக்கு கச்சாவாக புளுகாமால் கொஞ்சம் உப்பு, புளி, அஜினாமோட்டா அதாவது சுஜாதா நயத்தில் பாமரரும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதுகிறார்.

லவ புராண ஒளியில் முசுலீமின் எதிர்வினையாய் ஆர்.எஸ்.எஸ் விசுவரூப தரிசனம்!

லாகூர் ராமனின் மகன் என்று நம்பப்படும் – வால்மீகி முனிவருக்குப் பிறந்ததாக சொல்லப்படும் – லவனால் நிர்மாணிக்கப்பட்டது என்கிற மாபெரும் வரலாற்றுக் கண்டுபிடிப்பிலிருந்து ஆரம்பிக்கிறார் பா.ரா. இராமரால் கட்டப்பட்ட மண்பாலத்தை இடித்து சேது சமுத்திரத் திட்டத்தை கட்டக்கூடாது என்று அவாள் கூறும் ஒரு பச்சையான புரட்டிற்கு ஒப்பான இந்த லவ லாகூர் கதையின் அவசியம் என்ன? இப்பேற்ப்பட்ட லாகூரிலிருந்தான் முசுலீம் லீகின் கொடூரமான பிரிவினை ஆரம்பிக்கிறது என்று சென்டிமெண்டாக போட்டு தாக்குவதுதான் பா.ராவின் நோக்கம்.

“ஒரு முடிவோடு இருந்தார் ஜின்னா. ஒரு முடிவோடு பிரசாரம் செய்தார்கள் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்தவர்கள். இது பஞ்சாபில் பல முஸ்லிம்களுக்கே பிடிக்கவில்லை. திடீரென்று இத்தனை அழுத்தமாக மதவாதம் பேச என்ன அவசியம்? இது சிக்கல் தரும். நிச்சயமாகப் பிரச்சினை வரும். மக்களின் அன்றாட அமைதி குலையப்போகிறது. சந்தேகமில்லை” – பக்.10

பேய்க்கதை மன்னன் பி.டி.சாமியின் மொழியில் பா.ரா சொல்வதன் பொருள் என்ன? லவன் விளையாடிய புண்ணிய பூமியில் இப்படி முசுலீம் லீக் அநீதியாக பிரிவினையை பேசியதன் காரணமாகவே அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் வண்ணம் ஆர்.எஸ்.எஸ் கிருஷ்ண பரமாத்மாவாக களமிறங்கியது என்று புரியவைக்கிறார் பா.ரா. எனில் முசுலீம் லீகின் பிரிவினை வாதம்தான் ஆர்.எஸ்.எஸ் பகவானது விசுவரூபத்திற்கு காரணம் என்பது உண்மையா?

அதற்கு முன் ஆர்.எஸ்.எஸ் தோன்றியதற்கு பா.ரா கொடுக்கும் தத்துவப் புரணக்கதையைப் பார்ப்போம்

ஒத்துழையாமை இயக்கமும் இந்துத்தவ ‘போராளி’களும்!

1919ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக அகிம்சை முறையில் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்த காந்தி, பின்னர் 1922இல் சௌரி சௌராவில் நடந்த ‘வன்முறை’ சம்பவத்தை அடுத்து அந்த போராட்டத்தை திரும்ப பெறுகிறார்.  இதைக் கண்டதுமே ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னோடியான சாவர்க்கர் மனம் கொதித்து ஹிந்து மகாசபையில் இணைந்து கொண்டார் என்கிறார் பா.ரா. இதைப் படிக்கும் வாசகர் சாவர்கர் என்ற அந்த தலைவர் வெள்ளையனை எதிர்த்து பயங்கரமாக போராடிக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வார். உண்மை என்ன?

1911ஆம் ஆண்டு அந்தமானில் இரட்டை ஆயுள் தண்டனைக்காக சிறைவைக்கப்படும் சாவர்க்கர், ஆறே மாதத்தில் ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதங்கள் அனுப்ப ஆரம்பிக்கிறார். தொடர்ந்த வந்த இந்த மன்னிப்பு படையெடுப்பால் மனம் குளிர்ந்த வெள்ளையர்கள், சாவர்க்கரை மராத்திய மாநிலத்தில் உள்ள ரத்தினகிரிக்கு 1922ஆம் ஆண்டு அனுப்புகின்றனர். “இந்த மாவட்டத்தை விட்டு வெளியேறக்கூடாது, வெள்ளையர்களை எதிர்க்கும் எந்த அரசியல் போராட்டத்திலும் பங்கேற்கக்கூடாது” என்று ஆங்கிலேயர் உத்தரவிட்டதை அவர் ஏற்றுக் கொண்டதால் சிறை வாழ்க்கையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

1910களின் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்து மகா சபை எனும் இந்துத்வா அமைப்பு, வெள்ளையர்களின் மறைமுக ஆதரவுடன் அதாவது அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சியை நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில்தான் சாவர்க்கர் அதில் சேர்கிறார். வெள்ளையனை எதிர்த்து ஒரு எழுத்து கூட எழுதக்கூடாது, ஒரு சொல் கூட பேசக்கூடாது என்பதற்காக விடுதலை பெற்ற சாவர்க்கர் ஒத்துழையாமை இயக்கத்தின் அருகில் கூட செல்லவில்லை. மேலும் அந்த இயக்கத்தை அவர் எதிர்த்திருக்கிறார். ஏனெனில் கிலாபத் இயக்கத்தின் தொடர்ச்சியாக வந்த ஒத்துழையாமை இயக்கம் என்பது முசுலீம்களுக்கு ஆதரவானது என்பதே அவர் கருத்து. உண்மை இதுவாக இருக்க நம்ம அஜினோமோட்டோ பா.ரா படிக்கிறவெனெல்லாம் அடி முட்டாள்கள் என்று துணிந்து சாவர்கரை ஆங்கிலேய எதிர்ப்பு வீரராக அறிமுகம் செய்கிறார்.

இனி பா.ராவின் அடுத்த புளுகைப் பார்ப்போம். இதே ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி நிறுத்தியதை கண்டு கொதித்த கேசவ பலிராம் ஹெட்கேவார் எனும் மராத்தியப் சித்பவனப் பார்ப்பனர் 1925இல் ஆர்.எஸ்.எஸ் ஐ ஆரம்பித்தாராம். இவர் ஏற்கனவே திலகர் தலைமையில் காங்கிரசு கட்சியில் இருந்தார், சில அடையாளப் போராட்டங்களில் ஆபத்தில்லாமல் கலந்து கொண்டிருக்கிறார் என்பதெல்லாம் அரை உண்மைதான். உண்மையில் இவர் காங்கிரசில் அப்படி பட்டும் படாமலும் இருந்ததற்கு காரணம் ஆங்கிலேய எதிர்ப்பா, இந்துத்வ மீட்சியா என்பதுதான் கேள்வி. அதற்கு நாம் ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்தை அதன் வரலாற்றுப் பொருளை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்ளவேண்டும்.

காந்தியை எதிர்த்தது பகத்சிங்கா, ஆர்.எஸ்.எஸ்ஸா?

அதற்கு முன் ஒரு முக்கியமான விசயத்தை பார்த்து விடுவோம். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் அருமை பெருமைகளை அடித்துவிடும் பா.ரா, பின்னர் காந்தி அதை நிறுத்தியவுடன் காங்கிரசில் இருந்த தேசபக்த தீவிரவாத சிங்கங்கள் அதிருப்தியுற்று தனிப்பாதையில் பயணித்தனர் என்கிறார். இந்த தீவிரவாதப் பெருமையைத்தான் வெள்ளைக்காரனை எதிர்த்து வாயே திறக்காத சாவர்க்கருக்கும், ஹெட்கேவாருக்கும் அளிக்கிறார். கூடவே அவர்கள் காந்தியின் முசுலீம் ஆதரவை ஏற்கவில்லை என்று ஒரு விளக்கம் அளிக்கிறார். அதிலும் அந்தக் காலகட்டத்தில் முசுலீம்களுக்கென்று தனிநாடு கோரிக்கையை எழுப்பியே இராத முசுலீம் லீகை பிரிவினை பேசினார்கள் என்று வாய் கூசாமல் புளுகுகிறார். காரணம் இப்போது உள்ள முசுலீம் மீதான வெறுப்புணர்வு கொண்ட இந்து பொதுப்புத்தி இதை கேள்வி கேட்காமலேயே ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கைதான்.

ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி, விடுதலைப் போராட்டத்திற்கு காந்தி இழைத்த துரோகத்தை கண்டு சினமுற்றவர்கள் சாவர்க்கர், ஹெட்கேவார் முதலான தொடை நடுங்கிகள் அல்லர். அவர்கள் சந்திரசேகர ஆசாத், பகத்சிங் முதலான தோழர்கள். அவர்கள் ஆரம்பித்த அந்த புரட்சிப்பணிதான் அடுத்த பத்தாண்டுகளில் இந்திய வானில் மையமாக இருந்தது. 1931ஆம் ஆண்டு ஒரு சிங்கம் போல பகத்சிங் தூக்குமேடையில் நின்று கொண்டிருந்தபோது, ஆர்.எஸ்.எஸ் கோழைகள் வெள்ளைக்காரனது ஸ்பான்சரோடு மைதானத்தில் கபடி ஆடிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் நம்ம அக்மார்க் அம்பியான பா.ராகவன் கம்யூட்டரின் கீ போர்டே கதறி அழுமளவுக்கு பகத்சிங் தோழர்களின் வீர அத்தியாத்தை மறைத்துவிட்டு அந்த இடத்தில் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளை திருட்டுத்தனமாய் திணித்து விடுகிறார். இப்படித்தான் கோழைகள் பா.ரா கையால் குட்டுப்பட்டு போராளிகளாய் ஆபாசத்தோடு உருவாக்கப்படுகிறார்கள்.

ஹெட்கேவாரின் பார்ப்பனியக் கவலைகள்!

உண்மையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஹெட்கேவார் ஆரம்பிக்க என்ன காரணம்? அதை அவரது வார்த்தைகளிலேயே பார்ப்போம்

“மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் காரணமாக நாட்டில் (தேசியத்திற்கான) உற்சாகம் குறைந்து வருகிறது. அந்த இயக்கம் தோற்றுவித்த தீமைகள் சமுதாயத்தில் அச்சமூட்டும் வகையில் தலைதூக்கியுள்ளன. தேசியப் போராட்ட அலை தணிந்து வந்த போது ஒருவருக்கொருவரிடையே உள்ள குரோதங்களும் பொறாமைகளும் வெளிப்படத் தொடங்கின. எங்கு பார்த்தாலும் தனிப்பட்டவர்களிடையே சச்சரவுகள். பல்வேறு சமூகங்களுக்கிடையே மோதல்கள் தொடங்கியிருந்தன. பிராமணருக்கும் பிராமணரல்லாதோருக்கும் இடையிலான முரண்பாடு அப்பட்டமாகவே தெரியத் தொடங்கியது. எந்த ஒரு அமைப்பிலும் ஒருமைப்பாடோ ஒற்றுமையோ இருக்கவில்லை. ஒத்துழையாமை இயக்கத்தின் பாலைப் பருகி வளர்ந்த யவனப் பாம்புகள் நஞ்சைக் கக்கிப் படமெடுத்தபடி தேசத்தில் கலவரங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தன” (The brotherhood in saffron: The RSS and Hindu revivalism. Anderson and Damle- எஸ்.வி.ராஜதுரையின் இந்து இந்தியா நூலிலிருந்து)

இந்த விளக்கத்தை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றாமல் மேலோட்டமாக பார்த்தாலே, ஒத்துழையாமை இயக்கம் குறித்த போதாமைகளை அதாவது காந்தியின் மிதவாதத்தை ஹெட்கேவார் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது புரியும். இங்கே அவரது கவலை என்ன?

சமூகங்களுக்கிடையே உள்ள மோதல், மக்களிடையே ஏற்பட்டு வரும் பிளவு அதாவது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர், பார்ப்பனரல்லாதோர் முதலான சமூகங்கள் அம்பேத்கார், பெரியார், திராவிட இயக்கம் போன்றவர்களின் முயற்சியில் ஆதிக்க சாதிகளை எதிர்க்க துவங்கிவிட்டனர். குறிப்பாக அந்த வரலாற்று காலத்தை வைத்துப் பார்த்தால் 1922 ஒத்துழையாமை இயக்கத்திற்கு பிறகு பார்ப்பன ஆதிக்க சாதியினரை எதிர்க்கும் போக்கு, இயக்கங்கள் முன்னிலைக்கு வருகின்றன. ஆர்.எஸ்.எஸ் அவதரித்த மராட்டிய மண்ணில் அம்பேத்கரின் தாழ்த்தப்பட்டோருக்கான சம உரிமை போராட்டங்கள் சூல் கொண்டிருந்தன. இன்னொரு பக்கம் ஒத்துழையாமை இயக்கத்தின் உதவியால் யவனர்கள் அதாவது முசுலீம்கள் தங்களது சம உரிமைக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தனர். இவைதான் ஹெட்கேவாரின் இதயத்தை குடைந்தெடுத்த கவலைகள். இந்த கவலை அவரிடத்தில் வந்ததற்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் இன் தோற்றம் பார்ப்பனிய மீட்சிக்காகவே!

வெள்ளையர்கள் ஆதிக்கம் வரும் முன்பு 18ஆம் நூற்றாண்டில் மராட்டியத்தின் அரசியல், சமூக அதிகாரத்தில் இருந்தவர்கள் பேஷ்வாக்கள். சித்பவன் எனும் பார்ப்பன பிரிவைச் சேர்ந்த இவர்களது ஆட்சிக் காலம்தான் பார்ப்பனர்களின் பொற்காலம். அதாவது சூத்திரர்களும் பஞ்சமர்களும் அடிமைகளாக அவதிப்பட்ட இருண்டகாலம். இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை தனது சாம்ராஜ்ஜியத்தில் இணைத்த வெள்ளையர்கள் மராட்டியத்தையும் கைப்பற்றினார்கள். தங்களது இருண்ட காலத்தில் இருந்து விடுதலை பெற விரும்பிய சூத்திரர்கள் – குறிப்பாக மகர்கள் எனப்படும் தலித் மக்கள், வெள்ளையர்களின் இராணுவத்தில் சேர்ந்து உணர்வுப்பூர்வமாக போரிட்டு சித்பவன பேஷ்வாக்களை வீழ்த்துவதற்கு காரணமாக இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது பார்ப்பனக் கொடுங்கோன்மையிலிருந்து விடுவித்த சொந்தப் போர்.

இந்த முரண்பாட்டை வெள்ளையர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதும் இப்படி தமது சமூக அதிகாரத்தை இழந்த சித்பவன பார்ப்பனர்கள் வெள்ளையர்களின் மீது ஆத்திரம் கொண்டனர் என்பதும்தான் வரலாற்று உண்மை. ஆகவே மராட்டியத்தைப் பொறுத்தவரை அங்கே சித்பவன பார்ப்பனர்களிடேயே தோன்றிய ஆங்கிலேய எதிர்ப்பு என்பது காலனிய எதிர்ப்பு உணர்வல்ல. அது வாழ்ந்து கெட்ட ஒரு பண்ணையாரின் கசப்புணர்வு.

அதைத் தொடர்ந்து 19ஆம் நூற்றாண்டில் ஜோதிர்ராவ் பூலே வருகிறார். வேதத்தை மறுத்து, பார்ப்பனர்களின் மேலாண்மையை எதிர்த்து, சூத்திர பஞ்சமர்களின் சம உரிமைக்காக அயராது பாடுபடுகிறார். இதுவும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்துகிறது. அதனால் எற்கனவே ஆட்சியிழந்த பார்ப்பனர்கள் மேலும் வயிறெறிந்து போகிறார்கள்.

இப்படித்தான் மராட்டியத்தில் திலகர் உள்ளிட்ட சித்பவன பார்ப்பனர்கள் காங்கிரசில் சேர்ந்து வெள்ளையனை எதிர்க்கிறார்கள். அந்த எதிர்ப்பின் உள்ளடக்கமாக இழந்துவிட்ட வருண சாதி ஆதிக்கத்தை மீட்டெடுப்பதே இருந்தது. விதவை மறுமண எதிர்ப்பு, பாலிய விவாகத் தடை எதிர்ப்பு போன்றவற்றில் திலகர் தீவிரமாக ஈடுபட்டார். பிளேக் நோயை பரப்பும் எலிகளை ஒழிப்பதற்காக எடுக்கபட்ட நடவடிக்கைகளை எதிர்க்கிறார்; அதற்காக விநாயகர் ஊர்வலத்தை ஆரம்பிக்கிறார். ஆக மொத்தம் இந்த நடவடிக்கைகளில் இருப்பது வெள்ளையர் எதிர்ப்பா, இல்லை பார்ப்பன மீட்பா?

இதே காலத்தில் தென்னிந்தியாவில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பார்ப்பனரல்லாதோர் இயக்கம் திராவிடர் இயக்கமாக வளர்கிறது. இந்த இயக்கத்தில் தமது சமூக ஆதிக்கத்தை இழக்க விரும்பாத பார்ப்பனர்கள் வெள்ளையர்களது அரசில் சேர்ந்து கொண்டும், காங்கிரசில் இருந்து கொண்டும் தந்திரமாக வேலை செய்கின்றனர். அன்று காங்கிரசு தலைவரான சத்தியமூர்த்தி அய்யர் தேவதாசி தடை சட்டத்தை கடுமையாக எதிர்த்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

மேற்கு வங்கத்தில் முசுலீம் நவாப்புகளை வீழ்த்திய வெள்ளையர்களை அங்கிருந்த பார்ப்பன ‘மேல்’சாதியினர் வரவேற்றனர். அதன் மூலம் இழந்து விட்ட தமது சமூக ஆதிக்கத்தை பெறலாம் என்பது அவர்களது நம்பிக்கை. இப்படி இந்தியா முழுவதும் பார்ப்பனர்களின் வெள்ளையர் எதிர்ப்பு அல்லது ஆதரவு இரண்டுமே பார்ப்பனிய சாதி ஆதிக்கத்தின் மீட்போடு தொடர்புடையது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் துவக்கப்பட்ட காலகட்டத்தில்தான் அம்பேத்கரும் தனது செயல்பாடுகளை துவங்குகிறார். 1920கள் மற்றும் 1930களில் அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து பொதுக்குளத்தில் நீரெடுக்கும் போராட்டம், கோவில் நுழைவுப் போராட்டம் முதலானவற்றை நடத்துகிறார். அப்போது ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவார் இத்தகைய சோதனைகளால் இந்துக்களுக்கு அதாவது பார்ப்பனர்களுக்கு நேர்ந்துவிட்ட அபாயத்தை பற்றி கவலைப்படுகிறார்.

இத்தகைய வரலாற்றுப் பின்னணியிலிருந்து ஆர்.எஸ்.எஸ் ஏன் தோற்றுவிக்கப்பட்டது என்பதை வாசகர்கள்  புரிந்து கொள்ள முடியும். இந்த வரலாற்றை மறுத்து நூலாசிரியர் பா.ரா உருவாக்கும் மோசடியையும் அறிந்து கொள்ள முடியும்.

ஆர்.எஸ்.எஸ் இன் புரவலர்கள் யார்?

1925க்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் எப்படி பரவியது? யார் உதவினார்கள்?

சுதந்திரப் போராட்டம் தங்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை என்பதில் தீர்மானகரமாய் இருந்த ஆர்.எஸ்.எஸ்ஐ குண்டாந் தடிகளுடன் இராணுவ பயிற்சி செய்வதற்கு வெள்ளையர்கள் அனுமதித்தார்கள்.

அந்த விசுவாசத்தை ஆர்.எஸ்.எஸ் தலைவர்களிடம் நிறைய சந்தர்பங்களில் நாம் காணலாம். உதாரணத்திற்கு ஒன்று –

“We should remember that in our pledge we have talked of freedom of the country through defending religion and culture. There is no mention of departure of British in that.” (Shri Guruji Samgra Darshan, Vol 4, p. 2)”

இது ஆர்.எஸ்.எஸ் காரர்கள் “குருஜி” என்று ஏற்றிப் போற்றும் அவர்களது இரண்டாவது தலைவர் கோல்வால்கர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்.

இப்படித்தான் ஆங்கிலேயர்கள் ஆசிர்வாதத்துடனும், மேல்மட்ட பார்ப்பனிய சனாதனிகளின் உதவயுடனும் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பரவியது.

வட இந்தியாவில் குமாஸ்தக்களை உருவாக்கும் ஆங்கிலக் கல்விமுறையின் பரவலால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரிருவர் முன்னேறியதைப் பார்த்து தமது அஸ்திவாரத்தில் லேசான ஆட்டம் கண்டு போயிருந்த வருணாசிரம இந்து தரும ஆதிக்கத்தைக் காப்பாற்றவும், சமஸ்கிருதத்தை மீண்டும் உயிர்த்தெழ வைக்கும் நோக்கத்திற்காகவும் ஜமீன்தார்கள், நிலப் பிரபுக்களிடம் நன்கொடை திரட்டி பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியிருந்தார் காங்கிரஸ்காரரும் இந்து மகாசபையை தோற்றுவித்தவர்களுள் ஒருவருமான மதன் மோகன் மாளவியா. இந்த பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்க்கு என்று தனியாக கட்டிடமே கட்டிக் கொடுதிருந்தார். இத்தகைய புரவலர்களால்தான் ஆர்.எஸ்.எஸ் நாடெங்கும் பரவியது.

ஆனால் பா. ராவோ, பத்துப் பதினைந்து வயது சிறுவர்களுடன் சேர்ந்து கபடி விளையாடிய ஹெட்கேவார் “மெல்லியக் குரலில்” சித்தாந்தப் பயிற்சியளித்ததாகவும் அதிலிருந்து தேறியவர்கள் வடநாடு முழுக்கப் பரவி பத்தே ஆண்டுகளில் நாற்பதாயிரம் பேராகப் பெருகியதாக அதிசயக்கிறார்.

பிரிவினையை முதலில் பேசியது முசுலீம் லீகா, இந்து மகா சபையா?

அடுத்து புத்தகத்தின் துவக்கத்திலேயே முசுலீம் லீக் கட்சியினர் தனி நாடு கோரி பிரிவினை பேசினார்கள் என்றும் அதன் காரணமாக நடந்த கலவரங்களில், ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் தரப்பில் களமிறங்கியதாலேயே அது பரவலான வெளிச்சத்துக்கு வந்தது என்றும் சொல்கிறார் பா.ரா.

