privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்முதலாளிகளால் உருவாக்கப்பட்ட மராட்டிய தண்ணீர் பஞ்சம்!

முதலாளிகளால் உருவாக்கப்பட்ட மராட்டிய தண்ணீர் பஞ்சம்!

-

solapur-protest-2காராஷ்டிராவின் பூனே, சோலாப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள்  உஜானி அணையிலிருந்து குடிநீர் வழங்கும்படி கோரி போராடி வருகின்றனர். பிரபாகர் தேஷ்முக் என்னும் விவசாயி பிற விவசாயிகளுடன் இணைந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் அஜீத் பவார் குடிதண்ணீர் வழங்கக்கோரி விவசாயிகள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை பற்றி குறிப்பிடுகையில், ‘அணையில் தண்ணீர் இல்லையென்றால் எப்படி தண்ணீர் திறந்து விட முடியும்? அணையில் சிறுநீர் கழித்தா தண்ணீர் திறந்து விட முடியும்? குடிக்கக்கூட தண்ணீர் இல்லாத போது, சிறுநீர் கூட வராதே’ என்று ஏளனமாக பேசியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சோலாப்பூர் மாவட்டம்  தண்ணீர் இல்லாத வறண்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் குடிக்க தண்ணீர் இல்லாமல்  பல ஆடு மாடுகள் இறந்து விட்டன. வறட்சியால் 5 மனித உயிர்களும் பலியாகியுள்ளன. இவ்வருட துவக்கத்தில், உஜானி அணையிலிருந்து ஜனவரி மாதம் முதல் தண்ணீர் வழங்குவதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்தும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

பொறுப்பதில் அர்த்தமில்லை என்று உணர்ந்த, சோலாப்பூரின் கிராமங்களை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட விவசாயிகளும் அவர்களது குடும்பத்தினரும், பிப்ரவரி மாதம் மகாராஷ்டிர மாநிலத்தின் தலைமைச் செயலகம் இயங்கும் மந்த்ராலயாவை முற்றுகையிட்டனர். ஆசாத் மைதானத்தில் அவர்கள் 23 நாட்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அதிகார வர்க்கம் கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்தது. போராடும் மக்களை போலீஸ் அதிகாரிகள் அச்சுறுத்தி துன்புறுத்தினார்கள். விவசாயிகள் விரக்தியுடன் திரும்பினார்கள்.

உஜானி அணை
உஜானி அணை

கடந்த 10 ஆண்டுகளில் மகாராஷ்டிராவின் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தும் விதத்தில் ரூ 70,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட பொருளாதாரக் கணிப்பில், இத்திட்டங்களினால் நீர்ப்பாசன ஆற்றல் 0.1% அளவுதான் உயர்ந்துள்ளதென்று தெரிய வந்தது.

நீர்ப்பாசன ஊழல்களில் முக்கிய பங்கு வகித்தவர் அஜீத் பவார். 13 வருடகாலமாக நீர்ப்பாசனத்துறையை தங்கள் கைவசம் வைத்துள்ள பெருமையுடைய தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். கட்சித் தலைவரும் மத்திய விவசாயத் துறை அமைச்சருமான சரத்பவாரின் உறவினர். 10 வருட காலமாக அத்துறை அஜீத் பவாரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. 2009-இல் இருந்து அஜீத் பவாரின் நெருங்கிய உறவினர் சுனில் தட்காரே பொறுப்பில் உள்ளார்.

செப்டம்பர் 2012இல் நீர்ப்பாசனத் திட்டங்கள் ஊழலில் அஜீத் பவார் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியானதும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் அந்த மானஸ்தன். பத்திரிகைகள் அந்த விவகாரத்தை மறக்கத் தொடங்கியதும், தன் குடும்ப அரசியல் செல்வாக்கில் மீண்டும் அதே பதவியில் பவனி வர ஆரம்பித்து விட்டார்.

ஆனால் இன்று போராடும் விவசாயிகளின் நிலைமை நீர்ப்பாசனத் திட்டங்களில் நடந்த ஊழல்களை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இந்த கடுப்பில்தான் மக்களின் கஷ்டங்களை இழிவுபடுத்தும் விதம் பேசியிருக்கிறார்.

மேலும், பூனே மாவட்டத்தில் உள்ள இந்திராப்பூர் தேஹ்சில் கிராமப்புறத்தில் நடந்த மற்றொரு பொதுக்கூட்டத்தில், அதிகநேர மின்வெட்டு குறித்து பேசிய அஜீத் பவார், ‘மின்வெட்டு அதிகரித்து இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால் குழந்தை பிறப்பு அதிகரித்து உள்ளது’ என்று மக்கள் பிரச்சனையை அவமானப்படுத்தி பேசியுள்ளார்.

