privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்குஜராத் : நாறுகிறது உன் கோமாதா ! சிறப்புக் கட்டுரை

குஜராத் : நாறுகிறது உன் கோமாதா ! சிறப்புக் கட்டுரை

-

குஜராத் மாநிலத்தில், உனா என்ற சிறு நகரில் இந்து மதவெறிக் கும்பலொன்று தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நான்கு அப்பாவிகளைக் கட்டி வைத்துக் காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய சம்பவம், இந்து மதம் எனச் சொல்லப்படும் சனாதன தர்மத்தின் கொடுங்கோன்மையை, உயர்சாதி வன்மத்தை மீண்டும் அம்பலப்படுத்தியிருக்கிறது. அதேபொழுதில், குஜராத் தாழத்தப்பட்ட மக்கள் இந்துத்துவக் கும்பலை, ஆதிக்க சாதிவெறியை அதன் பிடரியைப் பிடித்து உலுக்கி வருகிறார்கள். அவர்கள் கடந்த இருபது நாட்களுக்கு மேலாக குஜராத்தில் நடத்திவரும் போராட்டங்கள், இந்து மதவெறிக் கும்பலை ஆப்பசைத்த குரங்கு நிலைக்குத் தள்ளிவிட்டிருப்பதோடு, மோடியின் குஜராத் குறித்து பார்ப்பனக் கும்பல் சித்தரித்த உன்னதங்களின் போலித்தனத்தை, மோசடித்தனத்தைத் தோலுரித்தும் காட்டிவிட்டன.

உனா தாக்குதல்
சக மனிதன் என்ற இரக்கமோ, கருணையோயின்றி இந்து மதவெறிக் கும்பலால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நான்கு அப்பாவிகள் தாக்கப்படும் கொடூரம்.

உ.பி.யில் அக்லக்கைப் படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ்.இன் கோமாதா அரசியல்தான், குஜராத்தில் தாழ்த்தப்பட்டோரின் மீது பாய்ந்து குதறியது. பசு மாட்டைக் கொன்று அதன் இறைச்சியைப் பதுக்கி வைத்திருப்பதாகப் பழி சுமத்தி அக்லக்கைக் கொலை செய்த இந்து மதவெறிக் கும்பல், பசு மாட்டைக் கொன்று அதன் தோலை உரித்ததாகக் காரணம் கற்பித்துத் தாழ்த்தப்பட்டோர் மீது மிருகத்தனமான தாக்குதலை நடத்தியது.

“கௌ ரக்ஷக் தள்” என்ற சிவசேனாவைச் சேர்ந்த குண்டர் படையால் தாக்கப்பட்ட அசோக் சர்வைய்யா, வஸ்ரம் சர்வைய்யா, ரமேஷ் சர்வைய்யா, பேச்சர் சர்வைய்யா ஆகிய நால்வரும் சமர் என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். செத்த மாடுகளின் தோலை உரிப்பதை, இச்சாதியினரின் குலத்தொழிலாக விதித்திருக்கிறது, பார்ப்பன இந்து மதம். இன்னொருபுறத்திலோ, மாட்டின் தோலை உரித்தார்கள் என்பதையே காரணமாகக் காட்டி மிருகத்தனமான தாக்குதலையும் நடத்தியிருக்கிறது.

குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில், உனா வட்டத்தில் அமைந்துள்ள மோடா சமாதியாலா கிராமத்தைச் சேர்ந்த அந்நால்வரும் கடந்த ஜூலை 11 அன்று, அருகிலுள்ள கிராமத்திலிருந்து செத்த மாட்டைத் தமது கிராமத்திற்கு எடுத்துவந்து அதன் தோலை உரித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென அங்கு வந்த சிவசேனா இந்து மதவெறிக் கும்பல், அந்நால்வரும் பசு மாட்டைக் கொன்று அதன் தோலை உரிப்பதாகக் கூறி அங்கேயே அந்நால்வரையும் தாக்கியது. அந்நால்வரையும் காப்பாற்ற, வேறுவழியின்றி, அவர்களின் உறவினர்கள் தமது சாதியையும், தமது குலத் தொழிலையும், செத்த மாட்டின் தோலைத்தான் அவர்கள் உரித்ததையும் சொல்லிச்சொல்லிக் கதறிய பிறகும், அக்கும்பல் அதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல், அந்நால்வரையும் தமது காரில் தூக்கிப் போட்டு, அருகிலுள்ள உனா நகருக்குக் கடத்திச் சென்றது. அங்கு நடுத்தெருவில், போலீசு நிலையத்திற்கு அருகில், பலரும் கூடிநின்று வேடிக்கை பார்க்க, அந்நால்வரையும் அரை நிர்வாணமாக்கி, அவர்களைக் காரோடு சேர்த்துக் கட்டிப் போட்டு, இரும்புக் கம்பிகளாலும் தடிகளாலும் தாக்கியிருக்கிறது.

குஜராத் தாக்கப்பட்ட இளைஞர்கள்
இந்து மதவெறிக் கும்பலால் தாக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட (இடமிருந்து) வஸ்ரம் சர்வய்யா, அசோக் சர்வய்யா மற்றும் ரமேஷ் சர்வய்யா.

அந்நால்வரில் ஒருவன் 17 வயதான சிறுவன்; இரும்புக் கம்பியால் விழும் அடியின் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர்கள் கதறிய ஒவ்வொரு முறையும், அடி இன்னும் பலமாக, இன்னும் வீச்சாக உடம்பில் இறங்கியிருக்கிறது. இந்தக் கொடூரத்தை வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவர்கூட அதனைத் தடுக்க முன்வரவில்லை. கூட்டத்தோடு கூட்டமாக நின்ற போலீசு இந்த அட்டூழியத்தைத் தடுக்க முன்வரவில்லை என்பது மட்டுமல்ல, அந்த அப்பாவிகளைத் தாக்குவதற்கு தமது லத்திக் கம்புகளையும் கொடுத்து உதவியது.

அந்த இந்து மதவெறிக் கும்பல், அதோடு அடங்கிவிடாமல், சமூகத்தையே அச்சுறுத்தும் நோக்கில் தாக்குதலை முழுமையாகப் படம் பிடித்து, இணையத்தில் பதிவேற்றமும் செய்து வெளியிட்டது.

* * *

பொது சமூகத்தை அச்சுறுத்தும் நோக்கத்தோடு நடத்தப்பட்டுள்ள இப்பயங்கரவாதத் தாக்குதல், போர்க்குணத்தோடு எதிர்த்தாக்குதல் தொடுத்துப் போராடும் உணர்வை தாழ்த்தப்பட்டவர்களிடம் உருவாக்கிவிட்டது.

குஜராத் இந்து மதவெறி அரசுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டோர் நடத்திய பொது வேலைநிறுத்தம் சௌராஷ்டிர பகுதியில் பெரும் வெற்றி அடைந்திருக்கிறது. அப்பகுதியில் பெரும் போலீசு படையைக் குவித்த பிறகும், பள்ளிகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், பேருந்து போக்குவரத்து உள்ளிட்டு எவையும் இயங்கவில்லை. இவ்வேலைநிறுத்தத்தின்பொழுது போர்பந்தர் நகரில் போலீசுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே நடந்த மோதலில் 12-க்கும் மேற்பட்ட பேருந்துகளும், இரண்டு போலீசு வாகனங்களும் எரிக்கப்பட்டதாகவும்; ராஜ்கோட், சுரேந்திரநகர், ஆம்ரேலி, ஜுனாகத், அகமதாபாத், தோராஜி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், பொது வேலைநிறுத்தத்திற்கு முன்பும் பின்பும் நடைபெற்றுவரும் போராட்டங்களால் நகரத்தின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட மனோஜ்பாய்
விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட மனோஜ்பாய்