ஆனால், உண்மையில் முசுலீம் லீக்கின் தனிநாடு கோரிக்கை வெளிப்பட்ட  பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு 1923ஆம் ஆண்டு சாவர்க்கர் எழுதி வெளியிட்ட “ஹிந்துத்துவம்: யார் ஹிந்துக்கள்?” எனும் நூலில் தான் முதன் முறையாக இசுலாமியர்கள் இந்த நாட்டில் இந்துக்களோடு சேர்ந்து வாழ முடியாது எனும் பிரிவினை வாதம் பேசப்பட்டது. ஹெட்கேவார் அப்புத்தகம் கையெழுத்துப் பிரதியாக இருக்கும் போதே வாசித்தவர்.

அப்புத்தகம் தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு ஆரம்பத்தில் ஒரு தத்துவ அடிப்படையை வழங்குவதாக இருந்தது. மிகத் தெளிவாக பார்ப்பனிய இந்து மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்வோரைத் தவிர்த்து வேறு எவருக்கும் இந்தியாவில் இடமில்லை என்பதை அப்புத்தகத்தில் தெளிவாக சாவர்க்கர் அறிவிக்கிறார். ஆனால் இதற்கெல்லாம் வெகு காலம் முன்னதாகவே இந்துத்துவம் என்பது பேச்சளவிலும் செயல் அளவிலும் காங்கிரசில் இருந்த புகழ் பெற்ற பார்ப்பனப் பெருச்சாளிகளின் செயல்பாட்டில் இருந்தது.

இந்துத்வக் காங்கிரசில் முசுலீம்கள் இணைய முடியுமா?

மேலும் இந்திய அரசியலில் மதத்தை கலந்து அரசியல் செய்த முதல் கட்சியே காங்கிரசுதான். ஏற்கனவே அதன் தடங்களை திலகரது வரலாற்றில் பார்த்து விட்டோம். பின்னர் காந்தியின் காலத்திலும் அதுவே நடந்தது. இந்துக் கடவுளர்களின் உருவகமாக நாட்டை சித்தரித்து பாடும் வந்தே மாதரம் முசுலீம்களின் எதிர்ப்புக் கிடையிலும் காங்கிரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. காங்கிரசின் தலைவர்கள் பலர் இந்துத்வத்தின் பொற்காலத்தை மீட்டெடுக்கும் கனவினை கொண்டிருந்தவர்கள்தான். அதற்காக முசுலீம்களை அவர்களது சம உரிமைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.

சாவர்க்கர், ஹெட்கேவார் கும்பலுக்கும் முன்பாகவே காங்கிரஸில் விபின் சந்திர பால் போன்ற மிதவாத இந்துத்துவவாதிகளும் லாலா லஜபதிராய், திலகர், மதன் மோகன் மாளவியா போன்ற தீவிர இந்துத்துவவாதிகளும் நிறைந்திருந்தனர். காங்கிரஸில் உறுப்பினர்களாக இருக்கும் போதே லாலா லஜபதிராய் ஆரிய சமாஜத்தில் இயங்கி வந்துள்ளார். மாளவியா உத்திரபிரதேசத்தில் “பாரத தர்ம மகாமண்டலம்” என்கிற அமைப்பை நிறுவியவர் – தான் இறக்குவரை காங்கிரஸில் இணைந்திருந்தவர். பின்னாளில் இவர்கள் சேர்ந்து ஆரம்பித்த இயக்கம் தான் ஹிந்து மகாசபா.  இதற்காக காங்கிரசு இவர்களைக் கண்டித்து வெளியேற்றவில்லை.

அந்தக் காலகட்டத்தில் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களின் உறுப்பினர்களும் தலைவர்களும் காங்கிரசிலும் இருந்துள்ளனர். இவர்கள் தீவிரமான ஆங்கிலேய எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் காங்கிரசை ஒரு தீவிரமான இந்துத்வா போக்கில் மாற்ற வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். 1937ஆம் ஆண்டு தான் வேறு இயக்கங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் காங்கிரசிலும் உறுப்பினர்களாக இருப்பதைத் தடை செய்து ஒரு விதியைக் கொண்டு வருகிறது. இங்கே புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் காங்கிரசை அனைத்து பார்ப்பனியவாதிகளும் இது நம்ம ஆளு கட்சி என்றுதான் கருதினார்கள். இப்படிப்பட்ட மனநிலை கொண்ட இந்து காங்கிரசுக் கட்சியில் முசுலீம்கள் எப்படி சேர்ந்து பணியாற்ற முடியும்?

இப்படி இந்துத்துவவாதிகளின் கூடாரமாய் காங்கிரசு சீரழிந்து கிடந்த நிலையில் அதற்கான எதிர்வினையாக வேறுவழியின்றி தோன்றியது தான் முசுலீம் லீக். ஆங்கிலேயர்களும் இந்த முரண்பாட்டை திறமையாக பயன்படுத்தி முற்றவைத்தார்கள். முசுலீம் லீக் அதன் துவக்க காலத்தில் தேசப் பிரிவினையை செயல் திட்டமாகக் கொண்டிருக்கவில்லை. முசுலீம்களைக் கல்வியறிவு பெறச்செய்வது, மாகாண அரசுகளில் போதிய பிரநிதித்துவத்தைக் கோரிப் பெறுவது போன்றவைகளையே அதன் தலைவர்கள் முன்வைத்தனர். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தோடு சமரசமாகச் சென்று சில சில்லரைக் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வது எனும் அளவில் காங்கிரஸின் இசுலாமிய பிரதி தான் முசுலீம் லீக்.

முதல் இந்திய சுதந்திரப் போரில் இந்து, முசுலீம் என மதவேறுபாடு இல்லாமல் மக்கள் ஒருங்கிணைந்து போராடியதைக் கண்டு உணர்ந்த ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்கிறார்கள். இந்த சூழ்ச்சியை முறியடித்து மதசார்பற்ற தேசிய இயக்கத்தை கட்டுவதற்கு பதில் இந்துத்தவ வழியில் காங்கிரசு கட்சியைக் கட்டினார்கள் அதன் பிதாமகர்கள்.

இந்த வரலாற்று உண்மையை மறைத்துவிட்டு இதை அப்படியே புரட்டிபோட்டு முசுலீம்கள்தான் ஆர்.எஸ்.எஸ் ஐ துவங்குவதற்கு காரணம் என்று பா.ரா ஒரு பொய்யை விரல் கூசாமல் எழுதுகிறார்.

எமர்ஜென்சியில் ஆர்.எஸ்.எஸ்: கோழைகள் சூரர்களான அதிசயம்!

“மிசாவில் கைதாகி சிறை சென்றவர்களுள், முழு எமர்ஜென்சி காலமும் சிறைப்பட்டிருந்தவர்கள் அநேகமாக ஆர். எஸ். எஸ் காரர்கள்தாம்.” என்கிறார் பா.ரா. தேசமெங்கும் அவசர நிலையை எதிர்த்து போராடுமாறு தனது தொண்டர்களை அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் தேவரஸ் அழைப்பு விடுத்தாராம். அதை ஏற்று “மாறு வேடங்களில் வீடுவீடாகச் சென்று இந்திரா அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை எடுத்துச் சொல்வது, பத்திரிகையாளர்களை ரகசியமாகச் சந்தித்து, சிறையில் இருக்கும் இயக்கத்தின் உறுப்பினர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை விவரிப்பது” போன்ற வேலைகளை ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் செய்தார்களாம்.

நரியைப் பரியென்று காட்டும் பேராசை பா. ராகவையங்காருக்கு வந்ததில் தப்பில்லை – ஒரு ‘நூலின்’ துயரம் இன்னொரு ‘நூலு’க்குத்தானே புரியும்? அதற்காக தெளிவாய் நாடே பார்த்துக் கொண்டிருந்த போது பகிரங்கமாய் இந்திராவின் காலை நக்கியாவது சிறையிலிருந்து வெளியே வரத் தயாராக இருந்த ஆர்.எஸ்.எஸ் கோழைகளை வீரர்களாகக் காட்டுவது, போட்டுக் கொண்டிருக்கும் ‘நடுநிலை’ முகமூடிக்கு சற்றும் பொருந்தாமல் அசிங்கமாய் பல்லிளிப்பதை பா.ரா உணராமல் இல்லை. இதற்கு அவர் கொடுக்கும் விளக்கம் என்னவென்றால் ஆர்.எஸ்.எஸ் ஒரு சமூக இயக்கம், அரசியல் இயக்கம் இல்லையாம். அதனால் அதன் தலைவர் அப்படித்தான் அணுகுவாராம்.

முதலில் இவர்கள் சொல்வது போல் இந்திரா காந்தி ஆர்.எஸ்.எஸ்ஸின் விரோதியல்ல. அன்றைக்கு இந்தியாவிலிருந்த அமெரிக்க சார்பு முதலாளிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கும் சமூக ஏகாதிபத்தியமாய் சீரழிந்து நின்ற ரசிய சார்பினருக்குமான முரண்பாடுகளின் பின்னணியில் தனது சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த இந்திரா காந்தியால் எமர்ஜென்சி அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்க ஏகாதிபத்திய சார்பு நிலையிலிருந்ததாலேயே ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்படுகிறது. இந்தத் தடை ஆர்.எஸ்.எஸ் அதன் செயல்பாடுகளால் வரவழைத்துக் கொண்ட ஒன்றல்ல. மாறாக இந்திராவின் அரசியல் கணக்குகளுக்காக அதன்மேல் திணிக்கப்பட்டது.

அதேபோல ரசிய சார்பு கொண்ட வலது கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்படாமல் இருந்ததற்கும், ரசிய சார்பற்ற இடது கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டதற்கும் இந்திராவின் ரசிய சார்புதான் காரணம். இதே அவசர நிலை காலத்தில் நக்சல்பாரி புரட்சியாளர்கள் கொலை செய்யப்பட்டும், பலர் சிறைபட்டதற்கும் கூட அவர்கள் ரசிய சமூக ஏகாதிபத்தியத்தை எதிர்த்தார்கள் என்பதோடு உள்நாட்டில் ஆளும் வர்க்கத்திற்கு தலைவலியாக செயல்பட்டார்கள் என்பதே.

மற்றபடி ஆர்.எஸ்.எஸ் வெளியிலிருந்தால் என்ன செய்திருக்குமோ அதை  எந்தக் குறையுமில்லாமல் இந்திராவே நிறைவேற்றினார். தில்லி குடிசை வாழ் மக்களை அகற்றுவது, கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு போன்றவைகளை எதிர்த்துப் போராடிய ஏழை முசுலீம்களை ஆயுதம் கொண்டு காட்டுமிராண்டித்தனமாய் ஒடுக்கியது இந்திராவின் அரசாங்கம். இதனால் இன்றைக்கும் சஞ்செய் காந்தி எனும் சர்வாதிகார இளவலை ஆர்.எஸ்.எஸ் கூட்டம் பாராட்டித் திரிகிறது. மேனகா காந்தியும், வருண் காந்தியும் இன்று பா.ஜ.கவில் இருந்து கொண்டு இந்துவெறி பிரச்சாரத்தை செய்கிறார்கள் என்றால் அது அவர்களது மரபிலேயே இருக்கிறது என்பதுதான்.

அன்னை இந்திராவின் அடிமைகளாக ஆர்.எஸ்.எஸ் கும்பல்!

எமர்ஜென்சிக்கு முன்பே இந்திரா காந்தி வெளிப்படையாக விஷ்வ ஹிந்து பரிசத்தின் மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் மேல் போடப் பட்ட தடையே ஒரு அடையாளத்திற்காகத் தானேயொழிய இவர்கள் அன்றைக்கு சிறையிலிருந்த கம்யூனிஸ்டு புரட்சியாளர்களைப் போல எமர்ஜென்சி கொடுமைகள் எதையும் அனுபவித்ததில்லை. இருந்த போதும் கைதான மறு நொடியிலிருந்தே இந்திராவுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதத் தொடங்கிவிட்டார்கள். அதுவும் எப்படி?

சிறையிலிருந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் தேவரஸ் கடிதம் மேல் கடிதமாய் இந்திராவுக்கு எழுதித் தள்ளுகிறார். அவற்றில் இந்திராவை தைரியலட்சுமி, வீரலட்சுமி என்றெல்லாம் புகழ்ந்து விட்டு, இந்திராவின் சுதந்திர தின உரையைப் பாராட்டி விட்டு, தேர்தல் வழக்கின் மேல் முறையீட்டில் அவர் வென்றதற்கு வாழ்த்து சொல்லி விட்டு – தங்கள் மேலான தடையை விலக்குமாறும், தங்கள் இயக்கத்திற்கும் நெருக்கடி நிலை எதிர்ப்பியக்கத்திற்கும் தொடர்பிலை என்றும், தடையை நீக்கினால் அரசுக்கு விசுவாசமாக இயங்குவதாகவும் குறிப்பிடுகிறார்.

கருணாநிதியாவது எமர்ஜென்சிக் கொடுமைகளை அனுபவித்து முடித்த பின் தான் ‘நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக’ என்று சரண்டரானார். அடி வாங்கிய பின் தான் தி.மு.க அழுதது – இவர்களோ இந்திரா செல்லமாக கம்பை ஓங்கியதுமே தம் காலோடு மூத்திரம் பெய்து கண்ணீர் விட்டுக் கதறிய கோழைகள்.

எனினும் நூலாசிரியர் பா.ரா கூச்ச நாச்சமின்றி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு அவசர நிலையை எதிர்த்த வீரர்கள் என்ற பட்டத்தை அவர்களே  வெட்கப்படுமளவுக்கு மனம் குளிர வழங்குகிறார். இன்று தேவரஸ் உயிரோடு இருந்திருந்தால் பா.ராவிற்கு “சங்கம் காத்த சிங்கம்” என்று பட்டமே வழங்கியிருப்பார்.

அயோத்தி – ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஆலோசனை வழங்கும் பா.ரா

கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளாக இந்து வெறியர்கள் தொடர்ச்சியாகத் திட்டமிட்டு, சாமானிய மக்களிடையே மதவெறி நஞ்சைக் கலந்து மக்களிடையே கண்ணுக்குப் புலப்படாத ஒரு பெரும் தடைச் சுவரையே ஏற்படுத்தி, பல கலவரங்கள் நடத்தி பலநூறு முசுலீம் மக்களைக் கொன்று குவிப்பதற்கு காரணமான பாபர்மசூதி எனும் அயோத்தி விவகாரத்தை வரலாற்றறிஞர் பா. ரா வெறும் ஒன்றரை பக்கத்திலேயே முடித்துக் கொள்கிறார். இதை விரித்து எழுதியிருந்தால் அவரே விரும்பினாலும் ஆர்.எஸ்.எஸ்இன் கொலைபாதகத்தை மறைக்க முடியாது என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

அயோத்தி விவகாரத்தை மூலதனமாக்கி, நாட்டு மக்களை ஒரு ரத்தக் குளியலில் மூழ்கவைத்து ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு இந்து மதவெறி பாசிஸ்டுகள் தலையெடுத்த அந்த நிகழ்வுக்கு பல முக்கியத்துவங்கள் இருக்கின்றன. இந்த நாட்டின் அரசு, அரசியல், நீதி, நிர்வாக, ஊடக அமைப்புகள் அனைத்தும் இந்துமதவெறி பாசிசத்தின் தூண்களாக அம்பலப்பட்டதன் பின்னணி குறித்து அவருக்கு அக்கறை ஏதும் இல்லை. ஏனெனில் அவரும் கூட இந்த தூண்களில் ஒருவர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அதனால்தான் அயோத்தி விவகாரத்தை வேறு விதமாக சுமூகமாகத் தீர்த்திருக்க முடியும் என்கிறார் – அதற்கு உதாரணமாக ஆர்.எஸ்.எஸ் விவேகானந்தர் நினைவாலயம் நிறுவியதை ‘சாதுர்யமாகச்’ சாதித்துக் கொண்டதாக எடுத்துக் காட்டுகிறார்.

விவேகானந்த கேந்திரத்தின் வரலாறும், தமிழகத்தில் இந்துமதவெறியும்!

“விவேகானந்தருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதில் யாருக்குக் கருத்து வேறுபாடு இருக்க முடியும்?எனவே எந்தத் தடையுமின்றிப் பரபரவென்று ஆலோசனைகள் நடைபெறத் தொடங்கின.”

“சிக்கல், கன்னியாகுமரி கிறிஸ்தவர்கள் வடிவில் வந்தது. பாறையில் விவேகானந்தருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதை ஏற்க முடியாது. நூறு வருடங்களுக்கு முன்னால் புனித  சேவியர் இங்கு வந்த போது அவர் அமர்ந்து ஜபம் செய்த பாறை அது. கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமானது” – பக்கம் 123.

இதன்படி பா.ரா கூறுவது என்ன?

நினைவுச்சின்னம் அமைக்க ஏக்நாத் ரானடே எனும் ஆர்.எஸ்.எஸ்-இன் அகில இந்திய பொதுச் செயலாளரை அதன் தலைவர் கோல்வால்கர் அனுப்புகிறார். வந்தவர் கையெழுத்து இயக்கம் எடுத்தது, தி.மு.க தலைவர் அண்ணாதுரையை நினைவுச் சின்ன கமிட்டிக்குள் இழுத்தது, உச்சகட்டமாக ஜோதிபாசு எனும் கம்யூனிஸ்ட் தலைவரிடமே விவேகானந்தர் வங்கத்துகாரர் என்று நன்கொடை கேட்டது, இப்படியே மத்திய மாநில அரசுகளை நைச்சியமாகப் பேசி சம்மதிக்க வைத்து நாசூக்காக காரியத்தை சாதித்ததாக பா.ரா சொல்கிறார்.

ஆனால் உண்மை என்ன?

தமிழகத்தில் பெரியாரின் தாக்கத்தினால் வளரமுடியாமல் தேங்கியிருந்த ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு, பார்ப்பனரல்லாத இந்து மதப் பிரச்சாரகர் விவேகானந்தருக்குப் பொதுவில் இருந்த இரசிகர் பட்டாளம் நம்பிக்கையளித்தது. பார்ப்பனரல்லாதோரையும் உள்ளிழுக்கும் வகையில் வருண சாதி அமைப்புக்கு பங்கம் வராமல் சில சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்தவர் விவேகானந்தர். காங்கிரசு மட்டுமல்ல  போலி கம்யூனிஸ்டுகள் கூட விவேகானந்தரை ஏற்றுக் கொள்பவர்கள் தான்.

பொதுவாக ஆர்.எஸ்.எஸ் தனது வளர்ச்சிக்கு மக்களிடம் இயல்பாக இருக்கும் நம்பிக்கைகளையும் விழுமியங்களையும் கவர்ந்து கொண்டும், அவற்றுள் ஊடுருவிக் கைப்பற்றியும் அவற்றின் உள்ளடக்கத்தை தமக்கேற்றவாரு மறுசீரமைத்து மதவெறியூட்டுவதையும் தமது செயல் தந்திரங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது. சாமானியர்கள் வழிபடும் வினாயகரைக் கைப்பற்றியதும், கிராமக் கோயில் பூசாரிகள் சங்கம் எனும் பெயரில் சிறு தெய்வங்களை சமஸ்கிருதமயமாக்குவதும் இதற்கான உதாரணங்கள்.

இப்படித்தான் விவேகானந்தரை வைத்து தமிழகத்தில் ஊடுறுவுவதற்கு ஆர்.எஸ்.எஸ் முயன்றது. காலம் காலமாக குமரி மாவட்ட கரையோர மீனவர்கள் கடலாடி வந்து உணவருந்தி ஓய்வெடுக்கவும், தமது வலைகளைக் காய வைக்கவும், ஆண்டுக்கொரு முறை சிலுவை வைத்து ‘குரூஸ்’ எனும் வழிபாடு நடத்தப் பயன்படுத்தி வந்த பாறையை ஆர்.எஸ்.எஸ் இதற்காக குறிவைக்கிறது.

நாட்டில் பெயர் பெற்ற பண்டாரம் பரதேசிகள் மூத்திரம் பெய்த, வெளிக்கு போன இடங்களையெல்லாம் கண்டுபிடித்து நினைவாலயம் அமைக்க வேண்டுமென்றால் இந்த நாட்டில் மக்கள் வசிக்கவே இடம் காணாது. விவேகானந்தரோ நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பல இடங்களில் தங்கி தியானம் செய்திருக்கிறார் – சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறார். இவர்கள் குறிப்பாக அந்தப் பாறையைத் தேர்ந்தெடுக்கக் காரணம் அதைப் பயன்படுத்தி வந்த மீனவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்ததும் – அம்மாவட்ட மக்கள் தொகையில் அவர்கள் கணிசமான அளவில் இருந்ததும் தான். மேலும் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை, புறக்கணிப்பு காரணமாக மதம் மாறியவர்கள் அந்த மக்கள். அதே போல நாடார்களில் கணிசாமானோரும் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர். மிச்சமிருக்கும் இந்து நாடார்களையும் ஏனைய சாதி இந்துக்களையும் திரட்டுவதற்கு இந்த விவேகானந்தர் நினைவு சின்னம் வழி அமைத்துக்கொடுக்கிறது.

மேலும் இந்தியா முழுவதிலும் இருந்துவரும் மக்களுக்கு இந்த நினைவுச் சின்னம் ஒரு இந்துத்வ சுற்றுலாவாக இருக்கும் நன்மையையும் ஆர்.எஸ்.எஸ் கணித்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்த்ததைப் போலவே நினைவாலயம் அமைக்கப்பட்டால் தமது வாழ்வுரிமை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த மீனவர்கள், அந்நடவடிக்கைகளை தம்மால் இயன்ற அளவில் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஏழை மீனவர்களின் இந்த பிரச்சினையை இந்துக்களுக்கு வந்த சோதனையாக பிரச்சாரம் செய்கிறது ஆர்.எஸ்.எஸ்.

