அரசு ஆரம்ப பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வகுப்பெடுக்க மத்திய பிரதேச பா.ஜ.க அரசு ஒப்புதல் அளிக்க உள்ளது. இதன் மூலம் அம்மாநில ஆரம்ப பள்ளிகள் இனி அதிகாரபூர்வ ஷாகாக்களாக மாற்றப்படும்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வித்யாபாரதி என்ற பெயரில் நாடெங்கிலும் பல்லாயிரக்கணக்கான கல்வி நிலையங்களை நடத்திவருகின்றார்கள். இந்த பார்ப்பனிய மதராசாக்களில் கலாச்சார கல்வி என்ற பெயரில் பார்ப்பன இந்து மத வேதங்கள், புராணங்களை கொண்டு மாணவர்களை மூளை சலவை செய்து வருகிறார்கள். தற்போது வித்யாபாரதி குழுமத்தின் மற்றொரு துணை அமைப்பான சரஸ்வத் சிசு மந்திர் மூலம் மத்திய பிரதேச அரசு பள்ளிகளில் நுழைகிறது ஆர்.எஸ்.எஸ்.
பத்திரிக்கை செய்திகளின்படி இனி ”சரஸ்வதி சிசு மந்திர்” ஆசிரியர்கள் ம.பி அரசு ஆரம்ப பள்ளிகளில் வகுப்பெடுக்க அனுமதிக்கப்படுவார்கள். இது போன்று மாநிலம் முழுவதும் 1000 ஆசிரியர்கள் ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து மாநில அரசு அரம்ப பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப் படுவார்கள்.
இது குறித்து வித்யா பாரதியின் மத்திய பாரத் தலைவர் ராம்குமார் பவ்சார், “நாங்கள் பல சன்ஸ்கார் கேந்திராக்களை (கலாச்சார பள்ளிகள்) நடத்திவருகிறோம். பள்ளி முடிந்த பிறகே மாணவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். தற்போது அதை பள்ளிகூட நேரத்திலேயே அரசின் அனுமதியுடன் கற்றுதர இருக்கிறோம். கணிதம், மொழி போன்றவைதான் நோக்கமாக இருந்தாலும் அரசு அனுமதித்தால் சரஸ்வதி சிசு மந்திர் போன்று கலாச்சார நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்துவோம்.” என்று அறிவித்துள்ளார்.
பைலட் பிராஜெக்ட் எனப்படும் சில முன்னுதாரண திட்டத்திற்கு பிறகு அடுத்த இரு மாதங்களில் இம்முறை அம்மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும்.
பள்ளிகளில் பார்ப்பனிய இந்து மதத்தை புகுத்த பல முறைகளில் முயற்சித்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. அரசின் மூலம் மேலிருந்து பாடத்திட்டங்களை மாற்றுவது, கல்விக் கொள்கைகளை வடிவமைப்பது, வரலாற்றை திரிப்பது போன்ற வேலைகள் மூலம் பார்ப்பனிய கருத்துக்களை மாணவர்களிடம் திணித்து வருகின்றது. சான்றாக பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட ஆணையிடுவது; குஜராத்தில் அறிவியல் பாடத்தில் வேதங்களில் கார், மகாபாரதத்தில் ஸ்டெம் செல்கள் என கற்பிப்பது; மத்திய பிரதேச அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே சூரிய நமஸ்காரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என பலவற்றை குறிப்பிடலாம்.
தனது திட்டத்திற்கு எதிராக பார்ப்பனியத்தை எதிர்க்கும் மாணவர்கள்/ஆசிரியர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குகின்றனர். ஹைதராபாத் பல்கலைகழகத்தின் தலித் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா, அவருக்காக போராடிய பேராசிரியர்கள் மீதான அடக்குமுறை முதல் ஜே.என்.யூ வரை இதற்கு பல சான்றுகள் இருக்கின்றன.
மேலிருந்து பார்ப்பனியத்தை தினிக்கும் அதேவேளையில் நாடெங்கிலும் பல ஆயிரக்கணக்கான பள்ளி கல்லூரிகளை ஆர்.எஸ்.எஸ் நடத்திவருகிறது. வித்யா பாரதியின் கணக்குபடியே நாடெங்கிலும் 12,364 பள்ளிகளும், 42 கல்லூரிகளும் ,12,001 சேவா கேந்திராக்களும் என 1,46,643 ஆசிரியர்களோடு 34,52,615 மாணவர்களுக்கு தனது பார்ப்பனிய சித்தாந்தத்தை புகுத்தி வருகிறது.
“உத்திரபிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்கள் மாதிரி பள்ளியை ஏற்படுத்திவிட்டோம். பீகார் மற்றும் ஜார்க்கண்டில் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்படுத்தியுள்ளோம். ஆனால் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் குறைந்திருக்கிறது” என்கிறார் வித்யா பாரதியின் தலைவர் ராமேந்திர ராய்.
தனியார் முதலாளிகளின் கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ்-ன் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. இந்து ஆன்மீக கண்காட்சி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய சாதிய கண்காட்சியில் இதை நேரில் பார்க்க முடிந்தது. பல கல்வி நிலையங்கள் அங்கு கடைவிரித்திருந்ததும்; சென்னையின் பல வித்யாலையாக்கள் தம் பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கானவர்களை கண்காட்சிக்கு அழைத்து வந்திருந்ததையும் பார்க்க முடிந்தது.
