privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்இரத்தப் பலி கேட்கும் அந்நிய முதலீட்டாளர்கள் !

இரத்தப் பலி கேட்கும் அந்நிய முதலீட்டாளர்கள் !

-

2007-08-ல் 40.24 ஆக இருந்த டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வெகு வேகமாக வீழ்ச்சியடைந்து 60 ரூபாய்க்கு வந்துவிட்டது. மூலதனத்துக்கும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கும் பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களையே சார்ந்திருப்பதுதான் ரூபாயின் மதிப்பு தள்ளாடுவதற்கு அடிப்படையான காரணம் என்று முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்களே ஒப்புக்கொள்கின்றனர். தாங்கள் போட்ட முதலீட்டுக்குக் கொள்ளை இலாபத்தை உறிஞ்சி வந்த பன்னாட்டு நிதி நிறுவனங்கள், அமெரிக்க அரசு தனது நாட்டில் முதலீட்டுக்கான வட்டி வீதத்தைத் தற்சமயம் சற்று உயர்த்தியவுடனேயே, வெட்டுக்கிளிக் கூட்டம் போல இந்தியாவிலிருந்து வெளியேறி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தொடங்கி வைத்ததோடு, துரிதப்படுத்தியும் வருகின்றன.

11-cartoonஇன்னொருபுறம், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை. “மார்ச் 2014-க்குள் 172 பில்லியன் டாலர் அந்நியக் கடனை இந்தியா திருப்பிக் கொடுக்க வேண்டும். இது அந்நிய செலாவணி கையிருப்பின் 60 விழுக்காட்டை விழுங்கி விடும்” என்கிறது 29.6.2013 இந்து நாளேட்டின் தலைப்பு செய்தி. கடந்த ஆறே ஆண்டுகளில் அந்நியக் கடன் 3 மடங்கு அதிகரித்திருக்கிறதாம். அது மட்டுமல்ல, இந்த 172 பில்லியனில் 44 சதவீதத் தொகையானது, டாடா – அம்பானி போன்ற இந்தியத் தரகு முதலாளிகள் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் வாங்கியிருக்கும் கடன். இந்தக் கடனுக்கும் இந்திய அரசுதான் (அதாவது இந்திய மக்கள்தான்) பொறுப்பு. இதுபோக, தற்போதுள்ள நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டுமானால், 90 பில்லியன் டாலர் அந்நிய மூலதனத்தை இந்தியா கவர்ந்திழுக்க வேண்டும் என்று கூறுகிறது பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில்.

ஆனால், கடந்த ஒரு மாதத்திற்குள் 5 பில்லியன் டாலர் அந்நிய மூலதனம் வெளியேறியிருப்பதாக கூறுகிறது மும்பை பங்குச் சந்தை. “நெருக்கடியான” இந்தச் சூழ்நிலைமையில் அந்நிய மூலதனத்தைக் கவர்ந்திழுக்க வேண்டுமானால், அவர்களுடைய இரத்தப் பசிக்கு தீனி போடும் வகையில் தனியார்மய-தாராளமயக் கொள்கையைத் தீவிரப்படுத்துவதைத் தவிர வேறுவழியில்லை என்று மன்மோகன் சிங் கும்பல் வாதாடும்.

வேறுவழியின்றியோ, நெருக்கடியின் காரணமாகவோ அந்நிய மூலதனத்துக்கு அடிபணிவதாக இவர்கள் கூறுவது பித்தலாட்டம் என்பதையும், ஒப்பீட்டளவில் நெருக்கடி இல்லாத காலங்களிலும் அந்நிய மூலதனத்துக்கு நாட்டை விலை பேசுவதுதான் இவர்களது கொள்கையாக இருந்தது என்பதையும் ஆதாரங்ளுடன் விளக்குகிறது இக்கட்டுரை.

– ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்.

*****

ந்தியப் பொருளாதாரம் அந்நிய முதலீடுகளின் வரவைப் பெரிதும் சார்ந்திருப்பதனால் பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களின் (Foreign Institutional Investors) உத்தரவுகளுக்கு அடிபணிவதைத் தவிரத் தனக்கு வேறு வழியில்லை என்று நிதியமைச்சர் கூறுகிறார். 2007-08 -ல் நிகர உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதமாக இருந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, 2011-12 -ல் முன்னெப்போதும் இல்லாத வகையில் 4.2 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. 2012-13 -ல் இது 5 விழுக்காட்டைத் தாண்டி விடும் என்பது உறுதி. அந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இது 6.7 சதவீதமாக இருந்தது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் அபாயகரமான நிலையைப் பார்க்கும்போது, முதன்முறையாக நிதியமைச்சர் எதார்த்த நிலையை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகிறது.

