ஓட்டுக்கட்சி தலைவர்களை கோவன் சந்தித்தது ஏன் ?
இறுதி பாகம் ( வீடியோ மற்றும் கட்டுரை)
கூட்டுநடவடிக்கை பற்றி விமர்சனங்கள் சொல்பவர்கள், ‘இந்த அடக்குமுறை வந்ததனால் கட்சிகாரங்களை போய் பார்க்கிறீர்கள். மற்றபடி பிரச்சினைகளுக்கான கூட்டுநடவடிக்கைகளில் நீங்க எந்த காலத்திலும் ஈடுபட்டதில்லை’ என்று சொல்கிறார்கள்.
இப்படிச் சொல்வது, ஒரு வகையில் கொச்சைப்படுத்துவது. முதன்மையாக, உண்மைக்கு மாறானது.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது போலீசு தாக்குதல் நடந்தது. அதை எதிர்த்து கட்சிகளுடைய கண்டனம் வந்தது. தி.மு.க முதல் எல்லா கட்சிகளும் கண்டித்தார்கள். அது தேடிப் பெற்ற ஆதரவு அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
கோவன் கைதுக்கு கண்டனம் எழுந்தது, எப்படி நடந்தது? கைதிற்கு தி.மு.க. தலைவர் முதலில் கண்டனம் தெரிவிக்கிறார். ஆங்கில ஊடகங்களில் தேசிய அளவில் மோடியின் சகிப்பின்மைக்கு எதிராக, கருத்துருவாக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஒரு சூழலில், “இங்கே ஒரு பாடலுக்காக ராஜதுரோகக் குற்றமா?” என்று சொல்லி ஆங்கில ஊடகங்களில் செய்தி வருகிறது. எல்லா கட்சிகளும் கண்டிக்கிறார்கள். தமிழ் ஊடகங்களில் செய்தி வருகிறது. இந்தக் கண்டனங்கள் எதுவும் ம.க.இ.க. தேடி வரவழைத்த கண்டனங்கள் அல்ல. அப்படி சொல்வது நேர்மையான முறையில் ஒரு அரசியல் கண்ணோட்டத்தோடு கண்டனம் தெரிவித்தவர்களையும் அசிங்கப்படுத்துவதாகும். இந்த கண்டனங்கள் எல்லாம் ‘டாஸ்மாக் என்ற கொடுமையிலிருந்து மக்களை விடுவிப்பது., அதன்பால் இந்த அரசு கொண்டிருக்கிற அணுகுமுறை’ இதன் காரணமாக எழுந்ததே தவிர, அது ம.க.இ.க.விற்குக் காட்டப்பட்ட சலுகையுமல்ல.
அதோடு, கோவன் ராஜத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது, மக்கள் கலை இலக்கியக் கழகம் இதுவரை சந்தித்திராத அடக்குமுறையும் அல்ல. சொல்லப்போனால், 1991-96 காலத்தில் ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட ராஜத்துரோக வழக்குகள் எங்கள் மீது போடப்பட்டிருக்கின்றன. 1987-90 வரையிலான காலகட்டத்தில் பல பொய்யான வெடிகுண்டு வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. வெறும் சுவரெழுத்துக்காக 9 மாதம் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில தோழர் காளியப்பன் உள்ளிட்ட 5 தோழர்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள். ராஜிவ் கொலைவழக்கு பிரச்சினையில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு தடாவில் பல தோழர்கள் சிறையிலிருந்திருக்கிறார்கள். ஈழ அகதிகளை வெளியேற்றக் கூடாது என்பதற்காக அந்த காலகட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான தோழர்கள் மாதக்கணக்கில் சிறையில் இருந்திருக்கிறார்கள். இந்த காலகட்டங்களிலெல்லாம் விடுதலைக்காக நாங்கள் யாருடைய ஆதரவையும் கோரிப் பெற்றதில்லை. ஒருவேளை அவ்வாறு கோரியிருந்தால் அதில் தவறும் இல்லை. பெற்றதில்லை என்பது ஒரு உண்மை. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
ஆனால், இதே காலகட்டத்தில் இங்கே ஜெயலலிதா ஆட்சி, அங்கே பாபர் மசூதி இடிப்பு – பார்ப்பன பாசிசத்தின் எழுச்சி என்ற காலகட்டத்தில் கருவறை நுழைவுப் போராட்டம் தொடங்கி, பார்ப்பன பாசிசத்துக்கு எதிராகப் பல போராட்டங்களை நாங்கள் நடத்தியிருக்கிறோம். அந்தப் போராட்டங்களிலெல்லாம் தலித் அமைப்புகள் உள்ளிட்ட பலரும் கூட்டு நடவடிக்கையாக எங்களோடு கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை ஈடுபடுத்தியிருக்கிறோம். இது ஒரு உண்மை. இதே கருவறை நுழைவுப் போராட்டத்தை ஆதரித்து முரசொலி பல தலையங்கங்களை எழுதியிருக்கிறது. விடுதலை எழுதியிருக்கிறது. வேறு சில பத்திரிகைகள் எழுதியிருக்கிறார்கள். இவையெல்லாம் கோரிப்பெற்றவையல்ல. அவர்களுடைய அரசியல் நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் எழுதியவை. ஆகவே,இந்த உண்மைகளையெல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு எந்த காலத்திலும் இவர்கள் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை என்று சொல்வது, மக்கள் கலை இலக்கியக் கழகத்துக்கு எதிரான ஒரு மனோபாவத்தின் வெளிப்பாடு. தமிழ் மக்கள் இசைவிழாவை விட கூட்டுநடவடிக்கைக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு தேவையில்லை. அது பல ஆண்டுகள் நடைபெற்றிருக்கிறது. அதன் பின்னாலே தில்லையில் தமிழ் பாடும் உரிமைக்கான போராட்டம். அதிலே விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியினர், திராவிடர் கழகம், குறிப்பிட்ட காலத்திற்கு மார்க்சிஸ்டு கட்சி உள்ளிட்டு பலர் அதிலே பங்கேற்றிருக்கிறார்கள் அவர்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
இப்போது ஆகஸ்டு-31 அன்று எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் இப்போது நாங்கள் பார்த்து சென்றுவிட்டு வந்த கட்சித் தலைவர்கள், மக்கள் நலக்கூட்டியக்கம், தே.மு.தி.க, தி.மு.க ஆகிய எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த மாவட்ட அளவிலான பிரதிநிதிகள் அங்கே கலந்து கொண்டார்கள். அதைத் தொடர்ந்து கோவன் கைதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களிலும் அவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
எங்கள் மீது அடக்குமுறை வந்ததினாலதான் போகிறோம் என்று சொல்வது உண்மையல்ல. உண்மை என்னவென்றால், யாரோடு கூட்டு நடவடிக்கைக்குப் போகலாம், போகக்கூடாது என்பதில் விமர்சனம் செய்பவர்களுக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது. தேர்தல் அரசியல் கட்சிகள் யாரோடும் எந்தக் காலத்திலும் கூட்டு நடவடிக்கைக்குப் போகக்கூடாது என்பது எங்களது நிலைப்பாடு அல்ல. அவ்வாறு கூறுவது உண்மைக்கு மாறானது. மாறாக, அந்நிய நிதியுதவி பெறுகின்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அமைப்பே இல்லாமல் தங்களை முன்னிறுத்திக் கொள்வதற்காக தனிநபர்கள் வைத்திருக்கின்ற பெயர்ப்பலகை அமைப்புகள் இவர்களோடு கூட்டு நடவடிக்கைக்குப் போவதில்லை. அப்படி ஒரு மக்கள் அடித்தளமோ, அல்லது நேர்மையான செயல்பாடோ இல்லாதவர்களுடன் ஒரு 50 பேர், 60 பேரை சேர்த்துக்கொண்டு கூட்டு நடவடிக்கை என்று ஈடுபடுவது கோரிக்கையையும் நிறைவேற்றாது. மக்களை ஏமாற்றுவதாகும். என்பதன் காரணமாக அதனை நாங்கள் செய்வதில்லை.
வேண்டுமானால், அவர்களோடெல்லாம் சேர்ந்து செய்ய வேண்டும் என்று கருத்துக் கொண்டவர்கள் அது சரியென்று வாதாடட்டும். அதற்கு நாங்கள் பதில் சொல்வோம்.
சிலர், ‘சிறிய அமைப்பு, அடக்குமுறை வந்திருக்கிறது. போய் பல கட்சிகளிடம் ஆதரவு கேட்கிறார்கள் இதில் என்ன தவறு இருக்கிறது’ என்ற கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் ஒன்றும் தப்பில்லைதான். ஆனால், இது அப்படி கேட்கப்பட்ட ஆதரவு அல்ல. இது செயலுக்கான ஒரு அறைகூவல். அதற்காக அழைத்திருக்கிறோம். அடக்குமுறைக்கு அஞ்சி ஆதரவு தேடுகிறார்கள் என்று சொல்வது, ம.க.இ.க. வை கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல, டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டுமென்று போராடுபவர்கள் மீது ஜெ. அரசு இப்படிப்பட்ட ஒரு அடக்குமுறையை செலுத்துகிறதே, அந்த உண்மையின் பால் கடுகளவும் அக்கறை இல்லாத அவர்களுடைய மனோபாவத்தைத்தான் காட்டுகிறது.
மேலோட்டமாக பார்க்கும்போது தேர்தல் புறக்கணிப்பு முழக்கத்தை வைத்திருக்கின்ற மக்கள் அதிகாரம், அல்லது மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட கோரிக்கைக்காக தேர்தல் கட்சிகளிடம் போய் ஆதரவு கேட்பது ஒரு முரண்பாடு போல தோன்றலாம். ஆனால், தேர்தல் புறக்கணிப்பு என்ற முழக்கத்தில்தான் மக்கள் கலை இலக்கியக் கழகமும் தோழமை அமைப்புகளும் இருக்கின்றன. டாஸ்மாக்கை மூடுவது என்ற ஒரு கோரிக்கையின் மீதான கூட்டு நடவடிக்கைக்காகத்தான் தேர்தல் அரசியல் கட்சிகளை அணுகியிருக்கிறோம்.
மற்றபடி அவர்கள் வந்தால் டாஸ்மாக்கை மூடுவார்கள், அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று யார் ஒருவருக்காகவும் ஓட்டு கேட்கப்போவதில்லை. நாங்கள் தேர்தல் புறக்கணிப்பைத்தான் பேசப் போகிறோம், பேசுவோம். இது யாரிடம் ஆதரவு கேட்கிறோமோ அந்தக் கட்சிகளுக்குத் தெரியும். ஆர்ப்பாட்டத்தில் இதுவரை கலந்து கொண்ட அந்தக் கட்சிகள் அனைவருக்கும் தெரியும்.
இது போலி ஜனநாயகம் என்பது மட்டுமல்ல, சொல்லிக்கொள்கிற ஜனநாயகம், ஜனநாயகம் என்கிற அமைப்பில் உள்ள நிறுவனங்கள், அவர்களே சொல்கிற சட்டங்கள், மரபுகள், விதிமுறைகள், நெறிகள் இவை எதையும் கடைப்பிடிக்காமல் தோற்று விட்டன, திவாலாகி விட்டன, காலாவதியாகி விட்டன என்பதைத்தான் மக்கள் அதிகாரம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. அதற்கு ஆயிரம் சான்றுகள் இருக்கின்றன. சட்டம் ஒழுங்கை காக்கும் காவலர்கள்தான் எல்லா குற்றங்களிலும் முன்வரிசையில் இருக்கிறார்கள். ஆர்.கே நகர் தேர்தலையோ, ஸ்ரீரங்கம் தேர்தலையோ எடுத்துக் கொள்ளுங்கள். எல்லாக் கட்சிகளையும் தேர்தல் புறக்கணிப்பை நோக்கித் தள்ளியது யார், ம.க.இ.க-வா தள்ளியது? புரட்சித் தலைவிதான் தள்ளினார். அப்படி ஒரு “புரட்சி” நடந்து கொண்டிருக்கிறது.
“ஜனநாயகம் என்ற இந்த போலி ஜனநாயகம் அதன் வாழ்நாளின் கடைசி கட்டத்தில் நிற்கிறது. இற்று வீழ்ந்து விட்டது. இங்கே மக்கள் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும், அது உடனடி கோரிக்கையாக இருக்கிறது” என்பதுதான் மக்கள் அதிகாரம் அமைப்பினுடைய நோக்கம்.
டாஸ்மாக்கை மூடுவது கூட கீழிருந்து மக்கள் அதிகாரத்தின் துணை கொண்டு, வலிமை கொண்டு செய்யப்பட வேண்டும் என்பதுதான் மக்கள் அதிகாரம் கூறுவது. அதற்குத் துணையாகத்தான் இந்தத் தேர்தல் கட்சிகள் இங்கே அழைக்கப்படுகிறார்களே அன்றி, அதற்கு மாற்றாக அல்ல. மக்கள் அதிகாரத்துக்கு அவர்களை உட்படுத்துவது என்பதுதான் இந்த கூட்டு நடவடிக்கையில் மக்கள் அதிகாரம் மேற்கொள்ளும் முயற்சி.
இப்போது கேள்வி கேட்பவர்கள் மீது ஒரு கேள்வி. இதை எதிர் விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அந்தக் கட்சித் திருடன். இந்தக் கட்சி திருடன். அவன் சரியில்லை. இவன் சரியில்லை. என்று தீர்ப்பளிப்பதற்கு ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் நிறைய பேர் இருக்கிறார்கள். இப்போது இந்த டாஸ்மாக் விசயத்தையே எடுத்துக் கொள்வோமே. இப்படித் தீர்ப்புகள் வழங்குபவர்கள் அதற்கு மேல் செயல்பூர்வமாக செய்தது என்ன?
யாரை நம்பத்தகாதவர்கள், நம்பத்தகாத கட்சிகள் என்று தீர்ப்பு வழங்குகிறார்களோ? அந்தக் கட்சியைச் சேர்ந்த கீழ்மட்டத் தொண்டர்கள் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்கள், அ.தி.மு.க. தொண்டன் உள்ளிட்டு. ஆற்றுமணல் கொள்ளைக்கெதிரான போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்கள். எங்களோடு சிறைக்கு வந்திருக்கிறார்கள், அந்தத் தொண்டனை நம்புவதா, அல்லது எதையும் செய்யாமல் எதற்கும் வராமல், எல்லோர் மீதும் தீர்ப்பளிப்பவர்கள் மீது நம்பிக்கை வைப்பதா? யார் தன்னை செயலில் ஈடுபடுத்திக் கொள்கிறார்களோ அவர்கள்தான் சமூக மாற்றத்தை சாதிப்பார்கள். தங்களையும் மாற்றிக் கொள்வார்கள். எந்த சமூக மாற்றமும் வேண்டாம். கூடாது, இருப்பதே நன்றாக இருக்கிறது. இந்த வாழ்க்கையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்று கருதுகின்ற பிரிவினர்தான் “எல்லோரும் திருடன் சார் யாரும் நம்பாதீங்க” என்று பேசுபவர்கள். இந்த கூட்டு நடவடிக்கைக்கு போனோம் என்பதனால் அல்ல, பொதுவிலேயே அரசியல் விமர்சனங்களை ம.க.இ.க. எழுதும் போது, பல பேர் சொல்வதுண்டு, “ ஆமா, இப்போ இப்படி பேசுவீங்க. நாளைக்கு அதிகாரத்துக்கு நீங்க வந்தபிறகு இல்ல தெரியும்” என்பார்கள்.
சென்னை மாநகரத்தில் இருப்பவர்கள். பீச் தாம்பரம் மின்சார ரயிலில் பயணம் செய்யும் போது பேச்சு கொடுத்துப் பாருங்கள். “இவ்ளோ வெள்ளம் வந்திருக்குதே, அம்மா கவனிக்கலையே, கொடநாட்டுல போயி உட்கார்ந்துகிட்டாங்க” அப்படினு பேச்சை ஆரம்பிங்க. “என்ன சார் செய்ய முடியும்? மூனு மாசத்துல பெய்ய வேண்டிய மழை மூணு நாள்ல பெஞ்சிருச்சே” என்று ஜெயலலிதாவின் வசனத்தைப் பேசுவார்கள். அதை மறுத்து உரிய ஆதாரங்களை அடுக்கத் தொடங்கினால், ஒரு ஸ்டெப் தாண்டுவார்கள். “ஆமாமா ஒண்ணும் சரியில்லை சார். தி.மு.க.காரன் காலத்திலேயே இது ஆரம்பமாயிடுச்சி” என்று தி.மு.க ஆட்சிகால முறைகேடுகள் சிலவற்றை சொல்வார்கள். “நீங்கள் சொல்வது போல் அல்ல” என்று வாதாடினால், “எவன் சார் யோக்கியன்? இந்த காலத்தில யாரை நம்ப முடியுது? எல்லாம் திருட்டுப்பயலுக” என்று சொல்லி தங்களது உரையை முடித்துக் கொள்வார்கள்.
இப்படி எல்லோரும் திருடர்கள் என்று தீர்ப்பளிப்பவர்கள் மிகப்பெரிய ஒழுக்கவாதிகளைப் போல தோற்றமளித்தாலும், அந்தத் தீர்ப்பே மிகவும் ஒழுக்கக் கேடானத் தீர்ப்பு. எல்லோரும் சமம். எல்லோரும் திருடன் என்று கூறுவதும், பல்வேறு கட்சிகள், அமைப்புகளுக்கிடையே இருக்கும் வேறுபாடுகளை அங்கீகரிக்காமல் இருப்பதும் அது ஒரு மிகப் பெரிய தந்திரம் – நரித்தனம்.
தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் வேறுபாடு இல்லையா? இல்லையென்றுதான் பலரும் பேசுகிறார்கள். இப்போ தாத்ரி கொலை நடந்திருக்கிறது. கல்புர்கி கொலை நடந்திருக்கிறது. பன்சாரே கொலை நடந்திருக்கிறது. அடுக்கடுக்காக, அறிவுத்துறையினர் மீது தாக்குதல் நடக்கிறது. இதை பற்றிய அ.தி.மு.க.வின் கருத்தென்ன என்று யாராவது கேட்டதுண்டா? எந்த ஊடகமாவது ஏன் கருத்து சொல்லவில்லை என்று அவர்களை மடக்கியதுண்டா? அப்படி கருத்து சொல்லாமலிருப்பதே பி.ஜே.பி. ஆதரவு நிலைப்பாடென்று என்று யாருக்கும் புரிவதில்லையா? நிதிஷ்குமார் வெற்றிப்பெற்றதற்கு அம்மா வாழ்த்து தெரிவிக்கவில்லை, ஏன் தெரிவிக்கவில்லை? அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. அந்த அர்த்தத்தை யாரும் கேள்விக்குள்ளாக்காமலேயே
தி.மு.க.வும்., அ.தி.மு.க.வும் சமம் என்று பேசுகிறார்கள்.
பல்வேறு கோரிக்கைகள் இருக்கின்றன. கருவறை நுழைவு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் கோரிக்கை இருக்கிறது. தமிழ்பாடும் கோரிக்கை இருக்கிறது. சுயமரியாதைத் திருமணம் தொடர்பான கோரிக்கை இருக்கிறது. இந்தக் கோரிக்கைகளை எடுத்துக்கொண்டு நான் கோபாலபுரம் போகட்டுமா? போயஸ் தோட்டம் போகட்டுமா?
