ஜெகத்குரு ஜெயலலிதேந்திர ஸரஸ்வதி !

9

(2005-ம் ஆண்டு புதிய கலாச்சாரத்தில் வெளியான கட்டுரை)

ங்கரராமனைக் கொலை செய்தது ஜெயேந்திரன்தான் என்பது உண்மையே ஆனாலும், அதற்கு எப்பேர்ப்பட்ட அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தாலும் ஜெயேந்திரனைக் கைது செய்யுமாறு ஜெயலலிதா எப்படி உத்திரவிட்டிருக்க முடியும்?

ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பாளர்களையும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களையும் ஒரே நேரத்தில் குடைந்து வரும் கேள்வி இது.

ஜெயலலிதா
“இதிலென்ன ஆச்சரியம்? என்னுடைய ஆட்சியில் எப்போதுமே சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான்”.

“இதிலென்ன ஆச்சரியம்? என்னுடைய ஆட்சியில் எப்போதுமே சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான்” என்று ஒரு விஷமப் புன்னகையுடன் இதற்குப் பதிலளிக்கிறார் புரட்சித் தலைவி.

விசாரணையின் பரப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதால் “இதில் வேறு ஏதோ உள்நோக்கம் இருக்க வேண்டும்” என்று ஐயம் எழுப்புகிறார் கருணாநிதி. “ஆமாம்” என்று வேறு ஒரு முனையிலிருந்து இதனை ஆமோதிக்கிறார் இல. கணேசன். ஜெயலலிதாவின் உள்நோக்கம் குறித்த பேச்சு தவிர்க்கவியலாமல் ஜெயேந்திரனுக்குச் சாதகமாக அமைகிறது.

மாறாக, “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற ஜெயலலிதாவின் கூற்றை நாம் ஆமோதித்தாலோ, இந்தக் கைது நடவடிக்கையின் அரசியல் ஆதாயம் அனைத்தையும் புரட்சித் தலைவியின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டியதாகிறது.

“ஜெயலலிதா எந்த நோக்கத்திற்காகக் கைது செய்திருந்தாலும், சங்கரராமன் எந்த நோக்கத்துக்காக ஜெயேந்திரனை அம்பலப்படுத்தியிருந்தாலும் அதன் விளைவு பார்ப்பன எதிர்ப்பாளர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் சாதகமாக அமைந்திருக்கிறதா இல்லையா? இதற்கு மேல் இதனைத் துருவி ஆராய்வதால் நமக்கென்ன பயன்?” என்ற கேள்வி எழலாம்.

ஓரளவிற்கு, ஓரளவிற்கு மட்டுமே இந்தப் பார்வை சரியானது. ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த இரு நபர்களிடையே தோன்றும் முரண்பாடுகளுக்குக் காரணமான திரைமறைவு இரகசியங்களை நாம் அறிவது சாத்தியமில்லை என்ற எதார்த்த நிலையின் காரணமாக, வேறு வழியின்றி வேண்டுமானால் நாம் இந்த முடிவுக்கு வரலாம்.

சங்கரமடம்
சங்கரமடம் எனும் ஆளும் வர்க்கத்தின் ஆன்மீக அடியாட்படை.

ஆனால் ஜெயலலிதாவின் நேர்மை மற்றும் நடுநிலை குறித்து உருவாக்கப்படும் பிரமைகளைத் தகர்க்க வேண்டுமானால், சங்கரமடம் என்ற பார்ப்பனக் கோட்டையைத் தகர்ப்பதை நோக்கி மக்களை நாம் அணிதிரட்ட வேண்டுமானால், இந்த “ஆச்சரியப்படத்தக்க” நிகழ்வு எப்படிச் சாத்தியமானது என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம்.

சங்கரமடம் எனும் ஆளும் வர்க்கத்தின் ஆன்மீக அடியாட்படையை சாதி ரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் ஒடுக்கப்படும் மக்கள் தமது சொந்தப் போராட்டத்தின் மூலம் நிர்மூலமாக்கியிருக்க வேண்டும். அதைச் செய்வதற்குத் தேவையான விழிப்புணர்ச்சியோ, அரசியல் ரீதியான உந்துதலோ ஊட்டப்படாத மக்கள் திரளின் மடியில் “யாரோ” அடித்த கல்லால் இந்தக் கனி விழுந்திருக்கிறது.

சங்கரமடத்தின் ஊழல்கள் நாளுக்கொன்றாய் ஊர்வலம் வந்த போதும் ஒரே ஒரு கல் கூட சங்கரமடத்தின் மீது மக்களால் எறியப்படவில்லை. ஜெயலட்சுமி விவகாரம் போலவே ஜெயேந்திரன் விவகாரமும் டீக்கடை அரட்டைக்குகந்த நொறுக்குத் தீனியாகவும், பரபரப்பு இதழியத்திற்கு அடித்த பரிசாகவும் மாறி வருகிறது.

ஜெயலட்சுமி விவகாரத்திலாவது “பாதிக்கப்பட்ட’ போலீசு அதிகாரிகள் சார்பில் யாரும் உண்ணாவிரதமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தவில்லை. ஆனால் “பாதிக்கப்பட்ட’ ஜெயேந்திரருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். அதையும் மவுனமாக வேடிக்கை பார்த்தபடியே நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம்.

அமெரிக்க ஜனாதிபதியையே கூண்டில் ஏற்றிய மோனிகா லெவின்ஸ்கியின் குற்றச்சாட்டு, லட்சக்கணக்கான டன் காகிதத்தையும் ஆயிரக்கணக்கான மணி நேர தொலைக்காட்சி நேரத்தையும் விழுங்கிச் செரித்த பிறகு, அதையே அமெரிக்க “ஜனநாயகத்திற்கு”ச் செறிவூட்டப்பட்ட அடியுரமாக மாற்றித் தந்தது. “அதிபராகவே இருந்தாலும் அமெரிக்க ஜனநாயகத்தில் சமம்தான்” என்ற பொய்யான பொதுக்கருத்தை அந்தப் பரபரப்பின் முடிவில் அறுவடை செய்து கொண்டது அமெரிக்க ஆளும் வர்க்கம்.

ஜெயேந்திரன் கைது விவகாரம் இந்திய ஜனநாயகம் குறித்த புதியதோர் மாயையை உருவாக்கப் போதுமானதில்லையெனினும் ஜெயலலிதாவின் துணிச்சல் குறித்த மாயையை இது மக்கள் மத்தியில் மேலும் வலுப்படுத்தியிருக்கிறது. “பார்ப்பன ஜெயலலிதா” என்ற மதிப்பீட்டின் மீதான நம்பிக்கையைப் பலவீனப்படுத்தியுமிருக்கிறது.

நான் ஒரு பாப்பாத்தி
“நான் ஒரு பாப்பாத்திதான்” என்று சட்டமன்றத்திலேயே அறிவித்துக் கொண்ட ஜெயலலிதா.

“நான் ஒரு பாப்பாத்திதான்” என்று சட்டமன்றத்திலேயே அறிவித்துக் கொண்ட ஜெயலலிதா, சங்கரமடத்துடனும் பார்ப்பனப் பாசிசக் கும்பலுடனும் மிகவும் நெருக்கமாக இருந்து மதமாற்றத் தடை, கிடா வெட்டத் தடை, அன்னதானம் எனப் “பெரியவாளின்’ மனதிற்குகந்த நடவடிக்கைகளை அவாளே ஆச்சரியப்படும்படியான வேகத்தில் செய்து காட்டிய ஜெயலலிதா அந்தப் பெரிய”வாளையே’ கைது செய்ய உத்தரவிட்டது எப்படி?

இந்தக் கேள்விக்கான விடையும், ஜெயலலிதாவின் துணிச்சல் அல்லது பிடிவாதம் என்றழைக்கப்படும் குணாதிசயத்திற்கான விளக்கமும் பிரிக்க முடியாதபடி பிணைந்துள்ளன. இதனைப் புரிந்து கொள்வதன் மூலம்தான் இந்தச் “சாகச’ நடவடிக்கையின் அரசியல் பயனை ஜெயலலிதா அறுவடை செய்து கொண்டு விடாமல் தடுக்க இயலும்.

ஆளும் வர்க்கத்தின் இரு பிரிவினரிடையே அல்லது இரு நபர்களிடையே முரண்பாடும் மோதலும் தோன்றுவது நாம் இதுவரை கண்டிராத அதிசயமல்ல. கண்முன்னே நாம் காணும் அம்பானி சகோதரர்களின் சொத்துத் தகராறு, இதற்கு முன் நிகழ்ந்த அம்பானி-வாடியா மோதல், ஆளும் வர்க்கக் கட்சிகளான பா.ஜனதா  காங்கிரசுக்கிடையிலான மோதல், “கட்டுப்பாட்டுக்குப் பெயர் போன” பாசிசக் கட்சியான பா.ஜனதாவிற்குள்ளேயே நாம் காணும் மோதல்கள், சமீபத்திய உமாபாரதி விவகாரம்  இவையெல்லாம் சில சான்றுகள்.

முதலாளித்துவ வர்க்கத்தினரிடையே நிலவும் போட்டி மற்றும் பகைமையின் உருத்திரிந்த வடிவங்கள் இவை. “பிரபலமான பார்ப்பன மடாதிபதி ஒருவரைக் கைது செய்யுமாறு ஒரு பாப்பாத்தியே எங்ஙனம் உத்திரவிட்டிருக்க இயலும்?” என்று ஜெயலலிதாவின் சாதியப் பரிமாணத்தை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் வரை இந்தப் புதிருக்கு விடை காண முடியாது.

ஜெயலலிதாவால் தலைமை தாங்கப்படும் அ.இ.அ.தி.மு.க. ஒரு ஆளும் வர்க்கக் கட்சி என்பதை விளக்கத் தேவையில்லை; ஆனால் அது “ஆளும் வர்க்கங்களின் அறிவுபூர்வமான பிரதிநிதிகள்” என்ற பொருளில் பொருந்திவரும் காங்கிரசு, பா.ஜனதா, ஜனதா போன்ற கட்சிகளையொத்த ஆளும் வர்க்கக் கட்சியல்ல. ஆளும் வர்க்கங்களின் நலனையே மக்கள் நலனாகச் சித்தரிக்கும் கொள்கைகளோ, திட்டமோ, திசைவழியோ தேவைப்படாத போனபார்ட்டிஸ்ட் கட்சி.

“நாய் என்றால் வால் இருக்க வேண்டும். கட்சி என்றால் கொள்கை தேவை” என்ற சம்பிரதாயத்தையொட்டி எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அண்ணாயிசம், போனபார்ட்டிசத்தின் தமிழ்வடிவம். இன்று “புரட்சித்தலைவியே கட்சி, அவரது புகழே கொள்கை, அவரது வாய்மொழியே சட்டம்” என்று மேற்படி கொள்கை மேலும் துலக்கம் பெற்றிருக்கிறது.

சேகர் பாபு
“எங்கள் கட்சியில் புரட்சித் தலைவி மட்டுமே ஒன்று, நாங்களெல்லாம் பூச்சியம்”

 

“எங்கள் கட்சியில் புரட்சித் தலைவி மட்டுமே ஒன்று, நாங்களெல்லாம் பூச்சியம்” என்று பூச்சியங்களே பிரகடனம் செய்வதும், தன்னிடமிருந்து விலகியவர்களை “உதிர்ந்த ரோமங்கள்” என்று புரட்சித்தலைவி வருணிப்பதும், உதிராமல் எஞ்சியிருக்கும் ரோமங்களே அதை ஆமோதிப்பதும் நாமறிந்த உண்மைகள்.

இத்தகைய “ஜனநாயகபூர்வமான” ஒரு கட்சி, இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அங்கமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது  அ.தி.மு.க.வின் சீரழிவுக்கல்ல  இந்த முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சீரழிவுக்கு ஒரு சான்று.

ஆம்! போனபார்ட்டிசம் என்பது முதலாளித்துவ ஜனநாயகத்தின் சீரழிந்த வடிவங்களில் ஒன்று. கொள்கைகள், லட்சியங்கள் போன்ற புனித மேலாடைகளையெல்லாம் களைந்து விட்டு, மக்களுக்கு  கவர்ச்சிவாதம், தமக்கு  அரசு சன்மானங்களை அதிவேகமாகப் பொறுக்கித் தின்னும் பிழைப்புவாதம்” என்ற இரண்டு அம்சத் திட்டத்தையே வாளாகவும் கேடயமாகவும் ஏந்திக் களத்திலிறங்கும் “போனபார்ட்டு”கள் ஒரு வகையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் “புனித” மரபை மீறும் “கலகக்காரர்கள்”!

ஆளும் வர்க்கச் சேவைதான் இவர்களுடைய நோக்கம் என்றாலும், அத்தகைய சேவையை நேர்மையாகவும் இலட்சிய நோக்குடனும் (காமராஜ், ராஜாஜி போல) செய்ய மறுத்து ஆளும் வர்க்கத்திடமே சேவைக் கட்டணம் வசூலிப்பவர்கள். ஆளும் வர்க்க அரசியலின் அங்கீகரிக்கப்பட்ட வரம்புகளும் மரபுகளும் தமது தனிப்பட்ட நலனுடன் முரண்படும் போது அவற்றை மீறவும், இழிவுபடுத்தவும், ஏளனம் செய்யவும் துணிபவர்கள். இத்தகைய நடவடிக்கைகளின் விளைவாக எல்லா வர்க்கங்களுக்கும் அப்பாற்பட்ட, மேலானதொரு அரசியல் சக்தியைப் போன்ற தோற்றத்தை அவ்வப்போது மக்களிடையே உருவாக்க வல்லவர்கள்.

இனி, ஜெயலலிதாவிடம் திரும்புவோம். ஜெயலலிதா என்ற தனிநபரின் துணிவு அல்லது பிடிவாதம் என்று வருணிக்கப்படும் தனிப்பட்ட இயல்பு, “போனபார்ட்டிசம்’ என்றழைக்கப்படும் இழிந்த ஆளும் வர்க்க அரசியல் வடிவத்தின் மூலமாகத்தான் அரசியல் அர்த்தம் பெறுகிறது.

அதாவது “ஜெ’வின் இந்தத் தனிப்பட்ட குணாதிசயமானது, தன்னைப் போற்றத்தக்கதாகக் கருதும் ஒரு கட்சியையும், அங்கீகரிக்கத்தக்கதாகக் கருதும் ஒரு சமூகத்தையும், சகித்துக் கொள்ளத்தக்கதாகக் கருதும் ஆளும் வர்க்கத்தையும், நிறைவேற்றத்தக்கதாகக் கருதும் அரசு எந்திரத்தையும் பெற்றிராவிட்டால் அது அரசியல் நடவடிக்கையாக மாறமுடியாது என்று பொருள்.

போனபார்ட்டிசம் என்ற சொற்றொடரின் பொருளை விளங்கிக் கொள்வதற்கு வாசகர்களுக்கு உதவும் பொருட்டுத்தான் மேற்கூறிய விளக்கத்தை எழுத நேர்ந்தது. இத்தகைய விளக்கத்தினை அவசியமற்றதாக்கும் விதத்தில்  தன்னை நெப்போலியனுடன் ஒப்பிட்டுக் கொண்ட லூயி போனபோர்ட்டிற்குச் சற்றும் குறையாத விதத்தில்  “தன்னுடைய நினைவாற்றல் நெப்போலியனுக்கு இணையானது” என்ற இரகசியத்தை சமீபத்தில்தான் தமது விசுவாசிகளுக்கு வெளிச்சமாக்கியிருக்கிறார் ஜெயலலிதா.

தன்னுடைய சொந்தச் சாதியினரின் தலைமைப் பீடத்துடைய புனிதத்தைக் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் “ஜெ” மேற்கொண்டிருக்கும் “கலகத்தை”ப் புரிந்து கொள்ள வேண்டுமானால், தனது சொந்த வர்க்கத்தின் அரசியல் நிறுவனங்களுக்கு “எதிராகவும்”, மரபு எனும் சாம்பிராணிப் புகையால் பாதுகாக்கப்படும் அவற்றின் “புனிதத்திற்கு” எதிராகவும் இதுகாறும் “ஜெ” என்ற போனபார்ட் நடத்திவந்துள்ள கலகங்களை ஒரு பறவைப் பார்வையாவது பார்க்க வேண்டும்.

