காவிரிப் படுகை விவசாயிகளின் வாழ்வுரிமைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக
- தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை தரிசாக்கும் மத்திய, மாநில அரசுகளே!
- விவசாயிகளின் வாழ்வாதாரங்களை கார்ப்பரேட்டுகளுக்கு பலி கொடுக்காதே!
- காலாவதியான மீத்தேன் – பழுப்பு நிலக்கரி எடுப்பு ஒப்பந்தங்களைக் கிழித்தெறி! ஓ.என்.ஜி.சி துரப்பணப் பணிகளைக் கைவிடு
- காவிரியின் குறுக்கே அணைகட்டும் கர்நாடகத்தின் அடாவடித்தனத்திற்கு பக்கவாத்தியம் வாசிக்காதே!
- மரபணு மாற்ற பயிர்களை அனுமதிக்காதே
- விவசாயிகளின் கழுத்தை நெறிக்கும் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்!
முழு பிரீமியத் தொகையையும் அரசே செலுத்த ஏற்பாடு செய்! - கூலி ஏழை விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் 100 நாள் வேலை திட்டத்தை ஒழித்துக்கட்ட சதி செய்யாதே!
ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து 03.01.2015 அன்று மன்னை தலைமை தபால் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
விவசாயிகள் விடுதலை முன்னணி திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் கு.மா பொன்னுசாமி தலைமையில் மீத்தேன் எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மற்றும் புரட்சிகர அமைப்புத் தோழர்கள் மன்னை பேருந்து நிலையத்தில் அணி திரண்டனர்.
மீத்தேன் எதிர்ப்புப் போராட்டக் குழு வலங்கைமான் அமைப்பாளர் தோழர் சின்னதுரை, விவசாயிகள் விடுதலை முன்னணி வேதாரண்யம் தோழர் கிருஷ்ணமூர்த்தி, மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர் சதீஷ்குமார், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஆசாத் ஆகியோர் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை அம்பலப்படுத்திக் கண்டன உரையாற்றினர். மக்கள் கலை இலக்கியக் கழகத் தஞ்சை கிளைச் செயலாளர் தோழர் இராவணன் உரையாற்றி முற்றுகைப் பேரணியைத் தொடக்கி வைத்தார்.
விண்ணதிர முழக்கமிட்டபடி மன்னை தலைமை தபால் நிலையம் நோக்கித் தோழர்களும், விவசாயிகளும் முற்றுகைக்காக முன்னேறினர்.
“ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதித்தோம். கலைந்து செல்லுங்கள். கைது செய்ய நேரிடும். ரிமாண்டும் ஆகலாம்” என்று கூறி தோழர்களை அச்சுறுத்தியது காவல் துறை. எழுச்சி மிக்க முழக்கங்களுடன் காவலை மீறி பேரணி முன்னேறவே காவல்துறை பின்வாங்கியது.
“பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் செய்து கலைந்து செல்லுங்கள். கைதைத் தவிர்க்கலாம்” என்று வழக்கறிஞர்கள் மூலம் தூது விட்டது.
அதை ஏற்க மறுத்து தலைமை தபால் நிலையம் நோக்கி முன்னேறிய பேரணியை 50 மீட்டர் தொலைவில் தடுத்து நிறுத்தியது போலீஸ். அனைவரும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பிறகு அனைவரையும் கைது செய்த காவல் துறை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றது.
சுமார் 2 மணி நேரம் நடந்த இந்தப் போராட்ட நிகழ்வு விவசாயிகளை ஒடுக்குவதற்குத் தனிச்சிறப்பாக அமைக்கப்பட்ட கிசான் போலீசை எதிர்கொண்டு வரலாறு படைத்த மன்னை மண்ணின் மாண்பை மீட்டெடுக்கும் போராட்டத்தின் தொடக்கமாக அமைந்தது.
தகவல்
மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக்குழு
விவசாயிகள் விடுதலை முன்னணி
ம.க.இ.க பு.மா.இ.மு