privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகுழந்தைகள்ஆனந்த் நகரத்தின் வாடகைத் தாய்மார்கள் !

ஆனந்த் நகரத்தின் வாடகைத் தாய்மார்கள் !

-

குஜராத் மாநிலத்தில் பால் உற்பத்தியை மையமாக வைத்த ‘வெண்மைப் புரட்சி’க்கு பிரபலமான ஊர் ஆனந்த் நகரம். இப்போது வாடகைத் தாய் விசயத்திலும் இந்திய அளவில் முதலிடத்தை பெற்றிருக்கிறது இந்த நகரம். இந்தியாவின் ஏழைத் தாய்மார்கள் பிழைப்பதற்கு வேறு வழியின்றி சுமக்கும் இந்த வாடகைத் தாய் முறை உண்மையில் அவர்களை ஏழைகள் என்பதால் பொருளாதார முறையிலும், பெண்களென்பதால் பாலின முறையிலும் ஒரு சேர சுரண்டுகிறது.

வாடகைத் தாய்
இரண்டு குழந்தைளை சுமக்கும் வாடகைத் தாய் சுமன் (தனது சொந்த குடும்பத்துடன்).

மருத்துவர் நயினா பட்டேல் என்ற பெண்மணி நடத்தும் சத் கைவால் மருத்துவமனை மற்றும் அகங்ஷா செயற்கை கருத்தரிப்பு மையம் ஆகியன ஆனந்த நகரில் முக்கியமான வாடகைத் தாய்களின் இருப்பிடம். இங்குதான் நாடு முழுதுமிருந்து பணம் தேவைப்படும் ஏழைத் தம்பதியினரும், டாக்சியில் வந்திறங்கும் குழந்தை தேவைப்படும் வெளிநாட்டு, உள்நாட்டு வசதியான தம்பதியரும் சந்திக்கின்றனர். 2005 முதல் இந்த தொழிலில் ஏராளம் இடைத் தரகர்களும் உலாவுகின்றனர். ஏறக்குறைய ரூ. 3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வாடகைத் தாய் முறைக்கு கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்த தொகை அமெரிக்காவில் ரூ.35 லட்சம் என்பதால் அங்கிருந்தும் குழந்தை தேவைப்படும் நடுத்தர வர்க்கத்தினர் இங்கு வருகிறார்கள்.

இங்கு வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டும் தான் இந்திய குழந்தைகள். மற்றொரு பங்கு வெளிநாடு வாழ் இந்திய தம்பதியினருக்கானது, மற்றொரு பங்கு 34 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த தம்பதிகளுக்கானது. ஒரு லட்சம் சதுர அடிகள் பரப்பளவில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த மருத்துவமனை  ஒன்றை புறநகர் பகுதியில் வரும் மார்ச் 2014-ல் டாக்டர் நயினா பட்டேல் திறக்கவுள்ளார். அதில் குழந்தை பெற விரும்பும் தம்பதிகள், வாடகைத் தாய்கள், பிறந்த குழந்தைகளுக்கான வசதி, ஐ.வி.எஃப் வசதி ஆகியன இருக்கும்.

மாதமொன்றுக்கு ரூ.2000 வரை மட்டுமே தினசரி வீட்டு வேலைகள் மூலம் சம்பாதிக்கும் இளவயதுப் பெண்கள் கடும் விலைவாசி உயர்வுக்கு ஈடுகட்ட இந்த வேலையை தேர்வு செய்கின்றனர். இது போன்ற மருத்துவமனைகள் 21 வயது முதல் 35 வரை உள்ள பெண்களையே தேர்வு செய்கின்றனர். காச நோய், புற்று நோய் போன்ற நோய்கள் இல்லாமலிருக்க வேண்டும் என்பதற்காக சோதனை செய்கிறார்கள். ஊட்டச்சத்து கொடுத்து மெலிந்திருக்கும் அந்த ஏழைப் பெண்களை தயார் செய்வார்கள். மூன்று முறைதான் அதிகபட்சமாக ஒருவர் வாடகைத் தாயாக இருக்க முடியும். ஒரு முறைக்கும் அடுத்த முறைக்குமிடையில் அவசியம் 2 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால் அந்த சட்டமும் இங்கே வசதியானோருக்காக வளைந்து கொடுக்கின்றது.

