privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபணமும் பார்ப்பனியமும் பத்தும் செய்யும்!

பணமும் பார்ப்பனியமும் பத்தும் செய்யும்!

-

குற்றவாளி ஜெயாவிற்கு விரைவு பிணை : பணமும் பார்ப்பனியமும் பத்தும் செய்யும்!

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப் பெற்ற ஜெயா-சசி கும்பலுக்குக் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் உச்சநீதி மன்றம் பிணை அளித்திருப்பதைப் போன்ற சித்திரத்தை ஊடகங்கள் உருவாக்கியுள்ளன. “டிசம்பர் 18-க்குள் மேல்முறையீட்டு வழக்கிற்கான ஆவணங்களை கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துவிட வேண்டும்; மேல்முறையீட்டு வழக்கைத் தாமதம் செயக்கூடாது; நீதிமன்றங்களை விமர்சிக்கக்கூடாது” என உச்சநீதி மன்ற அமர்வு விசாரணையின்போக்கில் குறிப்பிட்டவற்றையெல்லாம் – நீதிமன்றத் தீர்ப்பில் இவை குறித்து ஒருவார்த்தைகூட கிடையாது – கடும் நிபந்தனைகளாகச் சித்தரிப்பதன் வாயிலாக ஊடகங்கள் உச்சநீதி மன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பிற்கு ஒரு ஒளிவட்டம் போடுகின்றன.

உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து.
பார்ப்பன ஜெயாவிற்கு கட்டப் பஞ்சாயத்து முறையில் சிறப்பு சலுகைகளோடு பிணை வழங்கிய உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து.

வெளித்தோற்றத்திற்கு நிபந்தனைகளைப் போலத் தெரியும் இவையெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாக ஜெயாவிற்கு காட்டப்பட்டுள்ள சலுகைகள். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவிலேயே மிகவும் சலுகை பெற்ற கிரிமினல் குற்றவாளிகள் ஜெயா-சசி கும்பல்தான் என்பதை உச்சநீதி மன்றம் அக்கும்பலுக்கு அளித்திருக்கும் பிணை உத்தரவு மீண்டும் எடுத்துக்காட்டியிருக்கிறது.

மாட்டுத் தீவன வழக்கில் தண்டிக்கப் பெற்று, சிறைக்கு அனுப்பப்பட்ட லாலுவிற்கு இரண்டரை மாதங்கள் கழித்துதான் உச்சநீதி மன்றம் பிணை வழங்கியது. ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் தண்டிக்கப் பெற்ற சௌதாலாவிற்கும் இரண்டு மாதங்கள் கழித்துதான், அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு பிணை வழங்கியது, டெல்லி உயர்நீதி மன்றம். 2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கனிமொழிக்கும், ஆ.ராசாவிற்கும் ஏறத்தாழ ஓராண்டுக்குப் பிறகுதான் பிணை வழங்கப்பட்டது. இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தால் சிறைக்குச் சென்ற 21 நாட்களிலிலேயே ஜெயா-சசி கும்பலுக்குப் பிணையும் வழங்கி தண்டனையையும் நிறுத்தி வைத்து வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு அசாதாரணமானதுதான்.

நெறிமுறைகளை மீறிய விசாரணை

வழக்குரைஞர்கள் தமது உறவினர்கள் நீதிபதிகளாகப் பணியாற்றும் நீதிமன்றங்களில் வாதாடக் கூடாது என இந்திய பார் கவுன்சில் நடத்தை நெறிமுறையை வகுத்து வைத்திருக்கிறது. இந்திய உயர்நீதி மன்ற நீதிபதிகளின் உறவினர்கள் யாரும் அந்த நீதிபதிகள் பணிபுரியும் உயர்நீதி மன்றங்களில் வழக்குரைஞராகப் பணிபுரியக்கூடாது என்று உச்சநீதி மன்றமும் அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், உச்சநீதி மன்ற மூத்த வழக்குரைஞரான பாலி நாரிமன், தனது மகன் ரோஹிண்டன் நாரிமன் உச்சநீதி மன்ற நீதிபதியாகப் பணியாற்றிவரும் நிலையில், இந்த நடத்தை நெறிமுறைகளுக்கு முரணாக, இப்பிணை வழக்கில் ஜெயாவின் சார்பாக வாதாடியிருக்கிறார். உச்சநீதி மன்றமும் பார் கவுன்சிலின் நடத்தை நெறிமுறைகளையும், தனது அறிவுறுத்தல்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு பாலி நாரிமன் ஜெயாவின் சார்பாக வாதாடும் முறைகேட்டை அனுமதித்திருக்கிறது. சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி இந்நடத்தை நெறிமுறைகளைக் குறிப்பிட்டு ஜெயாவின் பிணை மனு சார்பாக பாலி நாரிமன் ஆஜராவதை அனுமதிக்கக் கூடாதென உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தத்துவிற்கு எழுதியிருந்த கடிதமும் கண்டு கொள்ளப்படாமல் ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ளது. இம்முறைகேடு தொடர்பாக பாலி நாரிமன் மீது இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கூறியிருக்கிறார், சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி சந்துரு.

