privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கடாஸ்மாக் அருளும் இலவசங்கள்! தமிழகத்தை அழிக்கும் வக்கிரம்!!

டாஸ்மாக் அருளும் இலவசங்கள்! தமிழகத்தை அழிக்கும் வக்கிரம்!!

-

ந்த தேர்தலில் ஜெயா தலைமையிலான எதிர்க்கட்சிகள் ” ஊழல் எதிர்ப்பு, குடும்ப ஆட்சி எதிர்ப்பு ” என்ற இரண்டு பிரச்சினைகளை வைத்து பிரச்சாரம் செய்கின்றன. ஆனால் ஊழலின் தோற்றுவாயான தனியார் மயம் குறித்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டிற்கும் எந்த வேறுபாடுமில்லை. இரண்டுமே அதை ஆதரிக்கின்றன.

ஜெயலலிதாவின் ஊழலை விட பன்மடங்கு பெரிய ஊழல்களைச் செய்து தன் குடும்ப பரிவாரங்களையெல்லாம் கோடீசுவரர்களாக்கி குடும்ப ஆட்சி நடத்தி வரும் கருணாநிதி (தலைமையிலான திமுக கூட்டணி) சென்ற தேர்தலின் போது இலவசத் திட்டங்களை அறிவித்து வெற்றி பெற்றது போல, இப்போதும் வெற்றி பெற பல புதிய கவர்ச்சிகரமான இலவசங்களை அறிவித்துள்ளார்.

ஏட்டிக்குப் போட்டியாக ஜெயலலிதாவும் இலவச திட்டங்களை அறிவித்துள்ளார். இந்த இலவசங்களையெல்லாம் தனது பரம்பரை சொத்திலிருந்தோ அல்லது மனைவி தயாளு அம்மையாரும் துணைவி ராஜாத்தி அம்மையாரும் கொண்டு வந்த தாய்வீட்டு சீதனத்திலிருந்தோ, அல்லது அவரது வாரிசுகள் வேலைக்கு சென்றோ, தொழில் நடத்தியோ ஈட்டிய பணத்திலிருந்தோ கொடுத்ததில்லை; கொடுக்கப் போவதில்லை. ஜெயாசசி கும்பலும் தாங்கள் கொள்ளையடித்த சொத்தை செலவு செய்து இலவசங்களை கொடுக்கப் போவதில்லை.

மாறாக இரண்டு வழிகளில் மக்களிடமிருந்து பணத்தை பறித்தெடுத்துத்தான் அந்தப் பணத்தைக் கொண்டுதான் இந்த “இலவசங்கள்” மக்களுக்கு வழங்கப்படுகின்றன. ஒன்று, டாஸ்மாக் சாராயக் கடைகள் மூலம் உழைக்கும் மக்களிடமிருந்து பணம் பறிக்கப்படுகின்றது. அரசு நிறுவனமான டாஸ்மாக் 1983-84இல் தொடங்கப்பட்டபோது, அதன் முதலீட்டுத் தொகை ரூ15 கோடி. அன்றைய ஆண்டு வருவாய் ரூ. 139 கோடி மட்டுமே. இன்றைய ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 15,000 கோடி. 25 ஆண்டுகளில் 107 மடங்கு வளர்ச்சி. இந்தியாவில் எந்த நிறுவனமும் இத்தகைய வளர்ச்சியை அடைந்திருக்காது.

மது விற்பனையை தனியார் மூலம் நடத்திய அரசு 2003&04இல் டாஸ்மாக் மூலம் நேரடி விற்பனையைத் தொடங்கியபோது கிடைத்த ஆண்டு வருவாய் ரூ. 2828 கோடி. 2009&10இல் இது ரூ. 12461 கோடியாக உயர்ந்து நடப்பாண்டில் ரூ. 15,000 கோடியைத் தாண்டி விட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ. 50,000 கோடிக்கு மேல் மது விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

இந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு ரூபாய் அரிசித் திட்டத்திற்கு சுமார் ரூ. 15,000 கோடியும், இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டத்திற்கு ரூ. 4500 கோடியும் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டத்திற்கு ரூ. 650 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. (முகவை க. சிவகுமார், தினமணி, 1.3.2011). இன்னும் இருக்கின்ற பிற இலவச திட்டங்களுக்கும் சேர்த்துப் பார்த்தால் கூட கடந்த ஐந்தாண்டுகளில் கருணாநிதி அரசு வழங்கிய இலவச திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி அதிகபட்சம் ரூ. 40,000 கோடியைக்கூட தாண்டாது. அரசுக்கு குறைந்தது ரூ. 10,000 கோடியாவது ஆதாயம் கிடைத்துள்ளது.

இன்னொரு பக்கம் மதுவை உற்பத்தி செய்யும் சாராய ஆலை அதிபர்கள் அடைந்த இலாபம் பல கோடிகள் இருக்கும். மதுவிற்பனையை தொடர்ந்து அனுமதித்ததற்காக சாராய ஆலை அதிபர்களிடமிருந்து கருணாநிதி குடும்பம் பெற்ற கட்டிங் எத்தனை கோடிகளோ! எல்லாவற்றையும் விட, டி.ஆர்.பாலு, ராஜாத்தி அம்மையார் போன்றோரே சாராய ஆலையையும் நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் வியாபாரம் மூலம் இவர்களுக்கும் நல்ல லாபம்!

“குடியின் போதையில் வாய்ச்சண்டை முற்றி அடிதடி கொலை, குடிப்பழக்கம் காரணமாக கடனாளியாகி குடும்பமே தற்கொலை, குடிபோதையில் மனைவி, குழந்தைகளை வெட்டிக் கொன்ற விவசாயி” என அன்றாடம் மூன்று நான்கு செய்திகள் பத்திரிகைகளில் வருகின்றன. அண்மைக் காலமாக பாதிக்கு மேற்பட்ட குற்ற நிகழ்வுகள் குடிபோதையினால் நடந்தவையே! அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் வரதட்சணையை விட குடிபோதையில் பெண்களை துன்புறுத்தும் கணவன்மார் மீதான புகார்கள் தான் மொத்தப் புகார்களில் 80% இருக்கின்றது.