ஆனால் ஆள்வோர், அந்நிய மூலதனத்தின் காலில் விழுந்து கும்பிடுவதற்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் அபாயகரமான நிலைமைதான் காரணம் என்பது உண்மையல்ல. 2001-04 -ல் நடப்புக் கணக்கு உபரியில் இருந்தபோதும் இவர்கள் அந்நிய மூலதனத்தின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கிடந்தனர் என்பதே இதற்கு சான்று.(1)

2007-08 -லும் இது தெளிவாக வெளிப்பட்டது. அந்த ஆண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நிகர உள்நாட்டு உற்பத்தியில் 1.3 விழுக்காடாக இருந்தது. அந்நிய மூலதன வரவோ, இதனைவிடப் பன்மடங்கு அதிகமாக, நிகர உள்நாட்டு உற்பத்தியில் 8.6 விழுக்காடாக இருந்தது. இதன் காரணமாக இந்த முதலீட்டு வரவு, அந்நியச் செலாவணிக் கையிருப்பில் சேர்க்கப்பட்டது. இந்த நடவடிக்கை பல்வேறு விதங்களில் பொருளாதாரத்தின் மீது சுமையைக் கூட்டியதுடன் அதனைச் சிதைக்கவும் செய்தது. எனவே, அந்நிய மூலதனத்தின் முன் மண்டியிடுவது என்பது குறிப்பிட்ட சூழ்நிலைக்கான எதிர்வினை அல்ல. இதற்கான வரலாற்று வேர்கள் இன்றைய இந்திய ஆளும் வர்க்கங்கள் உருவாகி வந்த நிகழ்ச்சிப்போக்கிலேயே இருக்கின்றன.

எனவே, நிதியமைச்சருடைய நடவடிக்கைக்கான உண்மையான தூண்டுதல் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை திடீரென படுமோசம் அடைந்திருப்பதல்ல. மாறாக, சில்லறை வணிகத்தை அந்நிய நேரடி முதலீட்டுக்குத் திறந்து விடுவது உள்ளிட்ட, கடும் எதிர்ப்பைச் சந்திக்கின்ற எல்லாவிதமான நடவடிக்கைகளையும் அமல்படுத்துவதற்கான ஒரு முகாந்திரம். இந்நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களிடம் சிதம்பரம் தனது பட்ஜெட் உரையில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

“என்னுடைய மிகப்பெரும் கவலை நடப்புக் கணக்குப் பற்றாக்குறை. அது தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த ஆண்டு, ஏன் அடுத்த ஆண்டும்கூட நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சமாளிக்க நாம் 75 பில்லியன் டாலர்களைக் கொண்டு வந்தாக வேண்டும். நமக்கு முன்னே மூன்று வழிகள்தான் இருக்கின்றன. அந்நிய நேரடி முதலீடு, அந்நிய நிதி நிறுவன முதலீடு அல்லது வெளிநாட்டு வர்த்தகக் கடன்.”

11-cartoon-2அந்நிய மூலதனத்தைத் திருப்திப்படுத்த முதலாவதாகவும் முதன்மையானதாகவும் பட்ஜெட் கையாளும் வழிமுறை அரசு செலவினத்தை குறைப்பதாகும். 2013-14-ம் ஆண்டிற்கு நிதிப்பற்றாக்குறை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 4.8% என்பதை மாற்றவியலாது என்பதாலும், பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள வருவாய் இனங்களிலிருந்து நிதி வருவாய் ஈட்டுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதாலும், இந்த ஆண்டின் மத்தியிலேயே அரசு செலவினங்கள் மேலும் வெட்டப்படும் என்பது, அநேகமாக முன்கூட்டியே தெரிந்துவிட்ட முடிவாக இருக்கிறது. நிதிப்பற்றாக்குறையைச் சரிக்கட்டுவதற்கு செலவினங்களை கண்மூடித்தனமாக வெட்டக்கூடியவர் சிதம்பரம். இதை அவர் 2012-13-லேயே நமக்கு நிரூபித்திருக்கிறார்.

