privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மாநகராட்சி ஆணையரை பணிய வைத்த ஆட்டோ ஓட்டுனர் சங்கம் !

மாநகராட்சி ஆணையரை பணிய வைத்த ஆட்டோ ஓட்டுனர் சங்கம் !

-

திருச்சி மாநகராட்சி ஆணையரின் திமிரான போக்குக்கு ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கத்தினரின் பதிலடி !

திருச்சியில் கடந்த 20.07.2013 அன்று காலை 11 மணி அளவில் இப்ராகிம்பார்க் தேவர் ஹாலில் அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களையும் வரவழைத்து மைக்கை பிடித்த ஆணையர், மேடையில் அனைத்து அதிகாரிகள் இருந்தும் யாரையும் சட்டை செய்யாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருந்தார்.

posterஅவர் பேசுகையில் எந்த நோக்கத்திற்காக அத்தனை ஓட்டுனர்களும் வந்திருந்தார்களோ, அதற்கு மாறாக, அவர்கள் தலையில் இடியை இறக்கியதைப்போல எந்த ஆட்டோ ஸ்டாண்டுகளுக்கும் அங்கீகாரம் என்பதே கிடையாது என்று கூறி எல்லா ஸ்டாண்டுகளையும் கலைக்கப் போவதாக அறிவித்தார்.

இது “ஏம்பா, எல்லோரும் கோவணத்துடன் நிக்கிறீங்க எல்லோருக்கும் வேட்டி தரேன்” என்று சொல்லி அழைத்து ஒட்டு மொத்தமாக இருக்கிற கோவணத்தையும் உருவியதைப்போல இருந்தது. “ஸ்டாண்டுகள் இல்லாமல், தொழிற்சங்கம் இல்லாமல், கட்சி இல்லாமல், கொடி இல்லாமல், போர்டு இல்லாமல், என்னுடைய கட்டுப்பாட்டில் நான்கு கோட்டமாகப் பிரித்து அதில் உங்களை சேர்ப்பேன். நீங்கள் இதுவரை தொழில் செய்த இடம் எதுவாக இருந்தாலும் உங்களுக்கு ரேசன் கார்டு எந்த லிமிட்டில் வருகிறதோ அங்குதான் நீங்கள் வண்டி ஓட்ட முடியும்” என்று சர்வாதிகாரமாக அறிவித்தார்.

அதைக் கேட்டவுடன் பழைய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அதிர்ச்சி, ஸ்டாண்டு இல்லாத புது ஆட்டோ ஓட்டுனர்களுக்கோ ஓரே ஆனந்தம். கைத்தட்டல்களும், விசில்களும் பறந்ததை ஆணையர் கள்ளு குடித்த குரங்காக ஏற்றுக்கொண்டார். இத்தனை ஆட்டோ ஓட்டுனர்களையும் ஒன்று திரட்டிய பெருமை என்னைத்தான் சாரும் என்றும் மார் தட்டிக் கொண்டார். எல்லா ஸ்டாண்டுகளுக்கும் அனுமதி கிடைக்கும் என்று நம்பி வந்த கூட்டம், புது ஸ்டாண்டுகளை ஏற்படுத்தி தருவார் என்று வந்த ஸ்டாண்ட் இல்லாத ஓட்டுனர்கள் கூட்டம் என்பது புரியாமல் பெருமையுடன் பீற்றிக்கொண்டார் ஆணையர். மேலும் அவர் பேசுகையில், “திருச்சியின் 80% இடங்கள் என்னுடைய கையிலும் 20% இடங்களில் நானாக பார்த்து உங்களுக்கு ஸ்டாண்ட் போடும் உரிமையை கொடுக்கிறேன். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வண்டி ஓட்டிக் கொள்ளலாம்” என்று புது ஓட்டுனர்களுக்கும் பழைய ஓட்டுனர்களுக்கும் சண்டை மூட்டுவது போல் பேசிவிட்டு, ஐந்து நபர்களை மட்டும் கருத்து தெரிவிக்குமாறு முன்கூட்டியே தயார் செய்யப்பட்ட நபர்களிடம் கூறினார்.

உடனே ஐந்து பேர் முன்வரிசையில் இருந்து எழுந்து போகும் போது, எமது சங்கத்தின் பொதுச் செயலாளர் மணலி தாஸ் எழுந்து மேடைக்கு சென்றார். மற்றவர்களெல்லாம் திட்டமிட்படி ஆணையரை தேனே! மானே! என்று புகழ்ந்தபோது உச்சி குளிர்ந்த ஆணையர் எமது தோழர் பேசும்போது, “அடிப்படை தேவையான பழைய ஸ்டாண்டுகளுக்கு அங்கீகாரமும், புது ஓட்டுனர்களுக்கு புது ஸ்டாண்டுகளையும் வழங்கினாலே போதும். அதை விட்டு விட்டு ஸ்டாண்டுகளே இல்லை என்று ஸ்டாண்டுகளை கலைக்கும் முயற்சி என்பது கூடாது. மேலும் நிலையில்லாத பெட்ரோல் விலை உயர்வுக்கு நடுவில் நீங்கள் அறிவிக்கும் முறை சாத்தியமில்லை” என்று பேசிய போது உடனே ஆணையர் மேடையில் இருந்து எழுந்து இப்படியெல்லாம் பேசக் கூடாது என்று மைக்கை பிடுங்கினார். அவரிடம் தோழர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.

bannerஉடனே ஆணையர் மைக்கை பிடுங்கி, இத்துடன் இந்த கூட்டம் முடிந்ததாக அறிவித்தார். அறிவித்தவுடன் கூட்டம் கலைகிறது. தோழரும் மற்ற நிர்வாகிகளும் வெளியில் வந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் உங்கள் ஆணையரின் அதிகார போதைக்கு துணை போகாதீர்கள் என்று கடுமையாக வாதிட்டார்கள். பிறகு மற்ற நிர்வாகிகளை ஒருங்கிணைத்து ஆணையரை கண்டித்து, ஆணையரின் அதிகார போதையை தெளிய வைப்பேன் என்று கூறினார்.

அதன்படி போஸ்டர் அடித்து அனைத்து ஆட்டோக்களில் ஒட்டுவதும், சங்க பாகுபாடு இல்லாமல் திருச்சியின் அனைத்து ஆட்டோக்களுக்கும் துண்டு பிரசுரம் வினியோகமும் நிர்வாகிகள் மூலம் செய்யப்பட்டன. அதன் விளைவாக இந்த பிரச்சினை குறித்து ஓட்டுனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், தாக்கமும் ஏற்பட்டது. இந்த விஷயத்தில் மற்ற தொழிற்சங்கங்கள் எல்லாம், மாவட்டத்தை கேட்க வேண்டும், மாநிலத்தை கேட்க வேண்டும் என்று ஒதுங்கிக் கொண்டன.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுகொடுக்க வருமாறு அனைத்து ஸ்டாண்டுகளுக்கும் மீண்டும் பிரசுரம் மூலம் அழைத்ததன் பேரில் பெருவாரியான ஓட்டுனர்கள் கலந்து கொண்டு, ப்ளக்ஸ் பேனர், கொடி (பு.ஜ.தொ.மு கொடி) பிடித்துக் கொண்டு முழக்கமிட்டு காவல்துறை அதிகாரிகளின் தடுப்பையும் மீறி ஆட்சியர் அலுவலத்துக்குள் சென்று மனு கொடுத்த போது, ஆணையரின் தன்னிச்சையான போக்கை, ஏற்றுக் கொள்ள முடியாது என்று வாதிட்டோம்.

பிறகு, ஆட்சியர் சம்பந்தப்பட்ட ஆணையரை அழைத்த போது அவருக்கு பதில், ஒரு பெண் அதிகாரி வந்தார். அவரிடம், “உங்கள் ஆணையர் செய்வது சரியல்ல, உடனடியாக சம்பந்தப்பட்ட அனைத்து தொழிற்சங்க தலைவர்களையும் அழைத்துப் பேசி ஒரு சுமுகமான தீர்வு காண வேண்டும்” என்று உத்தரவிட்டார். பிறகு அவர் அளித்த உத்திரவாதத்தையே போஸ்டராக அடித்து அனைத்து ஆட்டோக்களிலும் ஒட்டப்பட்டது.

இது, நமது சங்க உறுப்பினர்கள் மட்டும் அல்லாமல் அனைத்து ஓட்டுனர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நடவடிக்கையின் மூலம் தொழிற்சங்க உரிமைகளை பெற வேண்டுமென்றால் புரட்சிகர தொழிற்சங்கத்தின் அணுகுமுறைதான் பலன் தரும் என்பதை மாற்று சங்க உறுப்பினர்களும் புரிந்து கொண்டார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்.]

மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சமர்ப்பித்த மனு

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கம், திருச்சி
இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.

அடைதல்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

அம்மையீர்,

பொருள் : ஆட்டோக்களை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் சங்கங்களின் கருத்தைக் கேட்காமல், இருக்கின்ற முறைகளை குலைத்து சீர்குலைவை உருவாக்கும் படி புதிய முறைகளைப் புகுத்தப் போவதாக அறிவித்த மாநகராட்சி ஆணையரின் தன்னிச்சைப் போக்கான உத்தரவை தடுத்து நிறுத்தக் கோருவது – நியாயமான கட்டணத்துடன் மீட்டர் முறையை அமுல் படுத்தக் கோருவது – தொடர்பாக.

கடந்த 20-ம் தேதி பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டு ஆட்டோ ஓட்டுனர்களுக்கான கருத்துக் கேட்பு கூட்டம் ஒன்றை மாநகராட்சி ஆணையர் கூட்டினார். ஆட்டோ ஓட்டுனர்களின் நிறுத்தங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது, கடைவீதி உள்ளிட்ட ஆட்டோ நிறுத்தமில்லாத பகுதிகளில் நிறுத்தம் வழங்குதல் என்ற அறிவிப்பின் படி பெருத்த எதிர்பார்ப்புடன் 500-க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் அரங்கில் குவிந்தனர். ஆனால், அனைவரின் எதிர்பார்ப்பையும் தவிடுபொடியாக்கி, சோர்வும் எரிச்சலும் அடைச் செய்தது ஆணையரின் பேச்சு. ஏற்கனவே இருக்கிற நிறுத்தங்கள் அனைத்துக்குமான அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். ஆண்டாண்டு காலமாக தாங்கள் நடைமுறை அனுபவத்தில் உருவாக்கிய ஸ்டேண்டு முறை, அதில் வரிசைக் கிரமமாக சவாரி எடுக்கும் ஒழுங்கு, ஒரு ஆட்டோ ஸ்டேண்டு அருகில் மற்றொரு ஓட்டுனர் சவாரி எடுக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு ஆகிய அனைத்தையும் அனுமதிக்கப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்தார். ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இனி சங்கமெல்லாம் கூடாது என்றும், தான் தரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு, எந்த ஓட்டுனர் எங்கே ஓட்ட வேண்டும் என்று தான் அறிவிக்கும் இடத்தில் போய் ஓட்ட வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

இப்படி உத்தரவுகளை பிறப்பித்த பின் ஏற்கனவே பேசி வைத்து ஜால்ரா போடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட 4 பேரிடம் மட்டும் ‘கருத்து’ கேட்டு விட்டு அடுத்து வந்த ஆட்டோ ஓட்டுனரும் எமது சங்கப் பொதுச் செயாலளருமான தோழர் மணலிதாசை பேச விடாமல் தடுத்ததுடன் அவரிடம் இருந்து மைக்கைப் பிடுங்கிக் கொண்டு, கூட்டம் அத்துடன் முடிந்ததா அறிவித்தார். இப்படி கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்தியதை ஜனநாயகம் என்றோ நாகரீகமான செயல் என்றோ யாரும் கூற முடியாது.

நகரத்தின் விரிவாக்கம், ஆட்டோ ஓட்டுனர்களின் எண்ணிக்கை உயர்வு ஆகியவற்றுக்கேற்ப புதிய இடங்களில் ஸ்டேண்டுகளை உருவாக்கி புதிதாக வரும் ஓட்டுனர்களுக்கு வழி செய்து தராமல், காலம் காலமாக ஒரு முறையை உருவாக்கி வைத்து அன்றாடம் பிழைப்பை நடத்தி வரும் சாதாரண ஓட்டுனர்களின் பிழைப்பில் கை வைப்பதுடன், புதிய ஓட்டுனர்களை பழைய ஓட்டுனர்களுக்கெதிராக மோத விடும் இந்த முயற்சி ஒரு பொறுப்புள்ள அதிகாரிக்கு அழகானதல்ல என்று கருதுகிறோம். இது ஆட்டோ தொழிலில் ஒரு ஒழுங்கின்மையையும், கலவர சூழலையும் உருவாக்கத்தான் உதவும் என்று கருதுகிறோம்.

எனவே, மாநகராட்சி ஆணையரின் மேற்கூறிய ஜனநாயக விரோத முடிவையும் அது தொடர்பான மற்ற நடைமுறைகளையும் உடனே நிறுத்தி வைக்கக் கோருகிறோம்.

பொது மக்களுக்கான பொது போக்குவரத்து என்ற வகையில், இருக்கின்ற அனைத்து ஆட்டோ நிறுத்தங்களுக்கும் அங்கீகாரம் வழங்குமாறும் (கடைவீதிகள் உள்ளிட்டு) காலத்திற்கேற்ப புதிய இடங்களில் ஆட்டோக்கள் நிறுத்த இடம் ஒதுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

சென்னை போன்றல்லாத் சின்னஞ்சிறிய திருச்சி மாநகராட்சியில், ஆணையரின் கணக்குப்படிய 3,200 ஆட்டோக்கள் என்பது அதிகப்படியானது. இத்தனை ஆட்டோக்களும் தினசரி ரூ 400, 500-க்கு வண்டி ஓட்டினால்தான் வண்டி வாடகை (அ) வங்கித் தவணை, எரிபொருள் செலவு போக வீட்டிற்கு ஏதோ கொஞ்சம் கொண்டு போக முடியும் என்பது தாங்கள் உணர முடியாததல்ல. இந்த நிலைழில், இப்போதிருக்கும் ஸ்டேண்டு முறையில் 10 சவாரியாவது எடுத்தாக வேண்டும். 10 வண்டி உள்ள ஒரு ஸ்டேண்டில் ஒரு சவாரி எடுத்த பின் மீண்டும் அடுத்த சவாரி எடுக்க 2 மணி நேரமாவது காத்திருக்க வேண்டியுள்ளது. ஒரு நாளில் 12 மணி நேரம் ஓட்டினால் கூட 10 சவாரி எடுக்க முடிவதில்லை. எனவே, ஆட்டோ ஓட்டுனர்களும், பொது மக்களும் விரும்பும் மீட்டர் முறையை அமுல்படுத்த ஆவன செய்ய ஓட்டுனர்களையும் அதன் சங்கங்களையும் கூட்டி ஆலோசனை கலந்து முடிவு செய்ய வேண்டும் என்றும் அடிக்கடி உயரும் பெட்ரோல், எரிவாயு விலை மற்றும் விலைவாசி உயர்வுக்கேற்ப கட்டணத்தை உயர்த்துவதற்கேற்ப ஒரு கட்டண நிர்ணய முறையை உருவாக்க வேண்டுமாயும் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

இப்படிக்கு,
மணலிதாஸ்,
ஆ.ஓ.பா.ச. பொதுச் செயலாளர்,
திருச்சி.

பத்திரிகைச் செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
பு.ஜ.தொ.மு., திருச்சி.