privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!

மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!

-

ன்றாக பின்னிப் பிணைந்திருந்ததாலேயே அந்த நான்கு விலங்குகளையும் சிங்கத்தால் அடித்துக் கொன்று சாப்பிட முடியவில்லை. எனவே தந்திரமாக, சூழ்ச்சி செய்து அந்த நான்கு விலங்குகளையும் பிரித்தது. இப்போது சிங்கத்தால் தனித்தனியாக அந்த நான்கு விலங்குகளையும் வேட்டையாடி புசிக்க முடிந்தது. இந்தக் கதையை விரல் சூப்பும் வயதிலேயே பள்ளியில் படித்திருப்போம்.

ஆனால், தந்திரமாக ஏமாற்றப்பட்டு, சூழ்ச்சி செய்து பிரிக்கப்பட்டு, தனித்தனியாக இருப்பதாலேயே தொடர்ந்து நாம் சிங்கத்தால் நர வேட்டையாடப்பட்டு இறந்து வருகிறோம். எனவே ஒன்றாக இணைவோம். சிங்கத்தை பின்னங்கால் பிடறியில் அடித்து ஓட ஓட விரட்டுவோம்… என்று முடிவு செய்து நான்கு விலங்குகளும் ஒன்றாக கைகோர்த்தன. சிங்கத்தை காட்டை விட்டே விரட்டின… என்றொரு கதையை எந்தக் காலத்திலும் நாம் படித்ததில்லை. அப்படியொரு கதை இந்தியாவில் சமீபத்தில் எழுதப்படவும் இல்லை.

இந்தக் குறையை போக்குவதற்காகவே வரலாற்று புகழ்மிக்க ஒரு கதையை அரியானா மாநிலம், குர்கான் நகரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள மானேசர் தொழிற்பேட்டையில் அமைந்திருக்கும் மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது பிரிவு கார் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அதுவும் அச்சில் அல்ல. இந்திய சரித்திர கல்வெட்டில் பொறிக்கும் விதமாக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். மன உறுதியுடன் போராடி வரும் இத்தொழிலாளர்களின் போராட்டம், வர்க்க ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும், நாளைய விடியலுக்கு அறைகூவல் விடுப்பதாகவும் உள்ளது.

இந்திய நாட்டின் தலைநகரிலிருந்து ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் மானேசர் தொழிற்பேட்டையை அடைந்துவிடலாம். ஒருவகையில் உலகமே இங்குதான் உற்பத்தியாகிறது என்று சொல்லலாம். கார்கள், பைக்குகள், செமிகண்டக்டர்கள், வாகன உதிரி பாகங்கள், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், தொலைப்பேசி – கைப்பேசிகள்… அவ்வளவு ஏன், பாம் டேட்டா அனலிஸ் மையமும், பிரைன் ரிசர்ச் ஆய்வுக்கூடமும், இராணுவப் பள்ளியும் கூட இங்கு அமைந்திருக்கிறது.

1980களில் குர்கானில் தொடங்கப்பட்ட மாருதி உத்யோக் நிறுவனத்தால் அதிகரித்து வந்த நுகர்வு கலாச்சாரத்துக்கு தீனி போடும் வகையில் கார்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவே இந்த மானேசர் தொழிற்பேட்டையில் தனது இரண்டாவது கார் பிரிவு தொழிற்சாலையை மாருதி சுசுகி நிறுவனம் தொடங்கியது. விதவிதமான ஃப்ளேவர்களில் தயாராகும் ஐஸ்க்ரீம் போல ஸ்விப்ட், ஏ-ஸ்டார், டிஸெயர், எஸ்எக்ஸ்4 மாடல் கார்களை உற்பத்தி செய்து நடுத்தரவர்க்கத்துக்கும், மேட்டுக்குடி கனவான்களுக்கும் இங்கிருந்து வழங்க ஆரம்பித்தது.

இதற்காக சுற்று வட்டார பகுதியிலிருந்து, ஐடிஐ முடித்த இளைஞர்களை நிர்வாகம் வேலைக்கு அமர்த்தியது. ஷிப்டுக்கு 600 தொழிலாளர்கள் வீதம் மொத்தம் ஆயிரத்து 200 தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகிறார்கள். இவர்களில் நிரந்தர தொழிலாளர்களை விட, பயிற்சியாளர்களும், அதை விட ஒப்பந்த தொழிலாளர்களும்தான் எண்ணிக்கையில் அதிகம் என்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்ளலாம்.

இந்த ஆயிரத்து 200 தொழிலாளர்கள்தான் கடந்த நான்கு மாதங்களாக தங்கள் உரிமைக்காக போராடி வருகிறார்கள் என்பதல்ல விஷயம். இவர்களுக்காக மானேசர் தொழிற்பேட்டையிலுள்ள அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கிறார்கள், களத்தில் நிற்கிறார்கள் என்பதுதான் நெஞ்சை நிமிர்த்தி பெருமைப்பட வேண்டிய விஷயம். ஓரு தொழிற்சாலையில் மட்டுமோ அல்லது அந்தத் தொழிற்சாலையின் கிளைத் தொழிலாளர்களைச் சேர்த்துக் கொண்டோ மட்டும் போராடினால் போதாது. அந்த வட்டாரம் முழுதுமாக உள்ள தொழிலாளர் வர்க்கத்தை ஓரணியில் திரட்டி உறுதியுடன் போராட வேண்டும். அப்பொழுதுதான் இன்றைய உலகமய சூழலில் முதலாளித்துவ அடக்குமுறைகளை முறியடிக்க முடியும் என்பதை இந்திய தொழிலாளி வர்க்கத்துக்கு உணர்த்தியிருக்கிறார்களே… அதுதான் சிறப்பு.

இதை தொடக்கத்திலிருந்து பார்த்தால்தான் இந்தப் போராட்டத்தின் வலிமையை, அது தரும் உத்வேகத்தை உணரவும், புரிந்து கொள்ளவும், பாடம் கற்கவும் முடியும்.

மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்

45 விநாடிகளில் உங்களால் என்ன செய்ய முடியும் என்று மெத்தப் படித்த மேதாவிகளிடம் கேட்டுப் பாருங்கள். விடை சொல்லவே 45 விநாடிகளுக்கு மேல் யோசிப்பார்கள். ஆனால், மானேசர் தொழிற்பேட்டையில் அமைந்திருக்கும் மாருதி சுசுகி தொழிற்சாலையின் அசெம்பிளிங் லைனில் பணிபுரியும் தொழிலாளர்கள், சராசரியாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு 45 விநாடிகளும் ஒரு காரை உருவாக்க தங்கள் குருதியை எரிக்கிறார்கள். இதை ஏதோ அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மிகைப்படுத்தி சொல்வதாக நினைக்க வேண்டாம். மாருதி சுசுகியின் இணையதளத்திலேயே 12.5 மணி நேரத்தில் மெட்டல் ஷீட்டிலிருந்து ஒரு காரை தயாரிப்பதாகவும், அசெம்பிளிங் லைனில் 23 விநாடிகளுக்கு ஒரு கார் நகருவதாகவும் பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அதாவது சராசரியாக ஒரு ஷிப்டுக்கு 600 கார்களை உற்பத்தி செய்வதற்காக 600 தொழிலாளர்கள் மாருதி சுசுகி இரண்டாவது பிரிவு தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள்.

