புரட்சியில் இளைஞர்கள் – நூல் அறிமுகம்

11

புரட்சி என்பது தெருவில் போராட்டம், போர்க்களம் என்பதோடு முடிவதில்லை. அது, சமூக வாழ்க்கை முழுவதும் விரிவாக மாற்றி அமைக்கப்படுவதில் தொடர்கிறது என்பதை புரிய வைப்பதில் உரிய பங்காற்றுகிறது “புரட்சியில் இளைஞர்கள்” எனும் சிறுநூல். உள்ளூர் சீர்குலைவு சக்திகளையும், சுற்றி வளைக்கும் ஹிட்லரின் நாசிசம், உலக முதலாளித்துவ சக்திகளின் சதித்தனங்கள் இவைகளை எதிர்த்து உலகின் முதல் சோசலிச அரசை நிறுவுவதில் ஒரு தலைமுறையின் பொறுப்புணர்வை வருங்காலத்திற்கும் வழங்குகிறது இந்நூல். முக்கியமாக அக்காலகட்டத்தில் புரட்சி என்பதை இளமையின் குறிக்கோளாக வகுத்துக் கொண்ட இளைஞர்களின் நாட்குறிப்பு, கடிதம், உரை ஆகியவைகளின் வழி புரட்சிகர உணர்வின் பன்முகப் பதிவாக விரிகின்றன காட்சிகள்.

புரட்சியில் இளைஞர்கள்சமூகத்துக்கான உணர்ச்சிகளை தன்னுணர்ச்சிகளாகத் கொண்டிருப்பதை இயல்பானதாக வெளிப்படுத்துகிறார்கள் இந்த இளைஞர்கள். ஏதாவதொரு ஒரு சமூக அமைப்பில் ஒட்டிக்கொண்டு பிழைப்பது எனும் மானுட தாழ்நிலையை வெறுத்து, மனிதகுலம் முழுமைக்குமான சமத்துவ சகவாழ்வு என்பதற்கும் குறைவாக எதையும் ஏற்க மறுக்கும் பிடிவாத கருத்தழகாய் மிளிர்கிறார்கள் இந்த உண்மை மனிதர்கள்.

இவான் வசீலியெவிச் பாபுஷ்கின் – இவர் ஒரு பீட்டர்ஸ்பர்க் தொழிலாளி. சிறை, சித்ரவதைகளுக்கு அஞ்சாதது மட்டும் இவர் வீரமல்ல, எந்தச் சூழலிலும் பழைய சமூக அமைப்புக்குள் மனிதகுலம் சிறைப்பட்டிருப்பதை சகித்துக் கொள்ளாத தொழிலாளரின் விடுதலைக்கான சலியாத வாழ்க்கைப் போராட்டம்தான் இவர் நமக்கு கற்றுக் கொள்ளத்தரும் வீரப்பண்பு. ஜாரின் கொலைப்படை உளவுபார்க்கும் தருணத்திலும் சக தொழிலாளிகளை அமைப்பாக்கும் அயராத உழைப்பு, புரட்சிகர இதழான இஸ்க்ராவை தொழிலாளரின் மத்தியில் ரகசியமாக கொண்டு செல்லும் நெளிவு சுளிவான வேலை, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தொழிலாளிகளுக்கான செய்திகளை திரட்டித் தரும் வர்க்க பேரார்வம், இதன் வளர்ச்சிப்போக்கில் அவரே இஸ்க்ரா நிருபராக, உறைபனி சைபீரியாவில் தீப் பிடிக்கும் பேச்சாளராக, கருத்துக்களத்தில் சுரண்டும் வர்க்கத்திடமிருந்து பாட்டாளிகளை வென்றெடுக்கும் அறிவுக் கூர்மையாக, நாட்டின் புரட்சிகர நாடித்துடிப்பாக இயங்கிய பாபுஷ்கினைப் பார்க்கையில், புரட்சி என்பதன் பன்முக ஆளுமையின் தேவையை நாமும் உணர்கிறோம். ஜாரின் சிறையிலிருந்து தப்பித்து லண்டனுக்கு போன பின்பும், தனக்கு தாய்மொழி தவிர வேறு அயல்மொழி தெரியாத சுழலிலும் புரட்சிக்கு பொருத்தமாய் அங்கும் தன்னை ஒரு இலக்கு நோக்கிய வேலையில் ஈடுபடுத்திக் கொள்ளும் பாபுஷ்கினின் வாழ்வின் சுறுசுறுப்பு வீணடியும் நமது நாட்களையும், இளமையையும் சுய நினைவு கொள்ளச் செய்கின்றன.