ஜெயாவுக்குப் பிணைஇம்முறைகேடு ஒருபுறமிருக்க, வழக்குரைஞர்கள் எந்தவொரு வழக்கிலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வாதியின் சார்பாகவும் பிரதிவாதியின் சார்பாகவும் ஆஜராகக் கூடாது என்ற நெறிமுறையும் இப்பிணை வழக்கு விசாரணையில் மீறப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் இதற்கு முன்பாக தமிழக அரசின் சார்பாகவும், அன்பழகனின் சார்பாகவும் வாதாடியிருக்கும் பாலி நாரிமன், பார் கவுன்சிலின் இந்த நெறிமுறையையும் மதிக்காமல், தற்பொழுது ஜெயாவின் சார்பாக வாதாடியிருக்கிறார். இப்படி சொல்லிக் கொள்ளப்படும் நீதிமன்ற அறம், மரபுகள், நெறிமுறைகள் ஆகியவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டுத்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு மன்றம் ஜெயாவின் பிணை மனு விசாரணையை நடத்தி முடித்திருக்கிறது.

உச்சநீதி மன்றத்தின் கட்டப் பஞ்சாயத்து

கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் ஜெயாவின் பிணை வழக்கில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி, “பத்தாண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழக்குரைஞரின் தரப்பைக் கேட்காமலேயே பிணை வழங்குவதற்கு கிரிமினல் சட்டத்தில் இடமிருப்பதாக” வாதிட்டார். உச்சநீதி மன்றத்தில் ஜெயாவிற்காக ஆஜரான பாலி நாரிமனின் வாதமும் இதே அடிப்படையைத்தான் கொண்டிருந்தது. “வரையறுக்கப்பட்ட காலத்திற்கான தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்குப் பிணை தரவில்லையென்றால், அது அவர்களுடைய மேல்முறையீட்டு உரிமையையே மறுப்பதாகும். இதுதான் குற்றவியல் சட்ட நடைமுறை” என வாதிட்டார், பாலி நாரிமன்.

கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா இந்த வாதங்களை தனது தீர்ப்பில் சட்டப்படி ஆணித்தரமாக மறுத்திருக்கிறார். “தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனையை நிறுத்தி வைத்து, பிணை வழங்குவதை அவர்களின் முற்றுரிமையாகக் கருத முடியாது; வழக்கு விசாரணை நடந்த காலத்தில் பிணையில் இருந்த குற்றவாளிகள் சட்டப்படி நடந்து கொண்டார்கள் என்பதனாலேயே, தண்டனை வழங்கப்பட்ட பிறகு அவர்களுக்குப் பிணை வழங்க வேண்டிய அவசியம் கிடையாது. இரண்டு நிலைகளும் வெவ்வேறானாவை.”

பாலி நாரிமன்
இந்திய பார் கவுன்சிலின் நடத்தை நெறிமுறைகளுக்குப் புறம்பாக, ஜெயாவின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன்.