இனி இது போன்ற தனது சொந்த உள்கட்டமைப்பை ஏற்படுத்தி பார்ப்பனிய சித்தாந்தத்தை கற்பிக்க வேண்டியதில்லை. அரசின் செலவிலேயே அரசின் பள்ளிகளில் தனது பிரச்சாரர்களை அனுப்பி மூளை சலவை செய்யவும், பள்ளி வளாகத்தில் பள்ளி அலுவல் சமயத்திலேயே பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஷாகா நடத்தவும் மத்திய பிரதேச அரசு அனுமதியளித்துள்ளதாக தான் இதை புரிந்துகொள்ள வேண்டும்.
பார்ப்பனியம் ஏறி நின்று தாக்குதல் தொடுப்பதோடு அடுத்த தலைமுறையை தனக்கு ஏற்ப சிந்திக்கவும் பயிற்றுவிக்கவும் செய்வதில் வெற்றி கண்டு வருகிறது. பிஞ்சுக் குழந்தகளை காவி வெறிபிடிக்க வைக்கும் இந்த சதித்திட்டத்தை முறியடிக்காவிட்டால் இந்தியா இனி இட்லர்களின் தேசமாக மாறிவிடும்.
– ரவி
மேலும் படிக்க
- In Madhya Pradesh, teachers from RSS schools may be roped in for govt schools
- Soon, RSS Teachers May Teach In Madhya Pradesh Govt Schools
- நாமக்கட்டி ஆண்டால் பண்டாரம் பரதேசிகளே புரபசரு !
நாட்டையே உலுக்கிய கல்வித்துறை இழிபுகழ் ஊழலான வியாபம் வழக்கின் சூத்ரதாரியான சுரங்கத்துறை மாஃபியா சுதீர் சர்மா இந்த சரஸ்வதி சிசு மந்திரில் 2003 வரை ஆசிரியராக பணியாற்றியவன். அதன் பிறகு விலகி சுரங்க கம்பெனி எஸ் ஆர் பெர்ரோ அலாய்ஸ் ஐ ஆரம்பித்து பாஜ கட்சியில் பெரிய இடத்துக்கு வந்தான். இவனைப் போன்றவர்களை ஆசிரியர்களாக கொண்ட இப்பள்ளிதான் அரசுப்பள்ளிகளுக்கு நற்போதனைகளை வழங்க முன்வந்திருக்கிறது என்றால் அதன் யோக்கியத்தனம் எப்படி பல்லிளிக்கிறது என்பதை மக்களிடம் முன்வைத்து அம்பலப்படுத்த வேண்டும். ஆனால் அந்த நிலைமையில் அங்குள்ள திக் விஜய் சிங் போன்ற அடால் உடால் பார்ட்டிகள் கூட தயாராக இல்லை. எல்லாம் ஒரு கூட்டுக்களவாணித்தனம் தான் காரணம் பின்ன என்ன..
இந்த பள்ளியில் வெறும் புஷ்பக விமானம், வேத கணிதம், சூரிய நமஸ்காரம் போன்ற உயர்தர காமடிகள் மட்டும் இடம்பெறவில்லை. ஏனெனில் இதனை முன்வைப்பதனால் கிடைக்கும் ஆதாயத்தை விட அவர்கள் விளையாட்டுத் துறையில் தேசிய விளையாட்டுகளாக மரபொழிந்த விளையாட்டுக்களான கபடி, கோகோ போன்றவற்றை கிரிக்கெட், புட்ஃபால் போன்றவற்றுக்கு எதிராக முன்வைத்து ஆதரிப்பதன் மூலம் வெகுமக்கள் மத்தியில் பரவலான நெட்வொர்க்கை ஏற்படுத்தி உள்ளனர். இதுதான் கொஞ்சம் ஆபத்தானது..
நாட்டிலேயே பள்ளியிறுதித் தேர்வில் தோல்வி அடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது மத்திய பிரதேச மாநிலத்தில் தான். அதுவும் வியாபம் வெளியான பிறகு அநியாயத்துக்கும் அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டு மாத்திரம் 1 லட்சத்து 73 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். ஏறக்குறைய ஐம்பது மாணவர்கள் வரை தேர்தல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாட்டில் இந்த மாநிலத்தில் மாத்திரம் இதற்காக சிறப்புத் தேர்வுகளை இரண்டு முறை நடத்தி இதனை குறைக்க பாஜக முயற்சி செய்த்து. இதற்கு மக்கள் மத்தியில் ஆதரவும், உயர்சாதி மேட்டுக்குடியினர் மத்தியில் தரம் பாதிக்கப்படுவதாக ஆவலாதியும் இருந்த்து. இந்த சூழலில் தேர்வு முடிவுக்கு முன்னரே தோல்வி பயத்தில் இருந்த மாணவர்களை சிறப்புத் தேர்வுக்கு தயார்படுத்த ஆர்எஸ்எஸ் பள்ளி ஆசிரியர்களை பணிக்கமர்த்தியது அரசு. அரசுப் பள்ளி ஆசிரியர்களை வாக்காளர் கணக்கெடுப்பு பணிக்கு திருப்பி விட்ட பாஜக அரசு, மக்களிடம் அரசு ஆசிரியர்கள் இந்தப் பணிக்காக சிறப்பு ஊதியம் கேட்பதாகவும், ஆர்எஸ்எஸ் ஆசிரியர்கள் தமது விடுமுறைஐ தியாகம் செய்து இந்தக் காலத்திலும் நேர்மையாக மக்களுக்காய் உழைப்பதாகவும் சீன் போட்டு வெற்றியும் பெற்றது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டால் அவர்களது திட்டத்தின் ஒரு பகுதியே இவ்வளவு அயோக்கியத்தனமாக இருக்கிறது என்றால் கொஞ்சம் பார்த்துதான் எதிர்த்தாக வேண்டும். _