KGF – BEML தொழிலாளர் போராட்டம் வெல்க!
தொழிலாளர்களே!
- BEML நிர்வாகம் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த 1,200 தொழிலாளர்களுக்கு பணிநிரந்தரம், பணிபாதுகாப்பை வழங்க மறுப்பது பொதுத்துறை தனியார்மயமாக்கத்தின் ஒருபகுதி!
- பணிநிரந்தரம், பணிபாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக BEML தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் வெற்றி பெற துணை நிற்போம்! பொதுத்துறை தனியார்மயத்திற்கெதிராக வீறுகொண்டு போராடுவோம்!
- சட்டபூர்வமான உரிமைகள் பறிக்கும் இந்த அரசுக்கு எதிராக, சட்ட வரம்புகளை மீறி போராட தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டியப்போம்!
KGF-ல் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிட்டெட் நிறுவனம் (BEML) செயல்பட்டு வருகிறது.
இதில் EMD என்பது (புல்டோசர் போன்றவை தயாரிப்பது) முதன்மை பகுதி. இங்கு 3,000 நிரந்தரத் தொழிலாளர்கள் வரை பணிபுரிகின்றனர். RC2 ரயில்கோச் யூனிட் 2 என்பது ரயில் பெட்டி தயாரிக்கும் இடம். HFU என்பதும் ஹைட்ராலிக் தொடர்பான பாகங்கள் தயார் செய்கின்ற பகுதி. H&P, R&P ஆகிய பிற பகுதிகளும் உள்ளன. இவற்றில் மொத்தமாக 1,200-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.
இவர்கள் எல்லோரும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த தொழிலாளர்கள். இவர்களை ஆலை நிர்வாகமே நேரடியாக பணியில் அமர்த்தியது. தங்கச் சுரங்கம் மூடப்பட்ட பிறகு, தங்க சுரங்கத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு முதன்மை முக்கியத்துவம் என்ற அடிப்படையில் இவர்கள் எல்லோரும் பணியில் அமர்த்தப்பட்டவர்கள். இவர்கள் எல்லோருக்கும் ஒரு நாள் கூலி ரூ 90 – ரூ 120 வரை மட்டுமே.
சில ஆண்டுகளுக்கு RC2 பகுதி தொழிலாளர்கள் போராடிய போது கூட இந்த நிறுவனம் ஊதிய உயர்வு வழங்கவில்லை. மாநில அரசின் மூலம் ரூ 30 மட்டும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இவர்களை ஒப்பந்ததாரர் மூலம் எடுத்ததாக கணக்கு காட்டியுள்ளது, நிறுவனம். மேலும், இவர்கள் எல்லோரும் நேரடி உற்பத்தியில் ஈடுபடுவர்கள். இத்தொழிலாளர்கள் இல்லையென்றால் ஆலையே இயங்காது என்ற நிலைமை உள்ளது.
இவ்வாறு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஹெல்மெட், கிளவுஸ், பாதுகாப்பு கவசங்கள் என எதுவும் கிடையாது. ஆனால், BEML-க்கு தொழிலாளர் பாதுகாப்புக்கான சிறந்த நிறுவனம் என்ற விருது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது!
வேலைக்கு எடுக்கும் போது பணிநிரந்தரம் செய்வதாக சொல்லி வேலையில் எடுத்தது, நிறுவனம். ஆனால், இதுநாள் வரை மிகச் சிலரே பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, இத்தொழிலார்கள் எல்லோரும் 8 – 5 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள். இவர்களில் இதுவரை 150 பேருக்கு 4 ஆண்டுகள் பயிற்சிக்காலம் (டிரையினிங்) என்ற பெயரில் பணிநிரந்தர ஆணை வழங்கினர். ஏற்கனவே பல ஆண்டுகள் வேலை செய்திருந்தாலும் 4 ஆண்டுகள் பயிற்சிக்காலம் (டிரையினிங்) முடிக்க வேண்டும். இதையும் தொழிலாளர்கள் தீவிரமாக போராட்டத்தில் இறங்குவார்கள் என்ற நிலைமை ஏற்படுவதிலிருந்து திசைத் திருப்பும் நடவடிக்கையாகவே 20, 30 பேர் என பல தவணைகளில் செய்துள்ளது BEML நிர்வாகம்.
