privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்ஜே.என்.யு மாணவர்கள் மீது மோடி கும்பலின் பாசிசத் தாக்குதல் !

ஜே.என்.யு மாணவர்கள் மீது மோடி கும்பலின் பாசிசத் தாக்குதல் !

-

காவிக்கும்பலுக்கு கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட குறிப்பிட்ட காரணங்கள் ஏதும் தேவைப்படாது என்பது தான் வரலாறு. சான்றாக இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்சில் நீங்கள் பாகிஸ்தானுக்கு கைதட்டினால் தேசத்துரோகி ஆகிவிடுவீர்கள் என்பது நிச்சயம். இதே கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை ஆதரித்தால் நீங்கள் துரோகி அல்ல! அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகிற்கு அடிமைத்தனத்தை காட்டும் காவிக் கும்பல், பாக்கிடம் மட்டும் ஆண்டைத்தனம் காட்டும். காரணம், பாக்கை வைத்து இந்தியாவில் முசுலீம்களை அடிமைகளாக்குவது அவர்களின் இலட்சியம். முசுலீம் அல்லாதவர்கள் யாரெல்லாம் இந்த இலட்சியத்தை எதிர்க்கிறார்களோ அவர்களே ஆர்.எஸ்.எஸ்-ன் ஜன்ம பகைவர்கள்.

ஏ.பி.வி.பி காலிகள்
ஏ.பி.வி.பி காலிகள்

கிரிக்கெட் மேட்ச் மட்டுமல்ல, நீங்கள் மாட்டுக்கறி தின்றாலோ, முசபார்நகர் குஜராத் கலவரத்தை அம்பலப்படுத்தி பேசினாலோ, பார்ப்பனிய வேதக் கலாச்சாரத்தை எதிர்த்தாலோ, சமஸ்கிருத எதிர்ப்பு பேசினாலோ, கலப்பு மணம் புரிந்தாலோ, சாதி வர்ண ஒழிப்பு பேசினாலோ, காதலித்தாலோ, நாத்திகராக கம்யுனிஸ்டாக இருந்தாலோ, பெரியார் கொள்கையைப் பரப்பினாலோ, அம்பேத்கரை பார்ப்பனியத்தை எதிர்க்கும் ஆயுதமாக காட்டினாலோ, சிறுபான்மை மதத்தவரைச் சேர்ந்தவராக இருந்தாலோ, இந்துத்துவத்தை எதிர்க்கும் தலித்தாக இருந்தாலோ, அல்லது பஸ்தார் சட்டிஸ்கர் பழங்குடியினராக இருந்தாலோ, அமெரிக்க எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பைப் பேசினாலோ, இந்துப் பார்ப்பனியத்தில் பெண்களுக்கு வழிபடும் உரிமை குறித்து பெண்களே போராடினாலோ, ஏன் அறிவாளியாக பத்திரிக்கையாளனாக விருதைத் திருப்பி அளிப்பவனாக இருந்தாலோ அவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் காலிகளின் வரையறைப்படி தேசத்துரோகிகள்.

afzal-guru-protest
காஷ்மீர் மக்களின் விடுதலை போராட்டத்துக்கு ஆதரவான நிகழ்ச்சி பற்றிய போஸ்டர்

ஆக இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் காவி வானரங்களைத் தவிர தேசபக்தனாக திகழ்வதற்குண்டான வாய்ப்புகள் யாருக்குமே கிடையாது. இதுதான் இன்றைய நிலைமை.

ஆகையால் தான் சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டது; புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர்; ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலா தொங்கவிடப்பட்டார்; இப்பொழுது ஒட்டுமொத்த டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமும் பாசிச பயங்கரவாதத்திற்கு திறந்துவிடப்பட்டிருக்கிறது.

12-02-2015 அன்று (இந்தியாவின் கூட்டு மனசாட்சியை நிறைவேற்றுவதற்காக) தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மூன்றுமாண்டு நினைவுக் கூட்டத்தை ஜே.என்.யு பல்கலைக் கழகத்தின் சில மாணவர் அமைப்புகள் நடத்தியிருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில் ‘பாகிஸ்தான் வாழ்க! இந்தியா ஒழிக!’ என்று மாணவர்கள் கோசமிட்டதாக ஏ.பி.வி.பி குண்டாந்தடிகள் வழக்கம் போல பா.ஜ.க எம்.பி.க்கு தெரிவிக்க, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி போன்றோரின் நேரடி தலையீட்டின் கீழ், டில்லி காவல்துறை தேசத்துரோகம் மற்றும் இந்தியாவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல் போன்ற வழக்குகளை குற்றம் சாட்டப்படுவர் யார் என்று பெயரைச் சொல்லாமலேயே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக தொடுத்திருக்கின்றனர்.

