privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்இதர நாடுகள்பிரேசில் கால்பந்து அணியை தோற்கடிக்கும் பிரேசில் மக்கள்

பிரேசில் கால்பந்து அணியை தோற்கடிக்கும் பிரேசில் மக்கள்

-

பிரேசில் போராட்டங்கள் 8லகக்கோப்பை கால்பந்து போட்டிகள்,  பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் ஜூன் 12-ம் தேதி ஆரம்பிக்க இருக்கும் நிலையில், உலககோப்பைக்கு எதிரான பிரேசில் மக்களின் போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. தாங்கள் வறுமையில் வாடும் பொழுது,  பிரேசில் அரசு கால்பந்து போட்டிகளுக்காக பலகோடிகளை வாரி இறைப்பதை கண்டித்து மக்கள் தெருவிலிறங்கி போராடி வருகிறார்கள்.

இந்தியாவை போன்ற ஏழைகளின் நாடான பிரேசில்,  உலககோப்பைக்கு என இதுவரை சுமார் $11 பில்லியன்(ரூ. 65,274  கோடி) வரை செலவிட்டுள்ளது. இதில் பழைய மைதானங்களை புதுப்பிப்பதற்கு என  சுமார் 3.6 பில்லியன் வரை (ரூ.21,362 கோடி) செலவாகியுள்ளது. இது தவிர  புதிதாகவும் மைதானங்கள் கட்டப்படுகின்றன. தலைநகர் பிரேசில்லாவில் கட்டப்பட்டு வரும் மே கிரின்ச்சா மைதானத்திற்கான செலவு 900 மில்லியன் டாலர்(ரூ. 5340 கோடி).  இங்கிலாந்தின் வெம்பிலே மைதானத்திற்கு அடுத்தபடியாக அதிக செலவுமிக்க மைதானங்களில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது இந்த மைதானம்.

இந்த கட்டுமானங்களில் மதிப்பிடப்பட்டதை விட செலவு அதிகரித்ததற்கு ஊழலே காரணம் என்று பிரேசில் அரசு கண் துடைப்பு விசாரணைகளை அறிவித்திருக்கிறது. போட்டி நடத்துவதன் மூலம் முதலாளிகள் சட்டபூர்வமாக கொள்ளையடிப்பதை அனுமதித்து விட்டு, குட்டி திருடர்களை பிடித்து என்ன ஆகப்போகிறது?

கால்பந்து கிளப்கள் எதுவும்  இல்லாத நகரங்களில் கட்டப்பட்டு வரும் மைதானங்கள் உலககோப்பை போட்டிகளுக்கு பிறகு யாரும் பயன்படப் போவதில்லை.  இருப்பினும் வல்லரசுக் கனவு இந்தியாவுக்கு மட்டுமா சொந்தம்?

இந்த செலவுகள் போக பல நாடுகளிலிருந்தும், இரசிகர்கள் வந்து போக விமான நிலையங்கள், தங்க விடுதிகள் உள்ளிட்டு நாட்டின் அடிப்படை கட்டுமானங்களை மேம்படுத்த 7 பில்லியன் டாலர் (ரூ. 41,538 கோடி) செலவில் செய்யப்படுகிறது. இதன் மூலம் சராசரியாக ஒரு போட்டிக்கு 62  மில்லியன் டாலர் (ரூ.367 கோடி) செலவாகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மக்கள் எதிர்ப்பிற்கிடையே நடந்து முடிந்த கான்ஃபிடரேசன் கோப்பை, இந்த ஆண்டு கால்பந்து உலககோப்பை, 2016-ல் ஒலிம்பிக் என அடுத்தடுத்து பிரம்மாண்டமான சர்வதேச போட்டிகளை நடத்திவருகிறது பிரேசில். தேசம், தேச பெருமிதம் என்ற பெயரால் இந்த செலவுகள் நியாயப்படுத்தப்படுகிறது.

மற்றொரு புறத்தில் அதே அரசு மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டிசுருக்கி வருகிறது. குடிநீர் வினியோகமும், பொது வினியோகத் திட்டமும் நிதி இல்லை என்று கூறி முடக்கப்படுகின்றன.  பிரேசில் மக்களில்  சுமார் 10 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். நிலமற்ற கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் 4 கோடி பேரில், சுமார் 20 லட்சம் பேர் நகர்ப்புறங்களுக்கு குடியேறி அடிப்படை வசதிகள் இல்லாத சேரிகளில் வசிக்கின்றனர். பள்ளிகளில் அடிப்படைவசதிகள் இல்லை. போக்குவரத்து கட்டணங்கள் அதிக அளவில் உயர்த்தப்பட உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளின் விளைவாக நகரங்களில் வீட்டு வாடகை அதிகரித்து அதை செலுத்த இயலாமல் பலர் நடுத்தெருவுக்கு வந்துள்ளனர்.