புய்னாக்ஸ்கி எனும் இளைஞன் பதினாராவது வயதில் போல்சவிக் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்கிறான். சோசலிச தாய்நாட்டைக் காப்பதற்கான போர்க்களத்தில் முப்பது வயதிலேயே முடிக்கப்படுகிறது அவனது வாழ்க்கை! மரணத்தின் வாசலில் கூட தன்னைப் பற்றியல்ல, தாய்நாட்டின் சோசலிச லட்சியங்களுக்காகவே சிந்திக்கும் அந்த மனிதத் தன்மை கம்யூனிச புரட்சியாளர்களுக்கே உரியது! கம்யூனிஸ்டுகள் என்றால் காதல், மகிழ்ச்சி எதுவுமே இருக்காது என புழுதி கிளப்பும் பேர்வழிகளுக்கும் சேர்த்து புய்னாக்ஸியின் ” காதலிக்கான கடிதம் ” புதிய கண்ணோட்டங்களை திறக்கிறது.

“காதல் எவ்வளவுதான் வலியதாய் இருந்தாலும் என்னுடைய கருத்தோட்டத்துக்கு பொருந்த வேண்டும்” என அவர் முன்மொழியும் உணர்ச்சி துணிச்சல் எத்தனை பேருக்கு உண்டு?  “சொந்த நலத்தை நிறைவேற்றிக் கொள்வதும் பொது நலத்தைப் போராடிப் பெறுவதும் அறிவார்ந்த விதத்தில் ஒருங்கிசைவுடன் இணைக்கப்பட வேண்டும்” என்ற புய்னாக்ஸ்கியின் வரிகள், மட்டுப்படாத அவரது மனிதகுலக் காதலையும் வெளிப்படுத்துகிறது. இவ்வளவு தெளிவாக அவர் காதலிக்கு கடிதம் எழுதும் சூழல் என்ன தெரியுமா? எதிரிப் படைகளிடம் பிடிபட்டு மரணக் குழிக்கு சுட்டுத் தள்ளப்பட அவர் அழைத்துச் செல்லப்படும் தருணத்தில்தான் தனது காதலின் சித்தாந்த வலிமையை காதலிக்கு வழங்குகிறார். பெண்களை பிரபல செல்வாக்காலும், மிரட்டலாலும் பிடிக்க ,இலக்கியமும் எழுதிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ கழிசடைகள், எழுத்துக்களில் சுகம் தேடும் வாசகப்பரப்பை தொடர்ந்து தனது சொந்த நலனுக்கான மந்தைகளாக வைத்திருக்கும் பேர்வழிகளுக்கு மத்தியில், புய்னாக்ஸியின் எழுத்தும், கருத்தும், தனது காதலியை தனது சொந்த மகிழ்ச்சியின் உடைமையாக ஆக்காமல், “தாத்தூ” என்ற அந்தப் பெண்ணை இளங் கம்யூனிஸ்ட்டு கழகத்தின் தலைவியாக மனிதகுல காதலுக்கு உயர்த்துகிறது.

“மூன்று சூரியன்களின் கதிர்கள்
என்னை முழுக்காட்டுகின்றன,
எல்லோருக்கும் பொதுவான சூரியன்,
சோவியத் ஆட்சி,
முடிவில் நீ….
நீ எனது கதிரவள்”

என்று தனது காதலின் அன்பை உலகுக்கு அர்த்தப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறார் அந்த முப்பது வயது கம்யூனிஸ்ட்.

