privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கசுயதம்பட்ட மோடியின் இன்னுமொரு ஆக்ஷன் சினிமா!

சுயதம்பட்ட மோடியின் இன்னுமொரு ஆக்ஷன் சினிமா!

-

மியான்மரில் புகுந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல்: சுயதம்பட்ட மோடியின் இன்னுமொரு ஆக்ஷன் சினிமா!

பாசிச மோடியைப் புதிய ரட்சகனாக,செயல்வீரனாக, வளர்ச்சியின் நாயகனாக விளம்பரப்படுத்தி, பல விதங்களிலும் பில்ட் -அப் கொடுத்து ஊடகங்களும் இந்துத்துவப் பரிவாரங்களும் தூக்கி நிறுத்தியபோதிலும், அத்தனையும் சரிந்து விழுந்து, நாடு முழுவதும் கடும் அதிருப்தியையும் வெறுப்பையும்தான் மோடி அரசு எதிர் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் அடியாளும் பாசிசக் கோமாளியுமான மோடி கும்பலின் பராக்கிரமங்களைச் சித்தரிக்கும் பல விளம்பரப் படங்களை அடுத்தடுத்து வெளியிட்ட போதிலும், அவையனைத்தும் புஸ்வாணமாகிவிட்டன. இந்நிலையில் அனைத்து அரங்குகளிலும் தோல்வியடைந்துள்ள மோடி கும்பல், இவற்றை மூடிமறைக்கவும், மக்களின் கவனம் எப்போதும் தன்னை நோக்கியே இருக்கவும் கிரிமினல்தனமாக யோசித்து, “எல்லை தாண்டிய தீவிரவாத எதிர்ப்பு” என்ற புத்தம் புது ஆக்ஷன் சினிமாவை அண்மையில் வெளியிட்டது.

வடகிழக்கு தாக்குதல்
கடந்த ஜூன் 4 அன்று வடகிழக்கிந்திய தேசிய இன ஆயுதக் குழுக்களின் குண்டுவீச்சுத் தாக்குதலில் 18 சிப்பாய்களைப் பலி கொண்டு சிதிலமடைந்து கிடக்கும் இந்திய இராணுவத்தின் வாகனம்.

கடந்த ஜூன் 9 அன்று அதிகாலை நேரத்தில் இந்திய ராணுவப் படையினர், இந்திய-மியான்மர் எல்லையை தாண்டிச் சென்று மியான்மரில் பதுங்கியிருந்த தீவிரவாதக் குழுக்களின் இரண்டு முகாம்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தியதாகவும், தீவிரவாதிகளில் ஏறத்தாழ 50 பேர் கொல்லப்பட்டு 50 பேர் படுகாயமடைந்து காட்டுக்குள் தப்பியோடிவிட்டதாகவும் மோடி அரசும் ஊடகங்களும் பரபரப்பூட்டும் செய்திகளை வெளியிட்டன.

இந்திய ராணுவத்தின் டோக்ரா ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த வாகனத்தின் மீது வடகிழக்கிந்திய தேசிய இன ஆயுதக் குழுக்கள் கடந்த ஜூன் 4 அன்று நடத்திய தாக்குதலில் 18 சிப்பாய்கள் கொல்லப்பட்டு 14 பேர் படுகாயமடைந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தின் கமாண்டோ படையினர் ஜூன் 9 அன்று மியான்மருக்குள் புகுந்து ஆயுதக் குழுக்களின் முகாம்கள் மீது இந்த அதிரடித் தாக்குதல் நடத்தியதாகத் தொடர்ந்து ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள், இதனைத் தீவிரவாதத்துக்கு எதிரான மோடி அரசின் உறுதியான நடவடிக்கையாகச் சித்தரித்தன.