‘இது போன்ற கருத்துக்களை பொது இடத்தில் பேசக் கூடாது என்ற இங்கிதம் தெரியாதவராக அஜீத் பவார் இருக்கிறாரே’ என்று நொந்து கொண்டே அவரது சித்தப்பா சரத் பவார், ‘வக்கிரம் பிடித்த வார்த்தைகளை தெரியாமல் பேசியிருப்பார்’ என்று தனது அண்ணன் மகனுக்கு வக்காலத்து வாங்கியுள்ளார்

தான் பேசியது ஊடகங்களில் அடிபட்டு தேர்தலில் எதிர்க்கட்சிகளால் பாதகமாக பயன்ப்படுத்தப்படலாம் என்று கருதிய அஜீத் பவார் “யார் மனதையும் புண்ப்படுத்தும் நோக்கில் பேசவில்லை” என்று இப்போது மன்னிப்பு கேட்டு மழுப்புகிறார், உண்ணாவிரதம் இருந்து பரிகாரம் செய்வதாக நாடகம் ஆடுகிறார்.

ஆனால், இது போன்ற கருத்துக்கள் அஜீத் பவார் போன்ற அரசியல் தரகர்களின் உண்மையான மனநிலையை காட்டுகின்றன என்பதுதான் நிதர்சனம்.

அரசியல்வாதிகள்
சுசில் குமார் ஷிண்டே, சரத் பவார், ஆர் ஆர் பட்டீல்  (படம் உதவி : இந்தியன் எக்ஸ்பிரஸ்)

 

றண்ட பூமியாக மாற்றப்பட்ட சோலாப்பூர் பல அரசியல் முக்கிய புள்ளிகளின் வாசஸ்தலமாகும். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, மாநில உள்துறை அமைச்சர் ஆர் ஆர் பட்டீல் ஆகிய பெருந்தலைகளின் சொந்த ஊர் சோலாப்பூர்.

பூனே அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளிலிருந்து உருவாகும் பீமா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உஜானி அணை, சோலாப்பூர் மற்றும் பூனே மாவட்டங்களுக்கு தண்ணீர் வழங்கும் முக்கியமான அணையாகும்.

336.50 சதுர கிலோ மீட்டர் நீர்த்தேக்க பகுதியும், 14,850 சதுர கிலோ மீட்டர் நீர்ப்பிடிப்பு பரப்பும் கொண்ட உஜானி அணையின் கொள்ளளவு 144 கோடி கன மீட்டர் (1.44 லட்சம் கோடி லிட்டர்).

சோலாப்பூர் மற்றும் அவுரங்கபாத் மாவட்டங்களில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்திற்கு முக்கிய காரணம் அரசியல் பெருந்தலைகளால் தமது வணிக லாபத்துக்காக அரங்கேற்றப்படும் தண்ணீர் கொள்ளையே ஆகும். மக்களுக்கு வாரத்துக்கு அல்லது மாதத்திற்கு ஒரு முறை லாரிகளில் குடிநீர் விநியோகிக்கப்படும் இப்பகுதிகளில், அரசியல்வாதிகளாலும், அரசியல் செல்வாக்கு பெற்றவர்களாலும் நடத்தப்படும் தொழிலகங்களுக்கு கணக்கின்றி, தடையின்றி தண்ணீர் வழங்கப்படுகின்றது.

மக்களுக்கு திறந்து விடப்படாத உஜானி அணையிலிருந்து சரத் பவாரின் நெருங்கிய உறவினர் நடத்தும் டைனமிக்ஸ் டெய்ரி என்ற பால் பண்ணைக்கு தங்கு தடையின்றி தண்ணீர் வழங்கப்படுகிறது.

இப்பகுதியில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுவதற்கு முக்கிய காரணம், இயற்கைக்கு முரணாக தண்ணீர் தீவிரமாக தேவைப்படும் கரும்பு விவசாயத்தை இப்பகுதியில் செய்வதால்தான் என்று கூறுகின்றனர் இப்பகுதி விவசாயிகள்.

1 ஏக்கர் கரும்பு சாகுபடிக்கு ஒரு பயிர் சுழற்சி காலத்தில் 1.8 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. மேலும் சர்க்கரை உற்பத்தியில் ஈடுபடும் ஆலைகளில் 1,000 மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தி செய்ய 357.37 கன மீட்டர் (3.57 லட்சம் லிட்டர்) தண்ணீர் தேவைப்படுகிறது.

‘இப்பகுதியின் இயற்கைக்கு ஏற்ப வளரக் கூடிய சோளம் மற்றும் நிலக்கடலை விவசாயத்தை விட்டு கரும்பு சாகுபடி, மற்றும் சர்க்கரை உற்பத்தி இங்கு முக்கியத்துவப்படுத்துவதற்கு காரணம், பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்தப்படுவதுதான்’ என்கிறார் நீர் உரிமை ஆர்வலரான ஹிமான்ஷு தாகேர்.

