privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காகார்ப்பரேட் உணவு நிறுவனங்களின் அமெரிக்கத் தரம் எப்படி ?

கார்ப்பரேட் உணவு நிறுவனங்களின் அமெரிக்கத் தரம் எப்படி ?

-

US fraud (4)_1கோக் கோலாவில் பூச்சி மருந்து, நெஸ்லே மேகி நூடுல்சில் காரீயம் என்று நஞ்சு கலந்து விற்கும் கார்ப்பரேட் லீலைகள் இந்தியாவில் அத்திபூத்தாற் போலத்தான் வெளிருகின்றன.

அது போன்ற சமயங்களில் “இது போன்ற சட்ட விதி மீறல்கள் இந்தியாவில் தான் நடக்கும், நம்ம ஊருல தான் சட்டத்த மதிக்கறது இல்லை. அமெரிக்காவுல பாருங்க எல்லாரும் சட்டத்தை மதிப்பாங்க மக்கள் எல்லாம் படிச்சவங்க விவரமானவங்க” என்று முதலாளித்துவத்தை விதந்தோதும் அறிஞர்கள் பல உண்டு.

உண்மையில் அமெரிக்க ‘சொர்க்க’த்தில் உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் சட்டத்தை எப்படி மதிக்கின்றன?

ஒமாஹா-நெப்ராஸ்காவை மையமாகக் கொண்டு 2,60,000 ஊழியர்களுடன் அமெரிக்கா முழுதும் இயங்குகிறது கான்ஆக்ரா (ConAgra Foods) எனும் நிறுவனம். மக்காசோளம் முதல் மாட்டிறைச்சி வரை உணவுப் பொருட்களை பதப்படுத்தி டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்கிறது இந்நிறுவனம். ஹன்ட்ஸ் (Hunt’s ), ஹெல்தி சாய்ஸ் (Healthy Choice), மேரி காலண்டர்ஸ் (Marie Callender’s), பீட்டர் பேன் (Peter Pan) போன்ற முத்திரைகளுடன் “இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்டது” (made with all natural ingredients) என்ற வாசகத்துடன் இவற்றை விற்பனை செய்கிறது.

ஆனால், கான்ஆக்ராவின் உணவுப் பொருட்களில் பதப்படுத்தும் இரசாயனங்கள், செயற்கை சுவையூட்டிகள், நிறமூட்டிகள் (Colouring), ஹார்மோன்கள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட உயிர்கள் (Genetically Modified Organisms) உள்ளிட்டு உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வேதிப் பொருட்கள் அடங்கியுள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது. பிப்ரவரி – 2007 ல் “பீட்டர் பான்” என்ற அதனது தயாரிப்பை சாப்பிட்ட 628 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கான் ஆக்ரா நிறுவனம் இரண்டு ஆண்டுகளாக எ.கோலி பாக்டீரியா தொற்றிய இறைச்சியை விற்பனை செய்ததாகவும், இதை மறைப்பதற்கு அமெரிக்க விவசாயத்துறை துணையாக இருந்தது என்பதும் அம்பலமானது.

ஜெனரல் மில்ஸ் (General Mills) தயாரிக்கும் உணவுப் பொருட்களில் ட்ரைசோடியம் சல்ஃபேட் (Trisodium Sulphate) என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய வேதியல் நச்சுப் பொருட்கள் அடங்கியுள்ளன என்று அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு வாரியம் எச்சரிக்கை செய்தாலும் அதைப் பற்றி கடுகளவும் கவலைப்படாமல் “எங்கள் உணவுப் பொருட்களில் சிறிதளவே TSP பயன்படுத்துகிறோம்” (அதாவது, சிறிதளவு விஷம் மட்டுமே கலக்கிறோம்) என்று கூறியிருக்கிறது. மேலும், பியூடிலேடட் ஹைட்ராக்சி டொலுவீன் (Butylated Hydroxytoluene) என்ற ரசாயனம் கலந்த உணவுப் பொருட்களையும் ஜெனரல் மில்ஸ் சந்தைப்படுத்தி வந்திருக்கிறது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு டப்பாக்களில் “மரபணு மாற்றம் செய்யப்பட உணவுப் பொருள் – (GMO) என்று அடையாளப்படுத்த வேண்டும்” என்ற சட்டங்களுக்கெதிராக லாபியிங் செய்து வந்தது.