இந்த இடத்தில் மாருதி சுசுகி நிறுவனம் குறிப்பிடாமல் விட்ட ஒரு விஷயத்தை – கணக்கை – பார்ப்போம். அப்பொழுதுதான் எரிந்து சாம்பலாகும் அந்நிறுவன தொழிலாளர்களின் நிலையை உணர முடியும்.

8 மணிநேரம் கொண்ட ஒரு ஷிப்டில், 600 தொழிலாளர்கள், 600 கார்களை தயாரிக்கிறார்கள். இது அந்நிறுவனமே குறிப்பிடும் கணக்கு. 600ஐ 45 விநாடிகளால் பெருக்கினால் 27 ஆயிரம் விநாடிகள் வரும். அதாவது 450 நிமிடங்கள். அதாவது ஏழரை மணித் துளிகள். அதாவது 8 மணிநேரம் கொண்ட ஒரு ஷிப்டில் ஏழரை மணி நேரங்கள் கார்களை தயாரிக்க மட்டுமே ஒவ்வொரு தொழிலாளியும் செலவு செய்கிறார். மீதமுள்ள 30 நிமிடங்களில், 20 நிமிடங்கள் உணவுக்காகவும், 7 நிமிடங்கள் தேநீர் குடிக்கவும் ஒதுக்குகிறார். எனவே மீதமுள்ள 3 நிமிடங்களில்தான், அதாவது 180 விநாடிகளில்தான், ஒரு தொழிலாளி, அன்றைய தினம், தான் பணிபுரிந்த 27 ஆயிரம் விநாடிகளுக்காக ஓய்வெடுத்துக் கொள்ள, ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும்.

இதையே கொஞ்சம் விரித்து பார்ப்போம். ஓய்வுக்காக கிடைத்த இந்த 180 விநாடிகளை, உழைப்புக்காக ஒரு தொழிலாளி செலவிடும் 27 ஆயிரம் விநாடிகளின் மீது பரப்பினால், மாருதி சுசுகி நிறுவனத்தில் ஒரு ஷிப்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒரு விநாடியில் 150 மைக்ரோ விநாடிகள் மட்டுமே அவர்களுக்கு என்று கிடைக்கும். இதற்குள்தான் அவர்கள் நிற்கவும், மூச்சு விடவும், கை கால்களை அசைக்கவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எஞ்சிய விநாடிகள், நிமிடங்கள், நேரங்கள் அனைத்தும் மாருதி சுசுகி நிறுவனத்துக்கு மட்டுமே சொந்தம். நிறுவனத்துக்கு சொந்தமான ‘அந்த நேரத்தில்’ தலையைக் கூட திருப்பக் கூடாது. தப்பித் தவறி திருப்பினால், வெட்டி விடும் உரிமை நிறுவனத்துக்கு உண்டு.

ஆம், உணவுக்காக ஒதுக்கப்பட்ட 20 நிமிடங்களில், ஒவ்வொரு தொழிலாளியும் 400 மீட்டர் தொலைவிலுள்ள உணவகத்துக்கு நடக்க வேண்டும். அங்கு வரிசையில் நிற்க வேண்டும். வாங்கிய உணவை அவசரமாக சாப்பிட வேண்டும். தனது இடத்துக்கு திரும்பி விட வேண்டும். ஒரு நிமிடம் தாமதமானாலும் சம்பளத்தில் வெட்டு நிச்சயம். வேலை நேரத்தில் கழிப்பறை செல்ல அனுமதியில்லை. எனவே சிறுநீர் – மலம் கழிக்கவும் இந்த உணவு இடைவேளையைதான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருநாள் விடுப்பு எடுத்தால், ஊக்கத்தொகையில் ரூபாய் 1,500ம், இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்தால் ஊக்கத்தொகை முழுவதும் பறிக்கப்படும். அடுத்த ஷிப்டுக்கு உரிய தொழிலாளி வரவில்லை என்றால், 16 மணி நேரங்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும். இதெல்லாம் நிர்வாகத்துக்கு உரிய ‘உரிமைகள்’.

இதைதான் ‘க்ளாஸ் பவர்’ என்று பெருமையாக விளம்பரங்களில் குறிப்பிடுகிறதா மாருதி சுசுகி? தனது வாடிக்கையாளர்களிடம், ‘நீங்களே எரிபொருள்’ என மல்டி கலரில் அச்சடித்து மார் தட்டுகிறதே மாருதி சுசுகி நிறுவனம்… அதன் உண்மையான அர்த்தம், எரிந்து சாம்பலாவது எங்கள் நிறுவனத்தின் இரண்டாவது பிரிவு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் குருதிதான் என்பதை குறிப்பால் உணர்த்துகிறதா?

தங்கள் நிறுவன பங்குகளை மேட்டுக்குடியினர் வாங்குவதற்காக தொழிற்சாலையின் வெளித் தோற்றத்தை ஹை டிஜிட்டல் கேமராவில் படம் பிடித்து காட்டும் நிறுவனம், ஏன் உட்புற தோற்றத்தை படம் பிடித்துக் காட்ட மறுக்கிறது? ஒவ்வொரு பிரிவிலும் கண்காணிப்பு கேமராவை பொருத்தி ஒரு தொழிலாளி எப்படி வேலை செய்கிறார் என்பதை கண்காணிக்கும் நிறுவனம், கழிப்பறைகளில் கூட ‘அநாவசியமாக’ அவர் நேரத்தை செலவிடுகிறாரா என்பதை அறிய கேமராவை பொருத்தியிருப்பது வக்கிரம் மட்டுமல்ல, பாசிசத்தின் உச்சம்.

இந்நடவடிக்கையை ஆதரிக்க வேறு செய்கிறார், நிர்வாகம் வீசும் எலும்புத் துண்டை பொறுக்கித் தின்னும் ஒர் அதிகாரி. ”கழிவறைகளில் ‘நேரம்’ செலவிட எந்தத் தொழிலாளிக்கும் உரிமையில்லை. இதனால் உற்பத்திதான் பாதிக்கும்? எனவே அதிக முறை கழிவறை செல்பவர்கள் – ‘அதிக நேரத்தை’ அங்கு செலவிடுபவர்கள் ஆகியோரின் சம்பளம் பிடிக்கப்படும். இதில் தவறொன்றுமில்லை…” என கொக்கரிக்கிறார்.

இப்படி பல அடக்குமுறைகளை எதிர்கொண்டு கற்பனைக்கும் எட்டாத அளவில், மைக்ரோ விநாடி கூட வீணாக்காமல் உழைக்கும் இந்தத் தொழிலாளர்களின் பணியை துல்லியமாக அறிய விரும்பினால், உடனடியாக சார்லி சாப்ளினின் ‘மாடர்ன் டைம்ஸ்’ சினிமாவை பாருங்கள்.

