privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகதைசோவியத் சிறுகதை: வெள்ளரி நிலத்தில் பிள்ளைப் பேறு !

சோவியத் சிறுகதை: வெள்ளரி நிலத்தில் பிள்ளைப் பேறு !

-

வெள்ளரி நிலத்தில் பிள்ளைப் பேறு

பரீஸ் கர்பாதவ்
கதாசிரியர் பரீஸ் கர்பாதவ்

வெள்ளரி நிலத்தில் சங்கடம் நேர்ந்து விட்டது. வெள்ளரி நிலம் என்பது ஆர்க்டிக் (வடதுருவக்) கடலில் எங்கோ தொலைவில் தன்னந்தனியாக இருக்கும் ஒரு தீவு. உலக வரைபடத்தில் இந்தப் பெயரைத் தேடுவது வீண் முயற்சியாகும். வரைபடத்தில் இந்தச் சிறு புள்ளிக்கு உள்ள பெயர் இன்னொலியும் கவிநயமும் கொண்டது. ஆனால் துருவப் பரப்பிலுள்ள வானொலி இயக்குநர்கள் இதை வெள்ளரி நிலம் என்றே பிடிவாதமாக அழைத்துவருகிறார்கள். அவர்கள் கருத்தை மாற்றுவது முடியாத காரியம்! இந்த வானொலி இயக்குநர்களே இப்படித்தான். ஒரே கிண்டல் பேர்வழிகள். சிறிய அறைகளுக்குள் அடைபட்டிருப்பதால் அவர்களுக்குச் சலிப்பு ஏற்பட்டிருக்கலாம்!

ஆயினும் இந்த விந்தைப் பெயருக்கும் ஒரு வரலாறு உண்டு. தீவு சமீபத்தில் தான், மிக அண்மையில் தான், கண்டுபிடிக்கப்பட்டது. தேடுதல் குழுத் தலைவன் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நிலத்தின் வரைபடத்தை விரைவாகத் தயாரித்து (பனி உடைக்கும் கப்பலைச் சுற்றிலும் விடாது படிந்த பனிக்கட்டி அவனை அவசரப்படுத்தியது), அக்கணமே இப்படி அறிக்கை அனுப்பினான்: “புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தீவு வெள்ளரிக்காய் வடிவாக இருக்கிறது”. அந்தப் பகுதிகளில் எந்த விஷயம் ஆனாலும் வானொலி இயக்குநர்கள் வாயிலாகத் தான் சொல்ல வேண்டும். ஆகவே அவர்கள் ஆர்க்டிக் தீவுக் கூட்டத்தின் இந்தப் புது பகுதிக்கு வெள்ளரி நிலம் என்று பெயர் வைத்தார்கள்.

மிகவும் தொலை வடக்கில் இருந்த இத்தீவு விரைவிலேயே அதிக முக்கியத்துவம் பெற்றது. பனிக் கட்டி மூடிய ஆர்க்டிக் பெருங்கடலின் பல இரகசியங்களை இனித் துருவி ஆராயத் தங்களால் முடியும் என்று மனநிறைவுடன் ஆய்வாளர்கள் கைகளைத் தேய்த்துக்கொண்டார்கள். தங்கள் ஆய்வுக்கு இன்னொரு நிலையம் கிடைத்த மகிழ்ச்சியில் பருவ நிலை முன்னறிவிப்பாளர்களும் இது குறித்துப் பெருமூச்சு விட்டார்கள். இளம் துருவ ஆராய்ச்சியாளர்கள் காதலியைப் பற்றிக் கனவு காண்பது போல வெள்ளரி நிலத்தையும் அதன் ஒப்பற்ற கவர்ச்சிகளையும் பற்றிக் கனவு கண்டார்கள். அங்கே சென்று அதை வெற்றி கொள்ள எத்தகு துணிகரச் செயல்களையும் புரியத் தயாராக இருந்தார்கள். “டிக்ஸன், திக்ஸீ, செல்யூஸ்க்கின் இவை பற்றி என்ன சொல்ல! அவை முழுதும் ஆராயப் பட்டு விட்டன. அங்கே போவதும் ஒன்றுதான், வீட்டில் இருப்பதும் ஒன்றுதான்” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு, “இதுவோ… இது வேடிக்கையில்லை… எழுபத்து எட்டாவது அட்சமாக்கும்…” எனக் கிளர்ச்சி பொங்கக் கிசுகிசுப்பார்கள்.

இவ்வாறாக, வெள்ளரி வடிவில் அமைந்த அத்தீவில் மக்கள் குடியேறினார்கள். கன்னி வெண்பனி மீது, கிண்ணங்கள் போன்று வளைவான கரடிகளின் பெரிய அடித் தடங்களுக்கு அருகே மாந்தர்களின் மனவுறுதியைக் காட்டும் கூர்ந்த காலடிச் சுவடுகள் தென்பட்டன. கட்டடங்கள் எழுந்தன. பனித் திடல்களில் வாழ்வு தளிர்த்தது. மக்களின் பழக்க வழக்கங்களும், களியும், கவலையும். கிளர்ச்சியும் ஏற்கெனவே நிலை பெற்று விட்டன. பள பளக்கும் செப்புக் காப்பிப் பானையில் காப்பி கொதிக்கும்; இரவு நேரத்தில் சதுரங்க ஆட்டம் மும்முரமாய் நடந்தது… ஆனாலும் சங்கடமும் வந்து சேர்ந்தது. பார்க்கப்போனால் உண்மையில் அது இன்பந்தான். ஆம், அது இன்பந்தான்!… ஆனால் விளைவு என்ன ஆகும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. விஷயம் இதுதான். ஒரு பெண் பயங்கரமாக, காட்டுக்கத்தாகக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். அவளருகே நின்ற வெளிறிய கொழுத்த ஆடவனது கரங்கள் செய்வகையறியாது நடுங்கிக் கொண்டிருந்தன. நெற்றியில் முத்துமுத்தாய் வியர்வைத் துளிகள் உருண்டோடின.

சோவியத் ஆர்க்டிக் பிரதேசங்களில் தொலை தூரத் தீவுகளில் வசிப்பவர்கள், தன்னந்தனியாக, அண்டை அயலாரைப் பற்றிய தகவல் எதுவுமின்றி வாழ்கிறார்கள் என்று நினைப்பது தவறு. மிக அண்மையில் உள்ள அயலார்களுக்கிடையே, அக்கம் பக்கத்துத் தீவுகளுக்கிடையே இருக்கும் தொலைவு ஆயிரம் கிலோமீட்டர்கள், அதுவும் எத்தகைய பிரதேசத்தில் என்பது உண்மையே! ஆயினும் வானொலி இயக்குநர்கள் இருக்கிறார்களே! தொலையிலுள்ள வெள்ளரி நிலத்தில் ஒரு பெண் பிரசவ வேதனையால் துடித்ததை ஆர்க்டிக் முழுவதிலும் பரப்பி விட்டார்கள். ஆர்க்டிக் வாசிகள் அனைவரும், நார்த்விக் சுரங்கக்காரர்கள், செல்யூஸ்க்கின் விஞ்ஞானிகள், டிக்ஸன் வானொலி இயக்குநர்கள், திக்ஸீ துறைமுகக் கொத்தர்கள், பேலிய் தீவில் வாழ்பவர்கள் ஆகிய, கடுகடுப்பும் அச்சமின்மையும் கொண்ட இம்மனிதர்கள் எல்லாரும், தாங்களே கர்ப்பிணியின் படுக்கைக்கு அருகே, இருமுவதற்குக் கூட அஞ்சியவர்களாய், குழந்தையின் பிறப்பை எதிர்நோக்கி, அதன் முதலாவது அதிகாரக் கத்தலைக் கேட்டு, தந்தையர் போன்று முறுவலிக்கக் காத்திருப்பவர்கள் போன்று, இந்தப் பிரசவத்தின் முடிவை மூச்சுக்கூட விடாமல் எதிர்பார்த்திருந்தார்கள்.

“என்ன சேதி? என்ன ஆயிற்று?” என்று காலையிலும் நண்பகலிலும் மாலையிலும் ஒருவரையொருவர் விசாரித்த வண்ணமாயிருந்தார்கள்.