‘கம்யூனிசம், அமைப்பு என்றாலே கட்டுப்பாடு, மகிழ்ச்சியாகவும், இன்பமாகவும் வாழ முடியாது, புரட்சி வந்தா ஜாலி போய் விடும்’ என்று மருள்பவர்களுக்கு இன்பத்தின் உதாரணமாக தனது வாழ்வை வழங்குகிறார் செக்மரியோவ் எனும் இளம் கம்யூனிச புரட்சியாளர். விவசாயக் கல்லூரி மாணவரான இவர் சோசலிச அரசின் கூட்டுப்பண்ணை அமைப்பில் தீவிரமாக பங்காற்றியவர். “கட்சி சொல்வதை அப்படியே சாப்பிடுவார்கள், அது தவிர வேறு ஒன்றும் தெரியாது”, என்று ஹார்லிக்ஸ் பேபிகள் கிளப்பும் பீதிக்கு நடைமுறையில் பதில் சொல்கிறார் செர்மரியோவ். இருபத்திரெண்டு வயதிலேயே கல்வியில் மாநிலத்திலேயே முதலிடம், அரசாங்க பண்ணையின் உதவி இயக்குநர், தவிர எழுத்தறிவின்மையை போக்க மக்களிடம் பொறுமையுடன் போராடி வகுப்புகளை நடத்தும் புதிய சூழலில், புதிய வேலைகள், என பல தன்மைகளில் ஒரு கம்யூனிஸ்டு இயங்க வேண்டியதன் அவசியத்தையும், அவ்வாறு புதுப்புது விசயங்களுக்கு தலை கொடுத்து இயங்கிய அனுபவத்தையும் கொண்டதாக விளங்குகிறது இளங் கம்யூனிஸ்ட்டு செக்மரியோவின் வாழ்க்கைக் குறிப்புகள்.

“எதுக்கு இந்த அமைப்பு, சதா சல்லை பிடித்த வேலை, உனக்கு உள்ளது ஒரு வாழ்க்கைதான், ஆகவே, அதில் நீ அதிக இன்பம் பெற வழி தேடு! முடிந்தவரை உனக்கு அதிக வசதியாக இருக்கும்படி எங்கும் முயற்சி செய்!” என்று புத்தி புகட்டும் தனிமனித தத்துவவாதிகளுக்கு பொறுப்பாக பதில் சொல்கிறது செக்மரியோவின் “இன்பம் பற்றி” எனும் நாட்குறிப்பு. “இன்பக் கேளிக்கைகளும் செயலின்மையும் அல்லது வயிராற உண்டு உறங்குபவனின் மட்டித்தனமான திருப்தியும் மனிதனுக்கு ஆழ்ந்த உணர்ச்சிகளை ஏற்படுத்த முடியுமா?” என்று நெருக்கமாக கேட்பதுடன், “இன்பம் என்றால் என்ன?” என்று வாழ்க்கையின் அனுபவங்களிலிருந்து நாட்குறிப்பு சுட்டிக்காட்டும் பகுதிகளை நீங்களே உங்கள் சொந்த அனுபவத்தோடு பொருத்திப் படித்தால் புது இன்பம் கிடைக்க வழி உண்டு.

“பண்படாத பொருள் என்னுடைய கைகளின் உதவியால் உணர்வுள்ள தொழிலாளியாக உருவாகும் போது, அவனுக்குள் வர்க்க உணர்வை நான் தூண்டி எழுப்பும் போது… எனக்கு மனநிறைவு ஏற்படுகிறது. அப்போது எனது ஆற்றல்கள் அதிகரிக்கின்றன. அப்போது நான் உயிருள்ள நபர்! என் மனச்சோர்வு அகன்று விடுகிறது!” சொல்வது யார் தெரியுமா? சோசலிசத்துக்கான பணிகளில் தன்னை இணைத்துக் கொண்ட பத்தொன்பது வயது மாணவி லிஸீனவா. மாஸ்கோ தொழிலாளர்கள் மத்தியில் அரசியல் பணியாற்றும் அந்த தருணத்தைதான் அந்த இளம் பெண் உணர்வுபூர்வமாக நேசித்து “அனயீதாவுக்கு” எழுதும் கடிதத்தில் இப்படி குறிப்பிடுகிறார்.