இப்படி தங்களையே எரித்து சாம்பலாவதற்குத்தான் நிரந்தர தொழிலாளர்களுக்கு 10 முதல் 12 ஆயிரம் ரூபாயும், பயிற்சியாளர்களுக்கு 7 ஆயிரம் ரூபாயும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 4 முதல் 5 ஆயிரமும் சம்பளமாக தரப்படுகிறது. ‘வேகமும் கட்டுப்பாடும்’ மாருதி சுசுகி காரின் அடையாளம் மட்டுமல்ல, மாருதி சுசுகி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீது கட்டாயமாக சுமத்தப்பட்ட அடிமை ஒப்பந்தமும் கூட.

இந்த இடத்தில் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். ஷிப்டுக்கு 600 கார்கள் என்பது சராசரி அளவுதான். இதுவே உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என நிர்வாகம் முடிவு செய்தால், இந்த 45 விநாடிகள் என்னும் எண்ணிக்கை மேலும் குறைக்கப்படும். அதாவது 27 ஆயிரம் விநாடிகளில் ஓய்வுக்காகவும், ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் ‘பெரிய மனதுடன்’ ஒதுக்கப்பட்ட 180 விநாடிகளும் நிர்வாகத்தால் களவாடப்படும்.

இப்படி தொழிலாளர்களை சக்கையாக உறிந்துதான் இந்திய சந்தையின் கார் விற்பனையில் மாருதி சுசுகி முதல் இடத்தில் இருக்கிறது. வருடந்தோறும் இந்நிறுவனத்துக்கு கிடைக்கும் லாபம், இரு மடங்கு, மும்மடங்கு என அதிகரித்து வருகிறது. ஆனால், தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வோ, சலுகைகளோ வழங்கப்படவேயில்லை. பதிலாக உற்பத்தியின் எண்ணிக்கை மட்டும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கப்படுகிறது. இந்த ‘டார்கெட்’டை அடையும்படி தொழிலாளர்கள் டார்ச்சர் செய்யப்படுகிறார்கள்.

இதனால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மாதமும் அத்தொழிலாளர்கள் தங்களுடன் சம்பளத்தை மட்டும் எடுத்துச் செல்வதில்லை. மன அழுத்தத்தையும், உடல் சோர்வையும் சேர்த்தே சுமந்து செல்கிறார்கள்.

இவர்களது பிரச்னைகளை பேசித் தீர்க்க மானேசரில் வலுவான சங்கம் இல்லை. 1980களில் குர்கானில் தொடங்கப்பட்ட மாருதி உத்யோக் நிறுவனத்தில் ஏற்கனவே ‘மாருதி உத்யோக் தொழிலாளர் சங்கம்’ இருக்கிறது. மாருதி நிர்வாகமே உருவாக்கிய இந்த எடுபிடி சங்கமே மானேசரில் உள்ள இரண்டாவது கார் பிரிவு தொழிற்சாலைக்கும் பொருந்தும் என நிர்வாகம் திட்டவட்டமாக சொல்லிவிட்டது.

அப்படியானால், குர்கானில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு என்ன சம்பளமோ அதையே எங்களுக்கும் தர வேண்டியதுதானே… அவர்கள் உற்பத்தி செய்யும் கார்களை விட அதிகளவில் உற்பத்தி செய்யும்படி எங்களை ஏன் கசக்கிப் பிழிகிறீர்கள் என்று மானேசரில் உள்ள மாருதி சுசுகி தொழிலாளர்கள் கேட்ட கேள்விக்கு நிர்வாகம் பதிலளிக்கவில்லை.

மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும் !

எனவே மானேசர் தொழிலாளர்கள் எந்தக் கட்சியையும் சாராத ஒரு தொழிற்சங்கத்தைக் கட்ட முயன்றனர். கடந்த ஜூன் மாதம், ‘மாருதி சுசுகி பணியாளர் சங்கம்’ (மாருதி சுசுகி எம்ப்ளாயீஸ் யூனியன்) என்னும் பெயரில் சங்கத்தை தொடங்கி, அதனை பதிவு செய்வதற்காக 11 தொழிலாளர்கள் சண்டிகரில் உள்ள தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை சந்தித்து ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

ஆனால், முதலாளிகளின் எடுபிடிகளாக மாறிவிட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், தொழிற்சங்கம் தொடங்குவதற்காக அளிக்கப்பட்ட ஆவணங்களின் நகலை உடனடியாக மாருதி நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தார்கள். அதைப் பார்த்து ஆவேசம் அடைந்த நிர்வாகம், ஜூன் 3 அன்று தொழிற்சாலைக்கு வந்த தொழிலாளர்களை விசாரித்து, ‘சங்கம் தொடங்கி அதை பதிவு செய்யச் சென்ற மாபெரும் குற்றத்துக்காக’ 11 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது.

1926-ம் ஆண்டு தொழிற்சங்க சட்டத்தின்படி, 7 அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒன்றாகச் சேர்ந்தாலே சங்கம் கட்டும் உரிமையும், அவர்களின் குறைகளைப் பேசித் தீர்வு காணும் உரிமையும் தரப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் ஏட்டளவிலேயே இருப்பதற்கு மானேசர் மாருதி சுசுகி நிறுவனம் நடந்துக் கொண்டது ஓர் உதாரணம்.

நிர்வாகத்தின் இந்த அடாவடித்தனத்தை எதிர்த்து ஜூன் 4 அன்று மானேசர் மாருதி சுசுகி தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். முறைப்படி முன்னறிவிப்பு கொடுக்காத வேலை நிறுத்தம் என்னும் காரணத்தை காட்டி இந்த வேலை நிறுத்தத்தை சட்ட விரோதம் என அரசும், மாருதி சுசுகி நிறுவனமும் அறிவித்தன. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால், இன்னும் பல ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வே தரமாட்டோம் என மிரட்டின.

இதற்கெல்லாம் அசராமல் மானேசர் மாருதி சுசுகி தொழிலாளர்கள் உறுதியுடன் போராடினார்கள். தங்கள் சங்கத்துக்கு அங்கீகாரம் வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார்கள். நிர்வாகம் தனது எடுபிடி சங்கத்தின் வலிமையை காட்டுவதற்காக 11 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிற்சங்க தேர்தலை நடத்தியது. அதை ஒட்டுமொத்த தொழிலாளர்களும் புறக்கணித்தார்கள்.

மாருதி நிர்வாகத்துக்கு எதிராக தொழிலாளர்கள் இப்போது முதல்முறையாக போராடவில்லை. ஏற்கனவே 2000-ம் ஆண்டில் நடந்த நீண்ட போராட்டம், நிர்வாகத்தால் கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கிறது. பல நிரந்தர தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 2005-ல் ஹோண்டா தொழிலாளர்கள் போராடிய போது, அரசும் நிர்வாகமும் குண்டர் படையின் உதவியுடன் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. 2009-ல் ரிகோ ஆட்டோ நிறுவனத்தின் தொழிலாளர்கள், தொழிற்சங்க உரிமைக்காக தொடர்ந்து ஒரு மாதம் போராடி அடக்குமுறைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இந்த முந்தைய வரலாற்றிலிருந்து படிப்பினைகளை கற்றுக் கொண்டு மாருதி சுசுகி தொழிலாளர்கள் போராடியதுதான் சிறப்புக்குரிய அம்சம். இப்போராட்டத்தை ஆதரித்து ஹோண்டா மோட்டார் சைக்கிள் தொழிலாளர் சங்கம் உட்பட பல சங்கங்கள் திரண்டன. மானேசர் மட்டுமின்றி ரேவாரி மாவட்டத்திலுள்ள தாரு ஹோரா தொழிற்பேட்டை முதல் குர்கான் வரையிலான அனைத்து தொழிலாளர்களின் சங்கங்களையும் தங்களுக்கு ஆதரவாக மாருதி சுசுகி தொழிலாளர்கள் திரட்டினார்கள்.