இரண்டாவதாக, ஷோமே கமிட்டியின் சிபாரிசுகளுக்குத் தனது ஒப்புதலை வழங்குவதன் மூலம் அந்நிய மூலதனத்தை மகிழ்விக்கும் வகையில் பட்ஜெட் அமையவேண்டும். சென்ற பட்ஜெட்டில் அன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி “வரி தவிர்ப்புநடவடிக்கைகளுக்கு எதிரான பொதுவிதிகளை” (General Anti Avoidance Rules)-அறிவித்திருந்தார். வரியைத் தவிர்ப்பதைத் தவிர வேறு எந்த வணிக உள்ளடக்கமோ நோக்கமோ இல்லாத பரிமாற்றங்கள் மற்றும் ஏற்பாடுகளுக்கு (எடுத்துக்காட்டாக மொரிசியஸ் வழியாக இந்தியாவில் முதலீடு செய்ல்) வரிச்சலுகைகளை ரத்து செய்யும் அதிகாரத்தை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வழங்குகின்ற அந்த அறிவிப்பு, அந்நிய நிதி முதலீட்டாளர்களின் ஆத்திரம் கொண்ட எதிர்வினையைத் தூண்டிவிட்டது.

முகர்ஜியின் இடத்துக்கு சிதம்பரம் வந்தவுடன், வரித் தவிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான பொது விதிகளை ஒழித்துக் கட்டுவதற்கான வழிமுறைகளைக் கண்டறியும் பொருட்டு ஷோமே கமிட்டியினை நியமித்தார். என்னவிதமான சிபாரிசுகள் அந்தக் கமிட்டியிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டனவோ அவற்றை அந்தக் கமிட்டி கச்சிதமாக வழங்கியது. அதன் பெரும்பான்மையான சிபாரிசுகளை ஏற்பதாக ஜனவரி 14-ம் தேதியன்று சிதம்பரம் அறிவித்தார். வரி தவிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான பொதுவிதிகளை ஏறத்தாழ குழி தோண்டிப் புதைக்கின்ற இந்த முடிவு பட்ஜெட் உரையில் இடம்பெறுகிறது. வேறு எந்தவித வணிக நோக்கமும் இல்லாமல், வரித் தவிர்ப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஒரு ஏற்பாட்டை செய்து கொண்டு வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட வோடாஃபோன் நிறுவனத்துடன் ஒரு சுமுகத் தீர்வை எட்டுவதற்கு நிதியமைச்சகம் இப்போது முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

மேலும், அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, அவற்றுக்கு வசதிகள் செய்து கொடுப்பது, நாணயச் சூதாட்டத்தில் ஈடுபட அவர்களை அனுமதிப்பது, குறிப்பிட்ட துறைகளில் அந்நிய முதலீடுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் உச்சவரம்புகளை நீக்குவது போன்ற பல நடவடிக்கைகளுக்கு பட்ஜெட் உரை கணிசமான முக்கியத்துவம் அளிக்கிறது.

இருப்பினும் இத்தனை சலுகைகளையும் பொருட்படுத்தாது, பட்ஜெட் நாளன்று தங்களது கோபம் முழுவதையும் நிதி மசோதாவின் ஒரேயொரு அம்சத்தை நோக்கித் திருப்பின அந்நிய முதலீட்டு நிறுவனங்கள். அந்த அம்சம் இந்தியாவுடன் வரி சார்ந்த ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் நாடுகளின் வழியாக வருகின்ற முதலீடுகள் பற்றியது.

இந்தியாவுக்கும் மொரிசியஸுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. இதன்படி மொரிசியஸில் தங்குமிட உரிமை பெற்ற நிறுவனங்கள், தாங்கள் செலுத்த வேண்டிய மூலதன ஆதாய வரியை மொரிசியஸில்தான் செலுத்தும். இந்தியாவில் அல்ல. மொரிசியஸிலோ மூலதன ஆதாய வரியே கிடையாது. எனவே அந்நிய முதலீட்டாளர்கள் மொரிசியஸில் பெயர்ப்பலகை நிறுவனங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் தமது முதலீடுகளை இந்தியாவுக்குள் கொண்டு வருகிறார்கள். ஆம், இந்தியாவில் போடப்பட்டிருக்கின்ற அந்நிய நேரடி முதலீடு மற்றும் அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு ஆகியவற்றில் மொரிசியஸ்தான் முதலிடம் வகிக்கிறது. சிங்கப்பூருக்கு இரண்டாவது இடம். சிங்கப்பூருடனும் இந்தியா வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.

