வர்க்கத்தனைய மன நீட்டம் ! மே நாள் வெல்லட்டும் !
துலங்கும் ஆயிரம் சொல்லெடுத்தாலும்
தொழிலாளி என்பதைப் போல்
விளங்கும் பொருள் தருவன வேறில்லை!
சொல்லணி, பொருளணி
ஏகதேச உருவக அணி… இன்னும்
எத்தனை அணியிருந்தாலும்
உழைக்கும் வர்க்கமே உன் முன்னணிபோல்
உலகை கவிதையாக்கும் ஓர் அணியில்லை!
உரிமைகள் மறந்ததால்
பெருமைகள் மறந்தாய்,
தொழிலாளியே! புவி ஆளத்தான்
நீயே பிறந்தாய்…
கல்லாய் கிடந்த உலகம்
சிலையாய் மிளிர்ந்தது உன்னால்,
புல்லாய் கிடந்த பூமி
நெல்லாய் நிறைந்தது உன்னால்.
இயந்திரங்கள் புது உலகு படைத்தன
உனது இயக்கு விசையால்,
இயற்கைக்கும் சிறகு முளைத்தன
உன் உழைப்பு தசையால்.
நதிகளில் கலந்த
உன் உதிரம்
அணைக்கட்டுகளாய் இறுகின.
ஆழ்கடல் துடித்த உனது இதயம்
முத்துக்களாய் சிதறின.
மலைகளில் உரிந்த
உன் நரம்புகள்
தேயிலை இலைகளில் பரவின.
அலைகளில் தெறித்த
வியர்வைகள்
மீன்களின் செவுள்களில் சிவந்தன.
நெடிதுயிர்ந்த மலைகளின் புதுவழி
உன் கண்களில் அடங்கின!
விரிந்த கானகத்தின் விளை பயன்
உனது கைகளில் தொடங்கின.
உலகின் ஒவ்வொரு அழகும்
உழைப்பாளியே உன்னிடம் மயங்கின!
முதலில்
நாம் ஏதோ என்ற
எண்ணம் தகர்,
தாரணிக்கே நீதான் நிகர்!
மெல்லிய வண்ணத்துப்பூச்சிகளின்
நிறங்கள்
உன் உழைப் பூ வில்தான் கரைகின்றன.
சில்லிடும் காற்றின் இனிமை
உன் தோல்களில்தான் தன்னைத் தொலைக்கின்றன.
இயற்கையின் உதடுகள்
விரும்பும் இன்சொல்
தொழிலாளி!
இருப்பும் பெருமையும்
இப்படியிருக்க,
நம்மை ஏறி மிதிப்பதா முதலாளி?
தொழிலாளி தயவில்தான்
முதலாளி – தோழா
இதைத் தெரிந்தவன்தான் அறிவாளி!
முதலாளிக்கேது மூலதனம்
எல்லாமே
நம் உழைப்பு கொடுத்த சீதனம்,
சிப்ட்டு, சிப்ட்டாய்
நீ சிந்திய ரத்தம்தான்
கட்டு கட்டாய்
அவன் கைகளில் நோட்டு!
ஓராயிரம் கோடி மூலதனம்
முதலாளியிடமிருந்தால் என்ன?
உழைப்பாளர் கை படாவிட்டால்
அது அனாதைப் பிணம்!
ஒரே நாள்
உலகின் தொழிலாளர்
உழைப்பை மறுத்தால்
பங்கு சந்தை நாறிப் போகும்,
ஒரு வாரம்
துப்புரவு தொழிலாளி
தொழிலை மறுத்தால்
ஊரே நாறிப் போகும்!
தொழிலாளிதான் உலகின் தேவை!
முதலாளி
அவன் வளர்க்கும் நாய்க்கே சுமை.
எப்பேற்பட்ட இயக்கம் நீ
தொழிலாளியே!
அதிகாலை முதல் அந்திசாயும் வரை
சுரண்டிய முதலாளித்துவத்தை
பதினெட்டாம் நூற்றாண்டிலேயே
பணியவைத்த மே நாளின் மேன்மை நீ!
