privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மோடியின் நூறுநாள் ஆட்சி: சவடால்களே சாதனையாக...!

மோடியின் நூறுநாள் ஆட்சி: சவடால்களே சாதனையாக…!

-

“புதிதாகப் பதவியேற்கும் ஒவ்வொரு அரசுக்கும், அதனை விமர்சனம் செய்வதற்கு நூறு நாள் அவகாசம் கொடுப்பார்கள். ஆனால், தனது அரசுக்கு அப்படிபட்ட தேனிலவுக் காலம் தரப்படவில்லை” என்றவாறு புலம்பி வந்தார், பிரதமர் நரேந்திர மோடி. இந்நிலையில் அவர் பதவியேற்று நூறு நாட்கள் கழித்து நடந்த உ.பி., இராசஸ்தான், குஜராத் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. சந்தித்துள்ள பின்னடைவு, மோடியின் புலம்பலுக்கு மட்டுமல்ல, அவரது வெட்டி ஜம்பத்திற்கும் பதிலடி கொடுப்பதாக அமைந்துவிட்டது.

மோடி பூடான்
பூடான் தலைநகர் திம்புவில் நரேந்திர மோடியை வழியனுப்பக் காத்திருந்த மக்கள், “சீக்கிரம் இடத்தைக் காலிபண்ணுங்க அய்யா” என்கிறார்களோ?

“இச்சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் மோடி அரசாங்கத்தின் மீதான தீர்ப்பு அல்ல” என பா.ஜ.க. வலிந்து நின்று தன்னிலை விளக்கம் அளித்தாலும், உண்மை அவ்வாறு இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க., சிவசேனா கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நடந்துவரும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற மேலவை உறுப்பினர் ராம்தாஸ் கதம், “பா.ஜ.க. தலைவர்கள் தேர்தல் முடிவுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்; உண்மை நிலவரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தன்னகங்காரம் கொண்ட பா.ஜ.க. தலைவர்களின் மண்டையில் உறைக்கும்படி பேசியிருக்கிறார். அவரது பேச்சு இத்தேர்தல் முடிவுகள் மோடியின் இமேஜில் ஓட்டை போட்டுவிட்டதைத்தான் எடுத்துக்காட்டுகிறது.

இத்தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வைவிட, மோடியின் துதிபாடி வரும் ஊடகங்களைத்தான் வெகுவாகக் கலங்கடித்துவிட்டன. “மக்கள் எதை எதிர்பார்த்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து மோடியின் சகாக்கள் செயல்பட வேண்டும்” என புத்திமதி வழங்கியிருக்கிறது, தமிழ் இந்து நாளிதழ். “இது பெரிய தோல்வி அல்ல என்று பா.ஜ.க.வினர் பேசுவது, தோல்வியைவிடப் பெரும் பிரச்சினை” என இடித்துரைக்கிறது துக்ளக் இதழ். கடந்த நூறு நாட்களில் மோடியின் ஒவ்வொரு வெற்றுச் சவடாலையும் அறிவார்ந்த கருத்தாகவும், பாசிச கோமாளித்தனங்களைச் செயலூக்கமிக்க நடவடிக்கைகளாகவும் சித்தரித்துப் பொழிப்புரை எழுதிய ஊடகங்களிடம் இதற்கு அப்பால் நாணயமான பரிசீலனையை எதிர்பார்க்க முடியாது.

“தான் பதவிக்கு வந்த மறுநிமிடமே விலைவாசியைக் கட்டுப்படுத்தி விடுவேன்; ஊழலை ஒழித்துக்கட்டி விடுவேன்; கருப்புப் பணத்தை மீட்டுவிடுவேன்; மக்களுக்கு நல்ல காலத்தைக் கொண்டுவந்துவிடுவேன்” எனத் தனது தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும் சவடால் அடித்தவர் மோடி. ஆனால், எந்தவொரு ஊடகமும் அவரது நூறு நாள் ஆட்சியைக் குறைந்தபட்சம் இந்த நான்கு அம்சங்களைக் கொண்டுகூட மதிப்பிட்டு எழுதவில்லை. இவற்றின் அடிப்படையில் மோடியின் ஆட்சியை மதிப்பிடுபவர்களை, கேள்வி எழுப்புவர்களை, “அவசரக் குடுக்கைகள்” என்றும், “மோடியின் வெற்றியை ஜீரணிக்க முடியாதவர்கள்” என்றும் அவதூறு செய்கிறது, துக்ளக் இதழ் (01.10.2014). ஒருவரது ஆட்சியை மதிப்பிட நூறு நாட்கள் குறைவானது என நடுநிலையாளர்களைப் போலப் பேசும் இவ்வூடகங்கள், இதே நூறு நாட்களில் நடந்த மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள், குறிப்பாக அவரது ஜப்பான் பயணம், அவரது சுதந்திர தின உரை, அவரது ஆசிரியர் தின உரை, அவர் அறிவித்துள்ள ஜன் தன் திட்டம், பாகிஸ்தானுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்தது, திட்ட கமிசனைக் கலைத்தது என்பவற்றைக் காட்டியே அவரது அரசிற்கு ஒளிவட்டம் கட்டி வருகின்றன.

