privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பா1 கோடி வீடுகள் காலி – 50 லட்சம் பேருக்கு வீடில்லை

1 கோடி வீடுகள் காலி – 50 லட்சம் பேருக்கு வீடில்லை

-

ரோப்பா முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் வீடு இல்லாமல் தெருவில் தவிக்கையில், மறுபுறம் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் யாரும் தங்காமல் “காலியாக”வே இருக்கும் அதிர்ச்சியான தகவலை, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதனின் அத்தியாவசிய தேவையான இருப்பிடத்தைக் கூட முதலீடாக மாற்றி பல மக்களை வீதிக்கு விரட்டியிருக்கும் முதலாளித்துவத்தின் வக்கிரக் கதை இனி விரிவாக.

அயர்லாந்து
அயர்லாந்தில் உள்ள காலியான விற்கப்படாத வீட்டுத் தொகுப்பு.

இங்கிலாந்தின் பிரபல நாளிதழான கார்டியன், ஐரோப்பிய யூனியன் முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் இங்கிலாந்தில் சுமார் 7 லட்சம் வீடுகளும், ஜெர்மனியில் 18 லட்சம் வீடுகளும், பிரான்சில் 24 லட்சம் வீடுகளும், ஸ்பெயினில் 34 லட்சம் வீடுகளும் கேட்பாரின்றி காலியாக கிடப்பது தெரிய வந்துள்ளது.

இதை விட மிக அவலமான விடயம், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரீஸ், போர்ச்சுகல் போன்ற நாடுகளிலும் லட்சகணக்கான வீடுகள் ஆளில்லாமல் அனாதையாக விடப்பட்டுள்ளன.

அத்தனை வீடுகளும் உலகமயம் உருவாக்கிய புதுப் பணக்காரர்களால் “முதலீடு” என்கிற வகையில் வாங்கி போடப்பட்டவையாகும். லண்டனில் இப்படி முதலீடுகளாக வாங்கிக் குவித்த மிக ஆடம்பரமான வீடுகள் இன்று தங்கவும் ஆளில்லாமல், பராமரிப்பும் இல்லாமல் பாழடைந்து சிதைந்து வரும் காட்சிகளையும் கார்டியன் பத்திரிக்கை படம் பிடித்து வெளியிட்டுள்ளது.

பலகையால் மூடப்பட்டுள்ள வீடுகள்
வடக்கு இங்கிலாந்தில் உள்ள லிவர்பூலில் சீல் வைக்கப்பட்டுள்ள வீடுகள்.

2007-2008-ம் ஆண்டில் ஏற்பட்ட ரியல் எஸ்டேட் துறையின் ஊக பேர வணிக சூதாட்டம் உச்சத்தில் இருந்த போது, வீடுகளை வாங்கி விற்பது பெரும் லாபம் ஈட்டும் முதலீடாக விளம்பரப் படுத்தப்பட்டது. அதன் விளைவாக ஐரோப்பாவின் பல பணக்காரகளும், புது பணக்காரர்களும், தங்கள் முதலீடுகளை விரைவாக இரட்டிப்பாக்கி கொள்ள வீடுகளை வாங்கிக் குவித்தனர். இங்கிலாந்து, ஜெர்மனியில் வசிக்கும் பணக்காரர்கள் ஸ்பெயினில் தனி சொகுசு வீடுகளை (வில்லா) வாங்கிக் குவித்தனர். வீட்டின் மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு வேகமாக உயர்ந்து வரும் அதே நேரம், வீட்டை வாடகைக்கும் விடலாம் என்ற இரட்டை லாப ஆசை, வீடுகளின் மீது முதலீடுகளை குவிக்க வைத்தது.

திடீரென பெருகிய முதலீடுகளால் ஐரோப்பா முழுவதும் குறிப்பாக ஸ்பெயின், பிரான்சு போன்ற நாடுகளில் புதிய பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முளைத்துப் பெருகின. அவர்கள் பல புது திட்டங்களை அறிவித்து அப்பார்ட்மென்டுகள், தனி வில்லாக்கள், அதி சொகுசு வீடுகள், விளையாட்டு மைதானம் இணைந்த வில்லாக்கள், விடுமுறை வீடுகள் என கட்டிக்குவித்து அதை கணிசமாக விற்று லாபமீட்டவும் செய்தனர்.