பிலடெல்பியா, நியூயார்க், சிகாகோ
என அமெரிக்க முதலாளித்துவத்தின்
ஆணவத்தை
நடுத்தெருவில் மிதித்தவன் நீ,
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்சு
ஜெர்மன்… எங்கும்
முதலாளித்துவத்தின் மென்னியைப் பிடித்து
“எட்டு மணிநேர வேலையை”
வென்றெடுத்தவன் நீ,
அமெரிக்க ஹே சந்தையில் எரிந்து…
அய்ரோப்பிய வீதிகளில் சிதைந்து…
இந்திய ஆலைகளில் புகைந்து…
தமிழகத் தெருக்களில் அதிர்ந்து…
தொழிலாளி வர்க்க உரிமைகளை
பெற்றுத்தந்த பரம்பரையின்
நீட்சியடா நீ!
இதைப் பற்றிக்கொள்ள
பலமிழந்து பரிதவிப்பதோ நீ?
வர்க்க உணர்வுதான்
தொழிலாளியை வாழவைக்கும்,
போராட்ட உணர்வுதான்
துயரத்திலிருந்து மீள வைக்கும்.
கட்டிடத் தொழிலாளி
கம்பளித் தொழிலாளி
ரொட்டி தயாரிப்பு தொழிலாளி
அனைவரும் ஒன்று சேர்ந்ததால்
அன்று மே நாள் சிலிர்த்தது!
நீ ஹீண்டாய் தொழிலாளி
நான் நோக்கியா தொழிலாளி
நீ காண்ட்ராக்ட் தொழிலாளி
நான் கம்பெனித் தொழிலாளி
என பிரிந்து நிற்பதால்
சா நாள் வதைக்குது இன்று.
கட்டிடத் தொழிலாளி கையில்
திமிசு,
கணிணித் தொழிலாளி கையில்
மவுசு,
இதிலென்ன நான் பெரிசு, நீ பெரிசு
எம்.என்.சி. பவுசு,
கரணையோ, கணிணியோ
உழைப்பின் சுரணை ஒன்றானால்
முதலாளித்துவம் காட்டுமா ரவுசு?
மூலதனத்தின் மீது
வெறுப்பை உமிழ்ந்தான்
முன்னோடித் தொழிலாளி,
வளர்ச்சி என்று வாயைப் பிளந்தவன்
இதோ நோக்கியா வாசலிலேயே காலி!
மூடநம்பிக்கையினும் மோசமானது
முதலாளித்துவ நம்பிக்கை!
மூலதனம் நம்மை வாழவிடாது,
வேலை, கம்பெனி எதுவானால் என்ன
உழைக்கும் வர்க்கமாய் ஒன்றுபடு!
சொந்த இனமாயினும்
சுரண்டும் முதலாளி பகைவனே,
எந்த இனமாயினும்
உழைக்கும் வர்க்கம் தோழனே!
பிளவுபடுத்தும் சாதிகளை
தூர ஓட்டு!
இனி பேச்சுக்கே இடமில்லை
உழைக்கும் வர்க்க அதிகாரத்தை
நிலை நாட்டு!
எல்லா பொருளையும் படைத்தவன் நீ
தொழிலாளியே!
எல்லோர்க்கும் பொருளை படைத்தவன் நீ
உனக்கான சிந்தனையை உருவாக்கு
வர்க்க உணர்வை கருவாக்கு!
இனி உழைப்பவர் வைத்ததே சட்டம்!
உழைப்பவர் உரைப்பதே நீதி!
உழைப்பவர் ஆளவே சகலமும்!
இதை மறுப்பவர்க்கெதிராய் கலகம்!
இதுதான் இனிவரும் உலகம்!
தோழா! பரம்பரை வர்க்க உணர்வை
பற்றிக் கொண்டு போராடு!
பன்னாட்டு கம்பெனி, பார்ப்பன சர்வாதிகாரத்தை
வெட்டி எறி வேரோடு!
இயற்கையே எதிர்பார்க்கும்
இனிய இயங்கியல் நீ,
உலகின் அழகிய விடியலனைத்தும்
உழைப்பாளியே!
உன் முகத்தில் விழிக்க துடிக்கின்றன…
உலகின் மெல்லிய பூக்களனைத்தும்
உனது படைப்பின் உணர்ச்சியை கேட்கின்றன…
மேலான உன் உழைப்பின்
பொது நலன் பார்த்தே
மேகங்கள் மார்பு சுரக்கின்றன…
மேதினி மாற்றும்
உன் போர்க்குணம் பார்க்கவே
காற்றின் இமைகள் திறக்கின்றன!
துரை. சண்முகம்