தற்போது கொண்டுவரப்பட்ட நிதி மசோதாவின் ஒரு பிரிவுதான் அந்நிய நிதி முதலீட்டு நிறுவனங்கள் கோபம் கொள்ளக் காரணம் என்று தெரிகிறது. ஒரு நிறுவனம் மொரிசியஸில் தங்குமிட உரிமை பெற்றது என்ற சான்றிதழை மட்டும் காட்டி மொரிசியஸ்-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான வரிச்சலுகையை இந்திய அரசிடமிருந்து பெறவியலாது என்றும், இறுதியில் இந்த வரிச்சலுகையின் ஆதாயத்தைப் பெறுகின்றவர் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறுகிறது இந்தப் பிரிவு. மேலும், இந்தச் சலுகையைப் பெறுகின்றவர் மொரிசியஸைச் சேர்ந்தவராக இல்லாத பட்சத்தில், அந்த நிறுவனங்களிடமிருந்து இந்திய வருவாய்த்துறை அதிகாரிகள், மூலதன ஆதாய வரியை வசூலிக்க முடியும் என்றும் இந்தப் பிரிவு கூறுவதாகத் தெரிகிறது. இந்திய வரிச்சட்டங்கள் எனப்படுபவை வெறும் கேலிக்கூத்தாக ஆகிவிடாமல் தடுக்க வேண்டுமானால், இப்படி ஒரு நிபந்தனை அவசியம் என்பதை யாரும் விளங்கிக் கொள்ள இயலும்.

ஆனால், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பட்ஜெட் தினத்தன்றே, பங்குகளை விற்கத் தொடங்கியதன் மூலம மோதலைத் துவக்கினர். வரி தொடர்பான தங்குமிடச் சான்றிதழுக்கு மேல் இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் போக மாட்டார்கள் என்றும், அந்நிய முதலீட்டாளர்களின் தங்குமிடத் தகுதியைக் கேள்விக்குள்ளாக்க மாட்டார்கள் என்றும் நிதியமைச்சர் மறுநாளே அறிக்கை வெளியிட்டார். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய வரிச் சட்டங்களைத் தொடர்ந்து கேலிக் கூத்தாக்கலாம் என்று உத்திரவாதம் அளித்தார். (2)

இத்தகைய பெருமுயற்சிகளுக்குப் பின்னரும் தன்னுடைய பட்ஜெட்டை வைத்து அந்நிய முதலீட்டாளர்களை நிதியமைச்சரால் திருப்திப்படுத்த இயலவில்லை என்றே தெரிகிறது. தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் உண்மையில் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை அவர்கள் இடையறாத கண்காணிப்பில் வைத்திருக்கிறார்கள். புதிய சலுகைகளையும் நடவடிக்கைகளையும் கோரித் தொடர்ந்து நிர்ப்பந்தங்களையும் கொடுத்து வருகிறார்கள்.

அடிக்குறிப்புகள் :

(1) இந்தக் காலகட்டத்தில் அரசுக் கருவூலத்திலிருந்தும் மக்களிடமிருந்தும் பணத்தைப் பிடுங்கி, அந்நிய நிதி முதலீட்டாளர்களுக்கு வழங்கிய பளிச்சென்று தெரியும் இரண்டு முடிவுகளைப் பார்ப்போம்.

“மொரிசியஸில் உள்ள பெயர்ப்பலகை நிறுவனங்கள் மூலம் தங்களுடைய முதலீடுகளை இந்தியாவுக்குள் அனுப்புவதன் மூலம், மொரிசியஸுடனான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஒரு அந்நிய முதலீட்டாளர் தன்னுடைய ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்வாரேயானால், அதனைக் கண்டுபிடிப்பது அரசின் வரி வசூல் நிர்வாகத்துடைய கடமை” என்று 2002-ல் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அக்டோபர் 2002-ல் மைய அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தன் விளைவாக, “மொரிசியஸ் பாதை” யின் மூலம் நடக்கும் பிரம்மாண்டமான வரி ஏய்ப்பு இன்று வரை தொடர்கிறது. இரண்டாவதாக, ஒரு முதலீட்டாளர் ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கிய நாளில் இருந்து ஒரு ஆண்டுக்குப் பின்னர் விற்பனை செய்வாரேயானால் அதற்கு மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்கு அளித்தது 2003-04 பட்ஜெட்.

(2) இந்த மொத்த நிகழ்வுமே 2000 ஆண்டில் நிகழ்ந்த சம்பவங்களின் மறுபதிப்புத்தான். அன்று அரசாங்கம் ஒரு சுற்றறிக்கையை (எண். 789) அனுப்பி, வரி உறைவிடச் சான்றிதழ் கொடுத்துவிட்டால் போதும்; அதனை ஆராயாமல் நாங்கள் கண்ணை மூடிக் கொள்கிறோம் என்று அரசு விளக்கமளித்தது.

