privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விகல்வி முதலாளிகளின் கொள்ளை! தோழர் சி.ராஜூ

கல்வி முதலாளிகளின் கொள்ளை! தோழர் சி.ராஜூ

-

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டு உரை-3

கடந்த ஜூலை 17ம் தேதி சென்னை மதுரவாயலில் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியால் நடத்தப்பட்ட கல்வி தனியார் மய ஒழிப்புமாநாட்டில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சி ராஜூ அவர்கள் தனியார் மயக் கல்வியை ஒழித்துக் கட்டுவோம்என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் முக்கிய குறிப்புகள்.

______________________________________

போராடினால்தான் உரிமைகள் நமக்கு கிடைக்கும், மனு போட்டால் கிடைக்காது’ என்று உணர்த்தியது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களின் போராட்டம். ஆனால் போராடினால் என்ன நடக்கும் என்பதை உணர்த்தினர் காவல் துறையும் அதிகார வர்க்கமும்.

அப்படி என்ன கேட்டு விட்டோம்? ‘காசு வாங்காம ஆனா ஆவன்னா, ஏபிசிடி சொல்லித் தரக் கேட்டோம்’ அவ்வளவுதான்.  பெரிய பெரிய அரசியல் சட்ட அறிஞர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் இருக்கும் நாட்டில்தான் உரிமைகளை கேட்டாலே அடி உதை, சிறை என்று நடக்கிறது. தமது உரிமைகளை அடைந்தே தீருவது என்று யாராவது போராடினால், அவர்களுக்கு அடி, உதை, சிறைவாசம்.

தனியார் மயத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், சிறு வணிகர்கள் அனைவருக்கும் எப்படி போராட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக புமாஇமுவின் போராட்டம் திகழ்கிறது. போராடும் மக்கள் எல்லாம் ‘புமாஇமு போல போராட வேண்டும்’ என்று சொல்லப் போகிறார்கள். இந்த ஆண்டு 200 பேர் போய் டிபிஐயை முற்றுகை இட்டீர்கள். அடுத்தபடியாக 2000 பேர் சட்டசபையை முற்றுகை இட்டால் என்ன செய்வார்கள்? அப்படி ஒரு வீரமிக்க போராட்டம் நடக்கும் போது உங்களுக்கு துணையாக மறுகாலனியாதிக்கத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் தங்கள் ஆடு மாடு ஓட்டிக் கொண்டு வருவார்கள்.

இப்போது, தனியார் கல்வி முதலாளிகளின் நலனுக்காக பல துறைகளும் வளைந்து கொடுக்கின்றன.

பொறியியல் கல்லூரிகளில் ஆட்சேர்ப்பை அதிகரிக்க இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வில் தாரளமாக மதிப்பெண் போடச் சொல்லியிருந்தார்களாம். ஏ சி சண்முகம், உடையார், ஜேபிஆர், போன்ற கொள்ளையர்கள் கல்வித் துறையில் தனிக்காட்டு ராஜாக்களாக செயல்படுகிறார்கள். நன்கொடை 5 லட்ச ரூபாய் என்று சொன்னதும், போய் சொத்துக்களை வித்து, நகையை அடமானம் வைத்து பணத்தை கொண்டு கொடுத்தால், பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சியாக ஒரு துண்டுச் சீட்டை கொடுக்கிறார்கள்.

அப்படி தனியார் முதலாளிக்கு கொண்டு கொடுக்க ப சிதம்பரம் வங்கிகளில் கல்விக் கடன் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார். அது கடன் இல்லை, தனியார் கல்வி முதலாளிக்கு கொடுக்கும் மானியம். ஆனால், படித்து முடித்த பிறகு கடன் கட்டவில்லை என்றால் வாங்கிய மாணவனைத்தான் பிடிப்பான்.