கர்ப்பிணியோ கூச்சலிட்டவாறு இருந்தாள். அவளது கூக்குரல்கள் ஆர்க்டிக் பிரதேசம் முழுவதிலும் சென்று ஒலிப்பது போலத் தோன்றியது. அவளுடைய கணவன், இத்தகைய சந்தர்ப்பத்தில் எல்லா ஆண்களும் நடந்து கொள்வது போலவே, செய்வது அறியாது அவளருகே நின்று கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தான். மருத்துவரோ, ஒன்றும் செய்ய முடியாமல் பதற்றத்துடன் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தார். அவர் பேறு காலம் பார்க்கும் மருத்துவர் அல்ல. அத்துடன் குழந்தையும் கருப்பையில் குறுக்காகக் கிடந்தது – இது அசாதாரண பிரசவம்.

அன்றைய தினம் உளத் தவிப்பு நிறைந்த செய்தி ஒன்று வெள்ளரி நிலத்திலிருந்து வானொலி மூலம் ஒலி பரப்பட்டது.

“காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்! ஏதாவது செய்து தாயையும் குழந்தையையும் காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சினான் அவளுடைய கணவன்.

என்ன செய்வது? செய்தியைப் பெற்றுப் பதிவு செய்த வானொலி இயக்குநர் வேதனையுடன் முகத்தைச் சுளித்து, ரிசீவரைக் கழற்றி வைத்துவிட்டு, நிலையைத் தலைவனிடம் சொன்னான்: “என்ன செய்யலாம்? பாவம் நிறைமாத கர்ப்பிணி… குழந்தை வேறு ஆபத்தில் இருக்கிறது…”

நிலையத் தலைவனும் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளனும் அவளுக்கு எப்படி உதவலாம் என்பது பற்றி ஆலோசித்தார்கள்… மருத்துவரை விமானத்தில் ஏற்றி அனுப்பவும் வகையில்லை. நிலையத்தில் ஒரு விமானம் கூடக் கிடையாது. அத்துடன் குளிர்காலம் வேறு. வடதுருவ இரவு. பறக்கத்தான் முடியுமா? கட்சிச் செயலாளன் புருவத்தைச் சுளித்துக் கொண்டு மருத்துவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றான்.

arctic-2மருத்துவரின் பெயர் ஸெர்கேய் மாத்வேயிச். அவரைப் பற்றி என்ன சொல்வது? சாதாரணமான மருத்துவர். எதிலும் வியப்போ, மனத்தாங்கலோ, அச்சமோ அடையாத வகை ஆட்களில் ஒருவர். அவரது தோற்றமும் மிகச் சாதாரணமானது: அளவான வயிறு; அறுவை மருத்துவருக்கு இயல்பான பெரிய சிவப்புக் கரங்கள்; நல்லியல்பு தொனிக்கும் கட்டைக் குரல்; வழுக்கைத் தலையை மறைத்து வாரி விடப்பட்ட அருகிய முடி; கொம்புப் பிரேம் போட்ட கறுப்பு மூக்குக் கண்ணாடி; உடை, கைகள் எல்லாவற்றிலும் கார்பாலிக் அமிலம், மருந்துகள், மருத்துவ மனை வாடை – ஆக ஒரே வார்த்தையில் சொன்னால், மருத்துவருக்கு உரிய தோற்றம், எனவே, தங்க ஜரிகையில் நங்கூரச் சின்னம் பொறித்த கடற்படை உடுப்பு அணிந்து அவர் பொது அறையில் காணப்பட்டால், “இவர் ஏன் வெள்ளை மருத்துவ உடுப்பு அணியவில்லை?” என்று பார்ப்பவர்கள் நினைப்பதுண்டு.

அவரிடம் இருந்த ஒரே அசாதாரண இயல்பு என்னவென்றால் அவர் ஆர்க்டிக் பிரதேச மருத்துவரான போதிலும் மிகச் சாதாரணமாக இருந்தார் என்பதே. இருப்பினும் ஆர்க்டிக் மருத்துவர், ஒரு வகையில் கவிதைப் பாங்கு கொண்டவர் ஆயிற்றே. வரைபடத்தைச் சற்றே உற்றுப் பார்த்தால், வடதுருவ ஆராய்ச்சிப் பயணிகளின் நினைவுச் சின்னங்களாக வரைபடத்தில் விளங்கும் பெயர்களில் மருத்துவர்களின் பெயர்களையும் காணமுடியும்: டாக்டர் ஸ்தாரகாதொம்ஸ்க்கிய் தீவு, டாக்கர் இஸாச்சென்கோ முனை என்பன போல. டிக்ஸன் தீவில், அடக்கம் வாய்ந்த வட துருவ வீரரான உதவி மருத்துவர் விளாதீமிரவின் கல்லறையைச் சுற்றிக் காட்டுவார்கள்; அதற்கு வணக்கம் செலுத்துவோம். வ்ராங்கெல் தீவை அடைந்ததும், ஆர்க்டிக் பிரதேசத்தில் மக்களுக்குத் தீச்செயல் புரிந்து வந்தவனான ஒருவனுடன் போராடி உயிர்துறந்த வீர மருத்துவர் வுல்ப்ஸனின் சமாதியை பயணிகளே எல்லாவற்றுக்கும் முன்பு தேடிக்கண்டு அஞ்சலி செலுத்துவார்கள்.

ஆனால் ஸெர்கேய் மாத்வேயிச்சிடமோ இத்தகைய கவிதைப் பாங்கு மருந்துக்குக் கூடக் கிடையாது. அவர் சர்வ சாதாரணமான, விவகாரப் போக்குள்ள மருத்துவர். பனிப்பாளங்கள், புயல்கள், ஆடிக் குலுங்கும் கப்பல் மேல் தளம், டப்பா உணவு, கடலின் உவர் நாற்றம் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் துணிச்சலான கப்பல் மருத்துவர்கள் போல் கூட இல்லை அவர். ஒருவேளை அவர் மருத்துவ ஆராய்ச்சியாளரோ, விஞ்ஞானியோ?

அண்மைக் காலத்தில் மருத்துவ விஞ்ஞானிகள் வடதுருவப் பிரதேசங்களுக்கு விருப்பத்துடன் செல்லுகிறார்கள். உயிரியல், ஓரளவு விலங்கியல், தாவர இயல் ஆகியவற்றில் எதிலாவது ஈடுபாடு உள்ளவர்கள். இவர்களில் சிலர் இறால்களையும், விசித்திர நிலநீர் உயிர்களையும், பல்லிகளையும் சேகரித்து, ஸ்பிரிட் குப்பிகளில் இட்டு வைத்திருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள்; வேர் முதல் முடி வரை உள்ளங்கை அளவான குட்டை வில்லோ மரங்களை உலர்த்தி ஆல்பத்தில் பொருத்தி வைத்துக் கொள்வார்கள் வேறு சிலர்; இன்னும் சிலரோ, வட துருவச் சூழ்நிலையில் நோய்கள் பற்றியும், மக்களின் நடத்தை, உளப்போக்கு பற்றியும், நோய் தொற்றுவதற்குரிய வாய்ப்புக்கள் பற்றியும், துருவ இரவு, துருவப் பகல் ஆகியவை மனிதன் மீது விளைக்கும் தாக்கம் பற்றியும் ஆராய்ச்சி செய்வார்கள்…

ஸெர்கேய் மாத்வேயிச், இறால்களை ஸ்பிரிட்டில் இடவுமில்லை, பாசிக் காளான்களை உலர்த்தவும் இல்லை. தமது நாட்குறிப்பில் “மருத்துவத் தொழில் சம்பந்தமான அக்கறைக்குரிய சிறு குறிப்புக்களை”க் கூட எழுதி வைத்துக்கொள்ளவில்லை. ஒரு தரம் ஏதோ செய்ய முயன்றார், ஆனால்… நேரமின்மையால் விட்டுவிட்டார்: நோயாளிகள், கவலைகள், மருத்துவமனை. அவர் ஆர்க்டிக்கில் ஆண்டுகளைக் கழிப்பதனால் விஞ்ஞானம் புதிய கண்டுபிடிப்புகளால் அதிக வளம் அடையாது என்பது எல்லாருக்கும் தெளிவாகப் புலப்பட்டது.