மோடி கும்பலின் காமெடி பீசாகிய மத்திய இராணுவத்துறை இணையமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், நாடெங்கும் பரபரப்பாக வெளியிடப்பட்ட இந்த சினிமாவுக்குப் பிரமோஷன் கொடுக்கக் கிளம்பினார். மோடி அரசின் உறுதியான துணிச்சலான முடிவினால்தான் இத்தகைய சாதனை நிகழ்ந்துள்ளது என்றும், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களை ஊக்குவிக்கும் அண்டை நாடுகளுக்கு இது ஒரு எச்சரிக்கை என்றும், நட்பு நாடான மியான்மருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது போன்றே எந்த நாடாக இருந்தாலும் உள்ளே புகுந்து தீவிரவாதிகளை ஒழிக்க தயங்கமாட்டோம் என்றும் பாகிஸ்தானை எச்சரித்து வீராவேச உதார் விட்டார்.

ஆனால், “இந்திய அரசும் ஊடகங்களும் கூறுவது அப்பட்டமான பொய். எங்களது முகாம்கள் மீது எந்தவிதத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. அப்படி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால், எமது தரப்பில் கொல்லப்பட்ட ஒருவரது உடலையாவது பகிரங்கமாகக் காட்டத் தயாரா?” என்று நாகா தேசிய விடுதலை கவுன்சிலின் கப்லாங் குழுவினர் தங்களது மறுப்பு அறிக்கையின் மூலம் இந்திய அரசுக்குச் சவால் விட்டுள்ளனர். இந்திய அரசுடன் போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதாக கடந்த மார்ச் 27 அன்று அறிவித்துள்ள இக்குழுவும், அசாமின் உல்ஃபா சுதந்திரக் குழு, காம்டபூர் விடுதலை அமைப்பு, போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி – ஆகிய குழுக்களும் இந்திய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட, தென்கிழக்காசியாவின் மேற்குப் பிராந்திய ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி [United National Liberation Front of Western SouthEastAsia (UNLFW)] என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளதாக கடந்த ஏப்ரல் 17 அன்று அறிவித்துள்ளன.

இந்திய ராணுவ புகைப்படம்
2009-ல் ராணுவச் சிப்பாய்கள் தங்களுக்குள் எடுத்துக் கொண்ட குரூப் போட்டோவை, இவர்கள்தான் மியான்மரில் புகுந்து தீவிரவாதிகள் மீது அதிரடித் தாக்குதல் நடத்திய அதிரடிப்படையினர் என்று ஊடகங்கள் பரபரப்பாக வெளியிட்ட “உல்டா” படம்.

இதுவொருபுறமிருக்க, இத்தாக்குதல் எங்கள் நாட்டிற்குள் நடக்கவேயில்லை என்றும், எந்த வெளிநாட்டுச் சக்தியும் எங்கள் மண்ணைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் மியான்மர் அதிபர் மாளிகை அலுவலக இயக்குநரான ஷாவ் ஹித்தே என்பவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மோடி கும்பலின் ஆஸ்தான கோயபல்சாகிய “துக்ளக்” சோ கூட, இது இந்திய எல்லைக்குள் நடந்ததா, அல்லது அதைக் கடந்து மியான்மர் எல்லையினுள் நடந்ததா என்பது தெளிவாகாத நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது என்று இந்த நடவடிக்கையின் சந்தேகத் தன்மையைத் தனது தலையங்கத்தில் போகிற போக்கில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இருப்பினும் மோடி கும்பலின் ராம்போ பொய்யை மூடிமறைத்துவிட்டு, காங்கிரசு அரசை விஞ்சும் வகையில் மோடி அரசானது எல்லை தாண்டிச் சென்று தீவிரவாதிகளைத் தாக்கத் துணிந்துள்ளதாக ‘தேசிய’ ஊடகங்கள் உடுக்கையடித்தன. இந்தியாவுக்கான இஸ்ரேலியத் தூதர் டேனியல் கார்மனிடம் பேட்டி எடுத்து தனது வீரதீரத்தை மோடி கும்பல் பறைசாற்றிக் கொண்ட போதிலும், மோடி கும்பலின் பொய்யும் மோசடியும் அடுத்தடுத்து அம்பலமாகியதால், அது இன்னுமொரு கேலிக்கூத்தாகிப் போனது. அதன் பிறகு, குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, எல்லை தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தினாலும் இப்படி தண்டோரா போட்டு விளம்பரப்படுத்துவது ராஜதந்திரம் அல்ல என்றும், மோடி அரசு நிதானத்துடனும் முதிர்ச்சியுடனும் செயல்பட வேண்டுமென்றும் இப்போது ‘தேசிய’ ஊடகங்கள் அடக்கி வாசிக்கின்றன.