“தொழிலாளி வர்க்கம்தான் வளர்ச்சி பெறும் வர்க்கம்” என்று அந்த வயதிலேயே தனது புரட்சியின் லட்சியத்தை உறுதி செய்கிறார். உயர்கல்வி படித்து, பாரின் ரிட்டனாகி எவனோ ஒரு எம்.என்.சி. கம்பெனியில் குப்பை கொட்டும் வாயிலிருந்து இப்படி ஒரு உற்சாகத்தை பணி நிறைவை பார்க்க முடியுமா? சமூகத்துக்கான உழைப்பு சகல இன்பத்தையும் வென்று விடுகிறது என்பதை கவிதையாக வழங்குகிறது லிஸீனாவின் “விரைவில் வெயில் அடிக்கும்” எனும் கடிதம்.

இந்நூலின் முதல் தலைப்பிலும், இரண்டாம் தலைப்பிலும் தோழர் லெனினது உரைகள் புரட்சி, வாழ்க்கை, வர்க்க கண்ணோட்டம் பற்றி பன்முக கருத்துக்களை அறிவுறுத்துகின்றன. “இத்தகைய மனிதர்கள் இல்லா விட்டால் ரசிய மக்கள் என்றென்றைக்கும் அடிமை மக்களாக, அடிவருடி மக்களாக இருந்திருப்பார்கள்” என்று லெனின் கூறுவதைக் கேட்கையில், அது ரசியாவைத் தாண்டி நம் காதுக்கும் உரைக்கிறது.

புரட்சிகர சித்தாந்தமில்லாமல், புரட்சிகர மனிதர்கள் இல்லை, இந்நூலின் தலைசிறந்த தலைமுறையின் இளைஞர்கள், – நாளை நாம் போற்றுவோம் என்பதற்காக வாழ்ந்து காட்டவில்லை. நடைமுறை சாத்தியம்தான் என்று கம்யூனிச சித்தாந்தத்தை வருங்காலம் பின்பற்றவே வழிகாட்டுகிறார்கள் அவர்கள்! அந்த மனிதர்களுடன் உறவாடுங்கள், புரட்சிகர லட்சியங்களில் இணைவதன் மூலம் செக்மரியோவும், லிஸீனவாவும் இன்னும் வாழ ஆசைப்படுகிறார்கள்… உங்கள் செயல்பாடுகளின் வழி!

– துரை. சண்முகம்.

நூல்: புரட்சியில் இளைஞர்கள் கடிதம் – உரை – நாட்குறிப்பு
பக்கம்: 48
விலை: 25

கிடைக்குமிடம் :
கீழைக்காற்று வெளியீட்டம், 10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை – 2
044 – 28412367

பதினெட்டு தலைப்புகளைக் கொண்டதாக மாஸ்கோ பதிப்பகம் வெளியிட்ட இந்நூலின் ஐந்த தலைப்புகளை மட்டும் கொண்டது இச்சிறு நூல். இந்நூலின் முழுத்தொகுப்பையும் விடியல் பதிப்பகம் – கோவை வெளியீட்டுள்ளது.

11 மறுமொழிகள்

  1. கற்றது கையளவுகள் இக் கட்டுரைகளை எல்லாம் படிக்க மாட்டார்கள். ஆனால்

    “என்னை உங்கள் எதிராளியாக நினைக்க வேண்டாம். கம்மியுனிசம் பற்றி அறியாத ஒரு பாமரனாக கருதி, இந்த பாமரனுக்கும் புரியும் வண்ணம் கொஞ்சம் விளக்குங்களேன்”

    என்று மட்டும் தீராது புலம்பிகொண்டு மட்டும் இருப்பார்கள் .

