privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கJNU - கம்யூனிசம் : புரட்சியா , தாராளவாதமா ?

JNU – கம்யூனிசம் : புரட்சியா , தாராளவாதமா ?

உண்மையில் காவிகளுக்கும் கூட பெருந்தன்மையோடு சமவாய்ப்பளிக்கும் லிபரல் ஜனநாயகத்தின் விவாதச் சூழலை ஆர்.எஸ்.எஸ் கும்பலால் கையாள முடியவில்லை. பாசிசத்தின் அகராதியில் ’விவாதம்’ ’கருத்துப் பரிமாற்றம்’ ‘ஜனநாயகம்’ போன்ற சொற்களுக்கு இடமேது?

-

வினவு செய்தியாளர் குழு ஜே.என்.யு சென்று திரும்பி ஒரு மாதத்திற்கும் மேல் ஆகி விட்டது. அப்போது கண்ணையா குமார் சிறையிலும் உமர் காலித், அனிர்பான் உள்ளிட்ட தோழர்கள் தலைமறைவாகவும் இருந்தனர். நாங்கள் திரும்பி வந்ததற்கு இடைப்பட்ட நாட்களில் கண்ணையா பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டார். தலைமறைவாக இருந்த உமர் காலித் உள்ளிட்ட தோழர்கள் சரணடைந்து பின் அவர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். தற்போது கண்ணையா குமார் மீது அபராதமும், உமர், அனிர்பான் மீது தற்காலிக நீக்கமும், இன்னம் 14 மாணவர்கள் மீது அபராதமும் விதித்துள்ளனர். பல்கலையின் உயர்மட்ட விசாரணைக் குழு இந்த அறிவிப்பைச் செய்துள்ளது. ஆனால் பெரும்பாலான மாணவர்களும், ஆசிரியர்களும் இந்த அயோக்கியத்தனமான தீர்ப்பை கடுமையாக கண்டித்திருக்கின்றனர்.

கண்ணையா குமார்
கண்ணையா குமார்

சிறையில் இருந்து விடுதலையான கண்ணையா குமாரின் உரையின் மேல் பலரும் பலவாறாக பொருள் விளக்கம் எழுதி விட்டனர். அவரது உரையில் இருந்து ஒரு சில பகுதிகளை இங்கே சுட்டிக் காட்டுவது இந்த இறுதிக் கட்டுரையின் பேசு பொருளுக்கு நெருக்கமானதாக இருக்கும் என்று கருதுகின்றோம்.

“எனது சிறை அனுபவத்திலிருந்து சிலவற்றைச் சொல்ல நினைக்கிறேன். இது எனது சுயவிமரிசனம். ஒரு வேளை நான் சொல்லப் போவது உங்களுக்கும் பொருந்தும் என்று கருதினீர்களென்றால் அதே உணர்வோடு புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஜே.என்.யுவைச் சேர்ந்த நமது உரையாடல்கள் வடிகட்டப்பட்டு தூய்மையானதாகவும், நாகரீகமானதாகவும் உள்ளன. ஆனால் நாம் சாதாரண மக்களுக்குப் புரியாத சிக்கலான வார்த்தைகளைக் கொண்டு நமது வாதங்களைக் கட்டமைக்கிறோம். இது மக்களின் தவறல்ல. அவர்கள் நேரிடையானவர்கள். நேர்மையானவர்கள். நிச்சயம் அவர்களால் விசயங்களைப் புரிந்து கொள்ள முடியும். நம்மால் தான் அவர்களுக்கு விசயங்களை எளிமையான முறையில் விளக்க முடியவில்லை”

”எனக்கு ஏ.பி.வி.பியினர் மேல் எந்த வருத்தமும் இல்லை. ஏனெனில், வெளியில் இருக்கும் ஏ.பி.வி.பியினரை விட வளாகத்திற்குள் இருக்கும் ஏ.பி.வி.பியினர் பகுத்தறிவு மிக்கவர்கள்”

“எனது உரையைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஏ.பி.வி.பி நண்பர்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் சுப்பிரமணியம் சுவாமியை இங்கே அழைத்து வாருங்கள். நாங்கள் அவரோடு விவாதிக்கத் தயாராக இருக்கிறோம்”

ஜே.என்.யு பேசும் அரசியலும்வெகு மக்களும்

கண்ணையா குமாரின் உரையிலிருந்து சுட்டப்பட்ட மேற்கோள்களில் இறுதியாக உள்ளவைகளை முதலில் தெளிவுபடுத்திக் கொள்வோம்.