தாங்கள் எல்லை தாண்டினால் அதனை சாதனையாக சவடால் அடித்துக் கொள்ளும் மோடி கும்பல்தான், தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படுவதை, “நீ எல்லை தாண்டுவதால்தான் சுடுகிறார்கள்” என்று இக்கொலைகளையும் தாக்குதல்களையும் நியாயப்படுத்துகிறது. 2001 இறுதியில் நடந்த இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாக். எல்லையில் 5 லட்சம் படைகளைக் குவித்த பா.ஜ.க. அரசு, அமெரிக்காவின் கட்டளைப்படி படைகளைத் திருப்பியழைத்து, தனது சரணாகதியை மூடிமறைத்துக் கொண்டு வெற்று சவடால் அடிக்கத்தான் முடிந்துள்ளது. இந்த லட்சணத்தில் குடிகாரன் தெருவில் உதார் விடுவதைப் போல, இந்தப் பாசிசக் கோமாளிகள் பாகிஸ்தானுக்கு எதிராக இப்போது சவுண்டு விடுகின்றனர்.

“நாங்கள் ஒன்றும் மியான்மர் கிடையாது, பகல்கனவு காண்பதை நிறுத்துங்கள்; மியான்மரிலிருந்து பாகிஸ்தான் முற்றிலும் வேறுபட்டது” என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுதாரி நிசார் அலி கான் இந்தியாவைப் பகிரங்கமாகவே எச்சரித்தார். எல்லை தாண்டிய தீவிரவாத எதிர்ப்பு என்று பகட்டு ஆரவார வீரவசனம் பேசிய மோடி கும்பல், அதன் பிறகு வாயே திறக்கவில்லை. குறுகிய தேசிய வெறியையும் போர்வெறியையும் கிளறிவிட்டு, மட்டரகமான வெற்றுச் சவடால்களால் தன்னைத் தேசபக்த நாயகனாகச் சுயதம்பட்டம் அடித்துக் கொண்ட மோடியை, சூரப்புலியாகக் காட்டிய எல்லை தாண்டிய “தீவிரவாத எதிர்ப்பு” சினிமாவும் வந்த வேகத்திலேயே டப்பாவுக்குள் சுருண்டுவிட்டது.

இதுவும் போதாதென்று, நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய மக்களை மீட்க வந்த புதிய ரட்சகனாக, ஐந்து பைசா கொடுத்துவிட்டு ஐந்து ரூபாய்க்கு விளம்பரம் செய்து கொள்ளும் அற்பவாதியான மோடி கும்பலையும் அதன் விசுவாச ஊடகங்களையும் நேபாள மக்கள் விரட்டியடித்த கதை சந்தி சிரிக்கிறது. இந்நிலையில், மோடி கும்பலும் ‘தேசிய’ ஊடகங்களும், இப்போது உள்ளூர் ரட்சகனாக இருந்த மோடி, உலக ரட்சகனாக அவதாரம் எடுத்துள்ளதாக சாமியாடிக் கொண்டு,உலக அமைதிக்காக மோடியின் “யோகசனம்” எனும் இன்னுமொரு கேவலமான கூத்தை வெட்கமின்றி விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

– மனோகரன்
_____________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2015
_____________________________