    • திரு கற்றது கையளவு

      ஒருவேளை நீங்கள் இச் சமுகத்தை இலக்கியங்கள் மூலம் கற்க விரும்பினால் திரு கல்கி அவர்கள் எழுதீய தியாகபூமி என்ற புதினத்தில் இருந்து தொடங்கலாம். மேலும் எம் தோழன் மாக்சிம் கார்க்கி எழுதிய தாய் என்ற புதினத்தையும் [சு]வாசிக்கலாம். இந்த புதினங்கள் பற்றீய சிறு குறிப்புகளை கீழே கொடுத்து உள்ளேன்.

        • தாய்
          ——-
          [1]தாய் எனும் ரஷிய புதினம் மார்க்ஸிம் கார்கியால் எழுதப்பட்டது. இது உலகின் மிகச் சிறந்த செவ்விலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

          [2]ரஷியாவின் கம்யுனிசப் புரட்சிக்கு நெருங்கிய காலகட்டத்தை காலமாகவும், புரட்சியில் பங்கேற்க்கும் இளைஞர்களை கொண்ட தொழிற்சாலையை கதை களமாகவும் கொண்ட புதினம். இந்த புதினம் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கபட்டுள்ளது. திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.

          [3]பாவெல் எனும் புரட்சியாளரின் தாய் நீலவ்னா கொஞ்சம் கொஞ்சமாக தன் நிலையிலிருந்து எப்படி தனது மகனின் கருத்துகளால் ஈர்க்கப்படுகிறாள், உண்மையை புரிந்து கொள்கிறாள், புரட்சியாளர்களுக்கு உதவ உத்வேகம் கொள்கிறாள், தனது வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியை எப்படி கண்டடைகிறாள் என்பதை உணர்வு பொங்க சொல்லுவதோடு நம்மையும் அந்த தாயோடு பயணிக்க வைக்கிறது நாவல்..

          • தியாகபூமி
            ————-
            [1]தியாகபூமி கல்கி எழுதிய சமூகப் புதினங்களுள் ஒன்று. கல்கி இப் புதினத்தில் நிகழ்ச்சிகள் மூலமாகவும், கதைமாந்தர் வாயிலாகவும் காந்தியக் கருத்துகளை வெளியிட்டு உள்ளார். 1938-1939 களில் இப்புதினம் கோடை, மழை, பனி, இளவேனில் என நான்கு பாகங்களாக வெளிவந்தது.

            [2]தீண்டாமை, பெண்விடுதலை, மது விலக்கு, விடுதலைச் சிந்தனை ஆகிய கருத்துகளடங்கிய இப்புதினம் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. அப்படம் ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்டுப் பின் தடை விலக்கப்பட்டது.இந்தப் புதினத்தின் முக்கிய அம்சங்களின் ஒன்று, கல்கி ஒவ்வொரு கதாபாத்திரத்தின் எண்ணங்களையும் அவரவர் பார்வையிலிருந்து சொல்லியிருக்கிறார். நடைமுறைச் சமுதாயத்தில் காணப்படும் யதார்த்தமான பாத்திரங்களையே தமது புதினத்தில் கல்கி இடம் பெறச் செய்துள்ளார்.

            தியாகபூமி புதினத்தை படிக்க….

            http://www.tamilkalanjiyam.com/literatures/kalki/thiyaga_boomi/index.html#.U2x-N6I5iW5

          • தியாகபூமி
            ————-
            [1]தியாகபூமி கல்கி எழுதிய சமூகப் புதினங்களுள் ஒன்று. ஆனந்த விகடனில் இருபது இதழ்களில் தொடராக வெளிவந்தது. கல்கி அவர்கள் இப் புதினத்தில் நிகழ்ச்சிகள் மூலமாகவும், கதைமாந்தர் வாயிலாகவும் காந்தியக் கருத்துகளை வெளியிட்டு உள்ளார். இப்புதினம் கோடை, மழை, பனி, இளவேனில் என நான்கு பாகங்களாக வெளிவந்தது.

