மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் 07-11-2015 அன்று மாலை வேலூரில் நவம்பர் புரட்சி விழா கொண்டாடப்பட்டது.
பறை முழக்கத்தோடு விழா தொடங்கியது. விழாவிற்கு தோழர் ராஜன் தலைமை தாங்கினார்.
“எது புனிதமான காதல்?” என்ற தலைப்பில் தோழர் வில்சன் ஆற்றிய உரையிலிருந்து….
“காதல் தெய்வீகமானது, புனிதமானது என திரைப்படங்களில் வேண்டுமானால் பேசலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் காதல் அபாயகரமானது. அதுவும் சாதி விட்டு சாதி தாண்டி காதலிப்பது மிகவும் அபாயகரமானது. தஞ்சை மாவட்டம் சிவாஜி-இலட்சுமி, தருமபுரி மாவட்டம் இளவரசன்-திவ்யா போன்ற காதலர்களுக்கு நேர்ந்த கொடுமையை நாமறிவோம்.
இத்தகைய காதல்கூட வெற்றி பெற வேண்டுமானால் நமது நாட்டில் ஒரு சமூக மாற்றம் நடைபெற வேண்டும். கார்ல் மார்க்சும், எங்கெல்சும் மக்களைக் காதலித்ததாலேயே அவர்களால் பொதுவுடமைச் சிந்தாந்தத்தைப் படைக்க முடிந்தது. லெனின், ஸ்டாலின், மாசேதுங் போன்ற தலைவர்கள் மக்களைக் காதலித்ததாலேயே உழைக்கும் மக்களுக்கான அரசை அமைக்க முடிந்தது. இந்தியாவில் ஒரு பொதுவுடமைச் சமுதாயம் காண பகத்சிங்கும் மக்களைக் காதலித்தார்;. பாட்டாளிகளின் ஆட்சி அமைந்தால் மட்டுமே மனிதக் காதல்கூட கரையேறும். நாமும் மக்களைக் காதலிப்போம் இம்மண்ணில் ஒரு பொதுவுடமைச் சமுதாயம் காண! ”
“வீரிய ஒட்டு ரகம்” என்ற தலைப்பில் தோழர் வேந்தன் உரையாற்றினார்.
“பப்பாளி, திராட்சை போன்ற பழ வகைகளில் விதையில்லா ஒட்டுரகம், கத்தரிக்காயில் வீரிய ஒட்டு ரகம், நெல்லில் வீரிய ஒட்டு ரகம் என பாரம்பரிய விதைகளை ஒழித்துக்கட்டுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் பல்வேறு நோய்களை தோற்றுவிக்கக்கூடிய வகையில் உரம், பூச்சி மருந்துகளில் பல்வேறு ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. வீரிய ஒட்டு ரகம் என்ற பெயரில் விவசாயம், ,கால்நடை, மனிதஇனம் என அனைத்தையும் மலடாக்குவதற்கான முயற்சிகளை ஆளும் வர்க்கத்தின் ஆசியோடு பன்னாட்டுக் கம்பெனிகள் அரங்கேற்றி வருகின்றன.”
விழாவில் “இன்றைய சமூக நிலை” குறித்து தோழர் தமிழ்மணி உரையாற்றினார்.
“போதிய மழையின்மை, நீர்ப்பாசன வசதியின்மை, அரசின் கவனமின்மை, விலை பொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காதது போன்ற பல்வேறு காரணங்களால் இன்று விவசாயம் நலிந்து வருகிறது. விவசாயம் செய்து பயனில்லை என்பதனால் தமிழ்நாட்டில் மட்டும் 18 லட்சம் ஏக்கர் விலை நிலங்கள் தரிசு நிலங்களாக காட்சியளிக்கின்றன.
மக்களுக்குக் கல்வி வழங்கும் கடமையை அரசு படிப்படியாக கைவிடுவதன் விளைவாக தனியார் பள்ளி, கல்லூரிகள் பெருகி வருகின்றன. தமிழகத்தில் உள்ள 1318 கல்லூரிகளில் 1063 கல்லூரிகள் தனியாருக்குச் சொந்தமானவை. காசிருந்தால் மட்டுமே இனி படிக்க முடியும் என்ற நிலை இருப்பதால் பலருக்கும் கல்வி எட்டாக்கனியாகிவிட்டது.
இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு கோடியே ஐம்பது லட்சம் பேர் படித்துவிட்டு வேலை தேடுகின்றனர். இதில் 14 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள 54 கோடி இளைஞர்களில் 8 சதவிகிதம் பேருக்கு மட்டுமே படிப்புக்கேற்ற வேலை கிடைக்கிறது. கோடிக்கணக்கான இளைஞர்கள் வெறும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும், அப்ரண்டிஸ் தொழிலாளர்களாகவும் கசக்கி சக்கையாக்கப்படுகின்றனர்.