போயஸ் தோட்டம் என்ன செய்தது? தில்லைக்கோயிலை தீட்சிதர் வசம் திரும்ப பிடுங்கி ஒப்படைத்தது. தி.மு.க. எவ்வளவு ஊசலாடும் கட்சியாக இருந்தாலும் தமிழ்பாடும் போராட்டம் நடத்தி ஒரு எல்லைக்கு வந்தபிறகு, தமிழ்பாடும் உரிமையை நிலைநாட்டுகின்ற ஒரு ஆணையைப் பிறப்பிக்கிறது. அந்தக்கோயிலை மேற்கொள்கிற நடவடிக்கையை அது மேற்கொள்கிறது. ஜெயலலிதா அரசு அதைப் பிடுங்கி தீட்சிதர்கள் வசம் வழங்கியது. இதில் வேறுபாடே இல்லையா? பார்ப்பன பாசிசத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் எதிராக எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் – பேசுகின்ற கட்சிக்கும் அதிமுகவுக்கும் வேறுபாடு இல்லையென்று சொல்பவர்கள் யாராக இருக்க முடியும்? யார் கலப்பு மணத்தை எதிர்க்கிறார்களோ, யார் தமிழை எதிர்க்கிறார்களோ, யார் சாதிப் பாகுபாட்டை பராமரிக்க விரும்புகிறார்களோ அவர்கள்தான் வேறுபாடு இல்லையென்று சொல்ல முடியும். அவர்கள் நிச்சயமாக முகமூடியணிந்த அ.தி.மு.க. ஆதரவாளர்கள். முகமூடி அணிந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள்.
பா.ம.க. கட்சி இருக்கிறது. எல்லாக் கட்சியும் பெரும்பான்மை சாதி யாரோ அவர்களை வேட்பாளர்களாக நிறுத்துகிறார்கள். இது தெரிந்த விசயம்தான். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியோ, ஒரு கொங்கு கட்சியோ, என்ன செய்கிறார்கள்? சாதிவெறியை அடித்தளமாகக்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வெறியைத் தூண்டி அதன் அடிப்படையிலே அந்தக் கட்சியைக் கட்டுகிறார்கள். இதுவும் சாதியை தேர்தல் அரசியலுக்கு ஆதாயமாகப் பயன்படுத்துகின்ற தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகளும் சமமாகிவிடுமா?
தவ்ஹீத் ஜமாஅத் எங்களை விட தீவிரமாக மதுவிலக்கு பற்றிப் பேசும். அதன்காரணமாக அந்த மதவெறிக் கட்சியோட சேர்ந்துகொள்ள முடியுமா? மதவெறி என்பது மதுவெறியை விடக் கொடியது இல்லையா? பா.ஜ.க. மதுவிலக்குனு பேசுகிறது. அது எத்தகைய கொடூரமான பாசிசக்கட்சி. பா.ஜ.க.வும் காங்கிரசும் ஒண்ணுதான் என்று பேச முடியுமா? இந்த வேறுபாடுகளை அங்கீகரிக்காமல் இருப்பதும் எல்லோர் மீதும் சேற்றை வாரி இரைப்பதும் அ.தி.மு.க.வுக்கு வழங்கப்படும் ஆதரவு. அல்லது பா.ஜ.க.வுக்கு வழங்கப்படும் ஆதரவு ஆகும்.
இந்த சாராய சாம்ராஜ்யத்தை அ.தி.மு.க. கட்டிக் காப்பாற்றுகிறது. தமிழ்ச்சமூகத்தை நாசமாக்கி சீரழிக்கின்ற ஒரு சதிவேலை திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது. டாஸ்மாக்கை மூடுவதற்காக நிற்பவர்கள் அரசியல் கட்சியாக இருக்கட்டும். அரசியல் கட்சி சாராத சமூக இயக்கங்களாக இருக்கட்டும். அவர்கள் எத்தனை பலவீனமானவர்களாக இருந்தாலும், எத்தனை உறுதியற்றவர்களாக இருந்தாலும் அவர்களோடு ஒரு கூட்டு நடவடிக்கைக்குப் போக வேண்டும். டாஸ்மாக்கை மூடுவது என்ற இந்த இலக்கை எப்பாடுபட்டேனும் அடைய வேண்டுமென்பதற்காகத்தான் இவர்களையெல்லாம் அணுகியிருக்கிறோம்.
ஆகவே, தேர்தல் அரசியல் கட்சிகளை தேர்தலைப் புறக்கணிக்கும் நீங்கள் அணுகலாமா என்ற கேள்வியை எழுப்புகின்றவர்கள் டாஸ்மாக் என்ற இந்த பேரபாயம் தமிழகத்தை எப்படி சூழ்ந்திருக்கிறது என்பதை தயவு செய்து சிந்தித்துப் பார்த்து, அதை மூடுவதற்கு வேறு வழிகள் இருக்கின்றனவா, இதைவிடச் சிறந்த இதைவிட விரைவான, இதைவிட சாத்தியமான வேறு வழிகள் இருக்கின்றனவா என்பதை யோசித்துப் பார்த்து அதன் பிறகு, உங்கள் கருத்தை உங்கள் தீர்ப்பை அதன் மீது வழங்குங்கள்.
நன்றி.
– முற்றும்.
டாஸ்மாக்கை மூடுவதற்கு வேறு என்ன வழி? வீடியோ மற்றும் ஆடியோ பொருத்தமாக இல்லை.
வரலாறு மற்றும் இயங்கியல்பூர்வமான அணுகுமுறை.டாஸ்மாக்கை மூடுவதற்கு வேறு சிறந்த வழியை யாரேனும் சொல்வார்களா?தென்படுவதாக இல்லை.மீண்டும் மீண்டும் கேட்டு உள்வாங்கிக் கொள்ள வேண்டிய உரை.கூட்டணிக்கும் கூட்டு நடவடிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை உன்னிப்பாகக் கவனித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
I am following Vinavu for quite some time.
Mr.Maruthaiyan hope you will lend your ears for few mins to my comments.
1) Looks like you too (I am seeing you as Vinavu representative so no personal) started to label peoples just because of they criticized an incident/article/etc.. Its better to avoid this labeling.
Why do we need to stop labeling peoples?
When you stand against government , then government will label those peoples depending on the ways they took like terrorist,activist,maoist etc.. Instead of labelling like this, they have to think what makes them to come against us. Then they should work on the root level of issue positively.
When you stand against Corporates and govt development capitalist pro policies, you will be labelled as socialist or communist. Here corporates & government need to think why more people are coming against their functioning and policies.
When you proudly talk about your own language, then he will be labelled as Language fanatic.
when you talk about reservations, then casteist.. Similarly i can give more examples.
From your video, whoever criticized “kovan meeting with political parties” are labelled as follows,
1)Judgmental and not really into social welfare,
2)They are selfish and wants to keep the system as it is.
3) The people whoever working on ground is really game changers.
While you are protesting for a social issue from the ground (i know you are protesting for good cause), but how many people are ready come out and stand with you.. for example protest against IT companies for forcing the employees to resign, did you get all the IT employees standing with you?
Till now i can see indian communist based parties, groups, communities, union, journalist looks like they don’t have clear plan or agenda and still stick to their old approach.
Protesting by coming outside will not help. Preparing the People for stand against the social/political/economic evils is important. It will result in all the levels of people join hands with you.
There are different level of approach is needed at this time. Old approach of shouting slogans will not help us.But it may be one of the part but that is not solution for the ongoing problems.
2) This is on statement to other parties and portraying DMK is better than others.
I think you haven’t touched the issues faced by people during DMK rule like systematic corruption, goondas rule, not coming out for saving srilankan massacres, own family welfare than common people. All parties are same in self centric rule. The problem area may be different in every 5 years. I haven’t heard this from your speech. Either because of wants to prove your point on visiting DMK leader and don’t want to touch their negative parts. I agree DMK is better than PMK in caste based politics. But did DMK choose the candidates not considering the caste ratio in the constituency?
yes they are good against brahmanism but are they don’t have same qualities (like selfish, using others for their need) of brahmin community
Like to know MA KA E KA is a wing of Communist party of India (but not marxist)?.
Did CPI is planning to join DMK in this election? And wants to make Kovan incident as a favour to get more seats during allocation?
If you see the comments are good, take the positive portion and change yourself. If it is bad, just ignore it.
But your take/statement on visiting political parties is not convincible.Not sure what is in your agenda. Please not to label me.
Please read this interview again after noting the following information
1) MA KA EE KA is not part of any election based political party.
2) They are a Marxist – Leninist (communist) ideology based organization which works directly with people on socio- economic issues
3) They don’t support or campaign for anyone in general elections – they campaign to people to ignore the elections
I agree with your comments regarding Mr. Maruthaiyan having not enlisted the negatives of DMK rule – but we have to see this event with some perspective – this meet has happened mainly to gather major support for one particular issue which is TASMAC. Also when we see things from larger perspective ( not from an election / rule angle ) ADMK is fully based on a fascist arrangement ( ammavin adimaihal) compared to DMK
Thanks for clarifying my queries in my previous comment. MA KA EE KA is not part of any political party. But it can influence the people by kindling their thoughts instead of always complaining about government and its policies.
Sam, I am not quite agree with looking the article/Video with single perspective. Video should be responsibly make the people to think in all perspectives. I am not against Kovan meeting with political parties. But i am against the way Mr.Maruthaiyan commented against the criticizers. Vinavu can come up with view which can help them to think it in right angle instead of just making them to feel bad and counter attacking them without any substance to it.
Your reason for differentiating parties is well written. People say that they are all same. Not really! We need to apply our common sense to differentiate them. Actually, everyone knows the difference. As you have rightly pointed out, those who say all are same are hidden BJP/ADMK agents.