“தண்டிக்கப்பட்ட குற்றவாளி கணிசமான காலம் சிறையில் இருந்துவிட்டார். அவரது மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு வருவதற்குக் காலதாமதமாகும் என்ற நிலையில் பிணை வழங்க முடியும். அதாவது, ஒருவேளை மேல்முறையீட்டில் அவர் விடுவிக்கப்படும் பட்சத்தில் அநியாயமாக முழு தண்டனையும் அனுபவித்ததாகிவிடும் என்ற அடிப்படையில் பிணை தரப்படுகிறது. அப்படிபட்ட நிலை இந்தக் குற்றவாளிகளுக்கு (ஜெயா-சசி கும்பல்) இல்லை. மேலும், ஊழல் வழக்குகளைப் பொருத்தவரை தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் மேல்முறையீட்டில் விடுவிக்கப்படும் வரை அவர்களைக் குற்றமிழைத்தவராகத்தான் பார்க்க வேண்டும் என உச்சநீதி மன்றத் தீர்ப்பு கூறுகிறது. ஊழல் குற்றச்சாட்டுகளை மனித உரிமை மீறலாகவும் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்குவதாகவும் பார்க்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத் தீர்ப்பு கூறுகிறது” என்றவாறு பல்வேறு சட்ட நுணுக்கங்களையும், உச்ச நீதிமன்ற, கர்நாடக உயர்நீதி மன்ற, சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்புகளையும் முன்வைத்துதான் ஜெயா-சசி கும்பலுக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் இடைநீக்கம் செய்ய முடியாது, பிணையும் வழங்க முடியாது எனத் தீர்ப்பளித்தார், அந்நீதிபதி.

ஜெயா-சசி கும்பலின் பிணை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, அக்குற்றவாளிகளுக்கு எதிராக உத்தரவிட்ட கர்நாடகா உயர்நீதி மன்றத் தீர்ப்புக்குத் தக்க பதில் அளித்து தனது தீர்ப்பை அளித்திருக்க வேண்டும். அதுதான் நீதியானதும் நேர்மையானதும் ஆகும். ஆனால், உச்ச நீதிமன்ற அமர்வோ கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதி ஏ.வி.சந்திரசேகராவின் வாதங்கள் எதற்கும் பதில் அளிக்காமல், என்ன காரணத்திற்காக ஜெயா-சசி கும்பலுக்குப் பிணை வழங்குகிறோம் என்பதைக்கூடக் குறிப்பிடாமல், தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இரண்டு பக்கங்களை மட்டுமே கொண்டிருக்கும் உச்சநீதி மன்றத் தீர்ப்பின் முதல் பக்கத்தில் எந்தெந்த குற்றவாளிகளுக்கு எந்தெந்த வழக்குரைஞர்கள் ஆஜரானார்கள் என்ற விவரமும், இரண்டாவது பக்கத்தில் ஒவ்வொரு குற்றவாளிக்கும் இரண்டு ஜாமீன்தாரர்களின் உத்தரவாதத்தைப் பெற்றுக் கொண்டு பிணை வழங்க வேண்டும் என்ற உத்தரவு மட்டுமே உள்ளது. அதாவது, உச்சநீதி மன்றம் அளித்திருப்பது தீர்ப்பல்ல; அது கட்டப் பஞ்சாயத்து. மரத்தடிக்குப் பதிலாக உச்சநீதி மன்றக் கட்டிடம், சொம்புக்குப் பதிலாக சுத்தியல் என்பதுதான் வேறுபாடு.

jaya-bail-2“வரையறுக்கப்பட்ட காலத்திற்கான தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்குப் பிணை தரவில்லையென்றால், அது அவர்களுடைய மேல்முறையீட்டு உரிமையையே மறுப்பதாகும். இதுதான் குற்றவியல் சட்ட நடைமுறை” என வாதிடுகிறார்களே, இந்தச் சட்டபூர்வ உரிமை எத்துணை ஏழைக் கைதிகளுக்கு, அநியாயமாகத் தண்டிக்கப்பட்ட அப்பாவிகளுக்குக் கிடைத்திருக்கிறது என விரல்விட்டுச் சொல்ல முடியுமா?

நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா
சட்டம் மற்றும் சமூக நியாயங்களின் அடிப்படையில் ஜெயாவிற்குப் பிணை வழங்க மறுத்த கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா

போலீசின் கையாளாகச் செயல்பட்டுவரும் கீழமை நீதிமன்றங்களால் தண்டிக்கப்பெற்ற பல நூற்றுக்கணக்கான அப்பாவி முசுலீம்கள், தம் மீது சுமத்தப்பட்ட பொய்வழக்குகள் உச்சநீதி மன்றத்தால் தள்ளுபடி செயப்படும் காலம் வரை, பிணையில்கூட வெளியே வரமுடியாமல் ஐந்தாண்டுகள், பத்தாண்டுகள் எனச் சிறையில் அநியாயமாகத் தண்டிக்கப்பட்டதற்கும், அதனால் அவர்களின் குடும்பங்கள் சின்னாபின்னமாகிப் போனதற்கும் ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

அம்முசுலீம்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தீவிரவாதம் தொடர்புடையவை எனத் ‘தேசபக்தர்கள்’ எதிர்வாதம் புரியலாம். ஆனால், நாட்டின் பொருளாதாரத்தை, வளர்ச்சியைச் சீரழிக்கும் அபாயகரமான குற்றமென்று ஊழலை வரையறுத்துவிட்டு, அக்குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப் பெற்ற குற்றவாளிகளை, குறிப்பாக ஜெயா போன்ற செல்வாக்குமிக்கவர்களைச் சலுகை பெற்றவர்களாக நடத்துவது எந்தவிதத்தில் நியாயமானதாகவும் நீதியானதாகவும் இருக்க முடியும்?

உச்சநீதி மன்றத்தின் பார்ப்பன பாசம்

“தமிழகத்தில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது; அ.தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்” என்பதையெல்லாம் குறிப்பிட்டு, சுப்பிரமணிய சுவாமி ஜெயாவிற்குப் பிணை வழங்கப்படுவதை எதிர்த்தபொழுது, “அவரது (ஜெயாவின்) கட்சிக்காரர்கள் கட்டுப்பாடின்றி நடந்து கொள்வதற்கு, அவர் என்ன செய முடியும்? அவர்தான் இந்த வன்முறையைத் தூண்டிவிட்டு நடத்தினார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா?” என ஜெயாவின் வக்கீலாக மாறி வாதிட்டார், தலைமை நீதிபதி தத்து. இன்னொருபுறம் ஜெயாவின் வழக்குரைஞர் பாலி நாரிமனிடம், “உங்களது கட்சிக்காரரை போராட்டங்களை நிறுத்தச் சொல்லியும் நீதிமன்றங்களை விமர்சிக்கக் கூடாது என அறிவுறுத்தியும் அறிக்கைவிடச் சொல்லுங்கள்” என்ற வேண்டுகோளையும் வைத்தார்கள் ‘மானங்கெட்ட’ நீதிபதிகள்.

jaya-bail-3கடந்த தி.மு.க. ஆட்சியில் சேது சமுத்திர திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி தமிழக அரசின் சார்பில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு எதிராக பார்ப்பன-பாசிசக் கும்பல் உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கை, விடுமுறை நாளில் வீட்டில் உட்கார்ந்தபடியே விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள், “தி.மு.க. அரசைக் கலைக்க உத்தரவிடவும் தயங்க மாட்டோம்” என வெளிப்படையாகவே மிரட்டினார்கள். ‘சூத்திரன்’ தலைமையிலான அரசை மிரட்டிய உச்சநீதி மன்றம், வன்முறையை நிறுத்துமாறு பாப்பாத்தி ஜெயாவிடம் – அப்பார்ப்பனத்தி ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்ற கூச்சம்கூட இல்லாமல் கெஞ்சுகிறது, வேண்டுகோள் வைக்கிறது.

டிராபிக் ராமசாமி
“இந்திய பார் கவுன்சிலின் நடத்தை நெறிமுறைகளின்படி பாலி நாரிமனை ஜெயாவின் சார்பாக வாதாட அனுமதிக்கக் கூடாது” எனத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதிய டிராபிக் ராமசாமி

“இந்த வழக்கு 18 ஆண்டுகள் எப்படியெல்லாம் இழுத்தடிக்கப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியும். அதேபோல் கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீடும் இழுத்தடிக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?” எனத் தலைமை நீதிபதி தத்து கேட்ட கேள்விக்கு, “இதற்கு முன்பு இருந்த நிலை வேறு. இனி அப்படி வழக்கில் தாமதம் ஏற்படாது என்பதற்கு நான் பிரமாணப் பத்திரம் தாக்கல் செகிறேன். நீதிமன்றம் என்ன நிபந்தனை விதித்தாலும் அதை ஏற்கத் தயார்” எனப் பதில் அளித்தார், ஜெயாவின் வழக்குரைஞர் பாலி நாரிமன்.