****
சமீபத்திய ஆளுநர் நியமன விவகாரத்திலிருந்து துவங்குவோம். மாநில முதல்வரைக் கலந்தாலோசனை செய்வதென்ற “மரபை” மைய அரசு மீறிய போது தன்னுடைய எதிர்ப்பை “மரபு வழியில்” அவர் பதிவு செய்யவில்லை. சிவராஜ் பாடீலின் தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்தார்; ஒரு மரபு மீறலுக்கு இன்னொரு மரபு மீறல் மூலம் பதிலடி கொடுத்தார். பிறகு இரகசியக் காப்பு எனும் “மிகப்புனிதமான மரபை”யே நையாண்டி செய்யும் விதத்தில் அந்த உரையாடலை அப்படியே வெளியிட்டு, தன்னுடன் தொலைபேசியில் “காதும் காதும் வைத்தாற் போல்” பேசியதாக நம்பிக் கொண்டிருக்கும் எல்லா ஆளும் வர்க்கக் கனவான்களுக்கும் திகிலூட்டினார்.

ஜெயேந்திரருக்கு ஆதரவாகத் தொலைபேசியில் பேசவிரும்பிய ராஜசேகர் ரெட்டியின் கருத்தை அவர் தொண்டைக் குழியில் வைத்தே தணிக்கை செய்தார்.

கரன் தாப்பர்
பத்திரிகையாளர் கரன் தாப்பர்

தொலைக்காட்சிப் பேட்டியில் தன்னை மடக்கி மதிப்பிழக்கச் செய்த பிரபல பத்திரிகையாளர் கரன் தாப்பரை காமராவின் முன்னிலையிலேயே கணக்கு தீர்த்தார். “”உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று பேட்டியின் முடிவில் அவர் கூறிய உபசார வார்த்தையை மறுத்து “எனக்கு மகிழ்ச்சியில்லை” என்று கூறியதன் மூலம் பழம் பெருமை மிக்க விக்டோரிய மரபைத் தகர்த்தார்; “ஆங்கிலத்தில் பேசுவதால் என்னை சீமாட்டி என்று “மலிவாக” எடை போட்டாயோ?” என்று கரண் தாப்பருக்கு சூடு வைத்ததுடன் ஆங்கில அறிவு ஜீவிப் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் பீதியூட்டினார்.

அநாமதேயங்களான தனது அமைச்சர்கள் மீதும், ஐ.ஏ.எஸ்.  ஐ.பி.எஸ். படித்த அதிகார வர்க்கத்தின் மீதும் பாரபட்சமின்றி நிலையாமைத் தத்துவத்தைத் திணித்ததன் மூலம், அப்பதவிகளுக்குரிய கவுரவத்தை நிரந்தரமாகப் பிடுங்கி, தனது சொந்த ஆகிருதியை மேலும் உப்ப வைத்துக் கொண்டார். முதலாளித்துவ ஜனநாயக அமைப்பைப் பாதுகாக்கும் “இலட்சிய வேட்கை” கொண்ட சில அதிகாரிகளிடமிருந்தும் அதை உறிஞ்சி, தன்னுடைய பதவியைப் பாதுகாத்துக் கொள்ளும் கவலை மட்டுமே அவர்களிடம் எஞ்சியிருக்குமாறு பார்த்துக் கொண்டார்.

நீதித்துறையின் கவுரவம் மற்றும் சர்வ வல்லமை குறித்த தப்பெண்ணங்களைத் தகர்க்கும் விதத்தில் உயர்நீதி மன்றத்தின் சந்நிதானத்திலேயே தனது மகளிரணியை டான்ஸ் ஆடச் செய்தார். நீதிபதிகளின் முகத்துக்கு முன்னால் சூட்கேஸ்களையும் முதுகுக்குப் பின்னால் உளவுத்துறையையும் ஒரே நேரத்தில் ஏவிவிட்டு அவர்களை ஊசலாட வைத்தார். சக்கர நாற்காலியில் தோழியை அமர்த்தி சட்டத்தின் சந்துகளில் உலாவரச் செய்தார். “நீதியின் எல்லை ஆளும் வர்க்கத்தின் மனச்சாட்சியில் முடிவடைகிறது” என்ற உண்மையை உச்சநீதி மன்றத்தின் வாயாலேயே (டான்சி வழக்கில்) ஒப்புக் கொள்ள வைத்தார்.

பீகாரின் கண்காணாத கிராமங்களில் நடைபெறுவதாகத் தமிழகம் கேள்விப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிக் கைப்பற்றலை, சென்னை மாநகரத்தில் தொலைக்காட்சிக் காமெராக்களின் முன்னிலைலேயே நடத்திக் காட்டினார். “ஓட்டுப் போட விரும்பும் மக்கள் கூட தங்களது ஜனநாயக உரிமையை நிலைநாட்டிக் கொள்ள ஆயுதமேந்தியாக வேண்டும்” என்ற உண்மையை, புரட்சியாளர்களே பொறாமைப்படும் வேகத்தில் மக்களுக்கு உணர்த்திக் காட்டினார். காந்தி, நேரு, அண்ணாவின் வரிசையில் தேசியத் தலைவராகி மறைய விரும்பும் கலைஞரையும், மடிந்தாலும் சட்டமன்றத்துக்குள்ளேயே மடிய விரும்பும் அவரது கட்சியினரையும் சாத்தான்குளத்தில் தேர்தல் புறக்கணிப்பை நோக்கி நெட்டித் தள்ளினார்.

லாப வேட்டை எனும் தன்னுடைய இழிந்த நோக்கத்தை மறைத்துக் கொள்வதற்கு முதலாளி வர்க்கம் பயன்படுத்தும் சொற்றொடர்களான “தேசநலன், தொழில் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு” போன்ற மேக்கப் சாதனங்களால் புரட்சித் தலைவியை எந்த முதலாளியும் ஏமாற்ற முடிந்ததில்லை. “ராயனுக்கு உரியது ராயனுக்கு” என்ற தனது சட்டத்தின் முன், பன்னாட்டு முதலாளிகள் முதல் பிளாஸ்டிக் வியாபாரிகள் வரை அனைவரும் சமமே என்பதை அவர் நிரூபித்த வண்ணமிருக்கிறார். தாங்களே உருவாக்கிய முதலாளித்துவ ஜனநாயகம் எனும் மாயைக்கு ஆட்பட்டு சில முதலாளிகள் லஞ்ச ஊழலை எதிர்த்துப் “பிதற்றும்” தருணங்களிலும், அவர்களைத் தடுத்தாட் கொண்டு “ரொக்கப் பட்டுவாடாவைத் தவிர்த்த உன்னத உறவெதுவும் நமக்கிடையே இல்லை” என்ற உண்மையை அவர்களுக்குப் புரியும் விதத்தில் உணர்த்தியிருக்கிறார்.

சென்னாரெட்டி
சென்னாரெட்டியை முக்காடு போட்டு ஓடச் செய்தார்

உயர்குடி மக்களின் விருந்துகளிலும் தனிப்பட்ட சந்திப்புகளிலும் வழக்கமாக அங்கீகரிக்கப்படும் “மேன்மக்களின் சில்லறைத் தனங்களை” அவர் சந்திக்கு இழுத்திருக்கிறார். “கவர்னர் முதல்வரின் கையைப் பிடித்து இழுத்தார்” என்ற குற்றச்சாட்டை மறுக்கவும் முடியாமல் மழுப்பவும் முடியாமல் சென்னாரெட்டியை முக்காடு போட்டு ஓடச் செய்தார்.

காவிரிப் பிரச்சினைக்காக முதல்வர் பதவியிலிருந்தபடியே உண்ணாவிரதமிருந்ததன் மூலம் மத்திய  மாநில அரசுக்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளும் சட்டபூர்வமான மற்றும் மரபு வழிபட்ட வழிமுறைகளைக் கேள்விக்குள்ளாக்கி ஆளும் வர்க்கத்தை கைபிசைந்து நிற்கச் செய்தார். இன்னொருபுறம் இரண்டு லட்சம் அரசு ஊழியர்களை ஒரே நாளில் வேலை நீக்கம் செய்ததன் மூலம் இந்திய ஆளும் வர்க்கத்தையே எழுந்து நின்று கைதட்டவும் வைத்தார்.

ஒரே நேரத்தில் ஆசை நாயகியாகவும் அபாயகரமான நோயாகவும், உறுதியான அடியாளாகவும் உடனே ஒழித்துக் கட்ட வேண்டிய தலைவலியாகவும் தோற்றம் காட்டி ஆளும் வர்க்கத்தை தொந்திரவுக்குள்ளாக்கும் அரசியல்வாதிகளின் வரிசையில் ஜெயலலிதா முதலிடம் பிடிக்கிறார். நாடாளுமன்ற ஜனநாயகத்தை உள்ளிருந்து கருவறுப்பதையே தமது நோக்கமாகக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கும்பல், இந்த “ஜனநாயக’ அமைப்பு முறைக்கு அவ்வப்போது காட்டும் போலிப் பணிவு, மரியாதை என்பன போன்ற சலுகைகளைக் கூட புரட்சித் தலைவி எப்போதுமே காட்டியதில்லை. நாயிடம் விளக்குக் கம்பம் பெறக்கூடிய மரியாதைக்கு அதிகமான எதையும் இந்த நாடாளுமன்ற அமைப்பு முறை புரட்சித் தலைவியிடமிருந்து இதுகாறும் பெற்றதில்லை.

இந்தக் கலகங்கள், அவமதிப்புகள் மற்றும் மரபுமீறல்கள் எவையும் ஆளும் வர்க்கத்தின் நலனையே கேள்விக்குள்ளாக்குபவையல்ல. சொல்லப்போனால், மிதவாதப் பசப்பல்களின்றித் தீவிரமாகவும், அலங்கார ஜோடனைகளின்றி அம்மணமாகவும் ஆளும் வர்க்கத்தின் வேட்கையையும் முரண்பாடுகளையும் அம்பலமாக்குகின்றன ஜெயலலிதாவின் நடவடிக்கைகள்.

தன்னுடைய கட்சியின் சமூக அடித்தளமாக விளங்கும் அரசியல் ரீதியில் பின்தங்கிய விவசாயிகளும், உதிரி வர்க்கத்தினரும் தன்னிடம் காட்டும் பணிவை, அமைச்சர்கள் காட்டும் நன்றிக் கடனை, இந்தத் தேசமே தன்னிடம் காட்ட வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். ஒரு போனபார்ட் என்ற முறையில் தன்னுடைய இந்த எதிர்ப்பார்ப்பிலிருந்து அவர் யாருக்கும் விலக்களிக்கவில்லை  ஜெகத்குரு உட்பட.

பார்ப்பன பாசிஸ்ட்
பார்ப்பனப் பாசிசம் என்பது அவருடைய சொந்தக் கொள்கை.

ஜெயேந்திரன் கைதின் காரணமாக “ஜெயலலிதா ஒரு பார்ப்பன பாசிஸ்டு” என்ற நமது மதிப்பீடு மாறிவிடவில்லை. பார்ப்பனப் பாசிசம் என்பது அவருடைய சொந்தக் கொள்கை. தன்னுடைய சாதி மற்றும் வர்க்கத்துக்கேயுரிய இயல்புணர்வின் உந்துதல் அடிப்படையில் அவர் ஒரு பார்ப்பன பாசிஸ்ட். கோல்வால்கர், ஹெட்கேவர் போன்ற ஞானசூனியங்களின் நூல்களைப் படித்தோ அல்லது அத்வானி போன்ற அரை நிஜார் சுயம்சேவக்குகளால் அறிவொளியூட்டப்பட்டோ அவர் இந்தக் கொள்கையை வந்தடையவில்லை.  தன்னைத் தவிர்த்த வேறொரு மேதையின் கொள்கையைப் பின்பற்றுவது ஒரு போனபார்டிஸ்டின் கவுரவத்துக்கு ஒவ்வாதது என்பதனால் கொள்கை விசயத்திலும் அவர் தனது சொந்தக் காலில் மட்டுமே நிற்க விரும்புகிறார்.

பாரதிய ஜனதா என்ற கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் ஜெயலலிதா அளித்து வந்த மதிப்பென்பது, அது ஒரு அனைத்திந்தியக் கட்சி என்ற அசவுகரியமான உண்மை தோற்றுவித்த நிர்ப்பந்தமேயொழிய, உளப்பூர்வமானது அல்ல. பார்ப்பன எதிர்ப்பின் சுவடே இல்லாத வடமாநிலங்களில் பா.ஜ.க. ஈட்டிய வெற்றியைக் காட்டிலும் பெரியார் இயக்கம் தழைத்த மண்ணில் “பாசாணத்தில் புழுத்த புழுவாக”, தான் நாட்டியிருக்கும் வெற்றிக் கொடியே போற்றத்தக்கது என்பது ஜெயலலிதாவின் கருத்து.

இது புரியாமல் தங்களைத் தேசியத் தலைவர்கள் என்று கருதி இறுமாப்புக் கொண்டிருந்த அத்வானி, ஜஸ்வந்த் சிங் வகையறாக்களை சொடக்குப் போட்டு போயஸ் தோட்டத்துக்கு வரவழைத்ததும், ஏறத்தாழ நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழச் செய்த பின்னரே, “அநாதைக்கு இஸ்திரிப் பெட்டி வழங்குவதைப் போல” தனது ஆதரவை அவர்களுக்கு வழங்கியதும் சமீப கால வரலாறு.

தமிழகத்தையே வீழ்த்திய தன்னுடைய தனித் திறமைக்கு மதிப்பளித்துத் தனது கோரிக்கையை நிறைவேற்றத் தவறிய குற்றத்துக்காக ஒரே நொடியில் பா.ஜ.க. ஆட்சியைக் கவிழ்க்கவும் அவர் தயங்கவில்லை.

அவ்வாறு கவிழ்த்த போது பார்ப்பனப் பாசிசத்தின் எதிர்காலம் குறித்த தனது கவலையை அவர் மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். ஒரு போனபார்ட்டிஸ்ட் என்ற முறையில் தனது சொந்த அரசியல் எதிர்காலம் பற்றி மட்டுமே அவர் கவலைப்பட்டார்.

ஜெயலலிதா
“திராவிட இயக்கத்தைப் பார்ப்பன இயக்கமாக உருமாற்றிய தனது அறிவுக் கூர்மையை அங்கீகரித்து, மதித்து, எட்டநின்று புகழ வேண்டுமேயன்றி, தனக்குப் புத்திமதி சொல்ல முயலக்கூடாது”

“இது நம்மவா ஆட்சி” என்று முன்னர் சங்கராச்சாரி கூறியதைப் போன்ற பொருளிலான குறுகிய சாதிப் பாசமல்ல ஜெயலலிதாவின் பார்ப்பனப் பற்று. அது அரசியல் சித்தாந்த ரீதியிலானது. தன்னையே பிரதமராக்கி வழிபடும் இந்து  இந்தியா குறித்த நப்பாசையையும் உள்ளடக்கியது. எனவே, “நம்மவள்’ என்ற தோரணையில் ஜெயாவிடம் உரிமை எடுத்து நெருங்கவும், அறிவுரை கூறவும், கடிந்துரைக்கவும் முயலும் பார்ப்பனர்கள் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும். இந்து பத்திரிகை வாங்கிக் கட்டிக்கொண்ட வழக்குகளைப் போல.

“கேடிகள், ரவுடிகள் அடங்கிய அ.தி.மு.க. என்கிற பெரும் கொள்ளைக் கூட்டத்தை ஒரு ரிங் மாஸ்டரைப் போலத் தன்னந்தனியாக நின்று சமாளித்துக் கொண்டிருக்கும் தனது திறமையை, திராவிட இயக்கத்தைப் பார்ப்பன இயக்கமாக உருமாற்றிய தனது அறிவுக் கூர்மையை அங்கீகரித்து, மதித்து, எட்டநின்று புகழ வேண்டுமேயன்றி, தனக்குப் புத்திமதி சொல்ல முயலக்கூடாது”  என்பதே பார்ப்பன அறிவுத் துறையினர்க்கும் ஆளும் வர்க்கத்திற்கும் ஜெயா விடுக்கும் செய்தி.

இந்துத்துவக் கொள்கையை அமல்படுத்தத் துடிக்கும் பார்ப்பனக் கும்பலால் ஆட்டுவிக்கப்படும் தன்முனைப்பற்ற கைப்பாவையல்ல ஜெயலலிதா. தனது சொந்தத் திட்டத்தின்படி இந்துத்துவத்தை மேலிருந்து திணிக்கும் முயற்சியில் சங்கராச்சாரியும் இராம. கோபாலனும்தான் ஜெயாவின் சதுரங்கக் காய்கள். தனது துணிவின் நிரூபணமாக ஜெயலலிதா அதிரடியாகக் கொண்டு வந்த மதமாற்றத் தடைச்சட்டம், அத்வானி போன்றோரை வெறும் வாய்ச்சவடால் பேர்வழிகள் என்று ஆர்.எஸ்.எஸ்ஸூக்கே நிரூபித்துக் காட்டும் ஒரு முயற்சியும் கூட.