இந்த பின்னணியில் தான்  உலககோப்பை போட்டிகளுக்கு ஆடம்பரமாக செலவு செய்வது, மக்களின் கோபத்தை தூண்டியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த கான்பெடரேசன் கோப்பை போட்டிகளின் போதே மக்கள் தங்கள் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். தற்போதைய போராட்டங்களில் மாணவர்கள்,தொழிலாளர்கள், வீடில்லாதவர்கள், அரசு ஊழியர்கள், வேலை இல்லாத பட்டதாரிகள் என பலரும் பங்கெடுத்துள்ளனர்.

உலககோப்பைக்கு எதிரான போராட்டங்களுடன், தங்கள் ஊதிய உயர்வு கோரிக்கைகளையும் இணைத்து போராட்டங்களை முன்னெடுக்கின்றன தொழிற்சங்கங்கள். பல ஆண்டுகளாக தங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்காத அரசு உலககோப்பை போட்டிகளுக்கு ஆடம்பர செலவு செய்வது அவர்களின் ஆத்திரத்தை அதிகரித்துள்ளது. ஆசிரியர்கள், தெரு சுத்தம் செய்வோர், பேருந்து ஓட்டுநர்கள் ஆகியோர் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக 50 நகரங்களில் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டன. “உலககோப்பை நடக்காது, வேலைநிறுத்தங்கள் தான் நடக்கும்” என்று இம்மக்கள் முழக்கமிடுகின்றனர்.

பிரேசில் கால்பந்து அணியினர் சென்ற வாகனத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள், “நிய்மாரைவிட (பிரேசிலின் நட்சத்திர வீரர்) விட ஆசிரியர்கள் மதிப்புமிக்கவர்கள்” என்று முழக்கமிட்டனர். விளையாட்டு போட்டிகளுக்கு செலவிடுவதை குறைத்து மருத்துவம் மற்றும் கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

‘நிலமற்ற தொழிலாளர் இயக்கத்தினர்’  துவக்க போட்டி நடைபெற இருக்கும் சாவ் பாவ்லோ நகர மைதானத்திற்கு அருகில் உள்ள காலி இடங்களை கைப்பற்றி போராடி வருகிறார்கள். சுமார் 7000 பேர் அங்கேயே கூடாரங்கள் அமைத்து தங்கி வருகிறார்கள். வீட்டு வாடகை உயர்வை கண்டித்தும், நியாயமான விலைக்கு வீடுகள் கோரியும், உலகக் கோப்பைக்கு அரசு செலவிடும் தொகையை குறைக்க கோரியும் இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். நிலமற்ற தொழிலாளர் இயக்கத்தை சேர்ந்த வனீசா கவுடோ கூறுகையில் “மைதானம் கட்டும் பணியில் வேலை செய்பவர்கள் உயிரிழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று  மைதானத்தை கட்டும் நிறுவனத்திற்கு (ஒடிபிரக்ட்) எங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளோம். அரசு யாருக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதை மாற்ற விரும்புகிறோம். எங்களுக்கு பல கோடிகளிலான மைதானங்கள் தேவையில்லை. நிலச்சீர்திருத்தமும், அனைவருக்கும் நாகரிகமான ஒரு வீடும்தான் தேவை.” என்கிறார்.

உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுவதை ஒட்டி நகரங்களில் வீட்டு வாடகை கணிசமாக உயர்ந்துள்ளது. “ஒரே மாதத்தில் எனது வீட்டுவாடகை $135 லிருந்து $ 360 ஆக உயர்ந்துள்ளது.இது குறைந்தபட்ச சம்பளத்தைவிட அதிகம். இனியும் என் மகன்களால் என்னை பராமரிக்க இயலாது. உலககோப்பை மகிழ்ச்சியானது தான். ஆனால் எங்களை போன்ற  வாடகை செலுத்த முடியாதவர்களுக்கு அதனால் எந்த நன்மையுமில்லை மகிழ்ச்சியுமில்லை.” என்கிறார் தற்காலிக கூடாரத்தில் தங்கி போராடிவரும் 64 வயதான தையற் தொழிலாளி பெட்ரினா ஜோஸ்ஃபினா.

பிரேசிலின் பழங்குடி மக்களும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர். தங்களின் நிலஉரிமைக்கு எதிராக பிரேசில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி,ஏற்கனவே தொடர்ச்சியான பல போராட்டங்களில்  ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் தலைநகர் பிரேசிலியாவில் கட்டப்பட்டிருக்கும் புதிய மைதானத்தில் உலக கோப்பையை காட்சிக்கு வைக்கும் தினத்தில் வில் அம்புகளுடன் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் உலககோப்பை எதிர்ப்பாளர்களும் இணைந்து கொண்டனர். மைதானத்தை நோக்கி முன்னேற முயன்ற  இவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைக்கமுயன்றனர் போலீசார். பதிலுக்கு பழங்குடி மக்களும் போலீசார் மீது வில் எய்ததால் இரு தரப்பிற்கும் இடையில் மோதல் மூண்டது. இதில் அம்பு தைத்து ஒரு   போலீசார் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.

