privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககொங்கு பயங்கரவாதி யுவராஜை என்கவுண்டர் செய்யலாமா ?

கொங்கு பயங்கரவாதி யுவராஜை என்கவுண்டர் செய்யலாமா ?

-

அதே ஊர், அதே கோவில்..ஆனால் அப்போது போராடிய மக்கள் இப்போது ரசிக்கிறார்கள்!
அதே ஊர், அதே கோவில்..ஆனால் அப்போது போராடிய மக்கள் இப்போது ரசிக்கிறார்கள்!

அதே ஊர். அதே கோவில். அதே சாதி சேர்க்கை. ஆனால் இம்முறை ஊர் ‘மக்கள்’ போராடவில்லை. திருச்செங்கோட்டின் மக்களை குறிப்பாக பெண்களை இழிவுபடுத்தினார் என்று பெருமாள் முருகன் மீது பாய்ந்த கவுண்டர் சாதிவெறி இன்று சகுனித்தனமாக ரசித்து வருகிறது. அன்று பெருமாள் முருகனின் எழுத்தைக் கொன்றவர்கள் இன்று ஒரு தலித் இளைஞன் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதை ரசிக்கிறார்கள். பயங்கரவாதி யுவராஜ் இனி அவர்கள் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கப்போகும் ஒரு ‘தியாகி’.

சேலம் மாவட்டம் ஓமலூர் சந்தைப் பேட்டையைச் சேர்ந்த 22 வயது கோகுல்ராஜ், தலைவேறு முண்டம் வேறாக படுகொலை செய்யப்பட்டு ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டிருந்த காட்சியை பார்க்காதவர் யாருமில்லை. ஆனால் ஈராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ் தலைவெட்டிக் காட்சிகளைப் பார்த்து விட்டு காட்டுமிராண்டித்தனம் என்று அதிர்ச்சியுற்றவர்கள் எவரும் கோவைக் காட்டுமிராண்டித்தனத்தை பார்த்து அதிர்ச்சியடையவில்லை.

கொங்கு வேளாள சாதிவெறிக்கு பலியான கோகுல்ராஜ்
கொங்கு வேளாள சாதிவெறிக்கு பலியான கோகுல்ராஜ்

கோகுல்ராஜ் கொலை தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டருக்கின்றனர். ஆண்கள் ஐந்து, பெண் ஒருவராக இருந்த அந்த கும்பலிடம் போலிசார் நடத்திய விசாரணையிலிருந்து கொலை எப்படி நடந்தது என்பது தெரிய வந்திருக்கிறது. வழக்கமாக குற்றச் சம்பவம் குறித்த போலீஸ் விசாரணையின் செய்திகள் எந்த அளவுக்கு உண்மை என்று சிலர் கேட்கலாம்.

பெருமாள் முருகன் பிரச்சினையில் தமிழக அரசு, ஆளும் கட்சி மற்றும் மேற்கு தமிழக அரசு அதிகாரிகள் எப்படிக் கட்டுக் கோப்புடன் கொங்கு வேளாள கவுண்டர் சாதிவெறிக்கு சலாம் அடித்து பணிபுரிந்தார்கள் என்பது அனைவரும் அறிவர். அச்சமயம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியின் போது பெண் போலீசார் சிலர் கடை கடையாகச் சென்று பெருமாள் முருகன் புத்தகங்களை விற்க கூடாது என்று ‘நாகரிகமாக’ மிரட்டியதும் வரலாறுதான்.

இந்த வரலாற்றுப் பின்புலத்தில் பார்த்தால் கோகுல் ராஜ் குறித்த கொலைச் செய்தி போலீஸ் தரப்பிலிருந்து கவுண்டர் சாதிவெறிக்கு எதிராக வெளிவருவது குதிரைக் கொம்புதான். ஆனால் தற்போதைய நிலவரப்படி கொலைகாரர்கள் குறித்த உண்மைகள் பகிரங்கமாக வெளியே வந்துவிட்டபடியால் அதை மறைப்பது போலிசுக்கு சிரமம். அதனால் இந்த செய்திகள் உண்மையாகவே வெளியே வரலாம். கூடுதலாக ஒரு குற்றம் பகிரங்கமாக வெளியே கசியும் போது அதை மறுத்துப் பேசாமல் பின்பு ஆறப் போட்டு சாட்சி இல்லை, பிறழ் சாட்சிகள் என்று யுவராஜ் காப்பாற்ப்படலாம் என்பதாலும் இந்த செய்திகள் இப்போது வெளியே வந்திருக்கலாம்.