ஜே.என்.யுவில் தற்போது நடந்து வரும் மொத்த சர்ச்சைகளுக்கும் வித்திட்ட பிப்ரவரி 9ம் தேதி நிகழ்வுகளின் சூத்திரதாரியே ஏ.பி.வி.பி தான். அப்சல் குரு அநியாயமாக தூக்கிலிடப்பட்ட பின் ஒவ்வொரு வருடமும் ஜே.என்.யு வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஏ.பி.வி.பி அறியாத ஒன்றல்ல. எனினும், இந்த ஆண்டு திட்டமிட்ட ரீதியில் வெளியிலிருந்து ரவுடிகளையும் பார்ப்பன ஊடகங்களையும் அழைத்து வந்ததோடு, பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரத்து செய்தவர்களும் ஏ.பி.வி.பியினர் தான்.

ரோகித் வெமுலா
ரோகித் வெமுலா

ஜே.என்.யு என்றில்லாமல் ஜே.என்.யு விவகாரத்தைத் தொடர்ந்து நாடெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் கருத்துரிமைக்கு எதிராக கொலைவெறித் தாக்குதல்களை ஏ.பி.வி.பி கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஜனவரி மாதம் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ”தி வயர்” இணையப் பத்திரிகையின் ஆசிரியரான சித்தார்த் வரதராஜன் நிகழ்த்த இருந்த உரையைத் தடுத்து அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்தது, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலா படுகொலை, கண்ணையா குமாரை அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள விடாமல் தடுத்தது, தில்லி மதரசா மாணவர்கள் சிலரை “பாரத் மாதா கீ ஜேய்” சொல்லுமாறு கட்டாயப்படுத்தி கொலை வெறித்தாக்குதல் நடத்தியது, ஜார்கண்ட் மத்திய பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஜே.என்.யு பேராசிரியர் நிகழ்த்த இருந்த உரை ஒன்றைத் நிர்வாகத்தின் துணையோடு தடுத்தது, ஜே.என்.யு பேராசிரியர்கள் நிவேதிதா மேனோன், பாணினி உள்ளிட்டோரை தேச துரோகிகளாக சித்தரித்துக் கொண்டிருப்பது – இது கடந்த சில மாதங்களில் மட்டும் ஏ.பி.வி.பி தீவிரவாத கும்பல் கட்டவிழ்த்து விட்டுள்ள தாக்குதல்களின் ஒரு சிறிய பட்டியல் தான்.

கருத்து சுதந்திரம், ஜனநாயகம் போன்றவற்றின் மேல் வெறி நாய்களைப் போல் பாய்ந்து பிடுங்கிக் கொண்டிருக்கும் ஏ.பி.வி.பியினரை நோக்கிய கன்னையா குமாரின் அணுகுமுறையைப் புரிந்து கொள்வதற்கு அவரது உரையின் முதல் பகுதியை விளங்கிக் கொள்வது அவசியம்.

மக்கள் அரசியல் vs ஜே.என்.யு அரசியல்:

மாணவர் சங்கங்களின் அரசியல், பொதுவாக பல்கலைக்கழகங்களின் அரசியல் போக்குகள் மற்றும் குறிப்பாக ஜே.என்.யுவின் அரசியல் விவகாரங்களை கடந்த பல ஆண்டுகளாக உன்னிப்பாக கவனித்து வரும் ஜே.என்.யுவில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் ஒருவரிடம் உரையாடினோம்.

தில்லி பல்கலைகழகம்
தில்லி பல்கலைகழகம்

“தோழர், தில்லியில் உள்ள இரண்டு முக்கிய பல்கலைக்கழகங்களில் செல்வாக்கு செலுத்தும் அரசியல் போக்குகள் குறித்து சொல்லுங்கள்”

”தில்லி பல்கலைக்கழகத்தில் எப்போதும் ஏ.பி.வி.பிக்கும் காங்கிரசின் என்.எஸ்.யு.ஐக்கும் நேரடியான போட்டி இருக்கும். இந்தப் போட்டிகளில் ஏ.பி.வி.பி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றது. தில்லி பல்கலைக்கழகத்தில் இடதுசாரி மாணவர்கள் சங்கங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே செல்வாக்கிழந்து விட்டன”

“தில்லி பல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி பெற்று வரும் வெற்றியை எப்படிப் புரிந்து கொள்வது?”

