privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்மீண்டும் எரியக் காத்திருக்கிறது கோவை !

மீண்டும் எரியக் காத்திருக்கிறது கோவை !

-

ண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒன்றும் புதிதில்லை தான். ஆனால் சமீபத்தில் கோவையில் கண்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் ஒரு வித்தியாசத்தை உணர முடிந்தது. சேலத்தில் செத்துப் போன ஆடிட்டர் ரமேசுக்கு அடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் “இந்து மக்கள் மக்கள் கட்சி மற்றும் ஊர் பொதுமக்கள்” சார்பாக அஞ்சலி செலுத்தப்படுவதாக அச்சிடப்பட்டிருந்தது. புறநகர்ப் பகுதிகளில் ‘கோவைபுதூர் / சின்னியம்பாளையம் / நரசிம்மநாய்க்கன் பாளையம்” என்று அந்தந்த ஊரின் பெயர்களை அச்சிட்டிருந்ததைக் காண முடிந்தது.

கலவரம் - ஆர்எஸ்எஸ்
கலவரத்தைத் தூண்டி விடும் ஆர்எஸ்எஸ் குண்டர்கள்.

கோவை ப்ரிக்காலில் நண்பர் ஒருவரைப் பார்த்து வரச் சென்றிருந்த போது அதே போன்ற கண்ணீர் அஞ்சலிப் போஸ்டர்கள் பெரியநாய்க்கன் பாளையத்திலும் ஒட்டப்பட்டிருப்பதைக் காண நேர்ந்தது.

ப்ரிக்கால் கேட்டிலிருந்து பேருந்து நிறுத்தம் வரும் வழியில் ஆங்காங்கே மோடி, அத்வானி , பாரதமாதா போன்ற பாரதிய ஜனதா தலைவர்களின் படங்களைக் காண முடிந்தது. தேனீருக்காக ஒரு கடையில் நின்ற போது கேட்டோம்.

“அண்ணா, இந்த ஆர்.டி.ஓ ஆபீஸ்ல புரோக்கரா இருந்தாப்லயே ரமேசு, அவரு தானே இங்கே பி.ஜே.பி செயலாளரு?” டீக்கடைக்காரரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தேன். எப்படியும் ஊருக்கு நாலைந்து ரமேசும் சுரேசும் இருந்தாக வேண்டும் தானே?

“ராமேசா… அப்பிடி யாருமே இல்லீங்களே. பிஜேபிக்கு இங்கெ யார் தலைவருன்னே தெரிலீங்க. போஸ்டர் மட்டும் ஒட்டிக்கிறாங்க” பதில் சொல்லி விட்டு ‘நீ யார்’ என்பது போலப் பார்த்தார்.

“நமக்கு பழனி பக்கம்ங்க. அப்பப்ப, கோயமுத்தூருக்கு வருவனுங்க. முன்னாடியெல்லா ரமேசு பேர்ல தான் போஸ்டர் போடுவாங்க, இப்ப ஊர் மக்கள்னு போட்ருக்காங்களேன்னு கேட்டனுங்க”

”ஓஹோ… இது சம்பத்து கட்சிக் காரங்க போட்ட போஸ்டருங்க” சம்பத்து கட்சியெனப்பட்டது இந்து மக்கள் கட்சி “இந்த _____ (முசுலீம்) பசங்க சும்மாவே இருக்க மாட்டீங்கறாங்க பாத்தீங்களா.. எல்லா ஊர்லயும் பிஜேபி காரங்கள கொன்னுட்டே இருக்காங்களாமா?” உங்க ஊர் நிலவரம் என்னவென்பதைப் போல பார்த்தார்.

“இன்னும் போலீசு வெசாரிச்சே முடிக்கலீங்க. அதுக்குள்ளாற இன்னாருன்னு எப்படீங்க சொல்றது? ஏற்கனவே இவிங்க கட்சிக்காரங்க காசு மேட்டருக்கும் லேடீஸ் மேட்டருக்கும் தான் அடிச்சிட்டு செத்துப் போயிருக்காங்க. இப்பவே அவசரப்பட்டு பாய்ங்க மேல பழியப் போடக் கூடாதில்லீங்க?” எனது பதில் அவரைத் தவறான இடத்தில் சீண்டியிருக்க வேண்டும். நேரடியான பதிலைத் தவிர்த்து விட்டு சுற்றி வளைக்கத் துவங்கினார்,

”அதில்லீங்க.. இந்த ____ (முசுலீம்) பசங்க பாத்தீங்கன்னா நம்மள மாதிரி இல்லீங்க; அவிங்களுக்குள்ளாற ஒன்னா சேந்துக்குவாங்க. அடிதடின்னா துணிஞ்சி நிக்கறாங்க, போலீசு கேசுன்னு ஒரு பயமும் இல்லீங்க. ஒருத்தன் பிரச்சினைன்னு உள்ள போனா மத்தவிங்க அந்த குடும்பத்தையே பாத்துக்கறாங்க. இப்ப கோயமுத்தூர்ல திரும்பவும் ஆட்டம் போட்ட ஆரம்பிச்சிட்டாங்க. கொஞ்ச நாளைக்கு மின்ன ஆத்துப்பாலத்துல ஒரு பிரச்சினை நடந்தது கேள்விப்பட்டிங்களா?”