கன்னையா குமார்
டெல்லி காவல்துறை மப்டி உடையில் ஜே.என்.யு. பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணையா குமாரை தேசத்துரோக குற்றச்சாட்டில் கடத்திச் சென்றிருக்கிறது.

இப்படிச் செய்வதன் மூலம் யார் மீது வேண்டுமானாலும் தேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தலாம் என்பதற்கு நிருபணமாக டெல்லி காவல்துறை மப்டி உடையில் ஜே.என்.யு. பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணையா குமாரை தேசத்துரோக குற்றச்சாட்டில் கடத்திச் சென்றிருக்கிறது.

மேலும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் ஏ.பி.வி.பி காலிகளின் துணையோடு, டெல்லி காவல் துறை பல்கலைக் கழக மாணவர்களை சூறையாட வெறிகொண்டு அலைந்து வருகிறது. நள்ளிரவில் பெண்கள் விடுதியைச் சோதனையிடுவது, அடையாள அட்டை வைத்திருக்காத மாணவர்களை சித்ரவதை செய்து பொய் கேசு போட முயல்வது, காஷ்மீரிலிருந்து வரும் ஒட்டு மொத்த மாணவர்களையும் கைது செய்ய முனைவது, இதுவரை மோடி அரசின் பாசிசக் கொள்கைகள் மற்றும் இந்துத்துவ கும்பலின் அரசியலையும் அம்பலப்படுத்திய மாணவர்களையும் குறி வைத்து வேட்டையாடுவது என ஆர்.எஸ்.எஸ் மோடி கும்பல் பல்வேறு மாணவர் பிரச்சனையில் அம்பலப்பட்ட பிறகும் கூட அடிபட்ட நரியாக ஊளையிட்டுக் கொண்டிருக்கிறது.

காவிக் கும்பலின் பாசிச பக்தி
காவிக்கும்பல் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புரளிகளைக் கிளப்பி மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி அரசின் தோல்வியை மூடிமறைத்து அகண்ட பாரதக் கனவை நிறைவேற்ற முயன்று வருகிறது.

கடந்த ஐந்து நாட்களாக நாட்டில் நடைபெற்று வரும் பிரச்சாரம் என்ன? ஏதோ பாகிஸ்தான் ஆதரவு மற்றும் இந்தியாவிற்கு எதிரான முழக்கங்களுக்கத்தான் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் மாணவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதாக இந்துத்துவ பாசிச கும்பல் சமூகத்தின் பொதுப்புத்தியில் தன்னை இருத்த தவியாய் தவிக்கிறது. ஆனால் நிதர்சனத்தில் காவிக்கும்பல் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புரளிகளைக் கிளப்பி மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி அரசின் தோல்வியை மூடிமறைத்து அகண்ட பாரதக் கனவை நிறைவேற்ற முயன்று வருகிறது.

சான்றாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அப்சல் குரு நினைவுக் கூட்டம் நடத்திய உமர் எனும் மாணவர் லஷ்கர்-ஈ-தொய்பாவுடன் நேரடித் தொடர்புடையவர் என்று ஒரே போடாக போட்டார். ராஜ்நாத்சிங்கின் இந்த புரளி, அரசின் புலனாய்வுத்துறையாலேயே நிராகரிக்கப்பட்டு இருப்பது ராஜ்நாத்சிங்கின் களவாணித்தனத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

இரண்டாவதாக, பாகிஸ்தானில் இருக்கும் ஹபீஸ் செய்யது நேரடியாக ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவு தருவதாக கட்டியமைக்கப்பட்ட செய்தியும் ஹபீஸின் பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் டிவிட்டர் கணக்கும் போலியானது என்பதையும் வெளிச்சத்திற்கு வந்தபிறகு ஆர்.எஸ்.எஸ் கும்பலின் நோக்கமும் அம்பலப்பட்டுவிட்டது. அதே போல பல்கலையில் “பாக் வாழ்க” கோஷம் போட்டவர்கள் ஏ.பி.வி.பியினரே என்று ஆம் ஆத்மி வீடியோ மூலம் அம்பலப்பட்ட பிறகும் அவாள் கூட்டம் ஊளையிடுவதை நிறுத்தவில்லை.