”தில்லி பல்கலைக்கழகத்திற்கும் ஜே.என்.யு.விற்கும் சில வேறுபாடுகள் உள்ளன. முதலில் விவாதச் சூழல். இங்கே எமது அரசியல் விவாதச் சூழலில் இடதுசாரி அரசியலுக்கு மிக முக்கியமான இடமுண்டு. அதே போல் இந்த வளாகத்தின் கலாச்சாரத்தில் ஐரோப்பிய பாணி லிபரல் ஜனநாயக விழுமியங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. தில்லி பல்கலைக்கழகத்தின் சூழல் வேறு. பெரும்பாலும் நிலவுடைமைச் சமூக சூழலில் இருந்து வரும் மாணவர்கள் தில்லி பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த பின்னும் பெரிதளவில் கலாச்சார தளத்தில் மாறுதலுக்கு உள்ளாவதில்லை. தனது பிற்போக்கான கருத்து நிலைகளை எந்த மாற்றமும் இன்றி தொடர தில்லி பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு எந்த தடைகளும் இருப்பதில்லை. மேலும், பல்கலைக்கழக தேர்தல்களை ஏ.பி.வி.பியும் சரி காங்கிரசு சங்கமும் சரி, சாதி கணக்குகளின் அடிப்படையிலேயே அணுகுகின்றன. குஜ்ஜார் மற்றும் ஜாட் சாதியினரின் நன்மதிப்பை பெறும் சங்கங்கள் சுலபத்தில் வெற்றி பெற்று விடலாம். ஏ.பி.வி.பி தில்லி பல்கலைக்கழக தேர்தல்களில் தொடர்ந்து வென்று வருவதற்கு இது ஒரு முக்கியமான காரணம்”

”சரி, ஜே.என்.யு வளாகத்தில் ஏ.பி.வி.பியின் செல்வாக்கு எப்படி உள்ளது? வெளியே ஊடகங்களின் கருத்துப்படி பார்த்தால் ஜே.என்.யு ஒட்டுமொத்தமாக இடதுசாரிகளின் கோட்டை என்றாகிறது…”

”இந்த வளாகத்தை இடதுசாரிகளின் கோட்டை என்று பீற்றிக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. கடந்த செப்டெம்பரில் நடந்த மாணவர் தேர்தலில் மொத்தமுள்ள 30 கவுன்சிலர்களில் ஏ.பி.வி.பியினர் 11 இடங்களில் வென்றுள்ளனர். நான்கு முக்கிய இடங்களுக்கான போட்டியில் ஒன்றில் ஏ.பி.வி.பி வென்றுள்ளது. இந்த வெற்றிகளின் பின்னே அவர்களுக்கு ஆயிரக்கணக்கான ஓட்டுக்கள் கிடைத்துள்ளது என்பதையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்”

”எனினும், ஜே.என்.யுவின் பாரம்பரியத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், தற்போது இந்துத்துவ பாசிஸ்டுகள் ஜே.என்.யுவின் மேல் தொடுத்திருக்கும் தாக்குதல்களை எதிர்கொள்வதைப் பொருத்தமட்டில் இந்த வளாகம் ஒரே அணியில் நின்று அவற்றை எதிர் கொள்கிறது என்று புரிந்து கொள்ளலாம் அல்லவா?”

“அப்படியும் சொல்ல முடியாது. தற்போதைய பிரச்சினையில் இங்கே உள்ள ஊழியர்கள் சங்கம் (Non teaching Staff association) ஏ.பி.வி.பிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதே போல், வளாகத்தில் தோட்ட வேலை மற்றும் இதர உடல் உழைப்பு வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் சங்கம் ஏ.பி.வி.பி நடத்திய பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்”

“இடதுசாரி மாணவர்களுக்கு தொழிலாளர்களே ஆதரவு தரவில்லையா? கேட்பதற்கு அதிர்ச்சியாக இருக்கிறதே? நீங்கள் அவர்களோடு எந்தவிதமான தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லையா?”

”தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்று சொல்ல முடியாது. ஊழியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை நாங்கள் தான் அவர்களுக்கு போராடிப் பெற்றுக் கொடுத்தோம். அதே போல் தொழிலாளிகளின் கூலிப் பிரச்சினைகளுக்கும், இங்கே உள்ள தாபாக்களுக்கு வழங்கப்படும் மானியத்திற்காகவும் நாங்கள் போராடி இருக்கிறோம்”

“நான் கேட்பது வேறு. பொருளாதார கோரிக்கைகள் தவிர்த்து அவர்களோடு அரசியல் ரீதியான தொடர்புகளை நீங்கள் ஏற்படுத்தியிருக்கிறீர்களா? அல்லது அவர்களை அரசியல் ரீதியில் வென்றெடுக்க முயற்சித்துள்ளீர்களா?”

நாங்கள் உரையாடிக் கொண்டிருந்த தோழர் ஒரு கணம் திகைத்து பேசுவதை நிறுத்தினார். அருகிலிருந்த மற்ற தோழர்களும் அவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சில நிமிட அமைதிக்குப் பின்,

”அவ்வாறான ஒரு தேவை இருப்பதையே நாங்கள் இது வரை பரிசீலிக்கவில்லை என்பது தான் உண்மை.. சொல்லப் போனால் நாங்கள் அந்த துறையில் தோற்றுவிட்டதாகவே எடுத்துக் கொள்ளலாம்”

”சரி நீங்கள் அவ்வாறான ஒரு உரையாடலுக்கு முயற்சிக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்.. ஆனால், உழைக்கும் வர்க்கம் என்ற முறையில் இவர்கள் இடதுசாரி மாணவர் சங்கங்களுக்கே நெருக்கமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா. எப்படி ஏ.பி.வி.பிக்கு ஆதரவான நிலையை அவர்கள் எடுக்கிறார்கள்?”

”உண்மை தான். ஆனால் நீங்கள் அவர்களது கோணத்திலிருந்து பார்க்க வேண்டும். அவர்கள் பெரும்பாலும் நிலவுடைமைச் சமூகப் பின்னணியில் இருந்து வருகின்றவர்கள். அவர்களது வருமானத்தைக் கொண்டு அவர்கள் பிள்ளைகளுக்கு முறையான பள்ளிக் கல்வி அளிப்பதற்கே போராட வேண்டும். பெரும்பாலும் அவர்களது பிள்ளைகள் பள்ளி இறுதியோடு படிப்பிலிருந்து விலகிக் கொள்பவர்களாக இருப்பார்கள். இங்கே வளாகத்தில் மாணவர்களின் உலகமோ வண்ணங்களால் நிறைந்தது. ஆராய்ச்சி மாணவர்கள் தாபாக்களில் அமர்ந்து மணிக்கணக்கில் விவாதங்களில் ஆழ்ந்திருப்பார்கள். அவை அனைத்தும் அரசியல் விவாதங்கள் என்று சொல்ல முடியாது – பல நேரங்களில் தங்களது ஆராய்ச்சிகள் குறித்தும் கூட பேசிக் கொள்வார்கள். அடுத்து மாணவர்களின் அரசியல் செயல்பாடுகள்.

JNU வளாகம் நன்றி: தி இந்து
JNU வளாகம்
நன்றி: தி இந்து

இதையெல்லாம் பார்க்கும் தொழிலாளர்களும் ஊழியர்களும் என்ன நினைப்பார்கள்? படிப்பதற்காக அரசு செலவு செய்யும் காசையெல்லாம் தின்று தீர்த்து விட்டு இப்படிக் கூத்தடிக்கிறார்கள் என்றே அவர்களுக்குத் தோன்றும். ஆனால், மாணவர்களின் படிப்பு சார்ந்த ஆராய்ச்சிகளுமே கூட சமூக அடிப்படைகளில் இருந்தும் அது சார்ந்த செயல்பாடுகளில் இருந்துமே கிளைத்தெழுகின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது. இங்கே பொலிடிகல் சயன்ஸ், அறிவியல் துறை, சமூகவியல் துறை, சட்டம் போன்ற பிரிவுகளில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் அரசியல் பேசுவம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிக இயல்பானது தானே?

இப்போது யோசித்துப் பார்க்கும் போது, எமது அரசியல் செயல்பாடுகள் இதே மக்கள் அங்கம் வகிக்கும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கானதே என்பதை அவர்களுக்கு விளங்கச் செய்யும் முயற்சிகளில் தவறி விட்டோம் என்று புரிகின்றது. அந்த வகையில் அடித்தட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பேசுவதில் இருந்து நாங்கள் மிகவும் விலகி இருக்கிறோம்”

”இந்த விவகாரங்களுக்குப் பின் வளாகத்திற்குள் ஏ.பி.வி.பியின் நிலை எப்படி இருக்கும்?”