மீனவர்களுக்கு அந்தப் பாறை மேல் இருந்த பாரம்பரிய உரிமையை மூடி மறைத்து, அவர்களிடம் இருந்து அதைத் தட்டிப் பறித்த ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு மத்தியில் ஆட்சியிலிருந்த சாஸ்திரியும், மாநிலத்தில் ஆட்சியிலிருந்த பக்தவத்சலமும் பக்கபலமாய் இருந்துள்ளனர். காஞ்சி சங்கராச்சாரி மறைமுகமாகத் துணை நின்றார். அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் தனக்கு பலமில்லாத காரணத்தால், கேரளாவில் இருந்து இரகசியப் படகுகள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் குண்டர்களையும், தமிழக போலீசையும் வைத்து மீனவர்களை அடித்து விரட்டி விட்டு தான் இந்த ஆக்கிரமிப்பை வெற்றிகரமாகச் செய்தனர்.

இறுதியில் 1970ஆம் ஆண்டு விவேகானந்தர் நினைவாலயம் திறக்கப்படுகிறது. கூடவே கன்யாகுமாரியில் ஆர்.எஸ்.எஸ்இன் நச்சுப்பணிக்கான தளவேலையும் ஆரம்பிக்கப்படுகிறது.

இயல்பாகவே ஆளும் அதிகார வர்க்கத்தினிடையே நிலவும் இந்துத்துவ ஆதரவு நிலைப்பாட்டை சாதகமாக்கிக் கொண்டு அதிகாரத்தையும், குண்டர்படையையும் துணைக்கு வைத்துக் கொண்டு எதிர்ப்புகள் நசுக்கப்பட்டதாலேயே விவேகானந்தர் பாறை நினைவாலயம் சாத்தியமானது. இந்த ‘அமைதி’ வழியைத் தான் பா.ரா அயோத்தி விஷயத்திற்கும் பரிந்துரைக்கிறார்.

அதாவது, இவர்கள் ஏன் அவசரப்பட்டு கலவரம் செய்து, முசுலீம்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்து, கைகளை இரத்தச் சகதியில் முக்கியெடுத்து, மசூதியை இடித்து இத்தனை கெட்ட பெயரை வாங்க வேண்டும்? கொஞ்சம் பொறுமையாய் இருந்திருந்தால், நீதி மன்றத்தின் மூலமே ‘முறையான’ தீர்ப்பைப் பெற்று, இராணுவத்தைக் கொண்டே மசூதியை இடித்து கோயிலைக் கட்டியிருக்கலாமே என்பது தான் பா.ராவின் அங்கலாய்ப்பு. இப்போது அலகாபாத் உயர்நீதி மன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பின் பின்னணியில் பா.ராவின் அங்கலாய்ப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் அயோத்தயில் இந்து கோவிலை இடித்துத்தான பாபர் மசூதியைக் கட்டினார் என்று ஆர்.எஸ்.எஸ் கூறும் அபாண்டத்தை பா.ராவும் வழிமொழிகிறார். கருத்து வேறுபாடு எதில் என்றால் இந்த விவகாரத்தை சாணக்கிய குள்ளநரித் தந்திரத்தின் மூலம் சிரமமின்றி சாதித்திருக்கலாம் என்பதே.

குஜராத் இனப்படுகொலையை ஆர்.எஸ்.எஸ் செய்யவில்லையாம்!

இதையே தான் குஜராத் கலவரங்கள் பற்றிய விவரணைகளின் பின்னும் சொல்கிறார்.

“அடிப்படை இது தான். குஜராத்தின் இன்றைய வளர்ச்சி, சுதந்திரம் அடைந்த நாளாக அந்த மாநிலம் காணாதது. மிகவும் பிரம்மாண்டமானது. மக்களுக்கு வளர்ச்சி தான் முக்கியம். வசதிகளே முக்கியம். குஜராத் என்றல்ல. உலகெங்கும்  இது தான். இது மட்டும் தான். ” பக்கம் – 138

ஆயிரக்கணக்கான முசுலீம்களை இனப்படுகொலை செய்து, பெண்களைக் கற்பழித்து, முசுலீம் பெண்களின் கருப்பையைக் கிழித்து கண்களைக் கூடத் திறக்காத பிஞ்சுகளை வீசியெறிந்து வாள் முனையில் சொருகிக் கொன்று ரத்த வெறியாட்டம் ஆடிய பின்னும் மோடி வென்றதற்கு மிக முக்கிய காரணம் அவர் குஜராத்திற்குக் காட்டிய வளர்ச்சிப் பாதை தான் என்றும் – வளர்ச்சியொன்றே முக்கியமென்றும் சொல்கிறார் பா.ரா.

யூதர்களை கொன்று பின்னர் ஜெர்மனியர்களின் வளர்ச்சிக்கு வித்திட்டு அவர்களது செல்வாக்கை அணிதிரட்டிய ஹிட்லரின் வெற்றியும் அப்படித்தான். நவீன இந்தியா கண்ட மிகக் கொடூரமான முசுலீம் மக்கள்  இனப்படுகொலைதான் 2002 கலவரங்கள். அது முடிந்து எட்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை. அதற்குள் அதெல்லாம் ஒரு பொருட்டல்ல, இனி வளர்ச்சிதான் மோடியின் தாரகமந்திரம் என்று பாவமன்னிப்பு வழங்குகிறார். இதன்படி இந்துமதவெறியர்கள் கலவரத்தின் மூலம் சிறுபான்மை மக்களைக் கொன்றுவிட்ட கையோடு ஏதாவது கார் தொழிற்சாலை, வளர்ச்சி என்று செட்டிலாகிவிட்டால் அது பிரச்சினையில்லை.

அடுத்து குஜராத் கலவரத்தை ஆர்.எஸ்.எஸ் திட்டமிடவில்லையாம். அதற்கு ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய மத உணர்வு கொண்டவர்கள் தான் காரணமாம். அதாவது, கொலைகளையும் கற்பழிப்புகளையும் குண்டு வீசியதும் ஆர்.எஸ்.எஸ்ஸால் மத உணர்வு ஊட்டப்பட்டவர்கள் தான் – அதற்கு ஆர்.எஸ்.எஸ் காரணமில்லை என்று பச்சையாய் புளுகுகிறார். இதே ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தான் தெகல்கா வீடியோ முன் அப்பட்டமாக நின்று எப்படித் திட்டமிட்டோம், எப்படிக் கொன்றோம் என்று குற்றவுணர்ச்சியே இல்லாமல் விவரித்தார்கள். ஆனாலும் ஆர்.எஸ்.எஸ் என்ற அர்ப்பணிப்பு உணர்வு மிக்க தேசபக்தர்களை கொலைகாரர்களாக பார்ப்பதற்கு பா.ரா தயாரில்லை. அதனால்தான் அந்த கொலைகாரர்களது சித்தாந்தத்தை நெஞ்சிலேந்தி விடம் கக்கும் அரவிந்த நீலகண்டன் போன்ற பாம்புகளெல்லாம் பா.ராகவனது தமிழ் பேப்பரில் படம் எடுத்து ஆடுகின்றன. நல்ல பாம்பு படமெடுப்பதை இரசிக்கும் பா.ரா போன்ற கண்ணியவான்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

பனியாக்களின் பின்புலத்தோடு குஜராத்தில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் பல பத்தாண்டுகளாக அங்கே வேலை செய்திருக்கிறது. கலவரத்திற்கு பல ஆண்டுகள் முன்பாகவே குஜராத்தைப் பற்றிய ஒரு முழுமையான சர்வேயை வி.எச்.பி எடுத்துள்ளது. அதில் முசுலீம்கள் மக்கள் தொகை, முசுலீம்கள் செய்து வந்த வியாபாரம் போன்ற விவரங்களைத் திரட்டி முன் தயாரிப்பு செய்திருக்கிறார்கள். வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் மூலம் பழங்குடியினரிடையே ஊடுருவி அவர்களிடையே மதவெறி நஞ்சூட்டி முசுலீம் சமுதாயத்திற்கு எதிராய் அணிதிரட்டியிருக்கிறார்கள்.

இது ராகவன் சொல்வது போல ஏதோ “உணர்வால் உந்தப்பட்டு” சட்டென்று நிகழ்ந்த ஒன்றல்ல; பல்லாண்டுகளாகத் திட்டமிட்டு படிப்படியாக ஊடுருவி ஒரு சமூகத்தின் பெரும்பான்மை மக்களையே பாசிசமயமாக்கியிருக்கிறார்கள். இத்தனை விமரிசையாக அம்பலப்பட்ட பின்னும் மோடியின் தேர்தல் வெற்றி சாத்தியமாகி இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் இது தான். நாஜிக் கட்சியினர் எப்படி ஜெர்மானியர்களின் மனங்களை பாசிசமயமாக்கி யூதர்களுக்கு எதிரான தமது நடவடிக்கைகளை அமைதியாக வேடிக்கை  பார்த்துக் கொண்டிருக்கும் வெறும் பார்வையாளர்களாக ஆக்கினார்களோ அதே வழிமுறையைத் தான் ஆர்.எஸ்.எஸ் பரிவாரம் குஜராத்தில் பின்பற்றியது – தேசமெங்கும் அதையே விரித்துச் செல்லும் திட்டத்தையும் வைத்துள்ளது. அதனால்தான் குஜராத் இந்துத்வத்தின் சோதனைச் சாலையாக இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் எனும் பாசிச இயக்கத்தை பாராட்டும் பா.ரா!

1948ஆம் ஆண்டு காந்தி கொலை செய்யப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்படுகிறது. மராத்திய சித்பவன பார்ப்பனனும், இந்து மகா சபையின் தீவிரவாதியுமான நாதுராம் கோட்சேதான் காந்தியைக் கொல்கிறார். சாவர்க்கரின் தலைமையிலான ஒரு தீவிர இந்துத்தவ கும்பலே இதை திட்டமிட்டு செய்கிறது. கோட்சே ஒரு ஸ்வயம் சேவகரும் கூட. ஆனால் அவர் ஒரு முன்னாள் ஆர்.எஸ்.எஸ்காரர்தான், காந்தி கொலையின் போது அவர் அந்த இயக்கத்தில் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதாம். இதை டெக்னிக்கலாக சொல்லி ஆர்.எஸ்.எஸ் பங்கை விடுவிக்கிறார், பா.ரா.

சரி, ஒரு ஸ்வயம் சேவக் ஆர்.எஸ்.எஸ் இல் உறுப்பினராக இருக்கிறார் என்பதற்கு ஏதாவது சாட்சியங்கள் இருக்கிறதா? இல்லை. உலகத்தில் உள்ள எல்லா கட்சிகளும், அமைப்புகளும் அவ்வளவு ஏன் நமது சிலம்பரசனது ரசிகர் மன்றத்தில் கூட உறுப்பினர்கள் என்றால் ஒரு அடையாள அட்டை கொடுப்பார்கள். அந்தந்த அமைப்புகளின் ஆவணங்களில் உறுப்பினர்களது பெயர்கள் இடம்பெற்றிருக்கும்.

ஆனால் இப்படி ஒரு ஜனநாயக நடைமுறை ஆர்.எஸ்.எஸ் இல் அறவே கிடையாது. யாரெல்லாம் அதன் ஷாகாக்களுக்கு வருகை தருகிறார்களோ அவர்களெல்லாம் ஸ்வயம் சேவகர்கள் என்று கூறுவார்கள். ஒரு வேளை அவர்கள் ஷாகாக்களுக்கு வருகை தருவதை நிறுத்தி விட்டால் அவர்களை முன்னாள் ஸ்வயம் சேவகர்கள் என்று கூறமாட்டார்கள். கேட்டால் வாழ்க்கையில் ஓரிரு நாட்கள் வந்தால் கூட அவர்கள் என்றுமே ஸ்வயம் சேகவர்கள்தான், இதில் முன்னாள், பின்னாள் என்று பாகுபாடெல்லாம் கிடையாது என்பார்கள். ஆர்.எஸ்.எஸ் இன் இந்த லாஜிக்படி கோட்சே ஒரு ஸ்வயம் சேவக்தான்.

ஆர்.எஸ்.எஸ்இல் இப்படி உறுப்பினர் பதிவேடுகள், இல்லாமல் இருப்பதற்கு காரணம் அது ஜனநாயகமற்ற பாசிச அமைப்பு என்பதுதான். ஆர்.எஸ்.எஸ்இல் ஒரு உறுப்பினருக்கு இன்னென்ன உரிமைகள், கடமைகள், அவருக்கு அதன் தலைவர்களை தெரிவு செய்யும் வாக்குரிமை என்று எதுவும் கிடையாது. ஆர்.எஸ்.எஸ்இன் பல்வேறு கீழ்மட்டத் தலைவர்களெல்லாம் மையத்திலிருந்து நியமனம் செய்யப்படுபவர்கள்தான். சான்றாக ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவார் தனக்கு பிறகு கோல்வால்கரை தெரிவு செய்கிறார். கோல்வால்கர் தனக்கு பிறகு தேவரசை தலைவராக தெரிவு செய்து உயில் எழுதிவிட்டு சாகிறார். அதே போல தேவரஸ்ஸுக்கு பிறகு ராஜேந்தர் சிங், அவருக்கு பிறகு சுதர்சன், சுதர்சனுக்கு பிறகு மோகன் பகவத் என்று சங்கராச்சாரிகளின் சங்கரமடம் போல ஆர்.எஸ்.எஸ்இன் பாரம்பரியம் தொடர்கிறது.
இதுதான் இந்த பாசிச அமைப்பின் இயங்கு முறை. ஆனால்

” ஜனநாயகத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் விவாத, விமரிசன கேலிக்கூத்துகள் அறவே தவிர்க்கப்பட்டன. இவர் தலைவர், இது முடிவு. தீர்ந்தது விசயம் ” பக்.57

என்று இதற்கு ஒளிவட்டம் போடுகிறார் பா.ரா. ஆர்.எஸ்.எஸ் இல் மருந்துக்குக் கூட ஜனநாயகம் இல்லை என்பதை பா.ரா விவரிக்கவில்லை என்பதும் அதையே போற்றுகிறார் என்றால் அது அவருடைய கருத்து மட்டுமல்ல. அவருடைய நூலை வாங்கி படிக்கும் ‘இந்துத்வ’ நடுத்தர வர்க்கத்திடம் கேட்டால் கூட ” இந்தியாவில் ஒரு சர்வாதிகார ஆட்சி வந்தால்தான் நாடு உருப்படும்” என்று சொல்வார்கள்.
காந்தி கொலைக்குப் பிறகு தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அடுத்த ஆண்டே மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இந்த சலுகை அந்த இயக்கத்திற்கு எப்படி கிடைக்கிறது?

அமெரிக்க கைக்கூலியாய் கம்யூனிசத்தை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ்!

அப்போது தமது இயக்கத்தின் மேலான தடையை விலக்கக் கோரி ஆர்.எஸ்.எஸ்இன் தலைவர் கோல்வால்கர், நேருவுக்கு எழுதிய கடிதங்களில் உலகெங்கும் கம்யூனிச அபாயம் பரவுவதாகவும் இந்தியாவிலும் அது வேகமாகப் பரவிவருவதாகவும் இதை எதிர்த்த போராட்டத்தில் அரசுக்கு விசுவாசமான அடியாள் படையாக ஆர்.எஸ்.எஸ் இருக்கும் என்கிற உறுதி மொழியைக் கொடுத்துள்ளார். அன்றைய சூழ்நிலையில் உலகளவில் கம்யூனிஸ்டுகளைக் கண்டு அஞ்சியது அமெரிக்க ஏகாதிபத்தியமும் இந்தியளவில் நிலபிரபுக்களும், தரகு முதலாளிகளும் தான். இதிலிருந்தே இவர்களின் விசுவாசம் யாரிடம் இருக்கிறது என்பது தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

அந்த காலகட்டத்தில் தெலுங்கானாவில் நிலவுடைமை பண்ணையார்களை தூக்கி எறிந்துவிட்டு நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலத்தை சொந்தமாக்கி ஆயுதந் தாங்கிய போராட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் நடத்தி வந்தார்கள். இந்த செயல் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதென்றால் அதற்கு பரிகாரம் செய்வதற்கு ஆர்.எஸ்.எஸ் துடித்திருக்கிறது. மேலும் உலக அளவில் கிழக்கு ஐரோப்பாவிலும், கொரியா, வியட்நாமிலும் கம்யூனிஸ்ட்டுகள் வென்று வரும் நேரத்தில் அமெரிக்கா அலறித் துடிக்கிறது. அந்த அமெரிக்காவின் கையை பலப்படுத்தி இந்தியாவில் கம்யூனிச அபாயத்தை வீழ்த்துவதற்கு தங்கள் மீதான தடையை விலக்க வேண்டுமென்று கோல்வால்கர் கூறுகிறார் என்றால் இதன் பொருள் என்ன?

ஆம். ஆர்.எஸ்.எஸ் என்பது இந்தியாவின் எதிர்ப்புரட்சி கும்பல் என்பதே. அதனால்தான் அந்த இயக்கத்தின் மீதான தடை நேரு அரசாங்கத்தால் நீக்கப்படுகிறது. இந்த வரலாற்று உண்மை பா.ரா என்ற ‘நூல்’ ஆசிரியரின் அக்கறைக்குரியதாக இல்லை. ஜமீன்தார்கள், மிட்டா மிராசுதாரர்கள், பண்ணையார்களது அதிகாரம், நில உடமை பறி போவதை பார்த்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் பதறுகிறது என்றால் இந்த கட்சியின் யோக்கியதை குறித்து வாசகர் முடிவு செய்து கொள்ளலாம்.

மக்களுக்குகாக போராடாத ஆர்.எஸ்.எஸ்இன் பரிவார அமைப்புகள்!

இதன் பிறகு ஆர்.எஸ்.எஸ்இன் பல்வேறு பரிவார இயக்கங்களைப் பற்றி பிரம்மிப்பூட்டும் வகையில் விவரிக்கிறார் பா.ரா. இவை ஆரம்பிப்பதற்கு என்ன காரணம்? காந்தி கொலையின் போது அந்த இயக்கத்தின் சார்பில் பொது அரங்கில் பேசுவதற்கு யாருமில்லை என்று கோல்வால்கர் கவலைப்பட்டு இத்தகைய கிளைகளை ஆரம்பிக்கிறாராம். பா.ரா இதில் பார்க்கத் தவறிய உண்மை ஒன்று இருக்கிறது. என்னதான் தடை நீக்கபட்டாலும், பட்டேல் போன்ற தீவிர இந்துத்வவாதிகள் காங்கிரசில் இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ்இன் கொள்கையை நேரடியாக பேசுவதற்கும், செயல்படுத்துவதற்குமான ஒரு அரசியல் கட்சி இல்லை என்பதும், அரசியல் அதிகாரத்தில் நாமே நேரடியாக குதிக்க வேண்டும் என்ற அவாவே ஆர்.எஸ்.எஸ் பல்வேறு பரிவார இயக்கங்களை ஆரம்பிப்பதற்கு காரணமாகும். அந்த வகையில் ஜனசங்கம் என்ற முன்னாள் பாரதிய ஜனதா கட்சி ஆரம்பிக்கப்படுகிறது.

இன்று ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பிக்கு ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்களாம். ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பி.எம்.எஸ் எனப்படும் பாரதிய தொழிற்சங்கம் இருக்கிறதாம். இன்னும் தேசமெங்கும் செல்வாக்கான மடங்கள், மத நிறுவனங்கள் போன்றவற்றில் ஊடுருவி வேலை செய்யும் பலமான வி.எச்.பி, வடநாட்டில் அநேகமாக எல்லா மலைவாசி கிராமத்திலும் கிளைகள் கொண்ட வனவாசி கல்யாண் ஆஷ்ரம் என்று அவர்களது பலமான வலைப்பின்னலை ஒரு வியப்புடன் வாசகனுக்கு விவரிக்கிறார் பா.ரா.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்தியாவில் கோடிக்கணக்கானோர் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளில் இருப்பதாகத் தோன்றும். இது தமிழ்நாட்டின் ஆதிக்க சாதி சங்கங்கள் அடித்துவிடும் பிரம்மாண்டமான உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஒப்பானதாகும். மேலும் பொட்டு வைத்தவெனெல்லாம் ஆர்.எஸ்.எஸ் காரன் என்ற பொதுப்புத்திக்கு முரண்படாத வாதமும் ஆகும்.

இருக்கட்டும். இப்படி ஒவ்வொரு அரங்கத்திற்கும் தனித்தனியான அமைப்புகளைப் பெற்றிருக்கும் ஆர்.எஸ்.எஸ், அந்தப் பிரிவு மக்களின் எத்தனை கோரிக்கைகளுக்குப் போராடியுள்ளது என்கிற செய்தியை மட்டும் பா.ரா சொல்லவில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸின் அபிமானத்திற்குரிய வாசர்களான மயிலாப்பூர் பார்த்தசாரதிகளுக்கு வேண்டுமானால் அது தேவைப்படாத தகவலாய் இருக்கலாம்; ஆனால் வினவு வாசகர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

தி.மு.க, அ.தி.மு.க போன்ற ஆளும் வர்க்க கட்சிகளிலும் மாணவர் பிரிவு, தொழிலாளர் பிரிவு, விவசாயிகள் பிரிவு என்று வைத்திருக்கிறார்கள். இவர்களாவது அந்தந்த வர்க்கப் பிரிவினரின் கோரிக்கைக்காக ஒரு சந்தர்ப்பவாதமாகவாவது போராடியிருக்கிறார்கள். இன்றைக்கு கல்வியே வியாபாரமாகப் போய்  விட்ட சூழலில், படித்த எத்தனையோ இளைஞர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்காமல் அவதியுறும் நிலையில், எத்தனையோ அரசுக் கல்லூரிகள் அரசால் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், ஏ.பி.வி.பி ஆரம்பிக்கப் பட்ட இத்தனை வருடங்களில் எத்தனை முறை போராடியிருக்கிறார்கள்?

மாணவர் சமுதாயத்திற்காக ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி நடத்திய இயக்கங்கள் எத்தனை? சொல்லிக் கொள்ளுமளவு ஒன்றுமில்லை என்பதே உண்மை. அப்படியிருக்க ஏ.பி.வி.பி ஏன் ஆரம்பிக்கப் பட்டது? யாருடைய நலனுக்காக இயங்குகிறது?

இதற்கு நாம் பதில் சொல்ல வேண்டாம். பா.ராவே பதில் சொல்கிறார் – மாணவர்களை மொழிப் போராட்டம், சாதி எதிர்ப்புப் போராட்டம் போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் தடுத்து அவர்களை அரசியல் விலக்கம் செய்வது தான் நோக்கமாம். ஏ.பி.வி.பியில் இணையும் மாணவனை ஷாகாக்களுக்கு வரவழைத்து இந்துத்வத்தை ‘உணர்வாகவும் உணவாகவும்’ ஊட்டுவார்களாம் (பக்கம் 44). மொழி உரிமைப் போராட்டம் என்று பா.ரா குறிப்பிடுவது தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைத் தான். அதாவது, தமது பார்ப்பன சனாதன தருமத்தின் பரவலுக்கு மாணவர் பிரிவினரிடம் இருந்து எதிர்ப்புகள் வந்து விடாமல் தடுத்து அவர்களை மடை மாற்றி மதவெறி ஊட்டி பாசிஸ்ட்டுகளாக வார்த்தெடுப்பது தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம்.

அதே போல் உலகிலேயே முதலாளிகளைக் கேள்வியே கேட்காமல் உழைக்க வேண்டும் என்று சொல்லும் ஒரு கருங்காலி தொழிற்சங்கம் தான் பி.எம்.எஸ். அந்த வகையில் முதலாளிகள் இந்த சங்கத்தை ஸ்பான்சர் செய்து வளர்த்தார்கள். முதலாளிகளும், தொழிலாளிகளும் முரண்படாமல் ஒருங்கிணைந்து பாரதத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்பதுதான் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் கொள்கை முழக்கம். மே தினத்திற்கு பதில் விசவகர்மாவின் ஜன்ம நட்சத்திர தினத்தைத்தான் தொழிலளிகளும், முதலாளிகளும் கொண்டாட வேண்டுமென்பது இந்த சங்கத்தின் சுதேசிக் கொள்கை.

பழங்குடிகள் போராட்டத்தை ஒடுக்கும் ஆர்.எஸ்.எஸ்!

வடநாட்டில் வனவாசிகள் வாழும் கிராமம் தோறும் கிளைகள் கொண்டிருப்பதாக பா.ராவால் வியந்தோதப்படும் வனவாசி கல்யாண் ஆஷ்ரம் ஒரிசாவிலும் சட்டீஸ்கரிலும், ஆந்திரத்திலும், பீகாரிலும், மேற்குவங்கத்திலும் வனவாசி மக்கள், பன்னாட்டு நிறவனங்களை எதிர்த்து போராடிக் கொண்டிருந்த போது எங்கே போனது? இதன் இலட்சக்கணக்கான உறுப்பினர்கள் எங்கே மாயமாக மறைந்து போனார்களா?

அயோத்தி புனிதம். மதுரா புனிதம். காசி புனிதம். எனில்  நியாம்கிரி புனிதமில்லையா? கோண்ட் இன மக்களின் வாழ்வாதாரமாய் இருக்கும் அம்மலையை பன்னெடுங்காலமாய் அவர்கள் புனிதத்தாயாக வணங்கி வருகிறார்களே அதை அவர்களிடமிருந்து பறித்து, அம்மண்ணை விட்டும், கோண்ட் தாயை விட்டும் விரட்டியடித்து விட்டு பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரை வார்க்க இந்திய இராணுவமே களத்தில் இறங்கியிருக்கும் போது, குண்டாந்தடிப் பயிற்சி பெற்ற ஆர்.எஸ்.எஸ் என்ன செய்திருக்க வேண்டும்? அவர்களின் வழிபாட்டு உரிமையை காப்பாற்றப் போகிறோம் என்று புறப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா?

ஆனால் செய்ததென்ன? பாரதிய ஜனதா மூலமும் வனவாசி கல்யாண் ஆஷ்ரம் மூலமும் திரட்டப்பட்ட சில கைக்கூலி பழங்குடியினரை வைத்து சல்வாஜூடும் என்கிற குண்டர் படையை ஆரம்பித்து, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து லட்சக்கணக்கான பழங்குடியினர் மேல் ஏவி விட்டுள்ளனர். போஸ்கோ, மிட்டல் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் அடியாள் படையாக அணிதிரட்டி நிறுத்தியிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்இன் சங்க பரிவார அமைப்புகளின் உறுப்பினர் எண்ணிக்கையை கோடிகளில் காட்டும் கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியரும், ‘மாபெரும் அறிஞரு’மான பா.ராவுக்கு இந்த உண்மைகள் மறந்தும் கூட தெரியாமல் போனது என்?

பெண்கள் சேரமுடியாத ஆர்.எஸ்.எஸ்ஸும் அல்கைதாவும்!

பெண்களுக்காகத் ‘தனியே’ ஒரு இயக்கம் ஆரம்பித்தது இவர்களுடன் பெண்கள் நிறைய சேர ஒரு காரணம் என்று பா.ரா ஆச்சரியமாய்க் குறிப்பிடுகிறார். ஆனால், இதில் அவர் குறிப்பிடாமல் மறைத்த இன்னொரு விஷயமும் இருக்கிறது.  தி.மு.கவாகட்டும், அ.தி.மு.கவாகட்டும் இன்னும் உலகில் எந்தவொரு அரசியல் சமூக இயக்கங்களாகட்டும் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால், உலகிலேயே பெண்களை இயக்கத்தில் சேர்க்காமல் ‘தனியே’ தள்ளி வைத்திருக்கும் இயக்கங்கள் மூன்று தான் – ஒன்று கூ -க்ளக்ஸ் – க்ளான், இரண்டு அல்காயிதா, மூன்று ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ்இன் விதிமுறைப்படி அங்கு பெண்களுக்கு இடமில்லை. அதனால்தான் பெண்களுக்கென்று தனியே ராஷ்ட்ரிய சேவிகா சமிதி என்று ஒன்றை ஆரம்பித்தார்கள். சங்கபரிவார அமைப்புகளின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இல் ஒரு பெண் உறுப்பினராக சேரக்கூடாது என்று இன்றும் அதாவது இருப்பத்தியோராவது நூற்றாண்டிலும் ஒரு கூட்டம் இருக்கிறு என்ற பாசிச உண்மையை அதன் பக்தரான பா.ரா ஏறெடுத்தும் பார்க்கவில்லை. என்ன இருந்தாலும் அவரும் அத்தகைய விழுமியங்களை, பச்சையான ஆணாதிக்கத்தை ஏற்றுக் கொண்ட ஒரு சான்றோர்தானே?

ஆதாரம் வேண்டுவோர் பா.ராவை அணுகி அதுகுறித்து கல்கி பத்திரிகையில் செத்துப் போன சீனியர் சங்கராச்சாரி என்ன சொல்லியிருக்கிறார், உயிரோடு இருக்கும் ஜெயேந்திரர் என்ன சொல்லியிருக்கிறார் என்று கேட்டால் தப்பாமல் சொல்வார். ஏனெனில் அந்த மேற்கோள்களை பக்தி சிரத்தையோடு பிழை திருத்தம் பார்த்த பக்தர் அவர்தான்.

ஆர்.எஸ்.எஸ்இன் ஒழுக்கமும், தேசபக்தியும் உண்மையல்ல!

பா.ரா தனது நூலின் நெடுக ஆங்காங்கே ஆர்.எஸ்.எஸ்ஸைச் செல்லமாகக் கடிந்து கொள்ளவும் செய்கிறார். ஆனால், அதையெல்லாம் மீறி எந்த விமரிசனத்திற்கும் அப்பாற்பட்ட உண்மையாக அவர் கூறுவது, போற்றுவது, வாசகர்களிடம் உருவாக்க நினைப்பது என்ன? ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகள் ஒழுக்கமானவர்கள், நேர்மையானவர்கள், சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட தேசபக்தர்கள், முக்கியமாக திருமணத்தை தியாகம் செய்த பிரம்மச்சாரிகள் என்றும் புகழ்கிறார். இதை வாசகர்கள் எந்த சந்தேகமின்றியும் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று பல இடங்களில் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்.

நாம் ஒரு வாதத்திற்காக பிரச்சாரக் கோவிந்தாச்சார்யா – உமாபாரதி காதல் கதைகளும், பிரச்சாரக் சஞ்சை ஜோஷியின் காமக் களியாட்டங்கள் சி.டியாக வலம் வந்ததையும், வாஜ்பாயி, இல.கணேசன் போன்ற அக்மார்க் பிரம்மச்சாரிகளின் யோக்கியதை குறித்து குமுதமே கிசுகிசு எழுதி அம்பலமாகி ஊரே நாறி சிரிப்பாய்ச் சிரித்ததை ஒதுக்கி வைத்து விட்டு பா.ரா அளிக்கும் ஒழுக்கவாத சான்றிதழைப் பார்க்கலாம்.

ஒழுக்கம் என்பது என்ன? அதன் அளவு கோள் என்ன?

ஒரு சின்ன உதாரணத்தைப் பார்க்கலாம். ஒருவன் ரொம்ப ஒழுக்கமானவன். புகைப் பழக்கம் இல்லை. மது அருந்தும் பழக்கம் இல்லை. பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவன். நெற்றியில் பட்டை – கழுத்தில் கொட்டை; பெரிய பக்திமான். முக்கியமாக அவன் ஒரு பிரம்மச்சாரி. ஆனால், அவன் தொழிலில் மட்டும்  விபச்சாரத் தரகன். இவனின் ஒழுக்கம் பற்றி இப்போது நீங்கள் கொள்ளும் மதிப்பீடு என்ன?

ஆக, ஒழுக்கம் என்பது ஒரு தனிமனிதனின் பழக்க வழக்கங்களிலும் தனிப்பட்ட பண்புகளிலும் மட்டும் சுருங்கிக் கொள்வதல்ல. அது அம்மனிதன்  சமூக உறவில் வெளிப்படுத்தும் செயல்பாடுகளைக் கொண்டும் தான் உருவெடுக்கிறது. சமூக உறவுகளில் ஒழுக்கமில்லாத ஒருவன் தனிப்பட்ட வாழ்வில் எத்தகைய ஒழுக்கவானாக இருந்தாலும் அவன் ஒரு அயோக்கியனே. இல்லையென்றால் எந்த கெட்டபழக்கமும் இல்லாமல், கோவில் கொடைகளுக்கு வாரி வழங்கும் பல்வேறு ரவுடிகளையும் நாம் பிரச்சாரக்குகள் போன்று போற்ற வேண்டும். இந்திய இராணுவத்தின் இரகசியங்களை விற்று கைதான தீவிர ஆன்மீக சிவபக்தரான கூமர் நாராயணனையும் நாம் வணங்க வேண்டும்.

வாஜ்பாயி தலைமையில் பா.ஜ.கவின் பாரத மாதா விற்பனை!

பா.ரா தனது நூலின் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ் தேசபக்தியை கேள்விக்கப்பாற்பட்ட இடத்தில் வைத்து போற்றுகிறார். வேறு பெரிய விளக்கங்களை இதற்கு நாம் தேட வேண்டிய அவசியம் எதையும் வைக்காமல் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் ஒருவர் போராட்டம் ஒன்றின் போது சந்தேகத்தின் பேரில் பிடித்துச் செல்லப் பட்ட போது நீதி மன்றத்தில் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலமே ஆர்.எஸ்.எஸ் கொண்டிருந்த ‘தேசபக்தியை’ தெளிவாக விளக்குகிறது.

“He had given a confessional statement in the court which helped in his release from the jail for his being just the onlooker of the assembly which went on to damage the government property. At that time he was a dedicated and active member of RSS. In his confession he wriggles out of active participation. ‘ I along with my brother followed the crowd, I did not cause any damage. I did not render any assistance in demolishing the government buildings’ ” (<http://www.milligazette.com/Archives/15-12-2000/Art6.htm>)

மேலே உள்ள ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொடுத்தது மட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் காட்டியும் கொடுத்த அந்த தேசபக்தி நிறைந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கின் பெயர் அடல் பிகாரி வாஜ்பாய். தேசவிடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த அந்த தேர்ந்த முன் அனுபவம் தான் பிற்காலத்தில் பன்னாட்டு முதலாளிகளுக்கு தேசத்தையே காட்டிக் கொடுக்க அவருக்குக் கை கொடுத்தது. ஆர்.எஸ்.எஸ் தனது சுதேசி ஜாக்ரன் மன்ச் எனும் ஒரு காமெடி பீஸு இயக்கத்தை கொண்டு மக்களிடம் சுதேசிப் பொருள்களின் பட்டியலை விநியோகித்துக் கொண்டிருந்த போது இவரோ சுதேசி நிறுவனங்களை விதேசிகளிடம் ‘தேசபக்தியோடு’ விலை பேசிக் கொண்டிருந்தார்.

ஒழுக்கமான, நேர்மையான, பிரம்மச்சாரியான இன்றைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் என்ன செய்கிறார்? அப்பட்டமாய் அம்பலமாகி ஊரே காறித்துப்பிய பொம்பளைப் பொறுக்கி மற்றும் கொலைகாரனான காஞ்சி சங்கராச்சாரியின் காலைக் கழுவிக் குடிக்கிறார். நித்தியானந்தா அம்பலமாகி நின்ற போது ஒரு அடையாளமாகக் கூட எந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கும் கண்டிக்க வில்லை. இன்னொரு ஒழுக்கமான பிரம்மச்சாரி பிரச்சாரக்கான வாஜ்பாயி, நம்மிடம் பாரதமாதா படத்தைக் கொடுத்து சூடம் சாம்பிராணி காட்டிக் கும்பிட்டுக் கன்னத்தில் போட்டுக் கொள்ளச் சொல்லி விட்டு – வெளியே பாரதமாதவைப் பன்னாட்டு முதலாளிகளிடம் கூட்டிக் கொடுத்துள்ளார். அதாவது பாரதமாதாவை ஏகாதிபத்தியங்கள் ‘கற்பழிப்பதற்கு’ ரேட்டு பேசினார்.

இந்தத் தேசத்தின் நதிகளெல்லாம் புனிதமென்று ஷாகாவில் பயின்று வந்த பிரச்சாரக்கான வாஜ்பாயி தான் கங்கையை விலை பேசினார். எங்கள் தேசத்தின் புழுதியே சந்தனம் தானென்று தினமும் ஷாகாவில் பஜனை பாடிய பயிற்சி பெற்று வந்த வாஜ்பாயி  சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் பெயரில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களை சுயாட்சிப் பிரதேசங்களாகப் பட்டா போட்டுக் கொடுத்துள்ளார்.

தேசபக்தியென்பது காவிக் கொடியேந்திய லட்சுமி படத்தை பாரத மாதாவென்று சொல்லி சூடம் சாம்பிராணி காட்டி கும்பிடுவது தானா? தேசம் என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமா? இல்லை காவிக் கொடியேந்திய லட்சுமி படமா? இல்லை. ஒரு தேசம் என்பது அதனுள் ரத்தமும் சதையுமாக வாழும் மக்கள். அந்த மக்களின் நலனுக்காக உழைப்பதே உண்மையான தேசபக்தி. இந்தப் பரிவாரங்களெல்லாம் ஆரம்பிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகளில் எத்தனை மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் போராட்டங்களை, இயக்கங்களை எத்தனை முறை முன்னெடுத்திருக்கிறார்கள்? ஒன்றுமில்லை என்பதே இந்த தேசபக்தர்களது யோக்கியதை.

ஆர்.எஸ்.எஸ்இன் பிரம்மச்சாரி பிரச்சாரக்குகள் தியாகிகளாம்!

அயோத்தி ராமனை இந்த நாட்டின் மாபெரும் இலட்சிய புருஷன் என்று அவாள் கம்பெனிகள் போற்றுவதற்கு என்ன காரணம்? எல்லா  இராமயணங்களும், அதன் உபன்னியாசர்களும் அதற்கு இறுதியில் கூறும் காரணமென்னவென்றால் இராமன் ஒரு ஏகபத்தினி விரதன் என்பதாகும். ஒரு நாட்டில் ஒருவன் ஒரு பெண்டாட்டியை வைத்திருக்கிறான் என்பதற்காகவே அவனை போற்றுகிறார்கள் என்றால் அந்த நாட்டில் மற்றவர்களெல்லாம் பொம்பள பொறுக்கிகள் என்று அர்த்தம்.

அதே போல ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகள் திருமணம் செய்யவில்லை என்பது தியாகமென்றால் பதிவுலகில் திருமணம் ஆகாத அத்தனை பேரும் தியாகிகள்தான். இந்த தியாகத்தை பல நூற்றாண்டுகளாய் கத்தோலிக்க பாதிரியார்களும் செய்து வருகிறார்கள். என்ன, திருச்சபையில் கொஞ்சம் ஜனநாயகம் இருப்பதால் அந்த தியாகங்கள் சந்தி சிரித்த கதைகள் நிறைய வெளியே வந்துவிட்டன. ஆர்.எஸ்.எஸ் ஒரு பாசிச இயக்கமென்பதால் இந்த தியாகத்தின் உண்மை ரூபம் வெளியே கசிவதில்லை.

ஈழத்திலும், ஈராக்கிலும், ஆப்கானிலும், காஷ்மீரத்திலும் குடும்பம், கணவன், மனைவி, குழந்தைகளை இழந்து அனாதைகளாய் கோடிக்கணக்கான மக்கள் வாழும் உலகத்தில் ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகன் காமத்தை திருட்டுத்தனமாய் அடக்கினான் என்பதுதான் தியாகமா? பா.ராவின் ஆய்வு இந்த விசயத்தில் ஆபாசமாகவும், அருவெறுப்பாயும் இருக்கிறது.

முடிவுரை:

உலக பாசிச இயக்கங்களின் வரிசையில் ஆர்.எஸ்.எஸ்!

முதல் உலகப் போர் முடிந்து, ரசியாவில் கம்யூனிச எழுச்சி ஏற்பட்ட பிறகு 1920களில் உலகமெங்கும் உள்ள முதலாளிகளில் தீவிர தேசியத்தின் முகமூடியில் இனவெறி பேசிய பாசிச பிரிவினர் தோன்றுகிறார்கள். இனிமேலும் ஜனநாயகத்தை மக்களுக்கு வழங்க முடியாது என்று மத,சாதி,இனவெறியின் பேரில் தோன்றிய ஹிட்லரின் நாசிக் கட்சி, முசோலினியின் பாசிசக் கட்சி, ஜப்பானின் தேசியவெறி மன்னராட்சி முதலான சமகால பாசிச இயக்கங்களின் வரிசையில்தான் அதே காலத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸும் தோன்றுகிறது. மற்ற இயக்கங்கள் பாசிசத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்து பின்னர் அழிந்து விட்டன என்றால் ஆர்.எஸ்.எஸ் ஆட்சியைப் பிடிப்பதற்கு பல ஆண்டுகள் ஆனது. இதற்கு காரணம் இந்த நச்சுப் பாம்புகளை, இவர்களது பார்ப்பனியத்தை எதிர்த்து இந்தியாவில் பெரும் போராட்டங்கள் நடந்தன என்பதுதான்.

இன்று தீவிர இந்துத்வம் பேசினால் கடை ஓடாது என்ற நிலையில் அரசியல் ரீதியில் அவர்கள் காலாவதியாகும் நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஒரு ஒளிவட்டம் போட்டு வாசகனுக்கு அறிமுகப்படுத்துகிறார் பா.ரா. உலகமயமாக்கத்தின் தயவில் நுகர்வுக் கலச்சாரத்தில் முங்கி எழும் நடுத்தர வர்க்கம் தனது பண்பாட்டு ஏக்க புலம்பலுக்காக ஆன்மீகம், கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் என்று சுயதிருப்தி அடையும் வரிசையில் ஆர்.எஸ்.எஸ்ஸும் வருகிறது. மேலும் பொதுப்புத்தியில் இந்துத்வம் வலுவாக படிந்திருக்கும் நிலையில் அதை விற்று காசாக்கும் நோக்கில்தான் கிழக்கு பதிப்பகத்தின் இந்த நூல் திட்டமிட்டு பொய்களோடும், புனைவுகளோடும் சந்தையில் இறக்கி விடப்பட்டிருக்கிறது.

பா.ராவை ஆதரிப்போரும், விமரிசிப்போரும் ஸ்வயம் சேவக்குகளே!

இதனால் அரவிந்த நீலகண்டன், ஜடாயு, டோண்டு ராகவன், ஜெயமோகன் போன்ற ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் இந்த நூலை வரவேற்பார்கள் என்பதல்ல. அவர்களைப் பொறுத்த வரை பா.ரா வை கொஞ்சம் செல்லமாக கடிந்து விட்டு அவர் இந்துத்வத்தின் தீவிர இலட்சியத்தை இந்த நூலில் முன்வைக்க வில்லை என்று விமரிசிப்பார்கள். இது அசோக் சிங்காலின் குரல் என்றால் அதே ஆர்.எஸ்.எஸ்ஸில் பிரமோத் மகாஜன், அருண் ஜேட்லி, அருண் ஷோரி, இந்தியா டுடே, வாஜ்பேயி, கிழக்குபதிப்பகம், தமிழ் பேப்பர் போன்ற முதலாளித்துவத்தை முதன்மைப்படுத்தும் இந்துத்வவாதிகளும் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள்தான் இந்த நூலை வரவேற்பார்கள். அந்த வகையில் இந்த புத்தகம் தராளமய தாசர்களான இந்துத்வவாதிகளை நிச்சயம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

எது வரலாறு?

வரலாறு என்பது எப்போதும் தெளிவான சித்திரத்தை பதிவு செய்து எதிர்காலத்திற்கு வழங்கிவிடும் ஒன்றல்ல. உண்மையில் வரலாறு என்பதே சமூகத்தின் நிகழ்ச்சிப் போக்கான இயக்கத்தை துப்பறிந்து கண்டுபிடிக்கும் ஒன்றாகும். இதில் எதை நீங்கள் கண்டு பிடிக்க போகிறீர்கள் என்பது உங்களது வர்க்க நலன் தீர்மானிக்கும். அந்த வகையில் எல்லா வரலாறுகளும் கூட அந்தந்த வர்க்க நலன்களின் விருப்பங்களோடும், தேவைகளோடும்தான் உருவாகிறது. அதனால் வரலாறு என்பது முழுக்க அகநிலை விருப்பங்களால் புனைந்துரைக்கப்படும் புனைவு என்று பொருளல்ல. அது பல்வேறு விசயங்களை பதிவு செய்திருக்கும் குறிப்பிட்ட காலகட்டத்தில் எதை பார்க்க விரும்புகிறீர்கள், எதை முன்னிலைப்படுத்த விரும்புகிறீர்கள், யாருக்காக ஆய்வு செய்கிறீர்கள் என்பதோடு தொடர்புடையது என்கிறோம்.