”இல்லீங்களே”

“அதாவதுங்க, நம்ம கெம்பட்டிக்காலனி பையன் ஒருத்தன் வண்டில குனியமுத்தூருக்கு போயிட்டிருந்திருக்கானுங்க. செக்போஸ்ட்டு கிட்டெ பாலக்காட்டு கார் ஒன்னு மேல லேசா ஒரசிருக்கானுங்க. காருக்காரன் மலையாளி பாய்ங்களாமா. இவிங்க ரண்டு பேரும் என்ன ஏதுன்னு பேசிட்டு இருக்கறதுக்குள்ளார கரும்புக்கட பக்கத்தாப்டி இருந்து ஒரு அம்பது பாய்ங்க வந்திருக்காங்க. பாலக்காட்டுக்காரன் தாடி வச்சிருக்கங்காட்டியும் அவிங்காளுன்னு தெரிஞ்சிக்கிட்டாங்களாமா. ஒடனே இந்தப் பையன் கிட்ட பஞ்சாயத்து பேச வந்திருக்காங்க. பேச்சு முத்தி இவன் _______நாயிங்களான்னு திட்டிருக்கான். ஒடனே சுத்தி நின்னு அடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. அந்தப் பையன் ஓடிப் போயி போலீசு பீட்டுக்குள்ளாற ஒளிஞ்சிருக்கானுங்க. வெளிய ___ (முசுலீம்) ஒன்னாச் சேந்து அந்தப் பய்யனோட புது வண்டிய போட்டு அடிச்சி நொறுக்கிருக்கானுக. அப்பறம் கெம்பட்டிக்காலனிக்கு போன் பண்ணவும் இந்து மக்கள் கச்சிக்காரங்க பத்தம்பது பேரு கெளம்பி வந்து பஞ்சாயத்துப் பேசி அந்தப் பையன காப்பாத்தி கூட்டிட்டு போயிருக்காங்க” எனது பதிலை எதிர்பார்த்தார்.

”சரிங்க.. இது ஏதோ வாய்த்தகராறுங்க. இவனெதுக்கு நாயி பேயின்னு வாய் உடோனும்? அவிங்க அத்தன பேரு இருந்துட்டு அவங்க எட்த்துலேயே பேச்சு வாங்கிட்டு சும்மாப் போவாங்களா?”

”அதுக்கு சொல்லலீங்க தம்பீ… (முசுலீம்) பசங்க எப்படி ஒன்னு கூடிக்கறாங்க பாத்தீங்களா?. நம்மாளுக இந்த மாறி ஒத்துமயா இருக்க மாட்டீங்கறாங்களே?”

சுற்றிச் சுற்றி இப்படியே பேசிக் கொண்டிருந்தார். ஒருவழியாக அவருக்குப் புரிய வைப்பதற்குள் போதும் போதுமென்றானது. கடைசியாக கேட்டேன்,

“இத்தன சொல்றீங்களே.. அடுத்த எலெக்சனுக்கு தாமரைக்காண்ணா ஓட்டுப் போடப் போறீங்க?”

”தம்பி, நமக்கு இப்ப அம்பது வயசாச்சுங்க. இத்தினி வருசமா ரெட்டெலைக்குத் தான் ஓட்டு குத்தி இருக்கனுங்க. பளக்கத்த மாத்த முடியாதில்லீங்களா?

கிளம்பினேன். கோவையில் பலரிடமும் பேசியதில் இது போன்ற எண்ணற்ற கதைகளைக் கேட்க முடிந்தது. எங்கோ நடந்த அல்லது நடந்தேயிராத சம்பவங்களை அரைகுறையாக கேட்டு அதற்கு கண் காது மூக்கு வைத்து விரித்து விரித்துப் பேசினர்.

”சுந்தராபுரத்துல ஒரு பிஜேபிகாரனைக் கொன்னு குறிச்சி குளத்துக்குள்ளார பொணத்த வீசீட்டாங்களாம்”

“செலுவபுரத்துல பூட்டி வச்சிருந்த நம்மாளுங்க கடைக்குள்ளே ராத்திரி பெட்ரோலை ஊத்தி எரிச்சிட்டாங்களாம்”

“__(முசுலீம்)களுக்கு எங்கிருந்தோ பணம் வந்துட்டே இருக்காம்”

இது போன்ற கதைகள் புதிதல்ல; சொல்லப் போனால் இந்த உரையாடல் கோவையின் பழைய நினைவுகளை மீட்டும் ஒன்றென சொல்லலாம்.. 96-லிருந்து 2000 வரை கோவை இப்படித்தான் இருந்தது. 98-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பையும் அதற்கு முந்தைய கலவரங்களையும் பார்த்தவர்கள் இப்போதைய கோவையை நினைவு கூரலாம்.