”சொல்லப் போனால் மோடியும் அமித்ஷாவும் அவசரப்பட்டு விட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஏ.பி.வி.பி வளர்ந்து வந்த வேகத்தைப் பார்த்தால் அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளில் அவர்கள் வளாகத்தில் அசைக்க முடியாத அரசியல் சக்திகளாக வளர்வதற்கான எல்லா சாத்தியங்களும் இருந்தன. ஆனால், பா.ஜ.க அவரசப்பட்டு மூக்கை நுழைத்ததில் வளாகத்திற்குள் ஏ.பி.வி.பி தனிமைப்பட்டு விட்டது”

”அப்படியென்றால் ஏ.பி.வி.பியின் வளர்ச்சி தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ள அதே நேரம், எதிகாலத்தில் அவர்கள் வளர்வதற்கான சமூக அடிப்படை அப்படியே இருக்கின்றது என்று எடுத்துக் கொள்ளலாமா?”

“முழுமையாக அப்படிச் சொல்லி விட முடியாது. ஏனெனில், இப்போது எழுந்திருக்கும் விவாதத்தின் போக்கில் அந்த சமூக அடிப்படை சர்வ நிச்சயமாக உடைந்து போவதற்கான எல்லா சாத்தியங்களும் எழுந்து வருகின்றன. ஏ.பி.வி.பியின் சில முன்னணியாளர்களே அமைப்பிலிருந்து விலகிய செய்திகளைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா”

மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கும் ‘ஜெண்டில்மேன்’ அரசியல் குறித்த கண்ணையா குமாரின் சுயவிமரிசனத்தை இவ்விடத்தில் மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகின்றோம். உண்மையில் இடதுசாரி அரசியல் என்பதற்கும் மக்களுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு?

ஜே.என்.யு : ’இடதுகளும்லிபரல் ஜனநாயகமும்

ஜே.என்.யு வளாகத்தில் நிலவுவது ஒரு வகையான லிபரல் ஜனநாயகச் சூழல். அந்தச் சூழலில் எல்.ஜி.பி.டி இருக்கிறது. ஏ.பி.வி.பி இருக்கிறது, அம்பேத்கரியவாதிகள் இருக்கின்றனர், ஆம் ஆத்மி இருக்கிறது – தவிற, ஆம் ஆத்மியின் அரசியலைப் பேசும் பிற குழுக்கள் இருக்கின்றன காங்கிரஸ் இருக்கிறது. இவர்களுக்கு மத்தியில் இடதுசாரிகளும் இருக்கின்றனர் (இவர்களின் ’இடது’ தன்மை குறித்து தனியே விளக்க வேண்டும்).

மேலே குறிப்பிட்டுள்ள சிந்தனைப் போக்கோடு இன்னும் பல வண்ணங்களில் பல அமைப்புகளைச் சேர்ந்த தனிநபர்கள் இருக்கிறார்கள். பல ஒருநபர் ’அமைப்புகள்’ இருக்கின்றன. இப்படியான ஒருநபர் ‘அமைப்புகள்’ கொண்ட கூட்டமைப்புகள் இருக்கின்றன. இவர்கள் எல்லோருக்கும் ஏதோவொரு அரசியல் கண்ணோட்டம் இருக்கின்றது. அந்தக் கண்ணோட்டங்கள் அனைத்துக்கும் அந்த வளாகத்தில் இடம் இருக்கிறது. எந்த பிரச்சினையும் இல்லாமல் “அல்லாஹு அக்பரும்” “பாரத் மாதா கீ ஜெய்யும்” “நக்சல்பாரி லால் சலாமும்” அக்கம் பக்கமாக ஒலிக்கும்.

இந்தத் தொடரின் முதல் பகுதியில் அனைத்து அமைப்புகளின் கூட்டம் நடந்த போது அதில் “முழக்கங்கள் எழுப்பும் உரிமை” குறித்து நடந்த விவாதம் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தோம். அந்த விவாதத்தின் போது மாவோயிஸ்ட் சார்புள்ள அமைப்பைச் சேர்ந்த ஒரு மாணவர்,

”தோழர், ‘நக்சல்பாரி லால் சலாம்’ நமக்கு எப்படி புரட்சிகரமான முழக்கமோ அதே போல் தான் பாரத் மாதா கி ஜெய் ஏ.பி.வி.பிக்கும், அல்லாஹு அக்பர் முசுலீம்களுக்கும் புரட்சிகரமான முழக்கங்கள். எனவே, அவரவர் அவரவரது முழக்கங்களைச் சொல்லிக் கொள்ளட்டுமே?” என்று மிக சீரியசாக வாதிட்டுக் கொண்டிருந்தார்.