ஆம்ரேலி நகரில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின்பொழுது போலீசுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே நடந்த மோதல் மற்றும் கல்வீச்சுத் தாக்குதலில் பங்கஜ்ஆ ம்ரேலியா என்ற தலைமைக்காவலர் இறந்துபோனார். அகமதாபாத் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தைக் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி ஒடுக்கியது போலீசு. மெஹ்ஸானா மாவட்டத்திலுள்ள காதி நகரில் நடந்த போராட்டம் காரணமாக அந்நகரப் பேருந்து நிலையம் இழுத்து மூடப்பட்டது. அங்கு மட்டுமின்றி, போர்பந்தர், ஜாம்நகர், ஜுனாகத் ஆகிய நகரங்களிலும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

மோடியின் சொந்த ஊரான வாத் நகரில் 4,000-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோர் திரண்டு நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழவு வீடுகளில் பாடப்படும் ஒப்பாரிப் பாடலின் ராகத்தில், “ஹாய்ரே மோடி, ஹாய் ஹாய்ரே மோடி” எனக் கிண்டலும், நக்கலும் நிறைந்த தொனியில் முழக்கங்களை இட்டு, யாராலும் எதிர்க்கமுடியாத, வல்லமை பொருந்தியவராக ஏத்திவிடப்பட்ட மோடியின் பிம்பத்தைப் பொத்தலாக்கிவிட்டனர், தாழ்த்தப்பட்ட மக்கள்.

இப்போராட்டங்களுக்கு அப்பால், சுரேந்திரநகர் தாழ்த்தப்பட்ட மக்களும் அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு செத்துப்போன மாடுகளைக் கொண்டுவந்துபோட்டு, “உன்னுடைய அம்மாவை, நீயே எடுத்துப் புதைத்துக்கொள்” என முழக்கமிட்டு நடத்திய போராட்டம், இன்று ஒரு மாபெரும் இயக்கமாகவே குஜராத் மாநிலமெங்கும் நடந்துவருகிறது.

நாதுபாய் பர்மர், மகேஷ்பாய் ரதோட்என்ற இரண்டு சமூக ஆர்வலர்களும், இறந்த மாடுகளை விற்றுவரும் ஹீராபாய் சௌதா என்ற உள்ளூர் வணிகரும் கிராமம் கிராமமாகச் சென்று, உள்ளூர் தாழ்த்தப்பட்ட மக்களிடம் உனாவில் நடந்த தாக்குதல் சம்பவத்தை, அதன் கொடூரத்தைக் கைபேசி மூலம் காட்டி, இந்தத் தருணத்தில் வலுவான எதிர்ப்பைக் காட்டவில்லையென்றால், பிறகு நம்மால் எழுந்து நிற்கவே முடியாது என்பதைத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு உணர்வூட்டி, செத்த மாடுகளை எடுத்து அடக்கம் செய்ய மறுக்கும் போராட்டத்திற்கு அணிதிரட்டியுள்ளனர்.

அவர்கள் மூவரும் உருவாக்கிய சிறு பொறி பெருங்காட்டுத் தீயாய் மாறி, குஜராத்தை ஆளும் பா.ஜ.க. கும்பலை, அதிகார வர்க்கத்தை, செத்த மாட்டை எடுத்துப் போடுவதைத் தீட்டாகப் பார்த்துவரும் ஆதிக்க சாதிக் கும்பலைச் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. சுரேந்திரநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாறத் தொடங்கியதையடுத்து, ஜூலை 18 அன்று கோண்டால் மாவட்ட அலுவலகங்களின் முன்பாக 30 செத்த மாடுகளைக் கொண்டுவந்து போட்டு, 250-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோர் அணி திரண்டு ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். காந்தி நகர், மெஹ்ஸானா, அகமதாபாத் ஆகிய மாவட்ட அலுவலங்களின் முன்பும், நகர, கிராமத் தெருக்களிலும் அப்புறப்படுத்தாத செத்த மாடுகள் குவியத் தொடங்கின.

“உன்னுடைய அம்மாவை, நீயே எடுத்துப் புதைத்துக் கொள்”
சுரேந்திரநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு செத்துப்போன மாடுகளைக் கொண்டுவந்து போட்டு, “உன்னுடைய அம்மாவை, நீயே எடுத்துப் புதைத்துக் கொள்” என முழக்கமிட்டு நடத்திய போராட்டம்.

இந்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சினைக்குச் சுமூகத் தீர்வு காண்பது என்ற அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை அழைத்த சுரேந்திரநகர் மாவட்ட ஆட்சியர், ஒவ்வொரு மாட்டுக்கும் ரூ.200/- தர ஏற்பாடு செய்வதாகவும், மாடுகளின் தோலை உரிக்கும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்வதாகவும் கூறி, அத்தீண்டாமைத் தொழிலை நைச்சியமாக தாழ்த்தப்பட்டோரின் தலையிலேயே சுமத்த முயன்றார். “செத்த மாடுகளை அப்புறப்படுத்த முன்வரும் ஒவ்வொரு அதிகாரிக்கும், ஒரு மாட்டுக்கு 500 ரூபாய் நாங்கள் தருகிறோம்” எனப் பதிலடி கொடுத்து, அதிகார வர்க்கத்தின் மூக்கை அறுத்தனர், தாழ்த்தப்பட்ட மக்கள்.

உயர் அதிகாரிகள் வந்துபோகும் நகரத் தெருக்களில் கிடந்த செத்த மாடுகளை ஜே.சி.பி. இயந்திரங்களை வைத்து அப்புறப்படுத்துவதற்கே திணறிப் போய் நிற்கும் மாவட்ட நிர்வாகம், கிராமப்புறங்களைக் கண்டுகொள்ளவேயில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, செத்த மாடுகளை அப்புறப்படுத்தும் வேலையைத் தாழ்த்தப்பட்டோர் மீது சுமத்தி வந்த ஆதிக்க சாதி கும்பல், இன்று அத்தீண்டாமை தன் மீதே சுமத்தப்பட்டிருப்பதைக் கண்டு, பீதியடைந்து நிற்கிறது.

* * *

தாழ்த்தப்பட்ட மக்களை இப்படியொரு கலகத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளியது உனாவில் நடந்த சம்பவம் மட்டுமல்ல. மோடியின் குஜராத் எந்தளவிற்கு கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியைச் சாதித்ததோ, அதற்கு இணையாக சமூக ஒடுக்குமுறைகளின் களமாகவும் விளங்குகிறது.

இந்துத்துவத்தின் தலித் வெறுப்பு
உனா தாக்குதல் சம்பவம் குறித்து வாயைத் திறக்காத மோடியின் மௌனம், தாழ்த்தப்பட்டோர் மீது அவருக்குள்ள வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் அதாவது இந்துத்துவத்தின் உண்மையான உணர்ச்சியையே வெளிப்படுத்துகிறது.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் இந்தியாவிலேயே குஜராத்தான் முதல் மாநிலமாக இருந்திருக்கிறது.

குஜராத்தின் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் இயங்கிவரும் நவ்சர்ஜன் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் 2010-ம் ஆண்டில், 1,569 கிராமங்களில், 98,000 பேரிடம் நடத்திய ஆய்வுகளின்படி, குஜராத்தில் 98 வகையான தீண்டாமைக் குற்றங்கள் கடைப்பிடிக்கப்படுவதை ஆதாரங்களோடு நிறுவியிருக்கிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமையின் காரணமாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்கு விதிக்கப்பட்ட குலத் தொழிலையே செய்ய வேண்டிய நிலையில் கட்டாயமாக இருத்தப்பட்டிருப்பதையும், சௌராஷ்டிரப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள்தான் கக்கூஸைக் கழுவுமாறு நிர்பந்திக்கப்படுவதையும்; குஜராத்தின் 54 சதவீதப் பள்ளிக்கூடங்களில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியாக அமர்த்தப்படும் தீண்டாமை நிலவுவதையும் இந்த ஆய்வு அம்பலப்படுத்தியிருக்கிறது.