இதனால் அரியானா மாநிலமே பற்றி எரிந்தது. ஆனால், எந்தவொரு தேசிய காட்சி ஊடகத்திலும் இப்போராட்டம் குறித்த விரிவான தகவல்கள், செய்திகள் வரவில்லை. இத்தனைக்கும் தில்லியிலிருந்து ஒரு மணி நேரத்துக்கும் குறைவான பயணத்தில் மானேசரை அடைந்து விடலாம். என்றாலும் ஊடகங்கள் இந்த எழுச்சிமிகு போராட்டத்தை புறக்கணித்தன. காரணம், செய்தி வெளியிட்டால் மாருதி சுசுகி விளம்பரம் கொடுக்காது. விளம்பர வருவாய் இல்லாவிட்டால் ஊடகத்தை நடத்த முடியாது. எனவே மாருதி சுசுகி நிறுவனத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. அங்கு ‘முப்போகமும் விளைவதாக’ செய்திகளை வெளியிட்டன.

ஆனால், ஊடகங்களை போல் மாநில முதல்வரால் இந்த எழுச்சிமிகு போராட்டத்தை புறக்கணித்து மவுனமாக இருக்க முடியாதே? எனவே அரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, இரு தரப்பையும் அழைத்து பேசினார். மானேசர் மாருதி சுசுகி நிர்வாக இயக்குநர் சின்ஜோ நகானிசி உள்ளிட்ட உயரதிகாரிகளும், தொழிலாளர்களின் பிரதிநிதிகளும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இதனையடுத்து 13 நாட்கள் நடைபெற்ற போராட்டம், ஜூன் 16 அன்று முடிவுக்கு வந்தது.

மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்! “இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. பணிநீக்கம் செய்யப்பட்ட 11 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த மாருதி சுசுகி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. எனவே வேலைநிறுத்தத்தை கைவிட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். சனிக்கிழமை முதல் (ஜூன் 18 முதல்) அவர்கள் பணிக்குத் திரும்புவார்கள்” என்று மாநிலத் தொழிலாளர் நலத்துறைச் செயலர் சர்பன் சிங் அறிவித்தார்.

ஆனால், புதிய தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குவது என்ற முக்கிய கோரிக்கை தொடர்பாக உடன்பாட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. “புதிய தொழிற்சங்கம் அமைப்பதில் ஆலை நிர்வாகத்துக்கு எவ்வித பங்கும் இல்லாததால், உடன்பாட்டில் 2-வது தொழிற்சங்கம் அமைப்பது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. அரியானா மாநில தொழிலாளர் நலத் துறையிடம் எங்களது தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதற்காக கடந்த ஜூன் 3-ம் தேதி விண்ணப்பம் அளித்தோம். இதற்கு அனுமதி கிடைத்தவுடன் எங்களது சங்கம் செயல்படத் தொடங்கும்” என்று புதிதாகத் தொடங்கப்பட்ட மாருதி சுசுகி தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சிவகுமார் நம்பிக்கையுடன் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

“தொடர் வேலைநிறுத்தம் காரணமாக, இந்த மாதம் ஏற்பட்ட உற்பத்தி இழப்பை ஈடுகட்டுவதற்கு தொடர்ந்து வேலை செய்வோம்…” என தொழிலாளர்கள் வாக்குறுதி அளித்தனர். அதன்படியே 13 நாட்கள் இழப்பை ஈடுகட்ட உழைத்தனர்.

ஆனால், மாருதி சுசுகி நிர்வாகம், தான் அளித்த வாக்குறுதிகளை மீறியது. ஜூலை மாதம் முழுக்க சங்கத்தை பதிவு செய்வதற்காக சண்டிகர் சென்ற 11 தொழிலாளர்களையும் குறி வைத்து தாக்கியது. ‘ஜூலை மாதம் முழுக்க தொழிலாளர்கள் மந்தமாக வேலை செய்தனர்…’ என குற்றம் சாட்டியது. புதிய சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்க மறுத்தது. இதனால் நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையிலான பிரச்னை முற்றத் தொடங்கியது.

இந்நிலையில்தான் ஆகஸ்ட் மாதம் பிறந்தது. ‘ஃப்ரெஷ் பீஸ்’ புனிதரும், மாபெரும் குணசித்திர நடிகருமான அண்ணா ஹசாரே, தில்லி ராம் லீலா மைதானத்தில், அரசின் ஏற்பாட்டில், அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.

இதை வேடிக்கை பார்ப்பதற்காக சில தொழிலாளர்கள் சென்றார்கள். இதை எப்படியோ மோப்பம் பிடித்த நிர்வாகம், அந்தத் தொழிலாளர்களை அழைத்து மிரட்டியதுடன் ‘முன்பே அடையாளம்’ காணப்பட்ட 11 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது. அத்துடன் 38 தொழிலாளர்களை ஆகஸ்ட் 29 அன்று சஸ்பெண்ட் செய்தது.

இதனையடுத்து தொழிலாளர்கள் அணி திரண்டு மீண்டும் போராட ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போராட்டத்தை ஒடுக்க நிர்வாகமும் முயன்று வருகிறது. அனைத்து தொழிலாளர்களும் கட்டாயமாக ‘Good Conduct form’ல் கட்டாயமாக கையெழுத்திட வேண்டுமென்று இப்போது நிர்வாகம் கட்டளையிடுகிறது. ஆனால், ‘இப்படியொரு படிவமே தேவையில்லாதபோது நாங்கள் எதற்காக கையெழுத்திட வேண்டும்? எங்கள் சுயமரியாதையை அடகு வைக்க முடியாது’ என்று தொழிலாளர்கள் கம்பீரமாக மறுத்து விட்டனர்.

இந்நிலையில் செப்டம்பர் 8 அன்று ‘தொழிலாளர்களுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை…’ என்று மாருதி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பர்கவா திமிருடன் பேசியிருக்கிறார். இதற்கு ஜப்பானில் உள்ள சுசுகி நிர்வாக தலைவர் ஒசாமு சுசுகி ஆதரவு தெரிவித்துள்ளதுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார். தில்லியில் நடைபெற்ற மாருதி நிறுவனத்தின் 30வது ஆண்டு பங்குதாரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒசாமு சுசுகி, “தொழிற்சாலைக்குள் தொழிலாளர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதை அனுமதிக்க முடியாது. அது ஜப்பானாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதை அனுமதிக்க முடியாது. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல அமெரிக்கா சிலாகிக்கும் ‘நிர்வாகப் புகழ்’ இந்துமத பயங்கரவாதி மோடியின் குஜராத்தில், மாருதியின் ஒரு பிரிவை தொடங்கவும் ஒசாமு பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

அடக்குமுறைக்கும், தொழிலாளர்களை கசக்கிப் பிழியவும் குஜராத் முதல்வரான இந்த இந்துமத பயங்கரவாதி பொருத்தமானவன்தான். அதற்கு குஜராத் மாநிலம் ஹலோல் என்ற இடத்தில் அமைந்துள்ள சிறப்பு பொருளாத மண்டலமே சாட்சி. இங்குள்ள ஜெனரல் மோட்டார்ஸ் என்னும் பன்னாட்டு நிறுவனத்தில், செவ்ரோலெட் உள்ளிட்ட பல நவீன கார்கள், இறக்குமதி செய்யப்பட்ட உதிரிகளை வைத்து தயார் செய்யப்படுகிறது.  இந்த தொழிற்சாலையில் கார்கள் தயாரிக்கும் பணியில் சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் கணக்கில் அடங்காதவை.