கோகுல் ராஜ் கொலையில் கைது செய்யப்பட்டகுற்றவாளிகள்
கோகுல் ராஜ் கொலையில் கைது செய்யப்பட்டகுற்றவாளிகள்

போலீஸ் விசாரணையின் படி கைது செய்யப்பட்டவர்கள் திருச்செங்கோடு அர்த்தநாரிஸ்வரர் கோவிலில் கோகுல்ராஜை கடத்தி சென்று யுவராஜிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். பிறகு யுவராஜ் தலைமையில் ஒரு கும்பல் அந்த அப்பாவி தலித் இளைஞனை கொடுரமாக கொன்றிருக்கிறது. கைதானவர்கள் அனைவரும் யுவராஜின் உறவினர்கள்.

சங்ககிரி, திருச்செங்கோடு பகுதியில் பொது இடங்களில் தென்படும் காதலர்கள் அல்லது இளைவயது ஆண்-பெண்களை இக்கும்பல் தேடிச் சென்று விசாரிக்கும். அதில் கொங்கு வேளாள கவுண்டர் ஜோடிகள் இருந்தாலே இவர்கள் கோபத்துடன் எச்சரித்து பிரித்து அனுப்பி விடுவார்களாம். அதாவது கவுண்டர் என்றாலும் அங்கேயும் வர்க்கம் பார்த்துதானே காதலிக்க வேண்டும்?

பிறகு அந்த ஜோடியில் ஒருவர் கவுண்டர் மற்றொருவர் வேறு சாதி அல்லது கவுண்டர்களை விட சாதிப்படி நிலையில் கீழே இருப்பவர்கள், தாழ்த்தப்பட்ட சாதி என்றால் அவர்களை தாக்கி காயப்படுத்தி துரத்துவார்கள். அதிலும் ஒரு கவுண்டர் பெண் ஒரு தலித்தை காதலித்தால் அவர்களது ‘கௌரவக்’ கொலை வெறி எப்படி எகிறும் என்பதை விவரிக்கத் தேவையில்லை.

ஜூன் 23-ம் தேதி இந்த கொங்கு வேளாள சாதி வெறிக் கும்பலுக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. அதன்படி கோகுல்ராஜ் தனது தோழி ஸ்வாதியுடன் சென்றிருக்கிறார் என்று தெரிந்து இவர்கள் கரடியாய் குதிக்கிறார்கள். அந்த பெண்ணை எச்சரித்து பேருந்து ஏற்றி அனுப்பி விட்டு, கோகுல்ராஜை மட்டும் யுவராஜிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இந்த கவுண்டர் மான மீட்பு போர் நடவடிக்கைகள் அனைத்தும் “தீரன் சின்னமலை பேரவை” தளபதி யுவராஜின் தலைமையிலேயே நடந்துள்ளது.

பயங்கரவாதி யுவராஜ்
கொங்கு பயங்கரவாதி யுவராஜ்

பிறகு பயங்கரவாதி யுவராஜ் இக்கும்பலுக்கு தொலைபேசி மூலம் கோகுல்ராஜை கொன்று விட்டதாகவும், தலைமறைவாக இருக்கும் படியும் கூறியிருக்கிறார். அதன் பிறகு ரயில் தண்டவாளம் அருகே உடல் கிடந்த செய்தி தெரிந்ததாகவும், யுவராஜை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கைதான இக்கும்பல் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறது.

ஊடக செய்திகள் படி பயங்கரவாதி யுவராஜ், சென்னையில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ பாதுகாப்பில் இருப்பதாகவும், அதை அந்த எம்.எல்.ஏ மறுத்திருப்பதாகவும், அவர் விரைவில் நீதிமன்றத்தில் சரணடைய இருப்பதாகவும் தெரிகிறது. இன்னும் தெரியாத விசயங்கள் பல இருக்கலாம். தமிழகத்தின் செல்வாக்கான ஒரு ஆதிக்க சாதியின் பலத்தோடு ஒப்பிடும் போது யுவராஜ் இந்த கொலை வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்கி வெளியே வர நிறைய வாய்ப்பிருக்கிறது.