ஜெயாவிற்கு எதிராக தலைமை நீதிபதி நெற்றிக் கண்ணையே திறந்துவிட்டது போல இந்தக் கேள்விக்குப் பொழிப்புரை எழுதுகின்றன ஊடகங்கள். ஆனால், இந்தத் தீர்ப்பின் நரித்தனமே இந்தக் கேள்வியில்தான் அடங்கியிருக்கிறது. தண்டிக்கப்பட்ட குற்றவாளி பிணை கோரி தாக்கல் செய்த வழக்கில் மேல்முறையீட்டு வழக்கை எப்பொழுது முடிப்பீர்கள் என்று கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. ஜெயா, தனது நலனில் இருந்துதான் சொத்துக் குவிப்பு வழக்கை கடந்த பதினெட்டு ஆண்டுகளாக இழுத்தடித்து வந்தார். இப்பொழுது தண்டிக்கப்பட்ட நிலையில் மேல்முறையீட்டு வழக்கை விரைந்து முடிப்பது, அதில் தனக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற எல்லாவிதமான வழிகளிலும் முயலுவதுதான் தனது நலனுக்கு ஏற்றது என்பது அவருக்கு நன்கு தெரியும். அதனால்தான் இனி அப்படி வழக்கில் தாமதம் ஏற்படாது என்ற உறுதியை அவரது வழக்குரைஞர் அளித்தார். ஜெயாவின் இந்த அவசரத் தேவையை விரைந்து முடித்துக் கொடுக்கும் புரோக்கராகத்தான் நீதிபதி தத்து மேலே கண்ட கேள்வியை எழுப்பியிருக்கிறாரே தவிர, அதில் கண்டிப்போ, கண்டனமோ எதுவும் கிடையாது.

கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஆறு வார கால அவகாசம் கேட்ட ஜெயாவிற்கு எட்டு வார கால அவகாசம் அளித்தும், அம்மேல்முறையீட்டு மனுவை மூன்றே மாத காலத்தில் விசாரித்து முடிக்குமாறு கர்நாடகா உயர்நீதி மன்றத்தைக் கேட்டுக் கொள்வோம் என்றும் தமது தீர்ப்பில் தன்னிச்சையாக சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறார், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து. விசாரணை நீதிமன்றங்கள் ஊழல் வழக்குகளை ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும் என்றுதான் காலக்கெடு நிர்ணயிக்கப்படிருக்கிறதேயொழிய, அவ்வழக்குகளின் மேல்முறையீட்டிற்கு எவ்விதக் காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஜெயா-சசி கும்பலின் மேல்முறையீட்டு வழக்கை மூன்று மாதங்களில் முடித்துத் தருவதற்கு உச்சநீதி மன்றம் புரோக்கரைப் போல முன்வந்திருப்பது ஜெயாவிற்காகப் புகுத்தப்பட்ட சிறப்புச் சலுகையாகும். ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு தற்போது பிணையில் உள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலுவிற்கோ, அரியானா முன்னாள் முதல்வர் சௌதாலாவிற்கோ காட்டப்படாத சலுகைகள் ஜெயாவிற்கு அளிக்கப்படுகிறதென்றால், இந்தத் தீர்ப்பு அவாள் பிரம்மஸ்ரீக்கள் என்ற அடிப்படையிலோ அல்லது ஜெயாவின் கனமான கவனிப்பு காரணமாகவோதான் வழங்கப்பட்டுள்ளதாகக் கருத முடியும்.

உச்சநீதி மன்றம்: ஜெயாவின் தலையாட்டி பொம்மை!

நீதிபதி பி.எஸ்.சௌஹான்.
சொத்துக் குவிப்பு வழக்கின் பல்வேறு கட்டங்களில் ஜெயலலிதாவுக்குச் சாதகமாகத் தீர்ப்புகளை அளித்த முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி பி.எஸ்.சௌஹான்.

