privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதமிழகமெங்கும் மே தினப் போராட்டங்கள் - பாகம் I

தமிழகமெங்கும் மே தினப் போராட்டங்கள் – பாகம் I

-

1. கோவில்பட்டி

விவசாயம் – நெசவு – சிறுவணிகம் – சிறுதொழில்களை அழித்து காண்டிராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவுகட்டுவோம்! என்ற முழக்கத்தை முன்வைத்து மே1 தொழிலாளர் தினத்தன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் ஒன்றிணைந்து தீப்பெட்டித் தொழிற்சாலைகள் நிறைந்துள்ள கோவில்பட்டியில் பழைய பேருந்து நிலையம் (பயணிகள் விடுதி முன்பு) ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

அரசை அம்பலப்படுத்தும் முழக்கங்கள் அதிர்வோடு ஆரம்பித்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சார்ந்த தோழர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மய்யம் மதுரை மாவட்டச் செயலர் தோழர் லயனல் அந்தோணிராஜ் சிறப்புரை ஆற்றினார். அதில் இந்த அரசுக்கட்டமைப்பு எவ்வாறு தோற்றுப் போய், மக்களுக்கு எதிரானதாய் மாறியுள்ளது என்பதையும், தேர்தல் மூலம் தீர்வு காண முடியாது என்பதையும், இதற்கு மாற்றாக மக்கள் அதிகாரத்தை நிறுவ வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினார். இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சார்ந்த தோழர். முத்துக்குமார் நன்றியுரை ஆற்றினார். சுற்றியிருந்த மக்களுக்கு ஆயிரக்கணக்கான பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவில்பட்டி

2. திருச்சி

லகத் தொழிலாளர் தினமான மே தினத்தில் புரட்சிகர சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கீழ் இயங்கும் சுமைப்பணித் தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக சங்க கொடியேற்று விழா நடைபெற்றது.

சங்கத்தின் செயலர் இரத்தினம் தலைமையில் நடைபெற்ற விழாவில் மக்கள் கலை இலக்கியக் கழக புரட்சிகர பாடகர் தோழர் கோவன் புரட்சிகர பாடல் பாடி விழாவை துவக்கி வைத்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலர் தோழர் சுந்தரராசு கொடியேற்றி சிறப்புரையாற்றினார். ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் செயலர் தோழர் மணலிதாஸ், சுமைப்பணித் தொழிலாளர்கள் பாதுகாப்புச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் ராஜா வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.

ம.க.இ.க மையக் கலைக்குழுத் தோழர்கள் புரட்சிகரப் பாடல்கள் பாடி மேநாள் எழுச்சியின் அவசியத்தை உணர்த்தினர்.

சங்கத்தின் துணைத்தலைவர் தோழர் முத்துக்கருப்பன் இறுதியாக நன்றியுரை கூறி விழாவை நிறைவு செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி

3. கம்பம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுக்காவின் கூடலூர் நகரில்  அனுமதி பெறாமல் கொடியேற்றமும்,பேரணியும் நடத்தப்பட்டது. முன்னதாக,தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி அனைத்துக் கட்சிகளின் கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டிருந்தது. டாஸ்மாக் முற்றுகைக்காக போஸ்டர் ஒட்டியதற்கு கூடலூர்,தேவாரம் போடி கிளைகளின் தோழர்கள் மீது வழக்கு போட்டுள்ளது தேர்தல் கமிசன் போலிசு. கூடலூரில் விவிமு போஸ்டர்களை கிழிப்பதையே வாடிக்கையான தொழிலாக வைத்திருக்கிறார் எஸ்.ஐ. இவ்வளவு தொடர் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், உலகத் தொழிலாளர்களின் உரிமை தினமான மே நாளில், அனுமதியில்லாமால் கொடியேற்றுவது, வரும் போலிசின் அடக்குமுறையை சந்திப்பது என உணர்வுபூர்வமாக  பெண்கள், சிறுவர்கள்,உட்பட சுமார் 60 பேர் திரண்டனர்.

முன்தயாரிப்புகளை மோப்பம் பிடித்த போலிசும்,உளவுப் பிரிவும், முதல் நாளே கிளைத் தோழர் இராஜேந்திரனை.“தேர்தல் நேரத்தில் முன் அனுமதியில்லாமல் நீங்கள் கொடியேற்றுவது தவறு” என்று மிரட்டியது..”இது உலக தொழிலாளர் தினம்.தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.நாங்கள் நிச்சயம் கொடியேற்றுவோம்” என்று பதிலளித்து விட்டு வேலைகளை தொடர்ந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் தோழர்கள் தற்காலிக கொடிமரத்துடன் திரண்டுவந்தனர். போடி கிளையின் தோழர் கணேசன் விண்ணதிரும் முழக்கங்களிடையே கொடியேற்றினார். தோழர்களின் உறுதியைக்கண்ட போலிசு, இரு உளவுப்பிரிவு போலிசை மட்டும் அனுப்பிவிட்டு ஒதுங்கிக் கொண்டது.