இந்திய அளவில் பதியப்படும் தீண்டாமைக் குற்றங்களில் 23.8 சதவீத வழக்குகளில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர். குஜராத்திலோ குற்றவாளிகள் தண்டிக்கப்படும் இந்த எண்ணிக்கை தேசிய சராசரியைவிட மிகக்குறைவாக, 6 சதவீதமாக (2015-ல்) உள்ளது. இது, 2013-ல் 2.5 சதவீதமாகவும், 2014-ல் 3.5 சதவீதமாகவும் இருந்தது.

தேசிய சராசரியைவிடத் தண்டிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதற்கான காரணம், அந்த மாநிலமும் அதன் அரசும் நீண்ட காலமாகவே ஆதிக்க சாதிவெறியர்களின் சொர்க்க பூமியாக இருந்துவருவதுதான். பா.ஜ.க.வின் ஆட்சி இந்த நிலைமையை இன்னும் தீவிரமாக்கியிருக்கிறது.

அக்டோபர் 2012-ல் சுரேந்திரநகர் மாவட்டத்திலுள்ள தாங்கத் எனும் ஊரில் தாழ்த்தப்பட்டோருக்கும், பர்வாத் எனும் மேல்சாதியினருக்கும் நடந்த மோதலை ஒடுக்குவதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு தாழ்த்தப்பட்டோர் கொல்லப்பட்டனர். இது குறித்த விசாரணை அறிக்கையைக்கூட வெளியிட மறுத்துவரும் குஜராத் அரசு, அதற்கு, “அறிக்கையை வெளியிடுவது தேசத்தின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும்” என்ற புளுகுணித்தனமான காரணத்தைக் கூறி வருகிறது.

அகமதாபாத் தாழ்த்தப்பட்ட மக்கள் ஊர்வலம்
உனாவில் நடந்த இந்து மதவெறிக் கும்பலின் தாக்குதலைக் கண்டித்து குஜராத் தாழ்த்தப்பட்ட மக்கள் அகமதாபாத் நகரில் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம்.

இத்துப்பாக்கிச் சூடு நடந்தபொழுது, துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்திலிருந்து வெறும் 12 கி.மீ. தூரத்தில்தான் நரேந்திர மோடி இருந்தார். ஆனாலும், அவர் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க வரவில்லை. உனா சம்பவத்திற்கும் மௌனம்தான் அவரது எதிர்வினையாக இருக்கிறது.

முசுலீம் தீவிரவாதிகள் கொஞ்சம் பலமாகக் குசுவிட்டால்கூட, அதனைக் கண்டித்து டுவிட்டரிலும், முகநூலிலும் வரிந்துகட்டிக் கொண்டு எழுதும் கருத்து கந்தசாமியான மோடி, உனா சம்பவத்தை வாயளவில் கூட கண்டிக்க மறுப்பதற்குப் பொருள் இல்லாமல் இல்லை. அவரது இந்த மௌனம் தாழ்த்தப்பட்டோர் மீது அவருக்குள்ள வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும், அதாவது இந்துத்துவத்தின் உண்மையான உணர்ச்சியையே வெளிப்படுத்துகிறது.

* * *

இந்த அடக்குமுறையும் நீதி மறுக்கப்படும் சமூக நிலைமையும்தான் தாழ்த்தப்பட்டோரைக் கலகத்தில் இறங்க வைத்திருக்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோரை விஷத்தையும், திராவகத்தையும் குடித்து உயிரை விடும் நிலைக்குத் தள்ளி, அவர்களுள் இரண்டு பேரின் உயிரை அநியாயமாகப் பறித்திருக்கிறது. பா.ஜ.க வோ, மற்ற மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோர் மீது நடக்கும் தாக்குதல்களைப் பட்டியலிட்டுக் காட்டுவதன் மூலம், தன்னை யோக்கியவானாகக் காட்டிக் கொள்ள முயலுகிறது.