இப்படி ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் ஒன்றுக்கும் மேற்பட்ட “சரியானவைகள்” இருக்க முடியும் என்பதும், இருக்க வேண்டும் என்பதும் ஜே.என்.யு வளாகத்தின் அரசியல் சூழல் அம்மாணவர்களுக்குப் பயிற்றுவித்துள்ளது. இதன்படி ஏ.பி.வி.பியின் அரசியல் மக்கள் விரோதமானது எனவே எதிர்க்கப்பட்டு வேரோடு கிள்ளியெறியப்பட வேண்டியது என்கிற கண்ணோட்டத்திற்கு பதில் “இன்னுமொரு” மாற்று தத்துவம் என்கிற அளவில் சம உரிமை கொடுக்கப்படுகிறது.

ஜே.என்.யு மாணவர்களுக்குத் தெரிந்த கம்யூனிசம் கடுமையான வாழ்க்கைச் சூழலின் பின்னணியில், ஒரு போராட்டக் களத்தில் அறிமுகமான ஒன்றல்ல. அல்லது மக்களின் துன்ப துயரங்களால் சலனமுற்ற, சமூகத்தின் விடுதலைக்கான தத்துவ தேடலின் விடையும் அல்ல. அது ஒரு படிப்பறையில், ஒரு அறிவியல் பூர்வமான விவாதம் நிலவும் சூழலில் அறிமுகமானது. முற்போக்கு அறிவுஜீவிகள் வலிந்து காட்டிக் கொள்ளும் கம்யூனிச தோற்றப்பாடும் (Pretentions) ஜே.என்.யு வளாகத்தில் மாணவர்களின் மத்தியில் செல்வாக்கோடு இருக்கும் கம்யூனிச அரசியலுக்கும் இடையிலான தூரம் மிகவும் குறைவு.

புதிய தாராளவாதக் கொள்கைகளின் வெறிபிடித்த ஆதரவாளர்களும் மோடியை முன்மொழிந்தவர்களுமான ஆளும் வர்க்க அறிவுத்துறையினரே கூட கோமாதா, பாரதமாதா, விநாயகனின் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற அபத்தங்கள் எல்லை மீறிச் செல்வது கண்டு நெளிகிறார்கள். அவ்வாறிருக்கையில் முற்போக்கு அறிவுஜீவிகள் எனப்படுவோர், (முற்போக்கின் விழுக்காடு எவ்வளவு குறைவாக இருந்தாலும்) இதனை எதிர்ப்பதில் வியப்பில்லை. ஏனென்றால், சங்க பரிவாரம் அறிவுஜீவிகளின் அடிப்படையான அடையாளத்தையே குலைத்துப் போட்டு விடும் அபாயத்தைக் கொண்டிருக்கின்றது.

இன்னொரு புறம் இடதுசாரி புரட்சிகர அரசியல் செயலுக்கு அழைக்கின்றது. துன்ப துயரமான வாழ்க்கை நிலைமைகளை எட்டி நின்று வேடிக்கை பார்ப்பதை விடுத்து உள்ளே இறங்கித் தீர்வுக்காக போராட வலியுறுத்துகின்றது. இருக்கும் நிலையில் இருந்து காலச் சக்கரத்தை முன்னோக்கிச் சுழற்றும் அசுரத்தனமான உடல் மற்றும் மனோ உழைப்பைக் கோருகின்றது. உடன் விளைவாக ஒட்டுமொத்தமான அரசுப் பொறியமைவின் விரோதத்தை சம்பாதித்தும் கொடுக்கின்றது.