மோடி ஜப்பானில்
ஜப்பானில் டி.சி.எஸ். நிறுவனத்தைத் தொடங்கி வைக்கும் விழாவில் ஜப்பானின் பாரம்பரிய மேள வாத்தியமான டாய்கோவைத் தட்டி வித்தை காட்டும் மோடி : “என்னமா நடிக்கிறான்யா”!

அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரதமருக்கு, அரசுத் தலைவருக்கு உள்நாட்டு மக்கள் சாலையோரத்தில் நிற்க வைக்கப்பட்டு, வரவேற்பு அளிப்பது சர்வசாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான். இதற்கும் அ.தி.மு.க. அமைச்சர்களை வரவேற்க பள்ளிக்கூட மாணவர்கள் கால்கடுக்க நிற்க வைக்கப்படுவதற்கும் பெருத்த வேறுபாடு கிடையாது. ஆனால், மோடி விசயத்திலோ இது உலக அதிசயமாகக் காட்டப்படுகிறது. “ஆயிரக்கணக்கான நேபாள மக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று ஒரு தலைவரை வரவேற்றார்கள் என்றால், எந்த அளவுக்கு மோடியின் நேபாளப் பயணம் அவர்கள் மத்தியில் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது” எனப் புல்லரித்துப் போய் எழுதுகிறது, தினமணி.

வெளிநாடு செல்லும் தலைவர்கள் அந்நாட்டின் பாரம்பரிய ஆடைகளை அணிந்துகொண்டு போஸ் கொடுப்பது, நடனம் ஆடுவதெல்லாம் பார்த்துப்பார்த்துப் புளித்துப் போன ஒன்றுதான். ஆனால், தினகரன் நாளிதழ் இந்த ஊசிப் போன விசயத்தை, “பள்ளிக் குழந்தைகளோடு குழந்தையாக, ஆசிரியராக, மேள வாத்தியக்காரரோடு வாத்தியக்காரராக… என்று சென்ற இடமெல்லாம் மோடி ஜப்பானிய மக்களோடு ஒருவராக மாறிவிட்டார்” என மாய்ந்துபோய் எழுதியிருக்கிறது.

மோடி, பூடான் நாடாளுமன்றத்தில் தப்பும் தவறுமாக ஆற்றிய உரையை, அபாரமானதென்று ஒரு அதிகாரி பாராட்டியவுடனேயே, அப்பாராட்டைத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுமாறு உத்தரவிட்டிருக்கிறார், அவர் (இந்தியா டுடே, செப்.17). இந்தளவிற்கு சுயதம்பட்டமும் விளம்பர மோகமும் கொண்ட பிரதமரை இந்தியா சந்தித்தது இல்லை. ஊடகங்களோ இந்த விசயத்தில் மோடியின் பி.ஆர்.ஓ. போலவே செயல்படுகின்றன. அவரது சுதந்திர தின உரையை இந்திய சமூகத்தையே புரட்டிப் போடக்கூடிய புரட்சிகரமான சிந்தனையாக ஊடகங்கள் கொண்டாடித் தீர்த்திருப்பதை இதற்குச் சான்றாகக் கூறலாம்.

மோடி - ஜன் தன் யோஜனா
ஜன் தன் திட்டத்தைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு வங்கிக் கடன் அட்டைகளை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடி.

பள்ளிகளில் கக்கூசு கட்டுவது தொடங்கி திட்ட கமிசனைக் கலைப்பது வரையில்; இந்தியாவை உலகின் தொழிற்துறை கேந்திரமாக உருவாக்குவது தொடங்கி ஏழை இந்தியர்களுக்கு வங்கிக் கணக்கு திறப்பது வரையில்; பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடங்கி பெற்றோர்கள் ஆண் குழந்தைகளைக் கட்டுப்பாட்டோடு வளர்க்க வேண்டிய அவசியம் வரையில் – சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பேசப்பட்ட அனைத்தும் மோடியின் ஆழ்மனதிலிருந்து வெளிவந்தவை எனப் புகழ்ந்துள்ள ஊடகங்கள், மற்ற பிரதமர்களைப் போல மோடி எழுதி வைத்துக் கொண்டு படிக்கவில்லை எனச் சுட்டிக் காட்டியுள்ளன. நடிகர்கள் யாரும் கையில் பேப்பரை வைத்துக்கொண்டு டயலாக் பேசுவதில்லைதானே!

சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்ட கையோடு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள ஜன் தன் திட்டத்தை ரொம்ப ரொம்பப் புதிய, புதுமையான திட்டம் போல மோடியும் ஊடகங்களும் காட்டுகின்றன. பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்பார்கள். நமது காலத்தின் அசகாயப் புளுகன் மோடியும், அவரது கைத்தடிகளான ஊடகங்களும் இந்தப் பழமொழியை அறிந்திருக்கவில்லை போலும். ஏனென்றால், மோடியின் இந்தத் திட்டம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட “நிதிசார் உள்ளடக்கத்திற்கான தேசியக் குறிக்கோள்” என்ற திட்டத்தின் அப்பட்டமான நகலாகும்.

இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை ரிசர்வ் வங்கி 2005-ம் ஆண்டில் தொடங்கியது. 2008-ல் இக்குறிக்கோள் தொடர்பாக அமைக்கப்பட்ட ரங்கராஜன் கமிட்டி, அடித்தட்டு மக்கள் எளிதான வகையில் வங்கிக் கணக்கு தொடங்குவது தொடர்பாக நான்கு அம்ச திட்டத்தை அறிவித்தது. அதில் வங்கிக் கணக்கு தொடங்கும் அடித்தட்டு மக்களுக்கு வங்கிகள் மூலம் குறுங்கடன்கள் வழங்கவும், காப்பீடு வழங்குவதற்குமான பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன. இத்திட்டம் 2012-ல் சுவாபிமான் என்ற பெயரில் நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தை சந்தை பொருளாதாரத்திற்கு ஏற்றபடி சீர்திருத்துவதற்காக அமைக்கப்பட்ட நாச்சிகேத் மோர் கமிட்டி தனது அறிக்கையை கடந்த ஜனவரி 2014-ல் ரிசர்வ் வங்கியிடம் அளித்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் அந்த சுவாபிமான் திட்டம்தான் ஜன் தன் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு, இப்பொழுது ஓடிக் கொண்டிருக்கிறது.

சவடால் மோடிபொருளாதார வளர்ச்சியின் பலன்களைப் பெற முடியாமல் அடித்தட்டு மக்களை விலக்கிவைக்கும் நிதி தீண்டாமையை ஒழிக்கும் நோக்கில்தான் ஜன் தன் திட்டத்தை (மக்கள் வளம்) அறிமுகப்படுத்தியிருப்பதாகத் தம்பட்டம் அடித்துவருகிறார், மோடி. ஆனால், இத்திட்டம் அரிசிக்கும், மண்ணெண்ணெக்கும், சமையல் எரிவாயுவுக்கும் வழங்கப்படும் மானியத்தை நுகர்வோருக்கு நேரடியாகப் பணமாக வழங்க வேண்டும் என்ற உலகவங்கியின் கட்டளையை நிறைவேற்றும் நோக்கத்தைக் கொண்டது. மானியத்தைப் பணமாக வழங்குவதற்கு ரேசன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பமும் வங்கிக் கணக்கு வைத்திருப்பது அவசியமாகும். இன்று வங்கிக் கணக்கு, நாளை நேரடி மானிய பட்டுவாடா, அதன் பிறகு மானியக் குறைப்பு, ஒழிப்பு என்பதுதான் ஆளுங்கும்பலின் நோக்கம். மன்மோகன் சிங் அரசு, உங்கள் பணம் உங்கள் கையில் என்ற கவர்ச்சிகரமான பெயரில் இதனை நடைமுறைப்படுத்த முயன்றது. அதைத்தான் நிதி தீண்டாமை ஒழிப்பு என்ற பெயர் மாற்றி ரிலீஸ் செய்திருக்கிறார், மோடி.