எல்லோர்க்கும் ஒரே பாடத் திட்டம் என்றால் ஏன் இன்னமும் மெட்ரிக் என்று பெயர் வைத்திருப்பதை ஏன் தடை செய்யவில்லை? அப்படி சிறப்பான பெயர் வைத்திருந்தால்தான் மக்களிடம் சிறப்புக் கட்டணம் என்ற பெயரில் பணம் பிடுங்க முடியும். சட்டம் இயற்றுபவர்கள் மக்கள் பிரதிநிதிகள், மக்களைப் பற்றிதான் சிந்திக்க வேண்டும். ஆனால் அவர்கள் தனியார் பள்ளிகளுக்கு நட்டம் வந்து விடுமே என்று யோசிக்கிறார்கள்.

1950 அரசியல் அமைப்புச் சட்டம் 14 வயது வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்க முயற்சிக்க வேண்டும் என்று சொல்கிறது. அதாவது 8வது வரை கல்வி. அதற்குப் பிறகு, +2 வரை, கல்லூரி படிப்புக்கு உத்தரவாதம் வழங்கவில்லை. 2002-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தத்தில் 6 வயதுக்கு மேல் 14 வயதுக்குள் கல்வி உத்தரவாதம் என்கிறார்கள். 6 வயதுக்கு முந்தைய கல்விக்கு யார் பொறுப்பு?

இருக்கிற சட்டங்களையும் தனியார் கல்வி முதலாளிகள் மதிப்பதில்லை. ‘தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு என்று சொன்னீங்களே, வாங்கித் தா’ என்று காங்கிரஸ்காரர்களை என்று உலுப்ப வேண்டும். ‘உங்க அம்மா ஆட்சியிலதானே சிங்கார வேலர் கமிட்டி அறிக்கை வந்தது, அதை நடைமுறைப் படுத்து’ என்று அதிமுக காரர்களை இழுக்க வேண்டும்.

எல்கேஜி வகுப்புக்கு 25,000 கட்டணம் என்கிறார்கள். அதில் நீச்சல், குதிரையேற்றம் கற்றுக் கொடுப்பேன் என்கிறார்கள். ‘கட்டணத்தை ஒரே தவணையில் கட்டினால் ஒரு கிராம் தங்க நாணயம் இலவசம், ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் இலவசம்’ என்கிறார்கள். ‘கல்வியோடு செல்வமும் தருகிறோம்’ என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.  வீட்டுமனை போல பள்ளிக்கு விளம்பரம் செய்கிறார்கள். பள்ளிக் கூடம் ஆரம்பிக்கும் போது நான்கு தூண்கள்தான் இருக்கின்றன, வேறு எந்த வசதியும் இல்லை. மாணவர்களிடம் வசூல் பண்ணித்தான் கட்டிடம் கட்டப் போகிறார்கள்.

பெற்றோர்களும் தனியார் கல்வி என்ற மாயையில் சிக்கியிருக்கிறார்கள். கடனை உடனை வாங்கி நர்சரி பள்ளியில் பையனை சேர்த்ததும், அவனை செட்டில் செய்து விட்டதாக பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அவன் வளர்ந்து பெரிய படிப்பு படித்து நிறைய சம்பாதிப்பதற்கான அடிப்படையாக அதை கருதுகிறார்கள்.

ஒரு தனியார் பள்ளியில் வகுப்பும் தங்கும் இடமும் ஒன்றாக இருந்தது. ஏமாளி பெற்றோர்களிடமிருந்து இல்லாத ஹாஸ்டலுக்கு பணமும் வாங்கிக் கொண்டார்கள் . பகலில் தங்குமிடத்தில் வகுப்பு நடக்கும், மாலையில் வகுப்பறை தங்குமிடமாகி விடும். அழுத்தம் தாங்காமல் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டான். பெற்றோர்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தினோம்.

தலைமை கல்வி அதிகாரி ‘தங்கும் விடுதி தொடர்பாக உத்தரவு போட தனக்கு அதிகாரம் இல்லை’ என்றார். பள்ளியைப் பற்றி உத்தரவு போடத்தான் அதிகாரம், தங்குமிடத்தைப் பற்றி எதுவும் செய்ய முடியாது. யாரிடம் கேட்க வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியவில்லை. கடைசியில் போராடும் பெற்றோர்களை சமாதானப்படுத்த ‘5.30க்கு மேல் மாணவர்கள் யாரும் பள்ளியில் யாரும் தங்கக் கூடாது’ என்று சொல்ல தமக்கு அதிகாரம் இருப்பதாக அப்படி உத்தரவு போட்டார். இப்போது மாணவர்களை  ஒரு கல்யாண மண்டபத்தில் தங்க வைத்திருக்கிறார்கள்.