ஜெயா – சசி கும்பலுக்குச் சட்டத்திற்கு மேலான சலுகைகள் அளிக்கப்பட்டிருப்பதை மூடிமறைத்து, ஏதோ நிபந்தனைகள் நிறைந்த, கடுமையான தீர்ப்பை அளித்திருப்பதைப்போலக் காட்டிக் கொள்வதற்காகவே, “டிசம்பர் 18-க்குள் மேல்முறையீட்டுக்கான ஆவணங்களைத் தாக்கல் செய்துவிட வேண்டும்; வழக்கை இழுத்தடிப்பதற்கு எந்தவிதமான முயற்சியும் செயக்கூடாது; மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்வதற்கு ஒருநாள் தாமதமானால்கூட நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்” என தத்து தலைமையிலான அமர்வு மன்றம் தமது தீர்ப்பில் உதார் விட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உதார்கள் ஒருபுறம் சுயமுரண்பாடு கொண்டதென்றால், இன்னொருபுறம் நகைப்புக்குரியதாகும்.

ஜெயா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை பெங்களூருக்கு மாற்றியபொழுது, அவ்வழக்கைத் தினந்தோறும் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், தனது உத்தரவை தானே மதித்து நடந்துகொள்ளவில்லை. குறிப்பாக, சொத்துக்குவிப்பு வழக்கையும் இலண்டன் ஹோட்டல் தொடர்பான வழக்கையும் பிரிக்கக்கூடாதென கோரி ஜெயா கும்பல் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பை விசாரணை முடிந்த கையோடு வழங்காமல், நான்கு ஆண்டுகள் கிடப்பில் போட்டு வைத்து வழக்கு விசாரணையை முடக்கி வைத்தது உச்சநீதி மன்றம்.

jaya-bail-4உச்சநீதி மன்ற நீதிபதிகளாக இருந்த பி.எஸ்.சௌஹான், பாப்டே ஆகிய இருவரும் இவ்வழக்கில் ஜெயா கும்பலின் விசுவாசிகளாகவே நடந்துகொண்டதற்கு அவர்கள் அளித்த தீர்ப்புகளே சான்றுகளாக உள்ளன. “பவானி சிங்தான் அரசு வழக்குரைஞராகத் தொடர வேண்டும்; நீதிபதி பாலகிருஷ்ணா, அவரது பணி ஓவுக்குப் பிறகும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகத் தொடரும் வண்ணம் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்” என ஜெயா கும்பல் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில், ஜெயா-சசி கும்பல் எதைக் கோரினார்களோ அதையே இவ்விரு நீதிபதிகளும் தீர்ப்பாக அளித்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்த சமயத்தில் இவ்வழக்கின் தீர்ப்பு வந்துவிடக் கூடாதென சதித் திட்டம் தீட்டிய ஜெயா-சசி கும்பல், அதற்காக அரசு வழக்குரைஞர் பவானி சிங்கைத் தூண்டிவிட்டு, அவரது உடல் நிலையைக் காரணமாக முன்வைத்து வழக்கு விசாரணையை ஒத்திவைக்கும் மனுவொன்றை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய வைத்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சௌஹான், செல்லமேஸ்வர் அமர்வு ஜெயாவிற்குச் சாதகமாகத் தேர்தல் முடியும் வரை – ஏப்ரல் 28 வரை வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து தீர்ப்பளித்தது. இப்பொழுது தத்து தலைமையிலான அமர்வு மன்றம் அளித்திருக்கும் தீர்ப்போ, நீதிபதி சௌஹான் ஓவு பெற்று சென்றுவிட்ட குறையைத் தீர்த்து வைப்பது போல அமைந்துவிட்டது.

வருமான வரி மோசடி வழக்கிலிருந்து தம்மை விடுவிக்கக் கோரி ஜெயா-சசி கும்பல் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கை எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் போட்டுவைத்திருந்த உச்சநீதி மன்றம், கடந்த மார்ச் மாதத்தில் திடீரென முழித்துக்கொண்டு அம்மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, இந்த வழக்கை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், அதற்கு அடுத்த மாதமே நாடாளுமன்றத் தேர்தலைக் காரணமாக முன்வைத்து இந்த வழக்கு விசாரணையை மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி ஜெயா மனு தாக்கல் செய்தார். உச்சநீதி மன்றமும் ஜெயா கும்பல் தேர்தல்கள் முடிந்து பதவி பேரங்களை நடத்துவதற்கு வசதியாக மேலும் மூன்று மாத கால அவகாசம் அளிப்பதாக உத்தரவிட்டது.

