privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விபள்ளிகளின் இறைவழிபாட்டை எதிர்த்துப் போராடும் சஞ்செய் சால்வே !

பள்ளிகளின் இறைவழிபாட்டை எதிர்த்துப் போராடும் சஞ்செய் சால்வே !

-

காராஷ்டிர மாநிலம் நாசிக் நகரத்தில் இருக்கிறது சாவித்திரி பாய் பூலே சீனியர் செகண்டரி பள்ளி. இங்கு ஆங்கில உதவி ஆசிரியராக பணியாற்றுகிறார் சஞ்சய் சால்வே (வயது 41). அவரது பள்ளியில் நடக்கும் இந்து மத வழிபாட்டில் கைகூப்பி நிற்காத காரணத்துக்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு 2009 முதல் அவருக்கு பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. உடன் வேலை பார்த்த பிற ஆசிரியர்களும் இந்த பிரச்சினைக்கு பிறகு அவருடனான உறவைத் துண்டித்துக் கொண்டனர்.

சஞ்செய் சால்வே
சஞ்செய் சால்வே

இதனைத் தொடர்ந்து அரசிடம் நிதி உதவி பெற்று நடத்தப்படும் கல்வி நிலையங்களில் திணிக்கப்படும் மத வழிபாடுகளை எதிர்த்து நீதிமன்றம், உயர்கல்வி அதிகாரிகள் என பலரிடமும் தொடர்ந்து 6 ஆண்டுகளாக போராடி வருகிறார் சஞ்செய் சால்வே. சமீபத்தில் கொல்லப்பட்ட பகுத்தறிவாளர் தபோல்கரும் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் என்பது வாசகர்கள் அறிந்ததே.

சுமார் 1,600 மாணவ மாணவிகள் படிக்கும் நாசிக் நகரப் பள்ளியில் நடக்கும் காலை நேர மத வழிபாட்டில் புறங்கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காரணத்துக்காக, அதனை ஒழுங்கீன நடவடிக்கை என ஜூன் 2007-ல் பிரச்சினையை கிளப்புகிறது பள்ளி நிர்வாகம். ” நாத்திகனான நான் கடவுளை எப்படி கைகூப்பி தொழ முடியும் ?” என்று கேள்வியெழுப்புகிறார் சால்வே. தலைமையாசிரியர் மதூக்கர் பச்சாவ் இதற்கு எழுத்துப்பூர்வ விளக்கம் கேட்கிறார். “நான் ஒரு நாத்திகன். நான் நம்பாத ஒரு மத வழிபாட்டிலும் கலந்துகொள்ள இயலாது. கலந்துகொள்ள வலியுறுத்துவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது” என்று பதிலளிக்கிறார் சால்வே.

“இந்த ஒழுங்கீனத்தை நாங்கள் கவனிக்க தவறியிருந்தால் மற்றவர்களிடமும் இது பரவியிருக்கும். இந்த ஒழுங்கீன நடவடிக்கையின் பேரில் அவரது வேலைகளில் திருப்தியில்லை என முடிவு செய்தோம். எனவே அவருக்கு ஊதிய உயர்வு மறுக்கப்பட்டது” என்று கூறுகிறார் தலைமையாசிரியர். 2008-09-ம் ஆண்டுக்கான பணி ரகசிய குறிப்பேட்டில் அவரது வேலையில் திருப்தியில்லை என பள்ளி நிர்வாகம் குறிப்பிட்டு விடவே, பதவி உயர்வும், ஊதிய உயர்வும் அவருக்கு தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது.

பல முறை அரசு அதிகாரிகளிடம் இதுபற்றி முறையிட்டும் அவருக்கு நீதி கிடைக்கவில்லை. 2010-ல் மகாராஷ்டிர மாநில உயர்நீதி மன்றம் சால்வேயின் புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு நாசிக் மாவட்ட கல்வியதிகாரிகளுக்கு உத்திரவிட்டது. அவர்களும் இரண்டாண்டுகளாக பல்வேறு முறைகளில் பள்ளி நிர்வாகத்திடம் சொல்லிப் பார்த்தார்கள். நிர்வாகமோ கண்டு கொள்ளவேயில்லை. அவர்கள் அனுப்பிய வக்கீல் நோட்டீசையும் கண்டு கொள்ளவில்லை. அரசின் நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவோம் என்ற அவர்களது மிரட்டலை எல்லாம் பள்ளி நிர்வாகம் சட்டை பண்ணவேயில்லை. ஆனால் கல்வித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் மிரட்டலுடன் மாத்திரம் நிறுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் மீண்டும் உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளார் சஞ்சய் சால்வே. பிரிவு 45(9) குறிப்பிடுவது போல பள்ளிகள் தேசிய கீதம் தவிர்த்து பிற வழிபாட்டு பாடல்களை பாடக் கூடாது என வலியுறுத்துகிறார். “சால்வே என்னிடம் அனுமதி கேட்டிருந்தால் நானே வழிபாட்டில் கலந்து கொள்வதில் இருந்து விடுப்பு தந்திருப்பேனே” என்கிறார் தலைமையாசிரியர். “இதற்காகவெல்லாம் ஏன் அனுமதி வாங்க வேண்டும். கடைசி வரை போராடுவேன். பணம் மட்டுமல்ல, என்னுடைய சுயமும் இதில் அடங்கியுள்ளது” என்கிறார் சால்வே.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பள்ளிக் கல்வியை கூட முடிக்காத பெற்றோரின் மகனாகப் பிறந்த சஞ்சய் சால்வே 1996 முதல் இந்தப் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். புத்தரின் கருத்துக்களில் நம்பிக்கையுடைய சால்வே “பள்ளி மாணவர்களிடம் இன்னமும் தேசிய கீதம் தான் மதிக்கத்தக்கதாக திகழ்கிறது” என்றும் குறிப்பிடுகிறார். இந்து மத பிரார்த்தனையை தவிர்த்துவிட்டு தேசிய கீதத்தை மட்டுமே பாடவேண்டும்  என்று இவர் முன்வைத்திருப்பதால் மராட்டிய சங்பரிவார கும்பல்கள் எரிச்சலடைந்திருப்பது அதிசயமல்ல. சில உறவினர்கள் வழக்கை திரும்ப பெறுமாறு வலியுறுத்தினாலும், வீட்டில் உள்ளவர்கள் ஆதரவாகத்தான் இருக்கிறார்கள். கடந்த மாதம் பகுத்தறிவாளரும், சமூக போராளியுமான தபோல்கர் படுகொலை செய்யப்பட்ட பிறகு உறவினர்கள் இவரை எச்சரித்த வண்ணமே உள்ளனர்.