உனாவில் தாழ்த்தப்பட்டோர் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுள் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்கு உடந்தையாக நின்ற இரண்டு போலீசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால், இந்தக் கணக்குக்காட்டும் நடவடிக்கைகள்கூட, தாழ்த்தப்பட்ட மக்கள் போராடத் தொடங்கிய பிறகு, பத்து பன்னிரெண்டு தாழ்த்தப்பட்டோர் விஷம் அருந்தி சாகத் துணிந்த பிறகு, இத்தாக்குதலுக்கு எதிராக நாடெங்கும் கண்டனங்கள் வலுத்து இந்து மதவெறிக் கும்பல் சந்தி சிரித்துப் போன பிறகுதான் எடுக்கப்பட்டன.

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதாலேயே பா.ஜ.க. அரசு நீதி வழங்கிவிட்டதாக எடுத்துக் கொள்ள முடியுமா? தாழ்த்தப்பட்ட மாணவர் ரோஹித் வெமுலாவைத் தற்கொலைக்குத் தள்ளிய விவகாரத்தில்கூட, அவர் தற்கொலை செய்து கொண்ட சமயத்தில் ஹைதராபத் பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த அப்பா ராவ், மைய அமைச்சர் பங்காரு தத்தாத்ரேயா உள்ளிட்ட சிலர் மீது வன்கொடுமை வழக்குப் பதியப்பட்டது. ஆனால், அதன் பிறகு நடந்தது என்ன?

puthiya-jananayagam-august-2016-sliderபோராட்டத்தின் வீச்சு தணிந்த பிறகு, மீண்டும் அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக அப்பாராவ் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிராக மீண்டும் மாணவர்கள் போராடியபொழுது, மாணவர்கள் மீதும், பேராசிரியர்கள் மீதும் போலீசு தாக்குதலும், வழக்கும் பாய்ந்தது. இதே போன்று உனா தாக்குதல் தொடர்பான வழக்கிலும் முதுகில் குத்த பா.ஜ.க. தயங்காது.

மற்ற மாநிலங்களிலும் தாழ்த்தப்பட்டோர் மீது கொடூரமான தாக்குதல்கள் நடைபெறுவதை மறுக்க முடியாதுதான். ஆனால், ஆர்.எஸ்.எஸ் சாதிப் படிநிலையை, ஆதிக்க சாதியினரின் சிறப்புரிமைகளை, கருவறை தீண்டாமை தொடங்கி சமூகத் தீண்டாமை உள்ளிட்ட அனைத்து இழிவுகளையும் கொள்கைரீதியாகவே ஆதரிக்கும் அமைப்புகளாக உள்ளன. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு, இட ஒதுக்கீடு எதிர்ப்பு, பசு இறைச்சி உண்பதற்குத் தடை உள்ளிட்டு இதற்கு அநேக உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனர்களிடம் கருவாகி, மகாராஷ்டிராவின் பேஷ்வா மன்னர்கள் உள்ளிட்ட வட இந்திய பிற்போக்கு நிலப்பிரபுத்துவ மன்னர் பரம்பரைகளால் ஆதரிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இன் கொள்கை வருண வியவ்ஸ்தா எனப்படும், வருண வேறுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் பாதுகாப்பதுதான்

1980-களுக்குப் பின்னர், தனது ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்திற்காகவும், முசுலீம் எதிர்ப்புக் கலவரங்களில் காலாட்படையாகப் பயன்படுத்திக் கொள்வதற்காகவும்தான் தாழ்த்தப்பட்டோரையும், பழங்குடியின மக்களையும் ஆர்.எஸ்.எஸ், இந்துவாக அடையாளப்படுத்துவதில் தீவிரம் காட்டத் தொடங்கியது. எனினும் அவர்களை ஆதிக்க சாதி இந்துக்களுக்கு இணையாக ஆர்.எஸ்.எஸ். என்றுமே கருதியதில்லை. மகாராஷ்டிராவில் மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டதற்கு எதிராக சிவசேனா நடத்திய கலவரம் தொடங்கி இன்று உனாவில் நான்கு தாழ்த்தப்பட்டோர் தாக்கப்பட்டது வரை இதற்குப் பல உதாரணங்கள் உண்டு.