கிராப்ட் பூட்ஸ் (Kraft Foods) நிறுவனத்தின் MAC ‘N என்ற பாலாடைக் கட்டியின் மஞ்சள் நிறம் (சீஸ்) மிகவும் பிரபலமானது. அந்த நிறத்துக்கு காரணமான YELLOW-5, YELLOW – 6 போன்ற நிறமூட்டிகளை பயன்படுத்துவதால் தோல் புற்றுநோயும், அதீத செயல்பாடு (ஹைபர்ஆக்டிவிட்டி), மூச்சிறைப்பு (ஆஸ்துமா) இன்னும் பல்வேறு நோய்க் கூறுகள் தூண்டப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. பொதுவாக உடலுக்கு ஊறு விளைவிக்கும் வேதியல் பொருட்களை பயன்படுத்தும் போது அதை மக்களுக்கு அச்சிட்டு தெரியப்படுத்த வேண்டும் என்ற சட்டத்தை கடுகளவிற்கும் இந்நிறுவனம் மதிப்பதில்லை.

US fraud (2)_1அமெரிக்காவில் சட்டங்களை மதிக்காமல் இஷ்டத்திற்கு ஆட்டம் போடும் கிராஃப்ட் நிறுவனம் ஐரோப்பாவில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. இந்த இரட்டை வேடத்தை சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் மக்கள் முன் தொடர்ச்சியாக அம்பலபடுத்தியுள்ளனர். அதன் பின்னரே இந்த நிறமூட்டிகளை நீக்க அந்த நிறுவனம் ஒப்பு கொண்டிருக்கிறது.

மேலும், மார்ச்-2015-ல், கிராஃப்ட் புட்ஸ் பாலாடைக்கட்டி பொதிகளில் உலோகத் துண்டுகள் காணப்பட்டதால் 65 லட்சம் பொதிகள் திரும்ப பெறப்பட்டன.

சமீபத்தில் “மரபணு மாற்றம் செய்யப்பட்ட” உணவுப் பொருட்களை “இயற்கை உணவு” என்று பொய் விளம்பரம் செய்து விற்றதால் ஹெய்ன்ஸ் (Heinz) நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. அடூட் வோல்ப்சன் (Ahdoot Wolfson) என்ற சட்ட நிறுவனத்தின் சார்பாக குற்றம் சாட்டியிருக்கும் டெப்பி பனாப்சேகா (Debbie Banafsheha), “இது ஏமாற்ற கூடிய, நியாயமற்ற, தவறான செயலாகும்” என்று கடுமையாக சாடியுள்ளார்.

இந்நிறுவனம், 70%-க்கும் அதிகமான அளவு மக்காசோளம் அடர்கரைசல் (சிரப்) உள்ளிட்டு தக்காளி கூழ் (சாஸ்) வரைக்கும் அனைத்து வணிகமுத்திரை பொருட்களிலும் மரபணு மாற்றப்பட்ட பொருட்களை பயன்படுத்துகிறது. மரபணு மாற்றம் செய்யப்பட சோளம் ஒரு பூச்சுக்கொல்லி என்று ஏற்கனவே அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரியம் (EPA) வரையறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொக்கோ கோலா (coca cola) நிறுவனத்தைப் பற்றி அதிக அறிமுகம் தேவையில்லை. குளிர் பானங்களில் உடலை சீரழிக்கும் அரை டஜன் வேதியல் ரசாயனங்களை இந்நிறுவனம் சேர்க்கிறது. உடலுக்கு கேடு விளைவிக்கும் செயற்கை சர்க்கரையை FDA 1969-ல் தடை செய்த பின்னர் அதே சர்க்கரை WHO-வால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் பானங்களில் பயன்படுத்தப்படும் அக்சல்ஃபேம் பொட்டாசியம் (Acesulfame Potassium) சர்க்கரையை காட்டிலும் 200 மடங்கு இனிப்புச் சுவை மிகுந்தது. இது நரம்புகளைத் தூண்டுவதன் மூலம் கடைசியாக நரம்பு மண்டலத்தையே பாதிக்கிறது. இந்த செயற்கை சர்க்கரை மூளைப் புற்று நோயை தூண்டக்கூடிய வேதியல் இரசாயனத்தையும் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் “தற்காலிகமாக” தடை செய்யப்பட்டிருக்கும் மேகி நூடுல்ஸ் தயாரிக்கும் நெஸ்லே (Nestle) குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் மரபணு மாற்றம் செய்யப்பட மூலப்பொருட்களை பெருமளவில் பயன்படுத்தும் 3 நிறுவனங்களில் ஒன்று. மற்ற இரு நிறுவனங்கள் அப்போட் (ABBOTT) மற்றும் மீட் ஜான்சன் (MEAD JOHNSON). மரபணு மாற்றப்பட்ட பொருட்களில் (GMO) இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள் மனிதர்களுக்கு உகந்தது என்று இன்னும் ஆய்வகங்களில் நிரூபிக்கப்படவில்லை. எனினும் இந்நிறுவனம் தயாரிக்கும் பொருட்களில் உள்ள உப்பு, சர்க்கரை, சோளம் உள்ளிட்டு பெரும்பாலும் மரபணு மாற்றம் செய்யப்பட்டவையே.