மது ஒழிப்புக்காக தேதேர்தலில் பங்கெடுக்கும் கட்சிகளோடு கூட்டமைப்பை உருவாக்குவது, அதன்மூலம் மதுவை ஒழிப்பது, இதுதான் உடனடியாக நடக்கக்கூடியது. வேறுவழி இருந்தால் சொல்லுங்கள். என்பதுதான் தோழர் மருதையனுடைய பதில்.
தேர்தலில் பங்கெடுக்கும் ஒரு அரசியல் கட்சி தேர்தல் சட்டதிட்டத்திற்கு உட்படாமல் போராடுவது என்பது இயலாது.அவர்களோடு மது ஒழிப்பு என்ற ஒற்றை கோரிக்கைக்காக கூட்டமைப்பு என்பது, சட்டத்திற்கு உட்பட்டு மட்டுமே மது ஒழிப்பு சாத்தியம் என்பது இந்த கட்சிகளின் கருத்தாக இருக்கும் பட்சத்தில் தலைமைதாங்கும் மக்கள் அதிகாரத்தின் முடிவும் அதுவேவாகத்தான் இருந்தாக வேண்டும்.
ஆனால், நீதிமன்றத்தை நம்ப முடியாது, கலெக்டரை நம்ப முடியாது, இந்த கட்டமைப்பே ஆளத் தகுதி இழந்து விட்டது என்று சொல்லும் மக்கள் அதிகாரம், கூட்டமைப்பின் வாயிலாக அதிமுக, பாஜக அல்லாத ஒரு சட்டசபையை நம்புவதாகவே தெரிகிறது. அப்படி இல்லையென்றால் சட்டத்திற்கு வெளியிலே இந்த கட்சிகள் மக்களின் நலன்களுக்காக எந்த மட்டம் வரை போராடும் என்பது கடந்த 10 ஆண்டுகால உதாரணங்களைப் பார்த்தால் புரியும். எப்படி பார்த்தாலும் தேர்தலைப் புறக்கணிக்கும் அமைப்பாக மகஇக, மக்கள் அதிகாரம் இருந்தாலும், தேர்தல் அரசியல் வழியிலேயேதான் உடனடி தீர்வை தேடுகிறது என்பதுதான் உண்மை.
“தேர்தலைப் புறக்கணிக்கிறோம், எல்லா ஓட்டுப் பொருக்கிக் கட்சிகளையும் நம்பாதீர்கள்” என்று தைரியமாக இனி பேருந்தில் ஏறி மக்களிடம் பேசமுடியாது என்பதை மகஇக அமைப்பின் தோழர்கள் இனி உணர்வார்கள்.
மிகச் சரி. திமுக உள்ளிட்ட ஓட்டுக்கட்சிகளை சாராயக்கடைகளை உடைக்கும் போராட்டத்திற்கு அழைத்திருந்தால், கூட்டு சேர்த்திருந்தால் அது சரியான முன்னகர்வு.
அப்படி இல்லைனா ‘சட்டப்படி’ மட்டுமே மக்கள் அதிகாரம் செயல்பட முடியும்.
“அந்தக் கட்சித் திருடன். இந்தக் கட்சி திருடன். அவன் சரியில்லை. இவன் சரியில்லை. என்று தீர்ப்பளிப்பதற்கு ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் நிறைய பேர் இருக்கிறார்கள்”.உங்களை நீங்களே கண்ணாடியில் பார்த்து பேசுவது போல் உள்ளது.வினவு தளத்தில் இதை தவிர வேறு ஒன்றை காட்ட முடியுமா ?
திமுக கட்சிக்கு வருமானம் தரக்கூடிய சாராயக் கம்பெனிகளை இழுத்து மூடிட்டு அப்புறமா அவங்களை சாராய ஒழிப்பு பத்தி பேசச் சொல்லுங்க. இவங்களோட நேர்மையில தப்பு இருக்கு.
அதிமுக மிகத் தெளிவா இருக்காங்க இந்த விஷயத்துல. சாராயக் கம்பெனி நடத்துவோம். சாராயத்தை ஒழிக்கமாட்டோம்னு தெளிவா இருக்காங்க. இவங்க செய்ற தப்புல கூட நேர்மை இருக்கு.
வேறு வழி கேட்டீங்க.
அந்தந்தப் பகுதி மக்களாகத் திரண்டு அந்தந்தப் பகுதிகளில் சாராயக் கடைகளை உடைச்செறியனும். ஒவ்வொரு கடைக்கும் குறைஞ்சது நூறு பேரு திரளணும். அப்படி திரள மாட்டாங்கன்னா அனுபவிக்கட்டும்னு விட்டுட்டு போயிட்டே இருக்கனும்.
கருணாநிதியை சந்தித்தது பற்றிய தோழர் மருதையன் அவர்களின் விளக்கத்தின் மீதான விமர்சனம் – 3
மதிப்பிற்குரிய தோழர் மருதையன் அவர்களுக்கு உங்களின் கூட்டுநடவடிக்கை பற்றிய- அ.தி.மு.க, தி.மு.க வேறுபாடு குறித்த, உங்கள் பதிவு வினவில் வெளிவருவதற்கு முன்பே நான் இரண்டு பதிவுகளை வெளியிடு விட்டேன். வினவுக்கும் அனுப்பியிருக்கிறேன். எனது இரண்டாவது பதிவின் இறுதியில் “இவ்வளவுக்குப் பிறகும் நான் உங்களை நம்புகிறேன்” என்று எழுதி இருக்கிறேன். உங்களது இரண்டாவது பதிவை படித்தபின் எழுதியிருந்தால் அந்த வரியைச் சேர்த்திருக்க மாட்டேன்.
தோழரே! ஒவ்வொரு இயக்கமும் அவர் அவர்கள் கொண்டுள்ள கொள்கை மற்றும் இலட்சியங்களுக்கு ஏற்பவே மக்களை அணிதிரட்டும் வேலைமுறையை முன்வைக்கிறார்கள். டாஸ்மாக்கை மூடவேண்டும் என்பதில் காந்தியவாதி சசிபெருமாள் முன்வைத்த வழிமுறையை ம.க.இ.க.வோ, மக்கள் அதிகாரமோ முன்வைக்கவில்லை. ஓட்டுக்கட்சிகள் மக்கள் அமைப்பாவதையோ, ஜனநாயகப்படுத்தப் படுவதையோ மக்கள் செயலரங்கில் வெளிப்படுவதையோ விரும்புவதில்லை. ஏனென்றால் அது அவர்களின் இருப்புக்கு ஆபத்து என்பதை உணர்வதனால்தான் அவர்கள் எப்போதும் அறிக்கை வழி அறிவிப்புகளை மட்டுமே மேற்கொள்கின்றனர். அதிகபட்சம் அரசு அனுமதித்த வகையில் மாவட்ட மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அதற்கு மேல் மக்களை ஈடுபடுத்தச் செய்யும் வேலையை அவர்கள் ஒருபோதும் செய்வதில்லை. சில சமயங்களில் மாநிலம் தழுவிய கடையடைப்பு அதுவும் அறவழியில் – இதற்குக் கூட மக்களை அணிதிரட்டுவதில்லை. மக்கள் செயல்பாடற்ற ஒரு வேலைமுறையே பெரும்பாலான ஓடுக்கட்சிகளின் வேலைமுறை – இ.பொ.க, இ.பொ.க.(மா), போன்ற அமைப்புகளும் – மக்களை அமைப்பாக்குவதற்கு மாறாக அவர்கள் அணிகள் மட்டும் பங்கேற்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்ற எல்லையிலேயே பணியாற்றுகிறார்கள். சாராய எதிர்ப்பிலும் இத்தகைய அணுகுமுறையே ஓட்டுக்கட்சிகளால் முன்வைக்கப்பட்டது.
துன்பத்தை அனுபவிக்கும் மக்களும், சமூகப் பணியாற்ற வேண்டும் என்ற நல்லுணர்வு கொண்ட மாணவர்களும், மக்கள் அதிகாரம், மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணி போன்ற அமைப்புகள் தான் போராட்டத்தை ஏற்கனவே இருந்த நிலையிலிருந்து சற்றே உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றனர். கலிங்கப்பட்டியில் ம.தி.மு.க வின் முன்முயற்சியில் வெற்றிகரமாக டாஸ்மாக் கடை தகர்க்கப்பட்டது. பிறகு அவர்கள் அத்தகைய முறையை எங்கும் பின்பற்றவில்லை. அதில் குறிப்பாக மக்கள் அதிகாரம் மையப்படுத்திய வகையில் திட்டமிட்டு உறுதிமிக்க போராட்டங்களை முன்னெடுத்தது.
நான் குறிப்பிடுவது இதுதான். அவரவர்களுக்கு என்ன தொலைநோக்கு இருக்கிறதோ அதன் அடிப்படையிலேயே தங்களது வேலைமுறையை அமைத்துக் கொள்கின்றனர்.
நீங்கள் இந்திய புரட்சியை இலக்காக கொண்ட அமைப்பு, (இதன் சரி தவறை நான் இங்கே பேசவில்லை – இதற்கும் கடந்த காலம் முழுவதும் நீங்கள் பின்பற்றிவரும் வேலைத்திட்டத்திற்கும் இடையிலான உறவு பற்றி வேறு ஒரு இடத்தில் நாம் விவாதிப்போம்.) எனவே ஒரு வலுவான போராட்ட உணர்வுடனும், மக்களை அணிதிரட்டி பணிகளை முன்னேடுக்க வேண்டும் என்ற வகையில் உங்கள் சாராய எதிர்ப்பு வேலைத்திட்டத்தை முன்வைத்தீர்கள் அந்த வகையில் இதை சரி என்றே நான் கருதுகிறேன்.