தற்போது ஒரு வீடியோவை இக்கும்பல் வெளியிட்டிருப்பதாக தெரிகிறது. அதில் பயத்துடனும், பதட்டத்துடனும் பெண்களை நம்பி காதலிக்காதீர்கள், இல்லையென்றால் எனது முடிவுதான் உங்களுக்கு ஏற்படும்” என்று கோகுல் ராஸ் பேசுவதாக அதாவது தற்கொலைக்கு முந்தைய கடிதம் போல இந்த வீடியோ சாட்சி இருக்கிறதாம். ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொல்வதற்கு முன்னும் அப்படி ஒரு வீடியோ போடுவார்கள். அதிலும் கொல்லப்படும் அப்பாவிகள் தாம் தவறு இழைத்திருப்பதாக ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பார்கள். பயங்கரவாதிகள் என்ற முறையில் ஐ.எஸ்-ம், ஆர்.எஸ்.எஸ்-ம், கொங்கு வேளாள சாதி வெறியர்களும் பங்காளிகள்தான்.

கொல்லப்பட்ட கோகுல்ராஜின் குடும்பம் மற்றும் ஊர் மக்கள், தலித் அமைப்புகள், ஜனநாயக சக்திகள் உறுதியாக போராடிய பிறகே போலிசு கொஞ்சம் அசைந்து கொடுத்தது. ஆரம்பத்தில் கோகுல்ராஜின்  தாயும், அந்த பெண்ணும் இச்சம்பவம் குறித்து குறிப்பான விவரங்களோடு புகார் மற்றும் தகவல் அளித்திருந்தாலும் போலிசார் அதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கொலை வழக்காக அவர்கள் பதிவு செய்வதற்கே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன.

கொள்ளைக்கார அம்மாவுக்கு கொலைகார சாதி வெறியர்கள் ஆதரவு
கொள்ளைக்கார அம்மாவுக்கு கொலைகார சாதி வெறியர்கள் ஆதரவு

கவுண்டர் பெண்களை இழிவுபடுத்தியதாக பெருமாள் முருகனைக் கண்டித்து திருச்செங்கோட்டில் ஒரு கூட்டம் நடத்தினார்கள். கூலிப்படை கோஷ்டியான இந்துமக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத் நடத்திய அந்த கூட்டத்தில் சாரு நிவேதிதா, அரவிந்த நீலகண்டன் போன்ற எழுத்துலக கயவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

தமிழ்நாடு ஒரு பாலியல் வறட்சி மாநிலம் என்று வருத்தப்படும் பொறுக்கி சாரு உண்மையில் தனது ‘வறட்சிக்காக’ ஒரு அப்பாவிப் பெண்ணை சாட்டில் துன்புறுத்தியது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் தலித் மக்களுக்காகவும், அம்பேத்கருக்காகவும் கிளிசரின் போடாமலேயே அழும் மோசடிக்காரர் அரவிந்தன் நீலகண்டன் மற்றொரு பக்கம். பொறுக்கி சாருவும், பாசிஸ்டு அ.நீலகண்டனும் திருச்செங்கோட்டில் எதைக் கண்டித்தார்களோ அதே கண்டனத்தைத்தான் பயங்கரவாதி யுவராஜும் செய்திருக்கிறார். என்ன அவர்கள் வார்த்தைகளில் கொலை செய்தார்கள், இவர் தலையை வெட்டி கொலை செய்திருக்கிறார்.

சாரு, அ.நீ போன்றவர்களை ‘ஜனநாயகம், கருத்துரிமை, நாகரீகம், காதல்’ போன்ற ஜென்டில்மேன் டைப் ஆட்களாக கருதும்  அறிஞர் பெருமக்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும். இவர்களது ஆதரவுதான் அவர்களை திருச்செங்கோட்டில் சென்று பேச வைத்தது. இப்படி பேசியவர்களது ஆதரவுதான் யுவராஜை கொலை வெறியோடு அலைய வைத்திருக்கிறது. ஆகவே சாரு, அ.நீ போன்ற குற்றவாளிகளை ஆதரித்து ஏதாவது ஒரு எழுத்தோ, வார்த்தையோ, பத்தியோ, புகைப்படமோ, நேர்காணலோ, அட்டைப்படக் கட்டுரையோ செய்திருக்கும் அனைவரும் கோகுல் ராஜின் கொலையில் ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்று வரலாற்றில் பதிவு செய்கிறோம்.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் எழுத்தைக் கொன்றவர்கள் இன்று ஒரு தலித் இளைஞனின் தலையை துண்டித்திருக்கிறார்கள்.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் எழுத்தைக் கொன்றவர்கள் இன்று ஒரு தலித் இளைஞனின் தலையை துண்டித்திருக்கிறார்கள்.