பின்னர் பேரணியாக முழக்கமிட்டு சென்ற தோழர்கள் ஒரு மண்டபத்தில் கூடி, அனைத்து தோழர்களும் பங்கேற்கும் வகையிலான நிகழ்ச்சிகளை நடத்தினர். மக்கள் அதிகாரம் தோழர் மோகன் மே தின உரையாற்றினார். மதிய உணவு ஏற்பாட்டுடன் மாலை மணிவரை நிகழ்ச்சிகள் நடந்ததன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தேனி, கம்பம்

4. சென்னை – பூவிருந்தவல்லி

காண்டிராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவுகட்டுவோம் ! என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பகுதியை சேர்ந்த தோழர்கள் மற்றும், மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த சென்னை கிளை தோழர்களும், வேலூர் பகுதியை சேர்ந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகம், ஆகிய அமைப்புகளின் தோழர்கள், ஆதரவாளர்கள் குடும்பத்தினருடன் செஞ்சட்டையுடன் திரண்டு பூவிருந்தவல்லி பகுதியில் மே நாள் பேரணி மற்றும் குமணன்சாவடி பகுதியில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பூவிருந்தவல்லி, அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளி அருகில் கூடிய நூற்றுக்கணக்கான தோழர்களுடன் துவங்கிய மே நாள் பேரணியை மாலை 4.45 மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் முகிலன் தலைமையேற்று துவங்கி வைத்தார். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சென்னை கிளை கலைக்குழுவின் விண்ணதிரும் பறையிசை முழங்க, தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி பேரணி துவங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான தோழர்களுடன் பாட்டாளி வர்க்கத்திற்கே உரிய ஒழுங்குடன் விண்ணதிரும் முழக்கங்களுடன், செங்கொடிகள், முழக்க தட்டிகள், பதாகைகளுடனும் வீறுநடைப் போட்டு சென்ற செஞ்சட்டை பேரணியை அப்பகுதி மக்கள் வியந்து பார்த்தனர். பேரணியில் எழுப்பப்பட்ட முழக்கங்களினால் ஈர்க்கப்பட்ட மக்கள் கடை வீதிகளில் நின்றும், வீடுகளின் மாடியில் நின்றும் நாம் எழுப்பும் முழக்கங்களை எழுப்பி ஆதரித்தனர். குமணன்சாவடி பேருந்து நிலையத்தில் பறையிசையுடன் முழங்கப்பட்ட முழக்கங்களுடன் பேரணியை நிறைவு செய்து ஆர்ப்பாட்டம் துவங்கப்பட்டது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சென்னையின் நுழைவாயிலான குமணன்சாவடி பேருந்து நிலையம் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும் பகுதியாகும். அப்பகுதியில் பேருந்திற்காக காத்திருந்த மக்களுடன், பேரணியாக வந்த தோழர்களும் இணைந்து அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. மேற்கண்ட அதே தலைப்பில் மாலை 5.35 மணிக்கு துவங்கிய ஆர்ப்பாட்டத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தோழர் சிவா தலைமையேற்று நடத்தினார். தனது தலைமையுரையில் மோடி அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் மறுகாலனியாக்க நடவடிக்கைகளை தீவீரப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்களை எல்லாம் கார்ப்பரேட் நலனுக்காக திருத்தி வருகிறது. இதைப் பற்றி எல்லாம் ஓட்டு கட்சிகளுக்கு எவ்வித கவலையும் இல்லை. எந்த ஓட்டு கட்சியும் தொழிலாளர் உரிமைகள் பறிபோவதை குறித்து வாய் திறந்துக் கூட பேசுவதில்லை. தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளை மீட்டெடுக்க புரட்சிகர அமைப்புகளுடன் இணைந்து போராடுவதை தவிர வேறு வழியில்லை என்று தனது தலைமையுரையில் கூறினார்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
சிறப்புரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின், மாநில பொருளாளர் தோழர் விஜயகுமார் மோடி அரசின் வளர்ச்சி என்பது கார்ப்பரேட்களின் வளர்ச்சியே என்பதை அம்பலப்படுத்தியும், இன்றைய மறுகாலனியாக்க சூழலில் நாட்டில் நிலவும் பஞ்சம், வறுமை, இயற்கை வளங்கள் அழிப்பு, வேலைப் பறிப்பு ஆகிய அத்தனைக்கும் முதலாளித்துவமே காரணம் என்றும், திரிசூலத்தின் மீது நம்பிக்கை கொண்ட மோடி அரசு திரிசூல கொள்கையாக காண்டிராக்ட்மயம், கார்ப்பரேட்மயம், தொழிற்சங்கங்கள் இல்லா நிலையை உருவாக்குவதையே தனது கொள்கையாக வரித்துக் கொண்டு செயல்படுகிறது என்பதை பல்வேறு உதாரணங்களோடு விளக்கி கூறினார், உழைக்கும் மக்களின் உரிமைகளையும், மானியங்களையும் வெட்டி எல்லா வர்க்கங்களையும் கார்ப்பரேட்களுக்கு காவு கொடுக்கின்ற வேலையை செய்கிறார் மோடி, ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் அழுகி நாறுகிறது, இதனை ஒருபோதும் மக்கள் பயன்படுத்த இயலாது, இந்த அரசுகட்டமைப்பை அடித்து நொறுக்கி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் மக்கள் அதிகாரத்தை படைப்பதே தீர்வு என்பதை தொழிலாளி வர்க்கம் இந்த மே நாளில் சூளுரைக்க வேண்டும் என கூறினார்.

இறுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் சரவணன் நன்றியுரையாற்றினார். பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் மே நாள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க