லிபரல் ஜனநாயகம் இந்த இரண்டு ’அபாயங்களுக்கும்’ மிகப் பாதுகாப்பான தீர்வை வழங்குகின்றது. முன்னே போய் ’அபாயத்தை’ வரவழைத்துக் கொள்ள வேண்டியதுமில்லை, பின்னே போய் அசிங்கப்பட வேண்டியதுமில்லை. நிலவுகின்ற அமைப்பு வழங்கியுள்ள வசதிகளை துய்த்துக் கொண்டே முற்போக்கு பேசிக் கொள்ளலாம். சோசலிசம் பேசலாம். கம்யூனிசம் பேசலாம். எல்லாம் பேச்சு பேச்சாக இருக்கும் வரைதான். அதைத்தாண்ட நேரும்போதுதான் பிரச்சினையே.

எம்மிடம் பேசிய விஷ்மய், ஜே.என்.யு வளாகத்திற்குள் காவிக் குரங்குகள் புகுந்து அலப்பறையைக் கூட்டிய பின் ஏற்பட்ட மாற்றமாக ஒன்றைக் குறிப்பிட்டார். அதுவரை இடதுசாரி மாணவர் சங்கங்கள் ஒழுங்கு செய்த உரையாடல் நிகழ்வுகளுக்கு சிலபத்து பேர்கள் வந்து கொண்டிருந்த நிலை மாறி சில ஆயிரங்களில் மாணவர்கள் திரண்டு கொண்டிருக்கிறார்கள் என்றார். அதே போல் வேறு அமைப்புகளைச் சேர்ந்த முன்னணியாளர்களும் அதுவரை அரசியலற்ற போக்கை கடைப்பிடித்து வந்த மாணவர்களும் இடதுசாரி அமைப்புகளின் கூட்டங்களில் அதிகம் தென்படத் துவங்கியுள்ளனர் என்றார்.

அதே போல் சுயநிர்ணய உரிமை, காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் வெறியாட்டங்கள் மற்றும் பிப்ரவரி 9ம் தேதியன்று எழுப்பப்பட்டதாக சொல்லப்படும் முழக்கங்கள் குறித்த கேள்விகளுக்கு சி.பி.எம், சி.பி.ஐ மாணவர் சங்கங்களைச் சேர்ந்த முன்னணியாளர்கள் மட்டுமின்றி சி.பி.எம் (எம்.எல் – விடுதலை) கட்சியைச் சேர்ந்த AISA அமைப்பின் முன்னணியாளர்களும் ஒரே விதமாக பதிலளித்தனர். அதாவது, இந்த விவகாரங்களில் தமது நிலைப்பாடு தங்களது கட்சியின் நிலைப்பாட்டுடன் ஒத்தது என்றனர். எனினும், தமது நிலைப்பாட்டுக்கு மாறான முழக்கங்களை (காஷ்மீர் விடுதலையை ஆதரித்து) எவரேனும் எழுப்பினால் அப்படி எழுப்புவதற்கான உரிமையை தாங்கள் ஆதரிப்பதாக தெரிவித்தனர்.

liberal_democracyAISF அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் “தோழர் நக்சல்பாரி லால் சலாம் என்று முழக்கமிடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்றார். கூடவே, பாரத் மாதா கீ ஜெய் என்கிற முழக்கத்தை தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்கிறார். அதுவும் இருக்கட்டும் இதுவும் இருக்கட்டும் என்கிற கூட்டுக்கலவையான அரசியலே ஜே.என்.யு வளாகத்தில் பிப்ரவரி ஒன்பதாம் தேதி வரை செல்வாக்கோடு இருந்தது.

லிபரல் ஜனநாயகம் வழங்கியிருந்த இந்த ‘பாதுகாப்பை’ பிப்ரவரி ஒன்பதாம் தேதியோடு காலாவதியாக்கி இந்திய சமூகத்திற்கு மிகப்பெரிய “வரலாற்று சேவை”யாற்றி இருக்கிறார் திருவாளர் மோடி. இதற்கு மேல் ஒவ்வொருவரும் இந்தப்பக்கமா, அந்தப்பக்கமாக என்று தெளிவாகச் சொல்ல வேண்டிய கட்டாயத்தை திணித்துள்ளது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