டாஸ்மாக்கை மூடுவது இலக்காக இருக்கும் போதே அவரவர்களின் தொலைநோக்கிற்கேற்ப வேலைத்திட்டம் வைத்தே எவரும் செயல்படுவர். ஓட்டுக்கட்சிகளுக்கு ஓட்டைப் பெறுமளவு வேலை செய்தால் போதும். உண்ணாவிரதம், அறவழியில் ஆர்ப்பாட்டம், அறவழியில் பந்த் இதுவே அவர்களின் அதிகபட்ச வேலைமுறை. இப்பணிகளுக்கும் ஆகஅதிகபட்சம் தமது கட்சிகாரர்களை மட்டுமே திரட்டி பணிகளில் ஈடுபடுகின்றனர். இவற்றைக் கூட அரசு அங்கீகரிப்பதற்கு காரணம் எந்த போராட்டமும் உங்களைப் போன்ற உண்மையாக போராடும் அமைப்புகளிடம் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத் தான். எல்லா விதமான ஜனநாயக வழிமுறைகளும் தடுக்கப்பட்டால் மக்கள் புரட்சிகர வழிமுறைகளை முன்னெடுப்பதுடன் புரட்சிகர இயக்கங்களுக்கு சென்றுவிடுவார்கள் என்பதனாலேயே அரசு ஓட்டுக்கட்சிகளின் அறவழிப் போராட்டங்களுக்கு அனுமதிக்கிறது. அதேசமயம் இத்தகைய ஜனநாயக வழிமுறைகளை புரட்சிகர இயக்கங்கள் மேற்கொள்வதற்கு அனுமதி அளிப்பதில்லை. ஏனெனில் அமைதி வழிப்போராட்டங்களுக்குக் கூட மக்கள் புரட்சிகர அமைப்புகளின் பின் சென்றுவிடக் கூடாது என்பதில் ஆளும் வர்க்கம் தெளிவாக உள்ளது. இவையெல்லாம் நீங்கள் அறியாததல்ல. இதை நான் குறிப்பிடுவதற்கு காரணம் புரட்சிகர இயக்கங்கள் கீழிருந்து மக்களை போராட்டத்திற்கு அணிதிரட்டுவதையும் அமைப்பு ரீதியில் செயல்படுவதையே முதன்மையாக கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். அப்படியான வகையில் மேலிருந்து கூட்டு நடவடிக்கைக்கு திட்டமிடும் போதும் அதற்குத் தகுதியான இயக்கங்களுடன் கூட்டமைப்பை நிறுவுவதற்கே புரட்சிகர இயக்கம் முயற்சிக்க வேண்டும். அந்த இடத்தில் தான் இத்தகைய வேலை முறைக்கு முற்றிலும் பொருந்தாத, மக்களை கீழிருந்து அணிதிரட்ட தயார் இல்லாத கட்சிகளுடன் கூட்டு நடவடிக்கைகளுக்கு முயல்கிறீர்கள் என்பதே எனது விமர்சனம்.
நாம் வேறுபடும் இடம் இரண்டு. 1. டாஸ்மாக் எதிர்ப்புக்கு தி.மு.க உள்ளிட கட்சிகளை இணைத்தால் வெற்றி பெற முடியும் என்று நீங்கள் கருதுகிறீர்கள். தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை இணைக்காமலேயே டாஸ்மாக் பிரச்சனையில் உண்மையில் கீழிருந்து மக்களை இணைத்துப் போராடும் இயக்கங்களை இணைத்தால் வெற்றி பெற முடியும் என்பது எனது கருத்து. 2. கீழிருந்து மக்களை அணிதிரட்டுவதைச் செய்து கொண்டே மேலிருந்து அதற்கு துணை செய்யவே எல்லோரையும் அழைக்கிறோம் என்கிறீர்கள். தி.மு.க உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் துணை செய்வார்கள் என்று நம்புவதே தவறானது என்பது மட்டுமின்றி போராட்டமே நீர்த்துப் போகும் வழிமுறைகளை முன்வைப்பார்கள். அது நமது வேலைமுறைக்கு ஒத்துவராது. இந்த இரண்டு வேறுபாடுகளும் புறநிலைப் பற்றிய உங்களின் தவறான மதிப்பீட்டினாலும் வர்க்க கண்ணோட்டமின்றி தி.மு.க.போன்ற கட்சிகளை மதிப்பிடுவதினாலும் தோன்றுகிறது என்பதே எனது கருத்து.
சாராய எதிர்ப்புணர்வு என்பது தமிழகத்தில் நீருபூத்த நெருப்பாக கணன்று கொண்டிருக்கிறது. மக்கள் தன்னெழுச்சியாகவே பல இடங்களில் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் வேறு எந்த பிரச்சனையிலும் இத்தகைய தன்னெழுச்சியான போராட்டங்கள் சமீபத்தில் பெரிய அளவில் நடைபெறவில்லை. சட்டப்பூர்வமான வழிகளையோ, ஜனநாயக வழிமுறையிலான – மென்மையான வழிமுறையிலோ – இதைத் தடுத்துவிட முடியாது என்ற நிலை நிலவியது. இது முழுக்க முழுக்க தீவிரமான மக்கள் போராட்டங்கள் மூலமே அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டும் என்ற நிலையும் இருந்தது. சரியான நேரத்தில் மக்களை செயல் களத்திற்கு தள்ளும் முழக்கத்துடன் நீங்கள் முன்வந்தீர்கள். தமிழகத்தில் திட்டமிட்டு மக்களை அணிதிரட்டி ஒரு நூறு கடைகளை திறக்கமுடியாதபடி செய்திருந்தால் சாராய எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் பெரும் தீயாய் பரவியிருக்கும் என்பது மட்டுமல்ல – ஓட்டுக்காக குரல் கொடுக்கும் அத்தனை கட்சிகளும் நீங்கள் நேரில் சென்று அழைக்க வேண்டிய அவசியமில்லாமலேயே சாராய எதிர்ப்பு -அறிக்கைகளையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி இருப்பார்கள். உண்மையில் டாஸ்மாக் உடனடியாக மூடக்கூடிய எளிய இலக்காக மாறி இருக்கும். அத்தகைய புரட்சிகர வேலை முறைக்கு நீங்கள் தயார் இல்லை. ஒரு சிறிய அடக்குமுறை வந்ததுமே பாதுகாப்பான வேலைமுறைக்கு திரும்பி விட்டீர்கள். தமிழகத்தில் இடது தீவிரவாத இயக்கங்களிடமிருந்து மக்கள்திரள் அமைப்பு – இயக்கம், அரசியல் அரங்கிலான பணியை முன்னெடுப்பது என்று வெளிவந்த இயக்கங்கள் இடது தீவிரவாத இயக்கங்களுக்குள் இருந்த புரட்சிகர தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் சேர்த்து கைவிட்டுவிட்டதோ என்று அஞ்சத் தோன்றும் வகையிலேயே உங்களின் வேலைமுறைகள் அமைந்திருக்கின்றன. ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலான மக்கள்திரள் அரசியல் அரங்கிலான பணியில் அரசுக்கு எதிரான எத்தனை மோதல்களை நீங்கள் மேற்கொண்டிருப்பீர்கள்?. புரட்சிகர அரசியல் பிரச்சாரங்கள் மட்டும் அல்ல, புரட்சிகர அரசியல் கிளர்ச்சிகளும் மோதல்களுமே மக்களை மேலும் மேலும் புரட்சிகர அரசியலை நோக்கி கொண்டு சென்றிருக்கும். மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான முரண்பாட்டை மேலும் கூர்மையடையச் செய்யும் வேலைமுறையை முன்வைப்பதற்கு பதில் ஓட்டுக் கட்சிகளின் வேலைமுறைகளை, வடிவங்களையே முன்வைத்து மக்களின் உணர்வு நிலையை உயர்த்த தவறுகிறீர்கள். தமிழீழ பிரச்சனையை அடுத்து தன்னெழுச்சியான போராட்டங்கள் சாராய எதிர்ப்பிலேயே ஏற்படுள்ளது. இடது சந்தர்ப்பவாத அரசியலும், இடது சந்தர்ப்பவாத வேலைமுறையும், இடது சந்தர்ப்பவாத அமைப்பு முறைகளுமே – பல ஆண்டுகளாக உங்கள் இயக்கம் அரசியல் சக்தியாக எழுச்சி பெறாததற்கு முதன்மையான காரணமாகும். நான் இது குறித்த ஆய்வுக்குள் இப்போது செல்ல விரும்பவில்லை. உங்களின் இத்தகைய சந்தர்ப்பவாத பண்பே புரட்சிகர வேலைமுறையை முன்வைக்கத் தடையாக இருக்கிறது. எனவே தான் வர்க்க ஆய்வின்றி அவர்களின் வெற்று முழக்கங்களிலிருந்து அ.தி.மு.க வையும், திமு.க வையும் ஒப்பிடச் செய்யும் இடத்திற்குச் செல்கின்றீர்கள். இடஒதுக்கீடு, திராவிட நாடு, மாநில சுயாட்சி – தமிழ்த் தேசியம் போன்ற விடயங்களுடன் – முதலாளித்துவ ஜனநாயக முழக்கங்களுடன் – தோன்றியது தி.மு.க. அந்த இயக்கம் இந்த கோட்பாடுகளையெல்லாம் கைவிட்டு – முற்றிலுமான தரகு இயக்கமாக மாறி நீண்ட காலம் ஆகிவிட்டது. இந்த கொள்கைகள் எல்லாம் தற்போது தமிழ் மக்களை ஏமாற்றும் வாய்ச்சவடால்கள்தான். இதைச் சாதாரண அரசியல் அறிவுள்ளவர்களும் புரிந்து கொண்டிருக்கும் நேரத்தில் -மருதையன் போன்றவர்கள்- “நான் போயஸ் தோட்டத்திற்குப் போகவா! கோபாலபுரம் போகவா என்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. அ.தி.மு.க எந்தக் கொள்கையும் கோட்பாடும் அற்ற அடிமைகளின் கட்சி, பாசிசத் தன்மை கொண்ட கட்சி என்பதில் ஐய்யமில்லை. தமிழ்த் தேசிய கொள்கைகளுடனும், கோட்பாடுகளுடனும் தோன்றிய தி.மு.க விற்கும் அதற்கும் வேறுபாடு உண்டு – தி.மு.க இந்த கொள்கைகளை ஊறுகாயைப் போல பயன்படுத்த வைத்துக் கொண்டுள்ளது. மற்றபடி தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் பார்ப்பனிய எதிர்ப்பும், தமிழ்த் தேசிய உணர்வும், தி.மு.க இக்கொள்கையை முற்றாக கைவிட முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. அதுவும் புற உலகில் இவையெல்லாம் எந்த அளவு எழுச்சி அடைகிறதோ அந்த அளவிற்கு தன்னை அந்தச் சாயலில் காட்டிக் கொள்ளும் இயக்கம் தான் தி.மு.க.. அ.தி.மு.க தாக்கி அழிக்கப்பட வேண்டிய இலக்கு, தி.மு.க அம்பலப்படுத்தி அழிக்கப்பட வேண்டிய அமைப்பு. அ.தி.மு.க தீர்மானகரமான எதிரி. தி.மு.க சந்தேகத்திற்கு இடமற்ற துரோகி. இரண்டு பேரும் அழிக்கப்பட வேண்டிய இலக்குகளே. அழிப்பதற்கு கையாள வேண்டிய அணுகுமுறையில் மட்டும் தான் வேறுபாடு உள்ளது. தி.மு.க அணைத்துக் கொள்ள வேண்டிய அமைப்பு அல்ல. நான் எதிரியிடம் போவதா துரோகியிடம் போவதா என்பது போன்று உள்ளது உங்கள் கேள்வி.