எனவே மாருதி சுசுகியின் மற்றொரு கிளை தொழிற்சாலையை இந்த மாநிலத்தில் நிறுவ ஒசாமு சுசுகி பேச்சு வார்த்தை நடத்துவதில் வியப்பொன்றும் இல்லை.

மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்! ஒசாமு சுசுகியின் அடாவடித்தனமான பேச்சும் நடவடிக்கையும் ஒரு விஷயத்தை அழுத்துமாக உணர்த்துகிறது. அது, ஏகாதிபத்தியங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தேசம், நாடு, கொலைக்காரன், கொள்ளைக்காரன், மத பயங்கரவாதி என்பதெல்லாம் முக்கியமில்லை. நிதிமூலதனமும், நிதிமூலதன பெருக்கமும்தான் முக்கியம்.

ஆனால், ஏகாதிபத்தியத்தின் ஏவலாகவும், அடிவருடியாகவும் தரகு முதலாளிகள் வேண்டுமானால் இருக்கலாம். வர்க்க ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து கிளர்ந்து எழும் உழைக்கும் மக்கள் என்றுமே ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்துக்கு தலைமை வகித்து நிற்பார்கள். எந்த அடக்குமுறைக்கும் அடி பணிய மாட்டார்கள்.

இந்த உண்மையைத்தான் மானேசர் மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது பிரிவு கார் தொழிற்சாலையின் தொழிலாளர்கள், தங்கள் வட்டாரத்திலுள்ள அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து போராடுவதன் மூலம் இந்திய உழைக்கும் மக்களுக்கு அறிவித்திருக்கிறார்கள்.

சமரசத்துக்கு அடிபணியாமல் போராடும் அத்தொழிலாளர்களுக்கு புரட்சிகர நல்வாழ்த்துகள்.

______________________________________________

அறிவுச் செல்வன்

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. ஒருவகையில் உலகமே இங்குதான் உற்பத்தியாகிறது .என்றால் போராடும் தொழிலாளர்கள்
    அடக்கு முறைக்கும் ஊசலாட்டத்துக்கும் அஞ்சாது போராட வாழ்த்துவோம்

  2. அறிவுச்செல்வன் அவர்களே வணக்கம். அற்புதமான கட்டூரை… தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக! வெல்க போராட்டம். இந்த ஊடகங்களைதான் என்ன செய்வதென்றே தெரியவில்லை… ஃபக்கிங் ஃபாசிஸ்ட்

    • இந்திய போன்ற வல்லாதிக்க நாடுகளில் புரட்சியின் குழந்தைகள் வளருவதற்கே முன்பே கொள்ளப்படுகின்றன..

  3. //குஜராத் மாநிலம் ஹலோல் என்ற இடத்தில் அமைந்துள்ள சிறப்பு பொருளாத மண்டலமே சாட்சி. இங்குள்ள ஜெனரல் மோட்டார்ஸ் என்னும் பன்னாட்டு நிறுவனத்தில், செவ்ரோலெட் உள்ளிட்ட பல நவீன கார்கள், இறக்குமதி செய்யப்பட்ட உதிரிகளை வைத்து தயார் செய்யப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் கார்கள் தயாரிக்கும் பணியில் சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் கணக்கில் அடங்காதவை.//

    “ஜெனரல் மோட்டார்ஸ்” நிறுவனத்தின் அருகதை மிகச் சரியாகவே விளக்கப்பட்டுள்ளது.

    நன்றி தோழர்களே!.

    இந்நிறுவனங்கள், பொறியியல் வல்லுநர்கள் மற்றும் அத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர்களையே பந்தாடும்போது, சாதாரண ஊழியர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை.

    எல்லாவற்றிற்கும் இவர்களுக்குப் பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  4. மிகப்பெரிய மனித உரிமை மீறல்களில் ஒன்று தான் உழைப்புச் சுரன்டல். எல்லா நாட்டிலும் இது நடந்து கொன்டிருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் மிக மிக அதிகமாக!

  5. இன்னும் முழுதாக படிக்கவில்லை… இப்போதைக்கு உங்களுடன் சேர்ந்து என்னுடைய வாழ்த்துக்களை தொழிளார்களுக்கு தெரிவிதுக்கொள்ளுகிறேன்…

  6. “தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், தொழிற்சங்கம் தொடங்குவதற்காக அளிக்கப்பட்ட ஆவணங்களின் நகலை உடனடியாக மாருதி நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தார்கள்”

    Bloody dogs…

    • சரவ் அவர்களே… இது ஒன்றும் புதிது அல்ல… எப்ப யாரு இது மாதிரி சங்கம் தொடங்க அனுமதி கேட்டாலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ஒரு கோப்பு தொழிலார் துறையால் அனுப்பப்படும்… இதுக்கு பேரு கோப்பு நகர்வு… (File Movement )

      முதலாளிக்கு தெரியாமல் சங்கம் அமைத்து என்ன பயன்… சங்கம் இருப்பது முதலாளிக்கு தெரிந்ததால் தானே, முதலாளி சிறிதளவாவது சங்கத்துக்கு பயப்படுவான்…

  7. தோழர் அறிவுச் செல்வனின் சிறப்பான கட்டுரைக்கு வாழ்த்துக்கள். இது போன்ற போராட்ட நடவடிக்கைகளை வெகுஜன ஊடகங்கள் மக்களுக்குச் சொல்லாது. போராடும் தொழிலாளர்கள் ஒற்றுமை பலப்படட்டும், போராட்டம் வெல்லட்டும்.
    ஆயிரக்கணக்கில் இருக்கும் தொழிலாளர்கள் அனுபவ பாடத்தினால் அணி திரண்டிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்
    மதுரைக்கருகில் திருமங்கலம் செல்லும் வழியில் சிப்காட் தொழிற்பேட்டையில் தென்னக ரயில்வே-க்கு தண்டவாளத்திற்கு அடியில் போடப்படும் கான்கிரீட் ஸ்லீப்பர்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. பெயர் ராயலசீமா கான்கிரீட் ஸ்லீப்பர்ஸ் பி.லிட். இதிலிருக்கும் தொழிலாளர்களில் சிலர் தங்களது அடிப்படை உரிமைகளுக்காக சங்கம் அமைக்க படிப்படியாக அணி திரண்டனர் (மார்க்சிய லெனினிய சிந்தனை உள்ள சில தோழர்கள் முன்னணியில்) விளைவு கடந்த ஒன்றரை மாதத்தில் சுமார் 10 பேரை நிரந்தர பணிநீக்கம் செய்திருக்கிறது அந்த நிர்வாகம். மதுரை தொழிலாளர் துணை ஆணையரிடம் தொழிற்சங்க பதிவிற்காக தோழர்கள் மனுச் செய்துள்ளனர். தொழிலாளர் துறை அலுவலகம் பல வெளிச்சொல்லமுடியாத அழுத்தங்களின் காரணமாக அந்த பதிவை மேற்கொள்ளாமல், ஏதேனும் குறை சொல்லி 3 முறை திருப்பியனுப்பி மீண்டும் மீண்டும் மீள சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்திற்கு மாதிரி நிலையாணை கூட கிடையாது. நிலையாணையின் எந்த சரத்தின் கீழ் குற்றச்சாட்டு என சொல்லப்பட மாட்டாது. இந்த மாருதி தொழிலாளர்களின் போராட்ட செய்தியை படிக்க அந்த தோழர்களுக்கு வழங்கி யிருக்கிறேன். அவர்களும் விரைவில் வெகுண்டெழுந்து ஒன்றுபடுவார்கள் என எதிர்பார்ப்போம்.