தாழ்த்தப்பட்டோரும் முசுலீம்களும் இந்து தேசத்தில் இரண்டாம்தர குடிமக்களாகத்தான் இருக்க முடியும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.−இன் கருத்து. அவர்கள் அதனை மீறும்பொழுதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.-இன் இந்து ஒற்றுமை பசப்பல்கள் மறைந்து அதன் உண்மை முகம் தெரியவருகிறது.

ரோஹித் வெமுலாவின் தற்கொலையையடுத்து நாடெங்கும் இந்து மதவெறிக் கும்பலுக்கு மாணவர்களும் அறிவுத்துறையினரும் நடத்திய போராட்டத்தையும், இன்று குஜராத்தில் இந்து மதவெறிக் கும்பலுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டோர் நடத்தி வரும் போராட்டங்களும் இலக்கில் ஒன்றாக இருந்தாலும், முந்தையதைவிட குஜராத்தில் நடைபெறும் போராட்டம் அதிமுக்கியத்துவம் உடையதாகும்.

மற்ற வட இந்திய மாநிலங்களைவிட, குஜராத்தான் ஆர்.எஸ்.எஸ்.-இன் இரும்புக் கோட்டையாக இருந்து வந்திருக்கிறது. 1980-களில் இட ஒதுக்கீடுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் ஆதிக்க சாதியினரைத் திரட்டிக் கொண்டு, தாழ்த்தப்பட்டோரை இலக்காக வைத்து நடத்திய கலவரங்களும்; 2002-இல் மோடியின் தலைமையில் நடத்தப்பட்ட முசுலீம் இனப்படுகொலையும் ஆர்.எஸ்.எஸ்.-இன் பிடியை இன்னும் வலுவாக்கியிருக்கின்றன.

அப்படிப்பட்ட மாநிலத்தில், அம்மாநிலத்தின் மொத்த மக்கட் தொகையில் மிகக் குறைவாக இருக்கும் (7.1 சதவீதம்) தாழ்த்தப்பட்டோர், உட்சாதிப் பிரிவுகளைக் கடந்து இந்து மதவெறிக் கும்பலுக்கு எதிராக ஒன்று திரண்டு போராடுவதும், செத்த மாடுகளை அப்புறப்படுத்த மறுத்து கலகத்தில் இறங்கியிருப்பதும் அசாதாரணமான ஒன்று.

உழவுக்குப் பயன்படாத காளைகளையும், பால் வற்றிப் போன பசுக்களையும் கொல்லக்கூடாது; அதன் கறியை உண்ணக் கூடாது என்ற ஆர்.எஸ்.எஸ்.-இன் ஃபத்வா, பொருளாதாரரீதியில் தற்கொலைக்கு ஒப்பானது. மாடு வளர்ப்பதைத் துணைத் தொழிலாகக் கொண்டுள்ள விவசாயிகளுக்கு எதிரானது.

எனவே, ஆர்.எஸ்.எஸ்.-இன் பசு பாதுகாப்பு என்ற பார்ப்பன-பாசிச அரசியலுக்கு எதிராக இன்று குஜராத் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திவரும் கலகம், ஏதோ அவர்களின் பிரச்சினைக்காக நடப்பதைப் போலச் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. அது கோடிக்கணக்கான இந்திய விவசாயிகளின் நலனையும் உள்ளடக்கியிருக்கிறது. ஆனாலும், இப்போராட்டத்தை அவர்கள் மட்டுமே நடத்தும் நிலையில் இருத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் உழைப்பால் பலன் அடைந்து வரும் சாதி இந்துக்களும், மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய போராட்டத்தில் உள்ள நியாயத்தைப் பார்க்க மறுத்து, ஒதுங்கி நிற்கிறார்கள். இந்த மனசாட்சியற்ற பாராமுகமும், மறைமுக ஆதரவும்தான் பார்ப்பன மதவெறிக் கும்பலுக்கு பலம் சேர்க்கிறது.

–  குப்பன்
_____________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2016
_____________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க