நெடுஞ்சாலை விபத்துகள் பல குடிபோதையில் ஏற்படுபவையே! நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியதன் விளைவாக ஏற்பட்ட ஒரு விபத்தில் 28 பேர் இறந்தனர்; 35 பேர் பலத்த காயமடைந்தனர்; இன்னும் பலருக்கு சிறுகாயங்கள்; விபத்துக்கு காரணம் சரக்கு ரயிலின் ஓட்டுனர் நினைவை இழந்து போகும் அளவுக்கு குடித்திருந்ததுதான் என்று பின்னர் நடந்த மருத்துவ ஆய்வு தெரிவித்தது. தொடர்ச்சியான மதுப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு மரணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இவைகளின் காரணமாக தமிழ்நாட்டில் இளம் விதவைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு  குறிப்பாக நகர்ப்புறங்களில்  அதிகரித்துள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே குடிப்பழக்கம் அதிகரித்து வருகின்றது. இதனால் எதிர்கால தலைமுறையே சீரழிந்து நாசமாய் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிபோதையினால் ஏற்படும் உற்பத்தி இழப்பு, மரணங்கள் மூலம் இழப்பு, குடியினால் வரும் உடல்நலக் கேட்டிற்கு மருத்துவம் செய்ய செலவிடும் தொகை ஆகியவற்றைக் கணக்கிட்டால் மது விற்பனையில் வரும் வருவாயைவிட அதிகம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

‘குடி’மக்கள் குடிப்பதை நிறுத்தினால் அதனால் அவர்களின் குடும்ப சேமிப்பு நடக்கும். அல்லது குடிப்பதற்கு செலவிடப்படும் பணம் பிற பயனுள்ள பொருட்களை வாங்க பயன்படுத்தப்படும். இந்த விற்பனை மூலம் மறைமுக வரியாக அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் வருவாய் கிடைக்கும். பண்பாட்டு சீரழிவும் நோய்களும் மரணங்களும் குறையும்.

இவை பற்றியெல்லாம் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்கு தெரியும். ஆனால் எந்தக் கூட்டணியும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமுல்படுத்துவோம் என்று சொல்லவில்லை. மாறாக, போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் அறிவிக்கின்றன. இந்த இலவசத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால் தமிழச்சிகளை தாலியறுக்கும், இளைய தலைமுறையினரை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். கூட்டணித் தலைவர்கள் நம்பியிருப்பது இதைத்தான்! அடுத்த ஐந்து ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருவாய் ஒரு இலட்சம் கோடி ரூபாய்களைத் தாண்டும் என்று அவர்களுக்கு தெரியும். அதில் அதிகபட்சம் 60&70%ஐ செலவழித்தாலே போதும், இந்த இலவசத் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்றும் அவர்களுக்கு தெரியும்.

சேவை வரி உள்ளிட்ட மறைமுக வரிகள் மூலம் உழைக்கும் மக்களின் வருமானத்தை பிக்பாக்கெட் அடிக்கின்றது அரசு; இந்த வரிகளும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. இதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய்களை மக்களிடமிருந்து பிடுங்கிக் கொள்கிறது அரசு.

சாராய விற்பனை  டாஸ்மாக் மூலம் இளம் தமிழச்சிகளின் தாலியறுத்து, இளம் தலைமுறையினரையே சீரழித்து, சின்னாபின்னமாக்கி, குடிகார கணவன்களால் பெண்கள், குழந்தைகளின் மன அமைதியை இழக்க வைத்து, அவர்களை அன்றாடம் சித்திரவதைக்குள்ளாக்கி அந்த அவலம், சோகம், கண்ணீரிலிருந்து கறக்கப்பட்ட பணத்தைக் கொண்டு, பறி கொடுத்த மக்களுக்கு மிக்சி, கிரைண்டர், மடிக் கணினி போன்றவைகளை இலவசமாக தருவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? எவ்வளவு பெரிய கிரிமினல் குற்றம்? எவ்வளவு பெரிய கொடூரம்? பதவிக்கு வந்து மக்கள் பணத்தை பகற்கொள்ளையடிக்கவும் சாராய அதிபர்கள் பெரும் இலாபம் ஈட்டவும் கொடுக்கப்படும் இந்த இலவசங்கள் ஏதோ அந்தக் கூட்டணித் தலைவரின் தயாள குணத்திலிருந்து பிறந்த மக்கள் மீதான பாசம், பரிவு என்றெல்லாம் சித்தரித்து ஓட்டு கேட்பது எவ்வளவு பெரிய மோசடி? எவ்வளவு பெரிய பித்தலாட்டம்? எவ்வளவு பெரிய வக்கிரம்?

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் “மதுவிலக்கை அமுல்படுத்த போராடுவோம்” என்று அறிவித்துள்ளன. திமுகவுடனான கூட்டணி கொள்கைக்கான கூட்டணி அல்ல; இந்தக் கூட்டணிக்கென்று குறைந்தபட்ச பொதுத்திட்டம் எதுவும் இல்லை; வெறும் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் என்று கூறியுள்ளனர் பாமக தலைவர் இராமதாசு. அப்புறம் எப்படி இவர் சார்ந்துள்ள கூட்டணி வெற்றி பெற்றால் மதுவிலக்கை அமுல்படுத்தும்? இவர் சார்ந்துள்ள திமுக கூட்டணிகளில் காங்கிரசு, திமுக இரண்டும் உள்ளன. இரண்டும் மத்திய, மாநில அரசுகளை ஆள்பவை. இன்னும் பல கோடி மக்களை குடிபோதையில் ஆழ்த்தி பதவி ஆதாயம் தேடும் கட்சிகள்! இவர்களிடம் மதுவிலக்கை அமுல்படுத்தச் சொல்லி போராடுவாரா இராமதாசு; அப்படிப் போராடினால் கூட்டணியில் நீடிக்க முடியுமா?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோ தேசிய அளவில் முழுமையான மதுவிலக்கை அமுல்படுத்த தொடர்ந்து வலியுறுத்தும் என்று தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கொடூர நகைச்சுவை என்று சொல்வார்களே அதற்கு தலைசிறந்த விளக்கமாக இவர்களின் இந்த தேர்தல் வாக்குறுதி இருக்கின்றது! தமிழ்நாட்டிலேயே கூரையேறாதவர்கள், தேசிய அளவில் வானமேறப் போகிறார்களாம்! நடக்க முடியாத, தாங்கள் வலியுறுத்த விரும்பாத மதுவிலக்கை தேசிய அளவில் அமுல்படுத்த வலியுறுத்துவதாக சொல்வது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்? மக்களை அந்த அளவிற்கு இளிச்சவாயன்களாக, ஏமாளிகளாக இவர்கள் கருதுகிறார்கள் என்பதுதான் இதன் பொருள். தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் சாராயம் குடிக்கக் கூடாது, குடிப்பவர்களை கட்சியில் சேர்க்க மாட்டோம் என்று அறிவிப்பார்களா? பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 50% இட ஒதுக்கீடு கேட்டுப் போராடுவோம் என்று சொல்லும் இராமதாசு தனது வேட்பாளராக ஒரு பெண்மணியைக் கூட நிறுத்தவில்லை! இதுதான் இவர்களின் உண்மை முகம்! யோக்கியதை!!