ஜெயலலிதாவின் ஆன்மீக நம்பிக்கை எனப்படுவதும் ஆளும் வர்க்கத்துக்கேயுரிய கொடுக்கல்  வாங்கல் முறையிலானது. நன்மை  தீமைக்குக் கூலி கொடுக்கும் தார்மீக அதிகாரமாக அவர் கடவுளைக் கருதுவதில்லை. சாதி, சாராயம், உருட்டுக் கட்டை, பணப்பெட்டி போன்ற லவுகீக உபகரணங்களின் பட்டியலில் “கடவுள்” என்ற ஆன்மீக உபகரணமும் ஜெயலலிதாவின் வெற்றிக்கு வேலை செய்கிறது. அவ்வளவே!

தேர்தல் வெற்றி, நீதிமன்றத் தீர்ப்பு போன்ற குறிப்பான இலக்குகளை அடைவதற்கு உதவும் திறமையற்ற கோயில்களுக்கும்  கடவுளர்களுக்கும் ஜெயலலிதாவின் சந்நிதியில் வேலையில்லை. அந்தக் கடவுளர்களை “வேலை வாங்கும்” தொழில்நுட்பம் அறிந்த வல்லுநர்கள் என்ற முறையிலேதான் பணிக்கர்களும், புரோகிதர்களும் ஜெயலலிதாவின் மரியாதையைப் பெறுகிறார்கள்.

ஜெயலலிதா
ஜெயலலிதாவிடம் குடிகொண்டிருக்கும் வர்க்கத் திமிரும் சாதிய இறுமாப்பும் அசாத்தியமானவை.

எனவே, ஒரு பணிக்கருக்கு இணையான மரியாதையை சங்கராச்சாரியின் மீது ஜெயலலிதா வைப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மேலும் ஜெயலலிதாவின் அரசியல் உயர்வுக்கு சங்கராச்சாரி எந்த விதத்திலும் காரணமாக இல்லை. மாறாக, 1991-96 காலகட்டத்தில் சங்கராச்சாரியின் “ஆன்மீக உலகம்” தான் ஜெயலலிதாவின் தயவில் விரிவடைந்தது. பா.ஜ.க அரசிடம் காரியம் முடிக்கவும், வழக்குகளை முடக்கவும், கறுப்புப் பணத்தைக் கைமாற்றவும் உதவிய இடைத்தரகன் என்ற தகுதிக்கு மேல் வேறெந்தச் சொந்தத் தகுதியும் ஜெயேந்திரனுக்கு இல்லை. சுப்பிரமணிய சாமி என்ற வெள்ளை வேட்டி கட்டிய பார்ப்பான் ஜெயலலிதாவுக்குச் செய்து தந்த அதே பணிகளைத்தான் காவி உடை தரித்த இந்தச் சுப்பிரமணியும் செய்திருக்கிறான் எனும்போது, சங்கராச்சாரியிடம் கூடுதல் மதிப்போ பணிவோ கொள்ளத்தக்க அவசியம் எதுவும் ஜெயலலிதாவுக்கு இருந்திருக்க முடியாது  காமெராவுக்கு முன்னால் ஜெயேந்திரனிடம் லேசாகப் பணிந்து நிற்க நேர்ந்த அந்தக் கசப்பான தருணங்களைத் தவிர.

ஒரு பார்ப்பனப் பாசிஸ்டு என்ற முறையில் ஜெயலலிதாவைப் புரிந்து கொள்வதற்கான கோட்டுச் சித்திரம் இது.

ஒரு மேட்டுக்குடிப் பார்ப்பனப் பெண் என்ற முறையில் ஜெயலலிதாவிடம் குடிகொண்டிருக்கும் வர்க்கத் திமிரும் சாதிய இறுமாப்பும் அசாத்தியமானவை. ஆங்கிலக் கான்வென்டிலிருந்து ஆணாதிக்கம் கோலோச்சும் கோடம்பாக்கம் திரையுலகிற்குள் திடீரெனத் திணிக்கப்பட்டு, அங்கே ஒரு அரைக் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டு, எம்.ஜி.ஆரின் பாசிசக் குரூரங்களை அனுபவித்து, பின்னர் அவற்றையே தானும் உட்கிரகித்துக் கொண்டு எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக ஜெயலலிதா தன்னை நிலைநிறுத்திக் கொண்ட கதை நெடியது.

ஜெயலலிதாவின் கருத்துப்படி அவர் யாருடைய உதவியுமின்றி அரசியலில் தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொண்டவர். தன்னிடம் அண்டியிருந்து நத்திப் பிழைத்தவர்கள் தன்னை ஏளனம் செய்தாலோ விமரிசித்தாலோ அவர்களை விசேடமாகக் குறிவைத்துப் பழிவாங்க மறக்காதவர். சு.சாமியும், வை.கோ.வும், திருநாவுக்கரசும் பிரபலமான உதாரணங்கள்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

ஒரு நடிகை என்ற முறையில் பெரிய மனிதர்களின் அந்தரங்க வக்கிரங்களை அறிந்தவர். அதேநேரத்தில் இந்தப் பலவீனர்களுக்குத் “தீனி” போடுவதன்மூலம் தன் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும்  தயங்காதவர்.

ஒரு பாப்பாத்தி என்ற முறையில் “உயர்ந்த” ரசனையும், ஆங்கிலப் புலமையும் தனக்கு உண்டென்று “இந்து” பத்திரிக்கை வாசகர் வர்க்கத்துக்கு அவர் நிரூபிக்க விரும்புகின்ற அதே வேளையில், கருணாநிதியின் மீது எஸ்.எஸ்.சந்திரன் போன்றோர் தொடுக்கும் மட்டரகமான தாக்குதல்களையும், தன்மீது சொரியப்படும் அருவெறுக்கத்தக்க புகழுரைகளையும் கூச்சமின்றி  ரசித்து வாய்விட்டுச் சிரித்து மகிழ்பவர்.

“மேட்டுக்குடி லும்பன்” என்ற இரு சொற்களில் மேற்சொன்ன குணாதிசயங்கள் கொண்ட ஒரு நபரை அடக்கி விடலாம். ஆனால் ஜெயலலிதாவைப் பொறுத்தவரை இதுவும் ஒரு பரிமாணம்.

சமீபத்திய தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அரசு ஊழியர் பணிநீக்கம், மதமாற்றத்தடை, இலவச மின்சாரம் என எல்லா முடிவுகளையும் அவர் ஒரு சேரத் திரும்பப் பெற்றவுடன் தம் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டார்கள் ஆளும் வர்க்க அறிவுஜீவிகள். “”நெளிவு சுளிவைப் பழகி விட்டார்; பிடிவாதத்தைத் தளர்த்திவிட்டார்; சாதனைகளைக் குவிக்கக் கற்று விட்டார்; இனி தேவதைதான்…!” என்று பார்ப்பன அறிவுத்துறையினர் துள்ளிக் குதித்து மேலெழும்பிய அந்தக் கணமே, திருக்கை வால் அடியாக அவர்கள் முகத்தில் இறங்கியது சங்கராச்சாரியார் கைது!

சாதாரண எம்.எல்.ஏ.க்களையும் போலீசு அதிகாரிகளையும் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து பாதுகாக்கும் ஜெயலலிதா, பார்ப்பன மடாதிபதியைக் கைவிட்டது ஏன்? திரைமறைவு பேரங்களில் தோன்றிய பல முரண்பாடுகள் காரணங்களாகப் பட்டியலிடப்படுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் சில மிரட்டல்கள் மூலமே “ஜெ” முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும்.

பொய்க் குற்றவாளியை ஆஜர் செய்யத் தூண்டி, மசால்வடை வைத்து சங்கராச்சாரியைப் பொறியில் சிக்க வைத்த இந்த மர்மக் கதையில் “ஜெ’வின் தனிப்பட்ட பாத்திரம் முதன்மையானது. ஐதராபாத்துக்கு விரட்டிச் சென்று கைது செய்த முறை, முதல் குற்றவாளியாய்ச் சேர்த்த விதம், அனைத்துக்கும் மேலாக உயர்நீதி மன்றத்தில் அரசு வழக்குரைஞர் பயன்படுத்திய கவிதை வரிகள்! அதில் ஜெயலலிதாவின் முத்திரை பளிச்செனத் தெரிந்தது.

“சலுகை பெறத் தகுதியில்லாத கிரிமினல்”, “கூலிப் படைத் தலைவன்” என்ற அந்தச் சொற்கள் ஜெயலலிதாவுக்கு மட்டுமே சொந்தமானவை. “இப்படிப் பேசு’ என்ற உத்தரவில்லாமல் ஒரு அரசு வழக்குரைஞர் பேச முடியாதவை.

ஜெயேந்திரன்
“சலுகை பெறத் தகுதியில்லாத கிரிமினல்”, “கூலிப் படைத் தலைவன்”

இத்தகைய கடுமையான சொற்களால் சங்கராச்சாரியை அர்ச்சிப்பதற்கும், காமக் களியாட்டங்கள் குறித்த செய்திகளைத் தணிக்கை செய்யாமல் அவிழ்த்துவிட்டு சங்கரமடத்தின் புனிதத்தைக் கந்தலாக்குவதற்கும் ஜெயலலிதாவைத் தூண்டியது எது?

சங்கரராமன் மனைவியின் கண்ணீரா? பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அனுராதா ரமணனின் கண்ணீரா? மறைக்கப்பட்ட பல கொலைகள் குறித்த செய்திகளா? சங்கரராமனின் கடிதங்கள் விவரிக்கும் காமக் களியாட்டங்களா? அல்லது “தேர்தல் தோல்விக்குக் காரணம் ஜெயலலிதாவின் அகங்காரம்தான்” என்று பேட்டி கொடுத்த சங்கராச்சாரியின் “வரம்பு மீறிய” திமிரா?

நிதி கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டு இவையனைத்துமே காரணங்களாக அமைந்திருக்கலாம். பெரிய மனிதப் பொறுக்கித்தனங்களை அனுபவித்து உணர்ந்ததால் தோன்றிய கூடுதல் வெறுப்பாக இருக்கலாம். ஒரு பார்ப்பன விதவையின் கண்ணீர் தோற்றுவித்த விசேடமான பரிதாபவுணர்ச்சியாகவுமிருக்கலாம். அல்லது பெண்களைக் கொச்சையாக வருணிக்கும் ஜெயேந்திரனின் நாக்கு ஜெயலலிதா வரை நீண்டு அது அவரது காதுக்கு எட்டியுமிருக்கலாம். லாம்… லாம்… என்ற இந்தப் பட்டியல் நாம் அறியாத எல்லைகளுக்கெல்லாம் விரிந்து செல்லலாம்.

ஒன்று நிச்சயம். தனக்கே அதிகாரத் தரகு வேலை பார்த்து கமிசன் வாங்கியிருக்கும் ஜெகத்குருவை வள்ளலார் என்று நம்பி ஜெயலலிதா மோசம் போயிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பார்ப்பனியம் அங்கீகரிக்கும் துறவிக்கான பொது ஒழுக்கத்தில் மேற்படி திரைமறைவு வேலைகள் அனைத்தும் அடக்கம்.

ஆனால் திரைமறைவு லீலைகள்? அவற்றின் விரிவும் வீச்சும் ஜெயலலிதாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கக் கூடும். எந்தவிதமான அறிவும் திறமையுமில்லாத ஒரு தற்குறி, சுற்றுலா கைடு போல மொழிக்குப் பத்து வார்த்தை தெரிந்து வைத்துக் கொண்டு பாவ்லா காட்டும் ஜாலக்காரன், அமர்ந்திருக்கும் நாற்காலியின் உயரத்தையே தனது மேன்மையின் நிரூபணமாகக் கருதிக் கொள்ளும் ஒரு அற்பன், குறைந்தபட்சம் தனிநபர் ஒழுக்கத்தைக் கூடப் பேணமுடியாத ஒரு தறுதலை தன்னிடம் வாலாட்டுவதா, என்று அவர் ஆத்திரமடைந்திருக்கலாம்.

ஆனால், “கிரிமினல்” “கூலிப்படைத் தலைவன்” என்ற இனிய வசவுகள் மிகுந்த பொருட்செறிவுள்ளவை. அ.தி.மு.க. எனும் மாஃபியா கும்பலில் அம்மா போட்ட பிச்சையான அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு, அம்மாவுக்கே தெரியாமல் “திருட்டுத்தனமாக” கொள்ளையடிக்கும் துரோகிக்கும், அம்மாவுக்கே தெரியாமல் சொந்த சாம்ராச்சியமொன்றை உருவாக்கிக் கொள்ளும் கருங்காலிகளுக்கும் மட்டுமே உரியவை அந்தச் சொற்கள். எத்தகைய குற்றம் வளர்ப்பு மகனைக் “கிரிமினல்” ஆக்கி கஞ்சாகேஸில் உள்ளே தள்ளியிருக்குமோ, அத்தகைய குற்றம், ஜெயேந்திரனின் குற்றம்.

சங்கராச்சாரி
சங்கராச்சாரி, கிரிமினல் வேலைகளுக்குத் தனக்கே தெரியாமல் தனது செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதும் மன்னிக்க முடியாத குற்றங்கள்.

தன்னால் ஆளாக்கப்பட்ட சங்கராச்சாரி, தன்னிடம் பல்லிளித்துப் பல சலுகைகளைப் பெற்ற பரதேசி, தனக்கே தெரியாமல் ஒரு நிழல் சாம்ராச்சியத்தை உருவாக்கியிருப்பதும், அதன் கிரிமினல் வேலைகளுக்குத் தனக்கே தெரியாமல் தனது செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதும் ஜெயலலிதாவின் சந்நிதியில் மன்னிக்க முடியாத குற்றங்கள்.

இது அறம் வழுவிய குற்றத்தால் மட்டுமே அம்மாவுக்கு ஏற்பட்ட சீற்றமல்ல. எம்.ஜி.ஆர் என்ற வக்கிரம் பிடித்த பெண் பித்தனை தமிழகத்தின் தாய்க்குலமே தெய்வமாகப் போற்றிய போதிலும், அந்த நடிகனின் உண்மை முகம் இந்த நடிகைக்குத் தெரிந்தேயிருந்தது. இங்கோ, தன் சாதியில் பிறந்ததற்கு மேல் வேறெந்தத் தகுதியுமில்லாத ஒரு சிறு கும்பல், துறவி என்ற ஒரேயொரு தகுதியைக் காட்டித் தன்னிடமே நடித்து அதிகாரமும் பவிசும் பெற்று இப்போது தன்னையே ஏமாற்றி ஒரு தனி சாம்ராச்சியம் நடத்தவும் துணிந்திருக்கிறது.

ஆகவே, கொலைக் குற்றங்களும், பாலியல் குற்றங்களும் தோற்றுவித்திருக்கக் கூடிய ஆத்திரத்தை பன்மடங்கு வீரியப்படுத்திய குற்றம்  ஜெயலலிதாவையே முட்டாளாக்கிய குற்றம். முன்னது தனிநபர் ஒழுக்கம் தொடர்பானது. பின்னதோ ஜெவின் அதிகாரம் மற்றும் நம்பகத்தன்மை தொடர்பானது.

கொஞ்சம் எளிமைப்படுத்தி மக்கள் வழக்கில் சொல்வதென்றால், “திருப்பதிக்கே லட்டா?” என்பதுதான் கேள்வி.

இந்தக் கோபத்திற்குக் கணக்குத் தீர்த்துக் கொள்ள தற்போது நாம் காண்கின்ற வழிமுறைகளையெல்லாம் ஜெயலலிதா கையாண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஊர் உலகத்துக்கு வெளிச்சமாகாமல் ஊமையடியாகக் கூட சங்கர மடத்தை அடித்திருக்கலாம்.

சங்கர்ராமன்
சங்கர்ராமன் படுகொலை

கொலைக் குற்றத்துக்காக சங்கராச்சாரியைக் கைது செய்தேயாக வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதற்கான புறச்சூழல் எதுவும் தமிழகத்தில் இல்லை. தி.மு.க.வின் போராட்டம் நடந்திருந்தாலும் அது அடையாளப் போராட்டமாகவே முடிந்திருக்கும். அதற்குப் பின்னரும் ஜெயலலிதா கைது செய்திருக்க வில்லையெனினும், ஒரு பார்ப்பன எதிர்ப்பு எழுச்சியை தமிழகத்தில் உருவாக்கவல்ல சக்திகள் இங்கு இல்லை.

புறச்சூழலின் இந்த எதார்த்தமான நிலைமைதான் விசித்திரமான முறையில் “சங்கராச்சாரி கைது” எனும் “துணிச்சலான” நடவடிக்கைக்கும் காரணமாகியிருக்கிறது.