600-வது குழந்தை
சத் கைவால் மருத்துவமனையில் பிறந்த 600-வது குழந்தை.

பெரும்பாலும் குழந்தை பேற்றுக்காக வரும் தம்பதியினரிடமிருந்து பெறப்படும் தொகையில் நான்கில் ஒரு பங்குதான் வாடகைத் தாய்க்கு தரப்படுகிறது. வறுமை, கணவனது பொறுப்பற்ற தனம், அல்லது விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட நிலைமை போன்ற காரணங்களால் தான் பெரும்பாலான ஏழைப் பெண்கள் இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன்வருகின்றனர். இவர்களுக்கென தனியாக இல்லங்களை அமைத்து அங்கே தங்க வைத்து பராமரிக்கின்றனர். பத்து மாதம் முடியும் வரை அவர்கள் தங்களது குடும்பத்தினரை சந்திப்பதில்லை. குடும்பமாக இருப்பவர்கள் கணவரிடம் அனுமதி பெற்றுத்தான் வர வேண்டும் என சட்டமே சொல்கிறது. சொந்தமாக ஒரு குழந்தையாவது இருப்பவர்கள்தான் வாடகைத் தாயாக வர இயலும்.

வாடகைத் தாய் முறையில் பிறந்த பிறகு தங்களது பிள்ளை என்றெல்லாம் உரிமை கொண்டாட கூடாது. குறிப்பாக பிறந்த குழந்தையை தாயின் கண்களில் கூட காட்டுவதில்லை. தனியாக தங்க வைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு மருத்துவமனை சார்பில் சீமந்தமும் நடக்கிறது. அதற்கு குழந்தையின் உண்மையான பெற்றோர்கள் பாதி செலவை ஏற்றுக் கொள்கிறார்கள். இது ஒருவகை தனிமை சிறைதான் என்று பலரும் விமரிசித்தாலும் டாக்டர் நயினா படேலின் மருத்துவமனையில் இதுவரை வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 680 ஐ தாண்டி விட்டது.

தாய்க்கு உணவு
வாடகைத் தாயான தன் மனைவிக்கு உணவு கொண்டு வரும் கணவர்.

தங்கியிருக்கும் கர்ப்பகால தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தை தங்களுடையது இல்லை எனத் தெரிவதால் ஏற்படும் உளவியல் பிரச்சினைகளுக்கு மருத்துவமும் எடுத்துக்கொள்கிறார்கள். இடையில் கருவைக் கலைக்க முடிவு செய்தால் தகுந்த மருத்துவ காரணத்தை நிரூபிக்க முடியாவிட்டால் செலவான தொகை அனைத்தையும் அந்த ஏழைத் தாய்மார்கள்தான் தர வேண்டும் எனச் சொல்கிறது சட்டம்.

உண்மையான தாயின் கர்ப்ப பையானது பிள்ளைப் பேறுக்கு மருத்துவரீதியில் தகுதியற்றதாக இருக்கும் போது வாடகைத் தாய் முறையை தேர்வு செய்கின்றனர். ஆய்வகத்தில் உண்மையான தந்தையின் உயிரணு மற்றும் தாயின் கருமுட்டையை இணைத்து கருவை உருவாக்கி அதன்பின் வாடகைத் தாயின் கர்ப்பப் பையில் வைத்து பத்து மாதம் வரை வளர்த்து வரச் செய்வர். இப்படி கர்ப்ப பையை வாடகைக்கு விடுவதற்கு பெயர்தான் வாடகைத் தாய் முறை.