எனவே இலவசங்களை எதிர்பார்த்து ஓட்டளிப்பதென்பது கடவுளின் அருளைப் பெறுவதற்காக தனது தலையில் தானே தேங்காய் உடைத்துக் கொள்வதற்கும், இரத்தம் பீறிட சாட்டையால் பளீர் பளீரென தன்னைத்தானே அடித்துக் கொள்வதற்கும், உடம்பெல்லாம் வெட்டுக்கத்தியால் தானே வெட்டிக் கொள்வதற்கு ஒப்பானதாகும். நமது ரத்தத்தை விலைபேசி அதன் மூலம் நமக்கு பிரியாணி தருவதாக கூறுவதுதான் இந்த தேர்தல். இலவசங்களின் பின்னே நாம் இழக்கப்போவது ஆரோக்கியமான தமிழ் மக்களின் எதிர்காலத்தை!

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

  1. டாஸ்மாக் அருளும் இலவசங்கள் ! தமிழகத்தை அழிக்கும் வக்கிரம் !! | வினவு!…

    போட்டி போட்டுக் அறிவிக்கப்படும் இலவசத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால் தமிழச்சிகளை தாலியறுக்கும், இளைய தலைமுறையினரை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்….

  2. அப்பாடா, ரொம்ப நாள் கழித்து நான் முற்றிலும் உடன்படும் ஒரு பதிவு.

    /*சேவை வரி உள்ளிட்ட மறைமுக வரிகள் மூலம் உழைக்கும் மக்களின் வருமானத்தை பிக்பாக்கெட் அடிக்கின்றது அரசு; இந்த வரிகளும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. இதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய்களை மக்களிடமிருந்து பிடுங்கிக் கொள்கிறது அரசு/

    நான் நாயாய் உழைத்து சம்பாதித்து கட்டும் வரிப்பணத்தை இப்படி இறைக்கிறார்கள் சனியன்கள், இதற்கு ‘ஏழை மக்களுக்கு இலவசம்’ என்று வேஷம் வேறு. எல்லோரையும் துரத்திவிட்டு நல்ல பொருளாதார நிபுணர்களை அமைச்சர்களாக கொண்டு வர வேண்டும்.

    சாராய வியாபாரம் – அரசு நிறுத்தினாலும் மற்றவர்கள் செய்வார்கள். படிக்கவே துயரமாக இருக்கிறது – இவ்விஷயத்தில் மக்களாக பார்த்து திருந்தினால்தான் உண்டு.

    • முன் அனுமானம் (free from prejudice) ஏதும் இன்றி படியுங்கள். வினவின் எல்லா படைப்புகளும் உங்களுக்கும் உடன்பாடுள்ளதாகத்தான் இருக்கும்.

      • ஆமாங்க – இன்னிக்கி புரிஞ்சு போச்சு. வினவு கண்டிப்பாக ஒரு வலதுசாரிதான் !

        வரி வசூலிப்பையும், வசூலித்த காசை ஊதாரித்தனமாக செலவு செய்யும் அரசையும் கண்டிக்கும் வலதுசாரி வினவுக்கு நம் வாழ்த்துகள் !

  3. பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 50% இட ஒதுக்கீடு கேட்டுப் போராடுவோம் என்று சொல்லும் இராமதாசு தனது வேட்பாளராக ஒரு பெண்மணியைக் கூட நிறுத்தவில்லை! இதுதான் இவர்களின் உண்மை முகம்! //

    கூட்டணிக்கு , தேர்தலுக்கு , சுயலாபத்துக்கு , மக்களை வசீகரிக்க என பன்முகம்..

  4. உங்களின் கோபம் நியாயமானதுதான்,தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் அனைத்து மட்டத்திலும் கல்வி இலவசம் என்று யாரும் அறிவிக்கவில்லை.சைக்கிள்இலவசம்,மடிகணினி இலவசமென்று கடைவிரித்திருக்கின்றனர்.கல்வி இலவசமென்றால் கல்வித்தந்தைகளாக இருக்கும் இன்னால்களும்,முன்னாள்களும் பாவம் வருமானத்துக்கு வழியில்லாமல் பட்டினியால் சாகக்கூடும்.சைக்கிளும்,மடிகனினியும்,கொடுத்தால் பேருக்கு பேருமாச்சி,கமிசனுக்கு கமிசனுமாச்சி.டாஸ்மாக் மூலமாக வீட்டுக்கு வீடு விஜயகாந்துகள் பெருகிப்போன்னதுதான் இந்த அரசின் பெரும் சாதனை..டாஸ்மாக் வருமானத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க சிறப்புத்திட்டம் போடாமல் விட்டார்களே அதுக்கே நாம் சந்தோசப்படவேண்டும்.

  5. மிக அருமையான கட்டுரை, முழுமையாக உடன்படுகிறேன்.மக்களை மழுங்கடிக்க செய்கிறார்கள். இந்த திருட்டு அரசியல் வியாதிகளை முற்றிலும் ஒழிக்கவேண்டும்.

  6. தமிழகம் முன்னேறுவதாய் தெரியவில்லை. இலவசத்துக்கு அலையும் மக்கள் கூட்டமும், இலவசத்தைக் கொடுக்கும் ஈனத்தலைகளும், குடி கும்மாளம் பொழுதுப் போக்கு என அரசே ஊக்குவிக்கும் நிலைமை.. இந்த அரசு ஏன் லாட்டரி. விபச்சாரம் ஆகியவற்றையும் அரசே எடுத்து நடத்தலாமே ! அதிலும் ஆண்டுக்கு ஆயிரம் ஆயிரம் கோடி லாபம் பெறலாமே ! அந்த லாபத்தில் இன்னும் பல இலவசங்களையும், காண்டங்களையும் இலவசமாகக் கொடுக்கலாமே !!!