(Aspects of India’s Economy, Issue No.53 இல் வெளிவந்த “FIIs:Difficult to please” என்ற கட்டுரையின் தமிழாக்கம்.)
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2013
________________________________________________________________________________

  1. //இந்த 172 பில்லியனில் 44 சதவீதத் தொகையானது, டாடா – அம்பானி போன்ற இந்தியத் தரகு முதலாளிகள் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் வாங்கியிருக்கும் கடன். இந்தக் கடனுக்கும் இந்திய அரசுதான் (அதாவது இந்திய மக்கள்தான்) பொறுப்பு//

    இது சரிதான் என்பதற்கு யாரேனும் முதலாளித்துவ வல்லுநர்கள் கொடுக்கும் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன். இவர்கள் வாங்கியிருக்கும் கடனுக்கு நான் கட்டும் வரியிலிருந்து எப்படி நான் பணம் கொடுக்க சம்மதிப்பேன்? பொதுத்துறை நிறுவனம் வாங்கியிருக்கும் கடனுக்கு மட்டும்தானே நான் பொறுப்பு?

    • // இவர்கள் வாங்கியிருக்கும் கடனுக்கு நான் கட்டும் வரியிலிருந்து எப்படி நான் பணம் கொடுக்க சம்மதிப்பேன்? //

      டாடா டாலரில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கிய போது , RBI அந்த டாலரை பெற்றுக்கொண்டு ரூபாயாக டாடாவுக்கு தரும்.

      இப்போது டாடா பணத்தை திருப்பி தரும்போது ரூபாய்களை பெற்று கொண்டு டாலரை தர வேண்டும்.

      ஆனால் RBI இடம் அவ்வளவு டாலர்கள் இல்லை . இப்போது அந்த டாலருக்கு
      1. IMF இடம் கடன் வாங்க வேண்டும்
      >>கடன் சுமை அதிகரித்து ரூபாய் மதிப்பு சரியும் .கேட்ச் 22

      2 வெளிநாட்டு வாழ் அன்பர்கள் பணம் அனுப்ப வேண்டும்

      3.வெளி நாட்டு நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்
      >> அதாவது இந்தியாவை விற்க வேண்டும்

      4. நமது ஏற்றுமதி அதிகரித்து டாலரில் சம்பாதிக்க வேண்டும் அல்லது நமது டாலர் செலவு குறைய ஆயில் விலை குறைய வேண்டும்
      >> நமது தொழில் நுட்பம், தரம் அதிகரித்து அதிகம் உழைக்க வேண்டும்

      5.அல்லது அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து டாலர் மதிப்பு இழக்க வேண்டும்
      >> அமெரிக்காவிற்கு கடன் கொடுப்பதை மற்ற அரசாங்கம் நிறுத்தினால் இது நடக்கும்

      6. ரூபாயின் வட்டி வீதத்தை அதிகரிப்பது , கடனை குறைப்பது போன்றவை செய்யவேண்டும்.
      >> மக்கள் தலையில் கட்டுவது. ரியல் எஸ்டேட் வதேராவின் தொழில் பாதிப்பு அடையும்

      இந்த நிலைக்கு யார் காரணம் ?
      சோசியலிசம் மற்றும் ஊழல்கள் நிறைந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்த மக்கள்.

      இதன் தலைப்பு
      இரத்தப் பலி கொடுக்கும் இந்திய பொருளாதார மேதைகள் என்று இருக்க வேண்டும்

      கோல்கேட் ஊழல் நடை பெறாவிட்டால் , இந்திய நிலக்கரியை உபயோகபடுத்தி இருந்தால்
      டாலர் இழப்பு குறைந்து இருக்கும்

      கடைசியாக உங்கள் கேள்வி

      இவர்கள் வாங்கியிருக்கும் கடனுக்கு நான் கட்டும் வரியிலிருந்து எப்படி நான் பணம் கொடுக்க சம்மதிப்பேன்?

      அரசாங்கம் உங்களை கேட்காது, பணவீக்கம் என்னும் ஆயுதம் மூலம் திருடும்.

      ரூபாய் மதிப்பு இன்னும் சரியும்.
      பெட்ரோல் விலை அதிகமாகும்.
      மக்கள் போக்குவரத்து மற்றும் விலைவாசி அதிகரிக்கும்
      மாதாந்திர பட்ஜெட்டில் துன்ன்டு அல்ல பெட்ஷீட்டே விழும்

      நம் தேசத்தை நினைக்கும் போது கவலையாக இருக்கிறது

      • இப்போது டாடா பணத்தை திருப்பி தரும்போது ரூபாய்களை பெற்று கொண்டு டாலரை தர வேண்டும்.