    • நண்பர் சித்திரகுப்தன்,

      மதுரையில் நீங்க பணி புரியும் அரசு போக்குவரத்து பணிமனைகளில் தொழிலாளர்களின் அடிப்படை வேலை திறன்கள், நேர்மைகள், நீர்வாக சீர்கேடுகள், அதற்க்கு எத்தனை சத தொழிலாளர்களும் காரணம், மற்றும் மறைக்கப்படும் உண்மைகள் (அதாவது லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேர்வது, வண்டிகளை பழுதுபார்ப்பதில் மொத்தனம் மற்றும் ஒழுக்கம் இல்லாமல் செய்ல்படுவது, ஊழலுக்கு துணை போவது) பற்றி விரிவாக எழுதுங்களென்.

      நிர்வாகிகள், அமைச்சர்கள் அதிகாரிகளின் ஊழல்கள் பற்றி மட்டும் தான் எழுதுவீக. தொழிலாளர்களின் உயர்குடியினரான இந்த அரசு ஊழியர்களை பற்றி வெளிப்படையாக, நடுநிலையாக எழுதுங்களேன் பார்க்கலாம்.

      • நண்பர் அதியமான்

        அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 14 ஆண்டுகளாக பராமரிப்பு, மற்றும் அலுவலகப் பிரிவில் நியமனமே இல்லை. ஆனால் தொழிலாளர்கள் ஓய்வு பெற்றும் இறந்தும் சென்று கொண்டிருக்கிறார்கள். மேலாண்மை சிந்தனை இருக்க வேண்டியதுதான். ஆனால் கலர் கண்ணாடி அணிந்து கொண்டு உலகின் நிகழ்வுகளை பார்க்க முயற்சிக்காதீர்கள். தொழிலாளர் தரப்பில் சில தவறுகள் இருக்கலாம் நான் 100 சதவீதம் சரி என சொல்லவில்லை. அதே சமயம் அந்தந்த தொழிலில் யதார்த்தமாக பணியில் இருப்பவருக்குத்தான் அதன் சிரமங்களை உணர முடியும். 2 லட்சம் லஞ்சம் கொடுத்து ஓட்டுனர், நடத்துனர் பணியில் சேருகிறார் என்றால் அது பாமர மக்களினால், தொழிலாளர்களால் ஏற்பட்ட நிலை அல்ல.

        • நண்பர் சித்திரகுப்தன்,

          யார் கலர் கண்ணாடி அணிந்து கொண்டு உலகை பார்க்கிறார்கள் என்று வாசகர்கள் முடிவு செய்துகொள்ளட்டுமே. (என்னை கேட்டால் நீங்க தான் ‘சிவப்பு’ கண்ணாடி அணிந்து கொண்டு உலகை பார்க்கிறீர்கள் என்பேன். அப்ப யார் சரி ?)

          மேலாண்மை சிந்தனை தான் அனைத்துக்கும் மூலகாரணம். The highly motivated entrepreneurs make this world. They are the real heroes of modern industrial world, not villains as you people make them to be. MOTIVE POWER is the most basic ingredient to build this world.

          ///அதே சமயம் அந்தந்த தொழிலில் யதார்த்தமாக பணியில் இருப்பவருக்குத்தான் அதன் சிரமங்களை உணர முடியும்.///

          முழுவதும் உடன்படுகிறேன். தொழில்முனைவோர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் நிலை பற்றியும் இவை மிகவும் பொருந்தும். நீங்க அமைப்பு சார், அரசு தொழிலாளர் நிலைகளை ’மட்டும்’ தான் அறிவீர்கள். அதுவும் முழுவதுமாக அல்ல. உதராணமாக,அரசு நிறுவனமான சென்னை பெட்டோலிய நிறுவனத்தில் கடை நிலை ஊழியர்கள் எப்படி பணி புரிகின்றனர் என்பதை பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டீர்கள். அல்லது அறிய ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்.

          பேருந்து போக்குவரத்து துறை பற்றி ‘தமிழ் பேப்பரில்’ நான் இன்று எழுதிய கட்டுரை இது : http://www.tamilpaper.net/?p=4130 அரசாங்கம் விலகிக்கொள்ளட்டும்!
          நீங்க அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.

  8. /// எனவே மீதமுள்ள 3 நிமிடங்களில்தான், அதாவது 180 விநாடிகளில்தான், ஒரு தொழிலாளி, அன்றைய தினம், தான் பணிபுரிந்த 27 ஆயிரம் விநாடிகளுக்காக ஓய்வெடுத்துக் கொள்ள, ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும்.

    இதையே கொஞ்சம் விரித்து பார்ப்போம். ஓய்வுக்காக கிடைத்த இந்த 180 விநாடிகளை, உழைப்புக்காக ஒரு தொழிலாளி செலவிடும் 27 ஆயிரம் விநாடிகளின் மீது பரப்பினால், மாருதி சுசுகி நிறுவனத்தில் ஒரு ஷிப்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒரு விநாடியில் 150 மைக்ரோ விநாடிகள் மட்டுமே அவர்களுக்கு என்று கிடைக்கும்.///

    இந்த ‘ஆய்வு’ நீங்க மட்டும் செய்ததா அல்லது வேறு யாராவது நிபுணர்கள் செய்ததா ? உங்களுக்கு உள் அனுபவம் முற்றாக இல்லை என்றே தெரிகிறது. 27 ஆயிரம் வினாடிகளும் தொடர்ந்து, நிறுத்தாமல் வேலை யாரும் செய்ய முடியாது. அப்படி ஒரு ‘வேலையை’ எந்த மடையனும் பணிக்க மாட்டான். Assembly line manufacturing has extremely well planned time management and optimises the labour productivity. (சிறு தொழிற்சாலைகளில், உணவகங்களில் தான் இன்னும் வேலை சுமை அதிகம். working conditionsகளும் மோசமாக இருக்கும்). Toyoto way என்ற விஞ்ஞானபூர்வ முறை 50களில் டோயோட்டோ நிறுவனம் உருவாக்கியது. அதன் முக்கிய அம்சம் தொழிலாளியில் வேலை சுமை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது. http://en.wikipedia.org/wiki/The_Toyota_Way

    அந்த பகுதியில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் எந்த முறையில் இந்த போராட்டத்திற்க்கு ஒன்றுபட்ட ஆதரவு அளிக்கிறார்கள் என்று விளக்குக.