சாரமாக பெரும்பான்மை மக்கள் நலனிலிருந்து பார்த்தால் வரலாறு என்பது ஒடுக்கப்படும் வர்க்கங்கள் நீதிக்காக ஒடுக்கும் வர்க்கங்களை எதிர்த்து நடத்தும் போராட்டத்தை குறிக்கிறது என்று அறியலாம். அதன்படி பார்த்தால் ஆர்.எஸ்.எஸ் என்பது ஒடுக்கும் வர்க்கங்களின் தேவைக்கேற்ப உருவானது என்பதை சந்தேகத்திற்கிடமின்றி புரிந்து கொள்ளலாம். கூடவே நூலாசிரியர் பா.ராவின் பச்சையான அயோக்கியத்தனத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

ஆர்.எஸ்.எஸ் குறித்த இந்த நூலுக்கு பா.ரா படித்த புத்தகங்களில் அதிகம் இருப்பது ஆர்.எஸ்.எஸ்இன் வெளியீடுகள்தான். இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு அந்தக் காலத்திலேயே இராமன் குரங்கு கூட்டத்தை வைத்து மண்ணால் பாலம் கட்டினான் என்று வரலாறு எழுதும் இந்த கும்பலிடமிருந்து எதை ஆய்வுக்கு எடுக்க முடியும்? ஒருவேளை எடுத்துக் கொண்டாலும் அவர்களது பிற்போக்கு பாத்திரத்தை நிறுவுவதற்குத்தான் பயன்படவேண்டும். ஆனால் பா.ரா அவர்களது புளுகுகள் பலவற்றை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்கிறார். அந்த வகையில் பா.ராவையும் நாம் ஒரு இலட்சியப் பூர்வமான ஸ்வயம் சேவக் என்றுதான் கொள்ள வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்இன் இரண்டாது தலைவர் கோல்வல்கர் எழுதிய ஞானகங்கை நூலில் அவர் ஹிட்லரையும், இஸ்ரேலையும் வியந்தோதி வழிப்பட்டிருப்பதெல்லாம் கூட பா.ராவின் காமாலைக் கண்ணுக்கு தென்படவில்லை. சிறுபான்மை மக்கள் மீது வன்மத்தையும், துவேசத்தையும் கக்கும் படிமங்களும், வசனங்களும் அந்த நூலில் ஏராளம். இருந்து என்ன பயன்?

கிழக்கு பதிப்பகம் ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக இருக்கலாம். பத்து ரூபாய்க்கு ஒரு புத்தகம் வாங்கினால் கூட அதற்கு கடன் அட்டை வசதி வழங்கும் வெகு நவீனமான நிறுவனமாக இருக்கலாம். ஆனால் பா.ராவின் இந்த நூல் ஒரு காயலான் கடையில் இருக்கும் ராஜேஷ்குமாரின் பழைய பாக்கெட் நாவலின் தரத்தில் கூட அதாவது உள்ளடக்கத்தில் இல்லை. முதலாளித்துவ பதிப்பகங்களிடம் இருக்கும் குறைந்த பட்ச தரமும், நம்பகத்தன்மையும் இந்த நூலில் நிச்சயம் இல்லை. இதையெல்லாம் யார் கேள்வி கேட்பார்கள் என்ற அலட்சியம் கூட இந்த டவுண்லோடு அறிவாளிகளிடம் இருக்கலாம்.

கல்கி பத்திரிகையில் சீனியர் சங்கராச்சாரியின் அருள் வாக்கோடு அறிவைப் பயின்ற இந்த பா.ராகவன் சந்தேகத்திற்கிடமின்றி ஒரு பார்ப்பனிய அறிஞர்தான். கூடவே அவர் சுஜாதாவின் ‘சிலிர்ப்பான’ நடையையும் கொஞ்சம் பயின்றிருக்கிறார். இது பதிவுலகின் மொக்கைகள் பலரும் ஆராதிக்கும் விசயமாகும். ஆனால் பா.ராவின் இந்த நடையைப் பார்த்தால் நமக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. எது ஆர்.எஸ்.எஸ்இன் கருத்து, எது பா.ராவின் கருத்து என்று பிரித்தறிய முடியாமல் பேருக்கு ரெண்டு விமரிசனங்களையும் கலந்துவிட்டு ஏதோ மர்ம நாவலைப் போல திடுக்கிடும் கோணங்களில் அவர் எழுதுவதைப் பார்த்தால் காறித் துப்பத் தோன்றுகிறது.

கிழக்கு பதிப்பகத்தை கேள்வி கேளுங்கள்!

கிளியோபாட்ரா தினமும் குளிக்கும் கழுதைப்பாலின் கதை, இந்திய சமஸ்தான ராஜாக்களின் தங்கக் கழிப்பறைகள், தென்னிந்திய தேவதை திரிஷாவின் வாழ்க்கை வரலாறு, கருப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்தின் வெற்றிக் கதை போன்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த வரலாறுகளையெல்லாம் ஆயிரக்கணக்கான பக்கங்களில் அழகான தரத்தோடு கிழக்கு பதிப்பகம் நூலாக கொண்டு வந்தால் அதை நாம் ஆட்சேபிக்கப் போவதில்லை.

ஆனால் ஆர்.எஸ்.எஸ் என்பது இந்த நாட்டின் உழைக்கும் மக்களிடமும், சிறுபான்மை மக்களிடமும் இருந்து ரத்தத்தை உறிஞ்சி எடுத்து இந்த நாட்டை பல பத்தாண்டுகளில் ரத்த சகதியாக்கியருக்கும் ஒரு பாசிச அமைப்பு. அதன் வாழ்வும், இருப்பும், வரலாறும் இந்த நாட்டின் பிற்போக்குத்தனங்களுக்கு ஒரு அரண். அந்த அரணை இடித்து நொறுக்குவதில்தான் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் விடுதலை அடங்கியிருக்கிறது. எனவே இது நம்மைப் போன்றவர்களுக்கு சமூகக் கடமையாக இருக்கிறது. அத்தகைய கடமையேதும் இல்லாத, சந்தையில் விற்பனை இலாபம் என்ற பச்சையான சுயநலத்தை மட்டும் வைத்திருக்கும் கிழக்கு பதிப்பகம் போன்ற முதலாளிகளுக்கு ஆண்டாண்டு காலமாக இந்துத்துவ கூட்டத்தால் கொல்லப்பட்ட ஒரு முசுலீம் அல்லது ஒரு தலித்தின் அவலக்குரல் கேட்குமா என்ன?

சுரணையுள்ள வாசகர்கள் ஆர்.எஸ்.எஸ்  நூலை வாங்கியிருந்தால் அதை எடுத்துக் கொண்டு எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிழக்கு பதிப்பகத்தின் அலுவகத்திற்கு சென்று வீசி எறிந்து விட்டு காசை திருப்பி கேளுங்கள்! ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் நியாயத்தை கேளுங்கள்! கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியரின் நூலே இந்த இலட்சணத்தில் இருக்கிறது என்றால் மற்ற கத்துக்குட்டிகளின் புரட்டுக்கள் எப்படி இருக்குமென்பதை அறிந்து கொள்ளுங்கள்!

வரலாறும், அறிவும் மேட்டுக்குடி கோமான்களது பொழுது போக்கல்ல. அவை நமது வாழ்க்கையில் இரத்தமும், சதையுமாய்  கலந்திருக்கும் சக்தி மூலங்கள். அதில் நாம் எந்த சமரசமும் செய்ய முடியாது. பா.ராகவனையும் மன்னிக்க முடியாது.

_______________________________________________________________

பின்குறிப்பு:

  1. எங்களுக்கு நேரம் அமைந்தால் இது குறித்து தனியான அரங்க கூட்டத்தை ஏற்பாடு செய்து இந்த கட்டுரையில் பேசாத விசயங்கள் அத்தனை குறித்தும் விளக்குகிறோம். முடிந்தால் தனியாக ஒரு நூலையும் கொண்டு வர முயல்கிறோம்.
  2. இந்த ‘நூல்’ ஆசிரியர் காஷ்மீர் குறித்தும் ஒரு வரலாறு எழுதியிருக்கிறார். கூடிய விரைவில் அது குறித்த விமரிசனம் வரும்.

__________________________________________________

விளக்கக் குறிப்புகள்:

ஆர்.எஸ்.எஸ்: ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம். பொருள்: தேசத்தின் தன்னார்வத் தொண்டர்களது இயக்கம்

விநாயக தாமோதர சாவர்கர்: ஆரம்பத்தில் இந்து விழுமியங்களோடு ஆங்கிலேயர்களை எதிர்த்த தேசியவாதியாகவும், பின்னர் காலனிய ஆட்சியோடு சமரசம் செய்து கொண்டு தீவிர இந்துத்வவாதியாகவும் மாறிய மராட்டியத்தை சேர்ந்த சித்பவன பார்ப்பனர்.

கேசவ பலிராம் ஹெட்கேவார்: ஆர்.எஸ்.எஸ்ஐ 1925இல் ஆரம்பித்தவர். 1940இல் மரணம் அடைகிறார்.

மாதவ சதாசிவராவ் கோல்வல்கர்: ஹெட்கேவாருக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ்இன் இரண்டாவது தலைவரானவர்

மதுகர் தத்தாத்ரேய தேவரஸ்: கோல்வல்கருக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்இன் மூன்றாவது தலைவரானாவர்.

ஷாகா: ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் தினசரி உடற்பயிற்சிக்காக சந்திக்கும் கிளை

ஸ்வயம் சேவக்: ஆர்.எஸ்.எஸ் ஷாகக்களுக்கு வருகை தரும் உறுப்பினர்.

பிரச்சாரக்: ஆர்.எஸ்.எஸ்இன் முழுநேர ஊழியர்

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்: ஏ.பி.வி.பி எனப்படும் ஆர்.எஸ்.எஸ்இன் மாணவர் அமைப்பு.

வனவாசி கல்யாண் ஆஷ்ரம்: பழங்கடி மக்களை இந்துக்களாக மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ் ஆரம்பித்த இயக்கம்.

ராஷ்ட்ரிய சேவிகா சமிதி: ஆர்.எஸ்.எஸ்இன் பெண்கள் அமைப்பு

விசுவ ஹிந்து பரிஷத்: உலக அளவில் இந்துக்களை அணிதிரட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ் ஆரம்பித்த அமைப்பு

பி.எம்.எஸ்: பாரதிய மஸ்தூர் சங்கம் எனும் ஆர்.எஸ்.எஸ்இன் தொழிலாளர்(முதலாளிகளும்தான்) பிரிவு

அஜினோ மோட்டோ: நினைத்தாலே நாக்கில் நீர் சுரக்க வைக்கும் சீனத்து உப்பு. அப்படி பா.ராவின் மொழி நடையை நினைத்தால் மொக்கைகளுக்கு கிளர்ச்சி வருமாம்.

ராஜரிஷி: ஷத்திரிய மன்னர்களை இந்து வருண சாதி தர்ம அறத்தின் வழியில் நடத்திய பார்ப்பன சாணக்கிய குருக்கள்

___________________________________________________________

இந்த கட்டுரைக்கான ஆதாரங்கள்,நூல்கள் பல இருக்கின்றன. எனினும் இணையத்தில் உள்ள சுட்டிகளை மட்டும் இங்கு இணைக்கிறோம்.

http://www.countercurrents.org/gatade240507.htm

http://www.radianceweekly.com/38/67/Fascism-and-Muslim-Today/2006-10-22/Cover-Story/Story-Detail/Fascism-in-India.html

http://goanobserver.com/high-cost-of-freedom.html

http://www.countercurrents.org/dalit-george020906.htm – Fascism Versus Indigenous People

http://www.countercurrents.org/teltumbde100510.htm – Modi Vomits Caste Venom

http://www.countercurrents.org/dalit-sivaraman250903.htm – Amedkar vs Hindutva

http://www.countercurrents.org/desai160510B.htm – Background of Gujarat Riots

http://www.countercurrents.org/gatde130710.htm – Hindutva Terror

http://www.indianexpress.com/storyOld.php?storyId=34620 – GOA – A Liberation from Lies

http://www.storyofpakistan.com/articletext.asp?artid=A119 – Minto Morley Reforms

http://www.hinduonnet.com/fline/fl2207/stories/20050408001903700.htm – SAVARKAR’S MERCY PETITION

http://pd.cpim.org/2001/march25/march25_nalini.htmSavarkar Pledged Loyalty To British Government

http://www.indianexpress.com/res/web/pIe/columnists/full_column.php?content_id=2638 – Hindu Rashtravad

http://www.punjabspectrum.com/english/index.php?option=com_content&view=article&id=1840:golden-gloss-on-khaki-knickers-rss&catid=171:politics&Itemid=173 – GOLDEN GLOSS ON KHAKI NICKERS

http://www.rediff.com/news/2004/aug/23spec1.htm – Who was Veer Savarkar

http://www.revolutionarydemocracy.org/rdv7n1/videshi.htm – Videshi roots of RSS

மற்றும் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்கள், ம.க.இ.க வெளியீடுகள், எஸ்.வி.ராஜதுரையின் நூல்கள்….

  1. பா.ராகவன் : ஆர்.எஸ்.எஸ் – இன் அஜினோமோட்டோ ராஜரிஷி !…

    கிழக்கு பதிப்பகத்தின் கிளர்ச்சி எழுத்தாளர் பா.ராகவன் எழுதியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் வரலாற்று நூலின் பொய்களையும், புரட்டுகளையும், திரிபுகளையும் ஆதாரங்களோடு திரைகிழிக்கும் முதன்மையான முக்கியத்துவமான ஆய்வு….

  2. இன்னும் கட்டுரையை வாசிக்கவில்லை, உட்தலைப்புகளே கட்டுரையின் வீச்சை உணர்த்துகிறது. உங்களது முயற்சிக்கும், மெனக்கெடலுக்கும் உண்மையிலேயே மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள்.

    தோழமையுடன்
    முத்துக்குமார்

  3. கிழக்கிலிருந்து இப்படி ஒரு நூல் வந்திருக்காவிட்டால் தான் ஆச்சரியபட்டிருக்கலாம்

  4. […] This post was mentioned on Twitter by வினவு, penathal suresh, ஆயில்யன் and others. ஆயில்யன் said: RT @kusumbuonly: பாரா பாராவா எவ்வளோ பாராஸ்… http://goo.gl/MeQs5 @writerpara #ஜீப்பில ஏத்தியாச்சு:))) […]

  5. “ஆர்.எஸ்.எஸ் என்பது இந்த நாட்டின் உழைக்கும் மக்களிடமும், சிறுபான்மை மக்களிடமும் இருந்து ரத்தத்தை உறிஞ்சி எடுத்து இந்த நாட்டை பல பத்தாண்டுகளில் ரத்த சகதியாக்கியருக்கும் ஒரு பாசிச அமைப்பு. அதன் வாழ்வும், இருப்பும், வரலாறும் இந்த நாட்டின் பிற்போக்குத்தனங்களுக்கு ஒரு அரண். அந்த அரணை இடித்து நொறுக்குவதில்தான் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் விடுதலை அடங்கியிருக்கிறது. எனவே இது நம்மைப் போன்றவர்களுக்கு சமூகக் கடமையாக இருக்கிறது. அத்தகைய கடமையேதும் இல்லாத, சந்தையில் விற்பனை இலாபம் என்ற பச்சையான சுயநலத்தை மட்டும் வைத்திருக்கும் கிழக்கு பதிப்பகம் போன்ற முதலாளிகளுக்கு ஆண்டாண்டு காலமாக இந்துத்துவ கூட்டத்தால் கொல்லப்பட்ட ஒரு முசுலீம் அல்லது ஒரு தலித்தின் அவலக்குரல் கேட்குமா என்ன??????”

  6. ஊருபக்கம் ஒரு பழமொழி சொல்வாங்க அதான் இப்ப நினைவுக்கு வருது.

    சூரியனைப்பார்த்து ஒரு சொறிநாய் வல்வள்ளுன்னு கொலைக்குதுன்னு..

    வேற என்ன சொல்லறது. சொறிநாய்கள் எவ்வளவு தான் குலைத்தாலும் ஊளையிட்டாலும் சூரியன் சூரியன் தான். நாயி நாயிதான்.

    • எடிசன்ற பேர்ல வந்திருக்கிறது ஜடாயுவா நீல்ஸா தெரியலை. எந்தப் பேர்ல வந்தாலும் நூலையும் மறைக்க மாட்டேன்றீங்க; ஓட்டைக் காவிக் கோவணத்தையும் மாத்த மறந்திடுறீங்க…

      ஓடுங்க ஓடுங்க.. சீக்கிரம் ஓடிப்போய் போய் உங்க மடத்தோட சீஃப் ஆண்டி ஜெயமோகன்ட்ட “ஜி ஜி, எங்கள வினவு அடிச்சிட்டாரு ஜி”ன்னு கம்ப்ளெயின்டு பண்ணுங்க. அவருக்குக் கிளம்பப்போற உள்ளொளியோட வெளிச்சத்தைப் பொறுத்து எதுனா போடுவாறு – பிச்சைய சொல்லலை; பதிவைச் சொன்னேன்.

    • பூணூல் தெரியுது மாமோய்! உள்ளார நொளச்சுக்குங்கோ! எப்பிடி நொளைக்கறதுன்னு பாராவும் அநீயும் பாடம் நடத்துவா!

    • குஜராத்தின் இன்றைய வளர்ச்சி, சுதந்திரம் அடைந்த நாளாக அந்த மாநிலம் காணாதது. மிகவும் பிரம்மாண்டமானது. மக்களுக்கு வளர்ச்சி தான் முக்கியம். வசதிகளே முக்கியம். குஜராத் என்றல்ல. உலகெங்கும் இது தான்…

      Who started violance in Gujarath, muslims only started then they got back….

      தன்னுடைய திட்டத்திற்கேற்ப பச்சையான புளுகுகளையும் அரை உண்மைகளையும் கொண்டு திரிப்பது VINAVIன் உத்தி.

      Who started violence in Gujarath, Muslims only started then they got back….

      Thambi I will tell you one thing, If you have guts You write something bad about muslims or Christians they will kill you, You will attack hindus only. We have seen lots of people from Periyar to Karunaanithi all these people are not brave enough to speck about others…..

      100 pear madikkira Periyaar silaikku seruppu maalai poattathu thappunna…

      1000 pear vanangum Vinayagar silaiya periyar udachathum thapputhanee..

      Inga naathigam peasum all onions are fraud only

      • 100 pear madikkira Periyaar silaikku seruppu maalai poattathu thappunna…

        1000 pear vanangum Vinayagar silaiya periyar udachathum thapputhanee..

        —– Arumaya aruma !

  7. அய்யா,

    பா.ராவின் பல இடங்களில் வரலாற்றை நூல் பாசம் வென்றிருப்பதைக் காண முடிந்தது.
    ஒரு சின்ன உதாரணம் – என்பதுகளின் இறுதியில் காஷ்மீரத்துப் பண்டிட்கள் சந்திக்கும் நெருக்கடிக்கு ஐம்பதுகளிலேயே மண்டையைப் போட்டு விட்ட சியாமா பிரசாத் முகர்ஜி போராடப் போனார் என்றெல்லாம் உளரி வைத்துள்ளார்.

    இது போன்ற விபரப் பிழைகள், வருடங்களைத் தவறாக சுட்டுவது என்று ஒரு குப்பைக் கூளமாகத் தான் அந்தப் புத்தகம் முழுவதுமே காட்சியளிக்கிறது.

    என்ன தான் ஆர்.எஸ்.எஸ் பாசம் கண்ணை மறைத்தாலும், அதுக்காக இப்படியா?

    புத்தகத்தை எடிட் செய்தவர் யாரோ தெரியவில்லை – ஆனால் அவருக்கு பத்ரி சம்பள பாக்கி வைத்துள்ளார் என்பது மட்டும் புரிகிறது.

  8. //கருப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்தின் வெற்றிக் கதை//
    இதை எழுதியவர் உங்கள் விசிறி லக்கி லுக்.
    மேலும் அகதி வாழ்க்கை எனும் உங்கள் தோழர் கலையரசனின் வெளியீடும் கிழக்கு பதிப்பகமே வெளியிட்டது ஏன் இந்த முரண்பாடுகள் கொஞ்சம் விளக்க முடியுமா ?

    • // பணமே பிரதானம், மதமே விதானம் //

      பதிப்பகத்தார்கள் பத்திரிக்கை/பதிப்பகம் நடத்த மக்கள் விரும்பி படிப்பதை விற்றுத் தான் ஆகவேண்டும். அவ்வப்போது சொந்த வாந்திகளை இடையிடையில் கலக்கி காபியாக கொடுப்பார்கள்.

    • பாயிண்ட புட்சீங்க எளில், இப்ப சில பச்சோந்திப்பயலுவ பிழைக்கவும் பொங்கித்தின்னவும் கருநாடகாவுல குந்தியிருந்து சவுண்டு மட்டும் டமில் டமிலன் டமில்னாடுன்னு உறுமலயா அது மாதிரி கிளக்கும் களையரசன் புத்தாகத்த போட்டு ஈளத்தோட நண்பேண்டான்னு காட்டிகிட்டாங்க போளிருக்கு

  9. //சுரணையுள்ள வாசகர்கள் ஆர்.எஸ்.எஸ் நூலை வாங்கியிருந்தால் அதை எடுத்துக் கொண்டு எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிழக்கு பதிப்பகத்தின் அலுவகத்திற்கு சென்று வீசி எறிந்து விட்டு காசை திருப்பி கேளுங்கள்! ….//

    காசு கொடுத்து இந்த நூலை வாங்கிப் படிக்காமல் இத்தனை காத்திரமான விமர்சனத்தையோ, விவாதத்தினையோ முன்வைத்திட முடியாது என நம்புகிறேன்.புத்தகம் தொடர்பான தங்களின் ஆத்திரம் மற்றும் ஆதங்கத்தினை நான் மதிக்கிறேன்.பெரும் பகுதியில் தங்களோடு உடன் படவும் செய்கிறேன்.ஆனால் எனக்கு ஒரே ஒரு சந்தேகம்!, இதை இந்த கட்டுரையை எழுதிய ஆசிரியர் மேலே சொல்லியிருப்பதைப் போல செய்தாரா என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்.