        ஆனால் RBI இடம் அவ்வளவு டாலர்கள் இல்லை . இப்போது அந்த டாலருக்கு நாம் பொறுப்பு. கடனுக்கு அல்ல

      • தங்கள் பதில்களுக்கு நன்றி. சற்று விளக்கம் கிடைத்திருக்கிறது. சுயசார்புத்தன்மையை, சுயபொருளாதாரத்தை தூக்கிப் பிடிக்காமல் எதுவுமே சாத்தியமில்லை. அதற்கு தற்போதிருக்கும் ஆட்சி அதிகார முறையும், அமைப்பு முறையும் தக்க பதிலளிக்கிறதா என்றால் அறிவுக்கெட்டிய தூரம் வரை காணப்படவில்லை 🙁

  2. நேற்றைய தினம் பிசினஸ் லைனில் Colour of FII money என்ற ஒரு கட்டுரை லோகேஸ்வரி என்பவர் பெயரில் வந்துள்ளது.
    http://www.thehindubusinessline.com/opinion/columns/lokeshwarri-sk/colour-of-fii-money/article4967068.ece

    FII money – டெரை வேட்டிவ் ஈக்வுட்டி முதலீடுகளுக்காக இன்னும் வந்துகொண்டு தான் இருக்கிறது. யாரும் அதை பற்றி கவலைப்பட தேவையில்லை .

    அந்நிய முதலீடு வேறு காரணங்களுக்காக வருவது வேண்டுமானால் அமரிக்க Federal Reserve எடுத்த முடிவுகளால் குறைந்து போயிருக்கலாம் ஆனால் பங்கு சந்தை யூக வணிகத்தில் இன்னும் வந்து கொண்டிருக்கிறது என்று புள்ளி விவரங்களுடன் சொல்லப்பட்டிருக்கிறது.
    ஜப்பான் மற்றும் இதர சிறு முதலீடுகளை தவிர்த்து பார்க்கிறபோது , ஏராளமான முதலீடு அந்நிய முதலீடு என்கிற தோற்றத்தில் வந்து குவிந்து கொண்டு தான் இருக்கிறது,
    காரணம் என்னவென்றால் அவை அந்நிய முதலீடுகளே அல்ல இந்திய பணம் வெளிநாடுகள் சென்று திரும்ப இங்கே வருகிற பணம் தான்.

    இப்படி வந்த அந்நிய முதலீடு பங்குச்சந்தையில் குறிப்பாக யூக வணிகத்தில் (derivative F & O) தங்களுடைய பெரும் தொகைகளாலும், தேசிய அளவில் நிதி கொள்கை, தொழிற் கொள்கை மாற்றங்களாலும் சிறு முதலீட்டாளார்களுடைய பணத்தை சுரண்டி அவர்களை எல்லாம் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓட வைத்ததோடல்லாமல் நிறய முதலீட்டாளர்களை தற்கொலை செய்ய வைத்து விட்டது.

    ஒன்றுகொன்று தொடர்பு படுத்தி பார்க்கிற பொது நிறைய விஷயங்கள் புலப்படும்.
    SEBI இடம் , PN(participatory Note) மூலமாக , FII கம்பனிகள் மூலமாக , சந்தை விழுந்த போது யார் யார் எவ்வளவு சம்பாதித்தார்கள் என்று தகவலறியும் சட்டத்தில் கேட்கப்பட்ட போது , அப்படிப்பட்ட தகவல்களை பரிமாற்ற எங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று பதில் கொடுத்துள்ளது.

    அப்போது, செபி, மற்ற கட்டுப்பாட்டு நிறுவன ங்கள் அனைத்திற்கும் யார் யார் , யார் யாரை எல்லாம் ஏமாற்றி பங்கு சந்தையில் எவ்வளவு சம்பாதித்தார்கள் என்பது தெரியும்.
    கோடிகணக்கான பணம் இதில் market manipulation மூலமாக சுருட்டப்பட்டுள்ளது.
    பங்கு சந்தையில் பரிச்சயம் உள்ளவர்கள், லோகேஸ்வரி அவர்கள் எழுதியுள்ள கட்டுரையை படித்துவிட்டு சிறிது பின்னோக்கி பார்பார்களேயானால் , திருடர்களை பற்றி தெளிவு நிறைய பெறுவார்கள்.
    வினவு ஆசிரியர் குழுவையும் சற்று கவனம் செலுத்த வேண்டுகிறோம்

