privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்மதுரையில் தடை செய்யப்பட்ட இராசயனங்கள் தயாரிப்பு ! அதிர்ச்சி ரிப்போர்ட் !!

மதுரையில் தடை செய்யப்பட்ட இராசயனங்கள் தயாரிப்பு ! அதிர்ச்சி ரிப்போர்ட் !!

-

“லேன்செஸ்” பன்னாட்டு நிறுவனத்தின் அபாயகரமான ரசாயனப் பொருட்கள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மறைமுக ஆதரவுடன் தயாரிப்பு!
தொழிலாளர்கள் போராட்டத்தால் அம்பலமானது !

மதுரை நகரிலிருந்து 15 கி.மீ தொலைவில் விமான நிலையத்திற்கு அருகே உள்ள “லேன்செஸ்” இந்தியா பிரைவேட் லிமிடெட்” மற்றும் ‘பெனார் ஸ்பெசாலிட்டி புரொடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ ஆகிய இரண்டு தொழிற்சாலைகள் மிகவும் அபாயகரமான வேதிப்பொருட்கள் தயாரிப்பில் பல ஆண்டுகளாக சத்தமில்லாமல் ஈடுபட்டுள்ளன.  1977ஆம் ஆண்டு “சதர்ன் சின்டான்ஸ்” என்ற பெயரில் குடிசைத்தொழிலாக ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை இன்று 130 தொழிலாளர்களுடன் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன், பன்னாட்டு கம்பெனிகளின் கூட்டுடன் நடத்தப்பட்டு வருகின்றது.  தற்போது அந்த கம்பெனியை மூடுவதற்கு அதன் முதலாளிகள் முடிவெடுத்துள்ள நிலையில் அங்கு பணியிலிருக்கும் தொழிலாளர்களது போராட்டத்தால் பல்வேறு ரகசியங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன.  இவற்றை மூடிமறைக்க நிர்வாகம் – அரசு அதிகாரிகள் – அரசியல்வாதிகள் – போலீசு கூட்டணி அமைத்து தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

பெனார் ஸ்பெஷாலிட்டி புரொடக்ட்ஸ் பி லிட், என்கிற கம்பெனி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த ஊரான கானாடுகாத்தானுக்கு (காரைக்குடி) அருகிலுள்ள கோட்டையூரைச் சேர்ந்த பி.நாராயணன் செட்டியார் என்பவருக்குச் சொந்தமானது.  இவருடைய தம்பி பி.சுப்பையா செட்டியாருடன் இணைந்து 1977ல் இந்தத் தொழிலில் நுழைந்தார். ஆனால் இப்போது  தம்பியைப் பின் தொடர்ச்சி, பாத்தியங்கள் ஏதும் அற்ற நிலையில் வெட்டி விட்டுள்ளார்.  இவர் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உறவினர் என்றும், அவருடைய ஆதரவுடன்தான் கம்பெனி நடைபெறுவதாகவும் சுற்றுப்புற‌ கிராமங்களில் செய்தி பரப்பப்பட்டுள்ளது.

பன்னாட்டு கம்பெனிக்கு பினாமி

பெனார் கம்பெனி நாராயணன் செட்டியாருக்கு சொந்தமான‌து.  ஆனால் “லேன்செஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்” என்கிற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்காக இங்கே உற்பத்தி நடைபெறுகின்றது.  லேன்செஸ் நிறுவனம் உற்பத்தியை நடத்தினாலும், தொழிலாளர்கள், நிலம், கட்டிடங்கள், இயந்திரங்கள் எல்லாமே பெனார் நிறுவனத்திற்குச் சொந்தமானது.  குத்தகை ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி நடைபெறுகிறது. லேன்செஸ்-க்கும் தொழிலாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  உற்பத்திக்கு ஏற்றவாறு ஒப்பந்தப்படி எல்லா தொகையையும் பெனார் முதலாளி வாங்கிக் கொண்டு தொழிலாளர்களுக்கு அவர்தான் சம்பளம் உள்ளிட்ட சகலமும் கொடுக்க வேண்டும். தொழிலாளர்கள் அவர் கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டும்.  மேலே எதுவும் கேட்க முடியாது.  தொழிலாளர்கள் அனைவரும் பெனார் கம்பெனியை பொறுத்தவரையில் கொத்தடிமைகள்தான்.

தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருட்கள்

இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் முதன்மையானது தோல் பதனிடும் வேதிப்பொருள்கள், பூச்சிக் கொல்லி, துணிகளுக்கு ஏற்றப்படும் சாயம், ரப்பர், பெயிண்ட் தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள் ஆகியவை. தோல் தொழிற்சாலை, சாயப்பட்டறை, பூச்சிக் கொல்லி மருந்துகளினால் ஏற்படும் விளைவுகளை அனைவரும் அறிவர்.  இவை மூன்றும் மண், குடிநீர், காற்று ஆகியவற்றை வெகுவாக மாசுபடுத்தும் தன்மை கொண்டவை.  1984ல் 25 ஆயிரம் பேரை கொன்று குவித்த போபாலில் பூச்சிக் கொல்லி மருந்துதான் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையிலிருக்கும் இந்தக் கம்பெனி வெளியிட்டுள்ள பட்டியலில் 29 வேதிப் பொருட்கள் அபாயகரமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவை வருமாறு:

LIST OF HAZARDOUS CHEMICALS
The following Raw Materials are declared as Hazardous as defined in the above Act under Rule 2000 and are used in our process.

ACETONE, ACRYLONITRILE, ANILINE OIL, CAUSTIC POTASH, D1 ETHYLENE GLYCOL, EPI CHLORO HYDRINE, ISO PROPYL ALCHOL, METHYL METHACRYLATE, MORPHOLIN, MONO ETHYLENE GLYCOL,
NITROCELLULOSE, ORTHO DINITRO CHLORO BENZENE, PREVENTOL TC, CAUSTIC SODA LYE 48%, FORMAIDEHYDE 37%, PHENOL, SULPHURIC ACID, ACETIC ACID, FORMIC ACID, LIQUOR AMMONIA,
PHOSPHORIC ACID, PREVENTOL IT 14, BENZOYL PEROXIDE, NAPHTHALENE CRUDE, MALEIC ANHYDRIDE, PHTALIC ANHYDRIDE, PREVENTOL CMK, PREVENTOL ON EXTRA, KATHON WT

இவையெல்லாம் ஐரோப்பிய நாடுகளில் தடைசெய்யப்பட்டவை. ஆனால் இங்கே மலிவு விலையில் உழைப்பை உறிஞ்சி, கொத்தடிமைகளை வைத்து இவை ரகசியமாகத் தயாரிக்கப்படுகின்றன.  இதிலே கேதோன் என்ற வேதிப்பொருள் மிகவும் அபாயகரமானது. இது தண்ணீர் மூலமாக வேகமாக பரவி ஆபத்து விளைவிக்கக் கூடியது என்று சொல்கிறார்கள்.  அதாவது வியட்நாமில் மரம், செடி கொடிகைள அழிக்க அமெரிக்கா பயன்படுத்திய ஏஜெண்ட் ஆரஞ்சு என்ற பயங்கர ரசாயன ஆயுதத்தை அடுத்து போராளிகளை அழிக்க பாஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டன.  அதிலிருந்து தப்பிக்க மக்கள் நீர்நிலைகளில் குதித்துத் தப்பித்தார்கள்.  இதை அறிந்த அமெரிக்கக் கொலைகாரர்கள் தண்ணீரில் குதித்த பின்னரும் உடலெல்லாம் பரவும் ஒருவகை ரசாயன குண்டுகளைக் கண்டுபிடித்து அதனைப் பயன்படுத்தி மக்களைக் கொன்று குவித்தனர்.  அந்த வகையைச் சேர்ந்தது இந்த ரசாயனம் என்று தொழிலாளர்கள் சொல்கின்றனர்.

இந்த ரசாயனம் பட்ட இடத்தில் தண்ணீர் பட்டால் தோல் பலூன் போல ஊதிப்பெருத்து விடும் என்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அபாயகரமான உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தொழிற்சாலையில் செய்து தரப்படவில்லை.  பல தொழிலாளர்கள் காசநோய், புற்று நோய், தோல் நோய்களால் பாதிக்கப்பட்டு அவர்களில்சிலர் இறந்தும் போயுள்ளனர்.  ஜே.ஐவன் என்ற தொழிலாளி தற்போது மரணப்படுக்கையில் உள்ளார்.  பல தொழிலாளர்கள் விரல் போன்ற உறுப்புக்களை இழந்துள்ளனர். தொழிற்சாலையின் உள்ளே மருத்துவமனை கிடையாது.  முதல் உதவி என்று பெயருக்கு உள்ளது.  வாரம் ஒரு மருத்துவர் 1 மணி நேரம் வந்துவிட்டுப் போவார்.

நிலத்தடி நீர், காற்று, சுற்றுச்சூழல் நாசம்

இந்தத் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள சின்ன உடைப்பு, பாப்பானோடை, ராமன்குளம், போக்குவரத்து நகர், பெருமாள் நகர், வலையங்குளம் போன்ற கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டு, கருப்பு நிறத்தில்தான் நிலத்தடி நீர் மாறி வருகிறது.  இம்மாசுபட்ட நீரை எந்த தேவைக்கும் பயன்படுத்த இயலவில்லை.  ரசாயனக் கழிவுகள் சட்டவிரோதமாக பூமிக்கு அடியில் புதைக்கப்படுவதுதான் இதற்கு காரணம்.  தவிர தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் அடர்த்தியான புகையினால் (பெரும்பாலும் நள்ளிரவில்தான் சிம்னி வழியாக திறந்து விடப்படும்) சுற்றியுள்ள கிராம மக்கள் தோல் நோய், கண் நோய், நுரையீரல் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.  கண்மாய்களில் மீன்கள் செத்து மிதக்கின்றன.  அங்கே தண்ணீரைக் குடிக்கும் கால்நடைகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றன.

அவ்வப்போது எதிர்த்துப் போராடும் மக்களை நிர்வாகமும், அதிகாரிகளும் காவல்துறையை வைத்தும், நன்கொடை என்ற பெயரில் ஆட்களை விலைக்கு வாங்கியும் சமாளித்து விடுகின்றனர்.  மதுரை மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையர் பீமராஜ் என்பவருக்கு மாதம் ரூ. 5 லட்சம் தரப்படுவதாக நிர்வாகப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

34 ஆண்டுகளில் 9 கம்பெனிகள்- ஆனால் ஒரே முதலாளி- பலே!

1977ல் சதர்ன் சின்டான்ஸ் என்ற பெயரில் குடிசைத் தொழிலாக ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கம்பெனி கடந்த 34 ஆண்டுகளில் (2) பி.என்.கெமிக்கல்ஸ், (3) பெனின்சுலார் கெமிக்கல்ஸ் (4) இந்தியன் சின்டான்ஸ் பி லிட், (5) பேயர் இண்டியன் சின்டான்ஸ் லிட்(இது பன்னாட்டு நிறுவனம்), (6)பெனார் ஸ்பெசாலிட்டி புரொடக்ட்ஸ் பி லிட்(1998)), (7) பேயர் ஸ்பெசாலிட்டி கெமிக்கல்ஸ், (8) பேயர் கெமிக்கல்ஸ் பி லிட், (9) லேன்செஸ் இந்தியா பி லிட் என பல அவதாரங்கள் எடுத்து தற்போது அதையும்  மூடுவதாக அறிவித்துள்ளது.

இதிலிருந்தே நாராயணன் செட்டியார் அவர்களின் தனித்திறன் வாய்ந்த திருவிளையாடல்களைப் புரிந்து கொள்ளலாம். தற்போது நிரந்தரப் பணியில் தொழிலாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் 76 பேர், மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 54 பேர் ஆக 130 பேர் இங்கே பணி புரிகின்றனர்.  இவர்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மொத்த சம்பளம் ரூ.8500/- மட்டும்.  இதர படி வகைகள் ஏதும் கிடையாது.  பணிக்காலம் குறைவாக உள்ள நிரந்தர தொழிலாளர்களுக்கு ரூ.4500/- முதல் ரூ.5000/- வரை மட்டுமே சம்பளம்.  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.100/-  கடந்த மாதம் ஆலை மூடல் முடிவிற்கு பின் உற்பத்தியை விரைந்து முடிக்க அவர்களின் தினக்கூலி ரூ.200/- என உயர்ந்துள்ளது.

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு எந்தச் சலுகையும் கிடையாது.  நிரந்தர தொழிலாளர்களுக்கு சதவீத அடிப்படையிலான போனஸ் கிடையாது.  நிர்வாகம் நிர்ணயிக்கும் தொகைதான் போனஸ். வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் ஈட்டுறுதி (ESIC) காப்பீடு போன்றவற்றுக்கு பிடித்தம் செய்யப்பட்டாலும், அது பற்றிய எந்த விபரமும் தொழிலாளிகளுக்குத் தெரிவிக்கப்படவில்லை. கம்பெனி பெயர் மாற, மாற தொழிலாளர்களிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி (ஒப்புதல்) பெறப்பட்டு கம்பெனி மாற்றப்படுவார்கள்.  தொழிலாளர் நல அதிகாரிகள், ஆய்வாளர்கள, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எல்லோரும் செட்டியாரின் செல்லப்பிள்ளைகள்.