    • என்ன அவசரம் உங்களுக்கு … அரசே டாஸ்மாக் எடுத்து நடத்தும் போது விபச்சார விடுதியை எடுத்து நடத்தாதா ?..

      இன்னும் இரண்டு மூன்று தேர்தல்கள் பொறுத்திருங்கள்.

    • குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அவரது பிளாகில், காந்தியவாதி அன்னா ஹசாரேவுக்கு திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தன்னையும், குஜராத் மாநிலத்தையும் அன்னா ஹசாரே பாராட்டிப் பேசியதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். அன்னா ஹசாரேவின் கொள்கைகளை ஆரம்ப காலம் முதலாகவே பின்பற்றியதை குறிப்பிட்டுக் காட்டி, அவரது தொண்டு தொடர கடவுள் நல்ல ஆரோக்கிய‌த்தை நல்க வேண்டும் என பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும் குஜராத் மாநிலத்தை யார் பாராட்டிப் பேசினாலும் அவர்கள் எதிர்கட்சியினரின் கடும் விமர்சனத்துக்கு ஆளாகலாம் என்பதை மோடி கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தார்.

  7. உங்கள் கருத்தை முற்றிலும் ஆமோதிக்கிறேன்!

    அன்றோ பெரியார் கள்ளுப் பானைகளை உடைத்தார்!
    இன்றோ வாழும் பெரியார், தமிழகத்தை மது வெள்ளத்தில், மூழ்கடிக்கிறார்!

    இலவசங்களைப் பொறுத்த வரையில், அரசு சேவைகளை மட்டுமே, இலவசமாக, நல்ல தரமுடன், தேவைப்படும் மக்களுக்கு அளிக்க வேண்டும்!

    பொருளாக அளிக்கக் கூடாது!

  8. குடியை ஒழிப்பது மிகவும் கடினம். அதற்கு மாறாக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தலாம். ஆனால் ஏழைகளின் சேவை இந்திய நாட்டுக்கு மிக முக்கிய தேவை. பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் ஏழைகளை மிகவும் “விரும்புகிறார்கள்”.

    • //பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் ஏழைகளை மிகவும் “விரும்புகிறார்கள்”.//

      சரியான கருத்து… 🙂

    • //குடியை ஒழிப்பது மிகவும் கடினம். அதற்கு மாறாக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தலாம். ஆனால் ஏழைகளின் சேவை இந்திய நாட்டுக்கு மிக முக்கிய தேவை. பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் ஏழைகளை மிகவும் “விரும்புகிறார்கள்”//

      ஏழைகள் விரும்புவதில்லை சார்

      வேறுவழியில்லாமல் குடிக்கிறார்கள் ஏழைகள் நான் எனது ஏரியாவுக்கு பஸ்ஸில் செல்லும்போது வரும் உழைக்கும் மக்களில் நூறுக்கு நூறு பேர் சரக்கடித்து விட்டுதான் வருகிறார்கள்

      ஏனெனில் திருப்பூரில் காலை முதல் மாலைவரை பனிரெண்டு மணிநேரமாக எல்லா உழைப்பும் ஆக்கப்பட்டுவிட்டது

      யோசிச்சு பாருங்க பனிரெண்டுமணி நேரம் கல்லோ மண்ணோ தூக்கினால் ஏற்றுபடும் உடல் வலி

      இதற்கு குடி போன்ற எதாவது ஒன்று இல்லை எனில் அடுத்த நாள் அவன் வேலைக்கு வரமுடியாது

      குறைந்த வேலை நேரமும் உத்திரவாதமான சம்பளமும் இல்லாமல் குடிக்க மட்டும் கூடாதுன்னு அவனை சொல்வது தவறானதே

      • \\ பனிரெண்டுமணி நேரம் கல்லோ மண்ணோ தூக்கினால் ஏற்றுபடும் உடல் வலி
        இதற்கு குடி போன்ற எதாவது ஒன்று இல்லை எனில் அடுத்த நாள் அவன் வேலைக்கு வரமுடியாது
        குறைந்த வேலை நேரமும் உத்திரவாதமான சம்பளமும் இல்லாமல் குடிக்க மட்டும் கூடாதுன்னு அவனை சொல்வது தவறானதே//

        எட்டு மணி [குறைந்த அளவு] நேர வேலை,நியாயமான ஊதியம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.ஆனால் நீண்ட,கடின உழைப்புக்கு பின் உடல் வலியை மறக்க குடித்தேயாக வேண்டும் என்பதும் ஒரு மூட நம்பிக்கையே.கடும் உழைப்புக்கு பின் உடல் வலியை மறக்கவும் மீண்டும் உழைக்க தேவையான புத்துணர்வை பெறவும் தேவைப்படுவதெல்லாம் சத்தான உணவும் நல்ல ஓய்வும் எட்டு மணி நேர தூக்கமும்தான். குடிபோதை தரும் மூளை மயக்கம் உண்மையான ஓய்வு அல்ல.

        • உடல் வலி மட்டுமல்ல, மன வலியும் இணைந்தே குடியில் பெரும் பங்காற்றுகிறது.

        • உண்மைதான்,குடிகாரர்கள் தங்கள் குடிப்பழக்கத்தை நியாயப் படுத்த சொல்லும் காரணங்களில் உடல்வலிக்கு அடுத்த இடம் பெறுவது மனக்கவலை.

          குடியால் வரும் போதை கவலைகளை சற்று நேரம் மறந்திருக்க உதவுமேயன்றி அவற்றை போக்கிவிடுவதில்லை.போதை தெளிந்த பின் அந்த கவலைகள் அப்படியேதான் இருக்கும்.கவலைகளை போக்குவதற்கு என்ன வழி என தேடாமல் அவற்றை மறக்க மட்டும் குடியின் உதவியை நாடுவது அறிவுடைமை அல்லவே.

          மாறாக ஆரோக்கிய சீர்குலைவு,அதனால் உடல் நலிவு,விரைவிலேயே முதுமை அடைந்து உழைக்கும் ஆற்றலை இழந்து விடுவது என புதிய கவலைகளை உருவாக்கும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

    • ஏன் முடியாது? மண்டையில் ஒட்டியிருந்த ஆயிரமாண்டு குடுமியை வெட்டி எறிந்த நம்மால் குடியை ஒழிக்க முடியாதா?

  9. நல்ல பதிவு. ஆனால் நீங்கள் ஆட்சியை கைப்பற்றினால் மதுவை தடைசெய்வீர்களா?iஇதுவரை உலகில் எந்த சோசியலிச நாட்டில் மது தடைசெய்யப்பட்டுள்ளது?. மது பிரச்சனையைப்பற்றி மதவெறியர்கள் கூட மிகுந்த கவலை கொள்கிறார்கள். குஜராத்தில் மது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் கள்ளசாராயம் காச்சிக்குடிப்பது தொடர்கிறது. மது அருந்துவது கலாச்சாரசீரழிவு என்று எல்லா மதவாதிகளும் சொல்கிறார்கள். காலாச்சார சீரழிவு என்பது மற்றொரு கலாச்சாரத்தை பரப்புகிறது என்பது தானே உண்மை.அந்த கலாச்சாரம் முதலாளித்துவ கலாச்சாரம். இதை கடந்தால் தானே சோசியலிச கலாச்சாரத்திற்கு வரமுடியும்.பிறகு போதை பழக்கம் என்பது ஆதிவாதிகளிடம் இன்றும் இருக்கிற பழக்கம் அதனால் அவர்களின் போராட்டம் தடைப்பட்டா இருக்கு?
    மதுவால் புரட்சியும் போராட்டமும் தள்ளிப்போகுமா?

    • “நீங்கள் ஆட்சியை கைப்பற்றினால் மதுவை தடைசெய்வீர்களா?”

      என்ன கேள்வி இது? ஆட்சியைப் பிடிக்காமலேயே பல இடங்களில் சாராயப் பானைகள் உடைக்கப்பட்டது உங்களுக்குத் தெரியாதா? மக்கள் சக்தி மகத்தானது.

      • எனக்கு ஏனோ, வோட்கா (வோல்கா) ஆறு, கரை புரண்டோடியது, ஞாபகத்திற்கு வருகிறது!

        • அப்பாடா! எதற்கெடுத்தாலும் இனிமேல் அமெரிக்காவைப் பற்றி, இங்கு யாரும் பேச மாட்டார்கள் போல! அமிஞ்சிக்கரை மட்டும் தானே!

  10. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அவரது பிளாகில், காந்தியவாதி அன்னா ஹசாரேவுக்கு திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தன்னையும், குஜராத் மாநிலத்தையும் அன்னா ஹசாரே பாராட்டிப் பேசியதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். அன்னா ஹசாரேவின் கொள்கைகளை ஆரம்ப காலம் முதலாகவே பின்பற்றியதை குறிப்பிட்டுக் காட்டி, அவரது தொண்டு தொடர கடவுள் நல்ல ஆரோக்கிய‌த்தை நல்க வேண்டும் என பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும் குஜராத் மாநிலத்தை யார் பாராட்டிப் பேசினாலும் அவர்கள் எதிர்கட்சியினரின் கடும் விமர்சனத்துக்கு ஆளாகலாம் என்பதை மோடி கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தார்.

    • குஜராத் மாநிலம் வளர்ச்சி வளர்ச்சி என்று இந்த இந்து மதவெறியர்கள் கத்துவது சிரிப்பாகதான் இருக்கிறது. nano கார் தொழிற்சாலை குஜராத்தில் வருவதற்கு குஜராத் கொடுத்த சலுகைகள்,வசதிகள் எல்லாவற்றையும் கூட்டி,கழித்துப்பார்த்தால் நானோ காரை இலவசமாகவே கொடுத்து இருக்கலாம் என்று சொல்கிறார்கள் சமுக ஆர்வளர்கள் அந்த அளவிற்கு இருக்கிறது இவர்களின் முதலாளித்துவ விசுவாசம். குஜராத்தின் வளர்ச்சி என்று சொல்லுவதல்லாம் பணக்காரர்களின் வளர்ச்சி தான். இன்னும் நிலம் இல்லாத விவசாயிகள் இருக்கும் மாநிலம் தான் குஜராத். சாதிகட்டமைப்பு வலுவாக்கப்பட்டு,உழைக்கும் மக்கள் ஒடுக்கப்பட்டு உழைப்பை சுரண்டி கொழுக்கும் நிலகிழார்கள்,முதலாளிகள். இவர்களின் சுரண்டலை வெளியில் தெரியாமல் படர்ந்து வரும் பார்ப்பனிய கலாச்சாரம் இருக்கும் வரை
      பார்ப்பன ஊடகங்களும்,பார்ப்பனர்களும் இப்படி தான் பொய் பிரசாரம் செய்வார்கள். அப்படிப்பார்த்தாலும் இந்தியா உலகவங்கியிடம் வாங்கிய கடனுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லமுடியுமா?

      • Hi MAD,
        தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!
        ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..
        குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.
        இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..
        இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.
        ஏனென்றால்,
        குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
        ஓட்டுக்கு பணம் கிடையாது.
        டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
        கரண்ட் கட் கிடையாது.
        இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.
        இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்…
        குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
        உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.
        (ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)
        ஆனால்… இன்று..
        அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
        கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.
        மீண்டும் உங்கள் நினைவிற்கு..
        குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
        ஓட்டுக்கு பணம் கிடையாது.
        டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
        கரண்ட் கட் கிடையாது.
        இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாத
        – மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
        -இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
        -இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
        -TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.
        இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)
        நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)
        அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.
        நம் மாநிலத்தின் நிலை??
        அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.
        இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..
        மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.
        இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.
        இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.
        உலகம் நம்மை காரி உமிழும்.
        .
        நல்ல வரலாறு படைப்போம்.நன்றி!

        • நீங்க என்னங்க சொல்லவறிங்க! சர்வதேச விருதுகள் பல ஆஸ்கார் விருதுகள் மாதிரி.இது முதலாளித்துவ நாய்களுக்கு பிடித்த படங்களுக்கு கொடுக்கற மாதிரி இந்த விருதுகள். அது போல தான் கொள்ளையடிப்பதற்கு இந்தியாவில் சரியான இடமாக குஜராத் என்று கொடுக்கப்பட்டு இருக்கலாம். இலவசம் இல்லை என்று சொல்றீங்களே.கார்ப்பரேட் கம்பனிக்கும் தரகு முதலாளிகளுக்கு எவ்வளவு மானியம்,வரிகுறைப்பு,இடம் ஆக்கிரமிப்பு என்று கொஞ்சம் போட்டால் நல்லா இருக்கும். நாட்டில் இருக்கும் வளங்களையும் உழைப்புக்கு குறைந்த ஊதியம் கொடுத்து சில விரல் விட்டு எண்ணக்கூடிய முதலாளிகளுக்கு கொடுப்பதுதான் வளர்ச்சியா? குஜராத்தில் மொத்த சராசரி மக்களின் நிலை உயர்ந்து இருக்கிறது என்று உங்களால் கூறமுடியுமா?