இரயில்வே, வங்கி, காப்பீடு, துறைமுகம் போன்ற அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலம் நிரந்தர வேலைகளுக்கு ஆப்பு வைக்கின்ற வேலையை மோடி அரசு செய்து வருகிறது. ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம் என்றால் அதற்கும் வழியில்லை.
குடிக்கக் குடிநீர் இல்லை. இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை ‘அம்மா தண்ணீர்’ என்ற பெயரில் தண்ணீரிலும் காசு பார்க்கிறது அரசு.
அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதி கிடைப்பதில்லை. சாதாரண நோய்களுக்குக்கூட தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டியுள்ளது. மொத்த வருவாயில் 58 சதவிகித வருமானத்தை மருத்துவத்துக்கே செலவிட நேருவதால் மக்கள் போண்டியாகி வருகின்றனர்.
மக்களின் கோரிக்கைகள் ‘செவிடன் காதில் ஊதிய சங்காக’ கேட்பாரற்று கிடக்கிறது. அரசுத்துறைகள் அனைத்தும் செயலிழந்து விட்டன. மக்கள் சொல்லொன்னாத் துயரங்களை அனுபவித்து வரும் வேளையில் தமிழக அரசோ மதுக் கடைகளை வீதிதோரும் திறந்து வைத்து மக்களை சீரழித்து வருகிறது.
சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது, பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிப்பது, பகவத் கீதையையும் சமஸ்கிருதத்தையும் பள்ளிகளில் கட்டாயமாக்குவது, கர்வாப்சி என்ற பெயரில் இஸ்லாமியர்களை மிரட்டி மீண்டும் இந்து மதத்திற்கு மாற கட்டாயப்படுத்துவது, பசுவதை தடைச்சட்டம், மாட்டிறைச்சிக்குத் தடை போன்ற செயல்களின் மூலம் சமூகங்களுக்கிடையில் பகைமையை வளர்த்து அமைதியின்மையை ஏற்படுத்தி வருகிறது மோடி அரசு.
மூடப்பழக்கவழக்கங்களை கேள்வி கேட்டு விமர்சிக்கும் கல்புா்கி போன்ற பகுத்தறிவாளர்கள், அறிவுஜீவிகள் படுகொலை செய்யப்படுகின்றனர். தமிழகத்தில் மதுவுக்கு எதிராகப் பாட்டுப் பாடுவதே தேசத்துரோகம் என வழக்கு போடுகிறது தமிழக அரசு. கருத்துச் சுதந்திரம் காற்றில் பறக்கிறது.
இதற்கு முற்றிலும் மாறாக…
எட்டு மணி நேர வேலை, ஆண்டொன்றுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு மாத கால விடுப்பு, பள்ளிக் கல்லூரி வரை இலவசக் கல்வி, படித்தவர்களுக்கான வேலையை அரசே உத்திரவாதப்படுத்துவது, இலவச மருத்துவ வசதி, இலவச வீட்டு உரிமை, வேலைக்குச் செல்வோருக்கு இலவச பயணச்சீட்டு, மூன்றாண்டு மகப்பேரு விடுப்பு உள்ளிட்ட எண்ணற்ற வசதிகளை உலகிலேயே முதல் முறையாக தொழிலாளர்களுக்கு வழங்கியது ரஷ்ய சோவியத் அரசு.
உழைப்பாளி மக்கள் ஓரணியில் திரண்டு தங்களுக்கான அரசை அமைத்தால் மட்டுமே இந்தியாவில் தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு முடிவுகட்ட முடியும்.”
தோழர் துரை.சண்முகம் அவர்களின் “புத்தம் புதிய சமூகம் வேண்டும்!” என்ற கவிதையை தோழர் முத்துராமன் வாசித்தார்.
விழாவில்
“இந்து என்று சொல்லாதே! பாப்பான் பின்னே செல்லாதே!”
“அ…னா ஆ..வன்னா! காசிருந்தா இ…..னா ஈ….யன்னா!”
“மண்ணைத் தோண்டி வெட்டி எடுக்கும் தங்கம் யாருக்கு!”
“ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம்!”
ஆகிய மக்கள் கலை இலக்கியக் கழகப் பாடல்கள் பாடப்பட்டன. சிறுவர்களும் விழாவில் பாடல்கள் பாடி உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.
தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
வேலூர்