ஆனாலும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்துவரும் இந்த வழக்கு விசாரணை கடந்த ஏழு மாதங்களில் ஒரு அங்குலம்கூட நகரவில்லை. அந்நீதிமன்ற நீதிபதி தெட்சிணாமூர்த்தி, ஜெயாவும் சசியும் நேரில் ஆஜராகுமாறு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்ட மறுநிமிடமே அந்நீதிமன்றத்திலிருந்து அதிரடியாக மாற்றப்பட்டார். எனினும், மாற்றப்பட்ட அன்று மாலையே மீண்டும் அதே நீதிமன்றத்தில் பணியில் அமர்த்தப்பட்டார். மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு பதவியேற்றவுடனேயே, வருமான வரித் துறையிடம் சமரச மனுவொன்றை அளித்தது, ஜெயா-சசி கும்பல். இந்தச் சமரச மனுவைக் காரணமாகக் காட்டியே வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கு விசாரணையைக் குழிதோண்டிப் புதைத்துவிடும் சதித்தனங்களை நடத்தி வருகிறது, அக்கும்பல்.

ஜெயா 1991-96-ம் ஆண்டுகளில் தமிழக முதல்வராக இருந்தபொழுது, 1992-ம் ஆண்டில் தனக்கு வெளிநாட்டில் இருந்து 2 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர் பரிசாக வந்ததாகக் கணக்கு காட்டினார். இது முறைகேடாக வந்த பணம் எனக் குற்றஞ்சாட்டி சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் கடந்த 2011-ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்து, இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து சி.பி.ஐ. உச்சநீதி மன்றத்தில் கடந்த 2012 பிப்ரவரியில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை கடந்த 2014 மார்ச்சில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஜெயா உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு இதுநாள்வரை பதில் அளிக்காமல் வழக்கையே முடக்கி வைத்திருக்கிறார், ஜெயா.

– திப்பு
_______________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014
_______________________________

  1. எல்லாம் சரி. இதில் பார்ப்பனீயம் எங்கு வந்தது?

    சொத்துக் குவிப்பு வழக்கின் பல்வேறு கட்டங்களில் ஜெயலலிதாவுக்குச் சாதகமாகத் தீர்ப்புகளை அளித்த முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி பி.எஸ்.சௌஹான் பார்ப்பனர் அல்லர். அம்மாவுக்கு வாதாடிய நாரிமன் பார்ஸி. நாரிமன் ஆஜர் ஆவதைக் கண்டித்து கடிதம் எழுதிய ட்ராபிக் ராமசாமி பார்ப்பனர். ஜெயா செய்த அட்டூழியங்களைக் கண்டியுங்கள். பார்ப்பனீயத்தை ஏன் தேவை இல்லாமல் கோர்க்கப் பார்க்கிறீர்கள்?

  2. அலாஹாபாத் உயர்நீதிமன்றத்தில் பாபரீ மஸ்ஜித் இடத்தை மூன்று பங்கு போட்டு இரண்டு பங்கை பார்ப்பனர்களுக்கு ஒதுக்கிய மூன்று நீதி (?) பதிகளில் பார்ப்பனர் எத்தனைப்பேர்? இங்கு தீர்ப்பு சொல்பவர் வாதாடுபவர் முக்கியமல்ல. உச்ச (?) நீதிமன்றத்தைப் பொறுத்தவரை தீர்ப்பு யாருக்கு? என்பதில்தான் மில்லியன் டாலர் கேள்வி. அது பார்ப்பனனுக்கு என்றால் அநீதியை விரைந்து காப்பாற்றியும் நிரபராதியை சவ்வாய் இழுத்து சாகடிப்பதிலும் இருக்கும் என்பதுதான் கட்டுரையின் நோக்கம்.

  3. Dear Mr. Faqir,

    By the way pls. be informed, In Babri masjid case two thirds land was allocated to Hindu organizations and not to any specific caste. If it is the case as you said, pls. let me know.

    Rgds,Ravi

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க