    • இது மோடியின் மந்திரமா? அல்லது காவியின் தந்திரமா?
      மோடியின் மந்திரம் என்றால் மோடி பிற மாநிலங்களில் மறுபிறவி எடுத்தால்தான் முடியும். ஒரு பிறவிக்கு குறைந்தது எண்பது ஆண்டுகள் என்றாலும் இந்தியா முழுக்க பிறவி எடுக்க (28×80=2240)+(7×80=560)=2800 ஆண்டுகள் ஆகும். குஜராத் முடிந்துவிட்டது. ஒரு 80 ஐ கழித்துக் கொள்ளுங்கள். காவியின் தந்திரம் என்றால் கர்நாடகம் முதல் இதர காவிகளின் தேசங்களில் என்ன வாழ்கிறது?

  11. //டாஸ்மாக் 1983-84இல் தொடங்கப்பட்டபோது, அதன் முதலீட்டுத் தொகை ரூ15 கோடி. அன்றைய ஆண்டு வருவாய் ரூ. 139 கோடி மட்டுமே. இன்றைய ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 15,000 கோடி. 25 ஆண்டுகளில் 107 மடங்கு வளர்ச்சி. இந்தியாவில் எந்த நிறுவனமும் இத்தகைய வளர்ச்சியை அடைந்திருக்காது.//
    பல்வேறு வியாபாரங்களுக்கு வருடம் தோறும் வியாபார இலக்கு (target) நிர்ணயிக்கப்பட்டு, அதனை அடைந்தால் அந்த நிறுவனம் மகிழ்ச்சியடைவது வழக்கம், அதன் பணியாளர்களுக்கு இன்சென்டிவ் என சிறு தொகை ஊக்கத் தொகையாக கொடுப்பது வழக்கம். ஆனால் வருடம் தோறும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் எத்தனை பேர் குடல் வெந்து போகிறார்கள் என்பதைப் பற்றி கவலையில்லாமல் “இலக்கை விட அபரிவிதமான அதிக விற்பனை – சாதனை” என வெட்கமில்லாமல் விற்பனை அறிக்கை தினசரி பேப்பர்களில் – எங்கே சென்று சொல்வது இந்த கொடுமையை??

  12. //குடி’மக்கள் குடிப்பதை நிறுத்தினால் அதனால் அவர்களின் குடும்ப சேமிப்பு நடக்கும். அல்லது குடிப்பதற்கு செலவிடப்படும் பணம் பிற பயனுள்ள பொருட்களை வாங்க பயன்படுத்தப்படும். இந்த விற்பனை மூலம் மறைமுக வரியாக அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் வருவாய் கிடைக்கும். பண்பாட்டு சீரழிவும் நோய்களும் மரணங்களும் குறையும். /

    ஆமோதிக்கிறேன்

    (யாருப்பா சொன்னா தியாகு வினவு எதிர்ப்பாளர்னு 🙂

  13. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது….அது போல் குடிகாரர்கள்தான் திருந்த வேண்டும்..????இல்லை திருத்த வேண்டும்…!

    • யார் சொன்னது? எடுத்துப்பார் கையில் துடைப்பைக் கட்டையை. போதையாவது வெங்காயமாவது. துடைப்பத்தை எடுக்க வைக்க வேண்டியதுதான் நமது வேலை.

  14. அருமையான கட்டுரை. கருத்துகள் அனைத்தையும் ஆமோதிக்கிறேன். ஆனால் மதுவிலக்கு என்பதை அரசு செய்ய முடியுமா, என்பதைப் பற்றி எனக்கு சந்தேகம் உண்டு.

    குடியினால் ஏற்படும் பிரச்சனைகளை “சட்டம் ஒழுங்கு” பிரச்சனையாக மட்டும் அணுகாமல் “ஹெல்த்” பிரச்சனையாகவும் பார்க்க வேண்டும்.

  15. பெரியாரின் வாரிசு என்று சொல்வதற்கு எந்த தகுதி இந்த “திராவிட” கம்பெனிகளுக்கு இருக்கிறது.

    அவர், அன்று ”கள்” இறக்கக்கூடாது என்பதற்க்காக தன் தோப்பிலிருந்த பச்சை தென்னை மரங்களையே வெட்டிச் சாய்த்தார்.

    இன்று பச்சை பிள்ளைகள் பால் குடிக்க வக்கில்லாவிட்டாலும் “குடிமகன்கள்”களை உற்சாகப்படுத்த “டாஸ்மாக்” மூலம் சாராயத்தை “தண்ணீராக” சப்ளை செய்கிறார்கள்.

    தேர்தல் நேரத்தில் பெரியாரை துணைக்கு கூப்பிடுகிறார்கள், எந்த அருகதையும் அற்றவர்கள் . மஞ்சள் துண்டு,தேர்தல் பரப்புரையை முடிக்கும் பொழுது கற்பூரம் கொழுத்தி முடித்தல் இதுதான் பெரியார் வாரிசுகள் செய்யும் செயலா?

    மக்களை கொள்ளை அடித்து அதிலிருந்து சிறு துண்டினை பிச்சையாக போடுகிறார்கள்.

    தமிழர்களை உரிமைகள் கோராத பிச்சைக்காரர்களாக்கி விட்டார்கள்.
    பெரியாரின் வழியிலேயே இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டவேண்டும்.

  16. விபச்சாரத்தை ஒழிப்பதை விட விபச்சாரம் செய்பவர்களை மனமாற்ற முயலலாமே?

    • ஆயிரமாண்டுகலாக ஊறிப்போன ஆணாதிக்க சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வர ஆணாதிக்கவாதிகளே விரும்ப மாட்டார்கள்..

      மாற்றுப்பிழைப்புக்கு வழி செய்யணுமே.. ?

