குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள கடை வீதிகளில் 24/12/2014 நடைபெற இருக்கும் நாகல்கேணி டாஸ்மாக் கடை முன்பு பெண்கள் விடுதலை முன்னணி நடத்தும் முற்றுகை போராட்டத்திற்கு அணிதிரட்ட பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் நடைபெற்றது!
ஒரு தோழர் ஜெயலலிதாவை போல உடை அணிந்தும், ஜெ. முகமூடி அணிந்தும், மூன்று சாராய பாட்டில்களை கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டும் பிரச்சாரம் செய்ததில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
ஒரு பூக்காரம்மாவிடம் முதலில் பிரசுரம் கொடுத்ததும், ஏதோ தருகிறார்கள் என வாங்கி வைத்துக்கொண்டார். அவரிடம் இப்போராட்டம் குறித்து விளக்கியதும், ”டாஸ்மாக்கால சீரழிஞ்சுகிட்டு இருக்கிற குடும்பம்மா எங்க குடும்பம். எனக்கு இரண்டு பசங்கம்மா! இரண்டு பேருமே குடிக்கிறாங்க! பாக்கு போடுறாங்க! இரண்டாவது பையனுக்கு இப்பத்தான் குழந்தை பிறந்து, மூன்று மாதங்களாகிறது. தினமும் குடிச்சு குடிச்சு, புத்தி குழம்பி போச்சு! பக்கத்திலே இருக்கிற கேசவர்த்தினி ஆஸ்பத்திரில சேர்த்து பார்த்தோம். இப்பத்தான் கொஞ்சம் தேறிவர்றான். இந்த போராட்டத்துக்கு நான் கண்டிப்பா வர்றேன்மா!” என்றார்.
மருந்து கடைக்காரர் ஒருவர் ”உடல் பஞ்சு மாதிரி! ரெம்ப சென்சிடிவ்வானது. குடிப்பதினால் உடல்ல இருக்கிற எல்லா உறுப்புகளுமே மிகவும் டேமேஜாயிரும்! கல்லீரல் ரெம்ப பாதிப்படையும். அதனால், ஏகப்பட்ட தொந்தரவு வரும்! படிக்கிற பசங்ககூட குடிக்கிறாங்க! உங்க போராட்டம் சரியான போராட்டம். நான் நிச்சயமா கலந்துக்கிறேன்!” என்றார்.
இப்படி பொது மக்கள் இந்த போராட்டத்தின் தேவையை அவர்களே உணர்ந்து நிதி அளித்து, கலந்து கொள்கிறோம் என ஆதரவும் தெரிவித்தனர். ஜெயலலிதா வேடம் அணிந்து பிரச்சாரம் செய்த பொழுது மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை.
நீங்க ஏன் “மாக்களின்” முதல்வரை இழுக்கிறீர்கள்? அவர் அமைதியாக தோட்டத்தில் தன் வேலையை செய்து கொண்டிருக்கிறார்.
இந்த டாஸ்மாக் எந்த தட்டு மக்களையும் விட்டு வைக்கவில்லை. எனது பிராமணக் குடும்பத்தையும் சீரழித்துக் கொண்டி(ன்று)ருக்கிரது.
இந்த அரக்க பூனைக்கு மணி கட்ட யாராவது இருக்கிறார்களா என்று ஏங்கும் மதுவால் பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தமிழன் !
எனது முந்தைய கருத்து நமது இயலாமையின் வெளிப்பாடு.
மது கொடுமையில் இருந்து வெளியே வர கவுன்சிலிங் எதாவது எடுத்தீர்களா ?
மது அடிமையில் இருந்து வெளியே வர உதவும் தமிழ் புத்தகங்கள் ஏதேனும் தெரியுமா ?
மது அருந்துவது தவிர உங்கள் ஹாபி என்ன ?
மன்னிக்கவும். நான் மதுவிற்கு அடிமைப்பட்டவனில்லை.
எனது குடும்பத்தினர் இந்தக் கொடுமையை அனுபவித்து வருகிறார்கள்.
இதுவரை முயற்சிக்காத கவுன்சிலிங் இல்லை. ஆங்கில மருத்துவம், மூலிகை மருத்துவம் அனைத்தும் முயற்சித்தாகி விட்டது. எல்லா முறைகளும் சிறிதுகாலம் தான் பயனளிக்கின்றது. அதன் பிறகு வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறுகிறது.
மதுவிலக்கு இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன். ஆனால் அது கள்ளச்சாராயம் போன்று வேறு பிரச்சினைகளைக் கிளப்பாமல் இருக்குமா?
எந்த பார்வையில் இதனை அணுகினாலும், அரசாங்கமே மதுவை ஊக்குவிப்பதை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. கண்டிப்பாக இந்தப் பூனைக்கு யாராவது மணி கட்டியே ஆக வேண்டும்.
நன்றி ! ஆனாலும் பாதிக்கப்பட்டவருக்கு ஹாபி உள்ளதா என்பதை பற்றி எதுவும் கூறவில்லை .
கவுன்சிலிங் எனபது ஒரு பகுதி தான் . அதை முடித்து வந்த பின்னர் அவர் மீண்டும் அதே நண்பர்களோடு ஊரு சுற்றி கொண்டு சினிமாக்களை பார்த்து கொண்டு இருந்தால் மீண்டும் அஹே பழக்கத்திற்கு ஆளாவார் .
யோகா , நீச்சல் , இசை பயிற்சி என்று புதிதாக ஏதேனும் முயற்சி செய்து பாருங்களேன் .
வீட்டை மாற்றலாம் , வேலை மாற்றலாம் ஏன் புது இடம் கூட போகலாம் .
எனது நண்பனின் கதையை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இரண்டு நண்பர்களில் ஒருவன் கோழிச்சண்டை பயின்றான் அதை இன்னொருவனுக்கும் பழக்கினான் . புதிதாக பழகியவன் தேவைகளுக்காக வீட்டில் இருந்து ஐந்தாயிரம் திருடினான் . அதை அவரது தந்தை கண்டுபிடித்துவிட்டார் .
அவரது தந்தை என்ன செய்தார் தெரியுமா ? வீடு நிலம் அனைத்தையும் விற்று வேறு இடத்திற்கு குடி பெயர்ந்தார் . தனது பழைய நண்பனை எளிதில் பார்க்க முடியாதபடி செய்தார் .விளைவு இன்றைக்கு அவன் நன்றாக படித்து நல்ல நிலையில் இருக்கிறான் .
மற்றொருவன் கோழி சண்டையில் பணம் தொலைத்து , பிற தீய பழக்கங்களுக்கு அடிமையாகி மன நலம் குன்றிய நிலையில் உள்ளான் .
அரசாங்கம் மாறும் என்று காத்திருப்பதை விட , நீங்கள் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாமே ?