டாஸ்மாக்கிற்கு எதிராக தமிழகமே வெகுண்டெழுந்து போராடியபோது, அது குறித்து அதிகார போதையில் மூழ்கியிருந்த ஜெயலலிதா, தேர்தல் நேரத்தில் போங்காட்டம் ஆடி தேர்தலில் வென்றார். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு போங்காட்டத்தை தொடர்ந்து நடத்தினார். அதாவது 500 கடைகளை மூடிவிட்டதாக நாடகம் போட்டார். இதை நம்பி மக்கள் நலனில் அக்கறையில்லாத மசாலா ஊடகங்கள் பிரச்சினைகள் தீர்ந்தது போல செயாவிற்கு ஒத்து ஊதின. ஆனால் மக்கள் பிரச்சினைகள் இதனால் சற்றும் குறையவில்லை. டாஸ்மாக் போதையினால் அன்றாடம் விபத்துக்கள், குடிக்க பணம் தராததால் தாய் கொலை, குடிக்க பணம் இல்லாததால் திருடுவது, பாலியல் வன்கொடுமை. இவை அன்றாட சமூக பிரச்சனைகள்.
இன்றைக்கு இதையும் தாண்டி பென்னாகரத்தில் நடந்திருக்கும் சம்பவம் இந்த சமூகத்தில் வாழ்பவர்கள் மனிதர்கள் தானா என்றே சிந்திக்க தோன்றுகிறது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் உள்ள சுண்ணாம்புகார தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவன் அருகில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறான். பள்ளி முடிந்ததும் அன்றாடம் குடித்துவிட்டு நிலை தடுமாறி வீட்டிற்கு வருவதும், இரவு முழுவதும் ஆபாச படங்களை பார்த்துவிட்டு மனைவியை தொல்லை செய்வதும் அடித்து உதைப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தான். இவ்வாறு இவன் பலமுறை காதில் அறைந்து, அறைந்து 30 வயதிலேயே இவனுடய மனைவி மாதுமணிக்கு காதின் கேட்கும் திறனே குறைந்துவிட்டது. அதுமட்டுமின்றி இவருக்கு பிறந்தது மூன்றும் பெண் குழந்தை என்பதால் மாமியாரின் தொல்லை மறுபுறம். இவ்வாறு பல ஆணாதிக்க இன்னல்களையும், மாமியார் தொல்லைகளையும் சகித்துக்கொண்டு, ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை செய்து அவருடைய மூன்று பெண் குழந்தைகளை காப்பாற்றி வருகிறார்.
இந்நிலையில் 03-08-2016 அன்று வேலைக்கு சென்றுவிட்டு அந்த களைப்பில் அசந்து தூங்கியுள்ளார். அப்போது இரவு 10.30 மணிக்கு குடிபோதையில் வந்த கோவிந்தராஜ் மின் விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் தூங்கி கொண்டுருந்த அவனுடைய (9 வயதான) மூத்த மகளை வன்புணர்ச்சி செய்துள்ளான். அப்போது அந்த குழந்தையின் அம்மா, அம்மா என்ற அழுகுரலை கேட்ட குழந்தையின் தாய் எழுந்து மின்விளக்கை போட்டு பார்த்தபோது அவன் வன்புணர்ச்சியில் ஈடுபட்டதை பார்த்து அதிர்ச்சிற்று கூச்சலிட்டு கதற ஆரம்பித்தார். எனக்கு 1 பெண் என்றால் இத்தோடு நானும், என் குழந்தையும் சேர்ந்து செத்து போயிடுவேன். ஆனால் இன்னும் 2 பொண்னுங்க இருக்குறாங்க. அதற்காகத்தான் நான் உயிர் வாழ்றேன் என்று கண்ணீர் விட்டு கதறி அழுது நிலை குலைந்து போனார். 30 வயதிலேயே தன் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதை எண்ணி வேதனையில் உறைந்துள்ளார்.
மறுநாள் பல்வேறு தயக்கங்களுக்கிடையே மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். குழந்தையை மருத்துவர் பரிசோதித்துவிட்டு சிறுமி வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதை ஒப்புக்கொண்டார். ஆனால், அந்த மருத்துவரும், அங்கு வந்த போலிசும் குழந்தையின் எதிர்கால வாழ்க்கை குறித்து பயத்தை கிளப்பி அறிவுரை கூறி இந்த கொலை பாதக குற்றத்தை மறைக்க முயற்சித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
இதன் பிறகு இந்த தகவலை அறிந்து மக்கள் அதிகாரம், விவசாய விடுதலை முன்னணி தோழர்கள் இந்த கொலை பாதக செயலை குறைந்த பட்சம் சட்டரீதியாக தண்டிக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களைச்சந்தித்து அவர்களை அழைத்துக்கொண்டு போலிஸ் நிலையம் சென்று வழக்கு போடப்பட்டுள்ளது.
சுவாதி கொலைக்கு பிறகு நீதிமன்றம் எல்லா இடங்களிலும் சி.சி.டி.வி கேமாரா வைக்கவேண்டும் என்று ஒரு தீர்வை முன்வைத்தது. இவ்வாறு பெற்ற தகப்பனே குழந்தையை வல்லுறவு செய்கிற போது என்ன செய்வது? எங்கே சிசிடிவி கேமாராவை வைப்பது? நிர்பயா பாலியல் வல்லுறவு கொலைக்கு முன்பும், பின்பும் எவ்வளவோ தீர்வுகளும், சட்டங்களும் வந்தும் இதை தீர்க்கமுடியவில்லை. ஏன்? குற்றவாளி ஒருவன் அல்ல.
இந்த சம்பவத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். குற்றவாளியை சட்டப்படி தண்டிப்பதற்கு பதில் போலிசே அவனை காப்பாற்றுகிறது. காரணம், டாஸ்மாக்கின் குடியினால்தான் இந்த கொடூரம் நடந்திருக்கிறது என்றால் அது அரசுக்கு அவமானமாம்! குடியினால் நடக்கும் குற்றங்களை மறைத்துவிட்டால் டாஸ்மாக்கின் வருமானத்தை பாதுகாக்கலாம் என்று அரசு நம்புகிறது. மறுபுறம் மக்களிடம் இத்தகைய புகார் மூலம் வழக்கு நடத்தினால் வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகும் என்று ‘நல்லவிதமாக’ மிரட்டுகிறார்கள்.
ஆக பெண்ணுக்கு வீட்டிலும் பாதுகாப்பில்லை, வெளியே அரசாலும் பாதுகாக்கப்படவில்லை. ஆபாச வெறியை பல்வேறு வழிகளில் அனுமதிக்கும் அரசு அவற்றின் வருமானத்தை இழக்க விரும்பவில்லை. சமூகத்தின் பண்பாட்டிலோ இத்தகைய கேடுகளோடு பெண்களை பலிகொடுப்பது பெரிய பிரச்சினையில்லை, தனிப்பட்ட முறையில் தண்டித்து விடலாம் என்பதாக உணரப்படுகிறது. இறுதியில் அனைத்து பிரிவு மக்களும் நிம்மதியிழந்து வாழ்கின்றனர்.
இழந்து போன இந்த நிம்மதியை பெறுவது எப்படி? அதைப் பறித்த இந்த அரசையும், சமூக அமைப்பையும் மாற்றாமல் நமது குழந்தைகளை தொடர்ந்து இழக்கப் போகிறோமா?
தகவல்
பு.ஜ செய்தியாளர்
தருமபுரி.
04.08.2016.