கோகுல்ராஜின் கொலை என்பது “பறையனுக்கு கவுண்டர் பெண் கேக்குதா” என்றால், பெருமாள் முருகனது எழுத்து மரணத்திற்கு காரணம், “ கவுண்டச்சி வயித்தில் சக்கிலியன் வாரிசா” என்பதே. ஆதிக்க சாதி வெறி என்பது தலித் மக்களுக்கு மட்டுமல்ல, அந்த சாதியில் வாழும் பெரும்பான்மை மக்களுக்கே எதிரிதான் என்பதை இச்சம்பவம் நிரூபித்துள்ளது.

பெருமாள் முருகன் பிரச்சினையின் போது ஆதிக்க சாதியில்  வாழும் பெண்களை வதைக்கும் கதைகள், நடப்பியலை விரிவாக பார்த்திருக்கிறோம். இங்கோ ஒரு இளம்பெண் தனது நண்பருடன் ஒரு கோவிலுக்கு சென்று கூட பேச முடியவில்லை. பேசியதால் அவளது நண்பன் கொலை செய்யப்பட்டிருக்கிறான். இது தொடரும் பட்சத்தில் கொங்கு வேளாள சாதியில் உள்ள பெண்கள் வாழ்நாள் முழுதும் ஆயுள் தண்டனைக் கைதி போல வாழ வேண்டியிருக்கும்.

கோவை ஈஸ்வரன் எனும் கொ.வே.சாதி வெறி சங்கத் தலைவர் தொலைக்காட்சி விவாதங்களில் பேசும் போது வன்கொடுமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூப்பாடு போடுவார். அந்த சட்டம் இருந்துமே கோகுல்ராஜின் கொலையை கொலை வழக்காக பதிவு செய்வதற்கு ஒரு வாரம் ஆனது. அச்சட்டம் இல்லாமல் போனால் காதும் காதும் வைத்தவாறு முடிப்பதற்கு போலீசுக்கும், இவர்களுக்கும் பிரச்சினை இல்லை போலும்.

ஆங்கிலேயரை எதிர்த்த ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் பங்கேற்ற தீரன் சின்னமலைக்கும்,  பயங்கரவாதி யுவராஜுக்கும் என்ன சம்பந்தம்? தீரன் சின்னமலை அந்த சாதிக்கு சொந்தமானவரில்லை. உண்மையில் கோவை வட்டாரத்தில் தீரன் சின்னமலையின் நாட்டுபற்று உணரப்பட்டிருந்தால் யுவராஜ்களுக்கு அங்கே வாழ்வில்லை. ஒரு வேளை தீரன் சின்னமலை இன்று இருந்திருந்தால் யுவராஜ் என்றோ சிரச்சேதம் செய்யப்பட்டு, சாதி வெறியை கடைபிடிக்கும் மிருகங்களுக்கு எச்சரிக்கை என்று ஊர் ஊராக நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கும்.

பாலியல் வன்புணர்ச்சி குற்றங்களின் போது என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று பலரும் குரல் கொடுப்பார்கள். இங்கே யுவராஜை என் கவுண்டர் செய்ய வேண்டும் என்று கோவை வட்டராத்தில் இருந்து குறிப்பாக கொங்கு வேளாள சாதி வாழ்க்கையினை மறுக்காமலும் ‘அமைதியாகவும்’ பின்பற்றும் ஒருவரிடமிருந்தும் ஏன் வரவில்லை? நாம் கவுண்டர் வெறியை மட்டுமல்ல எந்த என்கவுண்டரையும் ஆதரிக்க வில்லை. ஆனால் ஆதிக்க சாதிவெறியின் அழுகுணியாட்டத்தை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்கிறோம்.

இல்லையேல் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட கோகுல்ராஜ்கள் இங்கே எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்த மாட்டார்கள்.