96-ம் ஆண்டு இறுதியிலிருந்தே கோவையின் வீழ்ச்சி மெல்ல மெல்லத் துவங்கி விட்டது. பெரும்பான்மையானோருக்கு வேலை கொடுத்து வந்த தங்கப் பட்டறைகளும், பஞ்சு மில்களும் கொஞ்சம் கொஞ்சமாக நசிவடையத் துவங்கியிருந்தன. தங்க இறக்குமதியின் மீதிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது மற்றும் சங்கிலித் தொடர் நகை மாளிகைகளின் வரவு போன்றவை தங்க நகைத் தொழிலை பாதிக்கத் துவங்கியிருந்த காலம் அது. உள்ளூர் அளவில் சுயேச்சைத் தன்மையோடு இயங்கி வந்த பட்டறைகள் மூடத் துவங்கியிருந்தன. எஞ்சிய பட்டறைகள் பீஸ் ரேட்டுக்கு (குறைவான கூலிக்கு) பெரிய கடைகளுக்கு நகைகள் செய்து கொடுக்கத் துவங்கியிருந்தன. ஏறக்குறைய அதே காலத்தில் சீனப் பஞ்சின் வருகை கோவை மில்களை பாதிக்கத் துவங்கியிருந்தன.

தொழில் வாய்ப்புகள் குறுகிப் போனது வியாபாரிகளிடையே கடுமையான கழுத்தறுப்புப் போட்டியைத் தோற்றுவித்திருந்தது. நகரில் மார்வாடிகளுக்கும் முசுலீம் வியாபாரிகளுக்கும் போட்டி மிகவும் இறுக்கமடைந்திருந்த அதே காலகட்டத்தில் தான் ஓட்டுப் பொறுக்க என்னத்தையும் செய்யத் தயார் என்று இந்துத்துவ கும்பல் களமிறங்கியிருந்தது. இந்துத்துவ கும்பலுக்கு இயல்பாகவே மார்வாடி வியாபாரிகளின் ஆதரவு கிடைத்தது. மார்வாடிகளின் ஆதரவில் இந்துத்துவ பயங்கரவாத இயக்கங்கள் விறுவிறுப்பாக செயல்பட்ட காலம் அது.  அந்தக் காலகட்டத்தில் தான் இசுலாமிய வெறுப்புக் கிசுகிசுப் பிரச்சாரத்தை இந்துத்துவ கும்பல் தீவிரமாக முன்னெடுத்து வந்தது.

“கோட்டைமேட்டில் பாகிஸ்தான் கொடியை ஏற்றுகிறார்கள்”

”பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜெயித்ததை கொண்டாடுவதற்காக கோட்டைமேடு முசுலீம்கள் மணிக்கூண்டு பஸ்டாண்டில் எல்லோருக்கும் மிட்டாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்”

“கோட்டைமேட்டுக்குள் முசுலீம் அல்லாதவர்கள் நுழையவே முடியாதாம்”

”இந்துக்களை ஆத்திரமூட்டுவதற்காகவே முசுலீம்கள் தங்கள் முகங்களை எதிர் கடிகாரச் சுற்றில் கழுவுவார்கள்”

“இந்துக் கோயிலைப் பார்த்தால் கீழே துப்பி வைத்து விட்டுப் போக வேண்டும் என்று குரானில் எழுதிருக்கிறதாம்”

மேலே உள்ளதெல்லாம் சில உதாரணங்கள் மட்டும் தான். இது போன்ற எண்ணற்ற கட்டுக்கதைகள் அன்று புழக்கத்தில் இருந்தன. வேறு ஒருவர் சொல்லக் கேட்பவர், தன் பங்குக்கு சில கற்பனைகளை சேர்த்து அடுத்தவரிடம் சொல்வார். ஒரு கதை ஏழெட்டு சுற்று வந்தபின் அந்தக் கதையில் வரும் முசுலீம் ஒரு மாபெரும் டைனோசராக உருமாறியிருப்பார். இந்தப் பரப்புரைகள் இறுதியாக 97-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் காவலர் செல்வராஜ் கொலையைத் தொடர்ந்த கலவரத்தில் வந்து முடிந்தது. அந்தக் கலவரத்தில் 17 முசுலீம்கள் கொல்லப்பட்டதோடு கோவை நகரில் முசுலீம் வர்த்தகர்களின் அடித்தளம் முற்றாக அடித்து நொறுக்கப்பட்டது.