      ஒரு பேச்சுக்கு ,

      தமிழ்நாட்டில் பெண் இயக்குனர்கள் , வடநாட்டிலிருந்து வெள்ளை நிறமுள்ள அல்லது ஷாரூக்கான்களையோ , பச்சன்களையோ போன்ற ஆண்களை இறக்குமதி செய்து படமெடுக்க முடியுமா?.. நடக்குமா?..

      நடக்குமானால் எப்போது.. ? அப்போது வேணா ஒருவேளை முயலாலாம்.. முடியலாம்..

  17. இறுதியாய் ஒன்றைச் சொல்கிறேன். ம.க.இ.க போன்ற புரட்சிகர அமைப்புகள் வளராமல் சாராயத்தை ஒருக்காலும் ஒழிக்க முடியாது. சாராயம் ஒழிய வேண்டுமானல் ம.க.இ.க வளர வேண்டும். ம.க.இ.க வளர வேண்டுமானால் ஒத்த கருத்துடையோர் ஓரணியில் திரள வேண்டும். இது ஆள்பிடிக்கும் வேலை அல்ல. நல்லது நடக்க வேண்டும் என்ற பேராசை.

  18. இரு விரல் காட்டினால்
    இரட்டையிலை.
    ஐந்து விரல் காட்டினால்
    அஞ்சுகத்தாய்ப் பெற்ற
    புதல்வனின்
    புராதனச் சின்னம்.
    கையை ஆசீர்வதித்து
    காட்டினால் அது
    கைச் சின்னம்.
    இதில் எங்கே எங்களுக்கு
    ‘ரெண்டு ரெண்டாய்’ தெரிகிறது
    என்கிறீர்கள்?

    போதையிலிருந்தாலும்
    புரிந்து கொள்வோம்.

    விழுந்தால் வீட்டுக்கு.
    விழாவிட்டால் நாட்டுக்கு.
    எங்கேயோ கேட்ட குரல்.
    லாட்டரிக்குப் பொருந்தும்போது
    பாட்டிலுக்குப் பொருந்தாதா?

    போதையிலிருந்தாலும்
    புரிந்து கொள்வோம்.

    வீட்டுக் கடனுக்கே
    வருமானம் கேட்கும்போது,
    நாட்டுக் கடன் வாங்க
    நாம் காட்டும் வருமானம்.
    ‘Liquidity’ பேலன்ஸ் ஷீட்…
    லிக்கர் அடிக்கும் வருமானத்தில்.

    போதையிலிருந்தாலும்
    புரிந்து கொள்வோம்.

    நாள் முழுக்க நாம் உழைத்து
    நானூறு கூலி வாங்கி,
    அதிலிருந்து நூறெடுத்து
    நாட்டுக்கே அற்பணிப்போம்.
    போதையும் ஏறும்;
    பொருளாதாரமும் ஏறும்.
    போதை தந்த
    பொருளாதாரத் தத்துவம்.
    மன்மோகனும் சிதம்பரமும்
    மூக்கின்மீது விரல் வக்கும்போது,
    வினவின் மூக்கு மட்டும்
    வியர்ப்பது ஏன்?

    போதையிலிருந்தாலும்
    புரிந்து கொள்வோம்.

    குடி குடியைக் கெடுக்கலாம்.
    குடியிருக்கும் நாடு
    கெடுவதில்லை.
    குடியால் குடியரசு
    கோபுரம்போல் வளர்வது
    வளர்ச்சிப்பாதையன்றி
    வீழ்ச்சிப்பாதையா?

    போதையிலிருந்தாலும்
    புரிந்து கொள்வோம்.

    ஒரு ரூபாய் அரிசி
    வேண்டும்.
    ஒரு கிரைண்டர் மிக்சி
    வேண்டும்.
    நாள்முழுக்க நாடகங்கள்
    நாம் கண்டு,
    தொல்லை மறந்திட
    தொலைக்காட்சியும் வேண்டும்.
    இத்தனையும் கொடுத்தது
    என் தாய்த்திரு நாடு.
    நானென்ன செய்தேன்
    அதற்கு?
    நாட்டுக்கு அற்பணிப்போம்
    நம் உயிரை.

    போதையிலிருந்தாலும்
    புரிந்து கொள்வோம்.

    கதறியழுது
    காரி மூஞ்சியில் துப்பி
    துடைப்பக் கட்டையால்
    துவைத்தெடுக்கும்
    பொருளாதாரம் தெரியாத
    போக்கற்ற மனைவி மக்கள்.
    அவர்களிடமிருந்து நமைக்காக்க
    அரசு வழங்கும் திட்டம்
    மருத்துவக் காப்பீடு.
    அதையும் தாண்டி
    கை மீறிப் போனால்
    நூத்திஎட்டு.

    காது குத்தினால்
    போதை வேண்டும்.
    கருமாந்திரம் செய்தாலும்
    போதை வேண்டும்.
    இன்பத்திலும்
    போதை வேண்டும்.
    துன்பத்திலும்
    போதை வேண்டும்.
    குடித்துக் கிடக்க வேண்டும்.
    அதற்கொரு காரணம்
    வேண்டும்; வேண்டும்.

    ‘குவாட்டர்’ மூடியைத் திருகினால்
    நாம் மந்தமாகி விடலாம்.
    நாட்டின் பொருளாதாரம்
    மந்தமாக வாய்ப்பில்லை.
    நம் ஈரல் வீங்குவதால்
    நம் நாட்டின்
    பண வீக்கம்
    பறந்து போகும்.
    காரணம் கிடைத்துவிட்டது…
    இனி
    குடித்தே கிடப்போம்.

  19. //பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் ஏழைகளை மிகவும் “விரும்புகிறார்கள்.விஷ சாரயத்தை குடித்து சாகக் கூடாது
    அல்லவா, காசுக்கு காசுமாச்சு,மனிதாபி மானத்துக்கு மனிதா
    பிமாச்சு,ஆதாயமில்லாமலா செட்டியாரு ஆத்தை கட்டி இறைப்பாரு? அதுமாதிரி.