திட்ட கமிசனை ஒழிப்பது என்ற மோடியின் அறிவிப்பும்கூட அவரது சொந்த சரக்கல்ல. அது பன்னாட்டு ஏகபோக முதலாளிகள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகளின் விருப்பம். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் தொடங்கப்பட்டதென்றால், முடிவை மோடி அறிவித்திருக்கிறார். திட்ட கமிசனை நேரு உருவாக்கினார் என்பதைத் தாண்டி அதன் மேல் காங்கிரசுக்கு எந்தவிதமான மதிப்பும் இருந்தது கிடையாது. நேருவின் பேரனும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி திட்ட கமிசனை கோமாளிகளின் கூடாரம் என்று நையாண்டி செய்ததும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் உலக வங்கியின் கையாள் மாண்டேக் சிங் அலுவாலியா திட்ட கமிசனின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதுமே இதற்கு சான்று. தனியார்மய-தாராளமயக் கட்டத்தில் திட்ட கமிசனின் பொருத்தப்பாடு பற்றி ஆராய்வதற்காக அஜய் சிபர் தலைமையில் சுதந்திர மதிப்பீட்டு அலுவலகத்தையும்; திட்ட கமிசனைச் சீர்திருத்தும் பரிந்துரைகளை உருவாக்குவதற்காகத் திட்ட கமிசனின் முன்னாள் உறுப்பினராக அருண் மைரா என்பவர் தலைமையில் கமிட்டி ஒன்றையும் அமைத்திருந்தது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி.

காங்கிரசு ஆட்சியில் நியமிக்கப்பட்ட அஜய் சிபர், “திட்ட கமிசனைக் கலைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு மோடி அரசிடம் அறிக்கை அளித்திருக்கிறார். மேலும், மோடி பிரதமராகப் பதவியேற்ற சமயத்தில் திட்ட கமிசனைக் கலைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு, ஐ.நா. மன்றம் மோடி அரசுக்கு அறிவிக்கையொன்றை அளித்திருந்தது. இந்தப் பின்னணியெல்லாம் மறைக்கப்பட்டு, மோடி தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் திட்ட கமிசனைக் கலைக்கும் புரட்சிகரமான முடிவை எடுத்தது போல பில்ட்-அப் கொடுக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே, தொழிற்சாலைகளால் மாசுபடுத்தப்பட்ட நகரங்களுள் கிட்டத்தட்ட முதலிடத்தை வகிப்பது குஜராத்திலுள்ள வாபி தொழிற்பேட்டையாகும். இனியும் தாங்காது என்ற நிலையில்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் அத்தொழிற்பேட்டையில் புதிதாகத் தொழிற்சாலைகளை அமைப்பதைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்தது, சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம். மோடி பிரதமராகப் பதவியேற்றவுடனேயே முதல் காரியமாக இத்தடையுத்தரவைத் திரும்பப் பெறச் செய்தார்.

அருண் மைரா
திட்ட கமிசனை சீர்திருத்துவதற்கான பரிந்துரைகளை வரையறுப்பதற்கு மன்மோகன் சிங் அரசால் நியமிக்கப்பட்ட முன்னாள் திட்ட கமிசன் உறுப்பினர் அருண் மைரா.

சுற்றுப்புறச் சூழல் என்பதைக் காட்டி எந்தவொரு பெருந்தொழில் திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை விழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே காடுகளை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களை மாற்றியமைத்திருக்கிறது, மோடி அரசு. வன விலங்கு சரணாலயங்களிலிருந்து பத்து கிலோமீட்டருக்கு அப்பால்தான் தொழிற்சாலைகள் அமைய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம், அந்த வரம்பை ஐந்து கிலோமீட்டர் எனச் சட்டப்படியே மாற்றிவிட்டது, மோடி அரசு. இப்படிச் சுற்றுப்புறச் சூழலைப் பலியிட்டாவது பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க வேண்டும் என்ற வெறிகொண்டு அலையும் மோடி, தனது சுதந்திர தின உரையில் சுற்றுப்புறச் சூழலில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தொழில்களை நடத்துமாறு அறைகூவல் விடுத்திருப்பது கடைந்தெடுக்கப்பட்ட பித்தலாட்டத்தனம்.

மோடி குஜராத் முதல்வராக இருந்தபொழுது, தனக்கு நெருக்கமாக இருந்த ஒரு பெண்ணின் நடவடிக்கைகளை உளவுத் துறையை ஏவிக் கண்காணிக்கும் கீழ்த்தரமான வேலையைச் செய்துவந்தார். இதற்கு குஜராத்தின் உள்துறை அமைச்சகமே கேடாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த உளவு வேலை அம்பலமாகி நாறியவுடன், அப்பெண்ணின் தந்தைதான் தனது மகளைக் கண்காணிக்கும்படி கேட்டுக் கொண்டதாக மோசடியான ஆதாரங்கள் உருவாக்கப்பட்டன. இப்படிபட்ட கடந்த காலத்தைக் கொண்டிருக்கும் மோடி, பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுக்கப் பெற்றோர்கள் தங்களது ஆண் மகன்களையும் கண்காணிக்க வேண்டும் எனக் கூசாமல் அறிவுரை சொல்கிறார்.