இந்து முன்னணி இயக்கத்தின் மூலம் லும்பன்களையும் கிரிமினல்களையும் அணிதிரட்டி வைத்திருந்த இந்துத்துவ கும்பல், காவல்துறையின் நேரடியான ஆதரவோடு இசுலாமிய மக்களுக்கு எதிரான கலவரங்களை கட்டவிழ்த்து விட்டனர். செல்வராஜ் கொலையைத் தொடர்ந்த இரண்டு நாட்கள் கோவையில் நடந்த கொள்ளைச் சம்பவங்களைப் பட்டியலிட்டு மாளாது. ஒப்பனக்கார வீதியில் ஜிம்சன் கடை உடைக்கப்பட்டு கடிகாரங்கள் பட்டப்பகலில் கொள்ளையிடப்பட்டது; கனி ரேடியோஸ் உடைக்கப்பட்டு மின்னணுப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டது; ஷோபா துணிக்கடை முற்றிலுமாக எரித்து தரைமட்டமாக்கப்பட்டது. ராஜவீதி, வைசியால் வீதி குறும்பர் சந்து போன்ற பகுதிகளில் இருந்த முசுலீம் வர்த்தகர்களின் கடைகள் சூறையாடப்பட்டன.

97 நவம்பர் கலவரத்துக்கு எதிர்வினையாக 98 பிப்ரவரியில் அல் உமா நிகழ்த்திய குண்டுவெடிப்பு கோவையின் பொருளாதார இயக்கத்தை சுமார் ஒரு வார காலத்துக்கு உறைய வைத்தது. அல் உமாவைத் தவிர்த்து ஏராளமான, நூற்றுக்கணக்கான முசுலீம் அப்பாவிகள் பல ஆண்டுகளாய் சிறை வைக்கப்பட்டனர். இந்தக் கலவரங்களின் பாதிப்பிலிருந்து இன்று வரை அந்த நகரம் முழுமையாக மீண்டெழவில்லை. தொண்ணூறுகளின் இறுதியில் இசுலாமிய வெறுப்பை முன் வைத்து ஓரளவு செல்வாக்கையும் இரண்டு எம்.பி தேர்தல் வெற்றியையும் சம்பாதித்திருந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் வெகுசீக்கிரத்திலேயே அம்பலப்பட்டு அதே கோவை மக்களால் குப்பையில் தூக்கி வீசியெறிப்பட்டனர். இந்துத்துவ இயக்கங்களும் துண்டுத் துண்டாக சிதறிப் போயின.

தற்போது ஏறக்குறைய 96-ம் ஆண்டில் நடந்ததை ஒத்த நச்சுப் பிரச்சாரங்களை இந்து பயங்கரவாதிகள் கட்டவிழ்த்து விட்டிருப்பதைக் காண முடிகிறது. கோவையின் புறநகர்ப் பகுதிகளெங்கும் ஆடிட்டர் ரமேசுக்கு இந்து மக்கள் கட்சி வைத்துள்ள போஸ்டர்களின் நோக்கமும் சமீப காலத்தில் இல்லாத அளவுக்கு இசுலாமியர்கள் குறித்த வதந்திகள் பரப்பப்பட்டு வருவதும் இதைத் தான் உணர்த்துகிறது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை உத்தேசித்து ஒருபுறம் குஜராத் வளர்ச்சி குறித்த பொய்களைத் திட்டமிட்ட ரீதியில் பிரச்சாரமாக முன்னெடுத்து வரும் பாரதிய ஜனதா, இன்னொருபுறம் தனது பயங்கரவாதப் பிரிவான விசுவ இந்து பரிக்சத் அமைப்பைக் களமிறக்கி மீண்டும் அயோத்தி பிரச்சினையைக் கிளற முயற்சித்து வருகிறது. இவற்றோடு பிராந்திய அளவில் இசுலாமிய வெறுப்பை முன்வைத்துக் கலவரங்கள் நடத்துவதன் மூலம் ஓட்டுக்களைப் பிரித்து அறுவடை செய்யவும் திட்டமிட்டிருப்பதைத் தெளிவாக உணர முடிகிறது.

காங்கிரசு கும்பல் ஒருபக்கம் பொருளாதார ரீதியில் நாட்டை ஓட்டாண்டியாக்கியுள்ளது என்றால் இந்துத்துவ கும்பல் இன்னொரு பக்கம் வேட்டைக்காடாக மாற்ற முயல்கிறது. கோவை மக்கள் தங்களது வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்து அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய நேரம் இது.   இந்து மதவெறியர்களை முறியடிக்காமல் கோவைக்கு மட்டுமல்ல, முழு இந்தியாவுக்கும் நிம்மதியில்லை.

வினவு செய்தியாளர்.