  20. “கருணாநிதி முதல்வர் ஆனதும், முதல் கையெழுத்தே மது விலக்கை அமல்படுத்துவதாக இருக்க வேண்டுமென கோரிக்கை வைப்போம்,” என்று, வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

    http://election.dinamalar.com/election_news_detail.php?id=3083

  21. 1971ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது மதுவிலக்கை நீக்குவதாக அறிவித்தார்.மக்கள் வாழ்வு பாழாகும் என்று மதுவிலக்கு தொடர வேண்டும் என்று கருணாந்தியை அவர் வீட்டில் சந்தித்து வேண்டினார் ராஜாஜி.காங்கிரசில் விலகிய பின் பெரியார் மதுவிலக்கு ஆதரவை கைவிட்டார். மதுவிலக்கினை எதிர்த்து எழுதினார். இறுதிவரை அதுதான் அவர் கொள்கை.1971ல் அவர் மதுவிலக்கினை நீக்குவதை எதிர்க்கவில்லை,கருணாநிதி அரசை ஆதரித்தார்.

    இடதுசாரி அரசுகள் எதுவும் (மாவோ,ஸ்டாலின்) மதுவை தடை செய்யவில்லை.புகைபிடிப்பதையும் கட்டுப்படுத்தவில்லை.

    ம.க.இ.க மதுவிலக்கு வேண்டும், மதுக்கடைகளை மூடச்சொல்கிறதா.இல்லை மதுவின் விற்பனையை கட்டுப்படுத்து என்று சொல்கிறதா இல்லை டாஸ்மாக் வேண்டாம், தனியார் விற்கட்டும் என்று சொல்கிறதா.இல்லை மதுவிலக்கு வேண்டாம்,ஆனால் மதுவிற்பனை கட்டுப்படுத்தப்பட்டு குறைந்த எண்ணிக்கையில் கடைகள் இருக்க வேண்டும், அவையும் சில மணி நேரங்களே வேலை செய்ய வேண்டும் என்று சொல்கிறதா.நீங்கள் மதுவின் தீமைகளை சுட்டிக்காட்டி இயக்கத்தில் இருப்பவர்கள் மது அருந்தக்க்கூடாது என்று விதி ஏற்படுத்தியிருக்கிறீர்களா.

  22. sir, we can buy one kg of fruits instead of one quarter. how can you justify that alcohol relieves their tiredness.it just gives an illusion and also spoils the health. i drink occasionally but i never buy drinks from tasmac becoz those are all fake drinks, they add colors to synthetic alcohol and sell it for a huge price, i thank the govt for making me hate alcohol, by selling chemically synthesised whisky brandy etc. a layman does not know what effects these additives and colors does to his health, in that point of view i suggest toddy would be a good idea bcoz its not that much harmful.

  23. பார்ப்பனர்களின் சூழ்ச்சி வலைதான் இந்த டாஸ்மாக். இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காத கோபத்தில் தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட மக்களை ஒழிக்க் ஜெயா ஏவிய அஸ்திரம் டாஸ்மாக். காசுக்கு ஆசைப்பட்ட கிழவனும் இதே வழியில் இலவசம் தந்து தமிழகத்தை அழித்து விட்டனர்.கூலி வேலைக்கு வர கூட ஆள் இல்லை. அப்படியே வந்தாலும் குடித்து விட்டுதான் வருகிறான், குடிக்காதவன் மீது குடித்துவிட்டு வண்டி ஓட்டி கொல்லும் நாய்களை என்ன செய்வது?(மன்னிக்கவும், மனம் மிகவும் வெம்பி விட்டது, இன்னும் சில ஆண்டுகளில் எத்தனை கோடி இளைஞர் கூட்டம் கை, கால் நடுக்கத்துடன் மருத்துவ மனி வாசலில் பிச்சை எடுக்கப்போகின்றனரோ? இந்த சீரழிவுக்கு காரணமான ஜெயா, முக வுக்கு நல்ல சாவே வராது

    • வலிபோக்கன் சார், சாவிலும் நல்லசாவு கெட்ட சாவு இருக்கு. எம்ஜிஆர் செத்தது நல்ல சாவு, ராஜிவ் சிதறி கூழானது சாபசாவு

  24. இந்த டாஸ்மாக்கை கொண்டு வந்தது ஜெயாதான். அடிமட்டத்தில் இருப்பவனை அடியிலேயே நசுக்கி விட்டால் குடுமி வச்ச கூட்டம் இட ஒதுக்கீட்டில் பாதிக்கப்படாது என்று திட்டமிட்டு கொண்டு வந்ததுதான் இந்த ஈன டாஸ்மாக். இன்னும் 2 அல்லது 3 வருடங்களுக்குள் குடல் வெந்து சாகும் கூட்டமும், குடிகார _________ தாலி அறு படும் ஓலங்களும் அதிகரிக்கும். பிண்ங்களின் மேல் ஆட்சி செய்யும் ராஜபக்சேவுக்கு சற்றும் குறையாத நம் ஆட்சியாளர்கள் அழியும் நாள் இத்தமிழகத்தின் பொன்னாள். ஒழிக டாஸ்மாக் சனியன்

  25. […] இந்த கவர்ச்சித் திட்டங்கள் மக்களின் தாலியறுத்து சாராயம் விற்ற க… தூக்கியெறியப்படும் எலும்புத் […]

  26. 21680 கோடி டாஸ்மாக் வருமானம் ஒரு முனையில் மறுமுனையில் ஒரு ரூபாய் இட்லி கடை இடையில் மேட்டுக்குடிகளின் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் என மிகப்பெரிய அபாயத்தில் சமூகத்தை தள்ளிக்கொண்டு வருகின்றனர்.

    ஜார்க்கண்ட் பழங்குடிகளை அப்புறப்படுத்தி வளர்ச்சி என்ற பெயரில் வேதாந்தா போன்றவர்களுக்கு அடியாள் வேலை செய்யும் அரசை கண்டித்து ஒரு எரிமலை வெடிக்க காத்திருக்கிறது என்று இன்று தினமணியே அபாய சங்கு ஊதுகிறது.

    வேதாந்தாவும் ஸ்டெர்லைட்டும் பெயர் வேறு வேறாக இருந்தாலும் இவற்றிற்கு ஒரே முதலாளி என்பது போல காங்கிரஸ், பாஜக,அதிமுக,திமுக,விசி என கட்சிகள் வேறு வேறாக இருந்தாலும் இவர்கள் அனைவரும் பன்னாட்டு கம்பெனிகளின் எடுபிடிகள் என்பதை தான் இன்று நாம் இந்தியாவெங்கும் பார்த்து வருகிறோம்.

Leave a Reply to புதிய பாமரன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க