Communismகாந்த இயல் அறிஞனான மோதரவ் என்ற இளைஞன் கப்பலிலேயே ஸெர்கேய் மாத்வேயிச்சைச் சந்தித்தான். அறிவியலின் பொருட்டே அத்துறையில் ஊக்கம் காட்டுபவர்களும், வட துருவ நிலையங்களில் அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு மிகுதியும் ஏற்ற வாய்ப்பு உண்டு என்று கருதுபவர்களும் ஆகியவர்களில் மோதரவும் ஒருவன். குதூகலப் புன்னகையுடன் மருத்துவரிடம் சொன்னான்:

“உங்கள் நோக்கு எனக்குப் புரிகிறது. வடதுருவத்தில் வேலை செய்கிற எங்கள் அனைவரையும் பற்றிய உங்கள் கருத்தும் எனக்குப் புரிகிறது. உங்கள் கண்களுக்கு நாங்கள் எல்லாரும் சோதனை விலங்குகள் தாம். எங்களை ஆராயப் போகிறீர்கள், அப்படித்தானே? அவசர வேலைக்கு முன்பும் பின்பும் எங்கள் நாடித் துடிப்பைக் கணக்கெடுப்பீர்கள், துருவ இரவின் போதும் பகலின் போதும் எங்கள் இருதயங்கள் எப்படி அடித்துக்கொளுகின்றன என்று கேட்பீர்கள். பின்னர் அறிவியல் ஆராய்ச்சி நூல் எழுதி வெளியிடுவீர்கள், இல்லையா? சரிதானே விலங்காகப் பயன்படத் தயாராக இருக்கிறேன்!”

ஸெர்கேய் மாத்வேயிச் அவனை மிரண்டு நோக்கினார், குழம்பினார், பின்பு இது மாதிரி ஏதாவது செய்வதற்குத் தான் திட்டமிட்டிருப்பதாகக் குழற்றினார். ஆனால் அவர் அப்போது தவித்த தவிப்பைக் கண்ட மோதரவு, ‘சோதனை விலங்கு’கள் பற்றியோ அறிவியல் ஆய்வு பற்றியோ அவரிடம் மறுபடி பேசவே இல்லை. நோயாளிகளுக்கு மருத்துவம் செய்வது, கர்ப்பிணிகளுக்குப் பிரசவம் பார்ப்பது, பல் பிடுங்குவது, மூலத்திற்கு அறுவை செய்வது ஆகியன மட்டுமே அவர் இங்கு வந்ததன் ஒரே நோக்கம் என்று தெரிந்தது.

இவற்றிற்காக அவருக்கு மருத்துவமனை தேவைப் பட்டது. மருத்துவமனை இல்லாத மருத்துவன் “கப்பல் இல்லாத கொலம்பஸ்” மாதிரி என்று அவர் சொல்வதுண்டு. அதுவும் ஏனோ தானோவென்று பெயரளவிற்கு அது இருந்தால் அவருக்குப் போதவில்லை. ஆர்க்டிக்கோ ஆர்க்டிக் இல்லையோ, நோயாளிகுத் தக்க முறையில் சிகிச்சை அவசியம் என்று கருதினார். அதனால் தான் கப்பல் கரை சேர்ந்து சாமான்கள் இறக்கப்பட்டதோ இல்லையோ மருத்துவப் பெட்டிகளை அவரே தனது முதுகில் சுமந்து சென்றார். யாராவது உதவிக்கு வந்தால், “கவனமாக, பார்த்து! உடைத்து விடாதீர்கள்” என்று கோபத்துடன் இரைந்தார்.

தானே ரம்பத்தையும் இழைப்புளியையும் கொண்டு சட்டங்கள் தயாரித்தார், தச்சர்களின் வேலையை ஓடியாடி மேல் பார்த்தார், சுவர்களுக்கு வெள்ளை எண்ணெய்ச் சாயத்தை இவரே அடித்தார். தரையில் தார்ப்பாயைத் தம் கைப்பட விரித்தார். ஆட்கள் குறைவு, வேலை நெரிந்தது. வானொலிச் செயதி நிலையம் கட்டப்பட்டது, துறைமுகத்தில் நிலக்கரிக் கிட்டங்கி நிறுவுவதற்காகத் தரை வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது. அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து நான்காம் ஆண்டு – ஆர்க்டக்கிற்கு வரலாற்று முக்கியத்துவம் ஆய்ந்த ஆண்டு. பனிக்கடலின் வெறிச்சோடிய கருங்கற்கரைகள் மீது கட்டடங்களும் துறைமுகங்களும் தொழிற் கூடங்களும் சுரங்கங்களும் அப்போதுதான் மந்திரத்தால் உண்டாக்கப்பட்டன போன்று தோன்றலாயின.

மருத்துவமனை ஒன்றும் கட்டப்பட்டது. சிறியது, ஐந்தே படுக்கைகள் கொண்டது, எனினும் முற்றிலும் போதுமானது. ஸெர்கேய் மாத்வேயிச் எந்த மாதிரி மருத்துவ மனைகளில் தலை நரைத்து வழுக்கை விழுந்து, அயோடின் மணமும் கார்பாலிக் அமில வாடையும் நிரந்தரமாக வீசும் அளவிற்கு வேலை செய்திருந்தாரோ, அந்த மாதிரியான மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் எல்லாம் இதில் இருந்தன. வார்னிஷ் பூசப் பெற்ற வெண் சுவர்கள் அம்மாதிரியே பளிச்சிட்டன, கண்ணாடி அலமாரிகளில் இருந்த நிக்கல் கருவிகள் மீதும் ஜாடிகள் மீதும் சூரிய ஒளி பட்டு மின்னியது. ஒரே துப்புரவு. ஒரே நிசப்தம். கார்பாலிக் அமிலத்தின் வாடை. நோயாளிகள் வந்தார்கள், பெரும்பாலும் பெண்களே. தொலையிலுள்ள கூட்டுறவுத் தொழிற் பண்ணைகளிலிருந்து, நாய் இழுத்த ஸ்லெட்ஜுகளில் ஏறி நூற்றுக் கணக்கான கிலோமீடர் தூரத்தைக் கடந்து, பேறு காலத்திற்கு ஒரிரு மாங்களுக்கு முன்பாகவே வந்தார்கள். பாத வெடிப்பு, மூலம், குளிரில் மரத்த விரல்கள், எலும்பு முறிவு, பல்வலி ஆகியனவற்றிற்கு மருந்துவம் செய்து கொள்ள ஆண்களும் வந்தனர். ஸெர்கேய் மாத்வேயிச் பல் மருத்துவமும் பார்த்தார், பல் துளைகளை அடைத்தார். ஊரில் பற்களைச் செவ்வைப்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லாது போனவர்கள், ஸெர்கேய் மாத்வேயிச்சிடம் பற்களைச் சரி செய்து கொண்டார்கள். ஆனால் அவர் அடிகடி சொல்வது இதுதான்:

“அடடா! இவ்வளவு மோசமாக இருக்கும் இந்தச் சொத்தைப் பல் உனக்கு எதற்காக? ஊம்? பிடுங்கிவிடுகிறேன், சரியா?”

பல் பிடுங்குவதற்கு முன்பு நோயாளிக்குத் துணிவு வருவதற்காக முப்பது மில்லி சாராயம் குடிக்கக் கொடுப்பார். இது அவருடைய வழக்கம். ஆனால் ஆட்கள் தன்னை ஏமாற்றுவதைப் பின்னர் அவர் கண்டுகொண்டார். சாராயத்தைக் குடித்துவிட்டு, பல் பிடுங்கிக்கொள்ள மறுத்து விடுவார்கள். “அதாவது, டாக்டர், பல் வலி இப்போது குறைந்துவிட்டது. அடுத்த தடவை பார்த்துக்கொள்ளலாம்” என்பார்கள். அது முதல் அவர் பல் பிடுங்கிய பிறகு சாராயம் கொடுப்பதை வழக்கப்படுத்திக் கொண்டார்.

தொழிலிலும் மனப் போக்கிலும் அறுவை மருத்துவர் ஆகையினால் அவர் மருந்து கொடுப்பதைவிட அறுவை செய்வதையே எப்போதும் அதிகம் கையாண்டு வந்தார். அவருடை நண்பர்கள் வேடிக்கையாகச் சொன்னது போல, யாரையாவது “அறுக்க” வாய்ப்பு கிடைத்தால் அவரது மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

“இதோ பார், கொஞ்சம் போல நறுக்குவோம், எல்லாம் சரியாகிவிடும். ஆ, அவ்வளவுதான்! நறுக்கிவிட்டோம். இதோடு தொலைந்தது உன் நோய்” என்பார்.

உள் நோய்களை அவர் சந்தேகக் கண்ணோடு நோக்கினார்.

“இந்தா, உள்ளுக்கு மருந்து சாப்பிடுவது என்பது வெட்டிப் பணக்காரர்கள் செய்யும் வேலை. உங்களுக்கு இந்த நோய்கள் எல்லாம் எதற்காக வரவேண்டும், வெறுங்குப்பை!” என்று ஆரம்பித்து, “இவற்றை இயற்கையின் போக்கில் விடுங்கள்… இயற்கை இருக்கிறதே, எல்லாவற்றையும் விட விவேகம் நிறைந்தது. பீடைகள் தாமே போய் விடும்… இங்கேயோ பருவநிலை அற்புதம்… உடல் நலத்துக்கு ஏற்ற பருவநிலை, இல்லையா?” என்று நோயாளிக்கு ஆறுதல் கூறுவார்.

நண்பர்களுக்கு இது நிலையான வேடிக்கை ஆகிவிட்டது. சாப்பாட்டு வேளையில் ஒருவன் டாக்டரே விளித்து, “இதோ பாருங்கள், டாக்டர், இன்று எனக்கு ஏனோ ஒரே தலைவலி. தானே சரியாகிவிடும்? ஊம்? என்று கேட்பான்.

“சரியாகிவிடும், சரியாகிவிடும்” என்று நிச்சயத்துடன் சொல்லுவார்.

இத்தகைய மிகச் சாதாரண மருத்துவராகிய ஸெர்கேய் மாத்வேயிச்சிடம் புரியாத விஷயம் ஒன்று உண்டு என்றால், அது அவர் ஆர்க்டிக்கிற்கு எதற்காக வந்தார் என்பது மட்டுமே.

அவரைப் பொருத்தவரை, ஆர்க்டிக்கை அவர் பார்க்கவே இல்லை. மருத்துவமனை, பொது அறை, ஆர்க்டிக்குக்கு வந்திருப்பவர்களின் வீடுகள் என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுற்றி வந்தார்… ஒரு முறை வேட்டைக்குப் போகத் திட்டமிட்டார், ஆனால் அது செயல்படவில்லை. தொலைவிலுள்ள வேட்டைக்காரர் கூட்டுறவுப் பண்ணைகளுக்குப் போய்வர நினைத்தார், ஆனால் மருத்துவமனைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள யாரும் இல்லை- எத்தனையோ மாதர் பிரசவத்துக்குக் காத்திருந்தார்கள் (வியப்பளிக்கும் விஷயம் என்னவென்றால் ஆர்க்டிக்கில் நிறையப் பெண்கள் குழந்தைகள் பெற ஆரம்பித்திருந்தார்கள் என்பது) ஆகவே தொலை தூரப் பண்ணைகளுக்கு உதவி மருத்துவன்தான் போய் வந்தான். ஒரே ஒரு தடவை மட்டுமே, இலையுதிர் காலத்தில், வெண் திமிங்கிலங்கள் கிளம்பும் தருவாயில், மருத்துவர் இளைஞர்களுடன் வேட்டைக்குச் சென்றார். ஆனால் அவர் செய்ததெல்லாம், அனைவருக்கும் இடைஞ்சலாயிருந்ததும், சொட்டச் சொட்ட நனைந்ததும், வலையைத் தவறவிடப் பார்த்ததும் தான். நீரில் நனைந்து ஊறிய போதிலும் மிகுந்த திருப்தியுடன் கரை திரும்பினார். திமிங்கிலத்தைத் தம் கத்தியால் அறுத்தார். (“திமிங்கிலத்திற்கு மூலநோய் இருக்கிறதா என்று பார்க்கிறார்” என்று வாலிபர்கள் சிரித்தார்கள்.) பழகிய கைத்தேர்ச்சியுடன் திமிங்கிலத்தின் உள்ளுறுப்புக்களை அறுத்து, அதன் நுரையீரலையும் வயிற்றையும் எல்லாருக்கும் காட்டினார். “இவை அனைத்தும் மனித உறுப்புக்களைப் போலவே இருக்கின்றன, பார்த்தீர்களா!” என்றார்.

ஒரு நாள் மாலை காப்பி அருந்திய பின், பொது அறையில் கதகதப்பும் வசதியும் வாய்ந்த நிலையில் காந்த இயல் ஆராய்ச்சியாளன் மோதரவ் மருத்துவரின் அருகே அமர்ந்து, “ஒன்று கேட்கிறேன், தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நீங்கள் எதற்காக ஆர்க்டிக்குக்கு வந்தீர்கள், சொல்லுங்கள்” என்றான்.

ஸெர்கேய் மாத்வேயிச் கூச்சத்துடன் கைகளை விரித்தார்.

“இதை எப்படி விவரிப்பது” என்று முணுமுணுத்தார். “எங்கும் ஆர்க்டிக்கைப் பற்றியே பேச்சாய் இருந்தது, நாமும் போவோமே என்று நினைத்தேன். நான் கிழவனாகிவிடவில்லை. என்ன சொல்லுகிறீர்கள்? நான் ஒன்றும் கிழவன் இல்லை, சரியா?” என்று இளவட்டம் போன்று மீசையை முறுக்கினார். “அப்புறம் எங்கள் மருத்துவமனைக்குப் புதிய மருத்துவர் ஒருவர் வந்து சேர்ந்தார். அப்போதுதான் வடக்கேயிருந்து திரும்பியவர். அளவிட முடியாத உற்சாகம் அவருக்கு. ஆர்வமிக்க நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற விரிவான களம் அது என்றார். ஆகவே அங்கே வேலை செய்ய என் பெயரைக் கொடுக்கக் கூடாது என்று எண்ணினேன். நான் போர்முனைக்கும் போனவன் தான்… எல்லாவற்றையும் அநுபவித்து விட்டேன்… தவிர…” இவ்வாறு கூறியபடியே, நேர்மை ததும்பும் நீல விழிகளை மற்றவன் பக்கம் திருப்பி, எளிமையுடன் தொடர்ந்தார்: “இத்துடன் பணமும் கைநிறையக் கொடுக்கிறார்கள். இரண்டு ஆண்டை இங்கே கடத்திவிட்டால் கணிசமான தொகை சேர்ந்து விடும், இல்லையா! மாஸ்கோவுக்குப் பக்கத்தில் ஒரு சின்ன வீடு வாங்குவதாக எண்ணம். அதாவது, சிறு தோட்டம், பூப்பாத்திகள், எல்லாவற்றுடனும். நாஸ்டர்ஷியம் மலர்கள் என்றால் எனக்கு உயிர். சன்னலுக்குக் கீழே ஆர்க்கிடு செடி வளர்க்கவும் எனக்கு ஆசை.”

இந்த உரையாடலுக்குப் பிறகோ, மருத்துவர் முன்னிலும் சலிப்பூட்டும் வறண்ட பேர்வழி என்று எல்லாரும் நினைக்கத் தொடங்கினார்கள்.

பெரிய சிவப்புக் கரங்களும், மேலங்கிக்குள்ளே தொப்பையும், கார்பாலிக் அமிலம், அயோடின் இவற்றின் நெடியுமாக இலகிய இந்த மனிதர் என்னதான் சுவையோ கவர்ச்சியோ அற்றவராயினும், வெள்ளரி நிலத்து மாதுக்கு வடதுருவ நிலையம் முழுவதிலும் கஷ்டப் பிரசவத்தில் உதவக் கூடிய ஒரே ஆள் அவர் தான். அவர் இதில் எப்படி உதவ முடியும் என்பதுதான் ஒருவருக்கும் விளங்கவில்லை.

கட்சிச் செயலாளன் மருத்துவமனைக்கு வந்த மருத்துவருடன் அவரது அறையில் உரையாடினான்.

“எபடியாவது உதவி செய்ய வேண்டும்” களைத்த விழிகளால் டாக்டரை நோக்கியவாறே சொன்னான்.

மருத்துவர் வியப்படைந்து, “பொறுங்கள், பொறுங்கள், ஐயா! உதவ வேண்டும் என்கிறீர்கள். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நோயாளியை இங்கே அழைத்து வாருங்கள். தாராளமாக. எங்கேயோ, ஊம்… வான வெளியில் நிகழும் பிரசவத்தில் நான் எப்படி மருத்துவம் பார்க்க முடியும்?” என்றார்.

“இருந்தாலும் நாம் உதவத்தான் வேண்டும்” என மீண்டும் வற்புறுத்தினான் கட்சிச் செயலாளன்.

“ஆக, அற்புதந்தான் போங்கள்!” என்று டாக்டர் கைகளை உயரே ஆட்டியவாறு கெக்கலித்தார். “ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள கைகள் எனககுக் கொடுங்கள்- கர்ப்பிணிவரை எட்டும்படி. அதோடு தொலைநோக்கி விழிகளும் தாருங்கள்- ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளதைப் பார்க்க வசதியாக. அப்போது நான் சேவைக்குத் தயாராயிருக்கிறேன், ஆயத்தமாயிருக்கிறேன்.”