  10. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம். ஜிங் ஜிங் ஜிங் ஜிங்

  11. மிக நீண்ட பதிவு.படித்து முடிக்கும் முன்பே பதில் சொல்ல ஆர்வம் வருகிற்து.ஆனால் படித்து கருத்து சொல்வது தான் நல்லது.படித்த வரை சிறந்த பதிவு.

  12. பிரமிக்க வைக்கும் உண்மைகள், ஆழமான திரட்டு பா.ரா என்ற பார்ப்பனரின் திரிபுகள் அம்பலம். மொத்தத்தில் அருமை ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

  13. மாற்றுக்கருத்துக்களை பதியாமல் இருப்பதே போதுமானது.அவ்வளவு பிரபலமில்லாத நூல்களையும் இதுபோன்ற மாற்று கருத்துக்கள் சற்றே பிரபலமாக்கும் என்பதே உண்மை.

    • எல்லாம் சரி ! இது விமர்சனமா? இல்லை விளம்பரமா?

      காரணம் யாருக்கும் தெரியாத பா.ரா என்பவர் எழுதும் பன்னாடை நூல்களை விமர்சிக்கிறோம் பேர்வழி என, இதோ இது தான் அது எனக் காட்டி நூல் விற்பனைக்கு துணைப் போவது போல இருக்குது.

      நீங்கள் கூறிய பல விசயங்கள் ஓரளவு படித்த அனைவருக்கும் தெரிந்ததே. இதனைச் இன்னார் செய்தார் என எவ்வளவு காலம் தான் கூறப் போகிறீர்கள் ! இன்னது செய்தால் இன்னாச் செய்பவரை தடுக்கலாம் எனக் கூற மாட்டேங்கிறீங்கள்.

      ஒன்று பா.ரா, அநீ போன்றவர்கள் என்ன ( சோப்படி வேலைகள் ) செய்துக் கொண்டிருக்கிறார்கள் என பலருக்கு நன்று தெரியும். இன்னொன்று இப்போது எல்லாம், பதிப்பகத்தார்களும் அரசியல் சினிமா போல, நூல்களை விற்கவும், பிரபலமாக்கவும், அனைத்து விளம்பரங்கள், தாக்குதல் அரசியல், stunt-களை செய்து விற்கின்றார்கள்.

      முட்டாள்களாவது சாதரண நிலையில் இருக்கும் மக்களே ! ஆகவே வினவுப் போன்றவர்கள் என்ன நடந்தது என்று சொல்வதை விடவும்? என்ன செய்தால் பிடித்த சனியான மத?சாதிப் பிணிகளை இந்நாட்டினை விட்டு ஒழிக்கலாம் எனக் கூறுவதே பொது நலத் தொண்டாகும். இல்லை என்றால், நீங்கள் கயவர்களின் stunt-களுக்கு துணைப் போனவர் ஆகிவிடுவீர்கள்…..

      • //என்ன செய்தால் பிடித்த சனியான மத?சாதிப் பிணிகளை இந்நாட்டினை விட்டு ஒழிக்கலாம் எனக் கூறுவதே பொது நலத் தொண்டாகும். //
        சாதியை ஒழிப்போம் என்று கோஷம் போடுவதோடு மீட்டிங் முடித்து கட்டிங் வாங்கிக் கொண்டு எல்லோரும் போய்விடுவார்கள். சாதிக் கொடுமைகளை ஒழிக்கத் திட்டம் தீட்டுங்கள் என்றால் பார்ப்பனர்களைத் திட்டுவது தவிர வேறெதுவும் பெரியார் முதல் யாரும் சொல்லித்தரவில்லை, பாவம். சாதி ஒழிப்புக்கு ஓங்கிக் குரல் கொடுக்கும் பலரும் சொந்த சாதியை ஓங்கிப் பிடிக்க பிற சாதியினரைப் பழிப்பவர்களாய் இருக்கும் வரை சாதி சார்ந்த வன்கொடுமைகளை ஒழிக்க முடியாது.

        நிற்க. பாரா தன் RSS புத்தகத்தில் பொய் சொல்லவில்லை. நடந்த வரலாற்றை எடுத்துச் சொல்லியிருக்கிறார், அவ்வளவே!

        • உண்மைதான்…. சாதி ஒழிக சாதி ஒழிக எங்கின்றனர். ஆனால் திமுக, அதிமுக தலைமைகளில் எல்லாம் ஆதிக்கச் சாதிகள் தான் நாற்காலிகளைத் தேய்த்துக் கொண்டிருக்கிறது. ஏன் கலைஞர் குடும்பத்தில் அனைவரும் பிராமண/ஆதிக்கச் சாதி மருமகள் தானே வருகிறார்கள், ஒரு தலித் உண்டா? ( எனக்கு தெரிந்து இல்லை ).

          படிப்பது இராமாயணம் ! இடிப்பது இராமர் கோயில் என்பது போல, வெளிப் பேச்சுக்கும் வெளிப் பூச்சுக்கும் தான், சமத்துவாதிகள், உள்ளே சாதியவாதிகள் இது தான் இன்று பலரின் நிலை…………..

          பா.ரா. ஆர்.எஸ்.எஸ் விசுவாசி என்பதால் தான் உண்மையைக் கூறும் போதும் கொஞ்சம் பூசி மெழுகி கூறி இருக்கிறார். அவ்வளவே !!! இது ஒரு பெரிய நூலும் இல்லை. இதை பொருட்படுத்தவும் தேவை இல்லை…………

          சாதிகள் ஒழிக்க யார் என்ன நடவடிக்கைகள் இதுவரை எடுத்துள்ளார்கள். இது வரை வந்த தலைவர்கள் சாதி ஒழிக ஒழிக என. சாதிகளை நீடித்து இருக்க மட்டுமே வழிவகுத்துள்ளார்கள்…………………

          சாதி சான்றிதழைக் கொளுத்தும், அனைத்து சமத்துவம் பேசும் அரசியல் தலைவர்களின் வாரிசுகளுக்கு அடிமைப் பட்ட சாதிகளில் இருந்து மணம் முடியுங்கள். சாதி ஒதுக்கீட்டை விலக்கி விட்டு, கலப்பு மணம் புரிவோருக்கு ஒதுக்கீடு கொடுங்கள்.

          இணையத்திலும், பேப்பரிலும் இன்ன சாதியில் இருந்து பெண் வேண்டும் எனக் கேட்பதை என்பதை தடை செய்யுங்கள். பிள்ளைகள் கலப்பு மணம் புரிவதை பெற்றோர் தடுத்தால் பிடித்து உள்ளே போடுங்கள். சாதி சங்கங்களை கலைத்துவிட உத்தரவு போடுங்கள்.

          இவை எல்லாம் நடந்து விட்டால், பா.ராவுக்கு கஞ்சி இல்லை . வினவுக்கும் வேலை இல்லை………….. நடக்க விட மாட்டோம்ல.. என்ன சார்……….

  14. சுரணையுள்ள வாசகர்கள் ஆர்.எஸ்.எஸ் நூலை வாங்கியிருந்தால் அதை எடுத்துக் கொண்டு எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிழக்கு பதிப்பகத்தின் அலுவகத்திற்கு சென்று வீசி எறிந்து விட்டு காசை திருப்பி கேளுங்கள்! ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் நியாயத்தை கேளுங்கள்!பா.ராகவனையும் மன்னிக்க முடியாது.

    VANMURAI VANMURAI VANMURAI

  15. வினவின் பதிவு சிறப்பானது. உண்மையானது.
    பணி தொடரட்டும். வாழ்க
    நன்றி
    அன்பு

  16. I always don’t like vinavu articles (but I still read it) as most of the articles are very negative. But, I salute your work and commitment behind this article. Hats Off…

  17. //அதே போல ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகள் திருமணம் செய்யவில்லை என்பது தியாகமென்றால் பதிவுலகில் திருமணம் ஆகாத அத்தனை பேரும் தியாகிகள்தான். இந்த தியாகத்தை பல நூற்றாண்டுகளாய் கத்தோலிக்க பாதிரியார்களும் செய்து வருகிறார்கள். என்ன, திருச்சபையில் கொஞ்சம் ஜனநாயகம் இருப்பதால் அந்த தியாகங்கள் சந்தி சிரித்த கதைகள் நிறைய வெளியே வந்துவிட்டன.//

    🙂 எழுதும் போது உங்களுக்கு சிரிப்பு வரவில்லையா?

    ஆமாம். உலகத்தில் நீங்கள் தான் நல்லவர். மற்றவெரெல்லாம் ஃப்ராடுகள். உலகத்தை ரட்சிக்க வந்தவர்கள் நீங்கள் தான்…

    • வினவு தோழர்கள் இதை எழுதும் போது ஆர்.எஸ்.எஸ் “பிரச்சாரக்குகளின்” யோக்கியதை சி.டிக்களாக வந்து நாறியதையெல்லாம் நினைத்து சிரிப்பாய்ச் சிரித்திருக்க வேண்டும்.

    • //:) எழுதும் போது உங்களுக்கு சிரிப்பு வரவில்லையா?

      ஆமாம். உலகத்தில் நீங்கள் தான் நல்லவர். மற்றவெரெல்லாம் ஃப்ராடுகள். உலகத்தை ரட்சிக்க வந்தவர்கள் நீங்கள் தான்…//

      உங்களாலேயோ அல்லது ஆர் எஸ் எஸ் அல்லக்கைகளலேயோ இவ்வாறு பெருமையுடன் பேச இயலாத ஆற்றாமையில் இவ்வாறு எழுதுகிறேர்கள்.. பரிதாபப்படுகிறேன்… ஆயினும் கொஞ்சம் முயற்சி செய்தால் நீங்களும் இவ்வாறு பெருமையுடன் மார்தட்ட இயலும். அதற்கு மனிதாபிமானம் வேண்டும் என்பது மட்டும்தான் முன்நிபந்தனை. உங்களீடம் இருக்கா?

  18. //ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்த்ததைப் போலவே நினைவாலயம் அமைக்கப்பட்டால் தமது வாழ்வுரிமை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த மீனவர்கள், அந்நடவடிக்கைகளை தம்மால் இயன்ற அளவில் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஏழை மீனவர்களின் இந்த பிரச்சினையை இந்துக்களுக்கு வந்த சோதனையாக பிரச்சாரம் செய்கிறது ஆர்.எஸ்.எஸ்.//

    இந்துக்களை தவிற எல்லோருக்கும் எல்லாமுமே சொந்தம், இல்லையா? 😉

    • இந்துக்கள் என்பதால் எல்லாருடைய எல்லாவற்றையும் சொந்தம் கொண்டாடி விடுவீர்களா?

      அந்தப் பாறை மீனவர்கள் வாழ்வுரிமையோடு சம்பந்தப்பட்டது என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள். இன்றைக்கும் இந்துவெறி கும்பலால் ஆக்கிரமிக்கப் பட்ட அந்தப் பாறைக்குச் செல்பவர்கள் பக்கத்திலேயே மீன் பிடிப் படகுகளை நிறுத்த இடம் போதாமல் அவதிப்படும் மீனவப் படகுகளைக் காண முடியும்.

    • //இந்துக்களை தவிற எல்லோருக்கும் எல்லாமுமே சொந்தம், இல்லையா?//

      யாருபா அந்த இந்து?

      1/சிதம்பரம் கோயில்ல உள்ளே விடாம வெளியே நிறுத்தப்பட்டவன் இந்துவா இல்லை உள்ளே இருந்து கொண்டு ஊரை சுருட்டி தின்னும் தீட்சிதனும், அவனது உரிமைக்காக களம் இறங்கியும் உள்ளா ஆர்.எஸ்.எஸ் இந்துவா?

      2/ ராமேஸ்வரம் கோயிலில் இங்கு பிராமணர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டுன்னு சமயலறைக்கு வெளியே எழுதி வைச்சிருக்கானே? அந்த பிராமண இந்துவா இல்லை கல்லறைக்கு போனா அடிச்சி வெளிய அனுப்புரானே அந்த தலித்-சூத்திர இந்துவா?

      3/தனிக் குவளை, தனிச் சேரி என்றும், பிராமின்ஸ் ஒன்லி என்ற வீட்டு வாடகை விளம்பரங்களிலும் சிரிக்கும் தீண்டாமையை கடைபிடிப்பவர்களையும், அவர்களை அண்டி-நக்கிப் பிழைக்கும் ஆர் எஸ் எஸ் இந்துவா இல்லை தீண்டமையின் கொடுமையை நாளும் சந்திக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துவா?

      சீனு ராசா.. நீ எந்த இந்துவ ராசா சொல்ற? தெளிவா பேசிறு…

      • அசுரனின் கூற்றை வழிமொழிகிறேன். பிராமணரைப் பொறுத்த வரை, நல்ல விசயங்களுக்கு பிராமணர் மட்டுமே இந்துக்கள். வோட்டுக்கும்/காணிக்கைக்கும் அனைவரும் இந்துக்கள்………………….. நல்ல காமெடியான மதம்.

        இந்த மதத்தில்/ஆதிக்கச் சாதிக் குடும்பத்தில் பிறந்தததுக்கு வெட்கப்படுகிறேன். இன்னும் எனது சொந்தங்களுக்கு எவ்வளவோ எடுத்துக் கூறினாலும் உரைக்க மாட்டேங்கிது……….

  19. உமக்கு முற்போக்கு பட்டதுக்காக ஒரு பாப்பான திட்ட வேண்டியது…. சும்மா பாப்பான்னு பூசாண்டி காட்டாதீர்… 100 வருசமா communism வருது வருதுன்னு நீர் என்ன புரட்சிய முடிச்சீரா..

    • அப்போ பார்ப்பான் பிற்போக்குத் தனமானவன்னு ஒத்துக்கிறீங்களா?

      • முற்போக்கோ பிற்போக்கோ வயுத்துப்போக்கோ…. எல்லாரும் சேர்ந்து இது தான் முற்போக்குன்னு கூப்பாடு போட்டச்சு…..அதுக்கு என்ன உரைகல்லுன்னு தெரியல ..முற்போக்குன்னு கூப்பிடல வெறி நாயை மாதிரி விளுந்து புடுன்கிடும்ம்னு தெரியும்… muslim ஆதரிச்ச முற்போக்கு… இந்துன்ன பிற்போக்கு.. muslim குன்டு முற்போக்கு.. இந்து குன்டு பிற்போக்கு… சந்தொசம் தான கலை .. அட நானும் முற்போக்குதான் … 100 வருசம் இந்த socalled முற்போக்கு எந்த புரட்சியும் பன்னல …அது சத்தியம்.. ஆனா மாலை போட மட்டும் கழுத்த நீட்டுது..

        • நாகராசு ஐயா,
          முசுலீமு முற்போக்குன்னு வினவு முற்போக்கு எங்கயாவது சொல்லியிருக்காரா. இல்லியே அப்புறம் எதுக்கு உங்களக்கு வயித்துபோக்கு. முசிலீமும் பிற்போக்குதான் ஐயா. இப்போ உங்க வயித்துப்போக்கு நின்னுடுச்சா!

    • //உமக்கு முற்போக்கு பட்டதுக்காக ஒரு பாப்பான திட்ட வேண்டியது…. சும்மா பாப்பான்னு பூசாண்டி காட்டாதீர்… 100 வருசமா communism வருது வருதுன்னு நீர் என்ன புரட்சிய முடிச்சீரா..//

      தம்பி… டீ இன்னும் வரல….

    • R Nagaraj

      உமக்கு முற்போக்கு பட்டதுக்காக ஒரு பாப்பான திட்ட வேண்டியது…. சும்மா பாப்பான்னு பூசாண்டி காட்டாதீர்… 100 வருசமா communism வருது வருதுன்னு நீர் என்ன புரட்சிய முடிச்சீரா..//

      கம்யூனிசம் வருதோ இல்லையோ.ஆனால் அதற்கு முன்னாடி பூனூல் அறுக்கப்படும் எனபது மட்டும் நல்லா தெரியுது.

      • அட சேதி தெரியாதா… முன்னடிய அருத்தாச்சு… பல எடதுல… அப்படியும் பூர்ர்ர்ச்சி வரல ரசிகா… நீரு சரியனா சினிமா ரசிகன் போல

        • நாகராசூஊ…

          எனக்கு கவுண்டமணி ஜோக் நியாபகத்துக்கு வருது. வூட்டுக்குளெ அடி வாங்கிட்டே வெளியெ ‘அய், உய்’னு சவுண்டு மட்டும் குடுப்பாரு ஒரு படத்திலெ.

          ஆர்.எஸ்.எஸோட காக்கி டாயரு கியிஞ்சி காவி டயபரு பப்பரக்கான்னு காட்டிக்கிட்டு நிக்கிது. அதுக்கு ஒட்டுப் போட ஒரு வக்கில்ல. அதுக்குள்ள அங்க பாரு இங்க பாருன்னு… சோ.. ஸேட்.

          உங்களால முடியலைன்னா ஓடிப்போய் தமிழ்பொந்துக்குள்ள இருந்து வஸ்தாது எவனையாவது இட்னுவாங்க சாரே. அவுங்க சாகாவுல சொல்லிக் குடுக்காத பாடத்தையெல்லாம் இங்க கத்துக்கிட்டுப் போகட்டும்.

  20. //ஆனால் ஆர்.எஸ்.எஸ் என்பது இந்த நாட்டின் உழைக்கும் மக்களிடமும், சிறுபான்மை மக்களிடமும் இருந்து ரத்தத்தை உறிஞ்சி எடுத்து இந்த நாட்டை பல பத்தாண்டுகளில் ரத்த சகதியாக்கியருக்கும் ஒரு பாசிச அமைப்பு. //
    இதுவரை ஆர்.எஸ்.எஸ் யாரையும் சுரண்டிப் பிழைக்கவில்லை. அதன் தலைவர்கள் அத்துமீறிச் சொத்துச் சேர்த்தார்கள் என்று வரலாறு இல்லை. உழைக்கும் மக்களின் தோழர் பினராயி விஜயனின் சொத்துக்கணக்கை பார்த்துவிட்டு வந்து உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சுவது யார் என்று பேசுங்கள்!!

    குஜராத் நரேந்திர மோடியால் ஒளிர்கிறது, பிகார் நிதிஷ்-மோடிஆட்சியில் வளர்கிறது. கம்யூனிஸ்டுகள் ஆளும் மேற்கு வங்கம் மாவோயிஸ்டுகளால் சீரழிகிறது. இதிலிருந்தே தெரியவில்லையா யார் தேசத்தை ரத்தச் சகதியாக்குகிறார்கள் என்று?

    • இதில் உண்மை இருக்கிறது………………. கல்கத்தாவைப் போல மகா கேவலமான ஒரு நகரைப் பார்த்ததே இல்லை . ஆனால் அங்கு ஆளும் கம்யூனிஸ்ட்கள் எல்லாமும், பிரமணாவா தானே !!!

      • So Brahmins are responsible for everything and anything isn’t it and you strive to find some point related to Brahmins and make that as the reason

        I can only laugh at your reasoning.

        • இதே பிராமணக் குலத்தில் ஏன் பிறந்தோம் என வெட்கப்படுவதை தவிர என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை………………….. ! பிராமணர் மட்டுமில்லை அவர்களை அடியொற்றி வாழும் அனைத்து ஆதிக்கச் சாதிகளும் தலைகுனியும் காலம் வரும்

      • கம்யூனிஸ்டுலயும் சாதி இருக்குதோ? எல்லாம் பொது எனபவர்களாயிற்றே தோழர்கள்? பொதுவாக எங்கும் சொல்வது கம்பூனிஸ்டுக்குப் பொருந்துமா இக்பால்? அப்புறம் என்ன பேச்சு முச்சந்திக்கு முச்சந்தி மைக் பிடித்து வர்க்கபேதமற்ற சமுதாயம் அமைப்போம் என்று?

        வங்கத்தில் ஆளும் தோழர்கள் ப்ராமணவா என்றால் கம்யூனிஸம் மாண்டது. ஆள்வோர் சாதியற்ற தோழர்கள் என்றால் தோற்றது கம்யூனிஸம். மொத்தத்தில் commies are neck deep in trouble.

  21. அரவிந்தன் நீலகண்டன் போன்ற பச்சைப் பொய்யர்களான காவி பாசிஸ்டுகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் கிழக்கின் பத்ரி போன்றவர்கள் வரலாற்றின் போக்கில் பதில் சொல்லியே தீருவார்கள்.

    பா.ரா போன்ற ஆர் எஸ் எஸ் பினாமிகளும் வரலாற்றின் போக்கில் பதில் சொல்லியே தீருவார்கள்.

    • உண்மை தான்……. எதனையும் சொல்ல அவரவருக்கு உரிமை இருந்தாலும், சாதி வெறிப் பிடித்தவன் எல்லாம் எழுத வந்தால் இது தான் நிலைமை………. என்ன செய்ய?

  22. நாடு உருபடுவதர்க்கு உழைப்பதை விட்டுவிட்டு இவன் சரி இல்லை அவன் சரி இல்லை என்று இந்துவை இழிவு படுத்துவதுதான் உனக்கு வேலை

    • நீங்க சொல்றது 100% கரெக்டுங்க. உழைச்சு முன்னேறுவத விட்டுட்டு எப்பப்பார்த்தாலும் இந்த பார்ப்பனர்கள் மணியாட்டிகிட்டே நீ சுத்தமாயில்ல, நீ உள்ளே வராதே, நீ படிக்காதே, நீ கக்கூச கழுவுன்னு மத்த இந்துக்கள குறை சொல்லிக்கிட்டே இருக்குறாங்க. மற்ற இந்துக்களை இழிவுபடுத்துறதே பார்ப்பனர்களுக்கு வேலையாப் போச்சு

      • கலை

        நீங்க சொல்றது 100% கரெக்டுங்க. உழைச்சு முன்னேறுவத விட்டுட்டு எப்பப்பார்த்தாலும் இந்த பார்ப்பனர்கள் மணியாட்டிகிட்டே நீ சுத்தமாயில்ல, நீ உள்ளே வராதே, நீ படிக்காதே, நீ கக்கூச கழுவுன்னு மத்த இந்துக்கள குறை சொல்லிக்கிட்டே இருக்குறாங்க. மற்ற இந்துக்களை இழிவுபடுத்துறதே பார்ப்பனர்களுக்கு வேலையாப் போச்சு//

        அண்ணே கலை கட்டுரையை படித்துபார்த்ததும்,பூனூல் சும்மா இருக்காது போல.ஏன் ராமன் ஒன்னுக்கு அடித்த இடத்தையும்,ராமன் கக்கா போன இடத்தையும் தேடுரிங்க.இந்த டயலாக்கை முதலில் பூனூல் போட்டவங்கிட்ட கேள்

    • ram

      நாடு உருபடுவதர்க்கு உழைப்பதை விட்டுவிட்டு இவன் சரி இல்லை அவன் சரி இல்லை என்று இந்துவை இழிவு படுத்துவதுதான் உனக்கு வேலை..//

      ஐய தோட அன்னாத்த உழைக்க சொல்ராறுடா பாரு.காலங்காலமாக உழைக்காமலே திண்ணக்கூட்டம் உழைக்கிறதப்பத்தி பேசுது.