பிரேசிலின் அனைத்து நகரங்களிலும் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. சாவ் பாவ்லோ நகரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தை கண்ணீர்புகை குண்டுகள் மற்றும் இரப்பர் குண்டுகள் மூலம் கலைக்க முயன்றது போலீஸ். உலகக் கோப்பை தொடங்கவிருக்கும் சமயத்தில் போராட்டங்களை மட்டுப்படுத்துவதற்காக அதிக அளவில் போலீசை குவித்து வன்முறையை ஏவிவருகிறது அரசு.

கலைஞர்கள், ஓவியங்கள் மூலமாக தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்து வருகின்றனர். வழக்கமாக பிரேசில் அணிக்கு ஆதரவாக வரையப்படும் சுவர் ஓவியங்களுக்கு பதிலாக இம்முறை உலககோப்பை போட்டிகளுக்கு எதிரான சுவரோவியங்கள் தான் அதிகம் காணக் கிடைக்கின்றன. அதிலும், பசித்த கண்கள் மற்றும் ஒட்டிய வயிறுடன் ஒரு சிறுவன் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருக்க அவனுக்கு கால்பந்தை பறிமாறுவது போன்ற ஒவியம் சமூகவலைத் தளங்களில் அதிகம் பரவிவருகிறது. இது பற்றி பிரேசிலின் முன்னாள் வீரர் சிகோ கூறுகையில், “முன்னாளில் இது போன்ற தருணங்களில் உலக கோப்பை ஜூரம் மக்களை தொற்றியிருக்கும், ஆனால் இம்முறை நிலைமை மோசமாக இருக்கிறது. தோரணங்களையும், சுவரோவியங்களையும் பார்க்க முடியவில்லை. போராட்டங்களினால் இரசிகர்கள் பின்வாங்கிவிட்டார்கள் என்று கருதுகிறேன். ஆயினும் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் நிலைமை சரியாகிவிடும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கௌரவத்திற்கு பேசப்படும் கிரிக்கெட்டை போலல்லாமல் பிரேசிலில் கால்பந்து உண்மையிலியே ஒரு மக்கள் விளையாட்டுதான். ஆனாலும் உலகமயமாக்கத்தில் அங்கேயும் கால்பந்தை சந்தைப்படுத்தப்பட்டு மக்களிடமிருந்து அன்னியப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் மக்களின் வாழ்க்கை சுமை அவர்களது கால்பந்து மோகத்தை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் 55% பிரேசில் மக்கள் உலகக்கோப்பை போட்டிகளுக்கு எதிராக கருத்து கூறியிருக்கிறார்கள். உலகக்கோப்பை போட்டிகளுக்கு பதிலாக கல்வி, மருத்துவம், போக்குவரத்தில் முதலீடு செய்யலாம் என்று கருதுகின்றனர்.

ஆனால் அரசோ,  உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கிவிட்டால் போராட்டம் ஓய்ந்துவிடும், எந்த மைதானத்தை முற்றுகையிட்டு மக்கள் போராடினார்களோ அங்கே தேனீக்களை போல மொய்க்க ஆரம்பித்துவிடுவார்கள் என  நம்புகிறது. அதையும் மீறி போராடுபவர்களை ஒடுக்க காவல்துறையையும், இராணுவத்தையும் இறக்கிவிட்டுள்ளது. ரிசைஃப் போன்ற  நகரங்களில் போலீசாரும் ஊதிய உயர்வுக்காக போராடிவரும் நிலையில் இராணுவம் நேரடியாகவே இறங்கியிருக்கிறது. போலீசாருக்கு பயிற்சி அளிக்க அமெரிக்க எஃ.ப்.பி.ஐ வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு நமக்கான அரசு அல்ல. இந்த அரசிடம் முறையிட்டு பலனில்லை. அரசை கைப்பற்றினால் தான் தீர்வு என்பதை பிரேசில் மக்கள் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை தான் இந்த போராட்டங்கள் காட்டுகின்றன. இந்த போராட்டங்கள் மூலம் அரசை வீழ்த்தக்கூடிய புரட்சிகர கட்சிகள் தோன்றி வளரும் போது பிரேசில் மக்களுக்கு விடுதலை கிடைக்கும்.

புகழ்மிக்க பிரேசில் அணி, உலகக் கோப்பையை வெல்வதைவிட,  பிரேசிலின் எளிய மக்கள் இந்த போராட்டத்தில் வெல்வதே,  இன்றைய தேவையாக உள்ளது.

–    ரவி

படங்கள்

பிரேசில் போராட்டங்கள் 1

பிரேசில் போராட்டங்கள் 2

பிரேசில் போராட்டங்கள் 3

பிரேசில் போராட்டங்கள் 4

பிரேசில் போராட்டங்கள் 5

பிரேசில் போராட்டங்கள் 6

பிரேசில் போராட்டங்கள் 7

மேலும் படிக்க: