privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தித் திணிப்புக்கு எதிராக ம.க.இ.க ஆர்ப்பாட்டம்

இந்தித் திணிப்புக்கு எதிராக ம.க.இ.க ஆர்ப்பாட்டம்

-

மதுரை

இந்தியை திணித்து இந்து ராஷ்ட்ரக் கனவை நிறைவேற்றத் துடிக்கும் மோடி தலைமையிலான பார்ப்பன பாசிஸ்டுகளை மோதி வீழ்த்துவோம்

என்ற தலைப்பில் மதுரை பகுதி ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு, பெ.வி.மு, வி.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பில் மதுரை ஜான்சி ராணி பூங்கா, நேதாஜி சிலை அருகில் 23/06/2014 திங்கள் காலை எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை ம.க.இ.க தோழர் மருது தலைமை வகித்தார்.  “இந்து ராஷ்ட்ரக் கனவை நெஞ்சில் சுமந்துள்ள மோடி தலைமையிலான பார்ப்பன பாசிஸ்டுகள் தங்களுடைய மறுகாலனியாக்க கொள்கையை மூடிமறைக்க இந்துத்துவ செயல்திட்டத்தின் முக்கியமான அம்சமான இந்தி திணிப்பை கொண்டு வருகிறார்கள். ஒருபுறம் தங்களுடைய இந்து ராட்டிர செயல்திட்டத்தை செயல்படுத்தும் பார்ப்பன் பாசிஸ்டுகள் மறுபுறம் வழக்கம் போல் ஏகாதிபத்தியங்களிடமும், தரகு முதலாளிகளிடமும் தங்களுடைய‌ விசுவாசத்தை காட்டுகிறார்கள்” என்று அம்பலப்படுத்தியும், “இந்த நயவஞ்சகத்திற்கு எதிராக ஜனாநாயக உணர்வுள்ள ஒவ்வொருவொரும் போராட வேண்டும். இல்லையெனில் இந்து ராஷ்ட்ரத்தில் அடிமைகளாக‌ இருப்போம்” என்று எச்சரிக்கை செய்தும் தலைமையுரையாற்றினார்.

அடுத்ததாக கண்டன உரையாற்றிய மதுரை ம.க.இ.க அமைப்பாளர் தோழர் ராமலிங்கம்  “மறுகாலனியாக்க கொள்கைகளை அமுல்படுத்தி வரும் பா.ஜ.க என்பது காங்கிரஸின் தொடர்ச்சிதான். இவர்களை முறியடிக்க நக்சல்பாரிகளின் தலைமையில் போராடுவதுதான் தீர்வு” என்று பேசினார்.

பின் உசிலை வட்டார வி.வி.மு தோழர் ஆசை “மோடியை கார்ப்ப‌ரேட் மீடியாக்கள் ஊதிப் பெருக்கி ஒளி வட்டம் சூட்டுகிறார்கள்” என்பதையும் அதன் பின்னால் இருக்கக் கூடிய தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் நலனையும் அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட செயலாளர் தோழர் லயோனல் அந்தோனிராஜ் “தமிழ் மொழி எவ்வளவு தொன்மையானது, அது தொன்மையான வரலாறும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டது. அத்தகைய சிறப்புமிக்க பல்வேறு தேசிய இன மொழிகளை இந்திய ஆட்சி மொழிகளாக ஆக்காமல் ஒடுக்குவது என்பது ஒரு தேசிய இன ஒடுக்குமுறை நோக்கங் கொண்டது. இந்தி மொழி சமஸ்கிருத ஆதிக்கத்திலிருந்து உருவான ஒரு மொழி. சமஸ்கிருத மொழி பெரும்பான்மையான வட இந்திய மொழிகளை வல்லுறவு கொண்டு அதன் சுயத்தை அழித்தது. அத்தகைய நோக்கத்தோடு தான் இந்து, இந்தி‍‍, இந்தியா என்ற அகண்ட பாரதக் கனவை நிறைவேற்றிக் கொள்ளத்தான் இந்தியை திணிக்கிறார்கள் மோடி தலைமையிலான பார்ப்பன பாசிஸ்டுகள். இவர்களுக்கு எதிராக மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் போராட வேண்டும்” என்று சொரணையேற்றினார்.

இறுதியாக பு.ஜ.தொ.மு தோழர் பாண்டியராஜன் நன்றியுரையாற்ற ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

ஆர்ப்பாட்டத்தில், “மோடிக்கு கூஜா தூக்கிய வைகோ, ராமதாசு, விஜயகாந்து, தமிழருவி மணியன் ஆகிய துரோகிகளை தமிழகத்தை விட்டு விரட்டியடிப்போம்” என்று எழுப்பப்பட்ட‌ முழக்கங்கள் மக்களின் மயக்கத்தையும், துரோகிகளின் தூக்கத்தையும் கலைக்கும் விதத்தில் இருந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை

தஞ்சை

  • படமெடுக்கிறது பார்ப்பன பாசிச நச்சுப் பாம்பு !
  • மோடி அரசின் இந்தித் திணிப்பு சதியை முறியடிப்போம் !!

என்ற தலைப்பில் தஞ்சை இரயிலடியில் 23.06.2014 திங்கள் கிழமை மாலை 5.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தஞ்சை கிளை செயலர் தோழர் இராவணன் தலைமை ஏற்று நடத்தினார். ம.க.இ.கவின் மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன், விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் மாரிமுத்து, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் ஆசாத், மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் சதீஸ்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மத்திய அரசே

  • இந்தியின் அலுவல் மொழி தகுதியை நீக்கு !
  • செத்த மொழி சமஸ்கிருதத்தை எட்டாவது அட்டவணையிலிருந்து தூக்கு !!
  • அனைத்து தேசிய இன மொழிகளையும் ஆட்சி மொழியாக்கு !!!

தமிழ் மக்களே !

  • பார்ப்பன பாசிசத் திமிரை ஒடுக்குவோம்!
  • இந்து, இந்தி, இந்தியா என்ற பார்ப்பன தேசியத்தை முறியடிப்போம்!

என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

thanjai-hindi-imposition-demo-2

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை

கோவை

  • படமெடுக்கிறது பார்பன பாசிச நச்சுப்பாம்பு
  • மோடி அரசின் இந்தி திணிப்பு சதியை முறியடிப்போம்!
  • இந்தியின் அலுவல் மொழித் தகுதியை நீக்கு
  • செத்த மொழி சமஸ்கிருதத்தை எட்டாவது அட்டவணையிலிருந்து தூக்கு
  • அனைத்து தேசிய இன மொழிகளையும் ஆட்சி மொழியாக்கு

தமிழ் மக்களே,

  • பார்ப்பன பாசிச திமிரை ஒடுக்குவோம்!
  • இந்து இந்தி இந்தியா என்ற பார்ப்பன தேசியத்தை முறியடிப்போம்!

என்ற தலைப்பில் கோவையில் ஜூன் 24, 2014 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கோவை மாவட்ட மாவட்ட செயலர் தோழர் மணிவண்ணன் அவர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்று நடத்தினார்.

aarppattam-1

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
கோவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க