காலி வீடுகள்
இங்கிலாந்தில் 7 லட்சம் காலி வீடுகள் உள்ளன.

தனி குடும்பத்திற்கு (நபருக்கு) விளையாட்டு மைதானம், நீச்சல் குளம் இணைந்த வீடுகளும்,  விடுமுறை நாள் வீடுகள் அதாவது விடுமுறையை கழிக்க கடற்கரை வீடுகள் என உருவாக்கப்பட்டன. பணம் இருப்பவருக்கு வேலை நாளில் தங்க ஒரு வீடு, விடுமுறையில் தங்க தனி வீடு என இவர்களின் ஆடம்பர அராஜகத்திற்கு அளவே இல்லாமல் இருந்தது.

ஆனால், விரைவில்இத்தகைய அராஜக முதலாளித்துவ பொருளாதாரத்தை தவிர்க்க இயலாமல் தாக்கும் கடும் பொருளாதார நெருக்கடி ஐரோப்பாவையும் பதம் பார்த்தது. பலர் வேலை இழந்தனர். அமெரிக்காவில் 2008-ல் வங்கிக் கடன் நெருக்கடியில் சிக்கி வங்கிகள் திவாலானதற்கு கட்டுப்பாடில்லாமல் வழங்கப்பட்ட வீட்டுக் கடன்கள் தான் ஆணி வேர். இந்தக் கடன்களை வம்படியாக வழங்க வைத்து பின்னர் மக்களை மொட்டையடித்தது கட்டுமானத் துறை முதலாளிகள்தான்.

ஐரோப்பிய காலி கட்டிடங்கள்
ஐரோப்பிய நாடுகளில் காலியாக உள்ள வீடுகள் எண்ணிக்கை விபரம்.

இந்த பொருளாதார நெருக்கடியின் விளைவாக பல நடுத்தர வர்க்க குடும்பங்கள் வேலையில்லாமல் வீதிக்கு விரட்டப்பட்டனர், அவர்களால் வாடகையும் கொடுக்க முடியாது என்பதால் ஐரோப்பா முழுவதும் வீடுகள் காலியாகத் தொடங்கின.

கட்டிடக் கலையின் உச்சத்தை தொட்ட பிரான்சில் வீடிழந்து வீதிக்கு வருபவர்களின் எண்ணிக்கை 2009-ம் ஆண்டிலிருந்து இன்று வரை சுமார் 5 லட்சமாக உயர்ந்து விட்டது.

கட்டப்பட்ட வீடுகள் அப்படியே தான் இருக்கின்றன. அவற்றில் தங்குவதற்கான விலையை இவர்களால் கொடுக்க முடியவில்லை. அதனால் வீட்டை காலியாக வைத்துவிட்டு இவர்களை விரட்டி விட்டார்கள். ஆம். அஃறிணை பொருட்கள்தான் உயிருள்ள மனிதர்களை விட முக்கியமானது. அடுத்து உலகமயமாக்கலின் மூலம் லாபத்தை அதிகப்படுத்த மக்களின் வேலைகளையும் பிடுங்கி விட்டார்கள். உழைக்க அவர்கள் தயார் தான், ஆனால் அவர்களுக்கு வேலை இல்லை. வருமானம் இல்லை, வீடில்லை உணவில்லை.

இது தான் சுதந்திர சந்தை எனும் முதலாளித்துவ விதி. மக்கள் வீதியில் விடப்பட்டு சிதைந்து போனாலும் கூட காசில்லாதவர்களை வீடுகளில் தங்க வைக்கக் கூடாது என்பதுதான் சந்தையின் “மனிதாபிமானம்”. சிதைந்து போய் கொண்டிருக்கும் அந்த வீடுகளை, வீடில்லாதவர்கள் ஆக்கிரமித்து விடாமல் போலீசைக் கொண்டு பாதுகாப்பது “ஜனநாயக“ அரசின் கடமை. இந்த ஜனநாயகத்தைத்தான் முதலாளிகள் உச்சி மோந்து வருடிக் கொடுக்கிறார்கள்.

முதலாளித்துவ மனிதாபிமானமும், ஜனநாயகமும் அதன் லாபத்தில் உறைந்து போய் இருப்பதை, இதை விட எளிதாக எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்.

லிவர்பூல் காலி வீடுகள்
லிவர்பூலில் சீல் வைக்கப்பட்ட காலி வீடுகள்.

இங்கிலாந்தின் வீடில்லாதவர்களுக்கான அமைப்பின் ஆதரவளாரான டேவிட் அயர்லாந்து இதை பற்றி கூறுகையில் “வீடுகள் மக்கள் தங்குவதற்காக தான், ஆனால் வீடுகள் இப்படி காலியாக உள்ளது என்றால் ஏதோ தவறாக உள்ளது. வீடுகளை முதலீட்டு பொருளாக நினைப்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோருகிறார். ஏதோ தவறு இல்லை, ஒட்டு மொத்த முதலாளித்துவ கட்டமைப்பே தவறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வீடில்லாதவர்கள் அனைவரையும் நிரப்பிவிடும் அளவு வீடுகள் இருந்தும் ஸ்பெயினில் மேலும் பலர் வீடிழந்து புதிதாக வீதிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்று புலம்புகிறார் ஸ்பானிய வீட்டுவசதி கழக உறுப்பினரான மரியா.

ஐரோப்பிய யூனியனின் வீடில்லாதவர்களுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பின் இயக்குனரான ப்ரிக் ஸ்பின்வின் கூறுகையில் ”வீடில்லாதவர்கள் நிலைமை மோசமாக உள்ளது, அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்து பல வீடுகளை சந்தையில் விற்பனைக்கு தயார் செய்ய வேண்டும்” என்று கோருகிறார். இது போன்று அழுகிப் போன பிணத்துக்கு அலங்காரம் செய்ய அல்லது செயற்கை சுவாசம் கொடுத்து உயிர்ப்பிக்க கோருவதுதான் இவர்களைப் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளின் திருப்பணி.

வீடு வெளியேற்றம்
ஸ்பெயின் – மாட்ரிடில் மாற்றுத் திறனாளி ஒருவரை வீட்டிலிருந்து வெளியேற்ற வந்திருக்கும் போலீஸ் படையும், அதை எதிர்த்து நிற்கும் அண்டை வீட்டுக்காரர்களும்.

இந்த வாதங்கள் மேலே அதிகாரத்தில் இருப்பவர்களின் காதில் கேட்காமல் இல்லை. ஐரோப்பிய யூனியன் கமிசனில் இந்த பிரச்சனை விவாதிக்கப்பட்டு, வீடில்லாதவர்களுக்கு தீர்வை வழங்க உரிய தந்திரத்தை வகுக்க வேண்டும் என்ற கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது.

1 கோடி வீடுகள் காலியாக உள்ளன, 50 லட்சம் பேர் வீடில்லாமல் இருக்கிறார்கள். இதற்கு என்ன தீர்வு, வீடு இல்லாதவர்களுக்கு 50 லட்சம் வீடுகளை கொடுத்தால் கூட 50 லட்சம் வீடுகள் மிஞ்சி விடும். எளிமையான கூட்டல் கழித்தல் கணக்கு சிறு குழந்தைக்கு கூட தெரியும். எளிமையான இந்த தீர்வை கண்டுபிடிக்க ஐரோப்பிய கமிசன் இனிமேல் ஒரு தந்திரத்தை கண்டுபிடிக்க வேண்டுமாம். இது கோரிக்கையாம், அது கமிசனில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாம். முழுப் பூசணிக்காயை இப்படி சரவண பவன் முழுச் சாப்பாட்டில் மறைக்க முனைகிறார்கள். இதை என்னவென்று சொல்வது? ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நோபல் பரிசு கிடைத்தது ஏனென்று இப்போது புரிகிறதா?