திறந்த மனதுடன் உங்கள் கூட்டுநடவடிக்கை திட்டத்தை பரிசீலியுங்கள். அதை நியாயப்படுத்தும் முயற்சியில் மேலும் மேலும் தவறான விளக்கங்களுக்குள் மாட்டிக் கொள்ளாதீர்கள். தவறுகளிலிருந்து மீளுங்கள். உங்களின் சந்தர்ப்பவாத வேலைமுறையானது உங்களின் சந்தர்ப்பவாத அரசியல், மற்றும் சந்தர்ப்பவாத அமைப்பு முறைகளின் தவிர்க்க முடியாத விளைபொருளே!
நன்றி
இவண்
திருமொழி
Good reply thirumozhi.
//ஓட்டுக்கட்சி தலைவர்களை கோவன் சந்தித்தது ஏன் என்பதற்கான மருதையன் அவர்களின் பதிலிலிருந்து சில குறிப்புகளும்//
(அந்த பதிலுக்கான என்னுடைய சந்தேகங்களும் கருத்துகளும்)
〰〰〰
//என்ன காரணத்துக்காக சென்றார்கள் என்றெல்லாம் தெளிவுபடுத்தப்பட்டிருந்த போதிலும், அவர்கள் யாரையுமே சந்திக்காமல் தி.மு.க தலைவரை மட்டும்தான் சந்தித்தார்கள் என்பது போலவும், அல்லது தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திக்கும் போது “வளைந்தார்”, “குனிந்தார்”, “மண்டியிட்டார்” என்றும் வக்கிரமாகவும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தை அவதூறு செய்யும் ஒரு விதமான உள்ளக் கிளர்ச்சியோடும் சிலர் எழுதியிருக்கிறார்கள்.//
(என்ன காரணத்துக்காக சந்தித்தார் என்பது முக்கியமில்லை எந்த அரசியல் அடிப்படையில் சந்தித்தார் என்பதுதான் யோசிக்க வைக்கிறது)
〰〰〰
//ஓட்டுக்கட்சிகள் என்று உங்களால் அழைக்கப்படும் கட்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதும், அவர்களை அழைப்பதும் எப்படி சரி, அது கொள்கை பிறழ்ந்த செயல் ஆகாதா என்பதுதான் இவ்வாறு விமர்சனம் வைப்பவர்களின் மையமான கேள்வி. //
(ஆம் கொள்கை பிறழ்ந்த நடவடிக்கைதான். ஏனென்றால் தரகு முதலாளித்துவ குடும்பம், ஏகாதிபத்திய சேவைக்கட்சி, தமிழின துரோகி, மதவாத பாஜக வாஜ்பாய் ஆட்சியை ஐந்தாண்டுக்கு தாங்கிப் பிடித்தவர், மிகப்பெரிய 2G ஊழலுக்கு உட்பட்ட கட்சி, தமிழின ஆதரவு என்று சொல்லிக்கொண்டே இலங்கை தமிழர்களுக்கு துரோகமிழைத்ததில் பங்கு, திமுகவினரின் சாராயக் கம்பெனிகள், போன்ற எந்த நடவடிக்கையும் ஜெயலலிதாவுக்கு குறைந்ததல்ல)
〰〰〰
//சசிபெருமாளின் மரணத்தை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்திய தலைவர்கள் எல்லாம் “டாஸ்மாக்கை மூட வேண்டும்” என்று உறுதி ஏற்றுக் கொண்டார்கள்; அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு பிரிந்தார்கள். ஓரணியில் திரள்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. சசிபெருமாளின் மரணத்திற்கு பிறகு மக்கள் நல கூட்டியக்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட தமிழகம் தழுவிய வேலை நிறுத்தத்தில் இந்த கோரிக்கையை ஆதரிக்கின்ற பா.ம.கவும் பங்கேற்கவில்லை, தி.மு.கவும் பங்கேற்கவில்லை. அதற்கு பல காரணங்களைச் சொன்னார்கள்.//
(மதுஒழிப்பு பற்றி பேசுவதும், சசிபெருமாள் இறுதிச்சடங்கில் பல கட்சிகள் கலந்து கொண்டதும் 2016 தேர்தலே காரணம்)
〰〰〰
//கோவன் விடுதலையாகி வந்து என்ன செய்ய வேண்டும்? இன்னொரு பாட்டு எழுதி, இன்னொரு முறை பாடி, இன்னொரு முறை கைதானால், அவர்கள் இன்னொரு முறை கண்டிக்க வேண்டுமா? அல்லது இந்த பாடலுக்காக அவருக்கு விருது கொடுக்கப் போகிறார்களா? அதற்குத்தான் அவர் பாடினாரா?//
(கோவனின் நலனிலிருந்தோ ஜனநாயக மாண்பிலிருந்தோ ஒட்டுக் கட்சிகள் கண்டிக்கவில்லை. மக்களின் ஆதரவை பெற, ஜெயாவை எதிர்க்க ஒரு வாய்ப்பாகத்தான் அவர்கள் பார்க்கிறார்கள்.)
〰〰〰
//“என்னுடைய கைதை கண்டிப்பதில் கருத்தொற்றுமை கொண்ட நீங்கள், டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை கொண்ட நீங்கள், உங்கள் தேர்தல் அரசியலுக்கு வெளியில் ஏன் ஓரணியில் நின்று போராடக் கூடாது. //
(தேர்தல் தான் அவர்களின் ஒரே இலக்கு எனும்போது தேர்தல் அரசியலுக்கு வெளியே ஒன்று திரள கோரிக்கை வைக்கத்தான் சென்றோம் என்று சொல்வது மார்க்சிய- லெனினிய- மாவோ சிந்தனை அடிப்படையிலானதா?)
〰〰〰
//மனித வளம் இவ்வாறு அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவில்லையென்றால், தி.மு.க.வோ, ம.தி.மு.க.வோ ம.க.இ.க.வோ யாரும் எந்த அரசியலுக்காகவும் மக்களைத் திரட்ட இயலாத சூழ்நிலை ஏற்படும். //
(மார்க்சிய அடிப்படையில் மக்கள் அணிதிரளக்கூடாது என்பதுதான் பிற்போக்கு ஆளும்வர்க்கத்துக்கு தேவை. அதற்காகத்தான் சீரழிவு கலாச்சாரம் அத்தனையையும் ஏகாபத்தியங்களும், உள்நாட்டு பிற்போக்கு சக்திகளும், அதன் சேவர்களான ஓட்டுக் கட்சிகளும் நடைமுறைப்படுத்துகின்றன. திமுகவுக்கும், மதிமுகவுக்கும் அரசியல் அணிதிரட்டலைச் செய்ய குவாட்டரும் பிரியாணியும்தான் பயன்படுகிறது. ஊரறிந்த இந்த விசயம்கூட தெரியாதவர்களாக இருப்பதற்கு என்ன காரணம்?)
〰〰〰
//அன்றாடம் நாளேட்டைத் திருப்பினால் சிறுவர்கள் குடிக்கிறார்கள்., பள்ளி மாணவிகள் திருச்செங்கோட்டில் குடிக்கிறார்கள் என்று செய்தி வராத நாளில்லை. டாஸ்மாக் தொடர்பான குற்றங்கள் குறித்து செய்தி வராத நாளில்லை. //
(ஆம் சாராயம் என்ற பண்பாட்டுச் சீரழிவு ஒழிக்கப்பட வேண்டியதுதான்.ஆனால் மாணவிகளும் மாணவர்களும் குடிப்பதற்கான சரக்கைக் கொடுப்பது டாஸ்மாக், குடிப்பதற்கான கலாச்சாரத்தை கொடுப்பது எது அதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டாமா? அதற்கான மூலகர்த்தாவான ஏகாதிபத்தியத்துக்கும் அதன் உள்நாட்டுக் கூட்டாளிக்கும் எதிரான போராட்டத்துடன் பிணைக்கப்பட்டிருக்கவில்லையா? முதலமைச்சரின் ஒற்றைக் கையெழுத்தில் அடங்கியுள்ள விசயமா இது?)