உ.பி.யில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, லவ்-ஜிகாத் என்ற இந்து மதவெறி பூதத்தை மீண்டும் ஜாடிக்குள்ளிலிருந்து வெளியே எடுத்துவிட்டது, ஆர்.எஸ்.எஸ். கும்பல். பொய்யும் புனைசுருட்டும் நிறைந்த இந்த மதவெறி பிரச்சாரத்திற்கு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான ஆதித்யநாத் தலைமை தாங்கினார். இதையெல்லாம் கண்டும் காணாது நடந்துகொண்ட மோடி, சாதி-மத மோதல்களுக்குப் பத்தாண்டு காலம் தடை போட வேண்டும் என யோக்கிய சிகாமணி போல ஊருக்குப் உபதேசிக்கிறார்.

கார்ப்பரேட் முதலாளித்துவ வர்க்கத்தின் விருப்பத்திற்கிணங்க புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் மோடி, விவசாயிகளின் துயரங்கள் பற்றி முதலைக் கண்ணீர் வடிக்கிறார். இப்படிப்பட்ட மோசடிகளையும் உள்முரண்பாடுகளையும் கொண்டதுதான் மோடியின் சுதந்திர தின உரை. அவரது ஆழ்மனது சூதும் கபடத்தனமும் நிறைந்தது என்பதற்கு இந்த சுதந்திர தின உரை இன்னொரு சான்று.

விலைவாசி உயர்வு, ஊழல், கருப்புப் பணம், தொழில் நசிவு, வேலையில்லாத் திண்டாட்டம் என்பதையெல்லாம் காட்டித்தான் காங்கிரசு ஆட்சியை மக்கள் விரோத ஆட்சியாக முத்திரை குத்தியது, பா.ஜ.க. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மோடியிடம் என்ன பொருளாதாரத் திட்டம், கொள்கை இருக்கிறது? எந்த மேடையிலாவது மாற்றுக்களைப் பற்றி பேசியிருக்கிறாரா அவர்? இப்பிரச்சினைகளுக்கெல்லாம் மூல காரணமான தனியார்மயம்-தாராளமயத்தை இன்னும் தீவிரமாகவும், தடையின்றியும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் நல்ல நாட்களை உருவாக்கிவிடலாம் என நம்பச் சொல்கிறார்.

அஜய் சிப்பர்
திட்ட கமிசனின் பொருத்தப்பாடு பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட சுதந்திர மதிப்பீட்டு அலுவலகத்தின் தலைவர் அஜய் சிப்பர்

கொள்கையில் மட்டுமல்ல, நடைமுறையிலும் மோடி அரசை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மறுஅவதாரம் என்றுதான் சொல்ல முடியும். ரயில் கட்டண உயர்வு தொடங்கி காப்பீடு துறையில் அந்நிய முதலீட்டுக்கான வரம்பை அதிகரித்தது வரையில், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது தொடங்கி ஆதார் அட்டை திட்டம் வரையில்; ஈழம் மற்றும் தமிழக மீனவர் பிரச்சினை தொடங்கி தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயைக் குறைத்தது வரையில் – முந்தைய காங்கிரசு கூட்டணி அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும்தான் மோடி அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அப்படியென்றால் முந்தைய காங்கிரசு கேடிகளுக்கும் மோடிக்கும் வேறுபாடே இல்லை எனக் கூறிவிட முடியுமா என்ற கேள்வி எழலாம்.

பன்னாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும், இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் விரைந்து சேவை செய்வது என்ற நோக்கில் அதிகாரம் முழுவதையும் பிரதமர் அலுவலகத்தில் குவித்துக் கொண்டிருப்பது; எட்டு சதவீத பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகருவதற்காக அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுக்களையும் திட்ட கமிசனையும் அடுத்தடுத்து கலைத்தது, ஜப்பான் முதலீடுகளை விரைந்து அனுமதிக்க தனிச் சாளரம் திறப்பது, மூலதனத்தின் கட்டுப்பாடற்ற கொள்ளைக்காகச் சுற்றுப்புறச் சூழல் சட்டங்களையும் தொழிலாளர் நலச் சட்டங்களையும் திருத்த முனைந்திருப்பது என்றவாறு வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், இந்த வேறுபாடுகள் விலைவாசி உயர்வாலும் விவசாய நசிவாலும் வேலையில்லாத் திண்டாட்டத்தாலும் புழுங்கிக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான நல்ல காலத்தையும் கொண்டுவந்துவிடாது.

– குப்பன்
__________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
__________________________________