“ரொம்ப சரி. அம்மாதிரிக் கரங்களும் கண்களும்கூடத் தங்களுக்கு அளிக்கிறோம், டாக்டர். அப்போது…”

“நீங்கள் சொல்வது விளங்கவில்லையே… எம்மாதிரிக்கைகள்? எவ்விதக் கண்கள்?”

வானொலி. கர்ப்பிணியின் நிலைமையையும், மருத்துவர்கள் சொல்வது போலக் கருப்பையில் குழந்தையின் கிடக்கையையும் பற்றி அங்கிருந்து தகவல் தெரிவிப்பார்கள். என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் இங்கிருந்து சொல்லி நடத்தி வையுங்கள்.”

ஸெர்கேய் மாத்வேயிச் எழுந்தார், மேலங்கியை அணிந்து கொண்டார், உறுதியான தோரணையில் வாயிலை நோக்கி அடி எடுத்து வைத்தார்.

“கர்ப்பிணியைப் பார்க்கப் போகலாம் வாருங்கள்” என்றார் திடீரென நின்று, “ஆனால், இதற்கு மேலங்கி எதற்காக? கிடக்கிறது, எல்லாம் ஒன்றுதான். உலகத்தில் எத்தனையோ விந்தைகள் நிகழ்கின்றன. இம்மாதிரி… ம்ம்… அஞ்சல் மூலம் பிரசவம் பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் முதல் தடவையாகக் கிடைத்திருக்கிறது… அதாவது வானொலி மூலம் பிரசவ மருத்துவம். என் சக மருத்துவர்கள் இதைக் கேட்டு எவ்வளவு வியப்பு அடைவார்கள் என்பதைக் கற்பனை செய்துகொள்கிறேன்… போகட்டும், எல்லாம் ஒன்றுதான். வாருங்கள், போகலாம்” என்றார்.

வெள்ளரி நிலத்துடன் வானொலித் தொடர்பு கிடைத்தது. “வெள்ளரி நிலத்துடன் வானொலித் தொடர்பு வெகு நேரம் நீடிக்கவிருப்பதால், பிரசவம் ஆகும் வரை மற்ற எல்லா நிலையத் தொடர்புகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன” என வானொலி இயக்குநர் அறிவித்தான்.

“நல்லது, ஆரம்பிக்கலாம்” என்று மேலங்கி பைக்குள் கைகளை நுழைத்துக்கொண்டு கூறத் தொடங்கியவர், மேலே என்ன சொல்வதென்று தயங்கினார். “இன்றைக்கு உடம்பு எப்படியிருக்கிறது உங்களுக்கு?” என்று வழக்கம் காரணமாகக் கேட்க வாயெடுத்தவர், தனக்கு எதிரே நோயாளி இல்லை என்பதை நினைவுகூர்ந்து அடக்கிக் கொண்டார். எதிரே இருந்தது வெறுமை. ஆகாயம். ஒரு விதத்தில்… வானவெளி.

­­­­­­­­­­­­­அவரது அவரது சங்கடமான சூழ்நிலை தெளிவாகப் புலப்பட்டது. தான் வேலை செய்து பழகிய சூழ்நிலை, தனக்கு இன்றியமையாத நிதானத்தை ஏற்படுத்த இல்லாததை உணர்ந்தார். கர்ப்பிணியைக் காண்பது, அவளது முனகல்களையும் முறையீடுகளையும் கேட்பது, அவளுடைய வலியைப்பற்றி அனுதாபம் தெரிவிப்பது, பேசினில் இரத்தத்தைப் பார்ப்பது, கருவை, அந்தச் சின்னஞ்சிறு, வழவழப்பான, நிர்க்கதியான பிஞ்சு மேனியைத் தம் கைகளால் தொட்டு உணர்வது அவருக்கு அவசியமாயிருந்தது.

இப்போதோ, இவற்றில் எதுவுமே இல்லை. குண்டுமாரி பொழிகையில் கலங்காத படைவீரன், மறை குழியின் பயங்கர மௌனத்தில் நடுநடுங்குவது போலவும், எந்திர இரைச்சலில் அமைதியாகத் தூங்கும் அரைவை மில்காரன், சந்தடி அடங்கியதுமே திடுக்கிட்டு விழித்துக் கொள்வது போலவும் தமது நிலைமை இருப்பதை உணர்ந்தார்.

labourஇங்கே, வானொலி நிலையத்தில், அவரது நிலை கரையில் எறியப்பட்ட வெண் திமிங்கிலம் போல இருந்தது. கிறீச்சிட்டது. வேறு சந்தடியே இல்லை. நோயாளி கிடையாது, முனகல்கள் கிடையாது, வேதனை கிடையாது.

வேதனை கிடையாதா? ஆனால் அவள் எங்கேயோ வானவெளியில் வேதனையை உணர்ந்து, உதவியை எதிர்நோக்கியிருந்தாள். மருத்துவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய நாற் புறமும் மற்ற எல்லாரும் ஆவலாகக் காத்திருந்தார்கள்.

வானொலி இயக்குநரின் பக்கம் குனிந்தார்.

“பாரு, குழந்தை எந்த வாகில் கிடக்கிறது என்று மருத்துவரிடம் கேளேன்” என்றார்.

தமது சொற்கள் சிதறும் பட்டாணிக் கடலைகள் போலப் புள்ளிகளும் கோடுகளுமாகத் தெறித்து வானில் மிதந்து செல்வதை ஆவலுடன் நோக்கினார். சில நிமிடங்களில் பதில் வந்தது.

அதைப் படித்துவிட்டு நெற்றியைச் சுருக்கிக்கொண்டார். இவ்வாறு தொடங்கியது இந்த அசாதாரணமான “அஞ்சல் மருத்துவம்.”

“ஹும். குழந்தை குறுக்காகக் கிடக்கிறதாக்கும். ஊம். கஷ்டமான பிரசவம்தான், ஆமாம்” என்று தமது எண்ணங்களை வாய்விட்டுச் சொல்லி விட்டு வானொலி இயக்குநரைப் பார்த்து, “இந்தா, என் துணை மருத்துவரிடம் கேள், பிராக்ஸ்டன்-ஹிக்ஸ் முறைப்படி குழந்தையைத் திருப்புவது அவருக்குத் தெரியுமா, அல்லது குறைந்த பட்சம் அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாரா என்று” எனக் கூறினார்.

“ஆனால் அவருக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது? இளைஞர், போதாக்குறைக்கு மருத்துவச் சிகிச்சையாளர் வேறு” என்று நினைத்துக்கொண்டார்.

எல்லா அறுவை மருத்துவர்களையும் போலவே மருத்துவச் சிகிச்சையாளர்களிடம் அவருக்கு அவநம்பிக்கை.

ஸெர்கேய் மாத்வேயிச் எதிர்பார்த்ததே போன்ற பதில் வந்தது: “கேள்விப்பட்டிருக்கிறேன், இருந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்று தயங்காமல் எனக்குச் சொல்லுங்கள்.”

“ஸ்பிரிட்டாலும் அயோடினாலும் கைகளைக் கழுவிக்கொள்ளுங்கள். விரல்களில் எல்லாம் அயோடின் பூசிக் கொள்ளுங்கள். கைகளைப் பத்து நிமிடம் தொடர்ந்தாற் போலக் கழுவிக்கொண்டிருங்கள்” என்றார் டாக்டர். ஏதோ புண்ணியமான தொண்டில் துணை செய்வது போன்ற பாவனையுடன் வானொலி இயக்குநர் அவரது சொற்களை எல்லாம், முனகல்கள் உள்பட, அஞ்சல் செய்தான்.

கைகளை முறைப்படி கழுவிக் கொண்டாகிவிட்டது என்று வெள்ளரி நில மருத்துவர் பணிவுடன் அறிக்கை செய்தார்.

“சரி” என்று திருப்தியுடன் தலை அசைத்தார் ஸெர்கேய் மாத்வேயிச். “இப்போது, கர்ப்பிணிக்கு நோயணு நீக்கம் செய்வது எப்படி என்று சொல்கிறேன்.” இவ்வாறு கூறி, விவரமான குறிப்புக்களைக் காகிதத்தில் எழுதி வானொலி இயக்குநரிடம் கொடுத்தார். தமது மூளைக்குள் ஒரு நிமிடத்துக்கு முன்வரை மறைந்திருந்த எண்ணங்கள் ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் மாய வித்தை போல அனுப்பப்படுவதை ஆவலும் வியப்பும் ததும்ப மீண்டும் கவனித்தார் ஸெர்கேய் மாத்வேயிச். வானொலி இயக்குநர் மீது அவர் உள்ளத்தில் முதன் முதலாக மரியாதை பிறந்தது.

சந்தர்ப்பத்தின் முக்கியத்துவத்தால் கிளர்ச்சியுற்ற இயக்குநர் தன் முயற்சி காரணமாக இறுக்கமடைந்து முகமெல்லாம் சிவந்து போனான். தவறு நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தால் அவன் ஒவ்வோர் எழுத்தையும் அழுத்தி அடித்தான். பதிலைக் குறித்துக் கொள்ளும் போதும் இயல்புக்கு ஏற்பக் கிறுக்கித் தள்ளாமல், சிந்தனையுடன் நிறுத்தி எழுதினான்.

“மெல்லச் சொல்லு. ஓர் எழுத்து தப்பானாலும் குழந்தையும் தாயும் ஆபத்துக்கு உள்ளாகிவிடுவார்கள்” என்று வெள்ளரி நிலத்து வானொலி இயக்குநரை எச்சரித்தான்.

“ஆயிற்றா? இப்போது உள் சோதனை தொடங்குங்கள். இடது கையை நுழையுங்கள்…” என்று சொல்லிக் கொண்டு போனார் டாக்டர்.

உறுதியான இறுதிக் கணம் நெருங்கிவிட்டது.

“கருப்பையின் வாய் போதிய அளவு திறந்திருக்கவில்லை என்றால்…” மருத்துவர் கவலையுடன் சிந்தித்தார். “நான் மட்டும் அருகே இருக்க முடிந்தால்! கண்ணால் பாராத ஒன்றுக்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது அல்லவா?”

பதிலுக்காகக் காத்திருக்கையில் அவர் ஒருபோதுமில்லாதவாறு பதற்றமடைந்தார். நிதானத்துக்கு வர சன்னல் அருகே சென்று தெருவில் பார்வையைச் செலுத்தினார். தெருவா? அங்கே ஏது தெரு? சன்னலுக்குக் கீழே வெண்பனி குவிந்திருந்தது. அதற்கு அப்பால் களஞ்சியம், விரிகுடா. இன்னும் தொலைவில் கண்ணுக்கு எட்டிய வரையில் ஒரே வெண்பனி மயம். கிட்டங்கிகளின் முகடுகள் மேலும், விரிகுடா மீதும், தூந்திர வெளியிலும் எங்கும் வெண்பனி. பசுமை படிந்த வெண்பனியும் நிலவும்.

“நெடுந் தொலைவு வந்திருக்கிறாய், அல்லவா, ஸெர்கேய் மாத்வேயிச்?” எனத் திடீரென்று எண்ணும் போதே வியப்பில் மூழ்கினார். தாம் இவ்வளவு தூரம் வந்திருப்பது பற்றிய நினைவு அவரை மலைக்க வைத்தது. ஏதோ இந்த எண்ணம் முதன் முதல் இப்போதுதான் உதித்தது போலவும், தாம் இங்கே கழித்திருப்பது இரண்டு ஆண்டுகள் அல்ல, முதல் நாள்தான் போலவும் பிரமித்தார்.

“ஸெர்கேய் மாத்வேயிச்!” என்று யாரோ தணிந்த குரலில் அழைத்தார்கள்.

சடக்கெனத் திரும்பியவர் இரண்டு மாதரைக் கண்டார். ஒருத்தி வானொலி இயக்குநரின் மனைவி, மற்றவள் புவிப்பௌதிகயியலரின் வீட்டுக்காரி.

“டாக்டர் ஐயா, என்ன சேதி?” என்று, அவர்களில் அதிகத் துணிச்சல் உள்ளவளான வானொலி இயக்குநரின் மனைவி பதற்றத்துடன் கேட்டாள்.

soviet-peopleமருத்துவருக்கு கோபம் வந்துவிட்டது. “என்ன சேதியாவது கீதியாவது? உங்கள் வீட்டுக்காரரிடம் கேளுங்கள். அதோ வானொலிப் பெட்டியருகே ஏதோ மாயம் பண்ணிக் கொண்டிருக்கிறார். என்னைவிட அதிகமாக அவருக்குத்தான் தெரியம். நானோ எதையும் கண்ணால் பார்க்கவே இல்லை… எதையுமே பார்க்கவில்லை… வெண்பனியைத் தவிர” என்றார்.

“நாங்கள் என்ன சொல்ல வந்தோம் என்றால்…” என்று சங்கோசத்துடன் இழுத்தாள் புவிப்பௌதிகயியலரின் மனைவி. “விஷயம் என்னவென்றால் எனக்கு ஒரு தோழி இருந்தாள். அவளும் இதே மாதிரித்தான் குழந்தை பெற்றாள், நிலைமையும் இது போலத்தான் இருந்தது. அந்தப் பிரசவத்தின் விவரம் எல்லாம் எனக்குத் தெரியும்… சொல்லட்டுமா? ஒருவேளை உங்ளுக்கு உதவியாயிருக்கும்!”

மருத்துவர் முகத்தைச் சுளித்தார்.

“ஏனம்மா, உங்களுக்கு என்ன வந்தது? பிரசவிப்பவள் உங்கள் தோழி அல்லவே! நீங்கள் எதற்காக இப்படி? என்றார்.

“அதற்காக இப்படியா? ஏன் இந்த மாதிரிப் பேசுகிறீர்கள்?” என்று அப்பெண் வியப்புடன் சொன்னாள்.

“இதற்குள் வானொலி இயக்குநர் வெள்ளரி நிலத்திலிருந்து வந்த பதிலைக் குறித்துக் கொண்டு வந்து கொடுத்தான். செய்தி நல்லதா, கெட்டதா என்பது அவனுக்குத் தெரியாது. மருத்துவச் சொற்கள் அவனுக்கு விளங்கவில்லை. எனினும் பதில் கெட்டது எனப் புரிந்து கொண்டவன் போல அதற்குள்ளாகவே சஞ்சலப்படலானான்.

மருத்துவர் படித்துப் பார்த்துவிட்டு முறுவலித்தார். “ஓகோ, அப்படியா? கருப்பை வாய் இரண்டரை விரற்கிடை திறந்திருக்கிறதா, பரவாயில்லை, அதற்கென்ன? பிராக்ஸ்டன்-ஹிக்ஸ் முறைப்படி குழந்தையைத் திருப்பிவிடுவோம்” என்றார்.

வானொலிப் பெட்டிக்கு அருகே வந்தார். யாரோ ஒருவன் அவர் உட்கார்வதற்காக நாற்காலியை நகர்த்தினான். உறுதியான கணம் வந்துவிட்டது என்று எல்லாரும் எப்படியோ உடன் அறிந்து கொண்டார்கள். இயக்குநரின் முகம் வெளிறியது. நிறைய ஆட்கள் குழுமியிருந்த போதிலும் அறையில் ஒரே நிசப்தம், ஆச்சரியமூட்டும் மௌனம் நிலவியது. ஆயினும் கட்சிச் செயலாளன் “உஷ்” என்று சீறினான். நம்பிக்கையும் அச்சமும் கவலையும் கொண்ட விழிகளுடன் அனைவரும் மருத்துவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர் மனத்தில் இந்த எண்ணம் பளிச்சிட்டது: “எங்கிருந்து எனக்கு இவ்வளவு துணிவு, இவ்வளவு அதிகாரம் வந்தது? இங்கே நான் பேசுவேன், அங்கே அவர் என் சொற்படி எல்லாவற்றையும் செய்வார். எல்லாம் நலமே நிறைவுறக் கூடும் ஒருவேளை. இதைச் செய்விப்பவன் நான்… நான்!…”

“வலக்கை விரல்கள் இரண்டை நுழைத்து, குழந்தையின் பாதத்தைப் பற்ற முயலுங்கள்” என உரக்கக் கூறினார்.

வானொலிப் பெட்டியன் ஒலிக் கருவி கிறீச்சிட்டது, புள்ளிகளும் கோடுகளும் சிதறின, மருத்துவரது மூளையிலோ வேறு எண்ணங்களே இல்லை. பிரசவிப்பவளை அவர் தமது கண்ணெதிரே கண்டார். இதோ, அவர்தாம் விரல்களை நுழைக்கிறார். பிரசவிப்பவள் ஓலமிடுவதைக் கேட்கிறார். குழந்தையின் காலை, செயலற்ற காலைத் தொட்டு உணர்கிறார்…

“உன்னிப்பாய்க் கவனியுங்கள்!” என்று மருத்துவர் கத்தியதைப் பணிவுடன் அஞ்சல் செய்தான் வானொலி இயக்குநர். “கையைக் கால் என்று தவறாக நினைத்து விடாதீர்கள். குதிகாலை நெருடிக் கண்டுகொள்ளுங்கள். குதிகாலை, தெரிந்ததா? நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் குழந்தையின் கையைப் பற்றி இழுத்து விடப் போகிறீர்கள்… அம்மாதிரி நடப்பது உண்டு…” தொடர்ந்தார் மருத்துவர்.

வெள்ளரி நிலத்திலும் மக்கள் வானொலி இயக்குநரைச் சுற்றிக் கவலையுடன் குழுமியிருந்தார்கள். பிரசவிப்பவளின் கணவன், உடல் வியர்த்து வடிய, அலங்கோலமான ஆடைகளுடன் வானொலிப் பெட்டிக்கும் மனைவியின் படுக்கைக்கும் இடையே போய்வந்தபடி இருந்தான். வானொலி மூலம் வந்த உத்தரவுகளை மருத்துவரிடம் கொடுப்பது அவருடைய பதிலை வாங்கிக்கொண்டு, ஏதேனும் சொல்ல விட்டு விடவோ, தவறு செய்து விடவோ கூடாது என்பதற்காக அதை வாய்க்குள்ளாகப் படித்தவாறு வானொலிப் பெட்டியருகே திரும்பி ஓடுவதுமாக இருந்தான்.

மருத்துவர் பதற்றமடைந்திருந்தார் எனினும் ஸெர்கேய் மாத்வேயிச்சின் ஆதரவு அவருக்குத் தெம்பு அளித்தது. பிரசவிப்பவளின் கண்ணீரும் வேதனையும் பொங்கும் விழிகள் தம்மையே உற்று நோக்குவதை அவர் கண்டார்.

வேலை செய்தவாறே அவர் முணுமுணுத்தார்:

“ஒன்றுமில்லை, கவலைப்படாதீர்கள். ஸெர்கேய் மாத்வேயிச்சும் நானும் உங்களுக்கு ஒத்தாசை செய்கிறோம்… கவலைப்படாதீர்கள்… இதோ குதிகால்… பட்டுப் போல…”

“காலைப் பற்றிக் கொண்டு விட்டேன்” என்ற செய்தியைப் படித்தார் ஸெர்கேய் மாத்வேயிச்.

“ஆகா! காலைப் பற்றிக்கொண்டு விட்டான். அருமை” என்று உரக்கக் கூறினார்.

மகிழ்ச்சி நிறைந்த, அடங்கிய முணுமுணுப்பு அறையில் தவழ்ந்தது: “காலைப் பிடித்துவிட்டார். காலைப் பிடித்துவிட்டார்” என்று எல்லாரும் அசைந்தார்கள், முறுவலித்தார்கள், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக் கூறத் தயாராகிவிட்டார்கள். ஆனால் ஸெர்கேய் மாத்வேயிச்சின் முகம் மறுபடியும் உர்ரென்று ஆகிவிடவே அனைவரும் மௌனமானார்கள்.

“நல்லது, இப்போது பாதத்தைப் பற்றியபடியே குழந்தையைத் திருப்புங்கள். மற்றக் கையால்…” என்று மருத்துவர் உத்தரவிடத் தொடங்கினார்.

தொலைவு பற்றிய நினைவே அவருக்கு இல்லை. பிரசவிப்பவளின் படுக்கையருகே நின்றவாறு உதவி மருத்துவருக்குச் சுருக்கமாக உத்தரவிடுவது போல அவருக்குத் தோன்றியது. “அவன் கெட்டிக்காரன், கெட்டிக்காரன்! மருத்துவச் சிகிச்சையாளன்தான் என்றாலும் பிரமாதமானவன். அருமை!” என்று உதவி மருத்துவரைப் பற்றி நினைத்துக் கொண்டார். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கை அவர் உள்ளத்தில் வரவர அதிகரித்தது. முழு வெற்றி கிடைக்கும் என்ற உறுதி முன்னமேயே தமக்கு இருந்தது என இப்போது அவருக்குப் பட்டது. அதாவது வேலையில் நிதானம் அவருக்கு முடிவில் வந்து விட்டது. மறுபடியும் வழக்கமான சூழ்நிலையில் இருந்தார்.

யுகம் போலத் தோன்றிய கணங்கள் கழிந்தன. ஸெர்கேய் மாத்வேயிச் முதல் செய்தியை அனுப்பி ஒரு மணி ஆகிவிட்டது.

“எல்லாவற்றையும் யோசித்துத் திட்டம் செய்து விட்டேனா? எதிர்பாராதது ஏதேனும் இப்போது நிகழக்கூடுமோ? இந்த ஆள் ஈடு கொடுப்பானா? ஏன்தான் நான் அங்கே இருக்க முடியாமல் போயிற்று? அவனை ஏதாவது கேட்க மறந்துவிட்டேனோ?”

ஒலி பெருக்கியிலிருந்து இக்கேள்விகளுக்குப் பதிலை நேராகக் கேட்க முடியும் போல அதையே நோக்கினார். அவருக்குக் கேட்டவையோ, புள்ளிகள், கோடுகள், புள்ளிகள், கோடுகள்… அவ்வளவுதாம். அவையோ விளங்காப் புதிர்கள்.

இயக்குநரின் தோளுக்கு மேலாகக் குனிந்து, அவன் எழுதும் போதே படித்தார்: “பத்திரமாகத் திருப்பி விட்டேன்”.

“பத்திரமாக! “என்று அடக்கமாட்டாமல் கூவினார் இயக்குநர்.

“பத்திரமாக, பத்திரமாக!” என்று உயிர்ப்புற்று நிமிர்ந்தனர் அறையிலிருந்தவர்கள் எல்லாரும். “டாக்டர்! ஸெர்கேய் மாத்வேயிச்! அன்பார்ந்த டாக்டர்!”

“குழந்தையின் இதயத் துடிப்பைக் கவனியுங்கள்!” என்று சீறினார் மருத்துவர்.

வானொலி மூலம் வந்த பதிலைக் கேட்டுக் கிளர்ச்சியுற்றதற்காக, முதலாண்டு மாணவன் போல, முதல் அறுவையின் போது துணை மருத்துவன் போல நடந்து கொண்டதற்காக அவருக்குத் தன் மீதே கோபமுண்டாயிற்று.

“வெட்கம், வெட்கம், டாக்டர்! அவமானம்!”

“குழந்தையின் இதயத் துடிப்பைக் கவனியுங்கள்!” என்று இன்னொரு முறை கத்தினார். இயக்குநர் அச்சொற்களை அவசரத்துடன் அஞ்சல் செய்தான்.

baby“பிரசவம் இன்னும் நடந்தாகவில்லை. ஆமாம், அதற்குள் நடந்து விடாது” என்று பொதுவாக அறையிலிருந்தவர்களை நோக்கிக் கடிந்துகொள்ளும் தோரணையில் கூறினார் மருத்துவர். மீண்டும் அறையில் மௌனம் குடிகொண்டது. “அதற்குள் நடந்து விடாது” என்று மறுமுறை தணிந்த குரலில் முணுமுணுத்துவிட்டு, ஒலி பெருக்கியை உறுத்துப் பார்க்கலானார்.

திடீரென அவர் உள்ளத்தில் ஓர் ஆசை, அடக்கமுடியாத ஆசை எழுந்தது. குழந்தை உயிரோடு பிறக்க வேண்டும் என்ற ஆசை. உயிரோடு, அதுவும் ஆணாகப் பிறக்க வேண்டும். சுருட்டை மயிருடன்… தானே குழந்தையின் தகப்பன் போன்று அதை விழைத்தார். தாய்க்கு இனி ஆபத்து இல்லை. ஆனால் குழந்தை, குழந்தை…

“இதயத் துடிப்பு துலக்கமாக, தெளிவாகக் கேட்கிறது” என்ற பதிலைப் பிடித்தார் இயக்குநர்.