தன்னார்வ தொண்டு நிறுவன இயக்குனர் பிரிக் ஸ்பின்வின்னின் கோரிக்கையை கவனமாக கேளுங்கள், வீடுகளை சந்தைக்கு திறந்து விட வேண்டுமாம், சந்தையில் வேலைகள் ஒழித்துக் கட்டப்பட்டதால், வேலை இழந்து, வருமானம் இழந்து கடன் தவணையோ, வாடகையோ கட்ட முடியாமல் வீட்டை விட்டு வீதிக்கு வந்தார்கள் மக்கள். மீண்டும் வீடுகளை சந்தைக்கு விட்டு என்ன செய்வது? தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த பிரச்சனைக்கு எப்படிப் பட்ட தீர்வை முன் வைக்கிறார்கள் என்று பாருங்கள்?

இப்படியான ஏற்றத் தாழ்வுக்கு இது தான் குறிப்பிட்ட காரணம் என்று ஒன்றை கூறிவிட முடியாது. இதற்கு பல காரணங்கள் இருகின்றன. பல கோணங்களில் இதை ஆராய வேண்டும் என்று நழுவுகிறார்கள் முதலாளித்துவ நிபுணர்கள். அதற்கு ஒரு ஆய்வு நிறுவனத்தை உருவாக்கி, பல ஆண்டுகள் உழைத்து, ஆய்வறிக்கை வெளியிட்டு ஒரு சிலர் நோபல் பரிசு கூட வென்று விடலாம். யார் கண்டது. மக்களின் துயரத்தில் விருது ஜெயிப்பது என்பது அன்னை தெரேசாவிலிருந்து, நுண்கடன் நிபுணர் முகமது யூனுஸ் வரை நீள்கிறது.

முன்னர் லாபமீட்டும் நோக்கத்தில் பல புதிய வீடுகளை கட்டி தள்ளிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இந்த வீழ்ச்சியை சரி கட்ட அரை குறையாக கட்டிய வீடுகளை இடித்துவிட்டு செயற்கை பற்றாக்குறையை உருவாக்கி லாபம் பார்க்கலாம் என்று கடப்பாறையுடன் களத்தில் இறங்கியிருக்கின்றனர்.

இவ்வளவு வீடுகள் காலியாக இருக்க இன்னும் வாங்குவார்களா? என்று நீங்கள் கேட்கலாம். இன்னும் லண்டனில் ரியல் எஸ்டேட் விலை உயர்வில் தான் இருக்கிறது என்று உரக்கக் கூறுகிறார் ரியல் எஸ்டேட் முகவர் சாவ்லிஸ்.

வீடில்லாதவர்களுக்கு வீடுகள் கொடுத்தாலும் உபரியாக மீந்து போகும் அளவற்று வீடுகள் உள்ளது என கார்டியன் ஆராய்ந்து கூறிய பின் என்ன நடந்தது?

கார்டியன் கூறுவதற்கு முன்னரே பல இடங்களில் வீட்டு கடன் தொகையை  கட்டாதவர்களின் வீடுகளை ஜப்தி செய்யும் இடங்களில் கணிசமான போரட்டங்கள் நடந்தபடி உள்ளன.

ஆனால் வீடிழந்த மக்களுக்கு ஆக்கிரமிப்பு, போராட்டம், இருப்பவனிடமிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் போன்ற சிந்தனைகள் வராமல் இருக்க அரசிடம் கோரிக்கை வைக்க சொல்லி கொடுத்து கொண்டிருக்கின்றன தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். நமது அன்னா ஹசரேவை கூப்பிட்டு ஐரோப்பிய ‘ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கச் சொல்வார்களா’ என்று தெரியவில்லை.

பலர் தேர்தலில் தாங்கள் தெரிவு செய்த பிரதிநிதிகள் மூலம் இந்த பிரச்சனை தீர்க்கப்படலாம் என நம்பிக்கொண்டிருக்கலாம். ஆனால் தீர்வு எளிமையானது, குடியிருக்க வீடு தேவைப்படுபவர்கள் அவற்றை எடுத்துக் கொள்வதுதான் தீர்வு. அவர்களை சுரண்டிய பணத்தில் கட்டப்பட்ட வீடுகள் தான் அவை.

–    ஆதவன்

படங்கள் : நன்றி theguardian.com , rt.com

மேலும் படிக்க