நீங்கள் தேசபக்தரெனில் பாரத் மாதாகி ஜெய் சொல்லுங்கள், சிரீ சிரீ நடத்தும் ஆன்மீக குத்தாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள், அதானிக்கு சல்லிசாக அள்ளி வழங்கப்படும் வளங்கள் நாட்டின் வளர்ச்சியின் அடையாளங்கள் என்று உரக்கச் சொல்லுங்கள், கவுச்சி தின்னாதிருங்கள், கவுச்சி தின்பவர்களை பாகிஸ்தானுக்கு ஓடச் சொல்லுங்கள், வேதகாலத்திலேயே வானத்தில் ரிவர்ஸ் கியர் போடும் விமானம் இருந்ததை கேள்விகளின்றி ஏற்றுக் கொள்ளுங்கள், எப்படியும் மீட்கப்பட்ட கருப்புப் பணத்தில் தலைக்கு பதினைந்து லட்சம் கிடைக்கும் என்று திரும்பத் திரும்ப சொல்லுங்கள், மோடி பிரதமரானபின் ஒரு முறை கூட பாகிஸ்தான் எல்லை மீறி வந்து தாக்கவில்லை என்று நம்புங்கள். முருகனின் பன்னிரு கைகளும் யானைமுகத்தானும் புராண பாரதத்தின் பிளாஸ்டிக் சர்ஜரி அதிசயங்கள், சஞ்சையன் திருதிராஷ்டிரனுக்கு மகாபாரத போர்க்கள காட்சிகளை சாடிலைட் தொலைக்காட்சியில் பார்த்து நேரடி வர்ணனை செய்திருக்கிறான், நாட்டை ஆள்வதற்கு அறிவு தேவையில்லை 56 இன்ச் மார்பு தான் தேவை, செல்பி எடுத்துக் கொண்டால் பெண் சிசுக் கொலைகள் தடுக்கப்படும், ஸ்வச்ச பாரத் வரி கட்டிய பின் நாடெங்கும் சாம்பிராணி மணக்கிறது…. என்று நம்புங்கள்.

இதில் ஏதாவது ஒன்றைக் குறித்து சந்தேகம் தெரிவித்தீர்கள் என்றாலும் நீங்கள் தேச துரோகிகளின் பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள். காவிகளுக்கும் கூட பெருந்தன்மையோடு சமவாய்ப்பளிக்கும் லிபரல் ஜனநாயகத்தின் விவாதச் சூழலை ஆர்.எஸ்.எஸ் கும்பல் அங்கீகரிக்கவில்லை. பாசிசத்தின் அகராதியில் ’விவாதம்’ ’கருத்துப் பரிமாற்றம்’ ‘ஜனநாயகம்’ போன்ற சொற்களுக்கு இடமேது?

ஜே.என்.யு வளாகத்தை தங்களுடைய மிக மோசமான எதிரிகளாக உருமாற்றிக்கொண்ட பெருமை ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கே உரித்தானது. மற்றொருபுறம், ஜே.என்.யு மாணவர்கள் இந்த வரலாற்றுத் தருணம் வழங்கியுள்ள பொன்னான வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாசிசத்துடனான முரண்பாடு தீர்மானகரமான ஒரு கட்டத்திற்குள் நுழைந்து வருகிறது. அப்போது, ”முழக்கங்கள் எழுப்பும் உரிமையை ஆதரிப்பது” என்ற பெயரில் பாசிசத்தின் கருத்துரிமையை ஆதரிப்பதோ, ”எங்களது பாரத மாதா சோனி சோரி”, “எங்களது தேசியத்தில் பெரியாரும் அம்பேத்கரும் இருக்கிறார்கள்” , ”நாங்களும் இறையான்மையையும், அரசியல் சாசனத்தையும் உயர்த்திப் பிடிப்பவர்கள் தான்” என்றெல்லாம் சொல்லி பாசிசத்துடனான மோதலை சாமர்த்தியமாகத் தவிர்ப்பதோ இனி இயலாது. பாதுகாப்பான எல்லைகளுக்குள் நின்று கொண்டு பாசிசத்தை எதிர் கொள்ள முடியாது.

லிபரல் ஜனநாயக கருத்துரிமை மயக்கங்களிலிருந்து விடுபட்டு, பௌதிக சக்தியாக நம் முன்னே எழுந்து நிற்கும் பாசிசத்துக்கு எதிராக போராடும் மக்களோடு நேரடியாக கைகோர்க்கும் நேரம் வந்து விட்டதை ஜே.என்.யு உணரத் துவங்கியுள்ளது. லிபரல் ஜனநாயகவாதிகளை உண்மைக்கு நெருக்கமாக அழைத்து வந்ததற்குரிய பெருமையை நாம் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கே வழங்க வேண்டியிருக்கிறது.

– வினவு செய்தியாளர்கள்

முந்தைய பாகங்கள்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க