〰〰〰
//இதை ஒழிக்கவில்லையென்றால், இந்த சமூகம் எதற்கும் பயனற்றதாக ஆகும். இதனை சீனாவில் நடந்த அபினி யுத்தத்தோடு ஒப்பிட்டு பார்க்கலாம்.//
(ஆம், அபினி யுத்தம் ஏகாதிபத்திய எதிர்ப்போடு இணைந்திருந்தது. அதற்கான கூட்டமைப்பையா தற்போது ஏற்படுத்துகிறீர்கள்)
〰〰〰
//காவிரிப் பிரச்சினைக்காக ஒன்று திரள வேண்டும். முல்லைப் பெரியாறுக்காக ஒன்று திரளவேண்டும். தமிழக மீனவர் பிரச்சினைக்காக ஒன்று திரள வேண்டுமென்றெல்லாம் சொல்வார்கள். அவற்றையெல்லாம் விட மிக முக்கியமான பிரச்சினை இது. அப்படி ஒன்றுதிரள வேண்டுமென்று கோருவதற்குத்தான் போனோம். //
(ஒன்றுதிரள்வது தப்பில்லை. குறிப்பிட்ட பிரச்சனையின் அடிப்படையில் எதிரி யார் நண்பர் யார் என்ற வரையறை முக்கியமானது. முல்லைப் பெரியாறு, காவிரி, மீனவர் பிரச்சனைகளுக்கு தமிழகத்தின் அணிசேர்க்கை கேரளா, கர்நாடகா மற்றும் மத்திய ஆட்சியாளர்களைப் பொருத்து அதிமுக திமுக உட்பட்டதாக இருக்கலாம். ஊழல் பிரச்சனை எனும்போது ஆட்சியில் பங்குகொண்ட எந்த கட்சியையும் சேர்க்க முடியாது. அன்னிய நாட்டு ஆக்கிரமிப்பு என்றால் பிஜேபி காங்கிரசைக்கூட இணைத்துக்கொள்ள முடியும். மது பிரச்சனையென்றால் ஊத்திகொடுப்பவர், காய்ச்சி கொடுப்பவர், கட்சியை வளர்க்க அதை பயன்படுபவர் என்று பார்க்க வேண்டும். அப்படி பிரச்சனையின் அடிப்படையில் ஆய்வு செய்யாமல் எல்லா பிரச்சனையையும் ஒன்றுபோல பேசுவதற்கு எது அடிப்படை?)
〰〰〰
//இது பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கும் பிரச்சினை அல்ல. “மூடு டாஸ்மாக்கை” என்பது இலக்கு வைத்து முடிக்கக்கூடிய கோரிக்கை.//
(இது மட்டும்தான் இலக்கு வைத்து முடிக்கக் கூடிய கோரிக்கையா? வேறு எதுவும் இல்லையா? தமிழகத்திலேயே பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கும் கட்சி எது தெரியுமா?)
〰〰〰
//டாஸ்மாக் எதிர்ப்புக் கோரிக்கையிலே கருத்து ஒற்றுமை கொண்ட மற்றக் கட்சிகளை அணுகாமல் நாங்கள் மட்டுமே இந்தப் பிரச்சினையை எடுத்து செய்வது என்ற நிலை எடுத்தால் என்ன நடக்கும்? 2 காரியங்கள் நடக்கும். ஒன்று இதுபோல நசுக்கப்படுவது, தனிமைப்படுத்தப் படுவது. முன்னரே கூறியதைப்போல அது எங்களுக்கு மட்டும் ஏற்படப்போகும் பாதிப்பு அல்ல.//
( மக்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்பா! மக்களுக்கு எதிரான சக்திகள் நீடித்து நின்றதாக வரலாறு இல்லை. நீங்கள் சொல்வது என்பது , ஆற்றில் தவறி விழுந்த நரி உலகம் அழியப் போகிறது என்று கூச்சலிட்டது போல இருக்கிறது.)
〰〰〰
//இதைப்பார்த்து நாளைக்கு இதற்கு எதிராகப் போராடக்கூடாது என்ற அச்சம் இந்த சமூகத்தில் விதைக்கப்படும். அதுதான் அந்த தனிமைப்படுத்தப் படுவதனுடைய விளைவு.//
(அப்படித்தானே செய்யும் முதலாளித்துவ அரசு. அதைமுறியடிக்க மக்களிடம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த அச்சத்தைப் போக்க ஓட்டுக்கட்சிகள் கூட்டமைப்பு எவ்வாறு உதவியானதாக இருக்கும்?)
〰〰〰
//இப்படி செய்வதன் மூலம் அவர்களை மக்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டவர்களாக்குகிறோம். இப்படி செய்வதன் மூலம் இந்த கோரிக்கை நிறைவேறுவதை கீழிருந்து உத்தரவாதப்படுத்துகிறோம்.
ஒருவேளை வாக்கு தவறினால்? நீங்கள் நாங்கள் கேட்போம் என்பது மட்டுமல்ல, அவர்கள் கட்சிக்காரர்களே கேட்பார்கள். அப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவதுதான் இதில் உத்தரவாதம். //
(வாக்குறுதி தவறிய எத்தனைப் பிரச்சனைகளை அவர்களது கட்சிக் காரர்களே கேட்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? அல்லது 45 ஆண்டுகால திமுக அரசியலில், தேர்தல் அறிக்கைகளில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள் அப்படித்தானே! )
〰〰〰
//நீதிமன்றமும் கூட மக்கள் போராட்டம் எங்கு தீவிரமாக நடக்கிறதோ, அங்கு மட்டும்தான் அவர்கள் இறங்கி வர வேண்டியிருக்கிறது. தீர்ப்பளிக்க வேண்டியிருக்கிறது. உத்திரவாதம் என்பது எங்கே மக்கள் கோரிக்கை நிறைவேறாமல் விட மாட்டார்களோ அங்கு மட்டும்தான் இருக்கிறது.//
(அப்புறம் ஓட்டுக்கட்சிகளை உத்திரவாதப்படுத்துவது எதற்காக? )
〰〰〰
//பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது போலீசு தாக்குதல் நடந்தது. அதை எதிர்த்து கட்சிகளுடைய கண்டனம் வந்தது. தி.மு.க முதல் எல்லா கட்சிகளும் கண்டித்தார்கள். அது தேடிப் பெற்ற ஆதரவு அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.//
(மகஇக வுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதற்கான கண்டிப்பு இல்லை. ஜெயலலிதாவை எதிர்க்கவேண்டும் என்றமனநிலையிலிருந்து உருவானது)
〰〰〰
//இந்த கண்டனங்கள் எல்லாம் ‘டாஸ்மாக் என்ற கொடுமையிலிருந்து மக்களை விடுவிப்பது., அதன்பால் இந்த அரசு கொண்டிருக்கிற அணுகுமுறை’ இதன் காரணமாக எழுந்ததே தவிர, அது ம.க.இ.க.விற்குக் காட்டப்பட்ட சலுகையுமல்ல.//
(அப்புறம் எதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும். )
〰〰〰
//பார்ப்பன பாசிசத்துக்கு எதிராகப் பல போராட்டங்களை நாங்கள் நடத்தியிருக்கிறோம். அந்தப் போராட்டங்களிலெல்லாம் தலித் அமைப்புகள் உள்ளிட்ட பலரும் கூட்டு நடவடிக்கையாக எங்களோடு கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை ஈடுபடுத்தியிருக்கிறோம். இது ஒரு உண்மை.//
(தாது மணல் கொள்ளைக்கு எதிராக அதிமுக காரர்கள் கலந்து கொண்டார்கள் என்று கூறியிருக்கிறீர்களே ! தொண்டர்களைப் பய்படுத்துவது என்பதும் கட்சித் தலைமையைப் பயன்பபடுத்துவது என்பதும் ஒன்றா?)
〰〰〰
//இதே கருவறை நுழைவுப் போராட்டத்தை ஆதரித்து முரசொலி பல தலையங்கங்களை எழுதியிருக்கிறது. விடுதலை எழுதியிருக்கிறது. வேறு சில பத்திரிகைகள் எழுதியிருக்கிறார்கள். இவையெல்லாம் கோரிப்பெற்றவையல்ல. அவர்களுடைய அரசியல் நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் எழுதியவை. //
(என்ன அரசியல் நிலைப்பாடு? குடும்ப அரசியலா? ஊழல் அரசியலா? பிழைப்பு வாதமா ? அதையும் கொஞ்சம் கூறலாமே!)
〰〰〰
// யாரோடு கூட்டு நடவடிக்கைக்குப் போகலாம், போகக்கூடாது என்பதில் விமர்சனம் செய்பவர்களுக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது. தேர்தல் அரசியல் கட்சிகள் யாரோடும் எந்தக் காலத்திலும் கூட்டு நடவடிக்கைக்குப் போகக்கூடாது என்பது எங்களது நிலைப்பாடு அல்ல. அவ்வாறு கூறுவது உண்மைக்கு மாறானது. //
(உண்மைதான், மார்க்சிய- லெனினிய கட்சிகள், தமிழ்தேச அமைப்புகள், உண்மையான பெரியாரியக் கட்சிகள், போன்றவற்றோடு கூட்டு நடவடிக்கைக்குப் போகக்கூடாது என்பதுதான் நிலைப்பாடு )
〰〰〰
//அப்படி ஒரு மக்கள் அடித்தளமோ, அல்லது நேர்மையான செயல்பாடோ இல்லாதவர்களுடன் ஒரு 50 பேர், 60 பேரை சேர்த்துக்கொண்டு கூட்டு நடவடிக்கை என்று ஈடுபடுவது கோரிக்கையையும் நிறைவேற்றாது. மக்களை ஏமாற்றுவதாகும். //
(காங்கிரசும், திமுகவும், தேமுதிகவும், கீ.வீரமணியும் உங்களின் மார்க்சியப் பார்வைக்கு நேர்மையானவர்களாக தெரிகிறார்களா?)