            [2]தீண்டாமை, பெண்விடுதலை, மது விலக்கு, விடுதலைச் சிந்தனை ஆகிய கருத்துகளடங்கிய இப்புதினம் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. அப்படம் ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்டுப் பின் தடை விலக்கப்பட்டது.இந்தப் புதினத்தின் முக்கிய அம்சங்களின் ஒன்று, கல்கி ஒவ்வொரு கதாபாத்திரத்தின் எண்ணங்களையும் அவரவர் பார்வையிலிருந்து சொல்லியிருக்கிறார். நடைமுறைச் சமுதாயத்தில் காணப்படும் யதார்த்தமான பாத்திரங்களையே தமது புதினத்தில் கல்கி இடம் பெறச் செய்துள்ளார்.

  2. திரு கற்றது கையளவு,

    ஒருவேளை நீங்கள் இச் சமுகத்தை இலக்கியங்கள் மூலம் கற்க விரும்பினால் திரு கல்கி அவர்கள் எழுதீய தியாகபூமி என்ற புதினத்தில் இருந்து தொடங்கலாம். மேலும் எம் தோழன் மாக்சிம் கார்க்கி எழுதிய தாய் என்ற புதினத்தையும் [சு]வாசிக்கலாம். இந்த புதினங்கள் பற்றீய சிறு குறிப்புகளை கீழே கொடுத்து உள்ளேன்.

    மேலும் திரு சந்தனமுல்லை அவர்கள் எழுதிய தாய் என்ற புதினத்தை பற்றீய அறிமுகம் உங்கள் வாசிப்புக்கு உதவும் என நம்புகின்றேன்.
    https://www.vinavu.com/2011/04/21/mother-maxim-gorky/

    தியாகபூமி
    ————-
    [1]தியாகபூமி கல்கி எழுதிய சமூகப் புதினங்களுள் ஒன்று. ஆனந்த விகடனில் இருபது இதழ்களில் தொடராக வெளிவந்தது. கல்கி இப் புதினத்தில் நிகழ்ச்சிகள் மூலமாகவும், கதைமாந்தர் வாயிலாகவும் காந்தியக் கருத்துகளை வெளியிட்டு உள்ளார். 1938-1939 களில் இப்புதினம் கோடை, மழை, பனி, இளவேனில் என நான்கு பாகங்களாக வெளிவந்தது.

    [2]தீண்டாமை, பெண்விடுதலை, மது விலக்கு, விடுதலைச் சிந்தனை ஆகிய கருத்துகளடங்கிய இப்புதினம் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. அப்படம் ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்டுப் பின் தடை விலக்கப்பட்டது.இந்தப் புதினத்தின் முக்கிய அம்சங்களின் ஒன்று, கல்கி ஒவ்வொரு கதாபாத்திரத்தின் எண்ணங்களையும் அவரவர் பார்வையிலிருந்து சொல்லியிருக்கிறார். நடைமுறைச் சமுதாயத்தில் காணப்படும் யதார்த்தமான பாத்திரங்களையே தமது புதினத்தில் கல்கி இடம் பெறச் செய்துள்ளார்.

    தியாகபூமி புதினத்தை படிக்க….

    http://www.tamilkalanjiyam.com/literatures/kalki/thiyaga_boomi/index.html#.U2x-N6I5iW5

    தாய்
    ——-
    [1]தாய் (உருசியம்: Мать) எனும் ரஷிய புதினம் மார்க்ஸிம் கார்கியால் எழுதப்பட்டது. 1907 இல் முதன் முதலாக வெளியான இது உலகின் மிகச் சிறந்த செவ்விலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

    [2]ரஷியாவின் கம்யுனிசப் புரட்சிக்கு நெருங்கிய காலகட்டத்தை காலமாகவும், புரட்சியில் பங்கேற்க்கும் இளைஞர்களை கொண்ட தொழிற்சாலையை கதை களமாகவும் கொண்ட புதினம். இந்த புதினம் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கபட்டுள்ளது. திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.