சங்கராச்சாரியைக் கைது செய்வதன் மூலம் பார்ப்பன மதமும், பார்ப்பன ஒழுக்கமும் கேலிக்குள்ளாக்கப்படுமென்பது ஜெயலலிதா அறியாததல்ல; ஆனால், ஒரு திண்ணை அரட்டை என்ற வரம்பைத் தாண்டி அதுவொரு பார்ப்பன எதிர்ப்பு எழுச்சியாகவோ, இயக்கமாகவோ வளர்ந்து கைமீறி விடாது என்ற உண்மைதான் ஜெயலலிதாவின் துணிச்சல் அல்லது கோபம் என்று சொல்லப்படும் தனிப்பட்ட பண்புகளுக்குச் செயல் வடிவம் கொடுத்துள்ளது.

தனிநபர்களின் குணாதிசயங்கள் வீரியமிக்கவையாக இருக்கலாம். அவற்றுக்குப் பல விசேடத் தன்மைகளும் இருக்கலாம். இருப்பினும் ஒரு அளவிற்கு மேல் அவற்றை நுணுகி ஆராய்வது பயனற்றது. எத்தகைய குணாதிசயங்களும் செயல் வடிவம் பெறுவதற்கான வரம்பை, குறிப்பிட்ட அரசியல்  சமூகச் சூழல்தான் தீர்மானிக்கிறது. எனவே நாம் பிரதானமாகக் கவனம் செலுத்த வேண்டிய களம் இதுதான்.

இந்தக் கைது குறித்து தி.மு.க முதல் தலித் அமைப்புகள் ஈறாக அனைவரும் கள்ள மவுனம் சாதித்துவரும் இந்தச் சூழலில், பார்ப்பன மடங்கள் ஆதீனங்களுக்கும், பார்ப்பனப் பாசிசத்திற்கும் எதிரானதோர் இயக்கத்தினை உந்தித் தள்ளவல்ல “ஜெயேந்திரன் கைது” எனும் இந்த நெம்புகோல், கேட்பாரற்றுத் தெருவில் கிடக்கிறது. இந்தக் கைது நடவடிக்கையின் அரசியல் ஆதாயம் தங்கத் தட்டில் வைத்து ஜெயலலிதாவிடமே வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரு புன்னகையுடன் அதை ஏற்றுக் கொள்ளும் உங்கள் அன்புச் சகோதரி, தன்னுடைய துணிவுக்கும் நடுநிலைக்கும் சான்றாக அதை உங்களிடமே காட்டுகிறார். தோல்வியின் காரணமாக அவர் திரும்பப் பெற்ற பார்ப்பனப் பாசிசச் சட்டங்களை நாளை வேறொரு வடிவில் அவர் கொண்டு வர முனையும் போதும், அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் போதும் “சங்கராச்சாரி சத்தியமாக” அவை நடுநிலையானவையாகவே நம்பப்படும். துணிச்சலானவையாகவும் சித்தரிக்கப்படும்.

ஒரு போனபார்ட்டுக்கேயுரிய முறையில் அவர் நாளையே பல்டியடிக்கக் கூடும். சங்கராச்சாரியைப் பணயம் வைத்துத் தனது அரசியல் ஆதாயங்களுக்காக ஆளும் வர்க்கத்தினரிடமே பேரம் பேசக் கூடும். பார்ப்பனப் பாசிஸ்டுக்குரிய மனச்சாட்சி மேலெழும்பும் பட்சத்தில் வழக்கைப் பலவீனப்படுத்தி சங்கராச்சாரியை விடுவிக்கவும் கூடும்.

நடப்பது எதுவாக இருந்தாலும் அதன் அரசியல் பயனை எந்த ஓட்டுச் சீட்டு எதிர்க்கட்சியும் அறுவடை செய்ய முடியாது. வெறும் பார்வையாளர்களாக இருந்து வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும். இவர்கள் தாமே தமது தலையில் எழுதிக் கொண்ட விதி இது.

நடப்பது எதுவாக இருந்தாலும் பார்ப்பனப் பாசிஸ்டுகளும், அதிகார வர்க்கமும், பார்ப்பன ஊடகங்களும் ஜெயலலிதாவைக் கைவிடப் போவதில்லை. அவர்களுடைய நெறி அது.

எனவே, பூ விழுந்தாலும், தலை விழுந்தாலும் புரட்சித் தலைவிக்கே வெற்றி! கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை.

பார்ப்பனப் பாசிசக் கும்பலை எள்ளி நகையாடித் தட்டித் தகர்த்தெறிவதற்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பை, சங்கரமடம் எனும் முலாம் வெளுத்த தங்கக் கலசத்தை மட்டுமின்றி, அதைத் தாங்கி நிற்கும் தரகு முதலாளி வர்க்கம், அதிகார வர்க்கம், அறிவுத்துறை, ஊடகங்கள் என்ற கோபுரத்தின் கட்டுமானத்தையே ஒவ்வொரு கல்லாய் உருவி மக்கள் முன் காட்சிக்கு வைக்கும் இந்த அரிய வாய்ப்பை, நாம் பயன்படுத்த முனையாத வரை, வெற்றி நமக்கல்ல, புரட்சித் தலைவிக்குத்தான்.
எனினும், நாம் வாய்விட்டுச் சிரிக்க மட்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

லூயி போனபார்ட்
லூயி போனபார்ட்

முடியாட்சியை ஒழித்து குடியாட்சியை உலகிற்கே அறிமுகம் செய்த பிரெஞ்சு நாட்டின் நாடாளுமன்றத்திற்கு, 1848 டிசம்பர் 10-ம் தேதியன்று நடந்த தேர்தலில் லூயி போனபார்ட் என்ற கழிசடை நாடாளுமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

பாட்டாளி வர்க்கத்திடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்தக் கழிசடையிடம் சரணடைந்து அல்லல்பட்ட பிரெஞ்சு முதலாளித்துவத்தையும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கழிசடையைத் தவிர வேறு யாரையும் தெரிவு செய்யவியலாத அதன் நிலையையும் ஒருங்கே எள்ளி நகையாடும் ஒரு அற்புத இலக்கியத்தை எழுதினார் மார்க்ஸ். (நூல்: லூயி போனபார்ட்டின் பதினெட்டாவது புரூமேர் )

“இப்பொழுது போனபார்ட்டைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர முதலாளித்துவ வர்க்கத்துக்கு வேறு வழி கிடையாது என்பது வெளிப்படை. கான்ஸ்டான்சில் நடைபெற்ற திருச்சபையினர் கூட்டத்தில் பரிசுத்தவாதிகள் போப்புகளின் ஒழுக்கக் கேடான வாழ்க்கையைக் குறை கூறிய பிறகு ஒழுக்கச் சீர்திருத்தத்தின் அவசியத்தைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருந்தார்கள். கர்தினல் பியேர் ட ஆயீ அவர்களைப் பார்த்து இடியோசை போலச் சொன்னார். “பிசாசே நேரில் வந்தால் தான் இனிமேல் கத்தோலிக்கத் திருச்சபையைக் காப்பாற்ற முடியும்; நீங்கள் தேவதைகளைப் பற்றிப் பேசி என்ன பயன்?” என்றார். திடீர்ப்புரட்சிக்குப் (1848) பிறகு இதைப் போலவே பிரெஞ்சு முதலாளிகளும் கூக்குரலிட்டார்கள் :

இனிமேல் டிசம்பர் 10-ந் தேதிச் சங்கத்தின் தலைவரால்  லூயி போனபார்ட்டால்  மட்டுமே முதலாளித்துவச் சமூகத்தைக் காப்பாற்ற முடியும்! திருட்டு மட்டுமே இனி சொத்தைக் காப்பாற்ற முடியும்; பொய்ச் சத்தியம் மட்டுமே மதத்தைக் காப்பாற்றும்; விபச்சாரமே குடும்பத்தைக் காப்பாற்றும்; குழப்பமே ஒழுங்கைக் காக்கும்!”

பெரியார் பாடுபட்ட தமிழ் மண்ணில் பார்ப்பனியத்தை மீட்டெடுத்துத் தமது இழந்த கவுரவத்தை மீண்டும் நிலைநாட்டிக் கொள்வதற்கு புரட்சித் தலைவியிடம் சரணடைந்தது பார்ப்பனக் கும்பல். புரட்சித் தலைவியோ, “சமூகத்தின்மீது ஒழுக்கத்தை நிலைநாட்டுவதற்கான பாரம்பரிய உரிமையை” பட்டா போட்டு வைத்திருந்த பார்ப்பன மடத்திடமிருந்து அந்த உரிமையையும் வேட்டியையும் ஒரே நேரத்தில் உருவி விட்டார்.