〰〰〰
//சிலர், ‘சிறிய அமைப்பு, அடக்குமுறை வந்திருக்கிறது. போய் பல கட்சிகளிடம் ஆதரவு கேட்கிறார்கள் இதில் என்ன தவறு இருக்கிறது’ என்ற கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் ஒன்றும் தப்பில்லைதான். ஆனால், இது அப்படி கேட்கப்பட்ட ஆதரவு அல்ல. இது செயலுக்கான ஒரு அறைகூவல். //
(திமுகவின் செயல் வீரர்கள் தெருவில் இறங்கி டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போட வருவார்கள் என்ற உங்களது நம்பிக்கை உறுதியானதுதான்)
〰〰〰
//மற்றபடி அவர்கள் வந்தால் டாஸ்மாக்கை மூடுவார்கள், அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று யார் ஒருவருக்காகவும் ஓட்டு கேட்கப்போவதில்லை. நாங்கள் தேர்தல் புறக்கணிப்பைத்தான் பேசப் போகிறோம், பேசுவோம். //
(டாஸ்மாக் ஒழிப்பு கூட்டமைப்பில் திமுக இருந்தால், திமுகவிற்கும் ஓட்டுப்போடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்வீர்களா?)
〰〰〰
//இது போலி ஜனநாயகம் என்பது மட்டுமல்ல, சொல்லிக்கொள்கிற ஜனநாயகம், ஜனநாயகம் என்கிற அமைப்பில் உள்ள நிறுவனங்கள், அவர்களே சொல்கிற சட்டங்கள், மரபுகள், விதிமுறைகள், நெறிகள் இவை எதையும் கடைப்பிடிக்காமல் தோற்று விட்டன, திவாலாகி விட்டன, காலாவதியாகி விட்டன என்பதைத்தான் மக்கள் அதிகாரம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.//
(தோற்றுவிட்ட கட்டமைப்புக்குள் இருக்கும் எதிர்க்கட்சிகளை கட்டமைப்புக்கு வெளியே கொண்டுவரும் முயற்சியா இது!)
〰〰〰
//சட்டம் ஒழுங்கை காக்கும் காவலர்கள்தான் எல்லா குற்றங்களிலும் முன்வரிசையில் இருக்கிறார்கள். ஆர்.கே நகர் தேர்தலையோ, ஸ்ரீரங்கம் தேர்தலையோ எடுத்துக் கொள்ளுங்கள். //
(ஆரம்பித்து வைத்த திருமங்களம் தேர்தல் பற்றி ஏதாவது சொல்லுங்க)
〰〰〰
//அந்தக் கட்சித் திருடன். இந்தக் கட்சி திருடன். அவன் சரியில்லை. இவன் சரியில்லை. என்று தீர்ப்பளிப்பதற்கு ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் நிறைய பேர் இருக்கிறார்கள்.//
(அதனால் தான் 2G ஊழலைப் பற்றி பேசாமல், அதில் நடக்கும் பார்ப்பன சூழ்ச்சி பற்றி பேசுகிறீர்களோ?)
〰〰〰
// அ.தி.மு.க. தொண்டன் உள்ளிட்டு. ஆற்றுமணல் கொள்ளைக்கெதிரான போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்கள். எங்களோடு சிறைக்கு வந்திருக்கிறார்கள், அந்தத் தொண்டனை நம்புவதா, அல்லது எதையும் செய்யாமல் எதற்கும் வராமல், எல்லோர் மீதும் தீர்ப்பளிப்பவர்கள் மீது நம்பிக்கை வைப்பதா?//
(கலைஞர் திமுகவின் தொண்டர்தான் ஏற்றுக்கொள்காறோம்.)
〰〰〰
//யார் தன்னை செயலில் ஈடுபடுத்திக் கொள்கிறார்களோ அவர்கள்தான் சமூக மாற்றத்தை சாதிப்பார்கள்.
தங்களையும் மாற்றிக் கொள்வார்கள். //
(மக்கள் நலனுக்காக காங்கிரசும், திமுகவும், தேமுதிகவும் சமூக மாற்றத்திற்காக செயலில் ஈடுபடுபவர்களா? தங்களையும் மாற்றிக் கொள்வார்களா?)
〰〰〰
//எந்த சமூக மாற்றமும் வேண்டாம். கூடாது, இருப்பதே நன்றாக இருக்கிறது. இந்த வாழ்க்கையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்று கருதுகின்ற பிரிவினர்தான் “எல்லோரும் திருடன் சார் யாரும் நம்பாதீங்க” என்று பேசுபவர்கள். //
(மற்ற மா -லெ அமைப்புகள், தமிழ் தேசிய அமைப்புகளைத்தானே சொல்கிறீர்கள்!)
〰〰〰
// இந்த கூட்டு நடவடிக்கைக்கு போனோம் என்பதனால் அல்ல, பொதுவிலேயே அரசியல் விமர்சனங்களை ம.க.இ.க. எழுதும் போது, பல பேர் சொல்வதுண்டு, “ ஆமா, இப்போ இப்படி பேசுவீங்க. நாளைக்கு அதிகாரத்துக்கு நீங்க வந்தபிறகு இல்ல தெரியும்” என்பார்கள்.//
(அதிகாரத்துக்கு வந்த பிறகு இல்லை. இப்பவே அப்படியும் இப்படியும்தானே பேசுகிறீர்கள்!)
〰〰〰
//தமிழ்பாடும் கோரிக்கை இருக்கிறது. சுயமரியாதைத் திருமணம் தொடர்பான கோரிக்கை இருக்கிறது. இந்தக் கோரிக்கைகளை எடுத்துக்கொண்டு நான் கோபாலபுரம் போகட்டுமா? போயஸ் தோட்டம் போகட்டுமா?//
(கோபாலபுரமே போங்கள், புரட்சியை நடத்தி முடிக்கலாம்! காந்தியையும், நேருவையும் சிபிஐ பயன்படுத்தி சமூக மாற்றத்தை செய்தார்களே! அதேபோல் செய்யலாம்!)
〰〰〰
// பா.ஜ.க. மதுவிலக்குனு பேசுகிறது. அது எத்தகைய கொடூரமான பாசிசக்கட்சி. பா.ஜ.க.வும் காங்கிரசும் ஒண்ணுதான் என்று பேச முடியுமா?//
( இந்திராவின் எமர்ஜென்சி, ராஜீவின் ஈழப்படுகொலை, மசுதி இடிப்பின்போதும், குஜராத்தின் முஸ்லிம் படுகொலையின் போதும் ஈழத்தமிழர் படுகொலையின்போதும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, டெல்லி சீக்கியர் படுகொலை, போபால் படுகொலை, மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை இவைகளையெல்லாம் வைத்து காங்கிரசை பிஜேபியுடன் ஒப்பிடமுடியாதுதான் !)
〰〰〰
// இந்த வேறுபாடுகளை அங்கீகரிக்காமல் இருப்பதும் எல்லோர் மீதும் சேற்றை வாரி இரைப்பதும் அ.தி.மு.க.வுக்கு வழங்கப்படும் ஆதரவு. அல்லது பா.ஜ.க.வுக்கு வழங்கப்படும் ஆதரவு ஆகும்.//
(மதவெறிக்கு எதிராக காங்கிரசுக்கு ஆதரவு என்று சிபிஎம் சொன்னபோது, சிபிஎம் மீது சேற்றை வாரி இரைத்தீர்களே ! அப்படியானால் நீங்கள் யாருக்கு ஆதரவு கொடுத்ததாக அர்த்தம்!)
〰〰〰
//டாஸ்மாக் என்ற இந்த பேரபாயம் தமிழகத்தை எப்படி சூழ்ந்திருக்கிறது என்பதை தயவு செய்து சிந்தித்துப் பார்த்து, அதை மூடுவதற்கு வேறு வழிகள் இருக்கின்றனவா, இதைவிடச் சிறந்த இதைவிட விரைவான, இதைவிட சாத்தியமான வேறு வழிகள் இருக்கின்றனவா என்பதை யோசித்துப் பார்த்து அதன் பிறகு, உங்கள் கருத்தை உங்கள் தீர்ப்பை அதன் மீது வழங்குங்கள்.//
(சிபிஐ காந்தி காலத்து காங்கிரசை நம்பியது, சிபிஎம் மன்மோகன் சிங் காங்கிரசை நம்பியது, நீங்கள் இளங்கோவன் காலத்து காங்கிரசையும், கூடுதலாக தரகு முதலாளித்துவ கும்பக் கட்சியான திமுகவைம் நம்புகிறீர்கள். சரியான மார்க்சிய லெனினிய வழிதான். விரைவில் புரட்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்!!!…)
அருமையான பதிவு.வாழ்த்துக்கள் சுமன்ராஜ்.
திமுக தலைவர் கருணாநிதிய சந்தித்த போது தோழ்ர் ஜெகத்ரட்சகனும் தோழர் டி ஆர் பாலுவும் காய்ச்சிய சர்பத் பரிமாறப்படவில்லை என்று நம்புக்றோம் கருணாநிதியின் மது ஒழிப்பு என்பதே ஏமாற்று வேலை என்று சொல்லிவிட்டு அவருடன் கூட்டு நடவடிக்கையில் டாஸ்மாக்கை ஒழிக்க போகிறோம் என்பது முரண்பாடாக தெரியவில்லையா இருந்தாலும் உங்களின் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் வெல்லட்டும் வாழ்த்துகிறோம் எங்க பகுதியில் அது போல டாஸ்மாக் ஒழிப்பு போராட்டம் நடந்தால் சொல்லுங்கள் கலந்து கொள்ளுகிறேன்