US fraud (3)_1நெஸ்லே, தடை செய்யப்பட்ட மெலமைன் (melamine) என்ற உயிர்க்கொல்லி இரசாயனத்தை பயன்படுத்தியதால் 2008-ல் 50,000 சீனக் குழந்தைகள் பாதிக்கப்ப்டட்டன. மரபணு மாற்றம் செய்யப்பட உணவுப்பொருள்களுக்கு (GMO – Product) ஆதரவான பிரசாரத்திற்கு கலிபோர்னியாவில் மட்டும் கிட்டத்தட்ட 15 லட்சம் டாலர்கள் பணம் வாரியிறைத்த இந்நிறுவனம் அதற்கு சில அறிவியலாளர்களையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறது. 2012-ல் மட்டும் 9,200 கோடி டாலர் விற்பனை செய்திருக்கும் இந்நிறுவனம், அதன் மோசடித்தனத்தை மறைக்கவும் GMO – லேபில் சட்டத்திற்கெதிராகவும் 1 கோடி டாலருக்கு மேல் பணத்தை வாரியிறைத்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியம், சீனா உள்ளிட்டு உலகில் பெரும்பாலான நாடுகளில் ஜி.எம் லேபிலிங் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

பெப்சிகோ (PepsiCo) GMO லேபிலிங் சட்டத்திற்கு எதிராக கிட்டத்தட்ட 2.5 கோடி டாலர் செலவு செய்திருக்கிறது. மான்செண்டோ, டூபன் மற்றும் பெப்சிகோ இந்த மூன்று நிறுவனங்கள் தான் GMO லேபிளிங் சட்டத்திற்கு எதிரான லஞ்சத்துக்கு அதிகமாக நிதியுதவி செய்கின்றன. பெப்சி மற்றும் கோக்கில் பயன்படுத்தப்படும் மூலக்கூறு கலவையை (Molecule formula) மாற்ற வேண்டும் என்று கலிபோர்னியா மாகாண அரசு சட்டமே இயற்றி இருக்கிறது, இருந்தும் இன்றளவும் பீத்துடைக்கும் காகிதம் அளவிற்கே இந்நிறுவனங்கள் அந்த சட்டத்தை மதித்து வருகின்றன.

காம்ப்பெல்லின் சூப் (Campbell’s Soup Company) நிறுவனத்தின் சராசரியான சூப் கப்பில் 850 மில்லி கிராம் சோடியம் கலந்திருக்கிறது. உணவு உட்கொண்ட பிறகு அருந்தும் இந்த சூப்பினால் மாரடைப்பு, நீரழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற உடல் நலக்குறைவுகள் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உணவுப் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு எதைப் பற்றியும் கடுகளவும் மதிக்காத இந்நிறுவனங்கள் அது தொடர்பான சட்டங்களை மாற்றவும், தமது பொருட்களை விளம்பரங்களின் மூலம் விற்கவும் பெருமளவு பணம் செலவிடுகின்றன.

கார்ப்பரேட் லாபத்துக்கும் சமூகப் பொறுப்புணர்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதற்கு இன்னும் பல நூறு உதாரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அமெரிக்க தலைமையிலான முதலாளித்துவத்தின் அருகதை இதுதான்! ஆராதிப்பீர்களா, அடித்து விரட்டுவீர்களா?

– பாலு

மேலும் படிக்க:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க