    [3]பாவெல் எனும் புரட்சியாளரின் தாய் நீலவ்னா கொஞ்சம் கொஞ்சமாக தன் நிலையிலிருந்து எப்படி தனது மகனின் கருத்துகளால் ஈர்க்கப்படுகிறாள், உண்மையை புரிந்து கொள்கிறாள், புரட்சியாளர்களுக்கு உதவ உத்வேகம் கொள்கிறாள், தனது வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியை எப்படி கண்டடைகிறாள் என்பதை உணர்வு பொங்க சொல்லுவதோடு நம்மையும் அந்த தாயோடு பயணிக்க வைக்கிறது நாவல்..

  3. புரட்சினு சொல்லிட்டு ஸ்டாலின் படத்த போட்டிருக்கிங்களே அவரெல்லாம் புரட்சியாளர்னா அந்த மாதிரி புரட்சியே தேவையில்லை… லெனினையாவது ஒத்துகலாம், ஸ்டாலின்? தன்னோட மக்கள இரும்புகரம் கொண்டு அடக்கிட்டு, தேவையில்லாம அமெரிக்காவுடன் பனிப்போர் நடத்தி சோவியத் யுனியன பட்டினி போட்டு வெத்து ஜம்பம் பண்ணிகிட்டு திரிஞ்சவர் அவர்!

    • என்ன சார்! புதுகதை சொல்லுறீங்க!! ஸ்டாலின் எங்கே அமெரிக்காவுடன் பனிப்போர் நடத்தினார்?.

      அமெரிக்காவின் அபிலாசைகளை தீர்த்துக் கொள்வதற்கு கிட்லருடன் கூட்டுவைத்தார் ஒப்பந்தம் செய்தார். கிட்லர் தனது (ஜேர்மனிய வங்கிகள்) சுயரூபம் காட்ட புறப்பட்டதும் லெனின் தேடிவைத்த தேட்டங்கள் அனைத்தையும் நாசம் செய்தி இறுதியில் வெற்றியும் பெற்றார்.

      இதெல்லாம் வரலாற்றுரீதியில் ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களுக்காக சேர்ந்து மகுடி ஊதியதால் மட்டுமே சாத்தியமாயிற்ரு-இதுவே ஸ்டாலின்.

      இன்று ஸ்டாலின் இறந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இன்றும் சில நபர்கள் அவரை சோசலிசலித்தின் தலைவராக நினைவு கூருகிறார்கள்.

      இந்த புதிர் விடுவிக்கப்படும் போது மட்டுமே! வரலாற்று உண்மைகள் தெளிவு படுத்துத்தும் போது மட்டுமே சமத்துவத்திற்கான கதவுகள் திறக்கப்படும்.

      இல்லையேல் இன்னும் பல பிரமாண்ட அழிவுகளை கொடுத்து தான் வர்க்கப்போராட்டத்தையோ மாக்ஸியத்தையோ கற்றுக் கொள்ள முடியும்

      • வரலாற்றில் அவதூறுகளால் அதிகம் அர்ச்சிக்கப்பட்டவர் ஸ்டாலினாகத்தான் இருக்கும். மனிதகுலமும் பூமிப்பந்தும் உள்ள வரை ஸ்டாலினின் சிந்தனைகளும் அருஞ்செயல்களும் இருக்கவே செய்யும். 1917 சோவியத் புரட்சிக்குப்பின் 14 வல்லரசுகள் சேர்ந்து மறைமுகமாகவும் நேரடியாகவும் தாக்குதல் நடத்தின. ஏற்கனவே ஜார் ஆட்சியில் பல ஆண்டுகள் போரிலும் பஞ்சம், பசி பட்டினியிலும் போராடிய ரசிய மக்கள் தங்களது பாட்டாளி வர்க்க ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள இறுதி வரை போராடி வென்றனர்.