  3. அட நம்ம அதியமான் பாஸ் எங்கப்பா !!! அவர் வந்து எதாவது விளக்கமா விளக்கம் கொடுப்பரே!!! வர சொல்லுங்கப்பா

    • அடிப்படைகள் கூட புரியாமல், மிக தவறான, மேலோட்டமான வாதங்களை கொண்ட கட்டுரை என்பதால் சீரியசா எடுத்தக்கல. 1990கள் வரை அன்னிய முதலீட்டாளர்களே இல்லாத காலம் அப்ப பரவாயில்லையா என்ன ? வருடந்தோரும் அய்.எம்.எஃப் இடம் டாலர் கடன் கேட்டு பிச்சை எடுக்க வேண்டிய அவல நிலை அன்று. இன்று ?

      (அய்.எம்.எஃப்க்கும் உலக வங்கிக்கும் வித்தியசம் தெரிந்தவர் இது போன்ற கட்டுரைகளை எழுத மாட்டார்)

        • அய்.எம்.எஃப் Special drawing rights (SDR) எனப்படும் டாலர் கடன்களை, அன்னிய செலவாணி பற்றாகுறையால திவால் நிலைக்கு செல்லும் நாடுகளின் அரசுகளுக்கு அளிக்கும். உலக வங்கி பொதுவான வளர்ச்சிகான கடன்களை அரசு, மற்றும் அரசு அல்லாத நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் வழங்கும். கூட்டு குடினீர் திட்டம் போன்ற லோக்கல் திட்டங்களுக்கும் வழங்கும். உலக வங்கி கடன்களை வாங்காமலும் நாம் வண்டி ஓட்டலாம். ஒன்னும் குடி முழுகிவிடாது.

          ஆனால் அய்.எம்.எஃப் அரசுகளுக்கு மட்டும், அன்னிய செலவாணி பற்றாகுறை ஏற்படும் போது மட்டும் வழங்கும். (அச்சமயங்களில் வேறு வழியே இல்லை). 90கள் வரை நாம் தொடர்ந்து அய்.எம்.எஃபிடம் வருடந்தோரும் டாலர் பற்றாகுறையினால் கடன் வாங்கி திவால் நிலைக்கு தள்ளப்பட்டோம். பார்க்கவும் :

          http://nellikkani.blogspot.in/2008/05/1991.html
          1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?

  4. //தற்போதுள்ள நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டுமானால், 90 பில்லியன் டாலர் அந்நிய மூலதனத்தை இந்தியா கவர்ந்திழுக்க வேண்டும்…//

    பேசாமல் இந்தியாவை அமெரிக்காவுக்கு உள்வாடகைக்கு விடலாம்…இந்த கைகூலிகளை கொன்றழிக்க வேண்டும்.

  5. டெரைவேட்டிவ் பிரிவில் எல்லா பங்குகளையும் அனுமதிப்பதில்லை.
    அதிக எண்ணிக்கையில் வியாபாரம் ஆகிற நிறுவனத்தின் பங்குகளை மட்டும் கணக்கெடுத்து ஒவ்வொரு துறையிலும் சில நிறுவனங்களின் பங்குகளை டெரைவேட்டிவ், யூக வணிக பிரிவுகளில் அனுமதிப்பார்கள்.
    10 சதவிகத margin மட்டும் இருந்தால் மட்டும் போதுமானது.

    உதாரணத்திற்கு , இந்தியா சிமண்ட்ஸ் ஒரு லாட் 1450 பங்குகள்,ரிலையன்ஸ் பெட்ரோலியம் RPL ஒரு லாட் 3350 , SUNTV 250 இப்படி. முழு பங்குகளுக்கு உண்டான தொகையையும் அளிக்க வேண்டியதில்லை, இந்த லாட் என்று சொல்லப்படுகிற பங்குகளுக்கு உண்டான முழு மதிப்பையும் தராமல் ,10 சதவிகிதத்திலிருந்து இருபது சதவிகிதம் கொடுத்தால் போதுமானது , ஆனால் இலாபம் அல்லது நட்டம் முழு பங்குகளுக்கும் கிடைத்துவிடும்.ஏற்ற இறக்கத்தில் , மார்ஜின் தொகை முழுவதும் போதாது என்கிற போது ,அனைத்தையும் முதலீட்டாளர் இழந்து விடுகிறார்.