bjp-thug-mla-op-sharma-thrashing-students
மாணவரை தாக்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ குண்டன் ஓ.பி.சர்மா

இந்துத்துவ கும்பல் இச்சந்தர்ப்பத்தை கணிசமாக தன்பக்கம் அறுவடை செய்யவும் தவறவில்லை. டில்லியில் தற்பொழுதைய நிலையில் ஜே.என்.யு பல்கலைக்கழகத்திற்கு வெளியே இரயில் நிலையங்கள் உட்பட சங்கர்பரிவாரங்கள் ஜே.என்.யு மாணவர்களை தேசத்துரோகி எனக் குற்றம் சாட்டி தாக்கி வருகின்றனர்.

பாட்டியாலா உயர்நீதி மன்றவளாகத்தில் வக்கீல்கள் என்ற போர்வையில் நுழைந்த இந்துத்துவ வானரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, டி.என்.ஏ நாளிதழ், எகனாமிக்ஸ் டைம்ஸ், கைரலி தொலைக்காட்சி, ஐ.பி.என் குழும நிருபர்களைத் தாக்கியிருக்கின்றனர். ஜே.என்.யு மாணவர் தலைவர் கண்ணையா குமாருக்கு ஆதரவாக கோர்ட் வளாகத்திற்கு வந்த மாணவர்களையும் தேசத்துரோகிகள் என்று இந்துத்துவக் கும்பல் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதையும் காவல்துறை வேடிக்கை பார்த்ததையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் அலோக் சிங் வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்.

hitler-modi
வெள்ளைக் காரனின் காலை நக்கிப் பிழைக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பாசிச அரசியல்

பத்திரிக்கையாளர்கள் மற்றும் மாணவர்கள் மீதான வன்முறைத்தாக்குதல் தனி வழக்காக பதியப்பட்டிருக்கும் நிலையில் பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் இந்துத்துவ வானரங்கள், மாணவர் தலைவர் கண்ணையா குமாரைத் தாக்கியிருக்கிறது. உச்சநீதி மன்ற கெடுபிடி உத்தரவுகள்! எல்லாம் மோடியின் பாசிச பயங்கரவாதத்திற்கு முன்னால் கழிவறைக்காகிதமாக நிற்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

வெள்ளைக்காரனின் காலை நக்கிப் பிழைத்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் தான் இன்றைக்கு மிகவும் ஆபாசமாக தேசபக்தி கூச்சல் போட்டுவருகிறது என்பதை எவர் ஒருவரும் அறிவர். கடந்த வாரத்திற்கு முன்புதான் அமெரிக்க இந்தியாவிற்கு டேவிட் ஹெட்லி வாக்குமூலத்தை பரிசாக வழங்கிவிட்டு பாகிஸ்தானிற்கு எப்-1 ரக ஹெலிகாப்டர்களை வழங்கியது.

ஹெட்லியின் வாக்குமூலத்திற்கு பின் பாகிஸ்தான்-ஐ.எஸ்.ஐ உளவுப்பிரிவின் சதி வெளியில் வந்துவிட்டதாக பிரச்சாரம் செய்த மோடி கும்பல், அமெரிக்கா அதே ஐ.எஸ்.ஐ பாகிஸ்தானுக்கு ஹெலிகாப்டர் வழங்கும் என்று தெரிந்தவுடன் தேசபக்தி கூச்சலை நவதுவராங்களிலும் இருந்தும் கசியவிடாமல் அடக்கி வாசித்தது.

ராஜ்நாத்சிங்
அமெரிக்கா சம்பந்தப்பட்டிருப்பதால் பாகிஸ்தான், பாரதமாதாவின் பாவாடையைக் கூட உருவுவதை வேடிக்கை பார்த்த பாரதிய ஜனதாக் கூட்டம்தான் இன்றைக்கு வந்தே மாதரம், தேசத் துரோகம் என்று உறுப்பறுந்த விலங்காக ஜே.என்.யு பல்கலைக் கழக விவகாரத்தில் கத்திக்கொண்டிருக்கிறது.