  23. பிரிவினையை முதலில் பேசியது முசுலீம் லீகா, இந்து மகா சபையா?

    அடுத்து புத்தகத்தின் துவக்கத்திலேயே முசுலீம் லீக் கட்சியினர் தனி நாடு கோரி பிரிவினை பேசினார்கள் என்றும் அதன் காரணமாக நடந்த கலவரங்களில், ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் தரப்பில் களமிறங்கியதாலேயே அது பரவலான வெளிச்சத்துக்கு வந்தது என்றும் சொல்கிறார் பா.ரா.

    ஆனால், உண்மையில் முசுலீம் லீக்கின் தனிநாடு கோரிக்கை வெளிப்பட்ட பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு 1923ஆம் ஆண்டு சாவர்க்கர் எழுதி வெளியிட்ட “ஹிந்துத்துவம்: யார் ஹிந்துக்கள்?” எனும் நூலில் தான் முதன் முறையாக இசுலாமியர்கள் இந்த நாட்டில் இந்துக்களோடு சேர்ந்து வாழ முடியாது எனும் பிரிவினை வாதம் பேசப்பட்டது. ஹெட்கேவார் அப்புத்தகம் கையெழுத்துப் பிரதியாக இருக்கும் போதே வாசித்தவர்.

    அப்புத்தகம் தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு ஆரம்பத்தில் ஒரு தத்துவ அடிப்படையை வழங்குவதாக இருந்தது. மிகத் தெளிவாக பார்ப்பனிய இந்து மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்வோரைத் தவிர்த்து வேறு எவருக்கும் இந்தியாவில் இடமில்லை என்பதை அப்புத்தகத்தில் தெளிவாக சாவர்க்கர் அறிவிக்கிறார்.

    • ஆர் எஸ் எஸ்க்கு சட்டி தூக்குபவர்கள் எல்லாம் முதலில் ஆர் எஸ் எஸ் ஒரு காவி பயங்கரவாத அமைப்பு அல்ல என்பதை நிரூபித்து விட்டு பேசட்டும். குண்டு வைப்புகளிலும், கலவரங்களிலும் மாட்டிக் கொண்டுள்ளது முதல் பொய்யையும், புனைச் சுருட்டுகளையும் வெட்கமின்றி பேசித் திரியும் அயோக்கியர்களின் மடமாக திகழும் ஆர் எஸ் எஸ்க்கு ஒருவன் சட்டி தூக்குகிறான் என்றால் அவன் அடிப்படையிலேயே மனிதன் பண்பிழந்தவன் என்றுதான் பார்க்க இயலும்.

    • //பிரிவினையை முதலில் பேசியது முசுலீம் லீகா, இந்து மகா சபையா?

      அடுத்து புத்தகத்தின் துவக்கத்திலேயே முசுலீம் லீக் கட்சியினர் தனி நாடு கோரி பிரிவினை பேசினார்கள் என்றும் அதன் காரணமாக நடந்த கலவரங்களில், ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் தரப்பில் களமிறங்கியதாலேயே அது பரவலான வெளிச்சத்துக்கு வந்தது என்றும் சொல்கிறார் பா.ரா.

      ஆனால், உண்மையில் முசுலீம் லீக்கின் தனிநாடு கோரிக்கை வெளிப்பட்ட பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு 1923ஆம் ஆண்டு சாவர்க்கர் எழுதி வெளியிட்ட “ஹிந்துத்துவம்: யார் ஹிந்துக்கள்?” எனும் நூலில் தான் முதன் முறையாக இசுலாமியர்கள் இந்த நாட்டில் இந்துக்களோடு சேர்ந்து வாழ முடியாது எனும் பிரிவினை வாதம் பேசப்பட்டது. ஹெட்கேவார் அப்புத்தகம் கையெழுத்துப் பிரதியாக இருக்கும் போதே வாசித்தவர்.

      அப்புத்தகம் தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு ஆரம்பத்தில் ஒரு தத்துவ அடிப்படையை வழங்குவதாக இருந்தது. மிகத் தெளிவாக பார்ப்பனிய இந்து மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்வோரைத் தவிர்த்து வேறு எவருக்கும் இந்தியாவில் இடமில்லை என்பதை அப்புத்தகத்தில் தெளிவாக சாவர்க்கர் அறிவிக்கிறார். ஆனால் இதற்கெல்லாம் வெகு காலம் முன்னதாகவே இந்துத்துவம் என்பது பேச்சளவிலும் செயல் அளவிலும் காங்கிரசில் இருந்த புகழ் பெற்ற பார்ப்பனப் பெருச்சாளிகளின் செயல்பாட்டில் இருந்தது.//

      மேலும், 1937 இந்து மஹா சபா மாநாட்டில் இந்தியாவை பிரிப்பது பற்றி பேசுகிறாரன் பிரிடிஷ் அடிவருடி சவர்கார்.

      நாடே ஒன்றிணைந்து போராட வேண்டிய இடத்தில் பிரிவினை பேசி மக்களை பிரிட்டிஸாரிடம் காட்டிக் கொடுக்கும் வேலையை இன்றைக்கு போலவே அன்றும் செய்தான் இந்த அடிவருடி நாய்.

      இந்த காலகட்டம் முழுவதும் இந்து மஹா சபையின் தலைவராக சவர்கார்தான் இருந்துள்ளான்.

      முதுகெலும்புள்ள ஆர் எஸ் எஸ் சட்டி தூக்கிகள் எவனும் இருந்தால் இந்த கூற்றுகளை மறுத்து வாதிடலாம். சரியான வகையில் பதில் கொடுக்கப்படும்.

      //
      In 1937 at the open session of the Hindu Mahasabha held at Ahmedabad, Veer Savarkar in his presidential address asserted : “India cannot be assumed today to be Unitarian and homogenous nation, but on the contrary there are two nations in the main – the Hindus and the Muslims.” (Vide writings Swatantrya Veer Savarkar, Vol. 6 page 296, Maharashtra Prantiya Hindu Mahasabha, Pune). In 1945, he had stated “I have no quarrel with Mr. Jinnah’s two nation theory. We, the Hindus are a nation by ourselves, and it is a historical fact that the Hindus and the Muslims are two nations.” (vide Indian Educational Register 1943 vol. 2 page 10)
      //

      http://www.care2.com/news/member/419948323/1191327

      //In 1937 Veer Savarkar was released from his internment and now he could take part in politics also. In that very year, he was elected president of Hindu Mahasbha, of which Dr. Hedgewar was vice-president. The 1937 session of Hindu Mahasbha was held at Karnavati (Ahemdabaad). The speech delivered by Veer Savarkar at the session is commonly known as Hindu Rastra Darshan. //

      • //முதுகெலும்புள்ள ஆர் எஸ் எஸ் சட்டி தூக்கிகள் எவனும் இருந்தால் இந்த கூற்றுகளை மறுத்து வாதிடலாம். சரியான வகையில் பதில் கொடுக்கப்படும்.//

        அப்புறம் சொல்ல மறந்து விட்டேன். பா.ராவுக்கு முதுகெலும்பு உள்ளதா இல்லையா என்பதை அவரது வலையுலக நண்பர்கள் (அரசியலைத் தாண்டிய புனித நண்பர்கள் நிறைய உலாவும் இடமில்லையா இந்த பதிவுலகம்?) அவரிடமோ அல்லது கிழக்கு பத்ரியிடமோ கேட்டு தெளிவுபடுத்திச் சொன்னால் உபயோகமாக இருக்கும். அவர்களே சுய வாக்குமூலம் கொடுத்தாலும் ஏற்புடையதே…

        • வழக்கமா கிழக்கு பத்ரி தனது பதிப்பகத்தாரின் மீதான கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகள், தகிடு தத்தங்களுக்கு விளக்கமளிப்பாரே அதே போல பா.ராவின் அண்டப்புளுகு புத்தகத்திற்கு எதுவும் விளக்கமோ, அல்லது ஏதேனும் இழவோ அளிப்பாரா?

        • அப்புறம் இன்னொரு விசயம்,எல்லாவற்றைப் பற்றியும் கருத்துச் சொல்லும் லிபரேட்டேரியன் பா.ரா.வின் ஆர்எஸ்எஸ் பற்றியும் கருத்துச் சொன்னால் சிறப்பாக இருக்கும்.

  24. அருமையான ஆய்வுக் கட்டுரை. கிழக்குப் பதிப்பகத்தாரின் உண்மை முகத்திரை கிழிந்து தொங்குகிறது. கடுமையான முயற்சி எடுத்து கட்டுரையைத் தொகுத்திருக்கிறார் கட்டுரையாசிரியர். அவருக்கு என் பாராட்டுகள். வினவின் உண்மையைத் தேடும் பயணம் தொடரட்டும்!

    • இவர் எழுதிய நிலமெல்லாம் இரத்தம் படிக்கும்போது இவரின் பொய், புரட்டு, திரிபு மற்ற இத்தியாதிகளெல்லாம் உங்களுக்குத் தெரியவில்லையா???

  25. “”””” கிளியோபாட்ரா தினமும் குளிக்கும் கழுதைப்பாலின் கதை, இந்திய சமஸ்தான ராஜாக்களின் தங்கக் கழிப்பறைகள், தென்னிந்திய தேவதை திரிஷாவின் வாழ்க்கை வரலாறு, கருப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்தின் வெற்றிக் கதை போன்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த வரலாறுகளையெல்லாம் ஆயிரக்கணக்கான பக்கங்களில் அழகான தரத்தோடு கிழக்கு பதிப்பகம் நூலாக கொண்டு வந்தால் அதை நாம் ஆட்சேபிக்கப் போவதில்லை.

    ஆனால் ஆர்.எஸ்.எஸ் என்பது இந்த நாட்டின் உழைக்கும் மக்களிடமும், சிறுபான்மை மக்களிடமும் இருந்து ரத்தத்தை உறிஞ்சி எடுத்து இந்த நாட்டை பல பத்தாண்டுகளில் ரத்த சகதியாக்கியருக்கும் ஒரு பாசிச அமைப்பு. அதன் வாழ்வும், இருப்பும், வரலாறும் இந்த நாட்டின் பிற்போக்குத்தனங்களுக்கு ஒரு அரண். அந்த அரணை இடித்து நொறுக்குவதில்தான் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் விடுதலை அடங்கியிருக்கிறது. எனவே இது நம்மைப் போன்றவர்களுக்கு சமூகக் கடமையாக இருக்கிறது. அத்தகைய கடமையேதும் இல்லாத, சந்தையில் விற்பனை இலாபம் என்ற பச்சையான சுயநலத்தை மட்டும் வைத்திருக்கும் கிழக்கு பதிப்பகம் போன்ற முதலாளிகளுக்கு ஆண்டாண்டு காலமாக இந்துத்துவ கூட்டத்தால் கொல்லப்பட்ட ஒரு முசுலீம் அல்லது ஒரு தலித்தின் அவலக்குரல் கேட்குமா என்ன? “””””

    கிழக்கு பதிப்பகம் – MAKING MONEY BY SUCKING INDIAN’s BLOOD !!!

    வரலாறும், அறிவும் மேட்டுக்குடி கோமான்களது பொழுது போக்கல்ல. அவை நமது வாழ்க்கையில் இரத்தமும், சதையுமாய் கலந்திருக்கும் சக்தி மூலங்கள். அதில் நாம் எந்த சமரசமும் செய்ய முடியாது. – YES

  26. As per Comrade Marudhaiyan’s Speech, we should care fully watch Enemy’s Intellectual activities and reply it.

    Vinavu did it well on this Article.

    What PIKKALI PAYA Ragavan said about “Saffron Terror” in that book?

  27. kalai said ///முசுலீமு முற்போக்குன்னு வினவு முற்போக்கு எங்கயாவது சொல்லியிருக்காரா. இல்லியே ////
    இல்லயா… அய்யா வினவார்… கலைய கட்சிய சேக்காதிங்க… சேர்ந்துட்டார்ன வுடனெ வெளியெ தள்ளுங்க..

  28. mannnarsamy said //உங்களால முடியலைன்னா ஓடிப்போய் தமிழ்பொந்துக்குள்ள இருந்து வஸ்தாது எவனையாவது இட்னுவாங்க சாரே. அவுங்க சாகாவுல சொல்லிக் குடுக்காத பாடத்தையெல்லாம் இங்க கத்துக்கிட்டுப் போகட்டும்////
    மன்னாரூஊஉ… உம்ம கட்சியிலெ பல பேரு உம்ம மாரி புரட்சி கத்துகிட்டு பல வருசம அதை நடமுற படுத்தல அத்த பாருஙண்ணா முதல்ல ……

    • உங்களைப்போல நிறைய பேரு புரட்சின்னா கூரையைப் பிய்ச்சிக்கிட்டு பொத்துன்னு விழும்னு புரிதல் இருக்கிறதுனாலதன் தமிழ்நாட்டுல நிறைய பேரு புரட்சின்னு அடைமொழி வச்சிகிட்டு அலையறாங்கன்னு நினைக்கிறேன். கரீக்டா!

      • கலை//
        தமிழ்நாட்டுல நிறைய பேரு புரட்சின்னு அடைமொழி வச்சிகிட்டு அலையறாங்கன்னு நினைக்கிறேன். கரீக்டா!//

        உன்னைப்போல கைப்புள்ள பசங்கலெல்லாம் புரட்சி என்றால் பொண்ணை கைப்புடிச்சி இழுக்கறது,தாலிக்கட்டறது,பிள்ளையை பெக்கறதுனு நினைக்கறதால தான்,புரட்சி என்றால் மறுதல் மாற்றம்,இயங்குதல் என்று தெரியவில்லை என்று தெரியவில்லை.

        • நீங்க என்னா சொல்ல வர்றீங்கன்னு எனக்கும் தெரியலை. ஆமா நீங்க யாருக்கு ரசிகன்.

      • கூறைய பிச்சுக்குதா தரைய பிச்சுக்குதா… ரசியாவிலயும் சீனாவிலயும் இப்போ தலய பிச்சுக்கிறாங்களே.. ஆனானப்பட்ட லெனின் மாவோ நாட்டிலய இந்தக் கதி… நீர் பாப்பான் வேதம் ஓதற மாதிரி முற்போக்கு மநதிரம் நமகா என்று சொல்லிக்கிட்டு 100 வருசம் புரட்சி கதா காலட்சேபம் பண்ணியும் ஒண்ணையும் காணல…. ஏசு கூட வந்துருவாரு போல.. புரட்சி வர்ற வழிய காணும்… அததான் நா பகடி பண்றேன்…

        • ஆர் .நாகராசு,
          இப்ப “ரசியாவிலையும், சீனாவிலும் தலையப் பிச்சுக்கிறாங்க” என்கிறீர்கள். அதையேதான் நாங்களும் கேக்கிறோம். உங்காளுங்கதானே அந்த நாடுகளை ஆள்கிறார்கள்?

  29. அப்படி ஒரு வழியாக கிழக்கின் சாயம் வெளுதிரிச்சு.வெளுத்த வினாவுக்கு வாழ்த்துக்கள்.

  30. இன்னொரு சந்தேகம் புத்தக கண்காட்சியில் கீழைகாற்றில் கிழக்கின் சில புத்தகங்கள் வைக்கபட்டிருந்தன.எனக்கே ஆச்சரியமாகதான் இருந்தது. அது ஏன்.

  31. காந்தியை சுட்டு கொன்ற அப்போவே இந்த பார்பன பண்டாரை பரதேசிகளை[rss ]
    பூண்டோடு எரித்து ஒழித்து கட்டியிருக்க வேண்டும்…ஆனால் அப்படி செய்யாமல்
    விட்டதன் விளைவுதான் இப்போது உண்மையான இந்தியா மக்களை நாசபடுத்திகொண்டும்
    நாட்டை காட்டிகொடுத்துகொண்டும் இருகிறார்கள்…இந்தியாவின் மிகபெரிய வரலாற்று
    பிழை rss விட்டுவைத்தது.என்பதைத்தான் சொல்லவேண்டும்.

  32. இவர்கள் வழங்கிய NHM Writer கொண்டுதான் நான் தமிழில் எழுதுகிறேன். இப்பொழுது லேட்டஸ்டாக புக்ரீடரையும் வெளியிட போகிறார்கள். வலைப்பூவில் இட்லிவடை, தளங்களில் தமிழ்பேப்பர், எழுத்தாளர் ஜெயமோகனின் பக்கபலம், லேட்டஸ்டாக பத்ரி சேஷாத்ரி டிவீட்டில் சாரு என இவர்களின் வளர்ச்சி அச்சுதுறையின் வளர்ச்சியா? இல்லை
    RSS யின் வளர்ச்சியா? நினைத்தாலே பயமாக இருக்கிறது.

    கிழக்கை தவிர்ப்பதே நல்லது

    • அழகி என்னும் தமிழச்சி தரும் ரைட்டரில் எழுதலாமே ! கிழக்கு என்ற பேரில் மேற்கில் இருந்து வரும் பணத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் என்பது உண்மை தான். நல்லாப் பாருங்களேன். தமிழ்நாட்டு ஆங்கில பேப்பரு/ஆங்கில இணைய செய்தி தளங்களில்… தி இந்து மட்டும் மிளிரும், அதே போல தமிழ் செய்தி தளங்களில் தினமலர் மிளிரும், அதே போல ரோடில் நாலுப் பெண்கள் நடந்து போனால் பிரமணாவ பெண்கள் முகம் மிளிரும், எல்லாம் பணம்/மேக்கப் செய்கிற வேலை……….

      மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்றுக் கேள்வி பட்டதில்லை. ஆனால் தமிழர்கள் மின்ன்வதைத் தான் விரும்புவா? அப்புறம் விளக்குல விழுந்த விட்டில் பூச்சியா பொங்கிக் கிடப்பா………….. புரிஞ்சுகிட்டா தப்புச்சுக்குவீங்க…………….

  33. ஆக, வரலாற்று ரீதியான நோக்கிலிருந்தும், சமகால ரத்தக் கவுச்சி சாட்சியங்களிலிருந்தும் வைத்துப் பார்க்கும் பொழுது, இந்திய சமூக கட்டமைவின் பிற்போக்குத்தன கெட்டித் தன்மைக்கு ஆதாரமாகவும், மனித உரிமை, ஜனநாயக உணர்வு என்ற பண்புகளுக்கு எதிராகவும் ஒடுக்கும் வர்க்கங்களின் காறி உமிழும் எச்சிலான ஆர்.எஸ்.எஸ்., இந்திய உழைக்கும் மக்களை நாகரீக கட்டத்திற்கு நகரவிடாமல் முடமாக்கியதில் முக்கிய பங்கு உண்டு என்பதில் கட்டுரை மிக ஆழமாகவும், விரிவாகவும் அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். குறித்து ஒரு ஒருங்கிணைந்த கண்ணோட்டததை கொடுக்கும் வகையில் வழங்கியுள்ளது. ஜனநாயகத்தையும், நாட்டின் விடுதலையையும் நேசிக்கும் எவரும் இந்த ஆர்.எஸ்.எஸ். கூடாரத்தை ஆதரிக முடியாது என்பதையும் கட்டுரை மிக அருமையாக உணர்த்துகிறது.
    பல கோடி ரூபாய் மதிப்பைக் கொண்ட ஒரு ஆலைக்கு இரவு பகலாக காவல் இருப்பது அதற்குச் சொந்தக்காரரான அதன் முதலாளியா? இந்த சொத்து மதிப்பிற்கு எந்த விதத்திலும் உரிமை பாராட்டிக்கொள்ள முடியாத ஒரு தினக் கூலி செக்யூரிட்டிதான் உணர்வுப் பூர்வமாக அந்த வேலையைச் செய்கிறார். இதே உத்தியைத்தான் இந்துத்துவா என்ற தத்துவத்தைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். ம் கையாள்கிறது என்பதை அப்பாவி ‘இந்துக்கள்’ உணர வேண்டும். கீழ் சாதி என்ற படி நிலையை (இழி நிலையை) வைத்துத்தான் ஆர்.எஸ்.எஸ். என்ற பாசிச கூடார இருப்புக்கே அடிப்படை என்பதை உணரவிடாமல் ‘நம்மாளு’ பிடிக்குள் கட்டிப்போட்டுள்ளது என்பதையும் கவ்னிக்க வேண்டும்.

  34. //அதே போல ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகள் திருமணம் செய்யவில்லை என்பது தியாகமென்றால் பதிவுலகில் திருமணம் ஆகாத அத்தனை பேரும் தியாகிகள்தான்.//
    இந்த ஒப்பீடு என்பது ஒருவகையில் பதிவுலகில் திருமணம் ஆகாத அத்தனை பேரையும் ஆர்.எஸ்.எஸ். காலிகளுடன் இணைத்து பொருள் தருவதாக இருப்பதால மனதிற்கு ஒரு வித நெருடலை ஏற்படுத்துகிறது. தோழர்கள் பரிசீலிக்கவும்.

  35. //மேலும் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை, புறக்கணிப்பு காரணமாக மதம் மாறியவர்கள் அந்த மக்கள். அதே போல நாடார்களில் கணிசாமானோரும் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர். மிச்சமிருக்கும் இந்து நாடார்களையும் ஏனைய சாதி இந்துக்களையும் திரட்டுவதற்கு இந்த விவேகானந்தர் நினைவு சின்னம் வழி அமைத்துக்கொடுக்கிறது.//

    பார்ப்பனீயத்திற்கு சரியான பதில்..