ஆனால் மருத்துவர் கேட்டது இயக்குநரின் சொற்களை அல்ல, இன்னும் தாயின் கருப்பையிலிருந்த குழந்தையின் இதயத் துடிப்பையே. இன்னும் உலகில் உதிக்காத மானிடனின் இதயத் துடிப்பு அது. ஆனால் அவன் இதோ பிறந்து விடுவான், வெற்றி முழக்கம் செய்து தனது உரிமைகளை வலியுறுத்துவான். அவன் இதயம் எப்படிப் பட்டதாயிருக்கும்? தான் உயிருடன் பிறந்ததன் பொருட்டு தாய்நாட்டிற்கு – வானொலி இயக்குநர்கள் அனைவருக்கும், இதோ சுங்கான் புகைத்துக் கொண்டிருக்கும் கட்சிச் செயலாளனுக்கும், மருத்துவச் சிகிச்சையாளனுக்கும் (அவன் பாராட்டுக்குரியவன், கெட்டிக்காரன்!), ஸெர்கேய் மாத்வேயிச்சுக்கும் கடமைப்பட்டுள்ள இந்த மனிதனின் இதயம் எத்தகையதாயிருக்கும்? அவர் வாய்விட்டுச் சிரித்தார். அதற்கு முன் ஒருபோதும் சிரிக்காத விதத்தில் நகைத்தார். அவரது நகைப்பில் வெற்றியோ, கர்வமோ, திருப்தியோ இல்லை. அவருக்கே இன்னும் விளங்காத ஏதோ ஒன்றுதான் அதில் இருந்தது.

கர்ப்பிணிக்கு வலியெடுக்கத் தொடங்கியது. வெள்ளரி நிலத்திலிருந்து செய்திக்கு மேல் செய்தியாக மளமளவென்று வரத் தொடங்கின. பிரசவிப்பவளின் நிலைமை பற்றியும் வலிகளுக்கு நடுவிலுள்ள இடைநேரம் பற்றியும் அங்குள்ள மருத்துவர் சுருக்கமான அறிக்கைகள் விடுத்துக்கொண்டிருந்தார். அவளது கணவனோ, “பயங்கர வேதனைப்படுகிறாள்… மகா கோரமாகக் கூச்சலிடுகிறாள்… என்ன செய்வது? என்ன செய்வது, டாக்டர்? ஐயோ, என்ன வேதனைப்படுகிறாள், பாவம்! ஏதாவது செய்யுங்கள். இந்தக் கதறலை என்னால் பொறுக்க முடியவில்லை!” என்று தானாகவே சேர்த்துக் கூறினான்.

பிரசவிப்பவளின் கோரக் கூச்சல் இங்கே, ஒலிபெருக்கி மூலம் கேட்பது போலப் பிரமை உண்டாயிற்று. கட்சிச் செயலாளன் சுங்கானை வலிவாகக் கடிப்பதையும் அவன் முகம் சாம்பலாக வெளுத்துவிட்டதையும் ஸெர்கேய் மாத்வேயிச் கண்டார்.

“நீங்கள் என்ன இப்படி? ஏன், ஐயா, உங்களுக்கு என்ன? உங்கள் மனைவி பிரசவிக்கவில்லையே, ஊம்?” என்றார்.

கட்சிச் செயலாளன் சோர்வுடன் முறுவலித்து, “உண்மைதான், அவள் என் மனைவி இல்லை. ஆனால் தாயும் சேயும், எப்படி உங்களுக்குச் சொல்வது, நம்மவர்கள் அல்லவர்?” என விடையளித்தான்.

தனது முட்டாள்தனமான கேள்விக்கும் கட்சிச் செயலாளனின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளத் தவறியதோடு அவன் மனத்தைப் புண்படுத்தி விட்டதற்கும் ஸெர்கேய் மாத்வேயிச் வெட்கமுற்றுத் தம்மையே நொந்து கொண்டார். ஆனால் இதைப் பற்றிச் சிந்திக்கவே இப்போது நேரமில்லை.

“குழந்தையின் இதயத் துடிப்பைக் கவனியுங்கள்!”

…மூன்று மணி நேரம் கழிந்துவிட்டது. வானொலிப் பெட்டியின் அருகே அவர் உட்கார்ந்தது மூன்று மணிக்கு முன்பு. இப்போது ஒருபோதுமில்லாத களைப்பும், உரலில் இடிக்கப்பட்டது போன்ற தளர்வும் அவரைக் கவ்விக் கொண்டது. சீக்கிரத்தில், சீக்கிரத்தில் முடியுமா இதெல்லாம், வானொலி மூலம் நடக்கும் இந்த அசாதாரணப் பிரசவம்?

“பையன்! பையன்! ஆமாம். இதோ! பையன்!” என்று வானொலி இயக்குநர் மகிழ்ச்சியுடன் கூவியது திடீரென அவர் காதில் பட்டது. ஆப்பரேட்டர் வானொலிச் செய்தியை ஸெர்கேய் மாத்வேயிச்சிடம் நீட்ட அவர் அதை உரக்கப் படித்தார்:

“டாக்டர், தோழர்களே, நண்பர்களே! எனக்கு ஆண் மகவு பிறந்திருக்கிறது, மகன், பையன். நன்றி, நீங்கள் செய்த எல்லாவற்றுக்காகவும் உங்களுக்கு நன்றி. ஸெர்கேய் மாத்வேயிச், நன்றி. நீங்கள் அருமையான மனிதர். உங்களுக்கு நன்றி!”

எல்லாரும் மருத்துவரின் கையைப் பற்றிக் குலுக்க விரும்பினார்கள். உளமார்ந்த, நட்பு ததும்பும், உணர்ச்சி பொங்கும் கைகுலுக்கல்கள். எல்லாரும் அவரை வாழ்த்தினார்கள், புகழ்ந்தார்கள், அவருக்கு நன்றி கூறினார்கள். கட்சிச் செயலாளன் நீண்ட நேரம் அவர் கையை ஆர்வத்துடன் குலுக்கி, “ஆகா, ஸெர்கேய் மாத்வேயிச்! நீங்கள் உண்மையான போல்ஷெவிக்கைப் போலச் செயல்பட்டீர்கள்!” என மீண்டும் மீண்டும் கூறினான்.

மருத்துவரோ, மலைப்புடன் திடீரென ஒரேயடியாகச் செயலிழந்து உட்கார்ந்திருந்தார். எல்லாரையும் ஒன்றும் புரியாமல் நோக்கினார். செய்தியைப் படித்தார், ஆனால் விளங்கிக் கொள்ளவில்லை. ஆட்கள் வாழ்த்துவதைக் கேட்டாரே தவிர அவர்கள் சொல்லுவது அவருக்குப் பிடிபட வில்லை. அவர் மூளை குழம்பியது. அறுவை மருத்துவர் தனது நிதானத்தை இழந்துவிட்டார்.

தமது வாழ்வு முழுவதும், தாமும், தமது தொழிலும், மாணவராயிருக்கையில் தாம் கண்ட கனவுகளும், தாம் செய்தவை, செய்பவை, செய்யக் கூடியவை அனைத்துமே திடீரென அவருக்குப் புதிய, எதிர்பாராத ஒளியில் தென்பட்டன.

அமைதி நிறைந்த முதுமைப் பருவத்தைப் பற்றி, சிறு வீடு, நாஸ்டர்ஷியம் பூப்பாத்திகள், சன்னலுக்குக் கீழே ஆர்க்கிட் செடிகள், இவை பற்றி நேற்றுக் கனவு கண்டது அவர் தானா?

– பரீஸ் கர்பாதவ்

ராதுகா பதிப்பகம் வெளியிட்ட ருஷ்ய அமர இலக்கிய வரிசை – சோவியத் சிறுகதைகள் – 4 என்று நூலிலிருந்து

  1. //தமது வாழ்வு முழுவதும், தாமும், தமது தொழிலும், மாணவராயிருக்கையில் தாம் கண்ட கனவுகளும், தாம் செய்தவை, செய்பவை, செய்யக் கூடியவை அனைத்துமே திடீரென அவருக்குப் புதிய, எதிர்பாராத ஒளியில் தென்பட்டன.

    அமைதி நிறைந்த முதுமைப் பருவத்தைப் பற்றி, சிறு வீடு, நாஸ்டர்ஷியம் பூப்பாத்திகள், சன்னலுக்குக் கீழே ஆர்க்கிட் செடிகள், இவை பற்றி நேற்றுக் கனவு கண்டது அவர் தானா?//

    இந்த இரண்டு வரிகள் தான் சுயநலம் நிரம்பிய இந்த உலகத்தில் கடமையை செய்ய நமக்கு ஒரு புரிதலை கொடுக்கின்றன.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க