    மேலும் குறைந்த பட்ச சம்பளம் பற்றி பல முறை நீங்க பொய்யா அடித்துவிடுவதை பார்த்திருக்கிறேன். நோக்கிய பற்றி, அங்கு தொழிலாளியாக பணி புரிந்த நண்பரிடம் முன்பு தீர விசாரித்திருக்கிறேன். ஹுண்டாயிலும் தான். உங்க தகவல்கள் பலதும் பாதி உண்மைகள் மற்றும் மிகைபடுத்துப்பட்டவை.

    சங்கம் அமைக்கும் உரிமை தொழிலாளர்களுக்கு உண்டு தான். ஆனால் இந்திய தொழிற் சங்க வரலாறு அப்படி ஒன்றும் நல்லா இல்லையே. ரயில்வே ஊழியர் சங்கங்கள் (முக்கியமாக SRMU) போல் பலவும் உள்ளன. கடந்த கால வரலாறு அப்படி. உருப்படியாக வேலை செய்ய விட மாட்டார்கள். ஊழல் படிப்படியாக பெருகும். எனவே தான் இத்தனை கண்டிப்பு.

    சங்கம், வேலை நிறுத்தம் எல்லாம் சரி தான். அடிப்படை உரிமைகள் தான். ஆனால் அப்படி வேலை நிறுத்தம் செய்யும் போது வன்முறையின் ஈடுபடுதல், சங்கத்தில் இல்லாத அல்லது வெளி தொழிலாளர்கள் வேலைக்கு வர முன்வந்தால் அவர்களை பலவந்தமாக தடுப்பது, நிர்வாகிகளை கேரோ செய்வது போன்றவை எல்லாம் நடந்துள்ளன. அவற்றை பலரும் ‘நியாயப்ப்டுத்துவர்’. ’பலமான’ தொழிற்சங்களினால் பல நிறுவனங்கள் 80களில் அழிந்திருக்கின்றன. லாக் அவுட்கள்.

    சரி, இந்த சுசுக்கி நிறுவனத்தின் ஜப்பான் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் வேலை சுமை மற்றும் வாழ்க்கை திறன் எப்படி உள்ளது ? அதே போல் எதிர்காலத்தில் இந்தியாவிலும் சாத்தியம் தான்.

    • ஏழரை மணி நேரம் என்பதை விட 27000 வினாடிகள் என்பது படிப்பவர்க்கு பெரிய எண்ணாக தெரியும் எதார்த்தம் தான் இது…

      சில எழுத்தாளர்கள் தாம் கூற வந்த மூலக் கருத்துக்கு வலு சேர்க்க சில பிரம்மாண்டங்களை தம் எழுத்தில் சேர்ப்பது இயல்பு. இந்த 27000 வினாடிகள் என்பதும் அது போல தான்… ஆனால் உண்மையிலே இதை விட பல பெரிய பிரம்மாண்டங்களையும் நாம் சாதரணமாக தினம் தோறும் சந்திக்கிறோம்..

      உதாரனத்திருக்கு..

      சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்லும் ஒரு பேருந்து கிட்டத்தட்ட 16 மணி நேரங்கள் பயண நேரம் கொண்டது. இக்கட்டுரப்படி ஒரு ஓட்டுனர் தொடர்ச்சியாக 57600 வினாடிகள் (இடையில் 15 நிமிட உணவு இடைவேளை) வேலை செய்கிறார் என்று பொருள் கொள்ளலாம்.

      இதை கருதும்போது சுசுகி தொழிலார்களின் 27000 ஒன்றும் பெரிய விடயமே இல்லை..

  9. //இப்படி பல அடக்குமுறைகளை எதிர்கொண்டு கற்பனைக்கும் எட்டாத அளவில், மைக்ரோ விநாடி கூட வீணாக்காமல் உழைக்கும் இந்தத் தொழிலாளர்களின் பணியை துல்லியமாக அறிய விரும்பினால், உடனடியாக சார்லி சாப்ளினின் ‘மாடர்ன் டைம்ஸ்’ சினிமாவை பாருங்கள்.///

    பூலோக சொர்கம் என்று உங்களால் இன்றும் வர்ணிக்கப்படும் பழைய சோவியத் ரஸ்ஸியாவின் தொழிற்சாலைகளில் மேற்படி உற்பத்தி முறையா அல்லது வேறு ஏதாவதா ? அன்று targets for industrial productionகள் பற்றி :

    http://www.nationalarchives.gov.uk/education/heroesvillains/background/g4_background.htm

    Each plan laid out targets for industrial production. Targets were set for each factory in the USSR, every shift of workers and even for every individual worker.

    The plans aimed at producing a surplus. Production targets were set very high to give the workers something to aim for. If workers did not achieve their targets, they were punished. Desperate factory managers fiddled the books or committed suicide as the pressure to produce more and more became too great. If the workers succeeded in reaching targets, they might be rewarded with increased wages. But usually their targets were increased as well.

    Each year Stalin’s government produced a report on progress. These reports were made available for foreign governments to see how successful communism was. Stalin was careful not to publicise any failures to the rest of the world. The picture that emerged from the USSR during the 1930s was one of success.

    • //பூலோக சொர்கம் என்று உங்களால் இன்றும் வர்ணிக்கப்படும் பழைய சோவியத் ரஸ்ஸியாவின் தொழிற்சாலைகளில் மேற்படி உற்பத்தி முறையா அல்லது வேறு ஏதாவதா ?//

      உழைப்பாளர்கள் உழைக்க தயாராகவே இருப்பார்கள்,முதலாளித்துவ சமுதாயத்தில் அவர்கள் முதலாளிக்காக உழைக்கிறார்கள், பொதுவுடைமை சமுதாயத்தில் அவர்கள் சமூகம் முழுமைக்கும் உழைக்கிறார்கள், இரண்டுக்கும் வித்தியாசம் உண்டுதானே.

      • விழிவேந்தன் கூற்றுப்படி…
        இந்தியாவில் உழைப்பாளிகள் முதலாளிகளால் சுரண்டப்படுகிண்டறனர்…
        ரஷ்யாவில் உழைப்பாளிகள் சமூகத்தால் சுரண்டப்படுகிண்டறனர்…

  10. அதியமான்,

    மாருதி நிறுவனத்தில் அதன் இணைய தளத்திலேயே கொடுக்கப்பட்டு இருக்கும் தகவல்களின் அடிப்படையில் தான் ஒரு காருக்கு 25 நிமிடங்கள் என்று கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களால் ஆர். எஸ். எஸ் லக்சரர் கொடுக்கப்படும் போலிகளின் தொழிற்சங்கள் பற்றி ஏற்கனவே சொல்லி ஆகி விட்டது. கட்டுரையிலே கொடுக்கப்பட்டுள்ள படி மாடர்ன் டைம்ஸில் சார்லி பணிபுரிவதும் மேம்படுத்தப்பட்ட இயங்குமுறையிலான ஒன்றில்தான்.நெட்டை திருகுவதுதான். அதனை அழகாகச் சொல்லி இருப்பார். அதுபோலத்தான் இயந்திரத்தின் ஒரு அங்கமாக தொழிலாளர்களை