பத்து மாத காலங்களில் ஏற்படும் வலி உள்ளிட்ட உடல் உபாதைகளுடன் சிசுவை தன் குழந்தை போல பாதுகாப்பாக பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. தான் சுமப்பது தன் குழந்தையா பிறர் குழந்தையா என்ற மனக்குழப்பம், தகுந்த காரணமில்லாமல் கருவை கலைக்க நேருமளவு தான் நடந்து கொண்டால் அடைக்க முடியாத பத்து லட்சம் ரூபாய், உண்மையான குழந்தைகளை ஓராண்டுக்கு பிரிந்து இருப்பது, சமூகத்தின் கேவலமான பார்வை இதையெல்லாம் தாங்கிக் கொண்டுதான் வாடகைத் தாய்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்.

பெரும்பாலும் இவற்றில் நார்மல் டெலிவரிக்கு வாய்ப்புகள் குறைவு. எனவே அறுவைச் சிகிச்சையின் தழும்புகளும், சிரமங்களும் காலம் முழுக்க இருக்கும். ஒரே பிரசவத்தில் எத்தனை குழந்தைகள் வேண்டும் என வரும் தம்பதிகளின் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்யப்படுமாம்.

கருவாக்கம்
கரு தாயின் உடலில் பொருத்தப்படுதல்.

இந்திய இளம் பெண்களின் கர்ப்பப் பையின் வாடகை குறைவு என்பதால் பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் இங்கு படையெடுக்கிறார்கள். மருத்துவ சந்தையோ இப்பெண்களை பிள்ளை பெறும் எந்திரமாகத்தான் பாவிக்கிறது. அந்த எந்திரத்தின் ஒரு பக்கமாக ஊட்டச்சத்துக்களை வழங்கி தங்களுக்கு தேவையான ஆரோக்கியமான குழந்தையை வசதியான தம்பதிகள் எந்த வலியும் இல்லாமல் பெற்றுக்கொள்கிறார்கள். வாடகைத் தாய்மார்களோ தம்மை விட வலியாரின் வலிகளை, உடல் உபாதைகளை பணத்துக்காக ஏற்றுக் கொள்கிறார்கள். பெண்களின் துயரங்களையும் கூட விற்பனைப் பொருளாக்கியிருக்கிறது முதலாளித்துவம்.

வாடகைக்கு குடி வந்து போன அந்த முகம்தெரியாத அந்நிய நாட்டுக் குழந்தைகளில் ஒரு சிலர் நிகழ்காலத்தில் அப்பெண்களுக்கு கஞ்சி குடிக்கவும், சொந்தமாக ஒரு சிறியளவு வீடு கட்டவும் உதவி விட்டுப் போகிறார்கள். இந்த வாய்ப்பு எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை.

குழந்தைப் பேறு இல்லாத வசதியான தம்பதியினரும் தாய்மையை வாடகைக்கு எடுத்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதை மருத்துவ அறிவியல் சாத்தியமாக்கியிருக்கிறது. அத்தகைய தாய்மையை வாடகைக்கு கொடுத்துத்தான் வாழ முடியும் என்ற அவலத்தை வாழ்க்கையாக கொண்ட பெண்களை இந்த சமூக அமைப்பு பற்றாக்குறையின்றி வழங்குகிறது. இருவரையும் இணைக்கும் மருத்துவமனைகள் இதை ஒரு பெரும் தொழிலாக மாற்றியிருக்கின்றது.

ஏழைகள் தாய்மையை மட்டும் கொடுக்கவில்லை, இந்தியாவின் பல சிறுநகரங்களில் இன்றும் கிட்னி தானத்தை அவர்கள்தான் வழங்கி வருகின்றார்கள். இவர்களது தானத்தை பெற்றுக்கொள்ளும் வர்க்கமோ இந்த மக்களின் வறுமை குறித்து கவலைப்படாத வாழ்க்கையையும், பண்பாட்டையும் பெற்றிருக்கிறது.

இள வயதில் மூன்று முறை வாடகைத்தாய் முறையில் குழந்தைகளை பெற்றுக் கொடுத்து விட்டு தனது மீதி காலத்தை தள்ளும் அந்த பெண்கள் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

படங்கள் : நன்றி இந்தியா டுடே

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க