privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்தருண் தேஜ்பால் : 'இது இரண்டாவது ரேப்' – அருந்ததி ராய்

தருண் தேஜ்பால் : ‘இது இரண்டாவது ரேப்’ – அருந்ததி ராய்

-

ருண் தேஜ்பால், என்னுடைய முதல் நாவலான “தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்” நூலைவெளியிட்ட “இந்தியா இங்க்” நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர். அவர் தொடர்பான சமீப நிகழ்வுகளைக் குறித்த என் எதிர்வினையை பல பத்திரிகையாளர்கள் கேட்டிருந்தார்கள். நடந்து கொண்டிருந்த ஆரவாரமான ஊடக கும்மியடிப்புகளுக்கு நடுவே என் கருத்து எதையும் வெளியிட நான் தயங்கினேன். கீழே விழுந்து விட்ட ஒரு மனிதனை மிதிப்பது அற்பமானதாக தோன்றியது. குறிப்பாக, தான் செய்த செயலின் விளைவுகளிலிருந்து அவர் எளிதில் தப்பி விட முடியாது என்றும் அவரது தவறுக்கான தண்டனை வந்து கொண்டிருக்கிறது என்றும் தோன்றிய போது அவரை மேலும் தாக்குவதை தவிர்க்க நினைத்தேன். ஆனால், இப்போது அது அவ்வளவு நிச்சயமின்றி போயிருக்கிறது. வக்கீல்கள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள், பெரிய அரசியல் சக்கரங்கள் சுழல ஆரம்பித்திருக்கின்றன. இதற்கு மேலும் நான் மௌனமாக இருந்தால் அதற்கு பல விதமான அர்த்தங்கள் கற்பிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

அருந்ததி ராய்
அருந்ததி ராய்

தருண் எனது நீண்ட கால நண்பர்களில் ஒருவர். என்னைப் பொறுத்த வரையில் அவர் எப்போதுமே தாராளமாகவும், புரிதலுடனும் நடந்து கொண்டார். குறிப்பிட்ட பிரச்சனைகளின் அடிப்படையில் என்றாலும் நான் தெகல்காவை பெரிதும் மதித்தேன். 2002 குஜராத் படுகொலைகளை நடத்தியவர்கள் சிலரை சிக்க வைத்த ஆஷிஷ் கேத்தானின் பொறி வைத்தல் நடவடிக்கை, சிமி விசாரணை குறித்து அஜித் சாஹி செய்த வேலைகள் ஆகியவை என்னைப் பொறுத்த வரை தெகல்காவின் மிகச் சிறந்த சாதனைகள். இருப்பினும், நானும் தருணும் அரசியல் ரீதியாகவும் சரி, இலக்கிய ரீதியாகவும் சரி வெவ்வேறு உலகங்களில் வாழ்ந்து வந்தோம். எங்கள் கருத்துக்கள் எங்களை இணைப்பதற்கு பதிலாக விலகிச் செல்ல வைத்தன. இப்போது நடந்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை, ஆனால் மனது உடையச் செய்திருக்கிறது.

கோவாவில் தருண் நடத்தும் “திங்க்ஃபெஸ்ட்” ‘அறிவுஜீவி’ திருவிழாவில் அவர் தனது சக ஊழியரான இளம் பெண் மீது அச்சுற்றுத்தும் பாலியல் தாக்குதல் நடத்தியிருப்பதை அவருக்கு எதிரான சாட்சியங்கள் உணர்த்துகின்றன. மலையளவு முறைகேடுகள் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சுரங்கத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட கூட்டமைப்பு இந்த திங்க்ஃபெஸ்டுக்கு நிதி அளித்து ஆதரித்திருக்கிறது. நாட்டின் பிற பகுதிகளில் பெருமளவிலான பழங்குடி பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, கொலை செய்த, ஆயிரக் கணக்கான மக்களை சிறைக்கு அனுப்பி, கொலை செய்த பெருமைக்குரியவை இந்த நிறுவனங்கள். தருணின் பாலியல் தாக்குதல், புதிய சட்டத்தின்படி பாலியல் வன்முறைக்கு நிகரானது என்று பல வழக்கறிஞர்கள் சொல்லியிருக்கின்றனர். தாக்கிய பெண்ணுக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சல்களிலும், குறுஞ்செய்திகளிலும் தருணே தன்னுடைய குற்றத்தை ஒத்துக் கொண்டிருக்கிறார்.

முதலாளி என்ற கேள்விக்குட்படுத்த முடியாத அதிகார நிலையிலிருந்து அவர் பெரிய மனிதத் தனத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். மோசடி என்று சொல்லும்படியாக, தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டு “துன்புறுத்திக்” கொள்வதற்காக 6 மாதம் விலகி இருக்கப் போவதாக சொல்லியிருக்கிறார். இது போலீஸ் விவகாரமாக ஆன பிறகு பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய பெரும் பெருச்சாளிகளான வக்கீல்களின் ஆலோசனைப் படி, பாலியல் குற்றம் சாட்டப்பட்ட பல ஆண்கள் வழக்கமாக செய்வதையே தருண் செய்ய ஆரம்பித்திருக்கிறார். அதாவது, தான் வேட்டையாடிய பெண்ணை குற்றவாளி கூண்டில் நிறுத்தி, அவரை பொய்யர் என்று முத்திரை குத்த முயல்கிறார்.

வலது சாரி இந்துத்துவா கும்பலால் அரசியல் காரணங்களுக்காக தருண் பழி வாங்கப்படுகிறார் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது, சமீப காலம் வரை தான் வேலைக்கு அமர்த்தியிருந்த ஊழியர் ஒழுக்கமற்ற பெண் மட்டுமில்லை, பாசிச சக்திகளின் ஆளும் கூட என்கிறார் தருண். இதுதான் இரண்டாவது ‘கற்பழிப்பு’ :

தெகல்கா பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் அரசியலையும், அறங்களையும் வல்லுறவு செய்வதுதான் இது. அங்கு பணி புரிபவர்களுக்கும், கடந்த காலத்தில் தெகல்காவை ஆதரித்தவர்களுக்கும் விழுந்த ஒரு இடி. கொஞ்ச நஞ்சம் மிஞ்சியிருக்கும் அரசியல் மற்றும் தனிப்பட்ட நேர்மையை வெற்றுக் கூடாக மாற்றுவது

சுதந்திரமான, நியாயமான, பயமற்ற என்று  தெகல்கா தன்னைத் தானே வரையறுத்துக் கொண்டது. இப்போது தைரியம் எங்கே போனது?

– அருந்ததி ராய்
தமிழாக்கம் : செழியன்
நன்றி
: அவுட்லுக்