19-ம் நூற்றாண்டு மராட்டியத்தில் புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதியும், முதல் ஆசிரியையுமான சாவித்திரி பாய் பூலேவின் பெயரில் அமைந்த இப்பள்ளியில் இச்சம்பவம் நடந்திருப்பது ஒரு முரண் தான். கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரின் திடலில் அல்லேலுயா கூட்டங்கள் வீரமணியால் அனுமதிக்கப்படுவதைப் போலத்தான் இதுவும். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த சாவித்திரிபாய் பூலேவின் கணவர் புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ் பூலே ஆவார்.

ஜோதிராவ் பூலே
ஜோதிராவ் பூலே

திருமணத்திற்கு பிறகுதான் படிக்க ஆரம்பித்த சாவித்திரியை பள்ளி சென்று விட்டு வரும் வழியில் பிற ஆதிக்க சாதியினர் கல்லால் அடிப்பார்களாம். கேவலமாக திட்டுவார்களாம். இதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் படித்து முடித்து பெண் கல்விக்கு தனியாக பள்ளிகளெல்லாம் ஆரம்பித்தார் சாவித்திரி. கிணறுகளில் தண்ணீர் சேந்த அனுமதிக்கப்படாத அக்காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனியாக கிணறு வெட்டினர் இத்தம்பதிகள். ஆணாதிக்க எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, பெண் கல்வி, விதவை மறுமணம் என 19ம் நூற்றாண்டின் மராட்டிய மாநில சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னணியாளர்களாக இத்தம்பதியினர் விளங்கினர். 1860களில் ‘உயர்’சாதி விதவைப் பெண்களுக்கு மொட்டையடிக்க மாட்டோம் என்ற இயக்கத்தை நாவிதர்கள் சங்கம் மூலமாக பம்பாய் மற்றும் புனே நகரங்களில் நடத்திக் காட்டியவர்கள். இப்பேர்ப்பட்ட சமூக சீர்திருத்தவாதிகளின் பெயரில் அமைந்த பள்ளியில்தான் சஞ்செய் சால்வே எனும் தாழ்த்தப்பட்டவருக்கு மதத்தின் பெயரில் ஒரு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

பார்ப்பனியத்திற்கு எதிராக பூலே விழிப்புணர்வு ஊட்டிய சூத்திர சாதிகள் இன்று இந்துமதவெறியின் செல்வாக்கில் உள்ளன என்பதற்கு இந்த மாநில கல்வித்துறை மற்றும் பள்ளிகள் மூலம் புரிந்து கொள்ளலாம்.

வரும் 6-ம் தேதி உயர்நீதி மன்றத்தில் இவரது வழக்கு விசாரணைக்கு வருகிறது. சால்வே முன்வைத்துள்ள அரசியலமைப்பு சட்டம் 28(3) ஆனது, கல்வி நிறுவனங்களில் நடக்கும் மத விழாக்களில் எவரையும் கலந்துகொள்ள சொல்லி கட்டாயப்படுத்த கூடாது என்றும், சிறுவர் எனில் பெற்றோரின் சம்மதம் அவசியம் என்றும் கூறுகிறது.

பெரும்பாலான இந்திய மொழிகளின் பாடப் புத்தகங்களில் கூட மதரீதியான பாடல்கள் பல இடம்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக இந்து மதம் சார்ந்த பாடங்கள்தான் அதிக அளவில் இருக்கின்றன. அதே நேரத்தில் அந்த பாடப் புத்தகங்களில் நாத்திகம் பற்றிய சிறு குறிப்பு கூட இருப்பதில்லை. பாஜக ஆட்சியில் பாடநூல்களை தயாரிக்கையில் வரலாற்றையே திரிக்குமளவுக்கு மாறி இருந்தது. பல்கலைக்கழகத்திலேயே பார்ப்பனப் புரட்டான ஜோசியத்தை பாடத் திட்டமாக கொண்டு வந்தவர்கள்தான் இந்துமதவெறியர்கள்.

ஆரோக்கியமான கல்விக் கூடங்களில், பாடப் புத்தகங்களில் மதரீதியான பாடங்களை, பாடல்களை புறக்கணிக்கக் கோருவது தான் சரியானது. அதுதான் மதச்சார்பற்ற கல்விக்கு அடிப்படை. அதற்கு வெறும் சட்டப் போராட்டத்தின் மூலம் மட்டுமே தீர்வு காண முடியாது. ஏனெனில் இந்துமத வெறியர்கள் சட்டம், பாராளுமன்றத்தை கால் தூசுக்கு கூட மதிப்பதில்லை. சஞ்செய் சால்வேயின் போராட்டத்தை ஆதரிப்போம். இந்துமதவெறியை கருவறுப்போம்.

மேலும் படிக்க