மகாராஷ்டிராவில் உள்ள 160 சர்க்கரை ஆலைகளில் 16 பூனேவிலும் 18 சோலாப்பூரிலும் உள்ளன. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் சர்க்கரை ஆலைகளுக்கு உஜானி அணையிலிருந்து தண்ணீர் தரப்படுவதாக குறிப்பிடுகின்றனர் சோலாப்பூர் கிராமவாசிகள். பாபன் ராவ் ஷிண்டே என்ற தேசிய காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. அவருக்கு சொந்தமான  விட்டல் ராவ் சர்க்கரை ஆலைக்கு தேவையான நீர் உஜானி அணையில் இருந்துதான் எடுக்கப்படுகிறது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

சோலாப்பூரில் தண்ணீர் இல்லாநிலைக்கு சர்க்கரை ஆலைகள் காரணம் என்றால் 311 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவுரங்கபாத்தினை டிஸ்ட்டில்லரீஸ் வடிசாலை தொழிலகங்கள் தண்ணீரை உறிஞ்சி சூறையாடுகின்றன.

அவுரங்கபாதுக்கு நீர் தரும் முக்கிய அணை ஜெயக்வாடி ஆகும். 350 சதுர கி.மீ நீர்த்தேக்க பகுதியும், 290.9 கோடி கன மீட்டர் (2.9 லட்சம் கோடி லிட்டர்) கொள்ளளவும் கொண்ட இந்த அணை 1.83 லட்சம் ஹெக்டர் நீர்ப் பிடிப்பு பகுதியை கொண்டது.

மில்லினியம் பீர் இந்திய லிமிடெட் என்ற தனியார் நிறுவனதிற்கு மட்டும் தினமும் 2,014 கோடி லிட்டர் தண்ணீர் இந்த அணையிலிருந்து எடுக்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளதால் வழங்கும் தண்ணீர் அளவு இரு மடங்காக்கப்பட்டுள்ளதாம்.

அங்கு இயங்கும் நிறுவனங்களில் பெயரும் அவற்றுக்கு தினசரி வழங்கப்படும் நீரின் அளவின் விவரங்களும்:

நிறுவனம்

ஜனவரி 2012

நவம்பர் 2012

பாஸ்டர்ஸ் இந்தியா லிமிடெட்

888.7 கோடி லிட்டர்

1,000.7 கோடி லிட்டர்

அவுரங்காபாத் புரூவரீஸ்

1400.3 கோடி லிட்டர்

1,462.1 கோடி லிட்டர்

இந்தோ ஐரோப்பியன் பெவரேஜஸ்

252.1 கோடி லிட்டர்

470.1 கோடி லிட்டர்

பஞ்சம் என்று இயற்கையின் மேல் பழி சொல்லி மக்களுக்கு குடிநீரை மறுக்கும் அரசு, முதலாளிகளுக்கு வழங்கும் நீரின் அளவை அதிகரித்திருக்கும் களவாணித்தனத்தை இவ்விவரங்கள் தெளிவு செய்கின்றன.

உருவாக்கப்பட்ட வறட்சி இயற்கை பேரிடரால் தோற்றுவிக்கப்பட்டது அல்ல, சுரண்டும் முதலாளிகளால், சக மனிதர்கள் மீது ஏவப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. இவர்களை எதிர்த்து நியாயமான கோரிக்கைக்காக போராடும் விவசாயிகளைத்தான் ஏளனமான கருத்துகளை பேசி அவமானப் படுத்தியுள்ளார் அஜீத் பவார். அவரின் செயலை பிற ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகள் கூட பகிரங்கமாக எதிர்க்கவில்லை.

மும்பை உயர் நீதி மன்றம் ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று, உஜானியில் இருந்து 24 மணி நேரத்திற்குள் தண்ணீர் திறந்துவிடக்கோரி உத்தரவு பிறப்பித்தது.  ஆனால், இன்று வரை தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

ஏப்ரல் 18 அன்று பொறுமை இழந்த 1,500க்கும் அதிகமான கிராம மக்கள் சட்ட சபையை அணிவகுத்து சென்று முற்றுகையிட்டனர். போலீஸார் போராட்டக் காரர்கள் வேன்களில் ஏற்றி ஆசாத் மைதானத்தில்  கொண்டு விட்டனர். போராட்டத்தில் கலந்துக்கொண்ட 22 வயதான விவசாயி தனாஜி பாவாலே அங்குள்ள மரத்தின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்து சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இந்தப் போராட்டங்களுக்கு தலைமை ஏற்றுள்ள பிரபாகர் தேஷ்முக், ‘அணைகளில் தண்ணீர் இல்லாத நிலையில், உயர் நீதி மன்ற உத்தரவு மூலம் எப்படி தண்ணீர் வழங்க முடியும்’ என்று விரக்த்தியுடன் கூறுகிறார்.

குடிக்கத் தண்ணீர் இன்றி மக்கள் மடிந்தாலும், முதலாளித்துவத்தின் சூறையாடல்களை அரசாங்கமும், அதிகார வர்க்கமும் தடை செய்யப்போவதில்லை என்பதோடு தாமும் அந்தக் கொள்ளையில் நேரடியாக பங்கெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதே உண்மை!

மேலும் படிக்க
Sugar politics deals a bitter pill in Solapur
Associate of fasting Maharashtra farmer attempts suicide