கொத்தடிமை சாசனம்:

இதிலிருக்கிற தொழிலாளர்கள் கடந்த 30 ஆண்டுகளாக கூலி உயர்வு, சலுகைகள் போன்ற எதற்காகவும் போராட்டப்பாதையை தேர்ந்தெடுக்கவோ, சங்கம் கட்டவோ இல்லை என்பது வேதனையின் உச்சம்.  சமீபத்தில் தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து உரிய சம்பளம், சலுகை கேட்ட 6 தொழிலாளர்களில் ஒருவர் வேலை நீக்கம் செய்யப்பட்டார். மீதி 5 பேருக்கு சம்பளம் தவிர வேறு சலுகை எதுவும் கிடையாது என்று பழிவாங்கப் பட்டுள்ளனர். இதில் ஒப்பந்தப் பணியாளர்கள் அவ்வப்போது 8 மணி நேர பணி முடித்த பின் 8 மணி நேரம் ஓவர் டயம் பார்க்க பணிக்கப்படுவார்கள்.

நல்ல குடிநீர் கிடையாது, பெயருக்கு கேன்டீன், மோசமான கழிப்பறை, தொழிலாளர் ஓய்வு அறை ஆயிரம் கண்ணுடைய கொட்டகை என்று செட்டியாரின் கருணை வெள்ளம் பாய்ந்தோடுகிறது.  அரசு அதிகாரிகள் அருகில் நின்று தியானம் செய்கின்றனர்.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்ந்த தொழிலாளர்கள் விடுதலை முன்னணியுடன் இணைக்கப்பட்டுள்ள பெனார் ஸ்பெஷாலிட்டி ப்ராடக்ட்ஸ் பி லிமிடெட் தொழிலாளர் & நலச் சங்கம் 2010ல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  எல்லா பணியாளர்களும் அதில் உறுப்பினர்களாக‌ உள்ளனர்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் பதிவு செய்யப்படாத ஒப்பந்தக்காரர்கள் மூலம் சப்ளை செய்யப்படுகின்றனர். நிர்வாகமும், ஒப்பந்தக்காரரும் ஏற்படுத்திக் கொண்டுள்ள பதிவு செய்யப்படாத ஒப்பந்தப் பத்திரம் அடிமை சாசனத்திற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டு.  சுருங்கச் சொன்னால் முதலாளிகளின் நலனுக்காகக் கொடுக்கும் கூலிக்கு மேலாக எதையும் எதிர்பார்க்க மாட்டோம் இது சத்தியம், சத்தியம், சத்தியம் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  படித்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

ஆக்கிரமிப்பு:

கடந்த 34 ஆண்டுகளில் செட்டியார் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை சுற்று வட்டாரத்தில் அடிமாட்டு விலைக்கு வாங்கிக் குவித்துள்ளார்.  தற்போது தொழிற்சாலை உள்ள சுமார் 150 ஏக்கர் நிலத்தில்
8 3/4 ஏக்கர் அளவில் ஊருணி உள்ளது.  அது அரசு புறம்போக்கு.  செட்டியாரின் ஆக்கிரமிப்பில் உள்ளது.  மேலும் ஆலையின் குறுக்காக வலையங்குளம் செல்லும் 30 அடி பாதையை (தார்ச்சாலை) இரும்புக்கதவு போட்டு அடைத்து தன்வசம் வைத்துள்ளனர் திருவாளர் நாராயணன் அன் கோ.  கேட்பார் யாருமில்லை.  இன்னும் உள்ளே போய் பார்த்தால் என்னென்ன தில்லுமுல்லுகள் இருக்குமோ “நாராயணனுக்கே” வெளிச்சம். கை தேர்ந்த கிரிமினல் முதலாளிதான் இவர்.

நாராயணன் செட்டியாரின் மிகத் தேர்ந்த நிர்வாகத் (கிரிமினல்) திறனுக்கு எடுத்துக் காட்டு – ஆலையில் சட்ட விரோதமாக உற்பத்தி செய்யப்படும் ரசாயனங்கள், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் போன்றவற்றையெல்லாம் வீடியோவில் பதிவு செய்து வைத்துக் கொண்டு லேன்செஸ் பன்னாட்டு நிறுவன முதலாளிகளிடம் காட்டி அவர்களையே மிரட்டி பணம் பறிக்கின்ற வேலையைச் செய்து வருகிறாறென்றால் இவருடைய திறமை ப.சிதம்பரத்தின் திறமைக்கு சற்று கூடுதலாகத் தெரிகிறது அல்லவா?