சிதம்பரம் காமராசர் மெட்ரிக் பள்ளி தாளாளர் தான் சொல்வதுதான் சட்டம் என்கிறார். கூடுதல் கட்டணம் கட்டாத மாணவர்களை அரியர் மாணவர்கள் என்று தனியாக உட்கார வைத்தார்கள். அதை எதிர்த்து ஐஎம்எஸ், டிஎம்எஸ், டிஈஓ, சிஈஓ என்று எல்லாருக்கும் மனு போட்டோம். கடைசியில் கேட்டை மூடி உள்ளிருப்பு போராட்டம் ஆரம்பித்தோம்.

நாங்கள் வெளியில் உட்கார்ந்திருக்க மாவட்ட காவல் அதிகாரி ஒரு ஐபிஎஸ் அதிகாரி அந்த பள்ளிக் கூட தாளாளருடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். நள்ளிரவு வரை பேசுகிறார். ‘சட்டத்தை மீறிய தாளாளரை கைது செய்ய வேண்டியதுதானே’ என்று கேட்டால், ‘அடுத்த நாள் பிரித்து உட்கார வைப்பதில்லை என்று உறுதி சொல்லியிருக்கிறார். அதை செய்யா விட்டால் கைது செய்வோம்’ என்றார். அதன் பிறகுதான் பள்ளி நிர்வாகம் பணிந்தது.

தனியார் பள்ளிக்கு அதிகாரிகள் உத்தரவு போட முடியவில்லை, பள்ளிக் கல்வி இயக்குனராலேயே முடியவில்லை. பெற்றோர் சங்கத்தை இன்னும் வலுவாக்கி போராடச் சொல்கிறார்கள். ‘போய் கலெக்டரை பாருங்க அவருக்குத்தான் எல்லா அதிகாரமும்’ என்றார்கள். கலெக்டரை பார்க்கப் போனால் மாலை வரை காத்திருக்க வைத்து பேசினார். ‘பள்ளிக் கூடத்து ஆள் ஒருத்தன் இருந்தான் அவன் போன பிறகு பேசலாம் என்றுதான் மாலை வரை காத்திருக்க வைத்தேன்’ என்கிறார். அவனைக் கண்டு இவருக்கு அவ்வளவு பயம். ‘நீங்க போங்க நான் ஏதாவது ஒரு வழி செய்கிறேன்’ என்றார். அப்புறம் தொலைபேசி கேட்டால், நீங்க அதிகாரிகளை harass செய்றீங்க என்கிறான்.

ஒவ்வொரு தடவையும் போராட்டம் நடத்துறீங்க என்று அலுத்துக் கொள்கிறார்கள். எல்லா ஊரிலும் இது சாத்தியமா? டவுட்டனில் கூடுதல் கட்டணம் கொடுக்க மறுத்தவங்களுக்கு டிசி கொடுத்தான். அப்படி கொடுக்கக் கூடாது என்று சட்டம் இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

பள்ளி இறுதித் தேர்வுகளில் டாப் 10ல், 50ல், இடம் பிடிக்க 100-150 பேருக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துகிறார்கள். மீதி 900 பேர் பாஸானால் போதும். அகர வரிசையை புறக்கணித்து அந்த 150 பேரையும் ஒரே ஹாலில் உட்கார வைக்கிறார்கள். திருவண்ணாமலை செயின்ட் பால் பள்ளியில் பிட்டு கொடுத்து மாட்டியது போல பல பள்ளிகளில் நடக்கிறது.