    ஆனால் இந்த பார்ப்பனியத்தை நமது மக்களும் ஏற்றுக்கொண்டு இன்று ஒரு காலத்தில் தாம் ஒதுக்கப்பட்டதை மறந்து பலர் அதனால் மதம் மாற காரணமாக இருந்த பார்ப்பனீயத்தின் ஆணிவேரை சிலர் பிடித்துக்கொண்டு திரிகிறார்கள் இவர்களை திருத்துவது தான் எப்படி என்று தெரியவில்லை..

    1847ல் சென்னையில் நீதிமன்றத்தில் யாரால் இவர்கள் தள்ளி நிற்கவைக்கப்பட்டர்களோ அவர்களே 1899ல் கமுதி கோயில் வழக்கில் இவர்களும் கோயிலுக்குள் வரலாம், நால்வர்ண சாதியில் மேல் வர்ணத்தை சேர்ந்தவர்கள் தான் நாடார் என்று சாட்சி சொன்ன தில்லைவால் திட்சீதர்களுக்கு பிறகு இவர்களுக்கும் வந்துவிட்டதா ஆதிக்க சாதி எண்ணம்.

  36. |கிழக்கில் ஜெயமோகனின் “உலோகம்“மட்டும் வாங்கினேன். முன்னட்டையில் ”ஈழப்போர் பின்னணியில் ஒரு திகைப்பூட்டும் திரில்லர்!”என்று போட்டிருக்கிறார்கள்| – தமிழ்நதி

    • எதுக்குங்க? அடுத்த பொத்தகத்தை பத்ரி போடணுமேங்குற விளம்பர ஆசையாலா?

  37. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை எதிர்ப்பது உங்க அரசியல். இதைத்தான் எல்லோரும் செய்யனும் என நீங்க எதிர்பார்ப்பதும் சரி. புத்தகத்தைத் தூக்கி வீசிதும் சரி.

    இதே விமர்சனம் கம்யூனிசத்திற்குக் கோயில் கட்டி காவடித்தூக்கும் உங்களுக்கும் வரிக்கு வரி போறுந்தாதா ? கம்மி அபிமானி , கொலைகார ஸ்டாலின் பக்தன் , சே குவாரா அடிவருடி என்று பட்டங்களையும் முத்திரைகளையும் அடிக்கிக் கொண்டே போகலாமே.

    கீழைக்காற்றில் ஸ்டாலின் லெனின் கொலைகளை மறைத்து எதாவது புத்தகம் இல்லாமலா இருக்கும் அதை வாங்கி படித்துவிட்டு உங்க கடைக்கு வந்து புக்க வீசிட்டு உழைக்கும் மக்களை ஏமாற்றாதே! புரட்சி எந்த ஊரிலும் இப்பூவுலகில் மலரவில்லை !! சுரணை இருந்தால் பணத்தைத்திருப்பிக்கொடு என நடுத்தர பார்ப்பனர்கள் போராட்டத்தில் இறங்கப் போகிறார்கள் தோழர்களே.

    விமர்சனம் கூர்மையாகவுமில்லை தரமாகவுமில்லை. மருதையன்பாட்டா சொல்லும் இணையவாசிப்பு போல் இணைய எழுத்தாக இருக்கிறது.

    • மிடில்கிளாஸ் அம்பி நோக்கு என்ன ப்ராப்ளம்? குழாயில ஜலம் வரல்லயா?
      கிழக்குல கூர்க்காவா எவ்ளோ போட்டு கொடுக்கறா நம்மவா?
      காவலுக்கு எவ்ளோ? கூவலுக்கு எவ்ளோ?

        • அம்பி நோக்கு மட்டுந்தேன் எல்லாம் தெரியுமோ?
          இந்த திமிருதானே மத்தவாள சண்டாளான்னு வையறது. மத்தவன் என்ன அபிஷ்டுவா?
          நேக்கு எல்லாம் தெரியும். வேணுன்னா தருமி சொக்கன் ஸ்டைலுல கேட்டு பாத்தடலாமா?

    • //நடுத்தர பார்ப்பனர்கள் போராட்டத்தில் இறங்கப் போகிறார்கள் தோழர்களே.//
      அட..இது நல்லயிருக்குதே. இதுவரைக்கும் அவங்க எதுவும் போராடி பாத்ததோ கேள்விப்பட்டதோ இல்லை.

  38. இந்த விமர்சனக் கட்டுரை சிறப்பு. சில இடங்களில் தகவல்கள் தெறிப்புகளாக மட்டும் வருகின்றன. இன்னும் கூடுதல் தகவல்களோடு, supportive arguments –உடன் நூலாக வந்தால் பயனளிக்கும். உதாரணமாக எ.ஜி நூரணி யுடைய RSS and BJP :Labour and Division என்னும் நூல் ஆர்.எஸ்.எஸ்-ஐ அதன் சொந்த வார்த்தைகளில அம்பலப்படுத்துகிறது. ஒரு பொதுவான வாசகருக்கு அது நம்பகத்தன்மையை அதிகம் அளிக்க வல்லது.

  39. கிழக்குப் பதிப்பகத்தைப் பற்றி நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் புத்தகக் கண்காட்சியின் போது நேரில் பார்த்த பிறகுதான் புரிந்தது அது மிக்பெரிய வலைப்பின்னல் கொண்ட நிறுவனம் என்று. வெறும் வியாபார இலாப நோக்கத்திற்காக மட்டும் அவர்கள் பதிப்பகம் நடத்தவில்லை, அந்நிறுவனத்தை நடத்துவோரின் அரசியல் கருத்துக்களை மக்களிடையே நைச்சியமாக புகுத்தி அதன் மூலம் மக்களின் மூளையை நஞ்சாக்கி தங்கள் பக்கம் ஈர்க்கும் யுக்தியை கையாளும் ஒரு நிறுவனம்தான் என்பதை இக்கட்டுரையை படித்த பிறகு உணர்கிறேன்.

    ஒரு ஊடகமோ அல்லது பதிப்பகமோ நடுநிலை எதையும் வகிக்க முடியாது. சார்புத் தன்மை கொண்டதாகத்தான் இருக்கும். தனிநபர்களும் அப்படித்தான். நடுநிலையாளர்கள் என்று எவரும் இருக்க முடியாது. இதைத்தான் “முதலாளிகளுக்கு மாமா வேலை செய்யும் பத்திரிகையாளர்கள்” என்ற கட்டுரையில் எனது பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளேன். அதையேதான் இங்கேயும் நான் வலியுறுத்த விருப்புகிறேன். எனவே பா.ரா வின் நூல் அப்படித்தான் இருக்கும். அதற்காக இவ்வளவு நீண்ட கட்டுரையை எழுதயிருக்க வேண்டியதில்லை என்பதே எனது கருத்து. எனினும் முயற்சி எடுத்த தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

    அடுத்து,

    ”மற்றபடி ஆர்.எஸ்.எஸ் வெளியிலிருந்தால் என்ன செய்திருக்குமோ அதை எந்தக் குறையுமில்லாமல் இந்திராவே நிறைவேற்றினார். தில்லி குடிசை வாழ் மக்களை அகற்றுவது, கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு போன்றவைகளை எதிர்த்துப் போராடிய ஏழை முசுலீம்களை ஆயுதம் கொண்டு காட்டுமிராண்டித்தனமாய் ஒடுக்கியது இந்திராவின் அரசாங்கம். இதனால் இன்றைக்கும் சஞ்செய் காந்தி எனும் சர்வாதிகார இளவலை ஆர்.எஸ்.எஸ் கூட்டம் பாராட்டித் திரிகிறது. மேனகா காந்தியும், வருண் காந்தியும் இன்று பா.ஜ.கவில் இருந்து கொண்டு இந்துவெறி பிரச்சாரத்தை செய்கிறார்கள் என்றால் அது அவர்களது மரபிலேயே இருக்கிறது என்பதுதான்.”

    இந்த பாராவில் “அவர்களது மரபிலேயே இருக்கிறது”. இதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். மரபிலேயே இருப்பது உடற் கூறு தொடர்பான (constitutional) பண்புகள் மட்டுமே. மேனகா காந்தியும், வருண் காந்தியும் இந்துவெறி பிரச்சாரம் செய்வது மரபுக் கூறினால் அல்ல. அது அவர்களின் கருத்தியல் ரீதியான நடவடிக்கையே.

  40. பார்ப்பனியத்தை,இழ்ந்த அதிகாரத்தை மீட்பது தான் ஆர் எஸ் எஸ் இன் ஒரே நோக்கம்.எலோரும் இந்துக்கள் என்கிற பஜனை சாதிய இழிவுகளால் அம்பலமாகி விடுகிறது.வருணாசிரம தருமஙகளை பேணிக்கொண்டெ சமத்துவத்தை கொண்டு வரலாம் என்று கனவு கண்கிறது ஆர் எஸ் எஸ்.இது நடக்காது என்பதால் மக்களின் மடமையைப் பயன்படுதி பல பொய்களையும் புனைசுருட்டுகளையும் பரப்பிக்கொண்டிருக்கிற்து.இப்போது பா ரா போன்றவர்கள் சேரிந்திருக்கிறார்கள்.விஷ்ணுபுரம் ஜயமோகி இதற்க்கு தலமை தாஙுகுகிறார்.பார்பனிய ஊடகஙகளும் இவர்களின் கருத்துக்களை பகட்டு மொழியில் பரப்புகிறார்கள்.இவர்கள் வரலாற்றை மட்டுமல்ல எல்லாவற்றையும் இப்படி கூசாமல் புரட்டுகிறர்கள்.இது தான் ஆர் எஸ் எஸ்ன் பண்பாட்டு நெறி முறை.பார்பனீயம் நேருக்கு நேர் நின்று போராடுவது குறைவு.பிறரை தூண்டி வேடிக்கை பார்ப்பது வழக்கம்..இந்த உண்மைகளை நிறுவுவ்தற்க்கு வகை வகையான ஆதாரஙள் இந்த பதிவில் தரப்பட்டுள்ள்ன.பதிவு நீளமானாலும் நிதானாமாகப் படித்தால் ஃப்ல்லா உண்மைகளும் விளங்கும்.

  41. //கலைஞர் குடும்பத்தில் அனைவரும் பிராமண/ஆதிக்கச் சாதி மருமகள் தானே வருகிறார்கள், ஒரு தலித் உண்டா? ( எனக்கு தெரிந்து இல்லை ). //
    அண்ணன் அஞ்சாநெஞ்சன் ஆனா என்று அன்பாக அழைக்கப்படும் மத்திய இரசாயனத்துறை அமைச்சர் அழகிரியாரின் மனைவி காந்தி அழகிரியார் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற ஊரறிந்த உண்மை உங்களுக்கு ஏன் தெரியவில்லை, இக்பால்?

  42. “”ஆயிரக்கணக்கான முசுலீம்களை இனப்படுகொலை செய்து, “”
    எதனால்? 200 மேற்பட்டவ்ர்களை உயிரோடு எரித்ததால்தானே!!

    உங்கள் வாதங்களில் நேர்மை கிடையாது.

    • யார் எரித்தது?
      அரசாங்க விசாரணை முடிவுகளை அறியாது பேசுகிறீர்களா?
      அறிந்து பேசுகிறீர்களா?

      இப்போழுது அம்பலமகியிருக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் விஷமங்களின் பின்னணியில் பார்த்தால்
      அந்த எரிப்பின் பின்னாலும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கைகள் இருக்குமோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

      • //யார் எரித்தது?
        அரசாங்க விசாரணை முடிவுகளை அறியாது பேசுகிறீர்களா?
        அறிந்து பேசுகிறீர்களா?//

        நானாவதி கமிஷன் முடிவுகளைப் பற்றிதான் சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
        கமிஷன் “கரசேவகர்களை தாக்கும் நோக்கத்துடன் சபர்மதி எக்ஸ்பிரஸ் திட்டமிடப்பட்டு தாக்கப்பட்டது” என்று மிகவும் தெளிவாக சொல்லியிருக்கிறது.

        ரயில் எரிப்பிற்கு எதிர்வினையாக குஜராத்தில் நிகழ்ந்ததை நியாயப்படுத்த இதை சொல்லவில்லை. ஆனால் இந்தியாவில் இந்து-முஸ்லிம் உறவு என்பது சரித்திர காரணங்களினால் எப்பொழுது வேண்டுமானாலும் தீப்பற்றிக் கொள்ளக்கூடிய flashpointல் தான் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

        http://www.rediff.com/news/2008/sep/27godhra.pdf

        227. On the basis of the facts and cirumsances proved by the evidence the Commission comes to the conclusion that burning of coach S/6 was a pre-planned act. In other words there was a conspiracy to burn coach S/6 of the Sabarmati Express train coming from Ayodhya and to cause harm to the Karsevaks travelling in that coach.

        • கோத்ரா தொடர்வண்டி எரிப்பு முசுலிம்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல.
          ஆதாரம்.
          http://www.hinduonnet.com/fline/fl2006/stories/20030328003203700.htm

          அந்த பெட்டி உள்ளிருந்துதான் எரியூட்டப்பட்டிருக்க வேண்டும் என குசராத் தடய அறிவியல் துறை ஆராய்ந்து சொல்லியிருப்பதையும் கவனிக்க வேண்டும்.அதில் இறந்தவர்கள் உடலின் மேற்பகுதியில் தீக்காயமுற்றே இறந்து போயுள்ளனர். கால்பகுதியில் காயமுறவில்லை.வெளியிலிருந்து பெட்ரோல் பெட்டியின் உள்ளே ஊற்றப்பட்டு தீ மூட்டப்பட்டிருந்தால் தரையிலிருந்தே தீ பற்றி பரவி இருக்கும். மாறாக மேற்புறத்திலிருந்து தீ பரவியுள்ளது.அப்படியானால் பெட்டிக்குள் ஏற்கனவே இருந்த பெட்ரோலே தீ மூட்ட பயன்பட்டிருக்கிறது.

          மேலும் முசுலிம்கள் இந்த எரிப்பை திட்டமிட்டிருந்தால் அவர்கள் கரசேவகர்களை ஆத்திரமூட்டி -provocation -வம்பிழுத்து கலவரத்தை உருவாக்கியிருக்க வேண்டும். மாறாக கரசேவகர்கள் நடைமேடையில் நின்ற ஒரு இளம் முசுலிம் பெண்ணை வாயை பொத்தி வண்டிக்குள் இழுத்துச்செல்ல முயன்றுள்ளனர்.தேநீர் விற்று கொண்டிருந்த ஒரு முசுலிமை ”செய் சிறி ராம்”என கூறுமாறு வற்புறுத்தி அவர் மறுக்கவே அவரோடு சண்டையிட்டுள்ளனர்.அதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த இரண்டு போரா முசுலிம்களை தாக்குவதற்காக துரத்தி சென்றுள்ளனர்.பயணம் முழுவதும்,குறிப்பாக கோத்ரா நிலையத்தில் முசுலிம்களை இழிவு படுத்தி முழக்கங்கள் எழுப்பியுள்ளனர்.ஆக ஆத்திரமூட்டல் எங்கிருந்து யாருக்கு வந்துள்ளது.ஆக இந்த தொடர் வண்டி எரிப்பு முசுலிம்கள் திட்டமிட்டு நடத்தியதல்ல,முசுலிம்களால் நடத்தப்பட்டதும் அல்ல,என்பதை இந்த சுட்டியின் கட்டுரையை விருப்பு வெறுப்பின்றி படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.

          • மிகப் பெரும்பான்மையான பிராமணர்கள் வேலைத் தளங்களில் செய்யும் சூழ்ச்சிகளைப் பற்றி நீங்கள் எழுதலாமே நண்பர் திப்பு அவர்களே.

        • உண்மை திப்பு. ஆனால் உங்களுக்கு பதில் அளிக்க ஒருவரும் வர மாட்டார்கள். அவர்களனைவரும் ஒரு வெறிபிடித்த ஓநாயின் கரிசனத்துடன் முஸ்லிம் பெண்களை பர்தாவிலிருந்து
          வெளிக்கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறார்கள்.

      • அது சரி, திரு கரம்மசாலா, எப்பொழுதிலிருந்து பார்ப்பண-பாசிச நீதித்துறை நீதிபதிகளின் விசாரணை கமிஷன்களை நம்ப ஆரம்பிச்சீங்க!

  43. அருமையானதொரு எதிர்வினை.

    //அதே போல ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகள் திருமணம் செய்யவில்லை என்பது தியாகமென்றால் //

    1970 களில் தேவரஸ் தலைவராக இருந்த பொழுது, பேச்சிலர் பிரச்சாரக்குகள் போகிற, வருகிற இடங்களில், பாலியல் பிரச்சனைகள் செய்ய, தேவரஸ் “பிரச்சாரக்குகள் இனி திருமணம் செய்து கொள்ளலாம்” என திருத்தம் கொண்டு வந்தார் என “ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்” இராஜேந்திரன் அவர்கள் எழுதிய புத்தகத்தில் படித்திருக்கிறேன்.

  44. The book is utter crap. The only benefit might be that it inspired a fairly broad-based and well-writtern article on RSS like this one.

  45. நீங்கள் இங்கு ஆதாரமாக கொடுத்து இருக்கும் வெப்சைட் இல் இருந்தே உங்கள் நாடு நிலைமை தெரிகிறது !! உலகத்தில் வர்க்க சிந்தனை போராட்டம் என்று சொல்லி அதிகமான மக்களை கொன்ற கம்முனிச சிந்தனையை ஆதரிக்கும் உங்களிடம் இருந்து வேறு எதை எதிர் பார்க்க முடியும். நீங்கள் ஆர்எஸ்எஸ் ஏன் போராடவில்லை என்று கேட்குரீர்கள் ?? நீங்கள் போராட்டத்தை தவிர வேறு என்ன செய்து இருக்குறீர்கள் ?? போராட்டம் மட்டும் தான் உங்கள் வேலையே ?? நீங்கள் உருப்படியான எதாவது விஷயத்துக்கு போராடி இருகுரீர்களா ?? வெறும் செவுத்தில் எழுதுவது மூலமாகவே புரட்சி ஏற்படுத்தலாம் என்று நினைக்கும் உங்களுக்கு ஆர்எஸ்எஸ் இன் வேலைகளால் கோவம் தான் வரும் !! என்ன செய்ய !!

  46. I don’t agree with your your attitude of blindly opposing and degrading the sacrifices of big leaders… If you have guts can you prove that all Muslims are good? I am working in Middle East… What I can conclude from your articles is that you are always prejudiced with Brahmins and Hindus….

    This is because of our tolerance….

    Can you write anything like this about Muslims?

    I have Muslim friends… I am a Brahmin….I work and I earn and I live…. Just like others…..

    Simply criticising brahmins and hindus you can find relief for your inner itch…

    Everyonoe have the right to live as they please without hurting others.

    ” Good & Evil cannot be caused by others”

  47. Intha ragavan book ku renda padichi irukken(maoist,hitler). nadu nillamai nu sollittu urupidiya oonum sollama maoist thappa perusa solluvan govt panna thappa oru veri sonnalum perisu!! ivanala yennaku 200 loss anathu than micham!!!!!!

  48. இப்படி ஒரு காட்டமான பதிவை நான் படித்ததில்லை. கட்டுரையின் அடிப்படை உணர்வை நான் மிகவும் மதிக்கிறேன். யார் எழுதினாலும் சரி, அது உண்மைக்குப் புறம்பாகவும், வரலாற்றுத் திரிபாகவும், சாய்வு கொண்டதாகவும் இருக்குமானால் அது நிச்சயம் எதிர்க்கப்பட வேண்டியதுதான். கட்டுரையின் ஊடே ஆங்காங்கே வரும் கிண்டல்கள்கூட வெகு தீவிரத்துடன் உள்ளன. இதை நண்பர் பாரா பார்த்தாரா?

  49. அருமையான விமர்சனம். நல்லவேளை நான் இந்த புத்தகத்தை வாங்கவில்லை. இந்த வெட்டி பசங்க இப்படிதான் இவங்க இருக்கிற பதவியை அல்லது அந்தஸ்தை பயன்படுத்தி, மக்களுக்கு தவறான விஷயங்களை புகுத்துகின்றனர்.

    இதேபோல் இன்னுரு புத்தகமும் எழுதி உள்ளார்கள், ” யூதர்களின் வரலாறு”… அதுவும் இப்படிதானா????

  50. i can bet none you morons have a clue about RSS.What they said is right,In United India,Hindus would have been only 65% and it is impossible to tolerate so many muslims at once,forget about one.

  51. பா.ரா ஒரு எழுத்தாளனுகுரிய அடிப்படைத் தகுதி இல்லாதவர். சதாம், ஈராக் பற்றி தெரிந்து கொள்ள அவரது புத்தகத்தைப் ப்டித்தால் எழுத்து உவமை, கருத்து எல்லாம் அரைவேக்காடு.என்னுடைய பணம் நேரம் வீண். இவர் மெய்வழிச் சாமியார், தலாய்லாமா போல. இவர் என்ன சொன்னாலும் வேதம். இது மேட்டுக்குடி நியாயம். அறிவைத் தேடி அலைந்த போது ஒட்டிக்கொண்ட புல்லுருவி.

  52. பாரத மாதாவை க**ப *ழி *து பற்றி நீங்கள் கூறியுள்ள கருத்தை தயவுசெய்து எடுக்கவும் . அது என் உயிரை எடுப்பது போல் உள்ளது . உங்கள் கருத்தை வேறு விதமாக சொல்லவும் .
    நன்றி
    மணிமாறன்

  53. இந்தியாவிலிருந்து முஸ்லீம்கள் பிரிய காரணம் இந்து அமைப்புகள் என்ற வாதத்தை வைத்துள்ளீர்கள். எனது வாதம் அலிகார் பல்கலைகழகத்தை நிறுவிய சையது அகமது கான் அவர்களின் நோக்கம் என்ன ? என்பதை திரு இராமசந்திர குஹா நவீன இந்தியாவின் சிற்பிகள் என்ற நூலில் மேற்கோள் காட்டியுள்ளார். அவர் படி அதன் தாக்கத்தின் நீட்சியாகவே முகமது அலி ஜின்னா தனிநாடு கோரிக்கையை கையில் எடுக்கும் போது இதற்கு இந்து மகா சபை என்ற மேற்கோள் காட்டுவது பொருந்துமா ?

Leave a Reply to ஹமீது பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க