    வங்கி பங்குகள் (SBI ,PNB ,அலஹபாத் வங்கி,ஆந்திர வங்கி,கார் பரேஷன் வங்கி ,iob போன்றவை) சிமன்ட் கம்பனி பங்குகள் ( இந்தியா சிமண்ட்ஸ்,குஜாரத் அம்புஜா சிமண்ட்ஸ்,ஜெயப்ரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் போன்றவை), மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவங்களின் பங்குகள்(மாருதி,டாடா மோட்டா ர்ஸ்,மகீந்த்ரா& மகிந்த்ரா போன்றவை)கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு நிறுவன பங்குகள் (இன்போசிஸ் ,போலாரிஸ் ,emphasis விப்ரோ போன்றவை) ,மருந்து தயாரிப்பு நிறுவன பங்குகள் ( Dr Reddy,மாட்ரிக்ஸ் ,ரான்பாக்சி ,gsk பார்மா போன்றவை) , மற்றும் அரசு சார் நிறுவனங்களான BHEL ,BPL ,BEL ,சென்னை பெட்ரோ,NLC போன்றவை)
    போன்ற பங்குகளுக்கு தான் டெரைவேட்டிவ் பிரிவில் அனுமதி உண்டு.

    மார்க்கெட் ஒட்டு மொத்தமாக crash ஆன தருணங்களிலும் அதற்க்கு சற்று முன்பாகவும் , மேற்கண்ட துறை பற்றிய கொள்கை அளவிலான முடிவுகள் (policy decisions ) மீண்டும் மீண்டும் வாரமொருமுறை வந்து கொண்டே இருந்தது பங்குகளை ஏற்றவும் இறக்கவும் செய்து கொண்டே இருந்தன. ஒவ்வொரு முறை ஏற்றத்திலும் இறக்கத்திலும் லாட் ஒன்றிற்கு ரூ 25000 ரூ 40000 என்று இலாபம் ஈட்டுவதற்கு வாய்ப்புக்கள் கிடைத்துக்கொண்டே இருந்தன. இறக்கத்தில் இலாபம் என்று ஏன் சொல்லுகிறோம் என்றால் டெரைவேட்டிவ் பிரிவில், லாட்டை முதலிலேயே வாங்காமலே விற்று விட்டு விலை குறைந்ததும் வாங்கி நேர் செய்து விடலாம். (2001 ல் டெரைவேட்டிவ் (F & O ) இந்தியாவில் முதன் முதலாக பங்கு சந்தையில் துவங்கப்பட்டது . இந்தியா போன்ற நாடுகளுக்கு இது அவசியமே இல்லை) சுமார் 100 லாட்டுகள் அன்றாடம் வாங்கி , விற்கிறபோது அல்லது விற்று பிறகு வாங்கி நேர் செய்கிறபோது எவ்வளவு லாபம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

    எனவே தனிப்பட்ட நிறுவனங்கள் insider trading மூலமாக (தங்கள் நிறுவனத்தை பற்றிய மதிபீட்டை கூடியோ குறித்தோ அறிக்கைகள் வெளியிட்டு பங்குகளை வாங்கி அல்லது விற்று எல்லாபம் சம்பாதிப்பது)
    லாபம் சம்பாதிப்பதை போன்று மேற்கண்ட வேறு காரணிகளாலும் கொள்ளை லாபம் அடிப்பதற்கு வாய்ப்புக்கள் டெரைவேட்டிவ் பிரிவில் நிறைய உண்டு.
    இப்படி சந்தை ஏற்ற தாழ்வுகளை முன் கூடியே நிர்ணயிக்கிற சக்திகளை தங்கள் கைக்குள் போட்டு கொண்டு தான் இந்தியாவை சார்ந்த FII பெருமக்கள் கொள்ளை லாபம் ஈட்டி கொண்டிருந்தார்கள்.

  6. F & O பிரிவில் முதலீடு செய்து தங்களுடை ஒட்டு மொத்த வாழ்நாள் சேமிப்பையும் , அத்தகைய சேமிப்பை போல் மூன்று மடங்கு தொகையை அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி அதையும் F & O ல் இழந்து ,
    முகத்தையே பார்க்க முடியாத அளவிற்கு இடிந்து போனவர்கள் ஏராளமான பேர் ,நாடு பூராவிலும் பரவலாக இருக்கிறார்கள்.அவர்கள் இழந்த பணம் பூராவும் போய் சேர்ந்த இடம் இந்த FII கனவான்கள், ( முகமூடி தரித்த இந்திய FII )பெருமக்களிடத்தில் தான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க