அமெரிக்கா சம்பந்தப்பட்டிருப்பதால் பாகிஸ்தான், பாரதமாதாவின் பாவாடையைக் கூட உருவுவதை வேடிக்கை பார்த்த பாரதிய ஜனதாக் கூட்டம்தான் இன்றைக்கு வந்தே மாதரம், தேசத் துரோகம் என்று உறுப்பறுந்த விலங்காக ஜே.என்.யு பல்கலைக் கழக விவகாரத்தில் கத்திக்கொண்டிருக்கிறது.

இந்துத்துவக்கும்பலின் இந்தக் கூச்சலுக்கு இசுலாமிய மதஅடிப்படைவாதமும் ஓரளவு தீனிபோட்டு வளர்த்திருக்கிறது. இந்துமதவெறியர்களை எதிர்க்கும் இடதுசாரி, ஜனநாயக சக்திகளை பலவீனப்படுத்தும் வேலையினை இசுலாமிய அடிப்படைவாதிகள் செய்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் நுகத்தடியை சாதி இந்துக்களும் சூத்திர தலித்துகளும் ஒவ்வொரு நாளும் சுமந்துகொண்டிருக்கும் பொழுது மதச்சிறுபான்மையினர்கள் இரட்டை நுகத்தடியை சுமந்து கொண்டிருக்கின்றனர் என்பதுதான் இந்திய வாழ்நிலை.

இந்திரா-மோடி
அறிவிக்கப்படாத அவசரநிலை

சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற ஓட்டுப்பொறுக்கி போலி கம்யுனிஸ்டுகளின் ஓட்டாண்டித்தனம் ஜே.என்.யு விசயத்தில் இந்து-இந்தி-இந்தியா எனும் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகண்ட பாரதக் கனவையே உயர்த்திப்பிடிக்கிறது. இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்பதை மறைக்கும் இந்த ஓட்டாண்டிகள் ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவாக நிற்பதாக காட்டிக்கொள்வது கடைந்தெடுத்த அரசியல் பிழைப்புவாதமாகும். மேலும் இவர்கள் தமது சந்தர்ப்பவாதத்தைக் கொண்டு இந்துமதவெறியர்களை எதிர்ப்பது உண்மையில் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு பலத்தையே கொண்டு சேர்க்கிறது.

மறுகாலனியாதிக்க கொள்கைகளை விரைந்து தீவிரப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பார்ப்பனிய இந்துத்துவத்தையும் இசுலாமிய மதவெறி அமைப்புகளின் அடிப்படைவாதத்தையும் முறியடிப்பதற்கு இவர்கள் முன்வைக்கும் தீர்வு என்ன? பாராளுமன்றத்தில் ஜே.என்.யு விவகாரத்தைக் கிளப்பி “மோடியே பதில் சொல்! மவுனத்தைக் கலை!” “அமித் ஷா பதில் சொல்! ஸ்மிருதி இராணி பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேள்” என்று கேள்வி எழுப்புவார்களாம்.

பா.ஜ.க எம்.எல்.ஏ ஓ.பி சர்மா சி.பி.எம் கட்சித் தொண்டரை பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் நேரடியாக தாக்கி இதுதாண்டா பாசிசம் என்று எடுத்துக்காட்டுகிற பொழுது பாராளுமன்றத்தில் பாசிஸ்டுகளிடமே சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகள் நியாயம் கேட்பார்கள் என்ற நிலைப்பாடு புழுத்து நாறும் புண்ணுக்கு புணுகு போடுவதைப்போன்றது.

சங்கப் பரிவாரங்களின் தேசபக்தி கூச்சல் பாராளுமன்றத்தில் தீர்க்கப்படவேண்டியதல்ல. ஏனெனில் தேசபக்தி, “அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமா”கத்தான் இருக்கிறது. பாசிஸ்டுகளின் செயல் எந்திரம் இது. இது தான் இன்றைக்கு ஜே.என்.யு விவகாரத்தில் துலக்கமாக வெளிப்பட்டிருக்கிறது.

ஜே.என்.யு ஆசிரியர்கள், மாணவர்களின் கண்டன போராட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆக இந்த மதவாத அமைப்புகளின் அடித்தளத்தையே அடித்து நொறுக்காதவரை ஜே.என்.யு மட்டுமல்ல நம் ஒவ்வொருவர் மீதும் தேசத் துரோக வழக்கு பாயத்தான் செய்யும். இதை நாட்டின் உண்மையான தேசபக்தர்களான உழைக்கும் மக்கள் உணர வேண்டிய தருணம் இது.

– இளங்கோ

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க