ஒழுக்கத்தின் உறைவிடமாக 2000 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருந்த பார்ப்பனக் கும்பலின் மீதே “ஒழுக்கத்தை” நிலைநாட்டியதன் மூலம் நல்லொழுக்கத்தின் புதிய ஜெகத்குருவாக அவதரித்துள்ளார் ஜெயலலிதா.

சங்கரமடத்தின் மீது ஒழுக்கத்தை நிலைநாட்டியிருக்கிறது “பிசாசு’. அந்த மட்டில் நாம் மனம்விட்டுச் சிரிக்கலாம்.

– மருதையன்
________________________________________________________
புதிய கலாச்சாரம் 2005

________________________________________________________

9 மறுமொழிகள்

  1. ஜெயலலிதா தமிழ்நாட்டின் அவமான சின்னம். இந்த பெண்ணை தமிழ்நாட்டின் ஆட்சியாளராக தேர்ந்தெடுத்த தமிழ் மக்களுக்கு அடிப்படையான மனித அறிவு தேவை.

    • அடிப்படை அறிவு தேவையா?
      ஜெயாவே அதையும் “இலவசமா” கொடுத்தா
      ரொம்ப புண்ணியம்:
      அடுத்த தேரதலில்,அமெரிக்க சனாதிபதி,மலாக்க நாட்டின்
      மக்களவை பிரதிநிதின்னு எவ்வளவு பட்டம் பதவி ஆத்தாவைத் தேடி வரப்போகுது?

  2. // ஒரு நடிகை என்ற முறையில் பெரிய மனிதர்களின் அந்தரங்க வக்கிரங்களை அறிந்தவர். அதேநேரத்தில் இந்தப் பலவீனர்களுக்குத் “தீனி” போடுவதன்மூலம் தன் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் தயங்காதவர். //

    நல்ல கட்டுரையில், எதற்கு இப்படி சாணி வாரி அடிக்கிறீர்கள்? ஆதாரம் வைத்திருக்கிறீர்களா?

    • உண்மை சில (பல?) சமயங்களில் துர்நாற்றம் அடிக்கத்தான் செய்யும். பொறுத்துக் கொண்டு போவதா? அல்லது தூக்கி எறிவாதா? என்ற முடிவெடுப்பது தான் முக்கியம்.

  3. You people seem to have lost your mental balance and completely blabbering about Jaya and others. I could not understand what you are trying to say except you are so angry with Jaya’s popularity and in fact, you are worst than Karunanidhi, who should be having such ill feelings. It seems you need to keep sucking the cock of Brahmins to be in the limelight and keep that continue

  4. அருமையான கட்டுரை.ஒரு உளவியல் மருத்துவருக்குரிய நுட்பத்தோடு ஜெயலலிதாவின் குணாதிசயங்களை ஆய்ந்து ஜெயேந்திரர் கைது நடவடிக்கை எப்படி சாத்தியமானது என்று கட்டுரை விரிவாக எடுத்து சொல்கிறது.

    ஜெயலலிதாவின் மோதிரக்கையால் குட்டுப்பட்ட கனவான்கள் அவர்கள் வாழ்நாளில் மறக்கவே முடியாத அடிகளை குறிக்கும் வரிகள் மிகவும் அருமை.

    \\ பார்ப்பன எதிர்ப்பின் சுவடே இல்லாத வடமாநிலங்களில் பா.ஜ.க. ஈட்டிய வெற்றியைக் காட்டிலும் பெரியார் இயக்கம் தழைத்த மண்ணில் “பாசாணத்தில் புழுத்த புழுவாக”, தான் நாட்டியிருக்கும் வெற்றிக் கொடியே போற்றத்தக்கது என்பது ஜெயலலிதாவின் கருத்து.
    இது புரியாமல் தங்களைத் தேசியத் தலைவர்கள் என்று கருதி இறுமாப்புக் கொண்டிருந்த அத்வானி, ஜஸ்வந்த் சிங் வகையறாக்களை சொடக்குப் போட்டு போயஸ் தோட்டத்துக்கு வரவழைத்ததும், ஏறத்தாழ நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழச் செய்த பின்னரே, “அநாதைக்கு இஸ்திரிப் பெட்டி வழங்குவதைப் போல” தனது ஆதரவை அவர்களுக்கு வழங்கியதும் சமீப கால வரலாறு.//

    \\“நம்மவள்’ என்ற தோரணையில் ஜெயாவிடம் உரிமை எடுத்து நெருங்கவும், அறிவுரை கூறவும், கடிந்துரைக்கவும் முயலும் பார்ப்பனர்கள் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும். இந்து பத்திரிகை வாங்கிக் கட்டிக்கொண்ட வழக்குகளைப் போல.//

  5. எம்.ஜி.ஆர்.பற்றி வரும் வரிகள் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்கின்றன.
    \\ எம்.ஜி.ஆர் என்ற வக்கிரம் பிடித்த பெண் பித்தனை தமிழகத்தின் தாய்க்குலமே தெய்வமாகப் போற்றிய போதிலும், அந்த நடிகனின் உண்மை முகம் இந்த நடிகைக்குத் தெரிந்தேயிருந்தது.//

    எம்.ஜி.ஆர்.என்ற அந்த வக்கிரம் பிடித்த பாசிச கோமாளியையும் ஜெயலலிதா கணக்கு தீர்த்தார். 1984-க்கு பின் நடைபிணமாக இருந்த நிலையிலும் அவர் முதல்வராக இருந்த போது கோமாளியை தூக்கி விட்டு தன்னை முதல்வராக்கும்படி அன்றைய பிரதமர் ராஜீவுக்கு கடிதம் எழுதினார், 91-96 ஆட்சி காலத்தில் எம்.ஜி.ஆர். என்ற சொல்லையே உச்சரிக்க அ.தி.மு.க. அடிமைகள் அஞ்சினர்.எம்.ஜி.ஆர் பெயரை வைத்தோ குண்டு வெடித்து ராஜீவ் செத்ததை வைத்தோ தாம் ஆட்சியை பிடிக்கவில்லை.தனது சொந்த செல்வாக்கால் ஆட்சியை பிடித்ததாக அவர் நடந்து கொண்டார்.

  6. // ஒரு போனபார்ட்டுக்கேயுரிய முறையில் அவர் நாளையே பல்டியடிக்கக் கூடும். சங்கராச்சாரியைப் பணயம் வைத்துத் தனது அரசியல் ஆதாயங்களுக்காக ஆளும் வர்க்கத்தினரிடமே பேரம் பேசக் கூடும். பார்ப்பனப் பாசிஸ்டுக்குரிய மனச்சாட்சி மேலெழும்பும் பட்சத்தில் வழக்கைப் பலவீனப்படுத்தி சங்கராச்சாரியை விடுவிக்கவும் கூடும்.

    நடப்பது எதுவாக இருந்தாலும் அதன் அரசியல் பயனை எந்த ஓட்டுச் சீட்டு எதிர்க்கட்சியும் அறுவடை செய்ய முடியாது. வெறும் பார்வையாளர்களாக இருந்து வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும். இவர்கள் தாமே தமது தலையில் எழுதிக் கொண்ட விதி இது.

    நடப்பது எதுவாக இருந்தாலும் பார்ப்பனப் பாசிஸ்டுகளும், அதிகார வர்க்கமும், பார்ப்பன ஊடகங்களும் ஜெயலலிதாவைக் கைவிடப் போவதில்லை. அவர்களுடைய நெறி அது.

    எனவே, பூ விழுந்தாலும், தலை விழுந்தாலும் புரட்சித் தலைவிக்கே வெற்றி! கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை.//

    இது தான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.

    மிகவும் அருமையாகயும், நுட்பமாகவும் எழுதப்பட்ட கட்டுரை. “கம்யூனிஸ்டுகள் வறட்டுவாதிகள். அவர்களது இலக்கியம் பிரச்சார இலக்கியம் தான். தரமற்ற இலக்கியம்” என்று கூப்பாடு போடும் முதலாளித்துவ அறிவுஜீவிகளின் முகத்தில் அறைகிறது தோழரின் கட்டுரை.

Leave a Reply to RAMADOSS KOTHANDARAMAN SEETHAPATHI பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க