ரிசல்ட் வந்த அன்று விளம்பரம், பெப்சி கோக் போல படம் போட்டு பிராண்ட் அம்பாசடர்களாக மாணவர்களை பயன்படுத்துகிறார்கள். உழைக்கும் மக்கள் குழந்தைகள் அதிக மதிப்பெண் வாங்கியதை எழுதி மேல் படிப்புக்கு நிதி உதவி செய்யும் படி பத்திரிகைகளில் கேட்கிறார்கள்.

விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் நாமக்கல் பள்ளிகள் பற்றிய விவாதம். அதில் ஒரு மாணவன் ‘நாங்கள் எந்திரங்களாக மாறி விட்டோம், ஒருவரை ஒருவர் பார்த்து சிரிப்பதில்லை, அருகில் இருக்கும் இருபாலர் பள்ளி மாணவிகளைப் பார்த்து பேசக் கூட நினைத்ததில்லை’ என்கிறான் அதற்கு ஒரு எதிர் தரப்பிலிருந்து ஒருவர் ‘தம்பி நீ இரண்டு ஆண்டு கஷ்டப்பட்டுட்டா சீட் வாங்க தனியார் பொறியியல் கல்லூரிக்கு 20 லட்சம் கொடுக்க தேவையில்லாமல் அரசு கோட்டாவில் கிடைத்து விடும்’ என்கிறார்.  20 லட்சம் மிச்சப்படுத்த இங்கே 2 லட்சம் கொடுத்து விடுகிறார்கள். நடுவில் ஒரு மனிதப் பிறவி இருக்கிறது என்பதை யோசிப்பதே இல்லை.

என்ன நோக்கம், அதிக மார்க் எடுக்க வேண்டும் என்பதுதான். +2 படிப்பவன் காலை முதல் மாலை வரை எழுதி எழுதி படிக்க வேண்டும் என்கிறார்கள். வாத்தியாரும் மனப்பாடம் செய்து பாடம் நடத்துகிறாராம். ஒரு ஆசிரியர் கணக்கு வகுப்பில் கணக்கை கடைசி வரை எழுதிப் போட்டு விட்டார், விடையும் வந்து விட்டது, ஆனால் நடுவில் இரண்டு ஸ்டெப் காணவில்லை.

பன்னாட்டு கம்பெனிகளுக்கு கூலி வேலை செய்வதற்காக தயாரித்து விடுவதுதான் இன்றைய கல்வியாக இருக்கிறது. கல்வியை வியாபாரப் பொருளாக மாற்றுவதை தடுக்க வேண்டும். ஒரு மனிதனின் ஆளுமையை செதுக்குவது கல்வி.

தனியார் கல்வியால் அந்த நோக்கம் நிறைவேறப் போவதில்லை. சமச்சீர் கல்வி பாடத் திட்டம் போட்டால் அதை எதிர்த்து உச்சநீதி மன்றம் வரை போகிறார்கள் தனியார் பள்ளி முதலாளிகள். கடைசியில் நீதிமன்றம் தீர்மானித்தது ‘தனியார் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த அரசுக்கு அதிகாரம் உண்டா இல்லையா’ என்பதை மட்டும்தான். யார் பெரியவன் என்பதைப் பற்றிதான். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைப் பற்றி நீதிமன்றம் எதுவும் பேசவில்லை.

காமராசர் காலத்தில் கல்விக்கு 30% ஒதுக்கீடு செய்யப்பட்டது, அது இப்போது 14% ஆக குறைந்திருக்கிறது. மக்களைப் பற்றி கவலைப் படாத அரசையும், அரசியல் தலைவர்களையும் என்ன செய்வது? ஒரே உத்தரவில் தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி கொடுக்கச் ஏற்பாடு செய்கிறார்கள், கல்வி உரிமைக்கு 1950 முதல் இன்று வரை எதுவும் செய்யவில்லை. அப்படி செய்யாமல் தள்ளிப் போடுவது கிரிமினல் குற்றம்.

தனியார் மயத்தை அனைத்து துறைகளிலும் ஒழிக்க கல்வி தனியார் மய ஒழிப்பு முன்னோடியாக இருக்க வேண்டும்.

________________________________________________________

– வினவு செய்தியாளர்.

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

_____________________________

_____________________________

_____________________________