லேன்செஸ் நிறுவனம் தனது ஜாகையை மோடியின் குஜராத்திற்கு மாற்றிக்கொள்ள முடிவெடுத்து விட்டது.  எந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டு விட்டன.  இந்த வைசியனோடு மாரடிக்க முடியாது என்று அந்த பன்னாட்டு பகாசுரன் ஓடிவிடத் தயாராக உள்ளான்.  இதில் செட்டியாருக்கும், பன்னாட்டு முதலாளிக்கும் ஏற்பட்டுள்ள உள்குத்து விவகாரங்கள் குறித்து நமக்கு தெரியவில்லை. ஆனால் மதுரையில் ஏற்பட்ட பாதிப்பு இனி குஜராத்திற்கும் வரும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

ஆலை மூடல், வேலை நிறுத்தம்:

30/06/11 உடன் பெனார் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியானவுடன், தொழிலாளர்கள் விழித்துக் கொண்டு களத்தில் இறங்கினர்.  தொழிலாளர் துணை ஆணையர், மதுரை அவர்களிடம் பெனார் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் (பதிவு எண் 421/TVR/2010) தங்களுக்கு சட்டப்படி சேரவேண்டிய இழப்பீடு கோரி கடந்த பிப்ரவரி 5 அன்று மனுக் கொடுத்துள்ளனர். தொழிலாளர் அலுவலர் (LO) இதுவரை 4 முறை பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் நிர்வாகத் தரப்பில் யாரும் வரவில்லை.  அதிகாரமற்ற தொழிலாளர் துறை அதிகாரிகள் தங்களுடைய சடங்குகளைப் பொறுமையாக நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இழுத்தடிப்பை ஏற்றுக் கொள்ளாத தொழிலாளர்கள் கடந்த 15 நாட்களாக உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தற்போது உள்ளிருப்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் 5 நாட்களாக நடைபெற்று வருகிறது.  தங்களுக்குள் ஒரு போராட்டக்குழுவை அமைத்துக் கொண்டு பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். போராட்டம் மேலும் தொடர்கிறது.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தொழிலாளர் விடுதலை முன்னணி, ம.க.இ.க., பு.மா.இ.மு., உள்ளூர் சங்கங்கள் சில மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் போன்ற அமைப்புகள் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடி வருகின்றனர.

மதுரை மாவட்ட ஆட்சியருக்கும், உயர் அதிகாரிகள், அமைச்சர் பெருமக்கள், உள்ளூரில் இருக்கும் ஏழைப் பங்காளன், அஞ்சா நெஞ்சன், தூங்கா நகரம் அண்ணன் அழகிரிக்கும் செய்தி சென்றடைந்து விட்டதாகத் தகவல்.  எதற்கும் மூச்!

இதோடு இந்த கெமிக்கல் நிறுவனம் மூடப்பட்டு முதலாளி வேறு நாடு சென்று விடுவார் என அப்பாவி தொழிலாளர்கள் நம்பியுள்ளனர்.  இந்த சச்சரவெல்லாம் முடிந்தவுடன் 150 ஏக்கர் நிலத்திலுள்ள சொத்தை விட்டுவிட்டு முதலாளி சென்றுவிட மாட்டார்.  இழுத்தடித்து,  தொழிலாளர் குடும்பங்களைத் துவளச் செய்து சொற்பத் தொகைகளை வீசியெறிந்து விட்டு, சில மாதங்கள் கழித்து வேறு ஒரு புதிய பெயரில் வேறொரு பன்னாட்டு நிறுவனத்தின் பெயருடன் நிறுவனம் தொடங்கி அதில் போராடுபவர்களில் சிலர் கூட அடிமாட்டு விலைக்கு புதிய தொழிலாளர்களாக சேர்க்கப்படலாம், அல்லது இதே குடும்பத்தைச் சேர்ந்த வேறொரு அடிமை சேர்க்கப்படலாம்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கலின் பின்னணியில் உள்ளூர் முதலாளிகளின் கோர முகமும் இதுதான்.பன்னாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யும் நாராயணன் செட்டியார் தொழிலாளர்களின் இந்த சாத்வீகப் போராட்டத்திற்கா அஞ்சுவார்?  அவர் தயாரிக்கும் பயங்கரமான ரசாயனம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தொழிலாளர்கள் ஒரு குண்டு தயார் செய்ய வேண்டும்.  அது வெடிக்கும் என்றால் நாராயணன் இறங்கி வரக்கூடும்.

_____________________________________________________________________
தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு,  மதுரை மாவட்ட கிளை
_____________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்