        இட்லரின் வளர்ச்சியை ஏகாதிபத்திய நாடுகளே ஊக்குவித்தன. மேலும் இட்லரைக் கொண்டு சோவியத் மீது தங்களது வர்க்க பகைமையை தீர்த்துக் கொள்ளலாம் என்று தவம் இருந்தனர். இட்லரின் ஆபத்தான வளர்ச்சியை சோவியத்தும், ஸ்டாலினும் தான் முதன்முதலில் எச்சரிக்கை செய்தனர். ஆனால் இட்லரோ ‘கம்யூனிச அபாயத்திலிருந்து உலகைக் காக்க வந்த கடவுளாக’ தன்னைக் காட்டிக் கொண்டான்.

        1938 ல் மூனிச் ஒப்பந்தத்தின் மூலம் ஜெர்மன், இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் கூட்டணி அமைத்துக் கொண்டன. இதை பிரிட்டன் மக்கள் எதிர்த்தனர்.

        இட்லரின் போர் வெறி பிரான்ஸ், பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளை சீரழித்தது. இரண்டாவது உலகப் போரில் அதிகமான பொருள், உயிர் இழப்புகளை சந்தித்த நாடு சோவியத் ரசியதான். சோவியத் ராணுவ வலிமையை அமெரிக்க படைத்தளபதி டக்ளஸ் மெக் ஆர்தர் 1943 பிப்ரவரி 23 ல் ”நாகரீகம் நிலைபெற்றிருப்பதற்கான நம்பிக்கை, வீரம் பொருந்திய செஞ்சேனையைப் பொறுத்திருக்கிறது என்ற உண்மையைத் தற்கால உலக நிலை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. என்னுடைய வாழ்நாளில், பல போர்களில் ஈடுபட்டிருக்கிறேன். பல போர்களைக் கண்டிருக்கிறேன். ஆனால், இதுவரை தோல்வியுறாமல் வெற்றி மேல் வெற்றி அடைந்து பகைவனுக்குச் சரியான புத்தி புகட்டி, அவனைத் தனது சொந்த நாட்டுக்குத் திரும்பி ஓடும்படி செய்த தீரச் செயலை, நான் எந்தப் போரிலும் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. உலக வரலாற்றில் இதுவே மிகப்பெரிய இராணுவ வெற்றி” என அமெரிக்க மக்களிடம் தெரிவித்தார்.

        மேலும் தன் வாழ்நாள் முழுவதும் சோவியத் ரசியாவிற்கும், கம்யூனிசத்திற்கு எதிராக பேசியும், செயல்பட்டு வந்த பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் 1943 ஆகஸ்ட் 31 ல் ” இட்லர் ரசியாவுக்குச் செய்ததைப் போன்ற கொடுமைகளையும் நட்டங்களையும் சமாளித்து, வேறெந்த அரசும் உயிருடன் இருந்திருக்க முடியாது; இருந்ததுமில்லை. அதுமட்டுமல்ல; ஜெர்மன் இராணுவ வெறியர்களுக்கு, ரசியா கொடுத்த பதிலடியைப் போல் வேறு எந்த நாடும் செய்ததில்லை” என்று சோவியத்துக்கு புகழ் மாலை சூட்டினார்.

        பின் குறிப்பு:

        மைக்கேல் சேயர்ஸ், ஆல்பர்ட் இ.கான் என்ற இரு பத்திரிக்கையாளர்களும் (இவர்கள் கம்யூனிச ஆதரவாளர்கள் அல்ல) சேர்ந்து ஆய்வு செய்து எழுதிய ”மாபெரும் சதி” என்ற நூலைக் காண்க!

        இரணியன்

        • ஆதாரங்களுடன் எம் தோழன் ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான செஞ்சேனையீன் வீர வரலாற்றை விளக்கியதற்கு மிக்க நன்றி இரணியன்!

Leave a Reply to Saravanan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க