கடந்த வாரம் மானியங்களை குறைப்பதற்கான கேல்கர் கமிட்டியின் பரிந்துரைகளை பிரதமர் நிராகரித்து விட்டதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. ஆனால் எண்ணி ஏழு நாட்களில் மத்திய மன்மோகன் சிங் அரசு முதல் ஆப்பை விவசாயிகளின் குதத்தில் செருகி தான் யார் பக்கம் என்பதை நிரூபித்து விட்டது. சென்ற வாரம் நடந்த மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு யூரியாவை மூட்டைக்கு (50 கிகி) ரூ. 2.50 உயர்த்தியுள்ளது. அதை விட முக்கியம் இப்போது மானியத்தை விவசாயிகள் வாங்கிய உரத்தின் பில்லை அதிகாரிகளிடம் காட்டி, அவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு மாற்றியுள்ளார்கள்.
முன்னர் ரேசன் கடைகளில் இயங்கிய விவசாயக் கூட்டுறவு வங்கிகள் மூலமாக உரங்கள் நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஆற்றுப் பாசனம் துவங்கி கண்மாய் பாசனம் வரையிலான அனைத்துப் பகுதி சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஓரளவு பாதுகாப்பாய் இருந்து வந்த இந்த முறையில் உரத்தை கடனாகப் பெற்று விளைச்சல் வந்த பிறகு பணத்தைக் கட்டுவது என்பது நடைமுறையாக இருந்து வந்தது. இந்த கூட்டுறவு சங்க தேர்தல்களில் ஆளும்கட்சியின் ஆதிக்கம் இருந்தாலும் மக்களை நேரடியாக பாதிக்கும் என்பதால் பெயரளவாவது விவசாயிகளுக்கு பாதிப்புகள் குறைவாக இருந்தன•
எண்பதுகளின் இறுதிப் பகுதிகளில் துவங்கிய இரண்டாம் பசுமைப் புரட்சி காலம் துவங்கி இந்தியாவின் சிற்றூர்களில் மட்டுமின்றி குக்கிராமங்களிலும் உரம், பூச்சி மருந்துக் கடைகள் துவங்கப்பட்டன• இவை பணக்கார மற்றும் பெரிய விவசாயிகளுக்கு மட்டுமே உதவியாக இருந்தது. ஸ்பிக் முத்தையா செட்டியார் துவங்கி பாரி கம்பெனிகள் வரை அனைவரும் நன்றாக லாபம் சம்பாதித்தார்கள்.
யூரியா இறக்குமதி தான் ஆகிறது. டை அமோனியன் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் போன்ற அடி உரங்கள்தான் விதைப்பு காலத்தில் விவசாயிக்கு அவசியம். இந்த ஆண்டு விவசாயமே நாட்டில் பல பகுதிகளில் நடைபெறாமல் இருப்பதால் துணிந்து மேலுரமான யூரியாவை விலை உயர்த்தி மானிய முறையை மாற்றி அமைத்திருக்கிறார் மன்மோகன். இயற்கை உரங்களைச் சார்ந்து இருப்பதிலிருந்து நம்மை வலுக்கட்டாயமாக மாற்றிய பசுமைப் புரட்சி நிலத்தை களர் நிலமாக மாற்றிய சூழலில் இப்போது செயற்கை உரங்களுக்கும் விலை உயர்வை அறிவித்து உள்ளார்கள்.
இந்த ஆண்டு முதல் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளும் உரக் கடைகளில் தான் உரம் மற்றும் பூச்சி மருந்துகளை வாங்கியாக வேண்டும். அதற்கு கடைக்காரர் பில் போட்டுத் தர வேண்டும். அதாவது அரசு அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளும் படியான பில்லை விவசாயி கோரிப் பெற வேண்டும். அதில் எங்காவது பில் தடைப்படுமானால் மானியமாகக் கிடைக்கும் தொகையில் நயா பைசா கூட தேறாது. எல்லாம் சரியாக இருந்தாலும் கிராம நிர்வாக அதிகாரி அப்புறம் என தலையைச் சொறிந்தபடியே காசுக்கு அடிப் போடுவார். கூட்டுறவு சங்கத்தில் ஆளும்கட்சி ரவுடிகளின் தொல்லை போய் அதிகாரிகளின் வழிப்பறி வந்தது தான் விவசாயிக்கு புதிய பொருளாதாரக் கொள்கையால் கிடைத்த மிச்சம். வாங்கிய தொகையை சொல்லிக் காட்டியே அதிகாரிகள் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். கடைசியில் மானியத்தை வாங்குவதா மானத்தோடு வாழ்வதா என்ற கேள்விக்கு எளிய விவசாயிகள் இரண்டாவதையே தேர்ந்தெடுப்பர். மானியத்தை ஒழிப்பதற்கு எப்படி ஒரு எளிய வழி அரசுக்கு கிடைத்திருக்கிறது பாருங்கள்!
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டது. வடகிழக்காவது நவம்பர், டிசம்பரில் காலை வாராமல் இருக்குமா எனத் தெரியாத அளவுக்கு புவி வெப்பமாதல் அதிகரித்துள்ளது. நீரோடிய ஆற்றிலெல்லாம் மணல் அள்ளும் ரியல் எஸ்டேட் கும்பல் காத்துக் கொண்டிருக்கிறது. மக்கள் அருகாமையிலோ அல்லது வேறு மாநிலத்திலோ நகரங்களில் அன்றாடங்காய்சசிகளாக கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள். உர விலையை உயர்த்தியதோடல்லாமல் மானியத்திற்காக அதிகாரிகளிடம் பிச்சை கேட்க வைத்திருக்கிறது அரசு. இந்திய விவசாயிகள் முன் இரண்டு வழி இருக்கிறது. அதே உரக்கடையில் உடனடியாக உயிர் காவு கேட்கும் சிம்புஸ், டெமக்ரான் மருந்து வாங்கிக் குடித்து மாள்வது அல்லது இழந்து போகும் உரிமைக்காக போராடுவது!
________________________