    • ஒரு காருக்கு 25 நிமிடங்கள் என்பதை மறுக்கவில்லையே. ஆனால் ஒரு ஷிஃப்ட்டில் 27000 விநாடிகள் தொடர்ந்து நிறுத்தாமல். ஓய்வே இல்லாமல், ஒரு மோட்டார் எந்திரம் போல் ஒரு தொழிலாளி வேலை செய்வதை போல் அனுமானம் செய்திருக்கிறார் இக்கட்டுரையாளர். சாத்தியமே இல்லை. சூப்பர் மேன்கள் தான் அப்படி எல்லாம் இயங்கமுடியும். அப்படி எல்லாம் வேலையை டிசைன் செய்யும் அளவு மடையர்கள் அல்ல எவரும். மேலும் பல இதர சிறு தொழிற்சாலைகள், கல்குவாரிகள், கைத்தறி நெசவு துறைகளை விட இந்த தொழிற்சாலையில் வேலை பளு குறைவுதான். சம்பளமும் அதிகம். இந்த வேலையாவது உருவானதே பெரிய விசியம். 30 வருடங்களுக்கும் முன்பு இருந்த நிலைகள் பற்றி, வேலைவாய்ப்புகள், சம்பள விகிதங்கள், working conditions பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியாது.

      சோவியத ரஸ்ஸியாவிலும் கார் உற்பத்தில் நிகழ்ந்தது. பெரிய வித்தியாசம் எதுவும் இருந்ததில்லை. (தரம் தான் மட்டமாக இருந்தது !!). மற்றபடி forced labour என்றால் எனவென்று உங்களுக்கு இப்ப புரியவைக்க முடியாது. அனுபவித்தால் தான் புரியும்.

      • Gulag
        The gulag was a system of hundreds of forced labour camps, plus transit camps and prisons, which held criminals. Increasingly gulag prisoners were political prisoners – people who were opposed to Stalin, people accused of failing to meet their work targets and peasants sent there during the collectivisation of agriculture.

        From 1929-32 the numbers of people in the gulag increased greatly, coinciding with collectivisation. It is estimated that there may have been 5-7 million people in these camps at any one time. In later years the camps also held victims of Stalin’s purges, ranging from high officials to intellectuals to ordinary people, as well as World War 2 prisoners.

        Gulag prisoners were a useful supply of workers for large projects in remote and inhospitable places in the USSR. For example, the Belomor Canal, which connects the White Sea with the Baltic, was almost entirely constructed by hand, using 250,000 prisoners. Prisoners also worked in mines or cut timber.

        They were not paid. They were underfed, housed in poor conditions and worked long hours in a difficult climate. They could be executed if they refused to work. It is possible that around 10% of prisoners in the gulag died each year, although we cannot tell from official figures.

  11. மாற்றும் தந்திரம் தான் உங்கள் டோயோட்டா முறை எல்லாம். மேலும், மார்க்ஸ் சொன்னது போல, தொழிலாளர்களிற்கு மீது ஒரு சார்பினை – தொழில்நுட்ப சார்பினை தவிக்குமாறுதான், ஆட்டோமேட் டெக்னாஜலியை செயல்படுத்துகிறார்கள். நோகியாவில் கை துண்டிக்கப்பட்ட தொழிலாளர்கள் இதற்கு உதாரணம். எது பேசினாலும், விவரங்களுடன் பேசவும். நோக்கியா, Hஒன்ட முதலானவற்றில் எது உங்களின் கண்டுபிடிப்பினையும், அதில் எது வினவின் விவர்ங்களோடு ஒத்துப் போகவில்லை என்பதையும் தரவும்.
    கண்முன்னால் நடக்கும் விவரங்கள் இருக்கும் போது, பலமுறை புளுகுகள் என்று நிருபிக்ப்பட்ட ஆர் எஸ் எஸ் அதியமானின் சோவியத் ஸ்டாலின் அவதூறூகமை நாங்கள் ஒரு பொருட்டாக கருஅதவில்லை

    • நோக்கிய நிறுவனத்தில் நிகழ்ந்து விபத்து ஒரு விதிவிலக்கு தான். பொறுப்பின்மை மற்றும் வேறு காரணிகள். என்னவோ தினமும், விபத்து நிகழ்ந்தது போல் பேசுகிறீர்கள்.

      நான் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளன் அல்ல. எதிர்ப்பாளன் தான். சரியாக இன்னும் எனது பதிவுகளை படிக்கவில்லை. சோவியத ரஸ்ஸியா பற்றி, ஸ்டாலின் பற்றி ‘அவதூறுகள்’ என்று நீங்க சொன்னா, அது அவதூறு ஆகிவிடாது. ஆ.மார்க்ஸ் எழுதிய ‘மார்க்சியத்தின் பெயரால்’ என்ற பழைய நூலை பார்க்கவும். உடனே அவர் ஒரு பொய்யர் அல்லது போலி என்பீர்கள். சொல்லிகிட்டு திரியுங்க. இப்ப யாருக்கென்ன.

  12. மனிதன், சமூகத்திற்காக தொழிலாள்ர்கள் மனமுவந்து – அதாவது தங்களுக்காக தாங்கள் உழைப்பதனை ஒரு சுரண்டலாக கருதும் உங்களின் வர்க்க பாசம் புல்லரிக்க வைக்கின்றது. அதாவது, முதலாளிகளுக்கான நாய் வேலை செய்து அடிமைவாழ்வு வாழ்ந்தால், நல்லவர்கள். புரட்சி நடந்து, மூலதனம் முற்றிலும் ஒழியாத நிலையில் தொழிலாளர்கள் தங்களின் அரசுக்காக – தங்களின் சமுகத்திற்காக – தங்களுக்காக உழைப்பதனை – ஒரு முதலாளி விபச்சார வாழ்வு வாழ்வதற்காக உழைப்பதனை எப்படி ஒப்பிடிகின்றீர் ‘மனிதன்’ ?

    • நீங்கள் சொல்ல வருவது சரியானது… விழிவேந்தன் சொல்ல வருவது தவறானது… அதற்குத்தான் அந்த கவுன்ட்டர்… வேறொன்னுமில்லை…

  13. கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்தை மட்டும் வினவு கண்டு கொள்ளாமல் இருபது ஏன்? ரசிய ஆதரவா?

    • கூடங்குளத்தில் ரஷிய மேலாதிக்க வல்லரசுவின் பங்கை கண்டனம் தெரிவித்து ம.க.இ.க உள்ளிட்ட அமைப்புக்கள் ஒட்டிய சுவரொட்டிகளை பார்க்கவில்லையோ…

  14. ரசிய ஆதரவு இல்லையப்பா தமிலு, அய்யாவுக்கு நன்றி, தீர்மானம் இயற்றிய அம்மாவுக்கு நன்றி – எல்லா பிரச்சனையும் முடிஞ்சு போச்சு என்றிருக்காது வினவு கட்டுரை – விபரங்களை சேகரிச்சு சும்மா நச்சுனு இருக்கும் பொருந்திருந்து பாரு

Leave a Reply to K.R.அதியமான் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க