பண்நிரந்தர ஆணை, நியாயமான ஊதியம், மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். இவ்வளவு நாள் எப்படியும் பணிநிரந்தரம் கிடைத்துவிடும் என்று காத்திருந்தனர். ஆலை நிர்வாகம் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்காத வகையில் தொழிலாளர்களை ஒரு மயக்கத்திலேயே வைத்திருந்து தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை திருடி வந்தது. இந்த முறை தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினால் தான் தீர்வு என்ற நிலையில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஆலை வாயில் முழக்கம் போடுவது, மதிய உணவு புறக்கணித்தல், கருப்பு பேட்ஜ் அணிதல் போன்ற எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்த தொழிலாளர்கள் பிப்ரவரி 27-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் செய்து வருகின்றனர். 5 பிரிவுகளில் வேலை செய்யும் 1,200 தொழிலாளர்களும் ஒற்றுமையாக இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு ஆலையின் முன்னால் பந்தல் போட அனுமதி மறுத்து வருகிறது போலீசு. “ஆலை முன்பாக கூட்டம் கூடுவதற்கு அனுமதி இல்லை” என்கிறது ஆலை நிர்வாகம். இதற்கு போலீசு, “உள்ளூரில் திருவிழா நடப்பதால் பாதுகாப்புக்கு போலீசு இல்லை” என்று சப்பைக் காரணத்தை சொல்கிறது. இதனையே உள்ளூர் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரும் கூறுகிறார். ஆலையின் முன்பு கூட்டம் கூடுவதற்கு நீதிமன்றத்தில் முறையிட்டுள்ள தொழிலாளர்கள் ஆலையின் முன்பாக கூடுவதை நிறுத்தியுள்ளனர்.
மொத்தத்தில் சட்டபூர்வ உரிமைகளைக் கூட அனுமதிக்க இந்த அரசு தயாராக இல்லை. குறைந்த பட்ச ஜனநாயகம் என்ற ஒன்றும் இன்று இல்லை என்பது தெளிவாக உள்ளது. தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்க அரசின் அனைத்து அங்கங்களும் கைகோர்த்து இருப்பதை தொழிலாளர்கள் உணரவேண்டும். ஆகையால், சட்டத்திற்கு உட்பட்ட போராட்டம் என்பது தற்கொலைக்கு சமமானது. இந்த சட்டவரம்புகளுக்கு வெளியே தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டிமையத்து போராடுவது மிகவும் அவசியமானது.
[துண்டறிக்கையை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]
இத்தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தொழிலாளர்கள் இன்னும் நேரடியாக ஆதரவு தெரிவிக்காத நிலைமை இருப்பதால் ஆலையில் ஓரளவிற்கு உற்பத்தி நடக்கிறது. நிரந்தரத் தொழிலாளர்கள் 12 மணிநேரம் வேலை செய்ய வைக்கப்படுகின்றனர். போராட்டம் தொடர்ந்தால் இது நிரந்தரத் தொழிலாளர்கள் மத்தியிலும் மாற்றத்தைக் கொண்டுவரும். அதுவரை தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருந்து போராட்டத்தை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும்.
மற்றொருபுறம், BEML-ஐ தனியார்மயமாக்கும் வேலை வெகுதீவிரமாக நடக்கிறது. இத்தொழிலாளர்களுக்கு பணிநிரந்தரம் செய்யாமல் வைத்திருப்பது என்பது பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கத்தின் ஒருபகுதி. அவ்வாறு பொதுத் துறை தனியார்மயமாக்கத்திற்கு எதிராக போராடுகின்ற சக்திகளுடன் இணைந்து போராட முன்வரவேண்டும். தனியார்மயத்திற்கு எதிரான போராட்டமாக இப்போராட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.
மத்தியில் ஆட்சி புரிகின்ற மோடி அரசு, இயற்கை வளங்களை சூறையாடி நாட்டை கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக்காடாக மாற்றி வருகிறது. இதற்கேற்ப அனைத்துப் பிரிவு மக்களின் உரிமைகளையும் கடுமையாக நசுக்கி வருகிறது. தொழிலாளர்களுக்கு இருக்கும் ஏட்டளவிலான சில உரிமைகளையும் பறித்து தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக்குகிறது.
இவற்றை உணர்ந்து BEML தொழிலாளர்களின் போராட்டத்தை அனைத்துப் பிரிவு தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் ஆதரிக்க புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அறைகூவுகிறது. தனியார்மயமாக்கத்திற்கு எதிராகவும் தொழிலாளர் உரிமைப் பறிப்புக்கு எதிராகவும் தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டியமைப்போம்! உரிமைகளை மீட்டெடுக்க வீதியில் இறங்கிப் போராடுவோம்!
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தொடர்புக்கு:
97880 11784 – ஒசூர்
98459 38763 – கே.ஜி.எஃப்